தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, August 31, 2019

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் - தமிழில் - நாகார்ஜுனன்

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் ----1
கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் :
மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தன். மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நிற்கிற துப்பாக்கிக்காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில் தான், கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸ்கட்டியை முதன்முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப் போன வெகுதூரத்திலான அந்த மத்தியானப் பொழுதானது நினைவுக்கு வரத் துவங்கியது. அந்தக் காலத்திலெல்லாம் மக்காந்தோ கிராமத்திலிருந்த இருபதே வீடுகளும் தெளிந்தோடிக் கொண்டிருந்த நதியொன்றின் கரையிலேயே இருந்து விட்டன. மனித நாகரீகத்துக்கே முற்பட்ட காலத்து ராட்சஸ முட்டைகளைப் போலவும் பளபளவென்று பாலீஷ் செய்யப்பட்டும் இருந்த வெண்நிறக் கற்களாலான படுகையானது நதியை ஒட்டியிருந்தது. அப்போதுதான் உதித்துவிட்டிருந்த பிரபஞ்சத்தின் எக்கச்சக்கமான பொருட்களை வார்த்தை சொல்லி அழைக்க முடியாததால் சுட்டித்தான் காட்ட வேண்டியிருந்தது. ஒவ்வொரு வருஷமும் மார்ச் மாதம் கந்தல் அணிந்த நாடோடிகள் நாத, தாள வாத்தியங்கள் முழங்க அங்கே வந்து சேருவார்கள். தங்கள் கண்டுபிடிப்புக்களை மக்காந்தோ கிராம வாசிகள் முன்பு கிடத்திக் காட்சி நடத்துவார்கள். 
நாடோடிகள் முதன்முதலாக மக்காந்தோ கிராமத்துக்குக் கொண்டுவந்த அதிசயப் பொருள் என்னவென்றால் காந்தம்தான். அடங்காத தாடியும் குருவியின் கைகளையும் கொண்டதடித்த நாடோடி ஒருவன் காந்தப்பொருளை மாஸிடோனிய நாட்டு ரசவாதிகள் கண்டறிந்த பூவுலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லி நிரூபிக்கவும் முற்பட்டான். அவன் பெயர் தான் மெல்க்யுடஸ். இரும்புக்கட்டிகள் இரண்டை ஒவ்வொரு வீட்டையும் தாண்டி அவன் இழுத்துச் செல்கையில் அண்டாகுண்டாக்கள், பாத்திரங்கள், கரண்டிகள் இன்னபிற சாமான்கள் அத்தனையும் தரையில் விழுவதையும் வெளிப்படத் துடிக்கும் ஆணிகள், திருகுமரைகள் அடங்கிய வீட்டு மேல் உத்திரங்கள் பதற்றமான முனகல் போடுவதையும் கண்டுகேட்டு அடங்காத ஆவல் கொண்டனர் மக்காந்தோ கிராமவாசிகள். வெகுநாள் காணாமல் போய்விட்டதாகக் கழித்துக்கட்டப்பெற்ற இரும்புச் சாமான்கள் சில கூட மெல்க்யுடஸ் கொண்டுவந்த அற்புத இரும்புக்கட்டிகளின் பின்னால் சென்று ஒட்டிக் கொண்டன. பொருட்களுக்கேயான பிரத்தியேகமான வாழ்க்கை உண்டென்றும் பொருட்களின் விசேஷ ஆத்மாக்களை விழிப்படையச் செய்தால்தான் பூவுலகத்தில் அத்தகைய வாழ்க்கையானது சாத்தியப்படும் என்றும் கடூரமான குரலில் அங்கே அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான் மெல்க்யுடஸ். 
இயற்கையின் விநோத அறிவையும் மாயமந்திரப் புதிர்களையும் மீறிச்செல்கிற அதீதக் கற்பனைவளத்தைத் தன்னிடம் கொண்டிருந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, மெல்க்யுடஸ் கொண்டுவந்திருந்த பயனற்ற கண்டுபிடிப்பைப் பற்றியே யோசிக்கலானான். காந்தத்தைக் கொண்டு பூமியின் அடிவயிற்றில் பொதிந்திருக்கிற தங்கத்தையெல்லாம் மீட்டுக் கொண்டுவிட முடியும் என்று நம்பினான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. காந்தம் அப்படியெல்லாம் பயன்படாது என்று நேர்மையான நாடோடியாகிய மெல்க்யுடஸ் எடுத்துச்சொல்லிப் பலமுறை ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவை எச்சரித்ததும் உண்மைதான். இருந்தாலும் நாடோடிகளின் நேர்மைத்தன்மையை அப்போதெல்லாம் நம்பியிராத ஜோஸ் அர்க்காடியோ புண்டியா தன்னிடமிருந்த ஒரே கோவேறு கழுதையையும் ஜோடி ஆடுகளையும் கொடுத்து மெல்க்யுடஸின் காந்தம் பூசப்பட்ட இரும்புக்கட்டிகளை வாங்கிக் கொண்டான். இந்த மிருகங்களை நம்பியே கஷ்ட ஜீவனம் நடத்திவந்த மனைவி உர்ஸலாவால்கூட அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. 
"கவலையை விடு உர்ஸலா. சீக்கிரத்தில் வீட்டின் தரையையே தங்கத்தால் இழைத்துக் காட்டுகிறேன் பார்" என்று ஜோஸ் அர்க்காடியோ புண்டியா அவளிடம் சூளுரைத்துவிட்டுப் பல மாதங்களாக பரிசோதனைகளில் ஈடுபட்டான். அந்தப் பிராந்தியத்தையே அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பார்க்கலானான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. மக்காந்தோவின் புராதன நதிப் படுகையைக்கூட விட்டுவைக்கவில்லை அவன். மெல்க்யுடஸ் கொண்டுவந்த அற்புதக் கட்டிகளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டும் அந்த நாடோடி சொல்லிவைத்துவிட்டுப் போன மந்திரங்களை எந்நேரமும் உச்சாடனம் செய்துகொண்டும் இருக்கிறான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
எவ்வளவோ தோண்டிய பிறகும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்குக் கிடைத்ததெல்லாம் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துருவேறிப்போன கவச உடை ஒன்றுதான். கவச உடையின் அத்தனை பகுதிகளும் இறுகப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன. உள்ளிருந்த வெற்றிடம் கிளப்பிய நாதமோ கற்களால் இழுத்துக்கட்டப்பட்ட சுரைக்காயைத் தட்டிப்பார்த்தால் வரக்கூடிய விநோத சப்தத்தை ஒத்திருந்தது. ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் அவனுடைய சாகசத்தோண்டலில் பங்கெடுத்த இன்னும் நாலுபேரும் கவச உடையை மிகவும் பிரயத்தனப்பட்டு உடைத்தபோது கண்டது சுண்ணாம்புப்பூச்சால் இறுகிப் போயிருக்கும் எலும்புக்கூட்டையும் அதன் நெஞ்சிலிருந்த செப்புப்பதக்கத்தின் உள்ளே இன்னும் பத்திரமாயிருக்கும் பெண்கூந்தலின் ஒரே நீளமான முடியையும். 
நாடோடிகள் அடுத்த மார்ச் மாதத்தில் வந்தார்கள் டெலஸ்கோப்பையும் பீப்பாய் அளவிலான பூதக்கண்ணாடியையும் தூக்கிக்கொண்டு. ஆம்ஸ்டர்டாம் நகர யகர்களின் அதிநவீனக் கண்டுபிடிப்பு என்று வர்ணித்தார்கள் பூதக்கண்ணாடியை. கிராமத்தின் - கோயில் நாடோடிப்பெண்ணை நிற்க வைத்துவிட்டு கூடாரத்தின் வாசலில் நிறுவினார்கள் டெலஸ்கோப்பை. அங்கே வந்து ரியால்கள் கொடுக்கும் யாரும் தூரத்திலிருந்த பெண்ணைக் கைக்கெட்டும் அளவில் பார்க்க முடிந்தது. அப்படி நிறைய பேர் பார்க்க வரிசை அமைக்கும்போது விஞ்ஞானமானது தூரம் என்ற கருத்தாக்கத்தையே மனித மனத்திலிருந்து துடைத்து எறிந்து விட்டது என்றும் பூவுலகத்தின் எந்த மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் எதையும் இனிவரும் காலத்தில் வீட்டில் உட்கார்ந்து கொண்டே  பார்த்து விடமுடியும் என்றும் திட்டவட்டமாகப் பெருமைப்பட்டுக் கொண்டான் மெல்க்யுடஸ்.

