தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, August 09, 2016

மகா மனிதாயம் - அம்பேத்கரிலிருந்து கிருஷ்ணமூர்த்தி வரை - பிரமிள்

Kaala Subramaniam shared வைர முத்து's post.
1 hr ·



வைர முத்து
7 August at 23:09 ·


'மகா மனிதாயம்' 1998 ல் பிரமிள் நினைவிதழில்(லயம்) வெளிவந்த இந்தக் கட்டுரையை நூறு பேர் படித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். பெரியார் அம்பேத்கர் காந்தி ஆகியோரின் கருத்து/நிலைப்பாடு குறித்த பிரமிளின் பார்வை மிகவும் முக்கியமானதாகத் தொன்றியது. இது சற்றே நீண்ட கட்டுரையாதலால் இரண்டு பகுதிகளாகப் பதிவிடுகிறேன்.


மகா மனிதாயம்

அம்பேத்கரிலிருந்து கிருஷ்ணமூர்த்தி வரை

- பிரமிள்

சமூக நீதிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நூல் வரிசையில் ஒன்றான 'சாதி ஒழிப்பு' பக்கங்கள்-51, 52, 53ல், ஒரு அபூர்வமான பார்வைத் தீர்க்கம் (Focus of Vision) வெளிப்பட்டுள்ளது. ஒரு சமூக கட்டுமானத்தின் மதம் மற்றும் சம்பிரதாயங்கள், இதற்கு எதிராக மனோதர்மம் சார்ந்த பகுத்தறிவின்பாற்பட்ட சீர்திருத்த வடிவான புறநிலைச் சட்டதிட்டங்கள் இரண்டனுள் எதற்கு வலிமை அதிகம் என்ற பிரச்சனை பற்றியது இது. இந்த பிரச்னையின் பின்னணி, இந்திய சுதந்திரப் போராட்ட காலமாகும். ஆண்டு 1936, மோஹன்தாஸ் கே.காந்தியின் 'காந்தீய' இயக்கமும் அதைச் சார்ந்த காங்கிரஸும் இந்திய விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட காலம் அது.

தமது நகராண்மைக் கழகத் தலைமையையும் தமது சொத்துக்களையும் துறந்து இந்தக் காங்கிரஸை முழுமூச்சுடன் தென்னகத்தில் கட்டி எழுப்பிய ஈரோட்டின் ராமசாமி ஏற்கனவே காங்கிரஸைத் துறந்து தீவிர சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த சமயமும் அதுதான். புலமைமிக்க அம்பேத்கரும் பள்ளிக்கூடத்தைவிட்டு இளமையிலேயே வெளியேறிய ஈ.வே.ரா. வும் ஒரு விஷயத்தில் இந்தப் பார்வை தீர்க்கத்தை தமது இயக்கங்கள் மூலம் வெளியிட்டனர். அது இதுதான்: இந்தியா வெள்ளையரிடமிருந்து பெறக்கூடிய சுதந்திரம் இரண்டாம்பட்சமானது. முதன்மையாக, இந்தியா பெறவேண்டியது ஜாதி ஒழிப்பைத்தான். இன்றேல் சுதந்திரம் பெற்ற பின்பு நடக்கப்போகும் சுயராஜ்யம், உண்மையில் ஏற்கனவே இந்தியச் சமூக கட்டுமானத்துக்குள் அமைந்துள்ள ஜாதீய எதேச்சதிகாரங்களின் ராஜ்யமாகவே அமையும். கீழ்ஜாதியினராகவும், தாழ்த்தப்பட்டோராகவும், தீண்டத்தகாதவராகவும் இந்திய சமூக அமைப்பில் ஏற்கனவே அமைந்திருந்தவர்களுக்கு விமோசனம் கிடைக்காது என்பதே இவ்விருவரின் முடிவாகும்.

'அதிர்ஷ்டவசமாக' கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டு ஒரு கம்யூனிச ஆட்சி வந்தால்கூட 'சாதி அரக்கன் வழிமறிப்பான்' என்றார் அம்பேத்கர். மிகமிகத் தீர்க்கமான விஞ்ஞானப் பூர்வமான கூற்று. இந்தக் கூற்று ஒன்றே அம்பேத்கர் எவ்விதமான மாயரூபமான லட்சியவாத பிதற்றலினாலும் ஏமாற்றப்படமுடியாத சமூக விஞ்ஞானி என்பதைக் காட்டுவதாகும். இதை அவர் 1936 யிலேயே கூறியமை கவனத்துக்குரியது.

நான் மேலே குறிப்பிட்டுள்ள நூலில் அந்தப் பக்கங்களில் அம்பேத்கர். இதற்கு ஒரு உதாரணத்தை சரித்திரத்திலிருந்து எடுத்துத்தருகிறார். பழைய ரோமின் குடியரசு (ரிபப்ளிக்) மேல்கட்டுமானத்து பித்ருவர்க்கம் (Patricians) (இங்கே Patricians க்கு நான்தரும் பதம் நூலில் இல்லை. மூலப்பதத்தையும் மொழிபெயர்ப்பையும் சேர்த்துத் தருவது பயனுள்ளது. இந்த நூலில் 179 வது பக்கம் வரி 9 ல் 'ஏகநாதர்' என்பது 'ஏசுநாதர்' என்று அச்சாகி உள்ளது.) கீழ்கட்டுமானத்து பாமரர் (Plebeians) என்ற இருவரையும் பற்றிய சரித்திர விபரம் இது. பித்ருவர்க்கத்தினர், பாமரவர்க்கத்தினர் இருவரின் பிரதிநிதிகளையும் வர்க்கத்துக்கு ஒரு பிரதிநிதி என்றபடி தேர்வுசெய்தபோது இருவருமே பித்ரு வர்க்கத்திலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பாமரர்களின் நலன்கள் கவனிக்கப்படவில்லை. இதை உணர்ந்து நடத்தப்பட்ட இயக்கங்களின் விளைவாக அந்தந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே பிரதிநிதியாகலாம் என்று சட்டம் சீர்திருத்தப்பட்டது. அப்போது கூட, பாமரர்களிடையே இருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி, பாமரர்களுக்கு விரோதமாகவும் பித்ருக்களுக்கு சாதகமாக்கவும்தான் செயல்பட்டான். காரணம், அவ்விதமாக மட்டுமே செயல்படக்கூடிய பாமர வர்க்கப் பிரதிநிதியைத்தான் ரோமர்கள் வழிபட்ட டெல்ஃபி கடவுளின் ஆவேசக்காரர்கள் (Oracles) சிபாரிசு செய்தனர்.

தங்கள் வாழ்வு நலனுக்காக இயக்கம் நடத்திப் பெற்ற சட்டமும் மத சம்பிரதாயமும் இங்கே முரண்படுவதை பாமர வர்க்கத்தினார் கண்டனார். இருந்தும் கூட மத சம்பிரதாயமே அவார்களது மனதில் முக்கிமாயிற்று. இதன் விளைவாக ஆவேசக்காரர்களின் முடிவையே அவர்கள் ஏற்றனர். யார் அந்த ஆவேசக்காரர் அவர் ஒரு பித்ருவர்க்கக்கார் அவரே ஆவேசக்காரராக முடியும்! மத சம்பிரதாயத்தின் மேல் கட்டுமானக் குணத்தினால் பாதிக்கப்பட்டும் கூட மதத்தை அனுசரிப்பதாக நம்பியபடி மேல்கட்டுமானத்தில் எதேச்சாதிகாரத்துக்கே ரோமின் குடியரசு பலியாயிற்று.

