Pages

Sunday, April 24, 2016

டாக்டர் ப்ராடியின் அறிக்கை - ஜோர்ஜ் லூயி போர்ஹே (மொ.பெ) ஆர்.சிவக்குமார்

டாக்டர் ப்ராடியின் அறிக்கை - ஜோர்ஜ் லூயி போர்ஹே

(மொ.பெ) ஆர். சிவக்குமார்
Automated GOOGLE-OCR
உன்னதம்
www.tamilarangam.net

என்னுடைய நெருங்கிய நண்பர் பால் கெய்ன்ஸ் எனக்காகத் தேடிப்பிடித்து தந்த லேன் என்பவருடைய "அரேபிய இரவுகளின் கேளிக்கைகள்” (லண்டன், 1839) என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியின் பக்கங்களுக்கிடையே, நான் கீழே படியெடுத்துத் தரப்போகும் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கண்டுபிடித்தோம் தெளிவான கையெழுத்து - இந்தக்கலையை நாம் மறக்க தட்டச்சுக்பொறிகள் நமக்கு தற்போது உதவி வருகின்றன. கிட்டத்தட்ட அந்தப் புத்தகம் வெளிவந்த காலத்திலேயே அப்பிரதி உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. லேனின் படைப்பு மிக விரிவான விளக்கக் குறிப்புகள் நிறைந்தது என்பது எல்லார்க்கும் தெரிந்ததுதான். எனக்குக் கிடைத்த பிரதியின் பக்க ஒரங்களில் குறிப்புரைகள், கேள்விக்குறிகள், கையெழுத்துப்பிரதியில் காணப்படும் அதே கையெழுத்தில் அவ்வப்போது எழுதப்பட்ட பாடத்திருத்தங்கள் ஆகியவை நிறைய உள்ளன. முகமதியர்களின் பழக்கவழக்கங்களைவிட ஷாரஸத்தின் அற்புதக்கதைகள் குறிப்புரைகள் எழுதியவரை குறைவாகவே ஈர்த்திருக்கின்றன என்று நாம் யூகிக்கலாம். கையெழுத்துப்பிரதியின் கடைசி பக்கத்தில் அடியில் இறையியலில் சிறப்புப்பட்டம் பெற்ற டேவிட் ப்ராடியின் நேர்த்தியான கையெழுத்து உள்ளது. அவர் ஸ்காட்லாந்தைச்சேர்ந்த ஒரு சமயப்பரப்பாளர், அபர்தீனில் பிறந்தவர், முதலில் ஆப்ரிக்காவின் மையப்பகுதியில் சமயப்பணி ஆற்றியவர். போர்ச்சுகீசியமொழி அறிவு இருந்ததால் பிறகு பிரேசிலின் சில உள்பகுதிகளில் பணியாற்றியவர் என்பவை போன்ற சில செய்திகளைத் தவிர அவரைப்பற்றி என்னால் வேறு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் இறந்த இடமும், தேதியும் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் அவருடைய கையெழுத்துப்பிரதி அச்சுக்குத் தரப்படவே இல்லை.


பின் வருவது சற்றே தனித்தன்மையற்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அவருடைய அறிக்கையின் மூலப்பிரதிக்கு மாறுபடாத நகல். பக்க ஓரங்களில் அசிரத்தையாக குறிக்கப்பட்டுள்ள இரண்டு மூன்று விவிலிய சிறுபகுதிகள், யாஹ"க்கள் எனப்படும் விலங்குநிலை மனிதர்களின் பாலியல் நடவடிக்கைகள் குறித்த காமம் நிறைந்த ஒரு பத்தி - இதை நம்முடைய பண்பாடுடைய திருச்சபையாளர் விவேகத்துடன் லத்தீனில் எழுதியுள்ளார் - ஆகியவை மட்டுமே விடப்பட்டுள்ளன. முதல் பக்கத்தைக் காணவில்லை.

