தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, July 11, 2013

றியாஸ் குரானா


Riyas Qurana
16 hrs ·


புத்தகங்களினுள் வசிப்பவள்.
Friday, ‎October ‎2, ‎2015
நீண்ட நாட்களுக்குப் பின் நாளை நுாலகத்திற்குச் செல்ல இருக்கிறேன். புத்தகங்கள் சூழ அமர்ந்திருப்பது வினோதமான ஒன்று. புத்தகங்களுக்குள் கலவரங்களும், கொலைகளும், காதலும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், அமைதி நிரம்பியே இருக்கும். பெரு நகரத்தை, நீண்ட வரலாறுகளை, பக்கத்தில் அடுக்கி வைத்திருப்பார்கள்.

மலைகள், கடல், வானம் எல்லாமே தலைகீழாகவோ செங்குத்தாகவோ சரிந்துகிடக்கும். மேசையில் விரித்து வைக்கப்பட்ட புத்தகத்தின் தாள்களை மின் விசிறி அவசரம் அவசரமாக புரட்டி வாசித்துக்கொண்டிருக்கும்.

நாளை எப்படியோ தெரியாது. கவிதைகளின் பக்கம் போவதில்லை என உறுதியுடன் இருக்கிறேன். அவைகளின் ஒப்பாரிகளும், சிணுங்கல்களும், இரங்கல்களும் ஒருவகை ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

இப்படித்தான் ஒருநாள் புத்தக அடுக்குகளை கடக்கும்போது, எதிர்பாராமல் பாய்ந்து என்னை அச்சமூட்டினான் போர்ஹே. வாய்விட்டுக் கத்திவிட்டேன். நுாலகமே திரும்பிப் பார்த்தது. அடுக்கிலிருக்கும் ஏதாவதோரு புத்தகத்திற்குள் இறங்கிவிடுவேன். கரையேறும்போது வேறு ஒரு புத்தகத்திற்குள்ளிருந்து வெளியேறுவேன். இது எனக்குப் பிடித்த விளையாட்டும் கூட.

சுற்றம் முற்றும் பார்த்து
இரவைத் திறந்தேன்
சிறிதொரு பூங்காவில்
தன்னந்தனியே பகல் வீற்றிருந்தது
அதற்கடுத்ததாக ஒரு ஆறு
குளித்துவிட்டு அவன்
கரையேறிவந்தான்
அவனுடைய கண்களைக்
கடப்பதே சிரமமாக இருந்தது
முள்ளு வேலியினுாடாக
நுழைவதைப்போல
சிராய்ப்புகளுடன் கடந்துவிட்டேன்
அடுத்து தொடர்ச்சியாக
நினைவுகளை அனுப்பி
என்னைத் தாக்கத்தொடங்கினான்
கொரில்லா வீரனாகி
நினைவுகள் அனைத்தையும் கொன்று
ஒன்றை மட்டும் கைது செய்தேன்
அதன் உதவியோடுதான்
அவனுடைய மனதிற்குள்
நுழைய வேண்டும்.
கைது செய்த நினைவையே அனுப்பி
மனதை உளவு பார்த்தேன்
தகவல்களைச் சேகரித்துக்கொண்டு
ரகசிய பாதைகளினுாடாக நுழைந்து
அவன் மனதின் வனங்கள் முழுவதும்
தேடிப்பார்த்துவிட்டேன்
அங்கும் அவளைக் காணவில்லை.
நுாலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஏதாவதொரு புத்தகத்தினுள்
ஒழிந்திருக்கலாம்.
புத்தகத்தை திறக்கும்போது
பறவையாகி அவள் பறந்துவிட்டாலும்
ஆச்சரியமில்லை.

காணாமல்போன மழைத்துளிகள்



இன்னும் சற்று நேரத்தில
மழை தொடங்க இருக்கிறது.
தனது துளிகளைக் காணாது
இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
அவளும் நானும்
அந்தச் சற்று நேரத்தில்தான்
சந்திக்க இருக்கிறோம்.
அந்தச் சற்று நேரத்தில்,
இரவும் நிலவும் வரும்.
ஆனால், மிக இலகுவாக
தனது கைகளால் நிலவொளியை
மறைத்துவிடுவாள் என்பதால்
எந்தப் பிரச்சினையுமில்லை.

ஏற்கனவே, ஒத்துக்கொண்டதற்கிணங்க
மழையைப் பெய்ய வேண்டி இருக்க
துளிகளைக் காணாது
தேடியலையும் மேகத்தை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இது எதுவும் தெரியாத அவள்
அதோ வருகிறாள்.

சற்று நேரமாகிறது
மழை பெய்யும் என்ற சந்தோசத்தில்
முத்தமிடத் தயாராகிறாள்.

மழை பெய்யவில்லை.
மேகத்திடமிருந்து திருடி
எனது மனதிற்குள் ஒழித்து வைத்திருந்து
துளிகளையெல்லாம்
மரக்கிளைகளை நனைத்து விழும்படி
பெய்கிறேன்.
முத்தம் அதை உலர்த்துகிறது.

மேகத்தை நம்ப முடியாதுதானே,
சற்று நேரத்தில் மழை பேயாது போனால்
ஒரு முத்தத்தை இழக்க வேண்டுமல்லவா?

முன்பொருநாள் மேகம் ஏமாற்றியிருக்கிறது.
எனது வயலுக்கு மழை தருவதாகச் சொல்லி.

