காலச்சுவடு ஆண்டுமலர் 1991
www.padippakam.com
தேரோடும் வீதி - அல்லது
சிவ கதிரேசனின் மன உலகம்
எம்.எ.நுஃமான்
தேரோடும் வீதி நீல பத்மநாபனின் மகத்தான நாவல் என்ற விளம்பரக் குறிப்புடன் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. இரண்டும் சேர்ந்து சுமார் 1200 பக்கங்கள். இவ்வளவு பக்கங்களையும் பொறுமையோடு படித்து முடித்த பிறகு இதை ஒரு நாவல் என்று சொல்வதற்கு என்ன முகாந்தி ரம் என்று தெரியவில்லை. ஒரு வேளை இந்தப் புத்தகத்தில் பேசப்படும் மனிதர்களின் பெயர்கள் கற்பனைப் பெயர்களாக இருப்பது ஒரு காரண மாக இருக்கக் கூடும். மற்ற படி நீல பத்மநாபனின் (சிவ கதிரேசன்) எழுத்துலக வாழ்க்கையின் ஒரு விபரணமே இந்நூல். அவருடைய இலக்கிய சாத னைகள், எழுத்துலக அபிலாசைகள், சக எழுத் தாளர்களுடன் அவருக்குள்ள உறவு, அவர்களைப் பற்றிய அவரது கணிப்பு ஆகியவை
பற்றிய விபரணம். இன்றைய தமிழக இலக்கிய உலகோடு பரிச்சயம் உடைய ஒரு சராசரி வாசகனுக்கும் இது புரியும். கற் பனைப் பெயர்கள் யார் யாரைக் குறித்து நிற்கின்றன என்பதையும் அவன் இலகுவா கக் கண்டு கொள்வான். ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், ஒரு இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள் என ஜெய காந்தன் எழுதிய மாதிரி எனது எழுத்துலக அனு பவங்கள் என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தை நீல பத்மநாபன் எழுதியிருந்தால் - கற்பனை பெயர்களுக்குப் பதிலாக உண்மைப் பெயர்க ளைக் கொடுத்திருந்தால் இது ஒரு மகத்தான நாவல் ஆகியிருக்காது. ஒரு சுய சரிதை, ஒரு கட்டுரை நூல் அவ்வளவுதான். அப்படியானால் ஒரு மகத்தான நாவலையும் ஒரு சுயசரிதை நூலையும் வேறுபடுத்துவது எது? கற்பனைப் பெயர்கள் தாமா? நீல பத்மநாபனைப்பொறுத்த வரை அப்படி என்றுதான் தெரிகின்றது.
இந்தப் புத்தகம் அது அமைந்துள்ள வகை யில் சிவ கதிரேசன் என்ற ஓர் எழுத்தாளனுடைய எழுத்துலக
வாழ்க்கை பற்றியது. இவன் தனது பன்னிரண்டா வது வயதில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது எழுதத் தொடங்கிவிட்டான். ஒர் ஐம்பது ஆண்டு காலம் வாழ்ந்து இலக்கியத்துக்கா கவே தன் உடல், உள பலம் அனைத்தையும் உருக்கி பல நாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் வெளியிட் டான். பிற மொழிகளில் இவனுடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட் டன. தன் இலக்கிய சாதனைக்காக 'பெறுதற்கரிய' பரிசொன்றினையும் அதுவும் முதலமைச்சரின் கையினாலேயே பெறும் பேறு பெற்றான். பல்க லைக் கழகத்தில் டாக்டர் பட்ட ஆய்வுகளுக்கும் இவனது படைப்புகள் எடுத்துக் கொள்ளப்பட் டன. மலையாள எழுத்தாளர்களும் இவனைச் சரியாக இனங்கண்டு மதித்தனர். ஆயினும் தான் பிறந்த தமிழகத்தில் உச்சி மேல் வைத்துக் கொண் டாடப்படாமல் சக எழுத்தாளர்களின் பொறா மைக்கும் பதிப்பகங்களின் உதாசீனத்துக்கும் குடும்பத்தினரின் உபத்திரவங்களுக்கும் ஆளாகி மனம் நொந்து, கடைசியில் ஒரு இதய நோயாளி யாகி இறந்து போகின்றான்.
