தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, November 13, 2016

நாய்கள் - நகுலன் : ரோஸ் ஆன்றா facebook




ரோஸ் ஆன்றா
Yesterday at 07:17 ·

நாய்கள் - 1
***********

பேப்பர் வெண்மை; மை கருப்பு; இலை மூலம் கட்டவிழ்த்து விடப்படும் நிழல்கள்; இவ்வளவுதான் நண்பா, ஒரு நாவல். ஒரு சிறுகதை, ஒரு கவிதை இவற்றில் எதுவுமே ஒரு கடை முதலாளி எழுதும் வரவு - செலவுப் பேரேடோ, நாம் ஒருவருக்கு ஒருவர் எழுதும் கடிதங்களோ, ரிஜிஸ்டர் கச்சேரி (என்ன கச்சேரியோ)யில் பதிக்கும் தாஸ்தவேஜுகளோ இல்லை! நண்பா, உயிருள்ள மனிதர்கள், அவர்கள் தங்களை எவ்வளவு சுதந்திர சிந்தனைத் துடிப்புமிக்க புத்திஜீவிகள் என்று நினைத்துப் பாவித்துச் செயல் புரிந்தாலும், உனக்கும் எனக்கும் தெரியும்; அவர்கள் திரைக்குப் பின் நின்றுகொண்டு சூத்திரக்காரன்  சூத்திரக்கயிறை அசைப்பதற்கு ஏற்பத் துள்ளிக்குதிக்கும் பாவைகள் என்று! ஒவ்வொரு துறையிலும் இது இப்படித்தான். ஆனால், காகித வெண்மையில், மைக்கறுப்பில், கையெழுத வெள்ளைத்தாளில் விரைந்து செல்லும் இவ்வுருவங்கள் நம்மோடு வந்தாலும் நமக்குக் கட்டுப்பட்டவை அல்ல; அவை பாவைகளுமல்ல; நான் அவைகளை நம் தாளத்திற்கேற்பத் துள்ளும் பாவைகளைப் போல் சலிக்கச் செய்யும் சூத்திரதாரிகளுமில்லை. நண்பா, கலை ஒரு பொம்மலாட்டம் இல்லை!
_________
நகுலன்
No automatic alt text available.

ரோஸ் ஆன்றா
59 mins ·

நாய்கள் - 2
************

"இல்லை மாத்திரம் என்பது மாத்திரம் இல்லை. உன்னுடைய அபிப்பிராயத்திற்கு நீ முக்கியத்துவம் கொடுக்கிறாய் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நீ சொல்வதைப் பார்த்தால் (எனக்கு உன்னைத் தெரியுமாதலால் நான் உன்னை நம்புவதில் எனக்கு ஆச்சரியமில்லை) அவன் ஏன் உன் அபிப்பிராயத்திற்கு இவ்வளவு மதிப்பு வைக்க வேண்டும் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. யார்தான் நல்ல புத்தகங்களையே விடாமல் எழுதியிருக்கிறார்கள்? உன்னுடைய'அசல் - இலக்கிய - புத்தகம்' விற்கவில்லை; உன் அபிப்பிராயத்தின்படி அவனுடைய அரை இலக்கியப் புத்தகம் (அப்படி ஒன்று உண்டு என்றால்) விற்றது. இது உனக்கு உன் அபிப்பிராயத்தை வளப்படுத்தியது என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவன் ஏன் அதை அப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஏன் என்றால் ஒரு புத்தகம் விற்பனை போவது என்பது அதன் தரத்தையோ தரமின்மையையோ மாத்திரம் சார்ந்தது அன்று; சில தரமற்றன விலை போகின்றன; சில தரமான புத்தகங்கள் விலை போவதில்லை. சில தரமில்லாதவை விலைபோவதில்லை. நண்பா, சிந்தனை என்பது ஒரு வியாதி."


"நீ என்னதான் கூறுகிறாய்?"

"நான் புரிந்துகொண்ட வரையில் நீ அவனைப் பார்ப்பது மாதிரி உன்னைப் பார்த்தாய்; அவன் உன்னைப் பார்ப்பது மாதிரி தன்னைப் பார்த்தான். யாருக்கு யார் மீது கசப்பு என்று எனக்குத் தெரியவில்லை."

________
நகுலன்