பிரம்மாண்டப் பூதக்கண்ணாடி மூலம் அதிர்ச்சி தரக்கூடிய பரிசோதனையை நடத்திக் காட்டினான்   மக்காந்தோ கிராமத்தின் உச்சிவேளை சூரியன். காய்ந்த வைக்கோலை நடுத்தெருவில் கிடத்தி சூரிய கிரணங்களை மீது செலுத்தி எரித்தார்கள் நாடோடிகள். மெல்க்யுடஸ் அளித்த காந்தக்கட்டிகளின் தோல்வியால் மனம் வெறுத்துப் போயிருந்த ஜோஸ். அர்க்காடியோ புண்டியா இன்னமும் ஆறுதல் அடைந்திருக்காவிட்டாலும் புதிய பரிசோதனையைப் பார்த்துவிட்டு யுத்தத்துக்கான பிரத்தியேகமான ஆயுதமாக பூதக் கண்ணாடியைப் பயன்படுத்த முடிவெடுத்தான். காந்தம் பூசப்பட்ட இரும்புக்கட்டிகளை மீண்டும் மெல்க்யுடஸுக்கே மூன்று காலனியத் தங்க நாணயங்களுடன் கொடுத்து பிரம்மாண்டமான பூதக்கண்ணாடியைப் பெற்றுக்கொண்டான். இதையெல்லாம் தடுக்க முடியாமல் போன உர்ஸலாவுக்கோ அழுகை பொத்துக் கொண்டு வந்தது. வாழ்க்கை பூராவும் அப்பா கஷ்டப்பட்டுச் சேர்த்துவைத்திருந்த தங்க நாணயங்களைப் பேழையில் வைத்து அதைத் தன் படுக்கை அடியில் மறைத்து விட்டு தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம் என்றிருந்த உர்ஸலாவை மீறி அவற்றில் மூன்றையும் கொடுத்து பூதக்கண்ணாடியை வாங்கியிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. அவளைத் தேற்றுவதற்குக்கூட ஏதும் சொல்லாமல் விஞ்ஞானிக்கே உரித்தான கவனத்துடனும் துறவு நோக்கத்துடனும் தன் பரிசோதனைகளில் மூழ்கிப்போனான் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா. 
பரிசோதனைகளில் ஒன்று தன் உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியும் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் உழைத்தான். பூதக்கண்ணாடியின் தாக்குதலால் எதிரிப் படைகள் நிலை குலைந்து போய்விடும் என்ற உண்மையை நிரூபிக்கும் பொருட்டு சூரிய கிரணங்களைத் தன்மீதே செலுத்திக் கொண்ட போது உடம்பில் ஏற்பட்ட தீக்காயங்கள் ஆறிப்போவதற்குப் பலகாலம் பிடித்தது. பூதக் கண்ணாடிக் கண்டுபிடிப்பின் அதீத பயங்கரத்தைப் பார்த்துப் பதறிப்போன உர்ஸலாவின் எதிர்ப்பை அழித்தொழிக்க விரும்பி வீட்டையே எரித்துவிடவும் துணிந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. பூதக்கண்ணாடி என்கிற பிரம்மாண்டமான ஆயுதத்தின் கேந்திர ரீதியான பலங்கள், பலவீனங்களையும் கணக்கிட்டுக் கொண்டே தன் அறையில் தினசரி பலமணிநேரம் உட்கார்ந்து கொண்டிருந்தான். பரிசோதனைகள் குறித்த திட்டவட்டமான குறிப்புகளை தீர்மானகரமான முறையில் யாரும் மறுக்க முடியாதபடிக்கு எழுதலானான். பூதக்கண்ணாடி ஆயுதத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்ற குறிப்புகள் கொண்ட புத்தகத்தை எழுதி முடித்து அரசாங்கத்துக்கு அனுப்பவும் முனைந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. பரிசோதனைகள் பற்றிய விபரங்களும் விளக்கப்படங்களும் எக்கச்சக்கமாக நிரம்பி வழிந்தவுடன் புத்தகத்தை அரசாங்கத்திடம் சேர்ப்பிக்கச் செய்ய அவன் அனுப்பி வைத்த நபரோ மலைத்தொடர்களைத் தாண்டியும் ஆழம் தெரியாத சதுப்புநிலக்காடுகளில் தொலைந்துபோயும் சுழல்கள் மிகுந்த நதிகளைக் கடந்தும் ஏமாற்றத்தாலும் கொள்ளை நோயாலும் பீடிக்கப்பட்டு துர்மிருகங்களுக்கு இரையாகிவிடும் கடைசி நிமிடத்தில் எப்படியோ கோவேறு கழுதைகள் தபால் கொண்டுவருகிற வழியை அடைந்து அந்த அற்புதப் பாதையைக் கண்டுபிடித்தே விட்டான். நாட்டின் தலைநகரத்துக்குப் போய்ச் சேருவது என்பதே முடியாத அந்தக்காலத்தில்கூட அரசாங்கம் இடப்போகிற ஆணைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு நடக்கப்போவதாகவும் பூதக்கண்ணாடி ஆயுதத்தை ராணுவ அதிகாரிகளின் செளகர்யத்துக்கு ஏற்றவகையில் பரிசோதித்துக்காட்டச் சித்தமாக இருப்பதாகவும் 

இனிவரும் காலத்தில் நடக்கவுள்ள விண்வெளி யுத்தத்தில் அதே ஆயுதத்தைப் பிரயோகிப்பதற்கென அவர்கள் அத்தனை பேரையும் பயிற்றுவிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கடிதத்தில் எழுதியிருந்தான். எழுதிய பின் பல வருஷங்கள் அரசாங்கத்தின் பதிலுக்காகக் காத்திருந்து ஏமாந்த அவன் தன் திட்டத்தின் மகத்தான தோல்வி பற்றி மெல்க்யுடஸிடம் அங்கலாய்த்தான். மெல்க்யுடஸோ அதே இரும்புக் கட்டிகளை அவனுக்குத் திருப்பித்தந்து தன் நேர்மையை நிலைநிறுத்திக் கொண்டதோடு போர்த்துக்கீசிய வரை படங்களையும் கடற்பிரயாணங்களின்போது பயன்படுகிற உபகரணங்களையும் விட்டுச் சென்றான் அவனிடம். அதுமட்டுமின்றி ஹொமம் என்கிற துறவியின் சுவடிகளைப்பற்றித் தன் கைப்பட எழுதி அதன்மூலம் திசைமானி மற்றும் வானமானி உள்ளிட்ட எண்ணற்ற உபகரணங்களை ஜோஸ் அர்க்காடியோ புண்டியா பயன்படுத்தவும் வகை செய்துவிட்டுப் போனான் அந்த விநோத நாடோடி. 
-- 
வீட்டின் கொல்லைப்புறமாக தனி அறை கட்டி யாரும் தொந்தரவு செய்ய முடியாதபடிக்கு உட்கார்ந்துகொண்டு மாரிக்கால மாதங்களைப் பரிசோதனைகளில் கழித்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. உச்சிவேளையைத் திட்டவட்டமாகக் கணித்து அதற்கான சமன்பாட்டை உருவாக்க முயன்ற போது சூரியன் தாக்கி மயக்கமே வந்து விட்டது. மெல்க்யுடஸ் அளித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதில் நிபுணனாகிவிட்ட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா புதிய பிரபஞ்சத்தை நிர்மாணித்து பெயர் தெரியாத கடல்களில் பிரயாணம் செய்து நரவாசனையே அற்ற பிராந்தியங்களில் சஞ்சரித்த அதீத ஜீவராசிகளுடன் உறவுகொள்ள விழைந்தான். படிப்பறையையே விட்டு நகராமல் இந்த அத்தனையையும் செய்துகொண்ட அவன் அதே காலகட்டத்தில் தன்னிடமே சப்தமாகப் பேசிக்கொள்ளும் பழக்கத்தையும் வீடு புகுந்து யாரையும் கவனிக்காமலேயே நடந்து சென்றுவிடும் பழக்கத்தையும் மேற்கொள்ளத் துவங்கினான். முதுகுமுறியத் தோட்டவேலை செய்துகொண்டும் வாழைமரங்களையும் சேனைக் கிழங்குகளையும் முட்டைச்செடிகளையும் பயிராக்கிக் கொண்டும் இருந்தார்கள் உர்ஸலாவும் குழந்தைகளும். ஜுரவேக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவோ அதையெல்லாம் நிறுத்திவிட்டு ஏதோ இனம்புரியாத லயிப்பில் போய் சிக்கிக்கொண்டதைப் புரிந்து கொண்டதால் தவித்தார்கள் அவர்கள். ஏதோ மயக்கத்தில் ஆழ்ந்திருந்த அவனோ தனக்கே புரியாத வார்த்தைச் சங்கிலிகளைப் பேசிக்கொண்டான். கடைசியில் டிசம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கத்துக்கு முன்பான சாப்பாட்டின் போது இதுநாள்வரை அவனைத் தாக்கியிருந்த விஷயத்தைச் சட்டென்று விளங்கிக்கொண்டார்கள். கற்பனா சக்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுப்பதன் மூலம் வெகுகாலமாகப் பெயரில்லாக் கண்காணிப்புச் செயல் ஒன்றில் ஈடுபட்டுவந்த அப்பாவானவன் தன் அதீதமான கண்டுபிடிப்பை மிகவும் பவ்யமாக வெளியிட்ட தருணமதைக் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் பூராவும் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள். 