'சாதனையும் சோதனையும்' மிகுந்த சிவ கதி ரேசனின் இலக்கிய வாழ்வு பற்றிய இந்த விருத் தாந்தத்தை எழுதியவன் ராதாகிருஷ்ணன் என்ற ஒரு எழுத்தாளன். அவன் பரதன் என்ற நண்பன் ஒருவனிடம் இந்த கையெழுத்துப் பிரதியைக் கொடுத்துவிட்டு செத்துப் போகிறான். பரதன் இத னைப் படித்து முடித்துவிட்டு கதிரேசனின் சுமை அனைத்தையும் தன் நெஞ்சில் ஏற்றிக் கொண்டு இதை எவ்வாறு அச்சுவாகனம் ஏற்றப்போகி றோம் எனத் திகைத்துப் போய் இருக்கிறான். நர் மதா பதிப்பகம் அதை இப்போது இரண்டு பாகங் களாக அச்சுவாகனம் ஏற்றி இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் முதல் ஆறுபக்கமும் கடைசி முக்கால் பக்கமும் இதை ஒரு கற்பனைக் கதை என்று காட்ட முயலும் உத்தி, அவற்றை நீக்கி விடலாம். விட் டால் மிகுதி சிவ கதிரேசனின் சுயசரிதை.
இதோ சிவ கதிரேசன் என்ற ஒரு தமிழ் எழுத் தாளனின் சுமார் 38 ஆண்டு கால (5012=38) இலக்கிய வாழ்வு பற்றிய அவனது சொந்த அனுப வத் தரவுகள் நம் முன்னே உள்ளன. இவை அவ னது ஒப்புதல் வாக்குமூலம். இவற்றின் அடிப்ப டையில் இவ்வெழுத்தாளன் எத்தகையவன்? இவனது ஆசை அபிலாசைகள் என்ன? இவனது எழுத்துலக இலட்சியம் எத்தகையது? அவனு டைய வாழ்க்கைத் தரிசனம் (அவ்வாறு ஏதும் இருந்தால்) என்ன? தன் சக எழுத்தாளர்களை இவன் எவ்வாறு மதிப்பிடுகிறான்? இவை எல்லா வெளிப்படும் இவனுடைய வற்றினூடும் ஆளுமை இவனுடைய மன அமைப்பு - எத்த கையது என்பதை நாம் மதிப்பிட முடியும். இத்த கைய ஒரு மதிப்பீடு இந்த நூலாசிரியரின் இலக் கிய ஆளுமையைப் புரிந்து கொள்ளவும் நமக்கு உதவக்கூடும். இங்கு சுருக்கமாகச் சில அம்சங் களை மட்டும் நாம் பார்க்கலாம்.
2
சிவ கதிரேசன் ஏன் எழுதுகிறான்? அவன் எழுத்தின் நோக்கம், அவனது படைப்புகளின் பின்னணி, அவனது வாழ்க்கைத் தரிசனம், இவை பற்றிய குறிப்புகள் எதையும் அவன் நமக்கு தர வில்லை. அவனைப் பொறுத்தவரை எழுத்து அவனுக்கு யக்ஞம் அல்லது வேள்வி (தவம்) போன்றது (I பக். 312) அவ்வளவுதான். "உல கில் இதுநாள்வரை யாரும் செய்திராத எதை எதை எல்லாமோ வேறு யாரும் செய்யாத ரீதியில் எழுத்தில் செய்து முடித்துவிட வேண்டும்" என்ற படைப்புச் செயலுக்குப் புறம்பான பேராசை உடையவன் ( ! பக். 478). படைப்புக்காகத் தன்னை உருக்கி வேள்வி செய்வதை பிறர் பாராட்ட வேண்டும் என்பதே அவன் எதிர் பார்ப்பு ( 1 பக். 448). இவனைப் பொறுத்தவரை படைப்பு தன்னை நிலை நாட்டும், தனக்குப் புகழ் தேடித்தரும் ஒரு முயற்சி, சாதனம். அதனா லேயே தான் தன் படைப்புகளைப் பிரசுரிப்பதில் அச்சுருவாக்குவதில் தன் ஆரம்ப காலத்தில் மட்டு மன்றி இறுதி நாட்களிலும் இவன் மிகை உணர்ச்சி யுடன் நடந்து கொள்கின்றான்.