இந்திய உபகண்டத்தை நோக்கி அம்பேத்கர்; விடுவித்த அபார பார்வைத் தீர்க்கம் கொண்ட எச்சரிக்கை இந்தச் சரித்திர செய்தியில் ஊடாடுகிறது. ஏதேச்சாதிகார கட்டமைப்பையே தனது சமூகக் கட்டமைப்பாகக் கொண்டிருக்கும் ஹிந்துத்துவம் - இந்து மதம் - இதனால் அம்பேத்கரின் தீவிர தாக்குதலுக்கு இலக்காயிற்று ஈ.வெ.ராமசாமியும் தென்னக்த்தில் இதே காரணத்திற்காக பார்ப்பனியத்தைத் தாக்கினர். இந்தத் தாக்குதலின் ஒரு மூலாதார சுலோகமாக அவரிடமிருந்து பிறந்த கூற்றுத்தான் ‘கடவுள் இல்லை’. இதே போல் நாஸ்திக அணுகுமுறையான பௌத்தத்தை அநுசரித்தவர் அம்பேத்கர். தீண்டத்தகாதவர்களின் சரித்திரம் பற்றிய நூலில், அவர்கள் பௌத்தர்களாக இருந்து அதைக் கைவிடாமையாலேயே பிராமணீய மேலாதிக்க வாதத்தினால் புத்தம் அழிக்கப்பட்ட பின்பு தீண்டத்தகாதோராக்கப்பட்டனர்; என்கிறர்;அம்பேத்கர்; இருக்கலாம்தான் என்று முன்றில் பாணியில் இதைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இருக்கா இல்லையா என்பதை நிச்சயிப்பதற்குரிய ஆதாரமில்லாத நிலையில் அம்பேத்கர் முன்வைத்த சரித்திர ஊகம் இது. (இந்த ஊகம் தவறானது என்று என்னிடம் நேரில்விளக்கியிருக்கிறார் பிரமிள். சண்டாளர்கள் போன்றோரை புத்தரும் அவரது சீடர்களும் சந்திக்கும் கதைகளும், அவர்களில் சிலர் புத்தரால் பின்பு சங்கத்தில் துறவிகளாகச் சேர்க்கப்பட்ட நிகழ்வுகளும், புத்தருக்கு முன்பே சண்டாளர்கள் போன்றர் இருந்ததை நிரூபிக்கின்றன. எனவே புத்த மதம் அழிக்கப்பட்ட பின்பு அதை கைவிட்டமையால் தீண்டத்தகாதோராக்கப்பட்டனர் என்ற அம்பேத்கர் கூற்றே மிகையானது என்று கூறியிருக்கிறர் பிரமிள் இதையும் வேறு சில ஆதாரங்களையும் கட்டுரையில் எழுதிச் சேர்க்க வேண்டுமென்ற அவரது எண்ணம் நிறைவடையவில்லை. - கால.சுப்ரமணியம்)

பார்க்கப்போனால் கடவுள் இல்லை என்ற கூற்று ‘ஒன்பது நவக்கிரகம்’ என்பது போன்ற ஒன்றுதான். ஏனெனில் ‘கடவுள்’ என்ற பதமே நாஸ்திகப் பண்புள்ளது. கட+உள் ‘எது உள்ளதாகத் தென்படுகின்றதோ அதைக் கட’ என்பது ஒரு பொருள். ‘ உனக்கு எது முற்று முடிபானதாகத் தோன்றுகிறதோ அதைக் கடந்திரு’ என்று இன்னொரு தளத்தில் இது பொருள்படும். பார்க்கப்போனால் உலகில்; எந்த மரபிலுமே இதற்கு இணையான ஒரு செயல்வடிவான பிரயோம் இல்லை. சமஸ்கிருதத்திலிருந்து கிடைப்பது கிரேக்க, லத்தீன் தொடர்புள்ள ‘தெய்வம்’ என்பது மட்டுமே. இது முற்றிலும் மனிதப் பிரதிமை (Anthropomorphic) குணம் கொண்ட பிரயோகம். ‘கடவுள்’ என்பது ‘கட’ என்ற ஒரு மனோநிலைச் செயலைத் தூண்டும் பிரயோகமாகும். இதை இல்லை என்று சொல்வது தத்துவர்த்தமாக அபத்தமானது. ஈ.வெ.ரா. ‘தெய்வம் இல்லை’ என்று சொல்லியிருந்தால்தான் சரி என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

