தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, September 30, 2015

ரவிதாஸ் கவிதை & மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா? - விமலாதித்த மாமல்லன்

 ரவிதாஸ் கவிதை

1) வானம் இல்லை பூமியில்லை
ஒளியும் இல்லை காற்றும் இல்லை
வணங்கும் தெய்வம் வடிவில் இல்லை
வடிவில் வணங்கினும் தவறெதும் இல்லை

வார்த்தை சொல்கிறேன் ரவிதாஸ் பக்தன்
வளர்ந்த பேரவா ஞானமாய் மாறுமா

யோகம் என்கிறீர் போகம் என்கிறீர்
உம்மன இருளினைச் சடங்கில் வைக்கிறீர்

உண்மை சொல்கிறேன் நான் ரவிதாசன்
ஓருருவான உயர்குணத் தெய்வம்
உணர்ந்திட மாட்டீர் உம்பொய்ச் சடங்கால்

பொய்யால் நிரம்பியச் சடங்குகள் விட்டு
புதிதாய் உணர்கிற மனம்தான் தெய்வம்!

2) மசூதியில் தேடுவோர் மசூதியில் தேடட்டும்
மந்திரில் தேடுவோர் மந்திரில் தேடட்டும்
மனதில் உணர்ந்ததை ரவிதாசன் சொல்கிறேன்
மனதிற்குள்தான் உள்ளது இரண்டும்
மறந்தவர் தேடி காண்பது என்ன?

காசியும் காபாவும் வேறா ஒன்றா
கண்டதைக் சொல்கிறேன் வெறும்பெயர் இரண்டும்!

3) ராம ரஹிம் குதா எனும்பல
நாம பேதம் இருந்தால் என்ன
ரவிதாஸ் சொல்கிறேன் மனதினில் கொள்க
படைத்தவன் பெயர்கள் பலவாய் தோன்றும்

4) அல்லா என்கிறார் சிலரதனை
ராம என்றழைக்கிறார் சிலரதனை
ஆனால் ரவிதாஸ் அறிந்து சொல்கிறேன்
கேசவ கிருஷ்ண கரிம் மாதோ
முகுந்த எனும்பல பெயரொலியெல்லாம்
மொழிவது ஒன்றேயான இறைதான்!

5) காலணி தைக்கும் ரவிதாசன் சொல்லிது
ஆலயமோ மசூதியோ இரண்டும் வெற்றிடம்
அல்லாவும் ராமும் உறைவது உன்னிடம்!


 Prem Prem Face Book



மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா? - விமலாதித்த மாமல்லன்

Sunday, November 7, 2010

 http://www.maamallan.com/2010/11/blog-post_07.html

நான் ஒரு திருடனாய் வேசியாய் புத்தனாய் பொய்யனாய் இன்னும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எழுத்தில் கற்பனை என்ற போர்வையில் பொய் சொல்லக்கூடாது. நான் இந்த வாழ்க்கையில் ஒரு புழுவாய் இருந்து நெளிந்த வண்ணம் வாழ சபிக்கப் பட்டிருக்கலாம். நல்லது தங்களைப் போன்ற உயர்ந்த வாழ்வு எனக்கு லபிக்கவில்லை. போகட்டும். குறைந்த பட்சம் எழுத்து, என் விருப்பப்படி வாழ, எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறது. அநேகமாய் எந்த நிர்பந்தமும் இல்லை. அதிலும் போய், ’புனைவு தானே’ என்ன போயிற்று என்று பொய்சொல்லி பிழைப்பது ஒரு பிழைப்பாகுமா? உண்மையென நம்பியது பிழையாகக் கூட இருக்கலாம். தவறில்லை நாமெல்லாம் மனிதர்கள்தானே. ஆனால், மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா?


http://www.maamallan.com/2010/12/blog-post.html
Saturday, December 4, 2010

யாரோ ஒரு மனுஷன் [சிறுகதை]
கீய்ங்கீய்ங் கீய்ங்கீய்ங் ஏதோ குறுஞ்செய்தி. அசிரத்தையாக தலைமாட்டில் தடவி அரைத்தூக்கத்தில் மொபைலை எடுத்துப் பார்த்தார் ராஜ கோபால் ராவ்.

ஒரு பெண்ணிற்கு விபத்து. சோழிங்கநல்லூர் அருகில் இருக்கும் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது. எந்தப் பிரிவு ரத்தம் எனினும் பரவாயில்லை. பின்குறிப்பு: ராஜீவ் காந்தி சாலை, வேளச்சேரி போன்ற இடங்களில் உங்கள் நிறுவனம் / வீடு இருந்தால் அங்கே போவது சுலபம்.

திரும்ப ஒருமுறை படித்தார். கொஞ்சம் தள்ளிதான். 15 அல்லது 17 கிலோமீட்டர் இருக்கக்கூடும்.யாரோ பாவம். சனி ஞாயிறு விடுமுறையும் கூட. அந்த நம்பருக்கு அடித்தார். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகச் சொன்னது. அந்த நம்பர்களுக்கு அடித்தாலே இப்படித்தான். தனியாருக்கு போய்விட்டதாகச் சொல்லிக் கொண்டு விரிவாக்கம் என்கிற பேரில் கொண்டா கொண்டா குட்டிச்சுவரே என எல்லாரையும் கிட்டத்தட்ட இலவசம் என்கிற ரீதியில் இழுத்துப் போட்டாயிற்று. எப்போது அடித்தாலும் சற்று நேரம் கழித்து முயற்சிக்கவும்.

முட்டியது எழுந்து போய்விட்டு பாத்ரூமில் காலலம்பி ஹாலுக்காய் வந்தார். மந்தகதியில் ஹேமக்கில் நைட்டிக் கால்கள் எட்டி எட்டிப் பார்த்தன. பின்னணியில் காற்றசைத்த இலைகளின் இடைவெளிகளில் எதிர் ப்ளாக்கு இங்குமங்குமாய் தென்பட்டது. அவ்வப்போது ஹேமக்கின் அசைவில் புத்தகமும் முகம் காட்டியது. அந்தக் கன்னடப் புத்தகத்தை எத்துனை முறைதான் படிப்பாள். சரி அவளும் என்னதான் செய்வாள் பொழுதைத் தள்ளியாகவேண்டி இருக்கிறதே. மத்தியானம் தூங்கினால் ஸ்தூலப்பட்டுப் போய்விடுவோம் என்கிற பயம். கல்யாணம் ஆகும்போதே ஒன்றும் கொத்தவரங்காய் இல்லைதான். ஆனால் அதன் சந்தோஷத்திற்கு அப்படி சொல்லிவைத்தால் என்ன கெட்டுவிடப் போகிறது. சரி ஆமாம். அப்போது சன்னமாகத்தான் இருந்தாய். இப்போது. இப்போது என்ன கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறாய். இது ஒரு குறையா. நாற்பது வயதிற்கு, இல்லை இல்லை முப்பத்து ஒன்பது வருடம் எட்டு மாதம் 22 நாளுக்கு இது ஒன்றும் குறையும் இல்லை குண்டும் இல்லை.

விளக்குப் போட்டுக் கொள்ளாமல் படித்து ஏன் கண்ணைக் கெடுத்துக் கொள்கிறாய்.

ஹேமக்கைப் பிடித்து நிறுத்தி புத்தகமும் கையுமாய் எழுந்துவந்தாள்.

காபி போடவா.
இன்னும் சற்று நேரம் வேண்டுமானால் ஆகட்டுமே.

பால்கனிக்கு வந்தார். எட்டிப் பார்த்தார்.

ஹாய்
ஹாய் அங்கிள். அங்கிள் ஒய் டோண்ட் யூ வியர் சம் க்ளோத் அண்ட் கம்.
ஹஹ்ஹா ஹஹ்ஹா. நன்றாக வேண்டும். நானும்தான் எத்துனை தடவை சொல்வது. வெளியில் போய் நிற்கையில் சட்டையோ டி ஷர்ட்டோ போடாமல் வெற்றுடம்புடன் நிற்காதீர்கள் என்று.
நீ சமையல் கட்டிலேதானே இருந்தாய். அங்கு வரைக்கும் கேட்டதா என்ன.

உள்ளே வந்தபடி கேட்டார்.

சரியாகப் போயிற்று. பின் ப்ளாக்கில புதிதாகக் குடிவந்தவள் சமையல் கட்டிலிருந்து பார்த்து சிரிக்கிறாள். ஐஷூவின் குரலுக்கு என்ன குறைச்சல்.

புத்தியிலும்தான் என்ன குறைச்சல். கீழ் வீட்டுக் குட்டி. பக்கையாக கண்ணாடி போட்டுக்கொண்டு அடிக்கொரு தடவை இடதுகையால் அதைத் தூக்கி தூக்கி விட்டுக் கொள்ளும். பத்துகூட நிரம்பி இருக்குமா என்பது சந்தேகம். அப்படி ஒரு பேச்சு. ஈஷிக்கொள்ளும் படியான கருப்புதான். என்ன ஒரு லட்சணம். உண்மையில் பார்க்கப் போனால் கருப்பாக இருப்பவர்களில் மூக்கும் முழியும் கொஞ்சூண்டு திருத்தமாக இருந்துவிட்டாலே போதும். லட்சணம் எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக் கொண்டுவிடுகிறது. குழந்தைகளில் கருப்பென்ன வெளுப்பென்ன எல்லாமே கொள்ளையடிக்கின்றன.

கொண்டுவந்து கொடுத்த டி ஷர்ட்டைப் போட்டுக் கொண்டிருக்கையில், அவள் விளக்குப் போட்டாள். வெளியில் பூசியிருந்த மாலையின் மங்கல் இருட்டுக்குத் தாவி விட்டிருந்தது.

சமையற் கட்டிலிருந்து தாமரைத் தண்டுத் திரி விளக்கை எடுத்துக் கொண்டு பீரோ இருந்த ரூமுக்குப் போனாள். கதவு திறக்கும் சத்தம் கடக்கு புடக்கு எனக் கேட்டது. நல்ல பீரோ வாங்க வேண்டும். வாங்கலாம்தான். கல்யாணமான உடனே வாங்கியது. பூட்டு மட்டும் ஒரிஜினல் கம்பெனி அய்ட்டம்தான் போடுவோம் சார் என்றான். ஆனால் வந்து இறங்கியதுமே கடக்கு புடக்கு. அவள்தான் சமாதானப் படுத்தினாள். சண்டைபோட்டுப் பணம் வாங்கலாம். சாதிக்கப்போவது என்ன? ஒரிஜினல் காட்ரெஜ் வாங்குமளவிற்குப் பணம் இருக்கிறதா? எங்கே தலைக்குமேல் கடன்தான் இருந்தது. கல்யாணம் பண்ணிக் கொண்டதற்கான கடன். கல்யாணம் பண்ணிக்கொள்ள ஒரு ஆணுக்குக் கடன் ஆகுமா. விசேஷ ஜாதகமாய் இருந்தால் கல்யாணமே ஆகாமல் கடன் மட்டுமே ஆகவும் கூட வாய்ப்பிருக்கிறது.

காப்பியை வைத்து எவ்வளவு நேரம் ஆகிறது.

