Pages

Saturday, July 26, 2014

சூன்யப் பிளவு - கைலாஷ் சிவன்

சூன்யப் பிளவு - கைலாஷ் சிவன்

அகாலம்
இருளில் நெளியும் ஒளிவரிகள்
கொடியால் படரும்
தனித்திருக்கும் ‘நான்-இல்’
எரிந்த நிணம்
கரி-ஆகா எலும்புகள்
உதிர்ந்து
சுவாசம் தரிக்க
அதிர்ந்தெழும்பும் ஒலி ரூபத்தின்
ஸப்ததாது
சுயம் தேடும்
தீரா அவஸ்தையின்
‘வேள்வித் தீ’
இருள் வெளிக்குள்
பின்னகரும்
ஒற்றை  நதி
அந்த ஹூங்காரத்தின்
சூன்யப் பிளவிற்குள்
சொட்டுச் சொட்டாய்
மூச்சு விடும்
ஜனன மூலாதாரம்
அது ஏனென்றாய்?
ஒன்றுமில்லை
இருள் சக்திக்குள்
நீர் கோர்க்கும்
மௌனத் துளிகள்
சிரசின் முடிச்சுகளில்
கவியும்
மேக ஸ்தம்பங்கள்
உயிரின்
ஓளி விரல்கள்
ஸ்பரிசம் பட்டு
மனிதாத்மம் - ஆகும்
பிரபஞ்ச விஸ்தாரம்
‘சமுத்திர அலைகள்
கால்களுக்குள் உருண்டு ஓட
சிரசில் தெறிக்கும்
உயிர் முடிச்சு’
எதன் நீட்சியோ
எதையோ தீண்டி
ஸ்தூல மெங்கும்
உள்தகித்து
பாய்ந்து ஓடும்
உதிரம் நதி.

அதோ உன் கண்களுக்குள்
ஸப்திக்கும்
ஓர்
நதியின்
பிரவாஹம்

காலத்தை காலம் தீண்டி
கருக்கொள்ளும்
‘கவிதார்த்தத்தின் தர்ஷனப் பிழம்பு’
அதன் உயிர் முகம்
நீ.

(பிரபஞ்ச ஜீவி பிரமீளுக்கு)