எப்படியும் நாம் ஈ.வெ.ராவின் இயக்கத்தைப் பற்றிப் பேசும்போது தாழ்ந்து பேசுவதே அவரது பர்வையின் ஊற்றை உணர்வதாகும். உண்மையில் ‘கடவுள்’ என்ற சொல்லை ஆராய்கிற வேலையை விட்டு நம்பிக்கை (Faith) என்ற மனோநிலையினையே ஈ.வெ.ரா தாக்கினர் என்பதாகத்தான் அவரது மூலாதார சுலோகத்தைக் காணவேண்டும். அவரது நோக்கம் பகுத்தறிவு (Reason) என்ற மனோவிழிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சமூகம் தான். இந்திய வரலாற்றில் நவீன திருப்புமுனையாகவே நம்பிக்கைக்கு எதிராக இந்த பகுத்தறிவின் விழிப்புநிலை மீண்டும் எழுப்பப்பட்டது. அம்பேத்கர் கண்ட பௌத்தமும் நம்பிக்கை என்ற குருட்டுத்தடவலை நிராகரித்த பகுத்தறிவின் விழிப்புநிலைதான். ஈ.வெ.ரா சரியான ஒரு வாழ்க்கை நோக்காகக் கண்டது எதை? ‘ஞானிக்கும் சித்தனுக்கும் கோவில் இல்லை’ என்ற அவரது கூற்று ஒன்று இதற்கு பதிலிருக்கிறது. இதுவே
பௌத்தத்தின் அணுகுமுறையுமாகும். பார்க்கப்போனால் தென்னகத்தில் வெடித்துப் பரவிய பதினெண் சித்தர்கள் ‘வள்ளலார்’ என்ற சிதம்பரம் ராமலிங்கம், மற்றும் அங்கங்கே தோன்றிச் சரித்திரப் பதிவுகளை தாண்டி மறைந்த ஞானிகள்வரை உள்ளூர இந்த பௌத்த விழிப்பு நிலையாளர்கள்தாம். இவர்களுள், நமது காலம்வரை வாழ்ந்து மறைந்த திருக்கோணமலை சாது அப்பாத்துரை தந்திருக்கும் தியானதாரா, திருமூலரின் திருமந்திரம் என்ற நூலுடன் ஒப்பிடத்தக்கது. அதேசமயத்தில் இவ்விரு நூல்களும் செயல்முறை தளத்தில் புத்தரின் விழிப்புநிலைக் கொள்கைகளான சதிபதனம், விபஸ்ஸனம் ஆகியற்றைப் பிரதிபலிக்கின்றன இவர்கள் தங்கள் அடிப்படைச் செய்தியாக நம்பிக்கைகளை நிராகரித்து மனிதன் எல்லாவகை இயக்கங்களையும் கேள்விகளையும் கேள்விகள் கொண்டு பார்க்கத் தூண்டுகிறவர்கள். இந்த அணுகுமுறையின் மிகப்பரந்து ஆழ்ந்த நவீன வடிவமே ஜே.கிருஷ்ணமூர்த்தியுடையதும்.
ஈ.வெ. ரா., ஜே. கிருஷ்ணமூர்தியைச் சந்தித்தவர் இதன் விபரத்தை ‘மீறல்’ 4 பிரமிள் சிறப்பிதழ் பேட்டியில் தந்தித்திருக்கிறேன். இந்த விபரத்தின் தாத்பரியத்தை இந்திய அறிவு இயக்கம் கண்டுகொள்வது மிக மிக அவசியமாகும். ஈ.வெ.ரா வில் அணுகுமுறையில் இருந்த வெறுப்பையும் வன்முறைத் தன்மையையும் ஜே. கி நிராகரித்தார். பௌத்தம் சித்தர் இயக்கம், வள்ளலாரிலிருந்து அப்பாத்துரைவரை நான் மேலே குறிப்பிட்ட ஒரு தொடர் நிலையான விழிப்பு நிலையாளர்கள் யாவரிடமும் செயல்பட்டது வெறுப்பு வன்முறை இரண்டையும் நிராகரிக்கும் பார்வைதான். இவற்றை மனோ நிலத்திலிருந்து அறுத்து எடுத்துவிட முடியாது ஏனெனில் இவை ஒரே செடியின் கிளைகள். செடியின் வேர், அச்சம். தியான மார்க்கக்காரரின் முடிவான கடன் இந்த அச்சத்தைத் தனது மனசிலிருந்து கல்லி எறிவதுதான். அச்சத்தின் வேரிலிருந்து எழும் செடி நம்பிக்கை அச்சமின்றேல் நம்பிக்கயில்லை கூடவே வெறுப்புமில்லை வன்முறையுமில்லை.
சீர்திருத்த இயக்கம் எதுவும் இத்தகைய மனோவியல் மார்க்கமல்ல அது அச்சம் எங்கிற மூலக்கூறுபற்றி உணர்ந்து செயல்படுவதில்லை மிகமிக அபூர்வமான தனிமனிதர்களை தவிர்த்த பெரும்பாலோர் எத்தகைய திரணிகளாக இருந்தாலும் அச்சத்திலிருந்து விளையும் நம்பிக்கைகளைத்தான் கொண்டிருக்கின்றனர். இவைகள் ஒருபுறம் தெய்வ நம்பிக்கைகள் ஆகலாம் மறுபுறம் ஏதாவது எதிர்கால பூலோக சொர்க்கமாகலாம். ஆக அச்சம் என்ற வேரிலிருந்து எழும் நம்பிக்கையின் கிளைகளே விருப்பு வெறுப்பும் வன்முறையும். இதனால் சீர்திருத்தம், அதாவது புரட்சி என்பது, உண்மையில், விருப்பு வெறுப்பு, வன்முறை, நம்பிக்கை, அச்சம் என்ற ஒட்டுமொத்த விவகார தத்துவத்தை ஒரே வீச்சில் களைவதாக இருக்கவேண்டும். ஈ.வெ.ரா இதைப் புரிந்து கொள்ள ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் அவரது சந்திப்பு உதவியுருக்கிறது. மிகச் சிறுபான்மையினரான தமிழகத்துப் பார்ப்பனர்களை ஒரு உள்நாட்டு போர் நிலையிலிருந்து காப்பாற்றியது இந்த தத்துவார்த்த நுட்பத்தை ஈ.வெ.ரா. புரிந்துகொண்டமைதான். இதை இவ்வளவு விவரமாக அல்லாமல் வெறும் தகவலாக மட்டுமே ‘மீறல்’ லில் தந்திருக்கிறேன். இங்கே என் போக்கில் இதன் நுண்ணிய அம்சங்களைத் தருவித்துள்ளேன்.

ஆக இந்தக் கட்டுரையில் ஆரம்பப் பகுதியில் எழுப்பப்பட்ட பிரச்சனை இங்கே வேறொரு பரிமாணத்துக்கு செல்லக் காணலாம். மத சம்பிரதாயங்கள் ஒருபுறமாகவும் சீர்திருத்த ரீதியான சட்டங்கள் மறுபுறமும் நிற்கிற சமூகத்தின் வெளிக் கட்டுமானப் பிரச்சனை இங்கே அச்சம் என்ற அகமுகப் பிரச்சனையைப் பேணுவதா, நீங்குவதா என்ற கேள்வியாகிறது. அதாவது சீர்திருத்தரீதியான சட்டம் எதுவும் இந்த அச்சத்தினால் விளைந்த சம்பிரதாயங்களுக்கு எதிராகத் தாக்குப்பிடிக்க முடியாது. ரோமக் குடியரசின் வீழ்ச்சிக்குக் காரணம் மதம் சார்ந்த டெல்பியின் ஆவேச சம்பிரதாயத்தை ரோமின் பாமர வர்க்கத்தினர் எதிர்க்கவோ துறக்கவோ முடியாமைதான். இதன் காரணம் அவர்களது அச்சமும் அதன் விளைவான நம்பிக்கையுமாகும். இதனால்தான் இந்த அச்சத்தைக் கலையாமல் உண்மையான புரட்சி எந்தத் தளத்திலும் ஏற்படாது. இதை எல்லா உள்ளங்களும் சாதிக்க முடியுமா என்பது ஒரு தீவிரமான மனம் கொண்டவனுக்கு ஒரு பிரச்சனையாகாது. அவன் தனது உள்ளத்திலிருந்து இந்த அச்சத்தை நீக்கும் பணியில் ஆரம்பித்து அதே பணியை பிறர் மத்தியிலும் செய்யவே முன்னிற்பான். அவனே உண்மையான மானுடன். மற்றயவர்கள் பார்பனர், வெள்ளாளர் முதலிய ஜாதி இந்துக்கள், தலித்துகள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், புத்தர்கள், திராவிடர்கள், மார்க்சீயர்கள், எக்ஸட்ராக்கள்.

இன்று ஆன்ம யாத்திரை சம்பந்தப்பட்டுவிட்டாலே அதை இந்து வக்கிரங்களுடன் முடிச்சுப்போட்டு விடும் போக்கு ஒன்று கிளம்பியிருக்கிறது. இதன் காரணம் ஆன்மீகத்தைத் தங்கள் வக்கிரங்களுக்கு உரிய ஒரே நியாயமாக வைதீகப் பிண்டங்கள் பாராட்டுவதுதான்.

ஆன்ம யாத்திரையும் வைதீகப் போக்கும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்று கொள்வோம். அப்படிக் கொள்ளும்போது எந்த அடிப்படையில் இவை ஒன்று? வைதீகத்தின் சமூக வக்கிரமே ஆன்மீகத்திலும் உண்டு என்ற அடிப்படையிலா? அல்லது ஆன்மீகத்தின் கருணையே வைதீகத்திலும் உண்டு என்ற அடிப்படையிலா? இந்தக் கேள்விகளே பதிலைத் தந்துவிடுவான பார்க்கப்போனால் இந்தக் கட்டுரையின் முதல்பகுதிக்கே நாம் இவ்விடத்தில் திரும்புகிறோம் என உணரலாம்.