டம்ளரில் மட்டுமே சூடு இருந்தது. பக்கத்தில் செல் ஃபோன். தள்ளி வைத்தார். இதில் ஒரு மெசேஜ். ரத்தம் கேட்டு.

கடைசியாக ரத்தம் கொடுத்தது எப்போது?
ஆஃபீஸ்காரர் ஒருத்தர்... அவன் கூடப் பாவம் சின்னப்பையன்...
ஆமாம் பத்ரிக்காகக் கொடுத்தது.
மூன்று மாதம் ஆகி விட்டதா?
சரியாப் போச்சு. ஆறு மாதமே ஆகியிருக்கும். மார்ச்சில் ஒரு வெள்ளிக்கிழமை. வரும் போது தாமரைத் தண்டுத் திரி வாங்கி வந்தீர்களே! என்ன ஆயிற்று?
இல்லை ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது. யாரோ ஒரு பெண்ணுக்கு ரத்தம் வேணுமாம்.
யாரு? ஆஃபீஸா?
இல்லையில்லை யார்கிட்டேயிருந்தோ மெசேஜ்.
எந்த ஹாஸ்பிடல்?
சோழிங்க நல்லூர் பக்கத்தில்
ஆமாம் அம்மா வீட்டிற்குப் போகும்போது பார்த்திருக்கேன். ஓ கட்டி முடித்தே விட்டானோ. பெரூசு.
ஒரு நடை போய்விட்டு வரலாமாவென்று பார்க்கிறேன்.

பர்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள். தனியாக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும்.

இது எதற்கு? இருக்கட்டும். பர்ஸ்ஸிலேயும் இருக்கிறது. எதற்கும் இருக்கட்டும்.

ஹலோ..

உங்க ஹாஸ்பிடல்ல, எமெர்ஜென்ஸி வார்டில் ஒரு பேஷண்டுக்கு ரத்தம் வேணும்னு மெசேஜ் வந்திருக்கு.

இல்லையில்லை. உங்க ஆஸ்பிடல் குடுத்த மெசேஜ் இல்லை. ஆனா பேஷண்ட் உங்க ஆஸ்பிடல்லதான் அட்மிட் ஆயிருக்காங்க.

வார்ட்டெல்லாம் தெரியாதும்மா. பேஷண்ட் பேரு கூட ...

காண்டாக்ட் நம்பர் கெடைக்குமா!

ஒரு நிமிஷம்...

மனைவி குட்டை நோட்டை நீட்டினாள்.

ம். சொல்லுங்க...

குறித்துக் கொண்டார்.

ரிங் போய்க்கொண்டே இருந்தது. வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கிறான் போலும்.

சம்பந்தப்பட்ட ஆளிடம் பேசாமல் அவசரக்குடுக்கையாய் ஓடக்கூடாது. வயதின் காரணமான ஞாபக மறதி கொஞ்சம் படிய ஆரம்பித்திருந்தது எனினும், சற்று முன்ஜாக்கிறதைக்காரர்தான். பல மருத்துவமனைகள் ரத்தத்தை இலவசமாக பெற்றுக் கொண்டு நோயாளிகளிடம் காசுக்குக் கொடுக்கின்றன. நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவமனைகள் மோசமான நட்சத்திரேசர்கள்.

பத்ரிக்காகக் கொடுத்துவிட்டு வந்தபின், சரியாக 90வது நாள் அந்த அதிஉயர் நட்சத்திர மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைத்தது. வார்த்தைகளை அசையசையாய் அழுத்திப் பேசிய ஆங்கிலம், டோஃபல் முடித்து, விசாவிற்காக் காத்திருக்கிறது போலும்.

ரத்தம் வேண்டி இருக்கிறது.
அப்படியா யாருக்கு.
மன்னிக்கவும் சர், அந்தத் தகவல் உடனடியாகக் கைவசம் இல்லை.
என்ன க்ரூப் வேண்டும்.
தாங்கள் ஏ பாஸிட்டிவ் அல்லவா. அதுதான் தேவைப்படுகிறது.
அட என் ரத்தத்தின் குரூப் கூட சொல்கிறீர்களே. ரெக்கார்டில் இருக்கோ?
ஆமாம் சர். டேட்டா பேஸில் இருக்கிறது.
ஓ அப்படியா. சரி, நான் ரத்தம் கொடுத்தால் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?
சர்..
இல்லை நான் இலவசமாகக் கொடுப்பது, எந்தக் கட்டணமும் இன்றி, இலவசமாகவே நோயாளியை சென்றடையும் என எழுத்தில் உறுதியளிப்பீர்களா? ஏனம்மா நான் கொடுத்தது என் நண்பனுக்கா இல்லை ஹாஸ்பிடலுக்கா?

தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னதான் அயல்நாட்டு நாக்காக மாறிவிடத் துடித்தாலும் ரத்தம் நம்மூர் இல்லையோ!

ரத்தம் முறையாக சென்றடைவதற்கு இன்னாருக்காக எனப் பெயர் குறித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அது நோயாளியின் பொறுப்பாளருக்கு தெரியும், என்பது மருத்துவமனைக்குத் தெரியவேண்டியதும் மிக அவசியம். சாப்பிட்ட பில்லை சரி பார்ப்பது தவறில்லைதானே. சரிபார்க்கப்படும், என்கிற சிறு தடுப்பான் பல தவறுகளுக்கான சபலங்களைத் தடுக்க வல்லது அல்லவா.

யாரையும் நம்புவதற்கில்லை. தயிரை நீர்மோராக்கும் தனியார் ரத்த வங்கிகள் கூட இருக்கிற காலம். 97 வாக்கில் அலுவலக நண்பன் அவனது சொந்த தம்பி நடத்தும் ரத்த வங்கி பற்றிப் பெயர் தவிர்த்துக் கூறிய தகவல். இப்போது அவனே இல்லை. அவன் தம்பி இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறான், இந்தப் பரந்து விரிந்த பிரம்மாண்ட நகரில் எங்கோ ஓரிடத்தில். எந்த நீரைக் கலந்துகொண்டு இருக்கிறான்? பாத்ரூமில் வரும் உப்புத் தண்ணிரா, மெட்ரோ வாட்டரா இல்லை கொஞ்சம் கரிசனத்தோடு கேன் வாட்டரா? எதையாவது கலக்கி, டம்ளர் டபராவாக வேண்டும். சில்லறை நோட்டானால் போதும், வேறு எதையும் பார்க்கத் தேவையில்லை என்று ஆகிவிட்ட பைசா உலகம். பைசாச உலகம்.

முன்பு முயற்சித்த நம்பரிலிருந்து மிஸ்டுகால். அடித்த சத்தமே கேட்கவில்லை. இல்லை தாம்தான் கவனிக்கவில்லையோ? சரி போ அவஸ்தையில் இருப்பவன். கூப்பிட்டால் குறைந்தா போய்விடப் போகிறோம்.

நான் அவங்க ஹஸ்பெண்டுதான் சார் பேசறேன்
இங்கே அண்ணாசாலையில ESI ஆபீஸ்லதான் சார் இருக்கேன்.
நீங்க பெஸண்ட் நகர்லேந்து அங்க வரதுக்குள்ள வந்துடுவேன் சார்.
சோழிங்க நல்லூர் வந்துட்டு ஒரு மிஸ்டுகால் குடுங்க சார்

ESI என்றால் இவன் மாநில அரசு ஊழியனா. இல்லை தனியாரா? ராஜீவ் காந்தி சாலை என்றால் ஐடி கம்பெனியாக இருக்க அல்லவா வாய்ப்பு இருக்கிறது. மாநிலமும் மென்பொருளும் காதல் திருமணம் போலும். தேசலான சித்திரம் உருவெடுக்கலாயிற்று. இரண்டு பெயர்களும் ஒட்டவில்லையே உள்ளூர சிறிய குறுகுறுப்பு.

போவதென்று முடிவெடுத்தால் சட்டென்று கிளம்பவேண்டும். இங்கேயிருந்து இருபது கிலோமீட்டராவது இருக்குமில்லையா. போய்த் திரும்ப ஒன்பதாயிடும்.

பேசியபடி காபி குடித்த டம்ளர் சமையலறைக்குப் போயிற்று.

ராஜீவ் காந்தி சாலையின் எதிர்மருங்கில் வண்டிகளின் நத்தையடி நகர்வு. ஏழரை மணி முன்னிரவில் சாலை ஜெகஜ்ஜோதியாய் இருந்தது.

சோழிங்க நல்லூர் சிக்னல் திரும்பியதுமே, தொலைதூர இருட்டில் வண்ண ஒளியெழுத்துக்களால் வானில் ஒட்டவைக்கப்பட்டு இருந்தது மருத்துவமனை. அகல நெடும் பாதையிலிருந்து இடப்பக்கம் திரும்பிய இருட்டுச் சாலை வெளிச்சத் திப்பிகளில் நீண்டு கிடந்தது. நடந்து வந்தால் நெடுநேரமாகும். தனியார் பாதை முடிகிற இடத்தில் வாகனக் குறுக்குக்கம்ப வரவேற்பு. வண்டியை ஓரமாய் விடச்சொன்னான் அங்கிருந்த காப்பாளன். பேரேட்டை நீட்டி சுய விபரம் பதிக்கச் சொன்னான். அவன் அருகில் கிளம்புமுகமாய் பைக்கில் நெடுக உட்கார்ந்திருந்தவர்,

”விபரத்தைக் கேட்டு நீங்க எழுதணும். கார்ல வரவங்க இறங்கி வந்து எழுதுவாங்களா?”

ராஜ கோபால் ராவின் பர்முடோஸும் வலக்கையில் ஒளிர்ந்த காப்பும் அவர் நிறமும் பைக்கைக் காராகக் கற்பனித்து விருந்தோம்பல் பற்றிக் கூடுதல் கவலைகொள்ள வைத்துவிட்டிருக்க வேண்டும். கேட்டு எழுதிக் கொண்டு வழி கூறினான்.

விஸ்தார அடுக்குகளாய் கோடிகளில் விரிந்து கிடந்தது மருத்துவமனை.

ரத்த வங்கியில் இருந்தவன், எட்டுக்கும்மேல் ஆகி விட்டதே ஏழு மணிக்கே மருத்துவர்கள் போய்விட்டு இருப்பார்களே எனத் தயங்கினான். பரவாயில்லை நாளை பகலில் வருகிறேன் எனச் சொன்னார் ராவ். அவர் முகத்துப் புழுதியை படித்திருக்க வேண்டும் அவ்ன். எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டான். இடம் சொன்னார்.

தகவல் படிவத்தைக் கொடுத்தான். முகமறியா நோயாளியின் பெயரை மட்டுமே யோசிக்காமல் எழுத முடிந்தது. தம்மைப் பற்றி டிக்கடிக்க வேண்டிய தகவல்கள் நிறுத்தி நிதானித்து சுய பேரேட்டைத் திருப்ப வைத்தன. திருமணத்திற்குப் பின் தின்ற விதவிதமான வண்ண வடிவ மாத்திரைகள் பொய்த்த ஜாதகத்தைப் புரட்டியபடி புன்னகைத்து மறைந்தன.