Riyas Qurana · 544 followers
Riyas Qurana - றியாஸ் குரானா
https://www.facebook.com/permalink.php?story_fbid=336236853196541&id=182863578533870&notif_t=notify_me
தமிழ் கவிதைகளின் எதிர்காலம்? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் ஓர் உரையாடல்
நவீன கவிதை காலாவதியாகி விட்டது என்ற கவிஞர் றியாஸ் குரானாவின்
கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடன் ஓர் உரையாடல்.. உரையாடலுக்கு முன் அவர் கட்டுரையில் இருந்து ஒரு சிறிய பகுதி..
********************
பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது. அதனூடாக எதையும் காப்பாற்றிவிட்டு ஒரு செயலை முடிக்கிறது. அதாவது, தீப்பிடித்திருக்கும் மாடியில் சிக்கிய குழந்தையை மிக இலகுவாக காப்பாற்றிவிட பின்நவீனக் கவிதையால் முடிகிறது. இது எப்படி என்றால் குறித்த சம்பவத்தை பிரதிபலிக்காமல், அதற்கு நிகரான ஒரு சம்பவத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த உருவாக்கத்தில், எதார்த்தம் என நம்புவதற்கும் கற்பனைக்குமிடையிலான எல்லைக்கோட்டை அழித்துவிடுகிறது. அப்படி அழிக்கப்படும்போது ஒரே பிரதியில் எதார்த்தமும் கற்பனையும் சமமான அர்த்தத்தில் வசிப்பதாக மாற்றியமைக்கிறது. இப்படி மாற்றியமைப்பதினூடாக, அங்கே காப்பாற்றமுடியாது என்ற ஏக்கம் சிறிதும் இருப்பதில்லை. எதை எந்த வழிகளில் நிகழ்த்திக் காட்ட முடியுமோ அந்த வழிகளையெல்லாம் கையாள்கிறது. நெடிய வரலாற்றில் சரிசெய்ய முடியாமல் போராடிய வாழ்வை, வேறொரு தளத்தில் பிரதியில் நிகழ்த்திக்காட்டுகிறது. பின்நவீனத்துவத்தின் கவித்துவம் என்பது நிகழ்த்திக்காட்டுவதுதான். நவீனத் துவத்தின் கவித்துவம் பிரதிபலித்தல் என்பதை நிங்கள் அறிந்திருப்பீர்கள்.
நவீன கவிதையை காலாவதியாகச் செய்த கவிதையை 2004ம் ஆண்டு ரமேஸ் : பிரேம் இருவரும் இணைந்திருக்கும்போது அவர்களிடமிருந்தே வெளிப்பட்டது. அதுபோல சில கவிதைகளை அப்போது, அவர்கள் முயற்சித்திரந்தாலும் அந்த ஒரேயொரு கவிதையே நவீனத்திலிருந்து பின்நவீனத்திற்கு கவிதையை நகர்த்தும் முதலாவது கவிதையாக இருந்தது. எனினும். அதன் பிறகு அவர்களால்கூட நிகழ்திக்காட்டும் கவிதைகளைத் தொடரமுடியாமல் போய்விட்டது என்பது துரதிஸ்டவசமானதுதான்.
அந்தக் கவிதை இதுதான். தமிழின் முதலாவது பின்நவீன கவிதையாக (நிகழ்த்து கவிதை) நான் அடையாளம் கண்டது.

புத்துயிர்ப்பு

நெடிதுயர்ந்த கட்டிடம் எரிந்து கொண்டிருந்தது.
உள்ளே இருந்து அபயக்குரல்கள்
தலைக்குமேல் பறந்த காகம் ஒன்று
தீச்சுடரில் சிக்கிக்
கட்டிடத்தின் திறந்த வாய்க்குள் விழுகிறது.

பத்தாவது மாடியின் கண்ணாடிச்
சன்னலை உடைத்து
எரிந்து கொண்டிருக்கும்தாய்
குழந்தையை வெளியே வீசுகிறாள்
பறாச் சிறகுகளைச் சூடியஅ து
படபடக்கிறது அந்தரத்தில்.

சிறகுகளை குழந்தைக்கு முளைக்கச் செய்து காப்பாற்றிவிடுகிறது கவிதை. காப்பாற்ற முடியாத ஏக்கமாக மாறாமல், காப்பாற்றுதல் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறது.ஆயினும், 2010ம் ஆண்டிற்குப் பிறகே இந்த பின்நவீன நிகழ்த்து கவிதைகள் அதிகரிக்கத் தொடங்கின
****************************************

இனி உரையாடல்....

********************************

ஒரு பார்வையில் பார்த்தால் , கவிதை எளிமை படுத்துவது தவறு என நீங்கள் வாதிடுவதாக தோன்றுகிறது

நவீன கவிதையை எப்படி கடக்கிறோம் என்பதை சொல்கிறேன். அதுபோல, கவிதை எப்படி நகர்ந்து வந்திருக்கிறது என்பதையும் சொல்கிறேன். எளிமை என்பது வாசிப்பு பயிர்ச்சியை பொறுத்து உருவாகுவது. ஒரு தமிழ் பாட மாணவனுக்கு திருக்குறள் புதுக்கவிதையைவிட எளிமையானதுதான்.

நினைவு வைத்து கொள்ள எளிதான வடிவில் , சந்தத்தில் இலக்க்ண நூலான தொல்காப்பியத்தை எழுதினார்கள்...அது ஓர் அழகுதானே

அந்தத்தேவை இப்போது இருப்பவர்களுக்கு அதை பரிந்துரைப்போம். ஆனால், கவிதை ஒரு கற்பனையான சிந்தனை முறை என யோசிப்பவர்களுக்கு வேறு தேர்வு அவசியம்தானே

நவீன கவிதை காலாவதி ஆவது ஓகே..ஆனால் நவீன கவிதையின் எல்லா சாத்தியங்களையும் தமிழ் முயன்று பார்த்து விட்டு , பின் நவீனத்துவத்துக்கு தயாராகி விட்டதா? நாவலை பொறுத்தவரை , பின் நவீனத்துவத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்பது பலர் கருத்து

நாவல் சிறுகதை எல்லாம் மிக முந்தியே அதைச் செய்துவிட்டன. எதுவும் அதன் அனைத்துச் சாத்தியங்களையும் நிகழ்த்திவிட்ட பிறகுதான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது ஒருவகை எதிர்பார்ப்பு . ஆனால், அது அப்படியல்ல. எந்தக் கருத்துநிலையும் முழுமையாக செயற்படுத்தப்படுவதோ, முழுமையாக நிராகரிக்கப்படுவதோ இல்லை. அதன் முக்கியமாக சரடு கேள்விக்குள்ளாகும் புலத்திலிருந்து அது உடைத்துக்கொண்டு போய்விடுகிறது

பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது- இதுதான் பின் நவீனத்துவத்தின் வரையறையா