பாராட்டைக் கண்டு நெகிழ்வதும் விமர்சனத் தைக் கண்டு மறுகுவதுமான நொய்ந்த உள்ளம் கதிரேசனுக்கு. தன் படைப்பு பற்றிய பிறருடைய அபிப்பிராயத்தை அறிவதற்காக மாய்ந்து போகி றான். கை எழுத்துப் பிரதியை கற்பூர ஆராதனை செய்து விட்டே அபிப்பிராயத்திற்குக் கொடுக்கி றான். அபிப்பிராயம் தனக்கு சாதகமாக, புகழ்ச்சி யாக வரும்போது பூரித்துப் போகிறான்; அத்த கைய புகழுரை கூறுவோரை உயர்வாக மதிக்கி றான். அபிப்பிராயம் தனக்குச் சாதகமில்லாத போது நொந்து போகிறான், எரிச்சல் படுகிறான். அத்தகைய அபிப்பிராயம் கூறுவோர் தன்மீது கொண்ட காழ்ப்பினால், பொறாமையால்தான் அப்படிக் கூறுகிறார்கள் என்று புழுங்கிப் போகி றான். தன்னுடைய படைப்புகளைக் குறை கூறு வோரின் படைப்புகள் எவ்வகையிலும் உசத்தி யல்ல என்று சிறுபிள்ளைபோல் பதிலுக்குச் சாடு கின்றான். உதாரணமாக மா. கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளரைப் பற்றி (தி. ஜானகி ராமன்?) இவனுக்கு முன்பு நல்ல அபிப்பிராயம் ( 1 பக். 364). அதே எழுத்தாளர் இவனுடைய வாழையடி வாழை நாவல் பற்றிக் குறைவாக மதிப்பிட்ட போது பதிலுக்கு அவருடைய படைப்புகளையும் (மோகமுள்?) அதன் இலக்கியத் தரம் பற்றி கிஞ்சித்தும் யோசியாது இவன் பதிலுக்குத் தாக்கத் தொடங்கிவிடுகிறான் ( 1 பக். 448 - 450),
இவ்வாறு பாராட்டுக்கு ஏங்குவதும், புகழப்ப டும் போது நெகிழ்ந்து போவதும், விமர்சனத் தைக் கண்டு கலங்கிப் போவதும், அத்தகைய விமர்சனத்துக்குத் தனிப்பட்ட காரணங்களைக் கற்பிப்பதும், அவ்வாறு விமர்சிப்போரின் படைப் புகள் இலக்கிய ரீதியில் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும் அவற்றை மட்டம் தட்டுவதும் போன்ற நொய்ந்த மன அமைப்புடைய சிவ கதி ரேசன் அடிப்படையில் ஓர் ஆணவ முனைப்பு டையவனாக ( Egocentric) காணப்படுகின்றான். ஒரு படைப்பைக் குறை நிறையோடு மதிப்பீடு செய்வது பற்றி இவன் பல இடங்களில் பேசினா லும் தன்னுடைய படைப்பைப் பொறுத்தமட்டில் இவன் நிறைகளையே நாடுவது இதன் வெளிப்பா டுதான்.
ஒரு படைப்பாளி என்ற வகையில் இத்தகைய மன அமைப்பு உடைய சிவ கதிரேசன் சொந்த வாழ்க்கையிலும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளி லும் கூட ஒரு சராசரியான 'ஆசார சீல'னாகவே காணப்படுகிறான். வாழ்க்கை பற்றிய ஒரு அறி வார்ந்த விசாரணை இவனிடம் காணப்பட வில்லை. ஒரு
ஒரு சினிமாத் தயாரிப்பாளனைப் போல தன் படைப்பு தோல்வியடைந்து விடக் கூடாது என்று கடவுளிடம் இறைஞ்சுகின்றான்
இவன் ( ll பக்.5). பாபாவின் தரிசனம் இவனுக்கு ஆனந்த அனுபூதியைத் தருகின்றது. பால் உறவு சார்ந்த இவனது கண்ணோட்டம் முற்றிலும் போலித்தனமான ஆசாரசீலமானது. இயற்கையா கவே ஆசைகள் கிளர்ந்தாலும் அவற்றை அடக்கி 48 வயது வரை பெண்களிடம் 'கண்ணியமாக வே' நடந்து கொண்டதாக இவன் பெருமைப்பட் டுக் கொள்கின்றான் ( II பக். 519). ருஷ்யப் பெண் சொன்யாவுக்குப் பக்கத்தில் நின்று பாலியல் சிற்பத்தைப் பார்க்கக் கூசும் ஆரோக்கியமற்ற மனம் இவனுடையது ( I! பக். 548). திருமணத்துக்குப் பிந்திய 25 வருட வாழ்வில் 'செக்ஸ் சுகம்' ஒன் றைத்தான் 'ஒரே ஒரு ப்ளஸ் பாயிண்டாக' இவன் கருதுகிறான். அவ்வகையில் எப்போதும் வெறுப்போடு வாழ்ந்த மனைவியிடம் செக்ஸ் சுகம் மட் டும் எப்படியோ காணக் கூடிய ஒரு போலியான வக்கரித்துப் போன ஆசாரசீலன் இவன்.