அம்பேத்கரும் காந்தியும் இந்த விஷயத்தில் முரண்பட்டிருக்கிறார்கள் ‘சாதி ஒழிப்பு’ நூலில், இந்த முரண்பாடு பதிவுபெற்றுள்ளது. நூலுக்கு பதிலாக காந்தி ஒரு கட்டுரையயை தமது ‘ஹரிஜன்’ னில் எழுதினார்.அதில் அவர் அம்பேத்கரின் கசப்பைச் சுட்டுக்காட்டியுள்ளார் அம்பேத்கர் தரும் பதிலில் இது தொடப்படாவிட்டாலும் இது கவனத்துக்குரியாது. ஹிந்துத்துவக் கட்டுமானத்துக்குள்ளேயே நின்று ஜாதி முதலிய வக்கிரங்களை மீறி நிலவிய ஞானிகளின் பட்டியில் ஒன்றை காந்தி தனது பதிலில் தந்திருக்கிறார். அம்பேத்கர் இந்தப் பட்டியலில் ராமானுஜரையும், கபீர்தாசையும் தவிர்த்து இதர ஞாநிகளுள் பெரும்பாலோர் ஜாதீயவாதிகளாகவே வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறார். இது அம்பேத்கரின் சமூகவியல் கண்ணோட்டத்தில் மிகச்சரியானது. இதுபற்றி கீழே விவாதிப்போம். அம்பேத்கர் காந்தி சர்ச்சையில் காந்தியார் மண்ணைக் கவ்வுகிறார். இது காந்தியின் மீது அவரது எளிமையின் மீது நமக்கு அனுதாபத்தையே வரவழைக்கிறது. அவர் மண்ணைக் கவ்வுவது ஜாதீயம், வர்ணாசிரமம் என்ற இரண்டையும் பற்றிய விஷயத்தில் ஆகும். காந்தியின் பதில் இவ்விஷயத்தில் தவறானது. ஜாதீயம் என்பது இனக்குழுவழக்கில் விளைந்த கட்டுக்கோப்பு. இது தொழில் அடிப்படையிலான பிரிவாகவும் வடிவெடுக்கிறது. இதில் பிறப்பின் வரையறை இதில் பிறப்பின் வரையறை பிரதானமாகும். வர்ணம் என்பதன் மூலவடிவில், அவரவர் சுபாவத்துக்கு ஏற்றபடி தொழிலை மேற்கொள்ளுதலே குறிப்பிடப்படுகிறது. இங்கே சுபாவம்தான் தொழிலை வரையறுக்கிறது. பிறப்பு அல்ல.

ஜாதி என்றால் ‘பிறப்பு’ என்றும் வர்ணம் என்றால் ‘தேர்வு’ என்றும் பொருள்படும். சுபாவமே தேர்வின் காரணி.

(‘மீறல் பேட்டி’யில் வால்மீகிக்கு நாரதர் ‘மரா மரா’ மந்திரத்தை தந்ததன் அடிப்படையாக, வர்ணத்துக்கு ஒளியுடலின் வர்ணம் என்று பொருள்தந்து, அந்த அடிப்படையில் ஆன்மீக வாழ்வுக்காக ஒருவன் ‘தேர்வு’ செய்யப்படுவதைக் கூறியுள்ளேன். இது என் பார்வை.)

காந்தி, சாதீயத்தின் பிறப்புரீதியான தொழில் பிறவை அநுசரித்தபடியே, அதுதான் வர்ணாசிரமம் என்று கூறுகிறார். அது நியாயமானது என்கிறார். மேலே தரப்பட்டுள்ள தெளிவை அம்பேத்கர் முன்வைத்து காந்தியின் தவறை சுட்டிக்காட்டியதுடன், பார்க்கப்போனால் அவரவர் சுபாவத்துக்கு ஏற்ற தொழில் முறையைக் குறிப்பிடும் வர்ணாசிரமத்தின் மூலவடிவம் உண்மையில் சரியானது (நவீனமானது என்றும் கொள்ளவேண்டும்) என்கிறார். இதையடுத்து பிறப்பினாலேயே தொழிலை நிர்ணயிக்கும் இனக்குழுவாத வக்கிரத்தை வர்ணாசிரமம் என்று காந்தி உயர்த்திப் பிடிப்பதை அம்பேத்கர் தீவிரமாக சாடுகிறார். அத்துடன், அவருடைய காலகட்டத்திலேயே செருப்புகடை வைத்திருக்கும் பார்ப்பனர்களைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பின் அடிப்படையில் காந்தி ஒரு வியாபாரி, அனால் அவரது தொழில் எப்போதுமே வியாபாரமாக இருந்ததில்லை என்கிறார்.

இங்கே நாம், அதுவும் இன்றைய காலகட்டத்தில் எங்கே நிற்கிறோம்? தொழில் ரீதியாக இன்று ஜாதியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அனால் விசேஷமாக திருமண உறவுகள், உயர்சாதிப் புள்ளிகளின் பகிரங்கப் பவிசுகள் போன்ற அன்றாடத் தன்மைகள், கலை, அரசியல், அதன்வழி கிடைக்கும் லாபங்கள் இவற்றில் ஜாதீயம் மிகத் தீவிரமாகச் செயல்படுகிறது. பறையர் ஒருவர் இஞ்சினீயராவதை இன்று தடுக்க முடியாது இருந்தும் அவர் தீண்டத்தகாதவர். உடுமலைப்பேட்டைக்கருகிலுள்ள திருமூர்த்திமலை சார்ந்த கிராமம் ஒன்றில் இப்படி ஒரு இஞ்சினியர் தமக்கென ஒரு கல்வீடு கட்ட முயன்றபோது ஜாதி ஹிந்துக்களால் தடுக்கப்பட்டு, அவர் குடிசையிலேயே வாழவேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டிருக்கிறார். இளையராஜா என்ற பறையர் செய்த மேனாட்டு சிம்ஃபனி சாதனைக்காக, ‘ஊடகம்’ என்ற சிறுபத்திரிகை ‘காலனீய அடிமை முறையின் நீட்சியாக – கொஞ்சமும் வெட்கமின்றி சிம்ஃபனி அமைத்ததை சாதனையாகப் பீற்றிக் கொள்கிறார்கள்’ என்று கூறுகிறது. அதாவது ஒரு பார்ப்பனன் இதே வேலையைச் செய்திருந்தால் – அடேயப்பாவாகி இருக்கும். எவனாவது ‘இது காலனிய அடிமை இல்லீங்களா?’ என்று அப்போது கேட்டுப் பார்க்க வேண்டும்! ‘எந்தக் காலனி? இது சுதந்திர உலகம். நான் சுதந்திர இந்தியன், சுதந்திர மனிதன். இது இசை. இதனை நான் ஆட்சிகொண்டு உயிர்மூச்சாக வெளியிடுகிறேன் இதெல்லாம் உணக்க எப்படிடா புரியும், அபிஷ்டு? உன்கூடப் பேசினதுக்கே நான் இப்ப ஸ்நானம் ‘பண்ணனும்’ என்று வரும் பதில்!