நவீன கவிதை அதை எப்படிக் கடக்கிறது என்பதும், கடந்த நிலையில் அதற்கு என்ன பெயரிடுவது என்பதும் முக்கியமான ஒன்று. அதை பின்நவீன அம்சங்களோடு பொருத்தி பேசுவது என்பது ஒரு ஆரம்ப நிலை. இது பின்நவீனத்துவத்தின் கருததநிலையை முற்றாக எடுத்துக்கொள்வதல்ல. நவீனத்துவத்தின் தொடரச்சியுடன் கடந்து நிற்பது. நான் தௌவிவான ஒரு சொல்லை பயன்படுத்தியிருப்பேன். தமிழின் பின்நவீன கவிதை என்று. ஆகவே, பின்நவீனம் என்ற கருத்தாக்கத்தை முற்றாக இங்கு கையேற்காமல், தமிழ் கவிதையின் தொடர்ச்சியை வாசிப்பதினுாடாக, நவீன கவிதையை எப்படிக் கடக்கிறது என்றுதான் முன்வைத்திருப்பேன்.

பின்நவீனத்துவம் வாழ்வை முழுமையாகச் சரிசெய்ய முடியாது என அறிவித்தது. - அப்படி என்றால் ஈழம் சார்ந்த லட்சியவாத கவிதைகள் எல்லாம்?

அவை குறித்து கட்டுரையில் பேசியிருக்கிறேன். இதற்கு முன்பும், கற்பனை என்பது மேலதிகச் சிந்தனை என்ற கட்டுரையிலும் பேசியிருக்கிறேன். அரசியலை தனித்துறையாகவே கவிதை பார்க்கிறது. அதற்கு கவிதை கடமைப்பட்டது என்ற எந்த பிடிவாதத்தையும் அது நிராகரித்துவிடும்.

ஈழ அரசியல் போன்றவற்றுக்கு இடம் இல்லையா?
அரசியல் ரீதியான பார்வைக்கு இங்கு பின்நவீனத்துவம் முக்கிய இடந்தருகிறது. சிறுபான்மைக் கதையாடலாக ஈழத்து அரசியல் நிலவரத்தை அனுகுகிறது. அதற்கான வாய்ப்பு அதற்குள் உண்டு.

விளிம்பு நிலை மக்களின் எழுத்துகள் , பெண்ணீய பார்வைகள் போன்றவை குறித்து ?

அவை குறித்து பேசியிருக்கிறேன். பின்நவீனம் தமிழைச் சந்தித்ததும் ஏற்பட்ட மாற்றங்கள். அரசியல் ரீதியிலான அதன் பயன்பாடே தமிழில் மேலெழுந்தது. விளிம்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள், சிறுகதையாடல்கள் என்பன மேல்நிலைக்கு வந்தன. அதன் வரவுதான், தலித் இலக்கியம், பெண் எழுத்துக்கள் என்பது முன்னிலைக்கு வரவேண்டிவந்தது. இது முற்றிலும் அரசியல் சார்ந்த பார்வையினுாடாக இலக்கியம் அனுகப்பட்டதற்கு உதாரணம். ஆனால், நான் சொல்வது, புனைவுசாரந்த செயல்களால் கவிதை நவீன வெளியிலிருந்து கடந்துவிடுவதைத்தான்.

மனிதனை மகத்தானவனா மாற்றுவதே கலை என்பதை பின் நவீனத்துவம் மறுக்கிறது என்கிறீர்களா

மனிதனை எந்த தத்துவங்களும், அறங்களும், கலைகளும் மகத்தானவனவர்களாக மாற்றவில்லை என்கிறது என உடனடியாகச் சொல்லலாம். இப்படிச் சொல்லுவதுதான் அனைவருக்கும் புரியவும்கூடும்.

அப்படி என்றால் கலைகளின் நோக்கம் அல்லது பணி என்ன
அனைத்திற்கும் நோக்கமும், பணியும் தேவை என்பது ஒரு மதம் சார்ந்த பார்வை. ஆனால், இந்தக் கேள்வியை தொடர்ச்சியாக கேட்டால் அமற்கு ஏதோவொரு வகையில் பதிலொன்றை உருவாக்கிவிட முடியும். கலை என்பது ஒருவகை மனிதச் செயல். அது நிகழ்த்தப்பட்ட பிறகு அதன் பயன் மற்றும் நோக்கம் குறித்து பல விசயங்களை உருவாக்கிவிட முடியும். ஏலவே நொக்கதையும் பயனையும் விளைவாக வைத்து செயற்பட்டால் அது கலையில்லை என்று மட்டும் தெளிவாக சொல்லலாம்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=336234846530075&id=182863578533870&notif_t=notify_me

Riyas Qurana - றியாஸ் குரானா
கவிதைகளுக்கு இன்று அவசியம் இல்லை- அசோகமித்ரன் . கவிஞர்கள் றியாஸ் , நேசமித்ரன் , நறுமுகை தேவி எதிர் வினை
அசோகமித்ரன் அழகாக கதைகள் எழுதுவார் ...அவ்வப்போது தகுதி அற்றவர்களை பாராட்டி பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்குவார்..

அந்த வகையில் அவரது சமீபத்திய பேட்டி சர்ச்சையை கிளப்பியது....அது குறித்து சில கவிஞர்களுடன் ஓர் உரையாடல்...

*******************************************************************

அந்த காலத்தில் எழுதி வைக்கும் வசதிகள் இல்ல... நினைவில் மட்டுமே அறிவை சேகரித்து வைக்க முடியும் என்பதால் கவிதை என்ற வடிவம் தேவைப்பட்டது..இன்று அதற்கான அவசியம் இல்லை என்கிறார் அசோகமித்ரன்.. உங்கள் கருத்து?

Riyas Qurana

அறிவை சேகரிக்காமல் வேறு எதையாவது சேகரிக்க உதவலாம். மற்றது மிக முக்கியமானது ஒன்றை நீங்கள் கவனிக்கவில்லை. அந்தக்காலத்தில் கவிதையாக கருதிய வடிவம் தேவையில்லை என்பதையே அ.மி சொல்கிறார். நாங்களும் அது தேவையில்லை என்றுதான் இங்கே கத்திக்கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் அந்தக் காலத்து சாமான்கள் தேவையில்லை என்பது அவரின் சிறந்த விமர்சனம்.