"உலகம் உருண்டையானது, ஆரஞ்சுப் பழத்தைப்போல" என்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. உர்ஸலா பொறுமையிழந்து போய்விட்டாள். "வேண்டுமானால் நீ மட்டும் பைத்தியமாக இரு. குழந்தைகள் மேல் உன் நாடோடிக் குழப்பங்களை ஏன் 'திணிக்கிறாய்" என்று கத்தினாள். அவளுடைய கோபமும் பதற்றமும் அவனை ஏதும் செய்யாததால் மேலும் வெறிகொண்டு வானமானியை அவள் தரையில் மோதி உடைத்த பின்பு அடுத்த வானமானியைத் தயார் செய்து கிராமவாசிகளை அறையில் கூட். வைத்துக்கொண்டு "உலகம் உருண்டை" என்ற தான் கண்டறிந்த உண்மையைக் கோட்பாட்டு ரீதியாக நிறுவ முற்பட்டான். கிழக்குத்திசையிலேயே பிரயாணித்தும் கொண்டிருந்தால் புறப்பட்ட இடத்தையே வந்தடைய முடியும் என்ற சாத்தியப்பாட்டை விளக்குகிற வகையில் அவன் எடுத்துக் கொண்ட உதாரணங்கள் அவர்களில் யாருக்கும் புரியவே இல்லை. ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு பித்துப் பிடித்துவிட்டது என்ற முடிவை கிர்ரமம் நிதர்சன நிறமாக மாற்றிக்கொண்டிருந்த வேளையில் மெல்க்யுடஸ் திரும்பிவந்தான். வானசாஸ்திர யூகங்களின் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்ட "உலகம் உருண்டை" என்கிற உண்மையைத் தானாகவே கண்டறிந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவைப் பாராட்டினான் மெல்க்யுடஸ். மக்காந்தோ கிராமவாசிகளுக்கு இந்த உண்மை சுத்தமாகத் தெரியாமல் போயிருந்தாலும் இதைப் புதிதாகக் கண்டறிந்தவன் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா என்பதை எண்ணிப் பரவசம் அடைந்தான் மெல்க்யுடஸ். ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு மெல்க்யுடஸ் அப்போது வழங்கிய பரிசுதான் கிராமத்தின் எதிர்காலத்தையே மாற்றப்போவதாய் அமைந்த ஒரு ரசவாத பரிசோதனைச் சாலை. 

மெல்க்யுட்ஸுக்கோ எக்கச்சக்கமாக வயதாகிவிட்டிருந்தது. முதன்முதலில் மக்காந்தோ கிராமத்துக்கு வந்தபோது அவனுக்கு ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவின் வயதுதான் இருந்தது என்றாலும் குதிரையைக் காதுகளைப் பிடித்தே இழுத்துத் தள்ளிவிடுகிற அளவு பலம் பொருந்தியவனாக இருந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியா இன்றும் அப்படியே காணப்பட்டான். மெல்க்யுடஸோ இனந் தெரியாத நோயால் தாக்குண்டவனாக அப்படியே உதிர்ந்துவிட்டிருந்தான். உண்மையிலேயே பல்வேறு விநோத நோய்கள் அந்த நாடோடியைத் தாக்கிவந்தன. மரணம் தன்னை எல்லா இடத்திலுமாகப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது என்பதையும் தன் கந்தல் ஆடையின் நுனிகளை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்துவிட்ட மரணம் தன்னை முழுமையாகப் பற்றிவிடவும் இல்லை என்பதையும் ரசவாத பரிசோதனைச்சாலையை ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவிடம் வழங்கும்போது சொன்னான் மெல்க்யுடஸ். மனித குலத்தை இதுநாள்வரை கலக்கிவந்திருக்கும் அத்தனை அதீத நோய்களிலிருந்தும் யுகங்களின் பேரழிவுகளிலிருந்தும் தப்பிப்பிழைத்து அலைந்து கொண்டிருக்கும் அகதிதான் மெல்க்யுடஸ். பெர்சியாவில் பெல்லக்ரா, ஜப்பானில் பெரிபெரி போன்ற ஊட்டச்சத்துக்குறைவு நோய்களிலிருந்து மீட்புப்பெற்றும் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தில் குஷ்ட ரோகத்தையும் மடகாஸ்கர் தீவில் கொள்ளை நோயையும் கண்டும் சிசிலியில் வெடித்த பூகம்பத்திலிருந்து விடுபட்டும் மெகல்லன் ஜலசந்தியில் பிரயாணம் செய்த கப்பல் நொறுங்கிய போது சமுத்திரத்தில் காணாமல் போயும் தப்பிப்பிழைத்த மனிதன் மெல்க்யுடஸ். நோஸ்ட்ரடாமஸ் என்கிற பதினைந்தாம் நூற்றாண்டுப் ஃப்ரெஞ்சு தீர்க்கதரிசியின் உள்மனச் சாவிகளை வைத்திருப்பதாகக் கருதப்பட்ட இந்த விநோதப் பிறவியின் மிக சோகமான முகத்தை ஒளிவட்டம் சூழ்ந்திருந்தது. எதார்த்தம் மறைத்துவிட்டுப் போயிருந்த அத்தனைக் கதைகளையும் ஒருசேரக் கண்டதாகத் தென்பட்டது முகத்திலிருந்த ஆசியப்பார்வை. அணிந்திருந்த கறுப்புத் தொப்பியானது  பெரிய இறக்கைகள் கொண்ட காகமாக அவனை இனங்காட்டியது. உடுத்தியிருந்த வெல்வெட் கோட்டின் மீது நூற்றாண்டுகளின் மினுமினுப்பு சறுக்கிச் சென்றது. இருந்தாலும் எக்கச்சக்கமான ஞானத்தையும் மர்மமான திருஷ்டியொன்றின் முழுவீச்சையும் கொண்டிருந்த மெல்க்யுடஸுக்குக்கூட தினசரி மனிதனுக்கேயான சாதாரணப் பிரச்னைகளும் இருந்தன, வயதாகிவிட்டபடியால் ஏற்படும் நோய்கள் பற்றியும் சாதாரணப் பொருளாதாரப் பிரச்னைகள் பற்றியும் அடிக்கடி பேசினான். ஊட்டச் சத்துக்குறைவால் அந்த நாடோடியின் தோல் வெடித்துச் செதில்கள் தோன்றியபோது பற்கள் கொட்டிப் போய் சிரிப்பு காணாமல் போனது. தன் ரகசியங்களை அவன் சொல்லத் துவங்கிய மூச்சடைக்கும் உச்சிவேளையில் பிரமாதமான நட்பு தனக்கும் அவனுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தீர்மானித்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. மெல்க்யுடஸ் சொன்ன மாயாஜாலக் கதைகளைக் கேட்டு அதிர்ந்து போய்விட்ட குழந்தைகளை  பார்த்தான் அவன். அந்த மத்தியானப்பொழுதில் ஜன்னல் அருகே உலோக வெளிச்சத்தின் மினுமினுப்பில் அமர்ந்து கொண்டு கற்பனாசக்தியின் அடியாழத்திலிருந்து கறுப்புப் பிராந்தியங்களைக் குரலால் மெல்க்யுடஸ் ஜ்வலிக்கச் செய்ததும் மெல்க்யுடஸின் நெற்றிப் பொட்டிலிருந்து வெப்பத்தால் உருகிவழிந்து ஓடிக்கொண்டிருந்த பொருள் தான் க்ரீஸ் என்பதும் அப்போது ஐந்து வயது கூட ஆகியிராத அவ்ரலியானோவுக்குத் தன் எஞ்சிய வாழ்நாள் பூராவும் நினைவிருக்கப் போகிறது. அவ்ரலியானோவின் அண்ணன் ஜோஸ் அர்க்காடியாவோ கதைசொல்கிற அற்புத பிம்பத்தைத் தன் மூதாதையர்களின் நினைவுகளில் முக்கியமானதாக வரித்துக்கொண்டு தன்னுடைய வழித் தோன்றல்களுக்கும் விட்டுச் செல்லப்போகிறான் தெரியுமா. 
ஆனால் உர்ஸலாவுக்கு மட்டும் இந்த நிகழ்ச்சி கெட்ட கனவுகளையே நினைவுபடுத்தியது. அறைக்குள் அவள் நுழைந்தபோது பாதரச உப்பு வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்குடுவையைக் கவனமின்றி மெல்க்யுடஸ் உடைத்துவிட்டதுதான் காரணம். 
"சாத்தானின் நாற்றம் இதுதான் போல" என்றாள் உர்ஸலா. 
"சாத்தான் கந்தக வாசனை கொண்டவன் என்று ஏற்கனவே நிரூபிக்கப் பட்டாகிவிட்டதால் இந்த உப்பு மேலே பட்டால் அரிப்பெடுக்கும் சாதாரணப்பொருள் மட்டும்தான்" என்றான் மெல்க்யுடஸ். 
பாதரசத் தாதுப்பொருளின் மோசமான குணங்கள் எத்தகையன என்று விஸ்தாரமாக மெல்க்யுடஸ் விளக்கியதைப் புறக்கணித்துவிட்டுப் பிரார்த்தனைக்காக குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்ட உர்ஸலாவின் மனத்தில் மெல்க்யுடஸின் நினைவுடன் தொடர்புடையதாக அந்த நாற்றம் தங்கிவிட்டது. 