சரிவுப் படுக்கையில் சாயப் போகையில் அவர் பெயரை விசாரித்தபடி ஒருவன் வந்தான். செல்ஃபோன் பேச்சில் உருவாகியிருந்த அனுமான சித்திரம் கசங்கிற்று. அவனது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன, முடியும் கலைந்திருந்தது. அயர்ண் பாக்ஸ் பார்த்திராத சட்டை. செருப்பு தாண்டி தரை சிராய்த்த சாதாரண ஜீன்ஸ். முதல் பார்வைக்கு மாநில அரசு ஊழியனாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் கடைநிலை ஊழியன் அல்லது ஏவலனாகவே இருக்கவேண்டும்.

அவங்க எங்க வேலை பார்க்கறாங்க?
சொன்னான்.
என்னவா வேலை பாக்கறாங்க
ஹவ்ஸ்கீப்பிங்.
காண்ட்ராக்டா?
ஆமாம் சார்.
என்ன ஆச்சு?

ரத்தம் ஏற்றிக்கொள்ளப் போகிற பெண் ஒரு ஒப்பந்த வேலையாள். ஸ்டூல் போட்டு ஜன்னல் பக்கம் நின்றபடி சீலிங்கில் வேலை பார்க்கையில், இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து விட்டிருக்கிறாள். இடுப்பில் 4 எலும்புகள் முறிந்துள்ளன. இரண்டு முறிவுகளுக்கு ஏழுமணிநேர சர்ஜரி, சற்று முன்புதான் முடிந்திருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

ரத்தம் எடுப்பதற்கான ஆயத்தங்கள் துரிதப்படுவது கண்டு வெளியில் இருப்பதாய்க் கூறி அவன் வெளியேறினான்.

இடதுகை நடுவிரலில் ஊசி குத்தி, ஒத்திக் கொண்டு போய், சுவரோரம் இருந்த கருவியில் வைத்துவிட்டு வந்தான் குருதி வங்கி உதவியாளன்.

என்னப்பா இது. ஐடி கம்பெனின்னதும் என்னவோ ஏதோன்னு பார்த்தா பாவம் காண்ட்ராக்ட் லேபரர். பேர் வெக்கறதுல ஒன்னும் கொறைச்சல் இல்லை. பேரப் பாரு, ஹவுஸ்கீப்பிங்காம்.

முறுவலித்தான்.

வேலைக்கு மட்டுமன்று, பொதுவாகவே மனிதர்கள் பொதுப் பெயர்களுக்குள் புகுந்து கொள்ளத் தலைப்பட்டு விட்டனர். அடையாளங்கள் அழித்த பொதுப் பெயர்கள். அடையாளங்கள் அவமானமாகக் கருதப்படுவதால் அழிந்து கொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. தெருப்பெயர்களில் தொடங்கி இடப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள், தனிப்பெயர்கள் வரை. பெயருக்கு பதிலாக நம்பர் அமலுக்கு வரவும் கூடும். கோல் வைத்துக் கொண்டு சீருடையில் துடைத்தாலும், ஜன்னலோரம் ஸ்டூலேறி சீலிங்கிற்கு ஒட்டுப் போட்டாலும் மொட்டையாக ஒரு பெயர் ஹவ்ஸ்கீப்பிங். வேலையின் பெயரை அழிக்கலாம். வேலை இருந்துகொண்டுதானே இருக்கிறது. பெயர் மாறி விட்டதில்தான் என்னவொரு சாதனைப் பெருமிதம். அடப்பாவிகளா. நிரந்தர வேலைகளை நிர்மூலமாக்கி நாடே குத்தகைக்குப் போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த ஹாஸ்பிடலை எப்படிப்பா தாங்குவாங்க இவங்க?

ரெண்டாவது மாடிலேந்து விழுந்திருக்காங்க ப்ச்...அதுதான்...

பொட்டில் அறைந்தது போல் இருந்தது அவன் வார்த்தை. என்னதான் சொன்னாலும், தாம் அடையாள அட்டையில் அதிகாரச் சீருடையணிந்த குமாஸ்தாதான்.

அவன் உதவியாளன்தான் எனினும் மருத்துவத் தொழில்நுட்பத்துடன் உரசிக்கொண்டு இருப்பவன்.

மனிதர்களின் இயல்புகளை கவலைகளை அவரவர் செய்யும் தொழிலும் வருமானமுமே தின்னத் தொடங்கி விட்டன.

தம்பி டோனர் இல்லாமல், ஹாஸ்பிடல்ல நீங்களாவே கொடுக்கற ரத்தத்துக்கு சார்ஜ் உண்டா?
ப்ளட்டு ஃபிரீதான். டெஸ்ட்டிங் சார்ஜ் உண்டு சார்.
யூனிட்டுக்கு எவ்ளோ?
அது தெரியலை சார் பில்லிங் டிபார்ட்மெண்ட்லதான் தெரியும்.
சமர்த்தன்.
டோனர் குடுத்தாலுமா?
யார் குடுத்ததா இருந்தாலும், அப்பிடியே குடுக்க முடியாது இல்லிங்களா. டெஸ்ட் பண்ணிதானே ஏத்தமுடியும். டெஸ்ட்டிங் சார்ஜ் கண்டிப்பா உண்டு சார்.
சரிதான். இவ்ளோ எக்யூப்மெண்ட்ஸும் ஓவர்ஹெட்ஸும் ஏதாவது ஒரு ஹெட்ல ஏறிதானே ஆகணும்.
புன்னகைத்தான்.

ரப்பர் பந்தைக் கையில் கொடுத்து, மேற்கையில் சுருட்டிய பட்டையில் காற்றேறிக் கவ்வ கைக்குழியில் புடைத்த நரம்பில் ரத்த சேமிப்புப் பையிலிருந்து புறப்பட்ட பாம்பு கொத்தி இறங்கிற்று. கையகப்பட்ட பந்தின் கசக்கலில் வேகம் கூடி உறிஞ்சிக் குடிக்கப்பட, இயந்திரத் தாலாட்டில் இசைவாக பெருக்கத் தொடங்கிற்று உதிர சேமிப்புப் பை.

சுவரில் மணி பார்த்தார். கைப்பந்தைக் கொஞ்சம் துரித கதியில் அழுத்தி அழுத்தி விடுவிக்கத் தலைப்பட்டார்.

சடுதியில் பை நிரம்பிற்று. ஊசியை உருவிக்கொண்டு, கொத்துப் பட்டிருந்த புள்ளியின்மெல் வங்காளப் பொட்டு போன்ற ப்ளாஸ்த்திரி ஒட்டினான்.

தம்பி, அலர்ஜி பத்தி கேட்டிருக்காங்களே கார்டுல? சாக்கடைத் தண்ணி, இல்லை வெறும் அழுக்குத் தண்ணி பட்டா கூட கால்ல அரிக்கும். பரவாயில்லையாப்பா?

எப்போதும் இருக்குதா சார் அரிப்பு?
அழுக்கு பட்டா அரிக்கும். அதனாலதான் எப்பவும் ஷூ போட்டுப்பேன்.
சார் இது சீரியஸ் ஸ்கின் டிசீஸ் பத்தி கேக்கற கேள்வி உங்குளுது சாதாரண அலர்ஜியாக் கூட இருக்கும்.
ஓ அப்படியா... இல்லை... இதுக்கு முன்னாடி கூட குடுத்துருக்கேன்
அப்பறம் என்ன சார்.
இல்லை. ஒரு தடவை லையன்ஸ் கிளப்புலேர்ந்து வந்து ஆஃபீஸ்ல கேம்ப் நட்த்தினாங்க. அப்ப ஒரு லெட்டர் வந்துது. உங்களுக்கு ஹெப்பாட்டிடிஸ் பி இருக்கு. ஆனா பயப்பட வேண்டாம் சமயத்துல இப்புடி பாசிடிவ் காட்டும் எதுக்கும் டெஸ்ட் பண்ணிக்கிங்கன்னு. அதுக்காக இதைப் பொருட்படுத்தாமையும் இருந்துடாதீங்கன்னு...
டெஸ்ட் பண்ணினிங்களா. ரிஸல்ட் என்னானு சார் வந்துது.
நெகட்டிவ்னுதான் வந்திச்சி. ஒரு மாசம் கழிச்சி திரும்ப பண்ணிக்க சொல்லி இருந்தாங்க. ஆனா பண்ணிக்கலே.
அப்பறம் என்ன. எப்ப சார் இது?
93ல. அப்பறம் ரெண்டு மூணு தடவை குடுத்திருக்கேன்.
ரிப்போர்ட் எதாவது வந்துதா.
இல்லை.
அப்ப ஒண்ணுமில்லைன்னுதான் அர்த்தம். டெஸ்ட்ல எதாவது பிரச்சனைனா கண்டிப்பா கம்யூனிகேட் பண்ணிடுவாங்க. அதுக்குதான் அட்ரஸ் வாங்கறது. ஒண்ணும் கவலைப் படாதீங்க சார்.
அதெப்படி எப்பவாவதுன்னாலும் கூட இல்லாததை எப்படி இருக்கறா மாதிரி காட்டும்.
வெளில, நீடில்ல, இப்படி எங்கையாவது, கண்ட்டாமினேட் ஆகி இருக்கலாம்.

சற்று ஆறுதலாய் உணர்ந்தார். ஒன்றுமே இல்லை என நன்றாகத் தெரியும். வேளாவேளைக்குப் பசித்து சாப்பிட்டு இருந்து கழிக்கிறார். தூங்காமையின் சுருக்கமும் வயதின் உலர்ந்த வடுக்களும் தட்டலுக்குக் காத்திருக்கும் புழுதி போல உடலெங்கும் அப்பிக் கொள்ளத் தொடங்கி இருந்தன. தட்டதான் முடியவில்லை. முகம் பொலிவோடு இருக்கிறது, அதுவே, ஆரோக்கியத்தின் அடையாளம்தானே. மேலும் இந்தக் குருதி வங்கி உதவியாளனும் அச்சாரம் கொடுத்துவிட்டான்.

அவன் கொடுத்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டார். குளிர்பான அட்டை டப்பாவை இடக்கையால் உறிஞ்சிவிட்டு கிளம்புவதாகத் தலையசைத்து முறுவலித்தார். அரைமணி நேரத்திற்கு, வலது கைக்கு அதிக சிரமம் கொடுக்க வேண்டாமெனக் கூறி பிளாஸ்திரியை அழுத்திப் பார்த்து அனுப்பி வைத்தான். லேசாக அவன் தோளைத் தொட்டுவிட்டுக் கிளம்பினார்.

அந்த அறையைவிட்டு வெளியில் வந்தார். விஸ்தாரமான உள் நடையோடைகள். இரவு பகல் வித்தியாசம் தெரியாத வெளிச்ச வெளி. முப்பதடிக்கு ஒரு நாற்சந்தி கொண்ட சலவைக்கல் பாதைகள். எங்கு நோக்கினும் குறுக்குமறுக்காய் ஏகப்பட்ட ஊழியர்கள் நடந்து கொண்டு இருந்தார்கள். வியாதியஸ்தர்கள் எல்லாம், அறைகளுக்குள் படுத்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களைப் பார்க்க வந்தவர்கள், பார்த்துக்கொள்ள வந்தவர்கள் கூட்டம் வராந்தாக்களில் குறைவாகவே இருந்தது. உறவினர்கள் உள்ளேயே தங்கிக் கொள்ள வசதி கொண்ட பெரிய அறைகள். இதைப் போலவே ஏதோ ஒரு அறையின் உள்தளத்தில், பொய்க்கூரை ஒட்டிக்கொண்டு இருந்திருப்பாளாயிருக்கும் குருதி வேண்டி படுத்திருக்கும் பெண். இதே போன்ற ஒரு பெரிய மத்திய குளிர்சாதன வசதி கொண்ட அல்லது வசதி செய்வதற்காக போடப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் பொய்க்கூரை. அயல் நாட்டிற்கு மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கான கட்டிடம். எண்ணிறைந்த கோடிகளில் நடந்து கொண்டு இருக்கும் வர்த்தகம்.