பிச்சை

வெண்பா..ஆசிரியப்பா போன்ற வடிவங்கள் , இலக்கணங்கள் எதுகைமோனை போன்றவை தேவை இல்லை என்கிறீர்களா

Riyas Qurana

நினைவில் சேகரிக்க உதவுவதையே அன்று கவிதை வடிவமாக கருதினார்கள் அதுதான் தேவையில்லை. நினைவில் பதிந்துவைக்க உதவிய அனைத்தும். அதற்குள் நீங்கள் சொல்லுவதும் இருந்தால்.

Riyas Qurana

இலக்கியம் என்ற சொல்லுக்கான நவீன அர்த்தம் இரண்டு நுாற்றாண்டுகளுக்கு உட்பட்டதுதான். அதற்கு முன்பு இலக்கியம் என்று பாவிக்கப்பட்து எது தெரியுமா? கவிதைதான். ஆகவே, இலக்கியமமே தேவையில்லை என்று ஒருவகை விரக்தியில் கூட அ.மி. சொல்லியிருக்கலாம். நேர்கண்டவரின் அற்றலைப் பொறுத்து அவரின் பதில் அமைந்திருக்கிறது. அல்லது, இன்று இப்படி சொல்ல நினைத்திருக்கலாம். அதுதவிர, அமி சொல்வது முக்கியமான ஒரு விமர்சனமல்ல.

Ragu Ram Annur

வார்த்தைகள் பலவீனமானவை !!!!

Riyas Qurana

பலமானவைக்கும் வார்த்தை என்று பெயரிடலாம். நீங்கள் எந்த வார்த்தைகளைச் சொல்கிறீர்கள். பலவீனம் எனச் சொன்ன வார்த்தைகளிலாவது பலம் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

Ragu Ram Annur

நான் உங்களை ஒரு கணம் அன்போடு அணைப்பதை, எத்தனை ஆயிரம் வார்த்தைகளில் நான் வெளிப்படுத்த முடியும் ? வார்த்தைகள், உள்ளத்து உணர்வை சென்று சேர்க்க முடியாமல் நலிந்தே சென்று சேர்க்கிறது...

நறுமுகை தேவி

அவர் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்..ஆனால்,இது கவிதைக்கு மட்டுமா?
தாலாட்டு என்பது தாயின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தை தன் தாய் தன் அருகில் இருக்கிறாள் என்ற பாதுகாப்புணர்வோடு உறங்குவதற்கு உணர்த்தப்படும் ஒருவகை ஒலி மட்டுமே என்று கொண்டால் இப்போது அதை மனப்பாடமாகப் பாடிக் கொண்டே தொட்டில் ஆட்டவேண்டியது இல்லை..ஒரு குறுந்தட்டில் பதிந்து சுழல விட்டு விடலாம் அல்லவா..?கவிதை என்பது ஒரு விசயத்தைச் சுவாரசியமாகச் சொல்லும் குறு(ம்)வடிவம்.. (குறுஞ்செய்தி போல்)
எல்லா இடத்திலும் போன் எடுத்துப் பேசுவதை விட குறுஞ்செய்தியை யாருக்கும் தொந்தரவில்லாமல் அல்லது ரகசியமாக அனுப்பி விடலாம்.

அதுபோல எல்லா இடங்களிலும் ’சிறுகதைகளை’ எழுதிக் கொண்டிருக்க முடியாது அல்லவா?

Ragu Ram Annur

வார்த்தைகள் பலவீனமானவை - ஓஷோ

ஒரு மிகச்சிறந்த பேச்சு என்பது நேர்மையான பொய்யே - மைகேல் நைமி

மலர் ஒரு வேளை தான் அழகாக இருக்கிறேன் என்று வாய் திறந்து கூறினால் அசிங்கம் செய்துவிடுகிறது - லாவோ த்சு
Riyas Qurana

உள்ளத்து உணர்வு என்பதெல்லாம் மொழியாலானதுதான். நிங்கள் சிந்திப்பதே மொழியால்தான்.

ஜ்யோவ்ராம் சுந்தர்

அமி சொன்னதையே நவீன கவிதைக்கான அடிப்படைக் காரணம் / தேவை என்றும் சிலர் சொல்வார்கள். எப்படி கேமரா ஓவியங்களை மாற்றியதோ அப்படி அச்சு ஊடகம் கவிதைகளை மாற்றியது.

Ragu Ram Annur

மொழி மூலம் தான் சிந்திக்கிறோம் என்பது தெரியாமலா இத பத்தி பேச வந்திருப்பேன் ?

பேச்சற்று நான் நிற்கும் உணர்வுகளை மொழிபடுத்த விளைவது, பலவீனமாக்குகிறது என் உணர்வுகளை...

Ragu Ram Annur

உங்களுக்கு ஏற்படும் வலி மொழியால் ஆனதா ? உணர்வை வெளிப்படுத்த மொழி பலவீனமாக உதவுகிறது, வெளிப்படுத்த முடியாமல் முடங்கிவிடக்கூடாத உணர்வு எனில், மொழி பெரிதளவில் உணர்விற்கு உதவுகிறது (ஆனால் முழுமையாக இல்லை)

Riyas Qurana

கவிதையோ, இலக்கியமோ எதுவென்றாலும் அது மொழியாலான நிகழ்வு. அது என்றும் அழிந்துவிடுவதில்லை. மனிதர்கள் இனி மொழியற்றவர்களாகிப்பொவதில்லை என நம்புகிறேன். ஆக, கவிதை ன பாவிக்கப்படும் மொழியாலான நிகழ்வு, புதுப்பிக்கப்படவும், மாற்றமடையவும் சாத்தியம் அதிகம். அது இல்லாது போய்விடாது.

பிச்சை

"கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்." என்கிறார் அ.மி... கவிதை என்பது உணர்வு சார்ந்ததல்ல...ஒரு craftmanship மட்டுமே என்பது ஏற்கத்தக்கதா

Ragu Ram Annur

கூறியவனின் உணர்வை முற்றிலும் உணர்ந்து கொள்வதில் தான் சவாலே, வெளிப்படுத்திவிடலாம் பிக்கு, சென்று சேர்ந்ததா ? படித்த/கேட்ட மனிதர் உள்ளுக்குள் என்ன ஆனார் என்பது தானே இறுதி ?