ஆனால் இதேவகைச் சிறு பத்திரிகைகளில் தலித் அரசியல் பாராட்டப்படுகிறது. ஏனெனில் அதைப் பாராட்டுவது லாபகரமானது. ஒரு தலித் எழுத்தாளன், இளையராஜா போல் மேனாட்டில் பிரசுரமாகி பெருமை பெறுவதை இந்த மனோபாவம் தாங்கிக்கொள்ளாது. அதாவது நம்பளுக்குக் கீழே தான் அவன் இருக்கணும். அவன் இப்ப எகிற்ரானா? அதை நம்ப யூஸ் பண்ணிக்கணும் என்ற மனோபாவமே இது.

இவர்களிடம் இந்திய அரசியல் சாசனத்தை அளித்த மேதை ஒரு ‘பறையர்’ என்பதைச் சொன்னால்? அதுவும், மிகக் கொடுமையான விதத்தில் சாதீயவாதிகளான உயர்மட்டக் கொசுமூளைகளினால் நடத்தப்பட்ட இளம் அனுபவங்களைக் கொண்ட ஒருவர் அவர் என்றால்? இவ்விடத்தில் நாம் இந்த ஒருவரான அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலில் கசப்பு இருப்பதாக காந்தி குறிப்பிட்ட இன்றைய விபரங்களைக் காண வேண்டும். காந்தியின் ‘இமாலயத் தவறு’ அப்போது ‘பளிச்’ என்று தெரியும்! ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் ஒரு புதுக்கவிதை: நள்ளிரவில் வாங்கினோம், இன்னும் விடியவேயில்லை.

- தொடரும்...

வைர முத்து
10 August at 06:39 ·

(முந்தைய கட்டுரைத் தொடர்ச்சி)

மகா மனிதாயம்

அம்பேத்கரிலிருந்து கிருஷ்ணமூர்த்தி வரை

- பிரமிள்


முந்தைய பகுதியைப் படிக்க (https://www.facebook.com/vairamuthu.mech/posts/1172020642837674)

(தொடர்ச்சி)

இந்திய ஞானார்த்திகள் என்று கொண்டாடப்பட்டவர்களில் பலர் சாதீயத்தைக் கடைப்பிடித்ததாக அம்பேத்கர், காந்திக்குத் தரும் பதிலைக் கவனிப்போம். இதில் ஒரு எல்லையில் உள்ளவர் சமர்த்த ராம்தாஸ் இவரும் இவரைப்போன்று ஞானிகளாகக் கொள்ளப்பட்ட எத்தனையோ பேரும், ஞானிகளாகக் கொள்ளப்பட்டதே தவறு என்பதுதான் எனது அபிப்ராயம். பெரும்பாலும், ராஜீய குருமார்கள், மடாபதிகள் போன்ற புள்ளிகளையும், சாதீயத்தை அனுசரிப்பதன் மூலம் லாபவேட்டை ஆடும் காவிவஸ்திரதாரிகளையும் ஞானிகளாக்கி விடக்கூடிய மரபு நம்முடையது. இவர்கள் தங்கள் கெட்டித் தனத்துக்கேற்ப சரித்திரத்தில் பதிவு பெற்றுவிடுவார்கள். இத்தகையோரையும் மீறியே ராமானுஜரும், கபீர்தாஸூம் சரித்திர புருஷத்வம் கொண்ட மெய்ஞானிகளாக அடையாளம் காணப்படவேண்டும். ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றோரும் இத்தகையோர்தாம்.

பௌத்தத்தின் தாக்குதலும் அதற்கு முந்திய ஜைனத்தின் தாக்குதலும் வேத காலத்திய பிராமண முறையை ஊடுருவி, விளைவித்ததுதான் சங்கரர் உருவாக்கிய ‘தசநமிகள்’ என்ற சன்யாஸ முறை, உண்மைத் தேட்டமும், அதற்காக தபஸ் செய்தலும் இருந்தும்கூட திட்டவட்டமான சன்யாஸ முறையை நாம் ஜைனம், பௌத்தம் ஆகியவற்றுக்குப் பின்பே காண்கிறோம். சன்யாசமும் அதனைச் சார்ந்த மடாதிபதிப் பீடமும் புத்த சங்க அமைப்பிடமிருந்து பிராமணீயம் சுவீகரித்தவை என்றே தெரிகிறது.

புத்தத்துக்கு முந்தைய காலத்தில் பிந்திய காலத்திய ‘துறவு’ தேவைப்பட்டதில்லை. ரிஷிகள் கூட குடும்பஸ்தர்கள்தாம் தபஸில் ஈடிப்படும்போது மட்டுமே இவர்கள் பந்தங்களை விடுகிறார்கள். அதாவது, ஸ்தாபன ரீதியான துறவு, ஜைன புத்தர்களுக்கு முந்திய பிராமணீயத்தில் இல்லை.

புத்தர் உருவாகிய சங்கம் சமூக சேவைக்கும், சமூக சீர்திருத்தத்துக்கும் என்றே செயல்பட்டிருக்கிறது. வன்முறையற்ற பண்பும், ஜாதீயத்தைப் போன்ற வக்ரங்களை நிராகரித்து மனிதாயத்தைப் பரப்பும் இயக்கமும், வியாதிஸ்தர்களுக்கு உதவுவது போன்ற பணிகளும் அதன் சாசன விதிகளாகும். நிதிநிலை மோசமாகும்போது, பிராமணீயத்தினால் தூண்டப்பட்டு ஊராரின் கால்நடைகளை அரசின் கைப்பற்றி ‘யாகம்’ பண்ணி தேவர்களுக்கு உயரப் புகையாக அனுப்பி, சுபீட்சத்தை வரவழைக்கும் மடமைக்கும், பக்கத்து நாட்டைக் கொள்ளையடிக்க கிளம்பும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் பதிலாக, விவசாயிகள், வியாபாரிகள், போன்றோருக்கு விளைபொருள்கள், நிதி முதலியவற்றை கடனாகத் தரும் வங்கி முறையை புத்தர் சிபார்சு செய்திருக்கிறார் இதையும் புத்த சங்கம் செயல்படுத்திற்று.

இவ்வளவையும் நாம் சுருக்கமாகவேனும் சொன்னால்தான், புத்தத்தை அழித்த பிராமணீயம் பெற்ற கொள்ளை லாபம் எது என்று காணலாம். ஏற்கனவே, புத்த சன்யாஸ வடிவில், காவியும் மொட்டைத் தலையுமாகத் தோன்றிய கருணாமூர்த்தி பிரதிமை இந்தியக் குடிமகனின் மனசில் குடி கொண்டிருக்கிறது. அந்தப் பிரதிமையை அப்படியே திருடிய முறைதான் புத்தத்தை அழித்த பின்பு பிராமணீய மரபு உருவாக்கிய சந்யாஸம்.

இந்தப் பின்னணியில்தான் நாம் காந்தி குறிப்பிடும் ஞானிகளின் லிஸ்ட்டைப் பார்க்கவேண்டும். அவர்களுள் பெரும்பாலோனோரின் ஞானம் கேள்விக்குரியது. அம்பேத்கர் இந்த வகை அணுகுமுறையை விடுத்து, அந்த ஞானிகள் சாதியத்தை அனுசரித்ததாகக் கூறியிருக்கிறார். ஞானம் என்ற அகண்ட பார்வை ஜாதீயவாதிகளுக்குத் தித்திக்காது. இதற்கு ஏராளமான கதை விபரங்கள் உள்ளன. இவை திருகப்பட்டு ஜாதியத்துக்கு ஏற்றபடி பின்னாடி ஆக்கப்பட்டுவிடுவதால், இக்கதைகளின் ஆடையில் உள்ள ஜாதிமறுப்பு புலனாவதில்லை. இத்தகைய கதைகளை மறுபரிசீலனை செய்து இவற்றின் மெய்மையான வடிவை ஸ்தாபிப்பது இன்றைய அறிவியல் கடமைகளுள் ஒன்று.