கண்ணாடிக்குடுவைகள், ஃபுனல்கள், சல்லடைகள் தவிர புராதனத் கண்ணீர்க்குழாய்கள், மெல்லிய நீண்ட கழுத்துடைய கண்ணாடிப் பாத்திரம், தத்துவ வாதியுடைய முட்டையின் மறுபதிப்பு மற்றும் யூத மேரியின் முக்கோண வடிகட்டியின் ' அதிநவீன மாதிரியை அடிப்படையாக வைத்து நாடோடிகளே அமைத்திருந்த இன்னொரு வடிகட்டி ஆகியவையே அந்தக் குறைந்தபட்சரசவாத பரிசோதனைச்சாலையில் இருந்தன. இவைதவிர ஏழு கிரகங்களுக்குப் பொருந்துவதான ஏழு உலோகங்களின் மாதிரிகளையும் தங்கத்தை இரட்டிப்பாக்குகிற மோஸே மற்றும் ஸோஸ்ஸிமஸ் ஆகிய கடவுளர்களின் ரகசியச் சமன்பாட்டையும் வாசிப்பவர்களைத் தத்துவவாதியின் மந்திரக்கல்லைத் தயாரிக்க அனுமதிக்கிற சுவடிகளையும் மெல்க்யுடஸ் அங்கே விட்டுச் சென்றிருந்தான், தங்கத்தை இரட்டிப்பாக்கும் சமன்பாடுகளின் திடீர் சுலபத்தன்மையால் மதிமயங்கிப்போன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா பல வாரங்களாகவே உர்ஸலாவிடம் கெஞ்சி வாதாடி அவள் புதைத்திருந்த தங்க நாணயங்களைப் பெற்றுக்கொண்டுவிட்டான். பாதரசத்தை எத்தனை முறைபகுத்தாய் முடியுமோ அத்தனை மடங்காக நாணயத் தங்கத்தைப் பெருக்கித் தருவதாக அவளிடம் கூறிவிட்டான். நாணயங்களில் மூன்றை மட்டும் சட்டியில் இட்டு அவற்றுடன் செப்புப்பட்டைகளையும் கந்தகக்கல், மஞ்சள் தாது மற்றும் ஈயத்தை வைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சிப் பார்த்தான். சட்டியில் பொங்கி வந்த சகதிக்குழம்போ மின்னும் தங்கத்தைப் போலன்றி தீய்ந்துபோன சர்க்கரையின் நிறத்தை ஒத்திருந்தது. எடுத்துக்கொண்ட முயற்சியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பதைபதைப்பில் ஏழுகிரக உலோகங்களையும் அதே சகதிக்குழம்பில் இட்டு உருக்கி பாதரசத்தோடும் ஸைப்ரஸ் நாட்டு கந்தக உப்போடும் கலந்து முள்ளங்கி எண்ணெய் கிடைக்காததால் பன்றிக்கொழுப்பில் காய்ச்சி வடிகட்டிப் பார்த்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இதன்மூலம் உர்ஸலா கொண்டுவந்த சீதனமானது சட்டியுடன் ஒட்டிக் கொண்டு விட்ட பன்றிக்கசடாக மாறிப்போனது. 
நாடோடிகள் அடுத்த முறை மக்காந்தோவுக்கு வருகைதந்தபோது அவர்களை விரட்டிவிடுவதற்காக கிராமவாசிகளை ஒன்று திரட்டிவிட்டாள் உர்ஸலா. இருந்தாலும் ஆச்சர்யமும் ஆவலும் யாரைத்தான் விட்டன. எல்லாவிதமான வாத்தியங்களையும் முழங்கிக் கொண்டு மக்காந்தோவில் நுழைந்த நாடோடிகளில் ஒருவன் நாஸியென்ஸெனஸின் அதிநவீனக் கண்டுபிடிப்பைக் காட்டுவதாக உரத்த குரலில் சொன்னான். அந்தக் கண்டுபிடிப்பானவன் வேறுயாருமில்லை - மெல்க்யுடஸ்தான். பளபளப்பான புதிய பற்களுடன் இளமையாகச் சிரித்துக் கொண்டிருந்தான் மெல்க்யுடஸ். முன்பு நோய் தாக்கி பற்கள் காணாமல் போய் விட்டதையும் கன்னங்கள் தொங்கிப் போனதையும் உதடுகள் உலர்ந்து வெடித்துப் போனதையும் மறக்க முடியாத கிராமவாசிகளுக்கு அவனுடைய புதிய அவதாரம் பெரும் பீதியைக் கொடுத்தது. புதிய பல்செட்டைக் கழற்றிக்காட்டிய போது கணம் மட்டும் நொறுங்கி உதிர்ந்து போன அந்தக்கால மெல்க்யுடஸ் தெரிந்ததென்னவோ உண்மைதான். அதீத சக்திகளைப் பெற்று அவன் விளங்குவதற்கான நிரூபணமாக அவர்கள் இதைப் புரிந்து கொண்டார்கள். மெல்க்யுடஸின் அதீத ஞானமானது பொறுக்க முடியாத அளவுக்குப் போய்விட்டதை ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கூட உணர்ந்து கொண்டுவிட்டான். பல்செட்டை அப்படிக் கழற்றிக்காட்டிய மெல்க்யுடஸ் ஓர் ஏமாற்று வித்தைக்காரன் என்று புரிந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு ரசவாதத்தில் அதுநாள் வரை இருந்துவந்த ஈடுபாடு காணாமல் போனது. வேளாவேளைக்குச் சாப்பிடுவதையும் விட்டொழித்து வீட்டுக்குள் நடைபயின்று கொண்டே நாட்களைக் கழித்தான் அவன். "உலகத்தில் எத்தனையோ ஆச்சர்யகரமான விஷயங்கள், அதோ நதிக்கு அப்பால் ஏகப்பட்ட புதிய மந்திர உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமோ இந்த இடத்திலேயே கழுதைகளைப்போல் வாழ்கிறோம்" என்று உர்ஸலாவிடம் அங்கலாய்த்துக் கொண்டான். - 

மக்காந்தோ நிறுவப்பட்ட காலத்திலிருந்தே ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவை அறிந்திருந்த கிராமவாசிகள் மெல்க்யுடஸின் தாக்கத்தால் எப்படியெல்லாம் மாறிப்போய் விட்டான் என்று அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். முன்பெல்லாம் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா சராசரிக் குடும்பத்தலைவனாகவும் குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு மிருகங்கள் பராமரிப்பில் பெரிதும் ஈடுபட்டு கூட்டுழைப்பில் முது? திளைப்பவனாகவும் இருந்தான். கிராமத்தின் முதல் கட்டிடமாக அவனுடைய வீடு இருந்தபடியால் மாதிரியாகக் கொண்டு இதர வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்த வீட்டில் வெளிச்சம் மிக்க முன் அறையும் வராந்தா போன்ற சாப்பாட்டு அறையும் அங்கேயெல்லாம் ஏகப்பட்ட மலர்க்கொத்துகளும் இரண்டு படுக்கை அறைகளும் ஒரே செஸ்ட்நட் மரம் நன்கு படர்ந்து வளர்ந்த பிரம்மாண்டமான முற்றமும் பராமரிக்கப்பட்ட தோட்டமும் ஆடுகள், பன்றிகள், கோழிகள் சமாதான சகவாழ்வு நடத்தி வருகிற தொழுவமும் இருந்தன. அவன் வீட்டில் மட்டுமின்றி மக்காந்தோ கிராமத்திலேயே நடமாடமுடியாதபடி தடை செய்யப்பட்ட மிருகங்கள் ஏதும் உண்டென்றால் அவை சண்டைச் சேவல்கள் தான். 
கணவனைப் போலவே சுறுசுறுப்பாக இருந்த உர்ஸலா திடசித்தம் கொண்டவளாகவும் வாழ்நாளில் ஒரே பாட்டுக்கூடபாடியிராதவளாகவும் ஒரே தருணத்தில் பல இடங்களில் நடமாடுபவளாகவும் அதிகாலையிலிருந்து பின்னிரவு வரையில் தொடர்ந்து இயங்கிவருவதால் கஞ்சி போட்ட தன் பாவாடையின் மெலிதான மொறமொறப்பால் எங்கும் பின் தொடரப்படுபவளாகவும் இருந்தாள். பல்லாங்குழி போன்ற வீட்டின் தரையும் சுண்ணாம்பைக் கண்டிராத மண் சுவர்களும் அவர்களே செய்து கொண்ட மேஜை நாற்காலிகளும் எப்போதும் உர்ஸலாவின் கைபட்டு சுத்தமாகவே இருந்தன. அவர்களுடைய துணிகள் வைக்கப்பட்டிருந்த பழைய அலமாரிகூட ஏதோ அபூர்வ மூலிகை ஒன்றின் வெம்மையான வாசனையில் ஆழ்ந்திருந்தது. 