எங்க இருக்கீங்க?
இங்கதான் சார் மெயின் எண்ட்ரன்சுல.

போய்ச் சேருகையில், முகப்பில் விளக்கணைக்கப் பட்டிருந்தது. ஹாஸ்பிடலின் உள்தெரு விளக்குகள் பளீரிட்டுக்கொண்டு இருந்தன. இந்த விளக்குகளின் வெளிச்சமும் கூட கட்டணமாய் இவன் தலைமேல் அல்லவா விழும். போய் வண்டியை நிறுத்த ஒரு கூட்டமே எழுந்தது.

எந்தெந்த எடத்துலைங்க அடி பட்டிருக்கு?
இந்தப் பக்க இடுப்புதான் விழும்போது தரைல பட்டிருக்கு. அதுலதான் நாலு எடத்துல எலும்பு முறிஞ்சிருக்கு சார். ரெண்டு ஆப்பரேசன் முடிஞ்சிருச்சி. இன்னும் ரெண்டுக்கு எப்ப பண்ணுவாங்கன்னு தெரியலை சார்.
ஹாஸ்பிடல் செலவெல்லாம் எப்படிங்க?
காண்ட்ராக்ட்காரரும் கம்பெனி HR சாரும் வந்துட்டுப் போயிருக்காங்க. எதுக்கும் கவலைப் படவேணாம்னு சொல்லி இருக்காங்க சார்.
ESI யாருக்கு?
அவங்களுக்குதான் சார். அதுக்குதான் மவுண்ட் ரோடு போயிருந்தேன்.

ESI இவ்வளவு செலவு ஏற்குமா? சின்ன வயதுப் பையன். அது இன்னும் சின்னதாக இருக்கும். ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாய் குஞ்சு குளுவான்களுடன் பெரிய கூட்டமே வந்திருந்தது.
இல்லை சார் வேண்டாம்.
பின்னால் நகர்ந்தான்.
இல்லைங்க ஃப்ரீயா கெடைக்கற ரத்தத்தை, டெஸ்ட்டு பண்ணவே சார்ஜ் பண்ணுவாங்க. டெஸ்ட் பண்ணாம அப்படியே குடுக்க முடியாது இல்லீங்களா!
ஆமா சார். ஒன்ஃபைவ் போட்டுருக்காங்க.
பதினைஞ்சாயிரமா?
இல்லை சார் ஆயிரத்து ஐநூறு ரூபாய்.
அப்பறம். அது எத்தனை யூனிட்டுக்குங்க?
தெரியலை சார்.
எவ்ளோ பெரிய ஹாஸ்பிடலு, எதாவுது ஒரு பேர்ல, போட்ட பணத்தை எடுத்துதானே ஆவணும். எல்லாம் நம்ம தலைலதாங்க விழும்.
இல்ல சார் அதெல்லாம் ESIயும் காண்ட்ராக்ட்டரும் பாத்துக்குவாங்க சார்.
கரெக்டுங்க. கம்பெனி கூட, இருக்கறதுக்குள்ள கொஞ்சம் நல்ல கம்பெனிதான். ஆனா இந்தமாதிரி சமயத்துல ஓராயிரம் செலவிருக்கும். எதுக்காவுது உபயோகப்படும். வெச்சுக்குங்க.

வீட்டுக்கு வந்து சொன்னார்.


பக்கத்தில் ஏதாவது ஏடிஎம்மில் எடுத்து இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமே.
நீயும் வந்திருக்கலாம். வெளியில் போய்விட்டு வந்தது போலவும் இருந்திருக்கும்.
நீங்கள் கூப்டீர்களா? நான் ஓ பாஸிட்டிவ் யூனிவர்சல் டோனராச்சே!
இன்ஜெக்‌ஷன் மெடிகேஷன் என்று ஏகப்பட்ட கேள்வி கேட்பானே என்று பார்த்தேன்!
எவ்வளவு டைம் கேப் சொல்கிறான்.
பெரும்பாலும் எல்லாக் கேள்வியுமே ஆறுமாதம் ஆயிற்றா ஒரு வருடம் ஆயிற்றாதான்.
அப்புறம் என்ன ஐந்து வருஷம் ஆகிவிட்டதே.
நாளைக்குப் போகலாமா?
ஓ எஸ். தீபாவளி முறுக்கு? சரி வந்து பண்ணிக்கொள்கிறேன். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது, அடுத்த நாள்.

ரத்தம் கொடுப்பது, பேசப்பட வேண்டிய விஷயமில்லை, செயல்படுத்தப்பட வேண்டியது. நேற்றே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அவளுக்கு உள்ளூர வருத்தம் இருப்பதை வெளிப்படையாகக் காட்டியது முகம், பேச்சில் பாதிகூட வரவில்லை. பெண்களின் தயவிலேயே பெரும்பாலான குடும்பங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பாவம் அவள், படித்த கன்னட நாவலையே திரும்பத் திரும்பப் படித்தபடி நாளைக் கடத்தியாக வேண்டும்.

பத்ரிக்குக் கொடுத்த போது எதையுமே படிக்காதே, முதல் கேள்விக்கு எஸ் டிக்கடி மீதி அத்துனைக்கும் நோ போடு என்றனர் அலுவலக நண்பர்கள். அவசரம். அவரது ரத்தத்தை அப்படியே எடுத்துக்கொள்ளப் போவதில்லை உட்கூறுகள் மட்டுமே தேவை. ஊற்ற ஊற்ற உறிஞ்சிக்கொண்டே இருக்கிறது நோய். இருந்தும் அவன் இருக்கும் வரை ஊற்றிக் கொண்டே இருக்கவேண்டும். ஊற்ற ஊற்ற அவன் இறந்து கொண்டு இருந்தான். இது அவனது அலுவலக நண்பர்கள், அம்மா, மனைவி ஏன் அவனுக்கு உட்பட அனைவருக்கும் தெரியும். வரவேற்பறையின் இணைப்பு நாற்காலியில் அமர்ந்து ஒரு ஓரமாய் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருந்த முதிர்ந்த பெண்மணியைக் காட்டி பத்ரியின் தாய் என தழைத்துக் கூறினான் சந்திரமெளலி. விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபித்துக் கொண்டிருந்தார் போலும். அந்த நிலையிலும் ஸ்வாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். முட்டுச்சுவர்தான் அதற்காக, முழிக்காமல் இருக்க முடியுமா?

சிகிச்சைக்குப் பிறகு அன்றுதான் அந்தக் கேள்விகள் அவரை நிறுத்தி நிதானித்துப் படிக்கச் செய்தன. நிம்மதி குலைக்கும் அளவிற்கு அந்தக் கேள்விகளில் ஏதுமில்லை எனினும் படித்த பின்னரே சற்று ஆசுவாசமாய் இருந்தது. இருவரிடமுமே அசாதாரண பிரச்சனைகள் ஏதுமில்லை என்றே எல்லா இடத்திலும் சொல்லி இருந்தார்கள். ஆனால் இருவரும் தின்ற மாத்திரைகள்? குறிப்பாக அவளுக்கு போடப்பட்ட ஊசிகள்? ஒன்றும் பயனளிக்கவில்லை. ஒரு ஜென்மத்திற்குப் போதுமான தண்டனை. சிகிச்சை பலனின்றி போனதுகூட போகட்டும், குறை நாட்களுக்குப் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்க விட்டால் போதும், அதுவே பெரிய பாக்கியம்தான்.

மறுநாள் மதியம் தொலைபேசியில் விசாரித்தார்.

அவள் அவனிடம் மொபைலில் பேசி இருக்கிறாள். வலி கொஞ்சம் குறைந்திருப்பதாகத் தெரிவித்தான். அவன் தற்போது கேகே நகரில் ESI காரியமாகவே இருக்கிறான். இதுதான் இறுதி அலுவலகம், அவர்கள் கொடுக்கும் ஆவணங்களைக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்ப்பித்துவிட்டால் போதும். மீதியை காண்ட்ராக்டரும் கம்பெனியும் பார்த்துக் கொள்வார்கள். அவன் குரலில் முந்தின தினத்தை விட சற்று உற்சாகம் கூடி இருந்தது. அவன் எங்கே வேலை செய்கிறான், மாநில அரசா? மனைவிக்கு அடி பட்டதற்காக அவனுக்கு ஏதும் விசேஷ உதவிகள் உண்டா? இல்லையில்லை. அவன் தேனாம்பேட்டையில் ஒரு ப்யூட்டி பார்லரில் வேலை செய்கிறான். குறுஞ்செய்தி அனுப்பியது யார் என அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

மனைவியுடன் அன்று போகப்போவதாகத் தெரிவித்தார்.

வண்டியில் போகும்போது மனைவியிடம் கேட்டார்.

குறுஞ்செய்தி அனுப்பியது யாராயிருக்கும்.
அங்க வேலை பாக்கற யாரோ ஒரு மனுஷனா இருக்கும்.

ராவ் கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தார்.

கடந்துகொண்டிருக்கும் கட்டிடங்களைப் பார்த்தபடி இருந்தவள், இவரை நோக்கி என்ன என்பது போல் பார்த்தாள். ஒன்றுமில்லை எனத் தலையாட்டினார். ஆனால் மருத்துவமனையை அடையும் வரை சாலையையும் பக்கவாட்டுக் கண்ணாடியில் கொஞ்சம்போலத் தெரிந்த அவளையும் அவளுக்குத் தெரியாதபடி, மாறி மாறிப் பார்த்தவண்ணம் வண்டியோட்டிக் கொண்டிருந்தார் ராஜ கோபால் ராவ்.

அவளது ரத்தம் ஓ பாஸிட்டிவ் என்று தெரியவந்ததும், படிவம் கூடக் கொடுக்கவில்லை. தங்களிடம் தேவைக்கும் மேல் ஓ பாஸிட்டிவ் இருப்பதாகத் தெரிவித்தார்கள். அவள் வாடிப் போய்விட்டாள். முந்தைய தினம் முறுவலித்தபடி பொறுமையாய் பதில் சொன்ன உதவியாளன் அப்போது ட்யூட்டியில் இல்லை, அடுத்த ஷிஃப்ட் போலும். தனது வீட்டிலோ அறையிலோ தூங்கிக் கொண்டு இருப்பானாய் இருக்கும். கதவைத் திறந்து கொண்டு வராந்தாவிற்கு வந்தனர்.