Riyas Qurana

மனிதர்களும், சமூகங்களும், மொழிகளும் முற்றிலும் வேறான வடிவங்களில் இருப்பதை கவிதையாகப் பாவித்திருக்கிறார்கள். அமி சொல்லவருவது, கவிதையாக பாவித்த குறித்த வடிவத்தைப் பற்றியது. அது அவரின் பதிலிலே உள்ளடங்கியிருக்கிறது. அதற்கு வெளியெ நேர்வுகளை நாம் சிந்திக்கத் தேவையில்லை என்றே நான் கருதுகிறென்.

Nesamithran Mithra

நினைவில் மட்டுமே அறிவை சேகரித்து வைக்க முடியும் என்பதால் கவிதை என்ற வடிவம் தேவைப்பட்டது// கவிதை என்பது மேட்னஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நம்புகிறவன் நான் .கூடுதலாய் ‘அறிவை சேகரித்தல்’ இந்த கூற்றே அபத்தமானதாய் தோன்றுகிறது . அவர் எப்போதும் கவிதையை சந்தேகித்தே வந்திருக்கிறார் .அவரது ’அரசியல் நிலைப்பாடு ’கவிஞர்களால் எப்போதும் சந்தேகிக்கப்பட்டே இருந்து வந்திருக்கிறது. ஆதலால்.... நிற்க ! 82 வயதுப் பெரியவருக்கு ,ஒரு நல்ல கதை சொல்லிக்கு என் அன்பு !
பிச்சை

கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்." Nesamithran Mithra இதை ஏற்கிறீர்களா... மேட்னசை எப்படி முயற்சி செய்து வர வைக்க முடியும்

Riyas Qurana

உணர்வுகள் என்பது இயல்பானது அல்ல. அது முற்றிலும் கட்டமைக்கப்பட்டதுதான். துயரம் சந்தோசம் என்பதை வேறு ஏதோவொன்றால் (புறத்திலிருந்து) வழங்கப்படுகின்ற ஒன்றாகவும் இருக்கிறது. உணர்வு, சுயம், அகம் சார்ந்தது என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே தாக்கமுற்ற நிலையிலே இருக்கிறது.

Riyas Qurana

கவிதை புனிதமானது அல்ல. யாரும் எதையும் எழுதிவிட முடியும் கவிதையை மாத்திரமல்ல.அனைத்தையும், ஆனால் அதை எழுதிய கதைகளைக்கூற முடியும்போதுதான் எழுதியது என்ன என்றெ வெளித்தெரிகிறது.

Ragu Ram Annur

உணர்வுகள் பெரும்பாலானது வேண்டுமானால் முழுதும் கட்டமைக்கப் பட்டிருக்கலாம்..

தாயன்பு (விலங்குகளிடம் கூட) போல சில உணர்வுகள், இயல்பிலே தான் வரும்

Riyas Qurana

ஒரு முக்கியமான விசயம் தெரியுமா? கதைகளைக்கூட கவிதையாகத்தான் சொல்ல வேண்டியிருந்தது. கம்பராமாயணம், கீதை இப்படிப் பல.

Nesamithran Mithra

க்ராஃப்ட்டிங் /எடிட்டிங் எல்லாம் எழுத எழுத வாசிக்க வாசிக்கத் தானாய் கைகூடும் . சித்திரமும் கைப்பழக்கம் செ. நா என்பது எத்தனை நூற்றாண்டு பழைய வாக்கியம் புனித வாக்கும் இல்லை புண்ணிய வாக்கும் இல்லை . (புனிதம் புண்ணியம் போன்ற சொற்கள் அவரது அரசியலை காட்டிக் கொடுக்கும் சொற்கள் ) பின் நவீனத்துவம் எல்லாவற்றை கட்டுடைத்து விட்டது .கவிதை மட்டுமல்ல கதைக்கும் இன்னபிற வடிவங்களுக்கும் பொருந்தும். (சாருவின் கதைகள் மீதான சமீப காலத்து ’அபிப்ராயத்தை’ நினைவு கொள்வீர்கள் என நம்புகிறேன் )பாதுகாப்புணர்வுக்கு ஏங்குபவர்கள் அந்த எல்லைகளுக்குள்ளாகவே மொழியிலும் வாழ விழைபவர்களின் மன அமைப்புக்கு நெருக்கமான கதைச்சொல்லிகள் அவர்கள், விடுதலை- மேட்னஸ் சார்ந்து பேச நமக்கு வேறு மொழிப்பரப்பு வேண்டி இருக்கிறது .

Riyas Qurana

எந்த மொழிக்கும், மிக அதிகமான பங்களிப்பை செய்ததும், செய்துகொண்டிருப்பதும் கவிதை என காலத்துக்கு காலம் நம்பப்பட்ட வடிவங்கள்தான். நிற்க எனக்கு ஒரு சந்தேகம். ம.புத்திரனின் கவிதைகளை அமி படித்திருப்பாரோ..? படித்திருந்தால், இப்படிச் சொல்ல சாத்தியம் அதிகமிருக்கிறது. ஏற்றுக்கொள்ள நமக்கு காரணமும் இருக்கிறது.