இப்போது ஆன்மயாத்ரையும், வைதீகமும் ஒன்றல்ல என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அல்லவா? காந்தியின் ஹிந்து ஞானி லிஸ்டுக்கு பதில் தரும்போது, அந்த லிஸ்டில் உள்ளவர்களுள் ஞானம் சித்திக்கப்படவர்கள் யாரென்று பார்த்தால், அவர்கள் ஜாதீயத்தை மறுத்தவர்களாகவும் இருப்பார்கள் எனக் கூறலாம் என்றார் அம்பேத்கர். இது சரிவர அவரது பதிலில் விரிவோ அழுத்தமோ பெறாதது ஒரு துரதிர்ஷ்டம். மீண்டும் இங்கே ஆன்மயாத்ரையும் வைதீக வக்ரமும் வேறுபடுத்தப்படுகிறது.

ஆனால் இந்திய வைதீக வக்ரம் தனது ஜீவித நியாயத்துக்காக ஆன்மீகக் கூப்பாட்டை எழுப்பி வருகிற ஒரு இயக்கமும் ஆகும். இது விஷயத்தில் காந்தி போன்றவர்கள் வைதீக மரபும் ஆன்மீகமும் ஒன்றே என்ற பார்வைக்கு துணை போயிருக்கிறார்கள். இதன் காரணம் வைதீக வக்ரக்காரர்கள் வன்முறையாளர்களாக மாறிவிடாமல், அவர்களை ஆன்மீகத்தளை மூலம் கட்டுப்படுத்தும் மனோவியல் தந்திரமாகும். சமீபகாலச் சரித்திரத்தில் இந்த தந்திரத்தின் சிகர இயக்கமே காந்தீயம் இதனால்தான் காந்தி ‘வர்ணாசிரமம்’ பேசி இருக்கிறார். இதையே அம்பேத்கர் வேறுவிதமாகக் காண்கிறார். காந்தி ஹிந்துத்துவ ஜாதீயத்தை, வர்ணாசிரமம் என்று போலிபண்ணி பிறப்பின் அடிப்படையிலான தொழில்முறையை போதிப்பதின் காரணம், இந்துக்களிடையே அவருக்குள்ள மாபெரும் செல்வாக்கினைப் பேணுவதற்காகவே என்றார் அம்பேத்கர். அதாவது மனமறிந்தே காந்தி தவறான பார்வையை மேற்கொண்டார். காரணம், இந்த தவறான பார்வையை அவர் துறந்தால் அதோடு இந்துக்களிடையில் அவர் பெற்றிருந்த தலைமையையும் துறக்க வேண்டும்.

சரியான பார்வையை காந்தி பாகிஸ்தான் பிரிவினை, பஞ்சாப் கலவரம் ஆகிய சமயங்களில் கடைப்பிடிக்கப் போய்த்தான் சுட்டுக்கொல்லவும் பட்டார். பாகிஸ்தானின் தேசிய நிதி உடனே பிரித்துத் தரப்பட வேண்டும், கோவில், மசூதிகள் முழுவதிலும் முஸ்லீம் அகதிகளை நிரப்பி அவர்களது அச்சத்தைப் போக்க வேண்டும், அதாவது, வக்ர வடிவமேயான ஒரு தேசிய பின்னணியில் காந்தி செய்தது ஒரு மனோவியல் கலைக்கூத்து. இதை நாம் இந்தியாவின் பெருமையாகக் கருதுவது அபத்தம்தான். உண்மையில், வெள்ளையனிடமிருந்து மட்டுமின்றி, ஜாதி அரகநிடமும் இருந்து இந்தியா அதே சமயத்தில் விடுதலை பெற்றிருந்தால் மட்டுமேதான் நாம் பெருமைப்பட்டிருக்க இடமுண்டு.

ஜாதீயம், மதம் முதலியவற்றிருக்கு இடம் தராத விதமாக அம்பேத்கர் தொகுத்தளித்த இந்திய அரசியல் சாசனம் கூட செயல்பட முடியாதபடி சீர்குலைக்கப்பட்டுள்ளது. ஜாதி, மத அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்வது அதன்படி சட்ட விரோதம். ஆனால் சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் அரசுகள் யாவுமே, இந்த வகை பிரச்சாரத்தை அனுமதித்தன. ஏனெனில் ஜாதி மத அடிப்படை ஒரு லாபகரமான அரசியலுக்கு உதவும் இது அனுமதிக்கப்பட்டதும், அரசியல் சாசனத்தில் இதுபற்றி உள்ள விதி வலுவிழக்கிறது அதாவது முதல் முதல் இந்த விதியை அரசே மீறியதும் அரசுக்கு எதிராக ஒரு குடிமகனேனும் வழக்காடி ஜெயிக்கவைக்கத்தக்க எஃகு விதி இது. இவ்விதமாக விதி காப்பற்றப்படாவிட்டால், அடுத்த தேர்தலின் பொது, முதல் தேர்தலில் நடந்த முறையே புதுவிதியாக நிர்ணயம் பெறும். சாசனத்திலுள்ள மூல விதியை இனி செயல்படுவது துர்லபம் ஹிந்துத்துவப் பேரினவாதத்தை அரசியல் மூலதனமாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் அரசியலில் நுழையும்வரை இதன் ஆபத்து உணரப்படவில்லை இதற்குப் பின்புதான் வலுவிழந்த மூலவிதிக்குப் பதிலாக ஒரு புதிய விதியாக பழையதையே அமல்படுத்த ஒரு புதிய சுதந்திரப் போராட்டம்! பெருமையா வேட்கக்கேடோ இது?