முதல் முதலாகக் கிளம்பி வந்தேனல்லவா. முதல்முறையாக கொடுக்கிறாள் என யோசிக்கிறார்கள் போலிருக்கிறது. நான் கேட்டு ஆசைப்பட்டு என்ன நடந்திருக்கிறது. பாழாய்ப் போன கடவுளைத் தினம் தினம் கும்பிட்டுதான் என்ன பிரயோஜனம். என்னிடம் இருந்து ரத்தம் கூடத் தேவையில்லை இந்த உலகத்திற்கு. முணுமுணுப்பாய்ப் புலம்பத் தலைப்பட்டாள்.

இல்லை இல்லை ஏதாவது வழி இருக்கும், கொஞ்சம் இரு முயன்று பார்ப்போம்.

அவர் ஆற்றாமையுடன் அட்மினுக்குப் போனார். சீருடையணிந்து கம்ப்யூட்டரை முறைத்துக் கொண்டு இருந்தவனிடம் விஷயத்தைச் சொல்லி முக்கிய மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்றார். அவன் ஒளித்திரையில் இருந்து கண்ணெடுக்காமல், எதிர்சாரி கெளண்டரில், சீருடை அணியாத ஒருவருக்காய் கைகாட்டி, அவர்தான் சிறப்பு உதவியாளர் கேளுங்கள் என்றான்.

18 கிமீ தொலைவிலிருந்து வந்திருக்கிறோம், ரத்தம் எடுத்துக் கொள்ள இயலாதென்கிறார்கள். அதைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய முடியுமா பாருங்கள் என நயந்தார் ராவ். உதவியாளர் தலைமைப் பெண் மருத்துவரிடம் உரையாடுவது புரிபட்டது. ஓ பாஸிட்டிவா? அதுதான் பெரும்பாலானவர்களிடம் இருக்கிற வகையாயிற்றே. ரத்த முகாம்களில் கூட அதுதான் அதிகமும் சேகரம் ஆகிறது. தேவைக்கும் அதிகமாக இருக்கையில் எப்படி எடுத்துக் கொள்வது?

தமது அலுவலக அடையாள அட்டையைக் காட்டலாமா என்று ஒரு கணம் தோன்றியது. பல சமயங்களில் பொது விஷயங்களுக்காக அதை காட்டி காரியம் தகைந்திருக்கிறது.

சரி விடுங்கள் போகலாம் என்றாள் அவர் மனைவி, முறிந்த முகத்துடன்.

என்னடா உலகம் இது. ரத்தம் கொடுப்பதற்குக்கூட சிபாரிசோ அல்லது அதிகார பூச்சாண்டியோ காட்ட வேண்டுமா? இவ்வளவு அதிர்ஷ்டக் கட்டையாகவா ஒருத்தன் படைக்கப்பட்டிருப்பான். அல்லது ஒருத்தியோடு இணைக்கப்பட்டிருப்பான்.

வந்தது வந்தாயிற்று வழியில் ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டலில் கொடுத்துவிட்டுப் போகலாமா?

கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்க இது என்ன பெருமாள் கோவில் பிரசாதமா? அதுதான் ஊரெல்லாம் என் ரத்தம் சீ படுகிறது என்று சொல்லிவிட்டார்களே, இன்னும் என்ன வேண்டும்.

ராஜ கோபால் ராவிற்கு, வீட்டைவிட்டுப் புறப்படுகையில் உதவப் போகிறோம் என்பதில், உள்ளூர ஏற்பட்ட கெத்தும் எந்தக் குறையும் இருக்க வாய்ப்பில்லை என உதவியாளன் கொடுத்த உத்தரவாதத்தினால் உண்டான உற்சாகமும் போன இடம் தெரியவில்லை. ஆஸ்பிட்டலில் இருந்து உன் ரத்தத்தில், இது நொட்டை அது நொள்ளை என்று லெட்டர் ஏதும் வராமல் இருக்க வேண்டுமே என பதட்டமாக இருந்தது.

ஆண்டவனே குறைந்த பட்சம் நான் கொடுத்த ரத்தமேனும், குற்றம் குறை ஏதுமின்றி அந்தக் குழந்தைக்குப் போய்ச் சேரட்டும், வெண்ணையில் உனக்கு ராஜ அலங்காரம் அணிவிக்கிறேன் என்று ஆள்வார்பேட்டை ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டவராய் வண்டியை எடுத்தார் ராஜ கோபால் ராவ்.


(நவம்பர் 2010)

கென் Ken னிடமிருந்து ஒரு கடிதம்.

அட்டகாசம் சார், ஒரு உண்மை சம்பவத்தை இப்படி கதையாக்க முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு.

உங்க சிறப்பே காட்சியாய் கதையை நகர்த்துறதுதான் ஒரு படமாக்கிற அளவுக்கு திரைக்கதையாய் எழுதியிருக்கீங்க

சின்ன சின்ன ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கு

கலக்கிட்டீங்க மச்சி சார் எழுத்திலேயும் ரத்தம் கொடுத்து சகமனுசனாவும் ரொம்ப பெருமையா இருக்குங்க கதை


கதை பிடித்திருந்ததற்கு நன்றி கென்.

எனக்கு ஒரு விதத்தில் வருத்தம். தவறிவிட்டது. 

பஸ்ஸில் நான் கடைசியாக எழுதியதை, அதிஷா தலைதீபாவளிக்குக் கிளம்பி விட்டதால், எனக்கு ஃபோன் செய்த போது அவன் படித்திருக்கவில்லை. எனவே ஃபோனிலேயெ படித்துக் காட்டினேன். சார் என்ன சார் இது ஹாஸ்பிடல் ரிசப்ஷன் கெளண்ட்டர் எல்லாம் தெரியுதே சார் என்றான்.


அப்ப இதைப் பதிவா போடலாமா என்றான்.

சார் அவர்.....இதுமாதிரி சின்னச் சின்னதா இருக்கறதைத்தானே சார் பதிவா போடறார். போடுங்க சார் நல்லா இருக்கு என்றான்.

அப்புறம் வழக்கம் போல கொஞ்சம் சுந்தர ராமசாமி புராணம்.

சார். நாங்கள்ளாம் அவரை நேர்ல சந்திக்கக் குடுத்து வைக்கலையே சார்.

அவர் எழுத்து ஒரு பக்கம் இருக்க, ஆளே நம்பளைப் பைத்தியமா அடிக்க வெச்சுடுவார். எழுத்தும் மனுஷணுமா சேர்ந்து பெரிய ஆளுமை. அதனாலதான் ...இவரை மிகச்சிறந்த கதைகள் எழுதியவர் என்றும் அவரை மிகப் பெரிய ஆளுமைன்னும் சொல்றேன். என்றேன்.

அதிஷாவிடம் பேசிய உந்துதலில். பஸ்ஸின் கடைசி பகுதியைக் காப்பி செய்யப் போனவன் எதற்கும் இருக்கட்டும் என ஆரம்பத்தில் இருந்து என் பகுதி பஸ்ஸை எடுத்து நோட்பேடில் ஒட்டி பிறகு WORD ஆக ஆக்கிக் கொண்டேன். 

தொடக்கத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். அங்கங்கே இணைத்துக் கொண்டே போக ஆரம்பித்தேன். இடையில் கொஞ்சம் எழுத வேண்டி வந்தது. நான் அந்த காலத்தில் ஜெயகாந்தனுடன் அடித்த கஞ்சா பற்றியும் ஒரு நாள் மாலை அப்போதைய நண்பனுடன் கஞ்சா அடித்துவிட்டு, அன்றைய ஒற்றையடிப் பாதைபோலிருந்த கிண்டி மேம்பாலத்தில் ஏறப்போகையில், தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தவுடன் சைக்கிளைத் திருப்பி, அம்ஷன்குமார் வீட்டிற்காய் விட்டு, விஷயத்தை சொல்ல அவர் சிரித்தபடி பைப் பிடித்துக் கொண்டு பாய் தலயணை கொடுத்ததையும் எழுதிக் கொண்டே போகத் தொடங்கினேன். இடையிடையில் பஸ் பகுதி வர இணைத்து இணைத்துப் போகையில் இது பதிவாக அல்ல கதையாகிக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. சரி விட்றா சவாரி என உற்சாகமடைந்தேன்.தன்மை முன்னிலைப் பார்வையில் வளரத்தலைப்பட்டது. 

முதலில் எழுதிய படிவம் முடிவதற்கு மூன்று பக்கங்கள் இருக்கையில் மனைவியின் நுழைவில் நான் அவராக மாறத் தொடங்கவும், அவருக்கு ராஜ கோபால் ராவ் என பெயர் வைத்து முன்னேறி முடித்தேன். அப்புறம் தொடக்கத்திற்கு ஓடிவந்தேன். கோலத்தைக் கலைக்கத் தொடங்கி படர்க்கையில் ராஜ கோபால் ராவை மதியத் தூக்கத்தில் எழுப்பினேன். படர்க்கைத் தோள் பார்வை துல்லியப்படத் தொடங்கியதால் கதையில் பஸ்ஸுக்கு இடமில்லை. எனவே பஸ் குறுஞ்செய்தி ஆயிற்று. அப்புறம் அவர்மேல் நான் ஏறிகொள்ள அவர் நடக்கத் தொடங்கினார். என் இருப்பில் அவர் நுழைந்து கொண்டார். அவருக்கென்று என் வீட்டைக் கொடுத்தேன். ஏற்கெனவே என் ரத்தம் கொடுத்த அனுபவங்களை அவர் இயல்பாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார். 

இடையில் நேசமித்திரனிடம் CHATTING போனேன். விஷயத்தை சொன்னேன். அவர் உற்சாகப் படுத்தினார். திரும்ப கொஞ்சம் சுந்தர ராமசாமி.

ஏதோ ஒரு தருணத்தில் யுவகிருஷ்ணா CHATல் வந்தான். அவனிடம் கதையின் முதல் மற்றும் கடைசி பாராக்களை எடுத்து ஒட்டினேன். பாராட்டினான். ஃபோனுக்குப் போனேன். வைரம் என்றொரு கதையைச் சொன்னேன்.

சார் உடனே எழுதுங்கள் சார். பிரம்மாதமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு கதை எழுத வரும் அளவிற்கு விளம்பரம் தெரியவில்லை என்றான். அவர்... என்ன சூப்பராய் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள். 

ஹெமிங்வேவுடைய புத்தகம் வெளிவரப் போவதற்கு முன்னால் அவர் திமிங்கல வேட்டைக்குப் போய் வந்து எல்லா பத்திரிகையிலும் அது ப்ளாஷ் ஆகும். இது புதிதல்ல. அன்று அரசல் புரசலாக பாவனைகளில் நடந்தது. கால மாறுதலில் காசின் பெருங்கூவலில் கூச்சம் கோமணம் அவிழ்த்துக் கூத்தாடுகிறது. 

இன்று எது ஒன்றும் வெளிப்படையாக பிரமோஷன் என்கிற பெயரில் நடக்கிறது. இது வியாபாரம். 