பிச்சை

கவிதை என்பதை உணர்வு சார்ந்த விஷ்யமாகவே உலகம் எல்லாம் கருதுகிறார்கள்.. ஒருவித மேட்னஸ் தேவை என்கிறார்கள்.. ஆனால் கேசுவலாக கொஞ்சம் பயிற்சி எடுத்தால்போதும் ,..யாரும் எழுதலாம் என அவர் சொல்வது நெருடலாக உள்ளதே

நறுமுகை தேவி

மொழி என்பது ஒரு வடிவம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.ஆனாலும் இந்த மொழியின் மீது ஒரு நூலிழை சந்தேகம் நமக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.நாம் சொல்வது அவர்களுக்குப் புரியுமோ புரியாதோ என்கிற சலனம் இழையோடிக் கொண்டே இருப்பதால்(!) தான் ’வா’ ’போ’ என்று சொல்லும் போதே கைகளாலும் சைகைகள் கொடுக்கிறோம். ‘இல்லை’
’ஆம்’ என்று சொல்லும் போதே தலையையும் ஆட்டுகிறோம்..
அப்படித்தான் ‘பக்தி இலக்கியங்கள்’/ செய்யுள் வடிவம் மனப்பாடம் செய்யப்பட்ட அன்றைய நிலை இன்று தேவையில்லாமல் இருக்கலாம்.ஆனால்,அதற்காக ஒட்டுமொத்தக் கவிதை என்னும் வடிவமே வேண்டாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.அதன் மாற்றம் தேவையாய் இருக்கிறது

உண்மையில் ஒரு பைத்தியக்கார மனநிலையில் எழுதப்படும் கவிதைகள் பல அழகான பரிமாணம் கொள்கின்றன..அது அறிவுசார் நிலை என்ற பொதுப்படையான கூற்று இங்கு ஏற்கத்தக்கதல்ல..

Riyas Qurana

அப்படிச் சொல்கிறவர்கள் உலகெங்கும் நிறைய இருக்கலாம். அனைத்தும் உணர்வு சார்ந்ததுதான் என சொல்ல வாயப்பிருக்கிறது. அது ஒரு குறிப்பான முன்வைப்பு அல்ல. உணர்வு என்று எதைக் கருதுகிறார்கள் என ஒரு சிறு கேள்வியை அவர்களின் முன் வீசினால், அவர்கள் கலவரப்பட்டுப்போய்விடுவார்கள். ஏனெனில், உணர்வு என ஒரு பொதுச்சொல்லை ஒவ்வொரு வேறுபட்ட மனிதனும் வேறுபட்ட அம்சங்களை உணர்வென அழைக்கலாம். இதைத்தான் என்ற ” அதிகமும் பாதுகாக்கப்பட்ட ஒரு பொதுக் கொள்கை” என்ற வசதியில் பயன்படுத்தலாம். ஆக. இந்த உணர்வு என்றும், சொல்லிக் அர்த்தம் என்று ஏலவே புளக்கத்திலுள்ளவைகளுக்கான புதிய வெளிகளை இன்னும் அகழ்ந்து கொண்டு அதை விரிவுபடுத்த முயற்சிப்பதே இலக்கியம். அல்லது கவிதை.

நான் எப்போதம் பைத்தியகார மனநிலையில் கவிதை எழுதுவதே இல்லை. மிகத் தெளிவாக இருக்கும்போது மாத்திரமே எழுதியிருக்கிறேன். பைத்திய மனநிலையில் எழுதலாமென்று எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த மனநிலையில் வேறுவகை வேலைகள்தான் செய்திருக்கிறேன். செய்வதையும் பார்த்திருக்கிறேன். அந்த மனநிலையில் எழுதுபவர்கள் பாக்கியவான்கள். நான் அப்படி செய்யாததினால், அந்த மனநிலையில் எழுதலாம் என்பதில் எனக்கு பெரும் சந்தேகமிருக்கிறது.

Lakshmanan Cbe ·

அசோகமித்திரன் சொல்லும் கவிதையின் காலம் முடிந்துபோய்விட்டது.அப்போதும் அது வெறும் நினைவு சேமிப்புக்கிடங்காக மட்டும் இருக்கவுமில்லை 'போலச்செய்தல்' போல் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் சொல்லாடல்களின் மூலம் ஒரு பொருளுக்கு சக்தியை ஏற்றிவிடும் 'போலச் சொல்லல்' இருந்திருக்கிறது. கவிதை அசோகமித்திரனை தாண்டிப்போய் வெகுகாலமாகிவிட்டது.
https://www.facebook.com/permalink.php?story_fbid=336234043196822&id=182863578533870&notif_t=notify_me

Riyas Qurana - றியாஸ் குரானா

லீனா மணிமேகலை- குட்டி ரேவதி : கவிஞர் றியாஸ் குரானா சுவாரஸ்யமான ஒப்பீடு

கவிஞர் றியாசுடன் உரையாடுவது சுவையான அனுபவம்... பல்வேறு நுட்பமான தகவல்களை தந்தவண்ணம் இருப்பார்.

பெண் எழுத்துகளைப்பற்றி சில கருத்துகளை பகிர்ந்த்துகொண்டார்,,,, லீனா , குட்டி ரேவதி இருவரும் பெண்கள்தான் என்றாலும் , அவர்களுக்கிடையே இருக்கும் வேறுப்பாட்டை சுட்டிக்காட்டினார்..

படித்து பாருங்கள்

**********************************************************

சாரு இமயம் போனால் , ஜெயமோகனும் போகிறார்,,,அவர் கல்யாணத்துக்கு போனால் இவரும் போகிறார்...உங்கள் கருத்து ?

ஜெ குறித்து பேச எதுவுமே இல்லை. மிகவும் பழசுபட்டுப்போன சிந்திப்பு அவருடையது்.

ஹா ஹா...சூப்பர்... தமிழில் இலக்கியம் குறித்து அதுவும் கவிதை குறித்து மிகத்தீவிரமான ஒரு உரையாடல் தேவைப்படுகிறது என சொல்லி இருந்தீர்கள்...ஓர் உரையாடலை / கவிதை வாசிப்பை இந்தியாவிலோ, இலங்கையிலோ ந்டத்தலாம் என கவிஞர் லீனா மணிமேகலை சொல்லி இருந்தார்,,,உங்கள் பதில் ?

/

ஒரு உரையாடலை விரிவாகச் செய்யலாம். இந்தியாவில் என்றால் மிக அதிகமான ஆளுமைகளோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியான உரையாடல் மிக நல்லது என்றே நினைக்கிறேன். அது சாத்தியப்பட காலம் எடுக்குமெனில், முகநுாலிலே தொடங்கலாம். திறந்த ஒரு அழைப்பை விட்டு அதிகமானவர்கள் பங்கேற்கும் நிகழ்வாக நெறிப்படுத்த வேண்டும்.

லீனா கவிதைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

பெண் கவிதைவெளியை அடுத்த நிலைக்கு நகர்த்த முயற்சிக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லி...