நிலைமை இருக்கிறது இப்படி! ஆனால் இப்போது தமிழில் மனுதர்மத்தை தந்திருக்கும்ம் நண்பர் தமிழ்நாடன் இந்திய அரசியல் சாசனம், மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று முன்னுரையில் கூறுகிறார். இதற்கு ஆதாரம் உண்டா? பெளத்த மடங்களின் சாசனவிதிகளின்படி சமூக சீர்திருத்தத்திலிருந்து, ஊரின் பிணிகள், நாட்டின் வறுமைவரை தீர்வு தருவதற்கேற்ப அவை இயங்கியதைக் கண்டோம். பௌத்தத்தை ராஜீயச் சூழ்ச்சி முறைகளின் மூலம் தீர்த்துக் கட்டிய பிராமணீயம் இந்த பெளத்த மடங்களின் இயக்கப் பணிகளை அது தொடர்ந்து செய்ததே இல்லை. சமூக கட்டுமானத்தின் ஜாதீய வக்ரம் போன்றவற்றையும் குருட்டு நம்பிக்கைகளையும் அது அகற்றவில்லை. மாறாக, மறைந்துபோன வக்ரங்களுக்கு அது புத்துயிர் கொடுத்திருக்கிறது. மற்றைய விதிகளின் கதியும் இதுதான். காலம்காலமாக பிணிவாய்ப்பட்டு கிராமம் கிராமமாக அழிவும் வறுமையும் ஏற்பட இந்தியாவில் பெளத்த பீடங்களின் இடங்களைப் பிடித்துக்கொண்ட ஹிந்துத்வ சந்யாச மடங்கள் பணி செய்ய முன்வந்ததில்லை. என்? எல்லா ஹிந்து மடங்களும் ஜாதீயம், தீட்டு, தோஷம் என்ற வக்ரங்களை கடைப்பிடிப்பவை என்பதால்தான். இந்த ஹிந்து மட மரபைப் பகடியாக்கியது, கிறிஸ்துவ மடங்களின் மரபுதான். ஏற்கனவே, அதுவும் கிறிஸ்தவம் பிறப்பதற்கு முன்பே பொது வாழ்வுப் பொறுப்பைச் செயல்படுத்திய பௌத்தம் நிலவிய நாட்டினுள் கிருஸ்துவம் அதுவும் பீரங்கி நெருப்புடன் புதுந்த பின்புதான் ஹிந்து தலைமைகள் சந்யாச கேந்திரங்கள் மூலம் பொதுப்பணிக்கு வருகின்றனர். முதலில் தயானந்தசரஸ்வதியின் ஆரியசமாஜம், இரண்டாவதாக தியசாபிக்கள் சொஸைட்டி, மூன்றாவதாக ராமகிருஷ்ணா மிஷன், நான்காவதாக காந்தீய ஆசிரமங்கள். இவற்றை தொடர்கிரவை பல. இவற்றின் நிறை குறைகள் ஒருபுறம் இருக்கட்டும். இவை எல்லாமே பொதுப்பணியின் எல்லாவகை அறைகூவல்களுக்கும் பதில் தந்தவை என்றும் கூறுவதற்க்கில்லை. ஆர்யசமாஜம், ஹிந்துத்துவத்தினுள்ளேயே இருந்த மனிதாயத்தை மீட்டுத்தரும் பணியையும், தியசாபிக்கல் சொஸைட்டி (பிரம்மஞானசபை) சர்வ மதங்களிலும் உள்ள ஒரே உண்மையை ஸத்யாந்நாஸ்தி பரோதர்ம உண்டியை விட உயர்ந்த மார்க்கமில்லை என்ற சுலோகத்தின் பிரகடனமாக பிரச்சாரம் செய்வதற்கேற்ற பரந்துபட்ட ஆய்விலும் ஈடுபட்டன. தியோசாப்பிகல் சொஸைட்டியின் தலைமையை அண்ணி பெஸன்ட் ஏற்றபோது அவர் மூலம் அது ஒரு தேசீய இயக்கப்பணியின் காலமாகவே ஆயிற்று. காந்தி லண்டனில் நாஸ்த்திகராக இருந்த ஆரம்பப்பருவத்தில் ஒரு சந்திப்பின்போது இந்திய மூலகங்களை நோக்கி அவரை அன்னிபெஸன்ட் திசைதிருப்பியிருக்கிறார். பின்னாடி சொஸைட்டியின் அடையாறு (சென்னை) தலைமையகத்திலுள்ள பெரிய ஆலமரத்தின் அடியிலேயே அன்னிபெஸன்டினால் இந்திய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய பணிகள் ஹிந்துத்வ சந்யாச மடங்களுடைய பௌராணிகக் கற்பனாமண்டலங்களில் கூட நடந்திராத திருப்புமுனைச் செயல்களாகும். அன்னிபெஸன்ட் தான் முழுதீவிரத்துடன் ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு சர்வதேசியச் செயல்களத்தை உருவாக்கித் தந்தவர். உலக சரித்திரத்திலேயே உணரப்படாதெனினும் உணரப்படவேனப் பெருருக்கொண்டு நிற்கிற பணி இது. காரணம், ஜே.கிருஷ்ணமூர்த்தி மூலம், அண்ணி பெஸன்டே தீர்க்க நோக்கோடு உணர்ந்தபடி வெளியாக்கிய புரட்சி இது. இது ‘சத்யாந்நாஸ்தி பரோதர்ம’ என்ற செய்தியை ஊடறுத்து Truth is a Pathless land என்ற புரட்சிகரமாக கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பிறந்துள்ளது. ‘மாற்றங்கள் அற்ற பிரதேசமே உண்மை’ என்ற இதக் கூற்று தான் தமது பிரவசனங்களின் மையம் என்று கிருஷ்ணமூர்த்தியே கூறியிருக்கிறார். இந்தக்கூற்று, எல்லாவகை மார்க்கங்களையும், அவற்றின் உருக்காலைகளில் வார்க்கப்பட்டு மனிதனை மனிதனாக விடுவிக்கும் செய்தி! சீர்திருத்த இயக்கங்களுக்கும் அப்பாற்பட்ட அகண்ட புரட்சி இது.

இத்தகைய ஒரு விடுபட்ட நிலையைத் தம்முள் பெற்றோர்தாம் ஞானத்துகுத் தகுதியானவர்கள். இருந்தும் ஹிந்துத்வ மடாதிபதியான காஞ்சியின் சந்ரசேகரேந்திரர் ஈறாக, ஞானநிலை பெற்றிருந்தும் கூட இத்தகைய புரட்சிகரம் எதையும் இந்த அளவுக்குச் செய்ய ஹிந்துத்வ சந்யாஸ மடக்காரர்கள் முன்வந்ததில்லை. என்?

இதற்குப் பதிலை நாம் பௌத்தத்தின் சரித்திரத்தில்தான் தேட வேண்டும், காணவேண்டும் பிரதீஷ் நந்திக்கு அளித்து “sunday” பத்திரிகையில் வெளியான பேட்டியில், சந்ரசேகரேந்ரரின் நிலை பற்றி கிருஷ்ணமூர்த்தி இவ்விதம் கூறி இருக்கிறார் இந்தப் பதிலிலும் பௌத்தத்தின் சரித்திரஸ்திதியே எதிரொலிக்கிறது: ‘இது (அதாவது சங்கரமடம் சார்ந்தது) எல்லாம் சுத்த நான்சென்ஸ் என்று அவர் அதாவது, அவர் மடத்தின் மடத்தனத்தைச் சுட்டிக்காட்டி மடத்தனத்தை மாற்றிவிடமுடியாது. அவர்தான் வெளியே வீசப்படுவார்.’ இந்திய சரித்திரத்திலும் பௌத்தம் இந்நிளைக்கே இலக்காயிற்று.
அம்பேத்கரின் அறிவார்த்தமான சரியான வழியில் காந்தியும் வெளிப்படையாகப் பேசி இருந்தால் காந்தியும் இந்தியத் தலைமையை இழந்திருப்பர்! தொடரும் கேள்வி விளைவு என்ன?