முதலீடு செய்து புஸ்தகம் போடுவது, அலமாரி பீரோக்களில் அடுக்கி வைக்கவா

எழுதியதை பிரமோட் செய்வதற்கும் எழுத்தாளனைப் பிரமோட் செய்வதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. முழுக்க நனைந்தாயிற்று முக்காடு எதற்கு என்று அடுத்த கட்டமாய், பிரமோட் செய்துகொள்வதற்காக மட்டுமே எழுதுவது தொடங்கியாயிற்று. கீழுள்ளில் இருப்பதை முகம் முழுக்க திப்பி திப்பியாய்ப் ப்ளெடரில் அப்பி தெருத்தெருவாய் திரியத் தொடங்கும் அபாயம். சொற்ப காலத்தில் அது இயல்பாகிவிடும் அபாயம். நடமாடும் ஒப்பனை அறைகளாய் மாறிவிட்ட மனிதர்கள்.

கதையை எழுதி முடிந்து விட்டாதாய் நினைத்து அவசரமாக சுமாரனுக்கு அனுப்ப, அவன் கதை ஓகே. ஆனா சரியா அலைன் ஆகாம கொஞ்சம் அல்லாடுது திரும்பப்படி என்றான். திரும்பப் படிக்கத்தொடங்கினால் கட்டி கட்டியாக இருக்கிறது. இழைப்பே இல்லை. மனம் எழுதியது மானிட்டரில் தெரியவே இல்லை. வெல்டிங்கே பத்தலை. அங்கங்கே பெய்ண்ட் இல்லாமல் பேஸ் பட்டி இளிக்கிறது. என்னடா இது கருப்பு குண்டு பேனாவை விட்டு, கணினிக்கு வந்தது தப்போ? என் துரதிருஷ்டம், எவ்வளவு உதறியும், புது பேனா எழுதவே இல்லை. வேறு விதியற்று எதிர்காலம் இதுதானோ என தட்டச்சத் தொடங்கியது தவறுதான் போலும்.

கையில் எழுதிய காலங்களில் இது நேர்ந்ததே இல்லை. 

கையில் எழுதும் போது முழுக்க எழுதிவிட்டு திரும்ப முதலில் இருந்து காப்பி பண்ணத் தொடங்குவேன். கதை புதியதாய், அடுத்தவன் கதையைப் படிப்பது போல இருக்கும். ஈறுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு இருக்கும் கப்பிக் கசடெல்லாம் ஈ என்று இளிக்கும். அடுத்தவனுடையதுதானே என்கிற குதூகலத்துடன் பாத்ரூம் பிரஷ் கொண்டு பல் துலக்கல். துருத்தலையெல்லாம் தூக்கிப் போடு. முடிந்தால் நிர்தாட்சண்யமாய் வெட்டு. அதற்குப் பெயர் ப்ரூனிங்என்று ஞாநி சொல்லிதான் தெரியும். தோட்டவேலைக்காரனின் கத்தரிக்குப் பெயர் தெரியாது, தொழிலாய் அது பாட்டிற்கும் சீர்படுத்திக் கொண்டிருக்கும். அதைப் போலவே, அதுவரை எழுதி முடித்த கதையைக் காப்பி பண்ணி காப்பி பண்ணி இதைத்தான் செய்துகொண்டு இருந்திருக்கிறேனோ. தன்னிச்சையாய் செய்து வந்த காரியம் பெயர் தெரியவரவும், நினைவிலி நிலையிலிருந்து மேலெழுந்து பிரக்ஞைபூர்வமாய் கண்ணுக்குப் புலப்படாத ஒரு அங்கமாயிற்று.

அந்த காலத்தில், அன்று வந்த குங்குமத்தில் வெளியாகி இருந்த, சுஜாதாவின் அரிசி பற்றி கூறி அதில் ஒரு லைன் ஓவர் ரைட்டிங் எது சொல் என்றார் ஞாநி. தேடிக்கொண்டே இருந்தேன். வரியை சுட்டிக் காட்டி இந்த வரி. இவ்வளவு பிரமாதமாய், எழுதிவிட்டு, இது ஏன், இந்த வரி, கதைக்கு இது தேவையா

அவனைச் சுற்றி இருந்த நாங்கள், அதாவது பங்களூர் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி நடந்து கொண்டோம்? சொல்கிறேன். 

பத்திரிகைக்கு அனுப்பும் முன் ஒரு தடவை மறு வாசிப்பு கொடுத்திருந்தால் சுஜாதா இதைக் கண்டிப்பாக வெட்டி இருப்பார் என்றார் ஞாநி. எனக்குக் குழப்பமாக இருந்தது.அந்த வரி உபரியா இல்லையா? தெளிவாக (மடத்தனமாகக்கூட) ஒரு முடிவெடுக்க முடிந்திருந்து சுஜாதா சரியென இப்போது தோன்றுவது அன்றே தோன்றியிருந்தால் மூர்க்கமாய் சண்டைக்குப் போயிருப்பேன். இன்று அந்த வரி, கதைக்கு சுஜாதா போட்ட இடைவேளை கார்டாகத் தெரிகிறது. அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான உந்து கட்டையாக இப்போது புரிந்து கொள்கிறேன். ஞாநியுடைய அபிப்ராயமும் ரொம்பப் பிழை என சொல்லிவிட முடியாது. பொது நோக்கில் ஞாநியின் கருத்து சரிகூடதான். ஆனால் அந்தக் கதைக்கு அதன் நடைக்கு அதில் இருக்கும் எள்ளலுக்கு அந்த வரி சரிதான். (ஞாநிக்கு சுஜாதாமேல் எனக்கிருந்ததை விடவும் பெரிய பதிப்பு அன்று இருந்தது. அவரது சுஜாதா பற்றிய இன்றைய அபிப்ராயம் தெரியாது. எனக்கும் ஞாநிக்குமான நெருக்கம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலாகத் தொடங்கி இறுதியில் பரீக்‌ஷாவை விட்டு விலகுவதில் முடிந்தது வேறு விஷயம்). 

அடுத்தவரின் அபிப்ராயங்களில் இருந்து நாம் அடையும் பயன் என்ன? நம் நிலை சரியாவென உரசிப் பார்த்துக்கொள்ள முடிகிறது. நம்மைக் கூர்மைப் படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பெரும்பாலும் அடுத்தவனைக் கிழிப்பதிலேயே குறியாய் இருக்கும் கூர்தீட்டலாய் போய் முடிகிறது.

அடுத்தவர் அபிப்ராயங்களைத் தெரிந்து கொள்வது ஒரு படைப்பாளிக்கு அத்யாவசியம். ஆனால் அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் அவசியமில்லை என்றுதான் சொல்லிக்கொண்டே இருப்பான். அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. அர்ச்சகர் அர்ச்சகராக இருக்கும் வரையில்தான் ஸ்வாமி ஸ்வாமியாக இருக்க முடியும்.

எழுதி முடித்த அந்தக் கதைக்கான அடுத்தவர் அபிப்ராயம் அடுத்து எழுதப் போகிற கதைக்கு உரமாகவும் ஆகலாம் தவிடாகவும் போகலாம். தெளிவானவன் குழம்புவதில்லை. ஆனால் குழம்பி சிந்திக்காதவன் தெளிவடைவதும் இல்லை.

பொதுவாக எழுதி முடித்துவிட்டதாய் மனதில் பட்டுவிட்டால், எந்த எதிர்வினைக்காகவும் மாற்றுவது கிடையாது. (சத்ய நாராயண பூஜையை சங்கர நாயண பூஜை என்று எழுதுவது போன்ற தகவல் பிழைகள் அல்லது ஆரம்ப கால எழுத்தில், வாழ்க்கையில் இருந்த மராட்டி தாத்தாவிற்கு, சதாசிவ ஐயர் எனப் பேக்கு மாதிரிப் பெயர் கொடுத்து, கூடவே பொருந்தாத முறுக்கி விட்ட மீசையும் வைத்து, ஞாநி தவறுணர்த்த புத்தகமாகையில் பெயரெடுத்து தாத்தாவாக்கியது தவிர பெரியதாகக் கதையை மாற்றும் அளவிற்கு மாற்றங்கள் செய்வதில்லை.

ஒரே ஒரு முறைதான் பத்மா (ஞாநியின் முன்னாள் மனைவி) அவளை M80ல் எங்கோ ட்ராப் பண்னப் போகையில்.

கதை படித்தேன் (கைப் பிரதி) நல்லா இருக்கு. அவர் ஏன் கடைசியில் தற்கொலை செய்து கொண்டு சாகணும் என்றாள்.

ட்ரைவ் இன் வந்து முழுக்க ஒருமுறை படித்துப் பார்த்தேன். அதானே. ஏன் சாகணும். கதையே ஜாங்கிரி சுத்தல். சுற்றி ஓய்ந்துவிட்டார் என்றுதான் அனுப்பி விட்டார்கள். இதில் சாவு முற்றுப் புள்ளியா? அபத்தம். எஞ்சிய வாழ்க்கையை அவர் வாழ்ந்துதானே தீர்த்தாக வேண்டும். மிஞ்சிமிஞ்சிப் போனால் - தூங்கிதானே கழித்தாக வேண்டும் மீதி வாழ்வை. 25 வருடங்கள் கழித்து, ஜ்யோவராம் சுந்தர் அந்தக்கதை தனக்குப் பிடித்திருப்பதாக சொன்னதற்கு நான் பத்மாவிற்குதான் நன்றி சொன்னேன் மனதிற்குள். ஏன் என்றால் அவள் சொல்லிதானே அவரைத் தூங்கப் பண்ணினேன். கதையை எந்த நிலையிலும் பத்மா எழுதவேயில்லை. நான்தான் எழுதினேன். ஆனால் திரும்ப ஒரு முறை படிக்க வைத்தது அவளால் அடைந்த லாபம்.

எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தும் அதனளவில் உண்மையான அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்பட்டதாகவும் கற்பனை எனினும் இயல்பானதாகவும் முழுமையாகக் கண்டு வாழ்ந்த கனவாகவும் அதற்கான உள் ஒத்திசைவுகளோடும் இருக்குமேயானால் கட்டாயம் காலங்களைக் கடக்கும். சந்தேகமே வேண்டாம். கலைக் கொள்கையெல்லாம் இல்லை. அதெல்லாம் நான் படித்ததும் இல்லை தெரியவும் தெரியாது.  ஆனால் பாத்திர மனங்களின் இயல்பும் உண்மையும் இறவாத்தன்மை கொண்டவை. இது சத்தியம்.

கல்லூரி நாட்களில் இருந்து உயிர்த்தெழுந்த 94 வரை, எனது முதல் வாசகன், ஷங்கர் ராமன். (இவன் எழுதியவை இரண்டே கதைகள்தான்). அதில் மீட்சியில் வந்த மாற்றம்என்கிற கதையைப் படித்துவிட்டு அம்பை அனுப்பிய கடிதத்தால், என் வயிற்றிலிருந்து கிளம்பி வாய் வழி வந்த புகையை அணைக்கும் வல்லமை கொண்ட தீயணைப்பு எந்திரம் உலகில் இன்னும் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

அம்பை கடிதத்தில் சொல்லியிருந்தது

– இந்தக் கதையை எழுதிய கை விரலுக்கு மோதிரம் போடவேண்டும். இதற்குமுன் வண்ணநிலவனின் மிருகம்படித்த போது தான் எழுதிய கைக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போலத் தோன்றியது என்று எழுதினேன் –

இதை எழுதுகையில் ஷங்கர் ராமனைத் தொடர்பு கொண்டு நினைவை சரிபார்த்துக் கொண்டேன். அம்பையின் கடிதம் எங்கோ தவறி விட்டதாம். அந்த மட்டுக்குமாவது அது தொலந்து போனதே.கிடைக்காமலே போகட்டும். மீட்சியை யாரேனும் தேடிப்பிடித்து மாற்றம் கதையை வலையேற்றுங்கள். நாலு பேர் படித்துவிட்டு இது என்ன பெரிய கதை என சொல்லுங்கள், மனம் கொஞ்சமேனும் சாந்தமடையும். 