----- குரங்கு மனிதர்களால் சூழப்பட்டு தாக்கப்படும் பகுதியில் ம்ல்க் இனக்குழுவினர் வசிக்கிறார்கள், இவர்களை நான் யாஹ"க்கள் (ஜோனதன் ஸ்விஃப்ட் என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய கலிவரின் பயணங்கள் என்ற புனைகதையில் சரியான வரும் மனித உருவ விலங்குகளின் பெயர்.) என்று பெயரிட்டு அழைக்கிறேன், காரணம் அவர்களுடைய விலங்கியல்பு என்னுடைய வாசகர்களுக்கு ஞாபகம் வரும் என்பதாலும், அவர்களுடைய கரடுமுரடானமொழியில் உயிரெழுத்துக்கள் முற்றிலுமாக இல்லை என்பதால் எழுத்துப்பெயர்ப்பு சாத்தியமில்லை என்பதாலுமே. தென்கோடியில் முட்புதரில் வசிக்கும் 'ன்ர் குழுவையும் உள்ளிட்டு இந்த இனக்குழுவின் எண்ணிக்கை எழுநூறைத் தாண்டாது என்று நான் நம்புகிறேன். நான் குறிப்பிடும் பூஜ்யம் வெறும் யூகம்தான், ஏனென்றால் அரசன், அரசி, மற்றும் பில்லி சூனிய மந்திரவாதிகள் தவிர்த்து ஏனைய யாஹ"க்கள் நிலையான வசிப்பிடத்தில் தூங்காமல் இரவு நேரத்தில் எங்கிருக்கிறார்களோ அங்கேயே தூங்குகிறார்கள். சதுப்பு நில ஜூரமும், குரங்கு மனிதர்களின் தொடர் தாக்குதல்களும் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைக்கின்றன. ஒரு சில நபர்களுக்கே பெயர்கள் இருக்கின்றன. ஒருவரிடம் மற்றவர் பேசவேண்டுமானால் ஒரு சிறு கைப்பிடியளவு மண்ணை எறிந்துகொள்வது அவர்களுடைய வழக்கம். ஒரு நண்பனுடைய கவனத்தை ஈர்க்க தரையில் விழுந்து புழுதியில் புரளும் யாஹ"க்களையும் நான் பார்த்திருக்கிறேன். தாழ்ந்த முன் நெற்றிகள், அவர்களுடைய கறுப்பு நிறத்தைக் குறைத்துக் காட்டும் ஒரு விசித்திர செம்புநிறக் கலவை ஆகியவை தவிர்த்து லைபீரியக் கடற்கரையைச் சேர்ந்த அதிகம் கடலில் பயணிக்கும் கறுப்பு நிற க்ரூ இனத்தவர்களிடம் இருந்து உடல் தோற்றத்தில் அவர்கள் பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை. பழங்கள், கிழங்குத்தண்டுகள், சிறு ஊர்வன ஆகியவற்றை உணவாகக் கொள்கிறார்கள், பூனைகள் மற்றும் வெளவால்களின் பாலைக் குடிக்கிறார்கள். கைகளாலேயே மீன் பிடிக்கிறார்கள். சாப்பிடும் போது ஒன்று தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது கண்களை மூடிக் கொள்கிறார்கள். இயல் நலத்தையும், இன்ப நுகர்வையும் வெறுப்பதாகக்காட்டிக்கொண்ட பழங்கால கிரேக்கப் கொள்கையாளர்களான சினிக்குகளைப் போலவே அவர்களுடைய மற்ற எல்லா உடல் சார்ந்த வழக்கங்களும் பொதுக்காட்சிகளாகவே நிகழ்ந்தன. பில்லி சூனிய மந்திரவாதிகள் மற்றும் அரச குடும்பத்தினர் இறக்கும் போது அவர்களுடைய அறிவு தங்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்ளுடைய பின உடல்களை யாஹ"க்கள் வெறியுடன் தின்கின்றனர். இந்த கொடிய பழக்கத்திற்காக நான் அவர்களைக் கண்டித்தபோது அவர்கள் தங்களுடைய உதடுகளையும் வயிறுகளையும் தொட்டுக்காண்பித்தனர். இதன் மூலம் இறந்தவர்கள் சாப்பிடத்தகுதியானவர்கள் என்றோ, அல்லது - இந்த விளக்கம் வலிந்து சொல்லப்படுவதாகத் தோன்றலாம் - நாம் சாப்பிடும் எல்லாமே நாளடைவில் மனிதச் சதைகளாகவே மாறிவிடும் என்று நான் புரிந்து கொள்ள வேண்டுமென்றோ அவர்கள் உணர்த்த முயன்றிருக்கலாம். சேகரித்து வைத்துள்ள கற்கள், வசியச்சொற்கள் மற்றும் மந்திர உச்சாடனங்கள் ஆகியவற்றை அவர்கள் யுத்தங்களில் பயன்படுத்துகிறார்கள். ஆடை உடுத்தல் மற்றும் பச்சை குத்திக்கொள்ளுதல் ஆகியவற்றை அவர்கள் அறியாத கலைகளாக இருந்ததால் அவர்கள் அம்மணமாகவே திரிந்தனர்.

