Pages

Sunday, May 04, 2014

கொல்லிப்பாவை - 5 - நகுலன்

கொல்லிப்பாவை - 5   -  நகுலன்

நீ
என் வாழ்வைக்
கனவாக்கி விட்டாய்;
“கனவு
நினைவின் நிழல்”;
மனதை வசீகரிக்கும்
இதன்
“விருட்டென்ற நடை கண்டு
என் மனம் மிரள்கிறது”
தேதி 20
அதற்குள் பை,
ஓட்டை
நினைவு
பிய்த்துப் பிடுங்குகிறது.
பகல்
குற்றுயிராகிக் கிடக்கும்
அந்திப் பொழுது;
ஜுரவேகத்தில்
பிரக்ஞை தடுமாறுகிறது
பிராந்தி கௌவிப் பிடிக்கும் நேரம்
வரும்
மண்டைக் கனம்
மனம்
அட்டையாகச்
சுற்றிச் சுருண்டு
அசைவற்றுக் கிடக்கும்
முடக்கு வாதம்
நொண்டிப் போச்சு.
புலன்கள் மரத்துக்
கட்டையாகப் போகின்றன.
துயில் சுருட்டும் கண்கள்.
உள்ளிருக்கும் இருட்டில்
நிழல் போன்ற
நினைவின் நச்சரிப்பு;
தெருவில் காலிப்பையன்கள்
யாரையோ பார்த்துச் சிரிக்கிறார்கள்.
ஏன் ?
யாரைப் பார்த்து ?
ஒரு டயரிக் குறிப்பு.
எங்கும்
“வெளிப்பூச்சின்
ஏகாதி பத்தியம்”
பூச்சுக் கலைந்து விட்டால்
சூன்யம் பல்லிளிக்கிறது.
திரும்பிப் பார்க்காத
உன்னைப் பின்பற்றி
வாழ்க்கையைக்
கனவாக்கி விட்டேன்.
நினைவின் ஸ்பரிசம்
சுளீ ரென்று தைக்கிறது.
நீ என்னதான்
என் எனக்கு
உள்ளத்தைக் கவர்ந்தாலும்
“உன் தத்ரூப பிரதிபலிப்பு
ஆக
அப்பா அம்மா
சொன்னதைக் கேட்கும்
நல்ல பிள்ளையா என்ன நான் ? ”
என்ற
வினாவின் கொக்கி உருவைக்
கண்டதும்
இந்த நிகழும் நிமிஷங் கூட
தெருவின் காலிப் பையன்கள்
போல்
சீட்டியடித்துச் சிரிக்கிறது;
எல்லாம்
உடைந்த
கண்ணாடிச் சில்லின்
ஒளி வீச்சு

-எழுத்து, ஜனவரி 66