Pages

Wednesday, June 01, 2011

பசுந்தரை - பிரமிள்

பசுந்தரை - பிரமிள்

கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!


என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.


எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.


பாலையில் படர்கிறது
பசுந்தரை.
                  

           -    பிரமிள்

 thanks to http://www.eegarai.net/


 

பிரமிள் கவிதைகள்
தொகுப்பு: கால சுப்ரமணியம்
லயம் வெளியீடு
அக்டோபர், 1998
327 பக்கங்கள்

பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/?prd=&page=products&id=6091 வாங்கலாம்.