தெளிந்த நீரூற்றுக்களும், நிழல் தரும் மரங்களும் நிரம்பிய பரந்த புல் நிரம்பிய மேடான சமவெளி அருகிலேயே இருந்தாலும் சுற்றியிருந்த சேற்றுப் பகுதிகளிலேயே மொய்த்திருக்க அவர்கள் விரும்புவது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். வெப்பத்தின் கடுமையிலும், உடல் நலத்திற்குத் தீங்கானதிலும் அவர்கள் சுகம் காண்பதைப் போல தோன்றுகிறது. அந்த மேட்டுச் சமவெளியின், நெட்டுக்குத்தான சரிவுப்பகுதிகள், குரங்கு மனிதர்களின் தாக்குதல்களை எதிர் கொள்ள இயற்கை அரணாக எளிதில் பயன்பட்டிருக்க முடியும். இதே மாதிரியான சூழலில் ஸ்காட்லாந்தின் ஆதி இனக்குழுக்கள் மலைகளின் உச்சிகளில் காப்பரண்களைக் கட்டிக் கொண்டார்கள், இந்த எளிய உத்தியைப் பின்பற்றும்படி பில்லிசூன்ய மந்திரவாதிகளை அறிவுறுத்தினேன், ஆனால் என் வார்த்தைகளுக்குப் பலன் இல்லை. இருந்தாலும் மேட்டுப்பகுதியில் ஒரு குடில் கட்டிக் கொள்ள அவர்கள் என்னை அனுமதித்தனர். அங்கு இரவுக் காற்று குளுமையாக உள்ளது.

வரம்பற்ற அதிகாரம் கொண்ட அரசனால் இந்த இனக்குழுவினர் ஆளப்படுகிறார்கள். அரசனைத் தேர்ந்தெடுத்து அவனை பிரமாணம் எடுக்கவைக்கும் பில்லி சூன்ய மந்திரவாதிகளே உண்மையான ஆட்சியாளர்கள் என்பது என்னுடைய யூகம். இந்த கூட்டத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஆணும் துன்பந்தரும் ஒரு சோதனைக்கு ஆட்படுத்தப்படுகிறான். அவன் குறிப்பிட்ட சில மச்சங்களை உடையவனாக இருந்தால்-அவை எவ்வகையான மச்சங்கள் என்று எனக்குச் சொல்லப் படவில்லை - அவனை யாஹ"க்களின் அரசனாக உயர்த்துகிறார்கள். பெளதிக உலகம் அவனை அறிவின் பாதைகளிலிருந்து இட்டுச் செல்லக்கூடாது என்பதற்காக அதே இடத்தில் அவன் காயடிக்கப்படுகிறான், அவன் கண்கள் தீய்க்கப்படுகின்றன, அவன் கை கால்கள் துண்டிக்கப்படுகின்றன. அதன் பிறகு காப்பரண்(க்ஸ்ர்) என்று அழைக்கப்படுகிற அடிநிலக்குகையில் அவன் சிறைவைக்கப்படுகிறான். நான்கு பில்லி சூன்ய மந்திர வாதிகளுக்கும், அவனுக்கு பணிவிடை செய்து சாணத்தால் அவனுக்கு அபிஷேகம் செய்யும் இரண்டு அடிமைப் பெண்களுக்கு மட்டுமே அங்கு நுழைய அனுமதி உண்டு. போர் நேரிட்டால் மந்திரவாதிகள் அவனை இந்தக்குகை யிலிருந்து வெளியே கொண்டுவந்து, அந்த இனக் குழுவினர்க்கு வீரம் உண்டாக்கும் வகையில், ஒரு கொடியையோ அல்லது மந்திர சக்கரத்தையோ காண்பிப்பதைப் போல, யுத்தகளத்திற்கு அவனைத் தோள்களில் தூக்கிச் செல்கிறார்கள். அந்த மாதிரி சமயங்களில், குரங்குமனிதர்களால் சரமாரியாக வீசப்படும் கற்களால் தாக்கப்பட்டு உடனே அவன் இறக்கிறான்.

இன்னொரு காப்பரணில் அரசி வாழ்கிறாள், அரசனைப் பார்ப்பதற்கு அவளுக்கு அனுமதியில்லை. நான் அங்கு தங்கியிருந்த போது இந்த பெண்மணி என்னை அன்புடன் வரவேற்றாள். சிரித்த முகத்துடனும், இளமையாகவும் அவளுடைய இனம் அனுமதிக்கும் அளவுக்கு நளினமாகவும் இருந்தாள். உலோகத்தாலும், தந்தத்தாலும் ஆன கை வளைகளும், பற்களால் ஆன கழுத்தணிகளும் அவளுடைய ஆடையற்ற உடலை படுத்துகிறது. நான் கண்டுபிடித்த  இக்கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் நம் முன்னோர்கள் செதுக்கியுள்ள மந்திரவரிவடிவங்களிலிருந்து மாறுபட்டிருக்கவில்லை. அவற்றைப் புரிந்து கொள்ள இந்த இனக்குழுவுக்குத் திறமையில்லை. இவர்கள் எழுத்து மொழியை மறந்து போய் பேச்சுவழக்கை மட்டும் கைகொண்டுள்ளது போல ஆகிவிட்டது.

