Pages

Saturday, May 05, 2012

ஆத்மாநாம் கவிதைகள் 4

 நான்கு கவிதைகள்


1.

 அணுவுக்கு எதிராய்
 மக்கள் கிளர்ச்சி
 அணு உலையிலிருந்து
 சிதறி விட்டது
 அணுத்துகள் ஒன்று
 கலவர மக்கள்
 கூக்குரலிடுகின்றனர்
 வானிலிருந்தும் நீரிலிருந்தும்
 வினோத வாகனங்களைக்கொண்டு
 ஆராய்கின்றனர்
 சுற்றுப்புறத்திலிருந்து
 வெளியேற வேண்டும்
 உள் உலகிலிருந்து வெளி உலகிற்குத்
 தப்பிக்க வேண்டும்
 மீண்டும் மனிதம் அடிமையாயிற்று
 அதன் கண்டுபிடிப்பிற்கு.


2.

 எனக்குள் என்னில் என்னாய் விரிந்து
 உள் அழிழ்ந்தேன்
 கற்பனை நிஜம்
 காலம் ஒளி
 ஒலி பயணம்
 உருவம் உள்ளடக்கம்
 எல்லா இடங்களிலும் தேடினேன்
 தெரிந்தும் தெரியாமல்
 விரிந்தும் விரியாமல்
 இருந்தும் இல்லாமல்
 ஆன் ஏன்


3.

 அற்புதமாய்ப் புலர்ந்த காலை
 நீள நிழல்கள்
 நிலத்தில் கோலமிட
 வண்ணக்கலவையாய் உலகம்
 எங்கும் விரிந்து
 கெட்டியாய்த் தரை
 என் காலடியில்
 நிஜம் புதைந்து கிடக்க


4.

 ஒரு தலைப்பிடாத கவிதையாய்
 வாழ்க்கை
 ஒரு நாள் இரண்டு நாள் என
 தொடர்ந்த நாட்களை எண்ணினேன்
 காலையைத் தொடர்ந்து மாலை
 இரவாகும் காலப்புணர்ச்சியில்
 பிரமித்து நின்றேன்
 கடற் கரையில்


ஆத்மாநாம் 
 
Thanks to naveena virutcham