கிராமத்திலேயே அதிக சுறுசுறுப்பும் முனைப்பும் கொண்டவனான ஜோஸ் அர்க்காடியோ புண்டியா ஊரை வடிவமைத்த விதமே அலாதிதான். அத்தனை வீடுகளும் அங்கே ஓடிய நதிக்குச் சமதூரத்தில் இருக்கும்படியாகவும் எந்த வீட்டிலிருந்தும் நதிக்குத் தண்ணீர் எடுக்கச் செல்லும் நபர் செலவிட வேண்டிய நேரம் சம அளவில் இருக்கும் படியாகவும் உச்சிவெயில் ஏறும்போது எல்லா வீடுகளுக்குக் கிடைக்கும் வெப்பமும் சம் அளவினதாக இருக்கும்படியாகவும் கிராம வடிவமைப்பு. கிராமத்தின் மொத்த ஜனத்தொகையான முன்னூறு பேரும் கடுமையான உழைப்பாளிகள் என்பது மட்டுமின்றி சரித்திரத்தில் எந்த கிராமமும் இவ்வளவு கடுமையாக உழைத்ததாக அந்த முன்னூறு பேரில் யாரும் கேள்விப்பட்டதில்லை என்பதும் உண்மை. அவர்களில் யாருக்குமே முப்பது வயதுக்கு மேல் ஆக வில்லை என்பதால் மட்டுமின்றி அவர்களில் யாரும் இதுவரை மாணமடையவில்லை என்ற காரணத்தாலும் மக்காந்தோ சந்தோஷமான கிராமமாக இருந்தது. 
கிராமம் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே பலப்பல கூண்டுகளையும் கண்ணிகளையும் நிர்மாணித்து வந்திருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. வீட்டிலும் இதர வீடுகளிலும் ஜோடிப் புறாக்கள், காட்டு மைனாக்கள், ஈத்தின்னிப் பறவைகள், கொஞ்சும் சிகப்புக் குருவிகள் ஆகியவற்றைக் கொண்டு கூண்டுகளை நிரப்பினான். எக்கச்சக்கமான பறவைகளின் கூட்டுக்கச்சேரியானது எத்தகைய தொந்தரவாக மாறியது என்பதை அவ்வப்போது காதுகளில் தேனீமெழுகை அடைத்துக்கொண்டு வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் தன் எதார்த்த உலகத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உர்ஸலாவைக் கேட்டால் சொல்லுவாள். தலைவலிக்கு மருந்தாக கோலிக்குண்டுகளை விற்றுக்கொண்டு மெல்க்யுடஸின் நாடோடிக் கூட்டத்தினர் முதன்முதலாக வருகை தந்த காலத்தில் தன்னைச் சதுப்புநிலம் சூழ்ந்திருந்த போதையில் காணாமல் போய்விட்டிருந்த மக்காந்தோ கிராமத்தை அவர்கள் கண்டுபிடித்ததே ஆச்சர்யம்தான். இருந்தாலும் பறவைகளின் சங்கீதக் கச்சேரிதான் சரியான வழியைத் தங்களுக்குக் காட்டியது என்று நாடோடிக் கூட்டத்தினர் கூறிக் கொண்டிருப்பதும் நினைவிருக்கலாம். 
 காந்தக்கட்டிகளின் ஜுரவேக இயக்கத்தாலும் வானசாஸ்திரக் கணக்குகளாலும் மனிது குலமே வேறொரு எதிர்கால மிருகமாக மாறிவிடுவது பற்றிய அதீதக் கனவுகளாலும் பூவுலகத்தின் ரகசிய அற்புதங்களைக் கண்டறியும் ஆவலினாலும் கிராமமே பீடிக்கப்பட்ட போது கிராமத்துக்கே உரித்தான சமுதாய முனைப்பானது கரைந்து காணாமல் போனது. சுறுசுறுப்புக்கும் சுத்தத்துக்கும் பெயர்போன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா சோம்பேறியாகவும் அழுக்காடைகள் அணிந்து கொண்டும் சுற்றி வந்தான். அவனுடைய காட்டுத்தாடியைத் திருத்த உர்ஸலா சமையலறைக்கத்தியை எடுத்து வந்தாள். விநோதமான மயக்கத்தில் வழக்கம் போல ஆழ்ந்துவிட்டான் என்று கிராமவாசிகள் சொல்லிக் கொண்டார்கள். பித்துப்பிடித்தவன் என்று நிச்சயமாக நம்புபவர்கள் கூட தங்கள் குடும்பங்களையும் வேலைகளையும் உதறிவிட்டு அவனை ஒருநாள் பின் தொடர்ந்து வந்தது ஆச்சர்யம் தான். அன்றுதான் தன் அத்தனை உபகரணங்களையும் வெளியில் எடுத்து வைத்துவிட்டு "கண்டுபிடிப்புக்களால் பெரிதும் மாறிக்கொண்டிருக்கும் வெளியுலகத்துடன் மக்காந்தோவை இணைக்க முன்வருவீர்களா" என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
அந்தப் பிராந்தியத்தின் புவியியல் அமைப்பைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கவில்லை. கிராமத்துக்குக் கிழக்கே ஊடுருவிச் செல்ல முடியாத மலைத்தொடரும் பின்னால் புராதன ரியோஹச்சா நகரமும் இருப்பதை அறிவான். தன் தாத்தாவான முதலாம் அவ்ரலியானோ புண்டியா சொன்ன கதைகள் மூலம் பிரபல ஆங்கிலேயக் கடற்கொள்ளைக்காரன் ஸர் ஃப்ரான்ஸிஸ் ட்ரேக் அங்கே பீரங்கிகளுடன் முதலைவேட்டைக்குச் சென்றதையும் முதலைகளுக்குள் வைக்கோலைத் திணித்து முதலாம் எலிஸபெத் ராணிக்குப் பரிசாக வழங்கியதையும் அறிந்து கொண்டான். இளமையாக இருந்த காலத்தில் நண்பர்களுடன், அவர்களுடைய குடும்பத்தினருடன், சமையல் உபகரணங்களுடன், சமுத்திரத்தைத் தேடி அதே மலைத் தொடரைத் தாண்ட முயற்சித்திருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. கிராமத்துக்குத் தெற்குத்திசையில் போனாலோ அங்கே தாவரச் சகதியுடனான சதுப்பு நிலங்கள், அவற்றுக்கு முடிவே இல்லை என்று நாடோடிகள் சொல்லக் கேட்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. மேற்குத் திசையிலும் பரந்து விரிந்த சதுப்பு நிலம் போய்க் கலந்த பெரிய ஏரியில் மெல்லிய தோலுடைய திமிங்கலக் கன்னிகள் தங்கள் அதீத மார்பகங்களைக் காண்பித்து ஏகப்பட்ட மாலுமிகளின் எதிர்காலங்களை அழித்துக் கொண்டிருந்தன. அதே திசையில் பயணம் செய்து ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவேறு கழுதைகள் தபால் கொண்டு வருகிற அந்தக் குறுகிய நிலப்பரப்பைக் காணமுடியும் என்று நாடோடிகள் சொல்லிக் கொண்டனர். 
வடதிசை நோக்கிப் பயணப்பட்டால் மட்டுமே மீண்டும் மனித நாகரீகத்தைச் சந்திக்க முடியும் என்று ஜோஸ் அர்காடியோ புண்டியா நம்பினான். ராட்சஸப் பறவையின் முட்டைகளாலான நதிப்படுகையின் வழியாகச் சென்று முன்பு ஒருநாள் கவச உடையைத் தோண்டி எடுத்த இடத்தையும் கடந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் நண்பர்களும் ஏற்கனவே மக்காந்தோவை நிறுவுவதற்கு முன்பாக இருபத்தியாறு மாதங்கள் அவ்வாறு அலைந்திருக்கிறார்கள். பிரயாணத்தின் முதல் வாரத்தின் கடைசியில் ஒரு மானைக் கொன்று வறுத்து அதில் பாதியைச் சாப்பிட்டு மீதிக்கு உப்புக் கண்டம் போட்டு வைத்துக் கொண்டார்கள். 