பயிற்றுவிக்கப்பட்ட பூனைகளை சண்டையிடச் செய்வது மற்றும் துக்குத் தண்டனைகள் ஆகியவை இந்த மக்களுக்கு பொழுது போக்குகள். அரசியின் கற்புக்கு பங்கம் விளைவிக்க முயன்றான் என்றோ, மற்றொருவன் பார்க்க உணவு உண்டான் என்றோ ஒருவன் மீது குற்றம் சுமத்தப்படும். சாட்சிகளின் விளக்கமோ, குற்றம் சுமத்தப்பட்டவனின் ஒப்புதல் வாக்குமூலமோ இல்லாமல் அரசன் அவனை குற்றவாளிதான் என்று தீர்ப்பு சொல்லி விடுவான். தண்டனை விதிக்கப்பட்டவன் அனுபவிக்கும் சித்ரவதைகளை நான் சிரமப்பட்டுதான் மறக்கவேண்டும். பிறகு அவனை கல்லால் அடித்துக்கொல்வார்கள். முதல் கல்லையும், கடைசிக்கல்லையும் - இது வழக்கமாக தேவைப்படாது. அவன் மீது எறியும் சிறப்புரிமை அரசிக்கு உண்டு. அவளுடைய திறமையுைம், அங்கங்களின் அழகையும் பாராட்டி கூட்டம் உன்மத்தமாகி அவள் மீது ரோஜாக்களையும், முடைநாற்றம் வீசும் பொருட்களையும் வீசி ஆர்ப்பரிக்கும். ஒரு வார்த்தையும் பேசாமல் அரசி சிரிப்பாள்.

கவிஞர்களைக் கண்டுபிடிப்பது அவர்களின் இன்னுமொரு வழக்கம். பெரும்பாலும் புதிர்நிறைந்த ஏழெட்டு வார்த்தைகள் ஒருவன் மனதில் தோன்றலாம். பில்லிசூன்ய மந்திரவாதிகளும், பொதுமக்களும் சுற்றிநிற்க நடுவிலிருக்கும் அவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த வார்த்தைகளை கத்திச் சொல்வான். கவிதை அவர்களை கிளர்ச்சியடையச் செய்யா விட்டால் எதுவும் நடக்காது, ஆனால் அக்கவிஞனின் வார்த்தைகள் அவர்களை ஊடுருவி பரவசம் அடையவைத்தால், ஒரு புனித திகிலின் ஆட்சிக்கு உட்பட்டு ஒரு வார்த்தையும் பேசாமல் அனைவரும் அவனை விட்டு நீங்குவார்கள். புனித ஆவி அவனை தீண்டிவிட்டதை உணர்ந்து யாரும்-அவனுடைய அம்மா கூட அவனிடம் பேசவோ அவனைப்பார்க்கவோ மாட்டார்கள். அவன் இனிமேல் மனிதன் இல்லை, கடவுள். யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிட அனுமதி கிடைத்து விடுகிறது.