துரதிருஷ்டவசமாக, எதையோத் தேடப்போக மாற்றம் கிடைத்தது. புரட்டிப் பார்த்தவன், படிக்கத் தொடங்கி விட்டேன். அடக் கஷ்டமே இன்னுமா அது மோதிரத்திற்குத் தயாராய் இருக்கும். கவனம் பத்திரிகைக்கு நான் போய் ராஜகோபாலிடம் கொடுத்த அவரவர் ஏமாற்றம் வேறு, விட்டல் ராவ் தொகுத்த கலைஞன் வெளியீடான, இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுதிகளில் ஏதோ ஒன்றில் இடம் பிடித்திருக்கிறதாய்க் கேள்விப்பட்டேன். என்னைய்யா அநியாயம்! இரண்டே இரண்டு கதைகள் அதுவும் 1982ல் எழுதியவன் அதற்கப்புறம் எதுவுமே எழுதாதவன் எப்படியையா எழுத்தாளன் ஆகமுடியும். அதுவும் இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பில் இடம். ம். உலகம் கெட்டு விட்ட்து. அவனவன் டீ காபி சிகரெட் டீ காபி சிகரெட் எனக் கூவிக் கூவி வாழ்வையே பணையம் வைத்து, முழுநேரம் புக்குபுக்காய் அடுக்கி மெனக்கெட்டுக் கொண்டு இருக்கிற காலத்தில். ரெண்டே ரெண்டு கதை.

என் துக்கங்களுக்கும்தான் ஒரு முடிவே இல்லை. கோபி கிருஷ்ணன், காணி நிலம் வேண்டும் போல ஓரிரண்டு கதைகள் எழுதத் தொடங்கியிருந்த நேரம். கையெழுத்துப் பிரதிகளில் படித்திருக்கிறேன் பெரிய அபிப்ராயம் வந்ததில்லை. ஒன்றோ இரண்டோ அப்போதுதான் பிரசுரமாகத் தொடங்கி இருந்தன. ஒரு நாள் கநாசு பைலட் த்யேட்டர் அருகில் க்ரியாவின் கீழே கிடைத்தார். மாட்ணியா மவனெ!

என்ன சார் உங்குளுக்கு ஸ்கூல் பசங்க எழுதறா மாதிரி எழுதற கோபி கிருஷ்ணன் கதைகள் நல்லாருக்கும் என்னப் பத்தி ஒரு வார்த்தைகூட சொல்ல வராது இல்லையா?

தோளில் கை விழுந்தது

மாமல்லன், எனக்கு வயசாயுடுத்து ரசனை போயுடுத்து முட்டாளாயிட்டேன்னு சொல்லுங்கோ தப்பே இல்லை. அது உங்க அபிப்ராயம். அதை சொல்ல உங்களுக்கு ரைட் இருக்கு. உங்களை சொல்லாமல் கோபிகிருஷ்ணனை சொல்லிட்டேன்னு நீங்க சொல்றதுல எனக்கு ஏதோ மோடிவ் இருக்குங்கறாப்பல ஒரு அர்த்தம் வறது. அது மனச சங்கடப் படுத்தறது. எனக்கு வேண்டியவா வேண்டாதவாளே கெடையாது. எனக்குப் பட்டதை சொல்றேன். அதுதான் சரியாயிருக்கணும்னு, கட்டாயம் ஒண்ணும் இல்லையே.

மனதிற்குள் சாஷ்ட்டாங்கமாய் விழுந்தேன். ஆண்டவனே இந்தத் தள்ளாத வயதை, எனக்கும் தருவதாய் உனக்கு அபிப்ராயம் இருந்தால், எல்லா விதத்திலும் இந்தக் கிழம்போல என்னை வாழவை.

இந்தக் கதையை முடித்தபின், எனக்கு இதில் ஒரு வருத்தம் என்னவென்றால், தன்மை முன்னிலைப் பார்வையில் உருவெடுக்கத் தொடங்கியதை save as செய்து தனி பிரதியாக்கி அதில் படர்க்கையாக ஆக்கத் தொடங்கியிருந்தால், கதை உருவாவதை உற்றுநோக்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு உபயோகப் பட்டிருக்கும். இவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எந்தக்காலத்திலும் வந்துகொண்டே இருப்பார்கள். இளமையில் காணும் லட்சியக் கனவுகளை வாழ்வங்காடியில் தொலத்துவிடக்கூடும். பின்னாலேயே வந்துகொண்டு இருக்கும் ஒரு பொடியன் அதைக் கையில் எடுத்துக் கொள்கிறான். அதைத் தன்னுடையதாகவே அடையாளம் காண்கிறான்.

நான் ஒரு திருடனாய் வேசியாய் புத்தனாய் பொய்யனாய் இன்னும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எழுத்தில் கற்பனை என்ற போர்வையில் பொய் சொல்லக்கூடாது. நான் இந்த வாழ்க்கையில் ஒரு புழுவாய் இருந்து நெளிந்த வண்ணம் வாழ சபிக்கப் பட்டிருக்கலாம். நல்லது தங்களைப் போன்ற உயர்ந்த வாழ்வு எனக்கு லபிக்கவில்லை. போகட்டும். குறைந்த பட்சம் எழுத்து, என் விருப்பப்படி வாழ, எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறது. அநேகமாய் எந்த நிர்பந்தமும் இல்லை. அதிலும் போய், புனைவு தானே என்ன போயிற்று என்று பொய்சொல்லி பிழைப்பது ஒரு பிழைப்பாகுமா? உண்மையென நம்பியது பிழையாகக் கூட இருக்கலாம். தவறில்லை நாமெல்லாம் மனிதர்கள்தானே. ஆனால், மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா?

மாற்றம் - ஷங்கர் ராமன் (ஆகஸ்ட் 1983) மீட்சி முதல் இதழ்


மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா? கட்டுரையில் குறிப்பிடப்படும், எனது நண்பன் ஷங்கர் ராமன் எழுதிய இரண்டு கதைகளில் ஒன்று இது.


மாற்றம்

ஷங்கர் ராமன்

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்க முயற்சி செய்கிறேன். அப்போது நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு விடுபட்டு எஞ்சிய சயங்காலத்தை கிரிக்கெட்டில் செலவழிக்க யத்தணித்துக் கொண்டிருந்தேன். பதினைந்து பதினாறு வயதில் உடம்பும், மனமும் கிரிக்கெட்டிற்கு ரொம்ப ஏங்கும். வீட்டில் எவரும் இல்லை. அத்தை வீட்டிற்குப் போயிருந்தனர். பள்ளியிலிருந்து வந்தவுடன் டிபன், காப்பி சாப்பிட எப்பொழுதும் நிர்பந்திக்கும் அம்மா இல்லாதது புது அனுபவமாக இருந்தது. கிரவுண்டிற்கு கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் ஃபேன் கீழ் நின்றுவிட்டுப் போகலாம் என்று இருந்தபொழுது வாசல் மணி அடித்தது. திறந்தவுடன் ஒருவன் கையில் ஏதோ தாளுடன் நின்றுகொண்டிருந்தான். தந்தையின் பெயரைச் சொல்லி, வேண்டும் என்றான். அவர் இல்லை என்றும், இன்னும் சில மணி நேரம் கழித்து, அல்லது நாளைவந்து பார்க்கும் படியும் கூறினேன். அவன் நகைத்தது போல் எனக்குத் தோன்றியது. அவனுக்கு சற்றுதள்ளி மற்றொருவன் நிற்பதை அப்பொழுதுதான் பார்த்தேன். அவன் காலடியில் ஏதோ தோல் கருவி இருந்தது. முதலாமவன் என்னிடம் அந்தத் தாளைத் தந்தான். அதில் எழுதியிருந்தது எனக்கு ரொம்பப் புரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் பயமாக இருந்தது. தந்தையைக் கூப்பிட்டு அவர்கள் வருகையைச்சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிவிட வேண்டும் என்று மிகப் பலமாகத் தோன்றியது. அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்த டெலிபோனை அணுகினேன். கிட்டே போனவுடன் தான் ஒரு வாரம் முன்பு சிலர் வந்து அதை ’டிஸ்கனக்ட்’ செய்துவிட்டர்கள் என்று ஞாபகம் வந்தது. கழற்றியிருந்த சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு எதிர்ச்சாரியில் இருந்த வீட்டுக்குப் போக கதவை லேசாக சாத்திவிட்டு, சாலையில் இறங்கினேன். நாலு முக்கியமான சாலைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில், ‘போலீஸ்’ நின்று கொண்டு போக்குவரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். என் வீட்டுக் காம்பவுண்டின் இட்து பக்கத்தில், சுமார் இருபது கஜதூரத்தில் ‘போலீஸ்’ நின்று கொண்டிருந்தார். சாலையைத் தாண்டுவதற்கு போக்குவரத்து உதவவில்லை. ஒரு வழியாக எதிர் வீட்டினுள் நுழைந்தேன். அந்த வீட்டம்மாள் டெலிபோன் இருக்கும் இடத்தைக் காண்பித்துவிட்டு, “ஸ்போர்ட்ஸ் வீக்” வாங்க இப்பலாம் ஏன் வர்ரதில்லை?” என்று கூறியது நினைவு இருக்கிறது. நான் அதற்குள் என் அத்தை வீட்டு என்களைச் சுழற்றிக் கொண்டு இருந்தேன். முதுகில் அவ்வப்பொழுது ஜில்லிப்பு வெடிக்க மறுமுனை குரலுக்குக் காத்திருந்தேன். அத்தைப் பெண் எடுத்ததாக ஞாபகம். தந்தையைக் கூப்பிடச் சொன்னேன். தந்தை வந்து நான் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு, அவர்கள் யார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, “இதோ வர்றேன்” என்றார். அவர் குரலில் இருந்த சாதாரணம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போன் செய்ததற்காகக் காசு கொடுப்பதா வேண்டாமா என்று என்னுள் குழப்பம் ஏற்பட்டது நினைவிருக்கிறது. அதன்பின் கொடுத்தேனா இல்லையா என்று ஞாபகம் இல்லை. வெளியே வந்து சேட்டின் நோட்டீசையும், தம்பட்டத்தையும் நோக்கிப் போனேன். பிரச்சனையின் தீவிரம் அப்பொழுதுதான் என்னுள் பரவ ஆரம்பித்திருந்தது. நான் அவர்களை அணுகியவுடன், நோட்டீஸ்காரன், “நாங்க அச்சுடறோம்” என்றான். நான் குளறலுடன், ”அப்பா இப்பொ வந்துடுவார் அடிக்க வேண்டாம்” என்றேன். ”எண்பதாயிரத்துக்கு கிட்டையாமே,” என்றான். இல்லை எப்படியும் வந்துடுவார், அடைச்சுடுவார்” என்று ஏதோ சொன்னேன். இம்முறை நோட்டிஸ்காரன் நகைத்ததில் எனக்கு ஐயமில்லை. எங்கள் வீட்டின் பின் இருப்பவர் என்னை நோக்கி வருவது போல எனக்குப் பட்டது நான் அவர்களின் எதிரில் இயல்பாக நிற்காமல் இருந்ததாலோ என்னவோ, என்னைத் தாண்டிச் சென்றவர் திரும்ப என்னை நோக்கி வந்தார். நான் அவரை எப்படி அப்புறப் படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தந்தை டாக்ஸியில் வந்து இறங்கினார். அவர் டாக்ஸிக்குப் பணம் கொடுக்க கைப்பையை திறந்த பொழுது, பக்கத்தில் நின்று, எண்பதாயிரம் அதில் இருக்க முடியாது என்று தெரிந்தும், உன்னிப்பாகப் பார்த்தது தெளிவாக ஞாபகம் இருக்கிறது.