புனுகுவாசனை கூடிய மக்காவ் குரங்குகளின் நீலநிற இறைச்சியை உண்பதைத் தவிர்ப்பதற்காகவே அப்படிச் செய்தார்கள். பிரயாணத்தின் அடுத்த பத்து நாட்களுக்கு அவர்களால் சூரியனையே பார்க்கமுடியாமல் போய் எரிமலைச்சாம்பலான பூமியில் கால் வைத்த போது ஈரமாகவும் மிருதுவாகவும் தெரிந்தது. கடந்துசென்ற தாவரங்கள் இன்னும் அடர்த்தியாக மாறியது மட்டுமின்றி பறவைகளின் அலறலும் குரங்குகளின் கூச்சலும் கொஞ்சமாக நின்றுபோய் பூவுலகத்தையே சோகம் மூழ்கடித்தது. கொதிக்கும் எண்ணெயில் பூட்ஸ்கள் இறங்கும்போதும் ரத்தச் சிகப்பு லில்லிப்பூக்களையும் தங்கவண்ண நெருப்புமலர்களையும் வெட்டுக் கத்திகள் வீழ்த்தும்போதும் மிகப் புராதனமான நினைவுகள் தாக்கின. ஆதியிலேயே மனிதகுலம் பாழ்பட்டுப் போவதற்கு முன்பு புரிந்து விட்ட குற்றம் வரையிலுமாக நினைவுகள் தூக்கிச் சென்றன. மின்மினிப் பூச்சிகளின் மெல்லிய வெளிச்சத்தில் அந்த உறக்க நடையாளர்கள் ஒருவாரத்துக்கு மேலாக நடந்து சென்ற போது ரத்த வாசனையால் பீடிக்கப்பட்டு மூச்சுத் திணறிப் போனார்கள். அப்போதுதான் தங்களால் வேரறுக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட தாவர வகைகள் கண்முன்னரே உடனுக்குடன் வளர்ந்து வழியை மூடிவிட்டதால் அவர்களால் அந்தப் பிரயாணத்திலிருந்து மீண்டு வரவே முடியாமல் போய்விட்டது. "அதனால் பரவாயில்லை. நமது அடையாளங்களும் நீங்கிப் போகாமலிருந்தால் சரிதான்" என்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. திசைமானியின் துணையுடன் தோழர்களைப் புலனாகாத வடக்குத்திசையை நோக்கிச் செலுத்திச் சென்றான். இந்த மயக்கப் பிராந்தியத்திலிருந்து வெளியேறி எதார்த்தத்தைத் தரிசிக்க அது தான் வழி என்று ஒருவேளை எண்ணினான் போலும். நட்சத்திரங்களற்ற அடர்த்தியான ஓரிரவை இருட்டானது துல்லியமான புதிய காற்றால் நிரப்பிக் கொண்டிருந்த வேளையில் அயர்ச்சியடைந்த அவர்கள் இரண்டுவாரப் பிரயாணத்துக்குப் பின்பு முதன்முறையாகத் தூங்கத் துவங்கினார்கள். 
வெளிச்சம் தாக்கி எழுந்த அத்தனை பேர்களும் அப்படியே பேச்சடைத்துப் போய் நின்றார்கள். பனைமரங்களாலும் குரோட்டன்ஸ் செடிகளாலும் சூழப்பட்ட பெரும் ஸ்பானியப் போர்க்கப்பல் காலைச் சூரியனின் மௌனத்திலும் வெண்பனிப்படலத்திலும் பட்டுப்பிரகாசித்துக் கொண்டிருந்தது முன்பு. கந்தல்பாய்கள் நிஜ மரங்களிலிருந்துதொங்கிக்கொண்டிருக்க, பிணைக்கயிறுகளைச் சுற்றிப் பழச்செடிகள் வளைத்துக் கொண்டிருக்க, அலட்சியமாய் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தது போர்க்கப்பல். அடிப்பாகமோ கடல் ஜீவராசிகள் செத்தழுகிக் காய்ந்துபோன கசடாலும் பாசியாலும் கற்களாலான தரையுடன் மிக அழுத்தமாகப் பதிந்துபோயிருந்தது. காலத்தின் வேட்கையிலிருந்தும் பறவைகளின் அலைபாய்ச்சலிலிருந்தும் வெளியேறி சரித்திரத்திலிருந்து விலகிய தனிமைகொண்டு தனக்கேயான பிரத்தியேகமான வெளியில் வசித்திருந்தது கப்பல், ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவின் நண்பர்கள் தேடிப் பார்த்தபோது அதனுள் பூச்செடிகளாலான காட்டைத்தவிர வேறெதுவுமில்லை. 
சமுத்திரமானது அருகே எங்கோதான் இருப்பதைப் போர்க்கப்பல் உணர்த்திய போதும் திடசித்தம் குலைந்துபோன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா தளர்ந்தவனானான். சமுத்திரத்தைத் தேடி ஏகப்பட்ட தோல்விகளுக்கிடையே பிரயாணம் மேற்கொண்ட போதும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதையும் எதையும் உருப்படியாகச் செய்யாமலேயே தாண்ட முடியாததாய்த் தன்முன்னே கிடந்த சமுத்திரப்பிராந்தியத்தை எப்படியோ அடைந்ததையும் தலைவிதி என்று நொந்து கொண்டான். 
மிகப்பல வருஷங்கள் கழிந்த பிறகு கர்னல் அவ்ரலியானோ புண்டியா அதே பிராந்தியத்தைக் கடந்த போது தபால் கொண்டுவரும் வழியாகிவிட்டிருந்தது. மேலும் பாப்பிச் செடிகள் சூழ்ந்திருந்த கப்பலின் எரிந்த வெளிச்சட்டகத்தை மட்டுமே அவரால் பார்த்துக்கொள்ள முடிந்தது. அப்போது கப்பலை நேரில் கண்ட பிறகாவது தம் அப்பா சொல்லிப்போன கதை வெறும் கற்பனை அல்ல என்று புரிந்து கொண்ட கர்னல் அவ்ரலியானோ புண்டியா கப்பல் எப்படிக் கரையைத் தாண்டி உள்ளே வந்து தரைதட்டிப் போயிருக்க முடியும் என்று அப்போதுதான் யோசித்துப்பார்த்தார். கப்பலைக் கண்டுபிடித்த போதோ இதுபற்றியெல்லாம் யோசிக்காமல் சமுத்திரத்தைத் தேடிப் போனான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இன்னும் நாலு நாள் பயணம் செய்து சமுத்திரத்தை நிஜமாகவே அடைந்தபோது இதுவரை கடந்துவந்த அபாயங்களுக்கும் சாதித்திருந்த சாகசப் பயணத்துக்கும் சற்றும் தகுதியில்லாததான சாம்பல் பூத்த அழுக்கு நுரையைக் கண்டவனுக்கு சப்பென்றாகி கனவுகள் கணத்தில் முடிந்தே போய்விட்டன. 
"அடக்கடவுளே எல்லாப்பக்கங்களும் நீரால் சூழப்பட்ட கிராமம்தான் மக்காந்தோ" என்று கத்தினான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
சாகசப்பயணத்துக்குப் பிறகாக வரைந்த அரைகுறைக் கிறுக்கலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இன்னொரு வரைபடம் மக்காந்தோவை தீபகற்பமாகக் காட்டியது. தீபகற்ப மக்காந்தோவை நம்பிப் பலகாலம் செயல்பட்டு வந்தபோதும் அந்தப் படத்தின் மூலத்தை வரையும்போது வெறியுடனும் கோபத்துடனும் தானிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, மக்காந்தோவை ஏன் தான் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்தோமோ என்ற ஆங்காரத்துடன் இயங்கியவாறே தனக்குத்தானே வழங்கிக்கொண்ட தண்டனையாக படத்தை வரைந்திருந்தான். தொடர்புசாதன வசதிகள் இல்லாத நிலைமையை மிகைப் படுத்திச் சித்தரித்திருந்த அவன் "இங்கேயே மாட்டிக்கொண்டு விட்டோமே, விஞ்ஞானத்தின் பயன்களை அனுபவிக்க முடியாமல் இங்கேயே கிடந்து அழுகிச் சாகிறோமே" என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்தான். தன்னுடைய பரிசோதனைச் சாலையில் பல மாதங்கள் கிடந்து உழன்ற பிறகு இது பற்றி ஏற்பட்ட நிச்சய பூர்வமான எண்ணத்தின் அடிப்படையில் கடைசியில் மக்காந்தோ கிராமத்தையே வேறொரு இடத்துக்கு நகர்த்தி விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டான் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா, அவனுடைய இத்தகைய ஜுரவேகத்திட்டங்களை ஏற்கனவே யூகித்து விடும் பழக்கங் கொண்ட உர்ஸலாவோ கிராமத்தை வேறிடத்துக்குக் கடத்திக்கொண்டு போய்விட கணவன் போட்டிருந்த திட்டத்தை, மக்காந்தோவின் அத்தனை கணவன்மார்களும் உடந்தையாக இருந்த ரகசியத்தை, அவர்களுடைய கட்டுமீறிச்செல்கிற அதீதமான முனைப்பை கிராமத்து மனைவிமார்களுக்குத் தெரிவிப்பதில் எறும்பின் சுறுசுறுப்புடன் செயல்பட்டாள். வெறும் சாக்குப்போக்குகள், ஏமாற்றங்கள் மற்றும் தவிர்ப்புகளில் சிக்கித் தவித்து தன் திட்டமானது ஏன சரழிந்து மாயக்கனவாகச் சிதைந்து போனது என்று ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு மட்டும் விளங்கவே இல்லை. அப்பாவியாக உர்ஸலா கவனித்துக் கொண்டிருந்தபோது அவனோ பரிசோதனைச்சாலையின் உபகரணங்களைப் பெட்டியில் அடுக்கிப் பூட்டிக்கொண்டும் அடுத்துக் குடிபெயர இருக்கும் இடத்தின் பெயரை ரகசியமாக முணுமுணுத்துக் கொண்டும் இருந்தான். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட உர்ஸலா பெட்டிகளை அவன் ஆணியறைந்து மூடவும் அவற்றின்மேல் இங்க்கால் தன் பெயரை எழுதவும் காத்திருந்தாள். கிராமத்து ஆண்கள் யாரும் அவனுடைய திட்டத்துக்கு உடன்படப்போவதில்லை என்பதையும் அவன் அறிந்தாயிற்று என்பதை அந்த முணுமுணுப்பிலிருந்து தெரிந்துகொண்ட அவள், அவன் அந்த அறையின் கதவையே பெயர்த்தெடுக்க முற்பட்டபோது கேட்டாள், 
"ஏன், என்ன பண்ணப் போகிறாய்."