3
தனது படைப்புகள் சத்தியத்தின் தேடல் என இவன் கருதுகிறான் ( II பக். 179). இவனைப் பொறுத்தவரை சத்தியத்தின் தேடல் என்பது தான் பார்த்த. கேட்ட. தன்னோடு சம்பந்தப்பட்ட மனிதர்களின் நடத்தைகளை தன் நோக்கு நிலையில் அம்பலப்படுத்துவதாகும். 'தன்னைப் பொறுத்த வரை தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, கற்பனை வளம் எல்லாம் இருப்பினும் கூடிய மட்டும் உண்மைக்கு முதல் இடம் கொடுத்தே இதுநாள் வரை எழுதிவருவதாகவும் இருந்தும் நெருங்கியவர் கள் எழுத்தை வாசித்துவிட்டு பகைவர் ஆகிறார்கள்' என்றும் இவன் நொந்து கொள்கின்றான். (II பக். 358). இவனது நண்பர்களும் உறவினர்க ளும் இவனுக்குப் பகைவர்களாவதற்குக் காரணம் அவர்களைப் பற்றி அவர்கள் கண்டு கொள்ளாதி ருக்க (பெயர்கள் உட்பட) சில மாற்றங்களுடன் இவன் எழுதுவது தான் ( II பக். 359). இது இவனு டைய படைப்புச் செயற்பாட்டில் உள்ள அடிப்ப டையான கோளாறு ஒன்றைக் காட்டுகின்றது.
இலக்கியத்தின் அடிப்படை, உண்மை வாழ்க்கை தான் என்றாலும் உண்மைச் சம்பவங்களையும் மனிதர்களையும் பெயர்களை மாற்றி எழுதுவது சிறந்த படைப்பாகிவிடாது. அது சத்தி யத்தின் தேடலோ, உண்மை நாட்டமோ ஆகாது இத்தகைய படைப்புகளுக்கு உள்ளார்ந்த கலை யாற்றல் தேவை இல்லை. ஒரு தரிசனம் தேவை இல்லை, இலக்கியம் குறிப்பிட்ட நபர்களையும் அவர்களின் நடத்தைகளையும் பற்றிய பதிவு அல்ல. அவற்றின் அடியாக அவற்றின் உள்ளே உறைந்துள்ள வாழ்வின் உண்மையை தரிச னத்தை வெளிக்கொண்டு வரும் ஒரு கலை முயற்சி அது. டால்ஸ்டாய் தன் புத்துயிர் நாவலை ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்தான் எழுதினார். தன் முன்னே விபச்சாரியாகக் குற்றம் சாட்டப்பட்டு நிற்பவள் ஒரு காலத்தில் தன்னால் காதலிக்கப்பட்டு கைவிடப்பட்டவள்தான் என்ற உண்மையைக் கண்டு கொள்ளும் பெரிய மனித னான ஒரு ஜூரியின் கடந்தகாலப் போக்கிரித் தனங்களை அம்பலப்படுத்துவது டால்ஸ்டாயின் நோக்கமாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்தி ருந்தால் அவர் உலகில் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றைப் படைத்திருக்க முடியாது. ஆனால் தான் கேள்விபட்ட அந்த உண்மைச் சம்பவத்தின் ஊடே வெகுதூரம் சென்று வாழ்வின் மனிதனின் புத்துயிர்ப்பை வெளிக் கொண்டு வந்தார். அதனாலேதான் அவர் ஒரு கலைமேதையாகக் கருதப்படுகிறார்.
-
சிவ கதிரேசன் ஒரு கலைமேதையல்ல. ஒரு சிறந்த கலைஞனாகவும் அவன் காணப்பட வில்லை. ஒரு உயர்ந்த மனிதனாகக் கூட அவன் தோற்றம் தரவில்லை. ஒரு வெறும் எழுத்தாளன் அவன். தன் போதாமைகளை, குறைபாடுகளை, கண்டு கொள்ளாத - வாழ்க்கை கலை இலக்கியம் பற்றி ஒரு ஆழ்ந்த தரிசனம் இல்லாத மேலோட் டமான சம்பவங்களை வைத்து, அதில் சம்பந்தப் பட்ட மனிதர்களைப் பற்றி கதைகள் எழுதுபவன். அதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஒன்று இரண்டு நல்ல படைப்புகளாக உருவாகக்கூடும். ஆனால் மொத்தமாக ஒரு பெருங்கலைஞனாக விகசிக்க முடியாத உள்ளார்ந்த குறைபாடுகள் உடையவன் அவன். அதைக் கண்டு கொள்ள முடியாமல் மேலோட்டமான சங்கதிகளிலேயே சஞ்சரித்து, சஞ்சலப்பட்டு, தவித்து இறந்துபோகிறான். அத னாலேயே அவனுடைய இறப்பு நம்மை அதிகம் பாதிப்பதில்லை; அவனது சோகம் நம் மீதும் கவி வதில்லை. இது சிவ கதிரேசனின் தோல்வி மட்டு மல்ல; தன்னையே அவனாகப் படைத்த நீல பத்ம நாபனின் தோல்வியுமாகும்.