அருமையா சொன்னீங்க...ஆனா ஒரு சந்தேகம்

சொல“லுங்க...

பிரதிக்கு ஆண் பெண் பேதம் இல்லை என்பார்களே... அப்படி என்றால் பெண் கவிதை வெளி என்பதற்கு என்ன அர்த்தம்

பிரதிக்கு இல்லை. அது அக்கறை கொள்ளும் அரசியலுக்கு இருக்கிறது. பெண் எழுத்து என்பது புனைவின் விதிகாளால் புரிந்துகொள்ளப்படுவதைவிட , பெண்களின் அரசியல் நிலவரங்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அப்படி முயற்சிக்கும்போது அதிக விசயங்களை நமக்கு தரக்கூடியதாக இருக்கும்.

லீனாவை விதிவிலக்காக வைத்து கொள்வோம்...பெரும்பாலன பெண் கவிஞர்கள் கவிதைகள் ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பதன் உளவியல் காரணங்க்ள் என்ன

பெண் எழுத்து தமிழை சந்தித்த போது, உடலைக்கொண்டாடுதல், என்ற ஒருவிசயமே முதன்மைப்படுத்தப்பட்டது அத்தோடு ஆண்களுக்கு எதிரான ஒரு நிலவரமும் அதில் இணைந்தது. பின்னர் அதுதான் பெண் எழுத்து என்று நிலைபெற்றுவிட்டது. இது எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் நிகழக்கூடியதே....

அதாவது பெண் எழுத்து தமிழில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நினைக்கிறீர்களா?

இல்லை. பலவகையான பெண்ணியக் கருத்துநிலைகள் இருக்கின்றன. தமிழில் நான்சொன்ன ஒருவிசயம் மாத்திரமே பயன்பாட்டிலுள்ளது. உதாரணமாக, ஆண்களுக்கு எதிரானானதாக ஒரு கருத்தை உருப்பெறச் செய்வது. ஆனால், பெண்ணியத்தை ஆதரிக்கின்ற அதற்காக செயற்படுகின்ற ஆண்களை எப்படி குற்றச்சாட்டுக்குள் உள்ளடக்குவது. ஆண்மையச் சிந்தனைக்கு எதிரானதாக பிரதியை செயலாற்ற வைப்பதே சரியானது.

ம்ம்ம்

தொடக்க காலத்தில் ஈழத்திலே பெண் எழுத்துக்கள் அரசியல் அர்த்தத்தில் முதன்முதலில் வெளிப்பட்டது. சிவரமணி (தற்கொலை செய்துவிட்டார்) அவர்களின் கவிதைகளை படித்தால் தெரியும்.

அதிர்ச்சி மதிப்பிட்டுக்ககவும், கவன ஈர்ப்புக்காகவும் சிலர் அப்படி எழுதுவதாக ஒரு குற்ற்ச்சாட்டு இருக்கிறதே

மய்ய நீரோட்டத்தை நிராகரிக்கின்ற அல்லது அதிலிருந்து விலகி சிந்திக்கின்ற அனைவருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். அதை புரிந்துகொள்ள முடியாத அல்லது அதனோடு விவாதிக்க முடியாதவர்களின் ஆயுதம் இது.

இது போன்ற சவால்களை , இடையூறுகளை பெண்கள் எதிர்த்து போராட , தம் சக்தியை செலவிட வேண்டிய நிலையில். அது அவர்கள் படைப்பாற்றலை பாதிக்கும் என கருதுகிறீர்களா

அப்படியான சவால்களை எதிர்கொள்ளுவது, அல்லது அதற்காகச் சிந்திப்பதுதான் படைப்பாற்றல். குறித்த விசயத்திற்கான ஒரு புனைவை உருவாக்குவது. அதற்கப்பால் இல்லை.

நீங்கள் முன்பு சொன்னீர்கள் ”: அது மாத்திரமன்றி பின்தங்கிய பார்வையுடையவர்களினாலே கவிதைகள் பாராட்டப்படுகிறது என்றும் சொல்வேன். விளக்கம் தேவை

இன்று நவீன கவிதையைப்பற்றி பேசுபவர்களும், அதை முன்வைப்பவர்களும் கூட பின் தங்கியவர்கள்தான். கவிதை குறித்து அவர்களிடம் ஒரு அய்பது வருசத்திற்கு முன்னைய புரிதல்கள்தான் இருக்கின்றன. பாராட்டுவதென்பது யாராலும் முடிகிற ஒருவிசயம்தான். எப்போதும், ஒரு பிரதி தன்னைக் கவிதையாக நிறைவடையச்்செய்வதற்கு என்ன வழிமுறைகளைக் கையாள்கிறது எனப்பேசுவதே கவிதைக்கான புரிதலை தர உதவக்கூடியது. நல்லது அல்லது மோசமானது என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று விபரிப்பதுதான் கவிதை குறித்த பொறுப்பான பேச்சாக இருக்கும். அது இல்லாமல் பாராட்டுவதுகூட பின்தங்கிய செயல்தான்.

ஒரு கட்டுரையில் இப்படி சொல்லி இருந்தீர்கள்...”நவீனத்துவ,பின்நவீனத்துவ இலக்கிய,அரசியல் செயற்பாடுகளைக் கதையாடுவதாக தம்மை அறிவித்து செயற்படும் பிரதிகள்கூட ஆண்வாசகனுக்காகவே உருவாக்கப்படுகிறது” அதாவது ஆண்கள் , பெண் வாசகர்களை புறக்கணிக்கிறார்கள்...பெண்கள் எழுதினால்தான் இந்த நிலை மாறும் என்பது உங்கள் கருத்தா

இல்லை. ஆண்வாசகன் என்பது ஆண்மையச் சிந்தனைகைளால் கட்டமைக்கப்பட்டவன்.ஆண் பெண் மய்யச் சிந்தனைகளை கலைக்க முயற்சிக்கிற பிரதிகளை உருவாக்குவது தொடர்பிலானது எனது அக்கருத்து. பெண்கள் கூட ஆண்மய்யச் சிந்தனையை ஏற்கும் பிரதிகளையெ எழுதுகிறார்கள். அதற்கு வெளியெ செல்லவேண்டும்.
உதாரணமாக,
துடைத்தகற்ற முடியாத கண்ணீர்த்துளி என எனது முலைகள் - என்று ரேவதி எழுயிருப்பாங்க (இந்தப் பொருட்பட)

ம்ம்ம்

முலைகளை கண்ணீர்த்துளியாக கருதுவது அது தனக்கு அவமானகரமானது என்பதுபோல ஒரு தோற்றத்தை காட்டக்கூடியதாகவே இருக்கும்.

