Pages

Wednesday, May 21, 2014

நினைவு - ஆத்மாநாம் & உன் நினைவுகள் - - ஆத்மாநாம்

athmanam நினைவு

இருதயத்தின் நரம்புகளைத்
துண்டு துண்டாக்கி
எலும்புக் கூடுகளை
ஒன்றாய் அடுக்கி
சிதைக்குத் தீயிட்டுத்
திரும்பினேன்
திரும்பிப் பார்த்தேன்
ஒரு புகைப்படம்
கிழித்து எறிந்தேன்
மிச்சம் உள்ள நினைவுகளையெல்லாம்
கடலில் கரைத்துவிட்டேன்
இனித் தெளிவென்று நினைத்து
கட்டிலில் கவிழ்ந்தேன்
நீ வந்தாய்
எல்லாமே புதிதாகத் தெரிந்தது
அங்கே
நானுமில்லை
நீயுமில்லை
இரண்டு நிழல்கள்
பேசிக்கொண்டிருக்கின்றன
அவற்றின் மெல்லிய குரலின்
கேஸட் பதிவே இது
அந்த மொழிக்கு வார்த்தைகள் கிடையாது
தாறுமாறான வாக்கியங்களின்
ஒலிச்சிதறல்
எண்ணிக்கையற்ற எழுத்துக்கள் மட்டும்
எங்கிருந்தோ வந்துகொண்டேயிருக்கின்றன
நிச்சயம் இது கனவு.
சிச்சிப்படியா
இங்கே கேஸட் நிறைவுறுகிறது
பக்கத்து அறையில்
செய்திகள் ஒலிக்கின்றன

நன்றி http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=263&pno=37

ஆத்மாநாம் எழுதிய அனைத்து கவிதைகளும் http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?pno=13&bookid=263 வலையேற்றப்பட்டுள்ளது.
பக்க எண் 13 முதல் 262 வரை.


உன் நினைவுகள் 

எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை

அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள

முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை

எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்

என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்

நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)