யாஹ"க்களின் பகுதிக்கு நான் எப்படி வந்தேன் நான் ஏற்கனவே விவரித்துள்ளேன். அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டதையும், நான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையும், அதை அவர்கள் ஒரு மந்திர இடிமுழக்கமாகக் கருதியதையும் நினைவுபடுத்திப் பார்க்கலாம். அந்தத் தவறை பேணி வளர்ப்பதற்காக அதன் பிறகு நான் ஆயுதமின்றி சுற்றிவர முயன்றேன். வசந்த காலத்தின் ஒரு காலைநேரத்தில் திடீரென்று குரங்கு மனிதர்கள் எங்கள் மீது படையெடுத்தார்கள். மேட்டு நிலத்திலிருந்து கீழ் நோக்கி கையில் துப்பாக்கியுடன் நான் ஒடினேன். அவர்களில் இரண்டு விலங்குகளைக் கொன்றேன். மீதிப்பேர் திகைத்துப்போய் ஓடிவிட்டார்கள். துப்பாக்கிச்சூடு பார்வையில் படவில்லை. வாழ்க்கையில் முதன்முதலாக நான் ஆரவாரத்துடன் பாராட்டப் பட்டேன். அதன் பிறகுதான் அரசி என்னை வரவேற்றாள் என்று நினைக்கிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல யாஹ"க்களின் ஞாபக சக்தி நம்பமுடியாத ஒன்றாக இருப்பதால் அன்று பிற்பகலே நான் தப்பித்து ஓடிவிட்டேன். அதன் பிறகு காட்டில் நிகழ்ந்த என்னுடைய சாகசங்கள் குறிப்பிடத்தக்கவை அல்ல. நாளடைவில் கறுப்பு மனிதர்கள் வாழும் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். அவர்களுக்கு உழவும், விதைக்கவும், வழிபாடு செய்யவும் தெரிந்திருந்தது. அவர்களோடு போர்த்துக்கீசிய மொழியில் என்னால் உரையாட முடிந்தது. ஃபாதர் பெர்னாண்டஸ் என்ற ஒரு ரோம சமயப்பரப்பாளர் அவருடைய குடிலில் என்னைத் தங்கவைத்து, என்னுடைய கடும் பயணத்தைத் தொடரும் வரையில் கவனித்துக் கொண்டார். எவ்வித போலித்தனமும் இல்லாமல் உணவுக் கவளங்களை அவர் திறந்த வாய்க்குள் போட்டுக் கொள்வது எனக்கு ஆரம்பத்தில் அசூயையாக இருந்தது. நான் இன்னும் என் வாயைக் கையால் மூடிக்கொண்டோ அல்லது கண்களை வேறுபுறம் திருப்பிக்கொண்டோதான் சாப்பிட்டேன். சில நாட்களில் நான் என்னை மாற்றிக் கொண்டேன். இறையியல் தொடர்பான எங்கள் விவாதங்களை என்னால் மகிழ்ச்சியுடன் நினைவுகூற முடிகிறது. ஆனாலும் யேசுவின் உண்மை விசுவாசத்திற்கு அவரை என்னால் மாற்றமுடியவில்லை.

கிளாஸ்கோவில் இருந்துகொண்டு நான் இந்த அறிக்கையை இப்போது எழுதுகிறேன். யாஹ"க்களிடையே நான் தங்கியிருந்ததை பற்றி சொன்னேன். ஆனால் அந்த அனுபவத்தின் பயங்கரத்தைப் பற்றி நான் சொல்லவில்லை. அது முற்றாக என்னை விட்டு நீங்கவில்லை. இன்னும் என் கனவுகளில் அது வருகிறது. சில சமயங்களில் தெருவில் அவர்கள் இப்போதுகூட என்னைச் சூழ்ந்துகொள்வதாக நான் உணர்கிறேன். யாஹ"க்கள் காட்டுமிராண்டிகள் என்பதும் பூமியிலேயே அதிக காட்டுமிராண்டித்தனம் நிரம்பியவர்கள் என்பதும் எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களுக்குக் கழுவாய் தரும் சில அம்சங்களைப் புறக்கணிப்பது நியாயமாகாது. அவர்களுக்கென்று சொந்த அமைப்புகள் உள்ளன. அவர்கள் ஒர் அரசனை துய்த்து மகிழ்கிறார்கள். அரூபகருத்தாக்கங்களைச் சார்ந்துள்ள ஒரு மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஹீப்ரூக்கள் மற்றும் கிரேக்கர்களைப்போல கவிதையின் இறைத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். உடலின் இறப்புக்குப் பின்னும் ஆன்மா வாழ்கிறது என்ற யூக உணர்வு அவர்களிடம் உள்ளது. தண்டனைகள் மற்றும் வெகுமானங்கள் பற்றிய உண்மையை விடாப்பிடியாக பின்பற்றுகிறார்கள். நம்முடைய பல வரம்பு மீறல்களையும் தாண்டி நாம் நாகரீகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கும் அளவுக்கே அவர்களும் அவர்கள் முறையில் அதில் அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் படையில் சேர்ந்து கொண்டு குரங்குமனிதர்களுக்கு எதிராக போரிட்டது குறித்து எனக்கு வருத்தம் கிடையாது. அவர்களுடைய ஆன்மாக்களைக் காக்கும் கடமை நமக்கு உள்ளது. அது அன்றி இந்த அறிக்கை முன்வைப்பவற்றை நம் மாட்சிமை தாங்கிய மகாராணியாரின் அரசு புறக்கணித்துவிடக் கூடாது என்பதும் எனது உணர்ச்சி பூர்வ கோரிக்கை.

***********************************************************************************

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்