அன்று எல்லோரும் வீடு திரும்பியதும் பெற்றோரிடையே பலத்த வாய்ச்சண்டை நடந்தது. திருமணமானதிலிருந்து பரஸ்பரம் ஏற்பட்ட ஏமாற்றங்கள் உரத்த குரலின் வழியாக வந்து கொண்டிருந்தன. தங்கையும் தமக்கைகளும் மூலைக்கொருவராக சிதறியிருந்தனர். வீட்டில் இருக்கும் ஆறு அறைகளில் எந்த மூலையில் எப்படிப் பொருத்திக் கொண்டாலும் சண்டை சத்தத்திலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. வெகு நேரத்திற்குப் பிறகு குரல்கள் ஒரு உச்சத்தை அடைந்து, மெல்ல ஓய்ந்தன.

நான் இரவில் தூங்காதது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி அல்ல. என் வயதில் இருந்தவர்கள், இருப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக நீண்ட இரவுகளை விரும்புவார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்த இரவு எனக்கு வித்தியாசமாக இருந்தது. பின் வீட்டுக்காரர் என் அருகே வந்த மறு நிமிடமே எல்லாவற்றையும் கிரஹித்துக் கொண்டு விட்டாரோ என்ற பயமும், அன்று மாலை சிறிது நேரமே தட்டப்பட்ட தம்பட்ட ஒலியும், ஒட்டிய மறு நிமிடமே என்னால் கிழிக்கப்பட்ட நொட்டீஸும் என்னுள் ஆழ அழுந்தி இருந்தன. இவை எண்ணற்ற எண்ணங்களை கிளப்பிய வண்ணம் இருந்தன. வீட்டிற்கு அது நாள் வரை செய்யாத சில்லரை உதவிகள், ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில், சிகரெட் சபலத்திற்கு தலைசாய்த்தது, ஏதோ ஒரு சின்ன சுகம் அவனுள் பரவுவதாய் நம்பி, அதை தினம் அனுபவிக்க, அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காத ஒரு பெண்ணைத் தினம் வீட்டிற்கு எஸ்கார்ட் செய்யும் நண்பனுடன் பஸ்ஸில் சில லீலைகளில் ஈடுபட்டு, சக பிரயாணிகள் மலத்தை மிதித்துவிட்டது போல முகத்தை வைத்துக்கொண்டது இப்படிப் பல எண்ணங்கள் என்னுள் வந்து போயின. இருந்தும் மேலே குறிப்பிட்ட மூன்று மட்டும் எப்படி எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று எனக்கு தெரியாதோ, அதே போல, உலகத்தில் ஜனித்ததிலிருந்து ஏற்பட்ட எண்தெரியா மனப்பதிவுகளில் எவையெவை சிக்கலாக ஒன்று சேர்ந்து என்னுள் இத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியது என்றும் எனக்குத் தெரியாது. சாலையில் சந்திக்கும் பிச்சைக்காரன் என்னுள் பாய்ச்சும் குற்ற உணர்ச்சிக்கும், (அல்லது பயமா?), மேலே கூறிய உணர்வுகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக இப்பொழுது படுகிறது. அந்த இரவின் நடுவில் கழிவறைக்குச் செல்லும் பொழுது வினோதமானதொரு நிலையிலிருந்தேன் என்று ஞாபகத்தில் படிந்து விட்டது. அந்த நிலையை விளக்க நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூற வேண்டியது அவசியமாகிறது.

வெகு நாட்களாக வீட்டுப் பாடங்களைப் பூர்த்தி செய்யாமல் வந்து கொண்டிருந்த என் வகுப்பு மானவன் ஒருவனைப் பிடித்து பலமாக முதுகில் அடித்தார் ஆசிரியர். வாழ்க்கையில் தப்பிக்க முடியாத ஒன்றாக அதை பாவித்து உட்காரும் இடத்திற்குப் போகத் திரும்பினான் மாணவன். இந்த அலட்சியப் போக்கால் ஆசிரியருக்குக் கோபம் அதிகரித்துவிட்டது. அவனைப் பிடித்திழுத்து முதுகில் திரும்ப அடித்து நிக்கரைக் கழற்றுவேன் என்று பயமுறுத்தினார். அவன் முகத்தில் மெல்லக் கலவரம் பரவியது எனக்கு நினைவில் இன்றும் உறைந்திருக்கிறது. அவன் அவரின் பிடியிலிருந்து விலகிக் கொள்ள முற்பட முற்பட அவர் பயமுறுத்தல் கூடியது. திடீரென்று அவன் விறைப்பாக நின்றான். ஆசிரியரைத் தடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நின்றன. அவனின் குத்திட்ட பார்வை ஆசிரியரை அவனிடமிருந்து விலகச்செய்தது. கிட்டத்தட்ட அந்த மாணவனின் நிலைபோல உணர்ச்சிகள் அடங்கிப்போன, ஜடமா அல்லது உன்னதமான நிலையின் சாயலா என்று சட்டென்று கணிக்கமுடியாத நிலையிலிருந்தேன் என்று இன்று யோசித்துப் பார்க்கும் பொழுது தெரிகிறது.

இதற்குப்பின் தொடர்ந்த மூன்று நான்கு நாட்களில், நடக்கும்போது பாவடை, வேட்டியிலிருந்து கிளம்பும் சொடுக்கலைத் தவிர வீட்டில் வேறு சத்தமே இல்லை. மயான அமைதி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிய வைத்த நாட்கள். எதனாலோ நாங்கள் அவரவர் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ மூன்று நான்கு நாட்களுக்குப் போகவில்லை. அதன்பின் எங்களிடையே சகஜமாக பேச்சு துவங்கிய விதத்தில், கொஞ்சம் இரண்டாம்தர சினிமாத்தனம் இருந்ததாகப் படுகிறது. என் தங்கை, அக்கா ஒருத்தியின் பெயரை உச்சரித்து, “இங்க கொஞ்சம் சாதத்தைத் தள்ளேன்” என்றாள். யாரும் யாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடாததால் எனக்குள் வேடிக்கையாக உணர்ந்தேன். மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி அவள் கூப்பிட்டது பரஸ்பர சுவாதீனத்தை இருக்கியிருந்த மெளனத்தைச் சற்றுத் தளர்த்தியது. அதன்பின் அங்கொரு சொல், இங்கொரு செயலாக, சுதாரிப்பு விரிந்து, மெல்ல சுமுகம் தலைகாட்டத் துவங்கியது.

நடுவில் சற்று கலைந்துபோன அன்றாடங்களுக்கு அவரவர் திரும்பினோம். தந்தை வெராண்டாவில் உட்கார்ந்து படிக்கும் காலை தினசரியின் படபடப்பு மீண்டும் கேட்க ஆரம்பித்தது. அந்த சாயங்காலத்தில், தன் மானத்தை விலைபேசிய அந்த பயங்கரமான முடையை அவர் எவ்வாறு சமாளித்தார் என்று எனக்கு இன்றுவரை தெரியாது. ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்போல் அம்மா மீண்டும் தன் காரியங்களில் ஈடுபடத் துவங்கினாள். எல்லாம் ஒரு சீரான கதிக்குத் திரும்பின. சில நாட்கள் புறக்கணித்திருந்த கிரிக்கெட்டை நான் மீண்டும் ஆடத்துவங்கினேன். ஆனால் ஆட்டமிழக்கும் போது, சட்டென்று எனக்கு பந்து வீசுபவன் மீது குரோதமும், சுயவெறுப்பும் நின்றுபோயிருந்தது என்பது, சமீபத்தில், மேலே விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் நடந்து, எட்டு வருடங்களுக்குப் பிறகு, ஒரு மத்தியான வேளையில், அரைத்தூக்க நிலையில், குழப்பமான எண்ணங்களுக்கு நடுவில் திடீரென்று தட்டுப்பட்டது.


(ஆகஸ்ட் 1983)
மீட்சி முதல் இதழ்

ஆன்மீகமும் வன்மமும்

1942: “My final word of advice to you is educate, agitate, and organize. Have faith in yourself. With justice on our side, I do not see how we can lose our battle. The battle to me is a matter of joy. The battle is in the fullest sense spiritual. There is nothing material or social in it. For ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of the human personality.”  
- B.R.Ambedkar (from a speech made at the All-India Depressed Classes Conference)

1942: உங்களுக்கு எனது இறுதி அறிவுரை என்னவென்றால் கற்பி, கலகம் செய், ஒன்றிணை என்பதே. உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நியாயம் நம் பக்கம் இருக்கையில், நமது போராட்டம் எப்படி தோற்க முடியும். போராட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். போராட்டம் என்பது அதன் முழுமையான பொருளில் ஆன்மீக உணர்வு. ஆன்மீகத்தில் லோகாதயமோ சமூக-கெளரவமோ இல்லை. காரணம் நமது போர் சொத்துக்கானதோ அதிகாரத்துக்கானதோ இல்லை. இது சுதந்திரத்துக்கான போர். இது மனிதத்தை மீட்டெடுப்பதற்கான போர். 
- பி.ஆர்.அம்பேத்கர் (அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாட்டு உரையிலிருந்து)

ஹுலா சதுப்புநிலம் குறித்து இஸ்ரேலின் மகாகவிகளுள் ஒருவரான யுஹூதா அமிச்சாய் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்:

‘எனது இளம் வயதில்
முழுமனதோடு நான் நம்பினேன்
ஹுலா சதுப்புநிலம் வடிக்கப்பட வேண்டுமென்று.
அதன்பின், ஜொலிஜொலிக்கும் வண்ணப் பறவையெல்லாம்
நீங்கிச்சென்றன அங்கிருந்து.
அரை நூற்றாண்டுக்குப் பிறகோ
மறுபடியும் நீரால் நிரப்புகிறார்கள் அவ்விடத்தை,
எல்லாம் பெரும் பிழையென்று சொல்லிக்கொண்டு.
ஒருவேளை என் ஒட்டுமொத்த வாழ்க்கையும்கூட
இதைப் போன்றதொரு பிழைதானோ?

’http://tamil.thehindu.com/general/environment/சூரியன்-என்ன-விலை/article7718810.ece