ம்ம்ம்

ஆண்களால் பிற்படுத்தி புரியவைக்கப்பட்ட உடல் உறுப்பாக முலை மாறியிருப்பதை ரேவதியும் ஏற்றுக்கொள்கிறார அல்லவா?

அட்டகாசம்...சரியாக சொன்னீர்கள்

ஆகவே, ஆண்களி்ன் விருப்பத்தையே இங்கு மீளவும் உறுதிப்படுத்துகிறார்.
தனது உடலை அவர் கொண்டாடவில்லை அல்லவா...?
பெண்கள் எழுதுவது என்பதல்ல இங்கு முக்கியமானது, ஆண் மற்றும் பெண் மய்யச்சிந்தனைகளைத் தகர்ப்பதே...

ஆணின் பார்வையிலேயேதான், ஆணை மையமாக வைத்தே பெண் கவிஞர்கள் சிலர் எழுதுகிறார்கள்

ஆனால், பெண் மய்யச் சிந்தனையை ஏற்க்கலாம் .. பலநுாறாயிரம் நுாற்றாண்டுகளாக ஆண்மையச் சிந்தனையெ இங்கு நிலவியிருக்கிறது.... பெண் மய்யச் சிந்தனையும் கொஞ்சம் நிலவுவதில் என்ன பிரச்சினை.

ஆனால் பெண்ணீய இலக்கியம், தலித் இலக்கியம் , ஈழ இலக்கியம் என இல்க்கிய்தை பிரிப்பது ஆரொக்கியமான போக்கு அல்ல என சிலர் சொல்கிறார்களே

ஆண்மையச் சிந்தனை என்பது பெரும் ஆ்றறல் மிக்க ஒரு அறிவியல் மற்றும் உளவியல் கட்மைப்பு. அதிலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துக்களையே இன்று உருவாக்க வேண்டும். இதை யாரும் செய்யலாம். ஆண், பெண், மற்றயவர்கள்..யாரும்.

தலித் இலக்கியம் , ஈழ இலக்கியம் என இல்க்கிய்தை பிரிப்பது ஆரொக்கியமான போக்கு அல்ல என சிலர் சொல்கிறார்களே

எதையும் எவ்வளவு பிரித்து புரிந்துகொள்ள முடியுமோ அவ்வளவுக்கு நல்லது. அப்போதுதான் அவைகளின் தனித்துவம் தொடங்கி அனைத்தையும் ஏற்கும் மனம் கிடைக்கும். மனிதன் என அனைவருக்கும் பொதுவான விதிகளும் வரைறைகளும் சாத்தியமென்று ஒரு சிந்தனையாளம் சொல்ல முடியாது. பொதுத்தன்மைக்கு மாற்றாகவே, வித்தியாசங்கள் முதன்மைப்படுத்தப்பட்டது. வித்தியாசங்களினாலே மற்றயதற்கும் அர்த்தம் உருவாகிறது. ”அ” ”ஆ“ விலிருந்து வித்தியாசப்படுவதினாலே இரண்டுக்குமான இடமும் முக்கியத்துவமும் பொருளும் கிடைக்கிறது. ஆகவே, பொதுமைப்படுத்தி புரிந்து கொள்வது என்பது, வேறுபடுபவைகளின் மீது மிக மோசமான அதிகாரத்தை செலுத்துவதற்கு உதவக்கூடிதே அன்றி வேறு பயன் ஏதும் அதற்கில்லை.
ஆனால், அந்த வித்தியாசங்களை கருத்திற்கொண்டு நிரந்தரமான பிரிகோடுகளை இறுக்கமாக வரையறுப்பதோ, அத்துகளை வரைவதோ அவையும் மோசமான விளைவுகளுக்குரியதே.
நெகிழ்ச்சியான மாறக்கூடிய வகையிலும், தேவையான நிலைகளில் பொருட்படுத்தி பேசவும் பன்படுத்தவுமாக அந்த பிரிப்புகள் இருக்க வேண்டும்.




Friday, ‎October ‎2, ‎2015

நீங்கள் விருப்பம் காரணமாகவோ, அல்லது இலக்கிய பெரும் பிம்பங்கள் என நம்பவைக்கப்பட்டிருப்பவர்களின் தேர்வுகள் காரணமாக, அதிக புத்தகங்களை படித்திருக்கலாம். அவைகள் அனேகமாக எனது கவிதைகளை சந்திப்பதற்கு உதவுமென்று நான் நம்பவில்லை. இலக்கியத்திற்குள் இருக்கும் மாயமான பிரத்தியேகப் பாதையை கண்டுபிடிக்க வேண்டும். இது இலக்கியத்திற்கள்ளேயே தலைமறைவு வாழ்க்கையை தேர்வு செய்வதைப்போன்றது. அந்தப் பாதைகளில் நடக்கும்போது, பாதையின் இருமருங்கும் எனது கவிதைகளை சந்திக்கலாம். சில நேரம் சிதைவடைந்த பாலங்களை கண்முன்னே கொண்டுவரும். அதைக் கடப்பதற்கு படகுகளை வைத்திருக்கிறேன். கவிதையோடு எப்படியான உறவைப் பெணுகிறீர்களோ அதைப் பொறுத்தே அந்தப் படகு, உங்கள் கற்பனையில் சிக்கும். சிலரை ஏற்றிச் செல்ல பறவைகளும் வரக்கூடும். ஏன் மறுகரையில் நிற்கும் மரத்தின் கிளைகூட நீண்டு உங்களை எடுத்துச் செல்லும். கவிதையடனான உறவு சிக்கலானதாக இருந்தால், புதைகுழியைப்போல உங்களை நிலத்திற்குள்ளே இழுத்துவிடும்.