Pages

Saturday, March 17, 2018

அரசனும் அரசியும் - ரமேஷ் பிரேதன்

அரசனும் அரசியும் - ரமேஷ் பிரேதன்

வரலாற்றில் மாபெரும் பிழையைச் செய்துவிட்டீர்
எல்லோராலும் பாடப்பட்ட எளிய கவிதையைத் தடை செய்தீர்


பேரரசனும் பேரரசியுமான நீங்கள்
ஓர் எளிய கவிஞனைக் கழுவிலேற்றினீர்

கரைபுரண்டோடும் இரண்டு ஆறுகளுக்கு
இடைப்பட்ட வள நாடு கொண்டீர்
இரண்டு ஆறுகளையும் உங்கள் இருவரின் பெயர்களால்


அழைக்கப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டீர்
உங்களது பெயர்களைத் தாங்கிய ஆறுகள்
படிப்படியாக நீர்ப்போக்கு அற்று
வெற்று மணல் பரப்பாகத் தகித்துக் கிடக்கின்றன

நீள் மதில் சூழ் நெடுங்கோபுரச் சிவத்தலம்
எழுந்தருளிய அன்னைக்கும் அய்யனுக்குமான
பெயர்களை மாற்றி
உங்களது பெயர்களைச் சூட்டினீர்கள்
கோயில் கொண்ட தெய்வங்கள்
சினம் கொண்டு காடு பாய்ந்தன

அரண்மனைக்கு வெளியே நெடிதுயர்ந்த சிலைகள் இரண்டு

உங்களை நீங்களே வடித்துக்கொண்டீர்
குடிமக்களைக் கடவுளர்களாக வழிபட நிர்ப்பந்தித்தீர்
வரலாற்றில் மாபெரும் பிழையைச் செய்துவிட்டீர் எல்லோராலும் பாடப்பட்ட எளிய கவிதையைத் தடை செய்தீர்


பேரரசனும் பேரரசியுமான நீங்கள்
ஓர் எளிய கவிஞனைக் கழுவிலேற்றினீர்
ஆம், கழுவிலேற்றினீர்
O