"யாரும் கிளம்பாவிட்டாலும் நாம் மாத்திரம் போக வேண்டியது தான்." 
"எங்கும் போகவேண்டியதில்லை. மகன் பிறந்திருக்கிறபடியால் இங்கேயே தங்கி விடுவோம்" என்றாள் ஆணித்தரமாக. 
"இதுவரை இங்கே மரணம் ஏதும் நிகழவில்லையே. யாராவது செத்துப்போய் புதைக்கப் படும்போதுதான் வாழ்பவர்களுக்கு இடம் சொந்த பூமியாக முடியும்" என்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
"நீங்கள் எல்லோரும் இங்கேயே தங்கிவிடவேண்டும் என்பதற்காக நான் சாகவும் தயார்" என்றாள் உர்ஸலா உறுதியாக. 
இவ்வளவு திடசித்தத்துடன் மனைவியானவள் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. மாயாஜால வித்தைகளால் அவளை மயக்கி அங்கிருந்து கிளப்பி விடமுயற்சித்தான். கூட்டிச் செல்லப்போகிற உலகத்தில் ஏதோ மந்திரத்தைலத்தைப் பூமியில் கெளித்தாலே விரும்புகிற பழமான து மரத்தில் காய்த்துத் தொங்கும் என்றும் அங்கே  வலிநிவாரண உபகரணங்கள் மிக சல்லிசாகக் கிடைக்கும் என்றும் ஆசைகாட்டினான். அவனுடைய புனைசுருட்டுக்களை லட்சியம் செய்தாளில்லை உர்ஸலா. 
"உன் பைத்தியக்காரக் கனவுகளைக் கலைத்துவிட்டு குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டாக வேண்டும். கழுதைகளைப் போல அவர்கள் திரிந்துகொண்டிருப்பதை நீ பார்க்கவில்லையா," 
சொன்ன வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு வெளியில் பார்த்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. வெறுங்காலுடன் தோட்டத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள். உர்ஸலாவுடன் பேசிய நிமிடத்தில் அவனுக்குள்ளே நிச்சய மர்மமாக ஏதோ தோன்றி நிகழ் காலத்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் இதுவரை அலசியிராத நினைவுப்பிராந்தியங்களுள் தள்ளிவிட்டது. அந்த மர்மத்தின்படி வாழ்க்கையின் எஞ்சிய பகுதி பூராவும் கைவிடப்பட இருந்த வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் உர்ஸலா. வேறுவழியில்லாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டே கண்களில் பனித்த நீரைப் புறங்கையால் துடைத்து ஒதுக்கி அவளைப் பார்த்துக் - கொண்டே நின்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
"சரி, பெட்டியிலிருந்து பொருட்களை எடுக்க அவர்களைக் கூப்பிடு" என்றான். 
மூத்தவனான ஜோஸ் அர்க்காடியோவுக்கு பதினான்கு வயது. சதுரவட்டைத் தலையும் அடர்ந்த முடியும் அப்பாவின் முக்கிய குணாதிசயங்களையும் கொண்டிருந்தான். நன்கு வளர்ந்து பலசாலியாகத் தெரிந்த அவனுக்குக் கற்பனாசக்தி குறைவு என்பது உடனே தெரிந்து விட்டது. மலைத்தொடரை எல்லோருமாகக் கடந்த காலத்தில் உர்ஸலா கருத்தரித்து பெற்றிருந்தபடியால் மிருக குணாதிசயங்கள் ஏதுமின்றி அவன் இருந்தததற்காகவே கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள் உர்ஸலாவும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும். மக்காந்தோ கிராமம் நிறுவப்பட்ட பிறகு பிறந்த முதல் குழந்தையான அவ்ரலியானோவுக்கு வரும் மார்ச் மாதத்துடன் ஆறு வயது நிரம்பிவிடும் என்றாலும் இன்னும் பேசாமடந்தையாகவே இருந்தான். உர்ஸலாவின் கர்ப்பத்தில் அழுது கொண்டே இருந்தவன் பிறக்கும் போது அழுகையை நிறுத்திவிட்டுக் கண்களை அகலத் திறந்து பார்த்தான். 
உர்ஸலாவுடன் அவனைப் பிணைத்திருந்த தொப்பூழ்க்கொடி அறுக்கப்பட்ட போதும் அழாமல் தலையை மெதுவாக இருபக்கமும் திருப்பி பிறப்பறையிலுள்ள அத்தனை மனித முகங்களையும் பொருட்களையும் ஆர்வத்துடன் கவனித்தான் அவ்ரலியானோ. பார்க்க வந்திருப்பவர்கள் அத்தனை பேரையும் அலட்சியம் செய்துவிட்டு பெரும் மழையால் கிழிபட்டுப் போய்விடவிருந்த பனங்கூரையின் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று வயதாகிய போது கொதிக்கும் சூப்பை அடுப்பிலிருந்து எடுத்து மேஜையின் மேல் உர்ஸலா வைத்தபோது சமையலறைக்குள் அவன் நுழைந்த நாளில்தான். அந்தப்பார்வையின் தீட்சண்யத்தை முழுமையாக உணர்ந்தாள் உர்ஸலா, "சூப் கீழே விழுந்து கொட்டப் போகிறது" என்பதாக குழந்தை கதவருகே நின்றவாறே சொல்லி, 
முடித்தவுடன் மேஜையின் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்த பாத்திரமானது செலுத2ம் பட்ட பொருளாக மேஜையின் விளிம்பை நோக்கி நகர்ந்து தரையில் விழுந்து உடைந்து சிதறிப் போனது. ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவிடம் சம்பவத்தைப் பற்றி அவள் பிரஸ்தாபித்தபோது சாதாரண நிகழ்ச்சியாக உதாசீனம் செய்துவிட்டான். குழந்தைப் பிராயத்தை மனமுதிர்ச்சிக்கு முற்பட்ட காலமாகவே எண்ணியதாலும் தானும் ஏதோ மாயக்கற்பனையில் உழன்று இருந்ததாலும் எப்போதும்போல மகனுடைய செயல்களுக்கு அந்நியமாகவே இருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ' 
இருந்தாலும் பரிசோதனைச்சாலையின் பொருட்களைப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைக்க குழந்தைகளை உதவிக்கு அழைத்த மத்தியானப் பொழுதுக்குப் பிறகு அவர்களுக்காக தன் விசேஷ நேரங்களையெல்லாம் செலவிட ஆரம்பித்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இனந்தெரியாத வரைபடங்களாலும் விநோதமான ஓவியங்களாலும் நிரப்பப்பெற்ற சுவர்களாலான சிறியதோர் அறையில் தனியாக உட்கார்ந்து குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவும் மனக்கணக்குப் போடவும் சொல்லிக் கொடுத்தான். இதுவரை படித்திருந்த பூவுலகத்தின். அதிசயங்கள் மட்டுமன்றி கற்பனா சக்தியின் எல்லையைத் தீவிரப்படுத்தியும் பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசலானான். சுற்றி உட்கார்ந்துகொண்டு சிந்திப்பதை மட்டுமே பொழுதுபோக்காகக் கொள்ளும் அளவுக்கான மூளைக்கூர்மையுடனும் மனச்சாந்தியுடனும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடிப்பகுதி மக்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் சலோனிகா துறைமுகத்திலிருந்து ஒவ்வொரு தீவாகத் தாண்டிக் குதித்துக்கொண்டே போய் ஈஜியன் கடலைக் கடந்துவிட முடியும் என்றும் குழந்தைகள் அவன் பேச்சைக் கேட்டுத்தான் நம்பினார்கள். 
மாயாவிநோதங்களில் மூழ்கிப்போன நாட்களின் வகுப்புகள் குழந்தைகளின் மனதில் எந்த அளவுக்குப் பதிந்துபோயிருந்தன என்பதை மிகப்பல வருஷங்கள் கழித்து ராணுவ அதிகாரி ஒருவர் "சுடு" என்ற ஆணை பிறப்பித்து விடுவதற்கு ஒரே விநாடிக்கு முன்பான அந்தத் தருணத்தில் துப்பாக்கிகளை எதிர்நோக்கி நிற்கிற கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு பௌதீக வகுப்பை நிறுத்திவிட்டு அப்பா ஏதோ விஷயத்தில் அப்படியே லயித்துப்போய் நின்றுவிட்ட மத்தியானப் பொழுதின் காட்சி நினைவுக்கு வந்ததிலிருந்து முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். கிராமத்துக்கு மீண்டும் வருகை தந்து கொண்டிருக்கிற நாடோடிக்காரர்களின் நாத, தாள வாத்திய முழக்கங்களையும் மெம்ஃபிஸ் ஞானிகளுக்கு மட்டுமே சொந்தமான தங்களின் அதிநவீனக் கண்டுபிடிப்பு குறித்து பிரகடனங்களையும் தூரத்திலேயே கைகளைக் காற்றில் நீட்டிக் கொண்டிருக்கும் கண்கள் முற்றிலும் அசைவுறாமல் கேட்டுக் கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, 
தங்கள் சொந்த பாஷையை மட்டுமே அறிந்துவைத்திருந்த இளைய பிராயத்தினராயிருந்த புதிய நாடோடிக் கூட்டத்தினர் எண்ணெய்ப்பசை மிக்க தோலும் திறமைமிக்க அங்க அவயவங்களையும் கொண்டிருந்தனர். அவர்களுடைய ஆடல்பாடல்கள் தெருக்களை நிறைத்து மகிழ்ச்சிப் பரபரப்பை விதைத்துவிட்டன. நீண்ட இத்தாலிய மெட்டுக்களைப் பாடி அத்தனை வண்ணங்களையும் தீட்டிவிடுகிற கிளிகளையும் தாம்பூரின் இசைக்கருவியின் நாதத்தைக் கேட்டு ஒரே சமயத்தில் நூறு பொன்முட்டைகளை இடுகிற கோழியையும் மனிதர்களுக்கு ஜோசியம் பார்த்துச் சொல்கிற விநோதக் குரங்கையும் ஒரே சமயத்தில் பித்தான்களையும் தைத்து ஜுரங்களையும் போக்குகிற பல்விதப் பயன்பாட்டு எந்திரத்தையும் நாடிவேகத்தைக் குறைத்துவிடுகிற மருந்துலேகியங்களையும் இன்னும் இவைபோன்ற ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளையும் நாடோடிகள் கொண்டுவந்தனர். இவற்றையெல்லாம் மறக்காதிருக்க இன்னொரு நினைவு எந்திரத்தையே கண்டுபிடித்தாக வேண்டும் என்று யோசித்திருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ஒரே கணத்தில் கிராமத்தின் முகத்தையே மாற்றிவிட்டார்கள் நாடோடிகள். திருவிழாக் கூட்டத்தைக் கண்டதால் சொந்த கிராமத்தின் தெருக்களிலேயே காணாமல் போனார்கள் மக்காந்தோ வாசிகள். . 
அந்தப் பேரிரைச்சலிலும் குழப்பத்திலும் காணாமல் போகாதிருக்க கைக்கு ஒரு குழந்தையை இறுகப்பற்றிக் கொண்டும் தங்கப் பற்களைக் காட்டிச்சிரிக்கிற விநோதமான கழைக்கூத்தாடிகளுடன் மோதிக்கொண்டும் ஆறுகரங்களைக் கொண்டு பந்தாடுகிற ஜீவிகளுடன் முட்டிக்கொண்டும் தன் பயங்கரக்கனவின் அனந்த கோடி ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் பைத்தியக் காரனைப் போல் மெல்க்யுடஸைத்தேடி அலைந்துகொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. தன் பாஷையை அறிந்திராத நாடோடிகளிடம் மெல்க்யுடஸ் பற்றி விசாரித்தான். கடைசியில் வழக்கமாக மெல்க்யுடஸ் கூடாரம் அடித்துத் தங்குகிற இடத்தை அடைந்தபோது அங்கே மெளனமான ஆர்மீனியன் ஒருத்தன் உருவமிழந்து போகச்செய்கிற கஷாயத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தான். கூட்டத்தினரிடையே முண்டியடித்துக் கொண்டு ஜோஸ் அர்க்காடியோ புண்டியா நெருங்க ஆரஞ்சு நிறத்திலான கஷாயத்தை ஒரே மடக்கில் குடிக்கத்துவங்கினான் ஆர்மீனியன். தன் ஒரே கேள்வியை ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கேட்டவுடன் ஆர்மீனியன் சகதியும் புகையும் கலந்த தாதுக்குட்டையாக மாறிப்போவதற்கு முன்பு அவனைத் தன் பயங்கலந்த பார்வையில் சுருட்டிவிட்டுச் சொல்லிய பதில் இன்னும் அந்தக் கறுப்புக் குட்டைக்கு மேல் எதிரொலித்து மிதந்து கொண்டிருக்கிறது. * "மெல்க்யுடஸ் இறந்து போனான்." 
- இதர விநோதப் பொருட்களால் கவரப்பட்டுக் கூட்டத்தினர் கலையும் வரையிலும் அர்மீனிய நாடோடி தாதுக்குட்டையாக ஆவியாகிப் போகும் வரையிலும் அசையாமல் அதே இடத்திலிருந்துகொண்டு தன்னைத் தாக்கிய விஷயத்திலிருந்து மௌனமாக மீள முயன்று கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, சிங்கப்பூர் கடற்கரையில் தாக்கிய விநோத ஜுரத்திலிருந்து மெல்க்யுடஸ் மீள முடியாமல் போனதைப் பற்றியும் ஜாவாக்கடலின் அடியாழத்தில் உடல் சுறாமீன்களுக்காக வீசப்பட்டது பற்றியும் நாடோடிகளிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியர். காக்கைகளுக்கோ இந்த விஷயங்களில் ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை. மெம்ஃபிஸ் ஞானிகளின் அதீதமான புதிய கண்டுபிடிப்பைக் காண தங்களை ஸாலமன் ராஜாவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிற கூடாரத்துக்கு அழைத்துப்போகுமாறு அப்பாவை நச்சரித்துக் கொண்டிருந்தனர். முப்பது ரியால்கள் - கட்டி கூடாரத்தின் மையத்துக்குத் 
தங்களைக் கூட்டிப்போகுமாறு வற்புறுத்தினார்கள் குழந்தைகள். அங்கே உடல் பூராவும் மயிர்க்கற்றை நிரம்பிய ஒருவன் தலை மொட்டை யடித்துக்கொண்டு பிரம்மாண்டமாக உட்கார்ந்திருந்தான். செப்பு வளையம் ஒன்றை மூக்கில் அணிந்து கொண்டும் இரும்புச் சங்கிலியால் கணுக்கால் கட்டப்பட்டும் கடற்கொள்ளையில் சிக்கிய அலமாரியைக் கண்காணித்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தான் அந்தச் செக்குலக்கை. அவன் திறந்தவுடன் அலமாரியிலிருந்து கிளம்பியது பனிப்புகை, ஊடுருவிப்பார்க்கத் தக்கதாக அதற்குள் இருந்த பெரும் கட்டிக்குள் காணப்பட்ட அனந்த கோடி ஊசிகளுக்குள் பட்டு அஸ்தமனச்சூரியன் வண்ண நட்சத்திரங்களாகப் பிளவுண்டான். அதிர்ந்துபோய்விட்ட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா விளக்கத்துக்காகக் காத்திருந்த குழந்தைகளிடம் கூறினான். 
"உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல் இதுதான்." 
கிடையாது. இதுதான் ஐஸ்கட்டி" என்றான் செக்குலக்கை நாடோடி. 
அந்தப் பனிக்கேக்கை நோக்கி ஏன் என்று விளங்காமலேயே கையை நீட்டினான் ஜோஸ் அர்ககாடியோ புண்டியா. ஆனால் அந்த நாடோடி கையை விலக்கிவிட்டுக் கூறினான். 
"அதைத் தொடுவதானால் இன்னும் ஐந்து ரியால்கள்." 
கொடுத்துவிட்டுக் கையை ஐஸ்கட்டிமேல் வைத்துப் பார்த்தவனுக்கு சில நிமிஷங்களில் அந்த மாயத்துடன் ஏற்பட்ட தொடர்பில் இருதயமே பயத்தாலும் சந்தோஷத்தாலும் நிரம்பியது தெரிந்தது. இன்னும் பத்து ரியால்கள் கொடுத்து அந்த சந்தோஷப்பெருக்கைத் குழந்தைகளும் அனுபவிக்க வகைசெய் தான். ஆனால் ஐஸைத்தொட மறுத்துவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ. இளைய மகன் அவ்ரலியானோவோ ஓரடி முன்னால் வந்து தொட்டு விட்டுக் கையை இழுத்துக் கொண்டே கூறினான். 
"கொதிக்கிறது." 
அதிர்ச்சி அடைந்திருந்த அவ்ரலியானோவைக் கவனித்துக் கொண்டிருந்தான் ஜோஸ் சர்க்கார்டியோ புண்டியா. கடற்பூச்சிகளுக்கு இரையாகிப்போன மெல்க்யுடஸின் உடலையும் தன்னுடைய பைத்தியக்கார சாகசங்களையும் கணம் மறந்து போய் அந்த ரகசிய அற்புதத்தின் நிரூபணத்தைக் கண்டு அப்படியே மயங்கிக்கிடந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இன்னும் ஐந்து ரியால்கள் தந்துவிட்டு மாயக்கட்டியின் மேல் கை வைத்துக் கொண்டு புனிதப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் சாஸ்திரங்களுக்கான நடைமுறை நிரூபணங்களைக் கண்டறிந்தவனாக கூக்குரலிட்டுச் சொன்னான். 
"இதுதான் நம் காலத்தின் மிகப்பெரும் கண்டுபிடிப்பு." 
தமிழில் - நாகார்ஜுனன் 


No comments:

Post a Comment