பௌத்தம் தூக்கி எறியப்பட்ட பொது ஏற்பட்ட விளைவு என்ன? என்னமோ இந்தியாவில் கருணையே மாதம்மும்மாரியாகப் பெய்து கொண்டிருந்ததாக அளக்கிறார்களே! புத்தா சந்நியாசிகள், சமணர்கள், (இது ஜைன, புத்த சந்நியாசிகள் இருவரையும் குறிக்கும்.), இந்த மாதமும்மாரி பொழியும் நாட்டில்தான் கழுவேற்றப்பட்டனர். மதம் சார்ந்த விஷயங்களில் இந்தியா ரொம்பவும் சகிப்புத்தன்மை உள்ள நாடு என்ற கூற்று ஆதாரமற்றது. பத்ரகிரி என்ற அரசன் பட்டினத்தாரை கழுவேற்ற முன்றிருக்கிறான். தயாநந்தர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார் .காந்தி சுடப்பட்டார். தெரிய வருகிற விபரங்கள் Tip of the iceberg தான். அதாவது தெரியவருகிறதைவிட பிரம்மாண்ட அளவு நிகழ்வுகள் மறைவாக உள்ளன.

இவ்வளவையும் சொல்லாமல், இந்திய ஞானார்த்திகள் ஏன் ஹிந்துத்வ வக்ரங்களை எதிர்த்து இயக்கங்களை நடத்தவில்லை என்று கூறமுடியாது. வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால், பதினெண் சித்தர்கள் போல் கபீர், இராமானுஜர்போல் இயக்கங்களின் மூல நிலையங்களாக செய்யப்பட்டவர்களை பார்பனீயம் சாதுர்யமாக மரபினுள் முடக்கி இருக்கிறது.

மரபினுள் முடங்காதவர்களுக்கு கழு, விஷம், துப்பக்கிரவை, முடியுமென்றால் முடக்கம்.

இந்த இயக்கத்தின் கதியை ஒரே சீரானவெளியாக மூடிவிடுகிறது, சுவடுகளாக இறுகாமல் காலக்காற்றில் மணல் புரளும் இந்திய ‘சரித்திரமின்மை’ சரித்திரம் அழிக்கப்பட்டால் நாகரீகம் அழியும் என்பது மேலைத்தேய அறிஞர்களின் கூற்று. இங்கேயோவேனில் சரித்திரம் என்றது பகுதியே இந்திய – ஹிந்துத்வ சாஸ்திர ஞானத்தில் இல்லாத போக்கு. சரித்திரம் என்ற அறிவே இந்த சாஸ்திர ஞானவான்களுக்கு மகா டேஞ்சர் என்பதுதான் இதற்கு காரணம். ஆக இந்திய நாகரீகம் என்பதே சரித்திர அறிவால் பேணப்படாமையினால் நாகரீகமற்ற ஒரு ‘தினுசான’ நாகரீகமாகத்தான் நிற்கிறது. அதாவது ‘ஒழிந்த நேரத்தில் விபச்சாரம் பண்ணினால் உப்பு புளிச்சுக்கது’ என்று கூறுகிற திருசான பத்தினி மாதிரி.

இந்திய வக்ர மரபுகளை தங்கள் உள்ளங்களில் கண்டு துறந்து, அதன் விளைவாக ஏற்பட்ட மனோ வெளியின் மூலம் ஞானிகளானவர் செயலற்று இருந்திருக்கமுடியாது. அவர்களது இயக்கங்களைப் பற்றிய சரித்திரங்கள்தான் இந்த தினுசான பத்தினிச் சரித்திரத்தினால் மறக்கப்பட்டிருக்க வேண்டும் இந்நிலையில் இந்தியாவின் இருண்ட சரித்திர வேளைகளில் நடத்தி இருக்கக் கூடியவற்றை நாம் கணிக்க வேண்டுமானால், சரித்திர பதிவுகள் கிடைக்கிற காலங்களை வைத்தே அந்தக் கணிப்பைச் செய்யவேண்டும்.

சீர்திருத்தப் பெரும் போக்காக ஞானார்த்திகள் சமூக வக்ரங்களைத் திருத்த முன்வரவில்லை என்பதைத்தான் இவ்வகை அணுகுமுறை காட்டுகிறது. தங்கள் தனிப்பட்ட வாழ்வில் இவர்கள் வக்கிரங்களுக்கு இடமளிக்கவில்லை (அப்படி இடம் விட்டவர்கள் சந்திர சேகரேந்திரரைப் போன்ற ஞானியாயினும் ஹிந்து மடாதிபதிகள் மட்டும்தான்) தனிப்பட்ட கபீர், இராமானுஜர் போன்றோர் சமூக புரட்சியாளர்களாகவும் இயங்கியுள்ளனர். பொதுவாகப் பார்த்தால் ஒரு கொண்டத்தில், சீர்திருத்தப் போக்கை அல்லாமல் தனிப்பட்ட ஒவ்வொரு மனித உள்ளத்துக்கும் ஏற்ற விதமான திருத்தங்களைத்தான் தமது சமகாலத்தில் சிப்பர்சு செய்திருக்கின்றனர். பல்வேறு வகை ஞானார்த்திகளுடன் பழகி அவதானித்த என் அனுபவங்களின் அடிப்படையிலேயே இதனை நான் சொல்கிறேன். அதாவது தம்மிடம் வருகிறவருடைய பிரச்சனையைச் சார்ந்து ஒரு வக்ரத்தையோ குறைபாட்டையோ, அதுவும் ‘செய், செய்யாதே’ என்ற முரட்டுத்தனம் அற்றவகையில் நீக்கும் வேலையைத்தான் இவர்கள் செய்கின்றனர். ‘செய், செய்யாதே’ என்று கூறக்கூடிய முரட்டு வாத்தியார்கள் ஞானிகள் அல்லர். அத்தகைய எவரையும் நான் மதித்ததில்லை எனவே, சீர்திருத்தப் பெரும்போக்கிற்கு அவசியமான ஒரு செயல்முறையையே துறந்த நிலையில்தான் இவர்கள் வாழ்ந்தனர். இருந்தும் இவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் இவர்கள் நடந்து கொண்ட முறையே போதனை ஆயிற்று. உலகெங்கும் இடைவிடாமல் பயணம் செய்து பிரவசனங்களை நிகழ்த்திய ஜே. கிருஷ்ணமூர்த்தி முதிர்ந்த காலத்தில்கூட தமது பாத்ரூமை கிளீன் பண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இதனை கண்ட அவரது யோகாசன ஆசிரியரான தேசிகாச்சார் (உடலே உன்னை ஆராதிக்கிறேன் நூலாசிரியர்) ஏன் பணிப்பெண் வரமாட்டாளா? என்று கேட்டபோது ஜே.கி. சொன்ன பதில் ‘வருவாள் ஆனால், அவள் வந்து பார்க்கும்போது அசுத்தமாயிருக்கக்கூடாது அல்லவா!’

இத்தகைய செயல்முரையாகத் தான் சீர்திருத்தப் பிழம்பு பரவ வேண்டும். பௌத்த கேந்திரங்களிளிருந்து அன்றைய இந்தியாவிலும், கிறிஸ்துவ கேந்திரங்கலிருந்து ஐரோப்பாவிலும் இந்தப் பிழம்பு பரவியிருக்கிறது இதை இந்தியாவின் வைதீக நச்சுக்காற்று, பெருநேருப்ப்பக விடாமல் அணைத்துவிட்டிருக்கிறது. இது இந்திய உள்ளத்தில் ஏற்படுத்தியிருக்கும் விசித்திர மதிப்பீடின்படி, ‘ஞானி எந்த வேலையையும் கூசாமல் செய்வான். நமக்கு ஆகுமா? கிருஷ்ணமூர்த்தி செய்தார், ராமகிருஷ்ணர் செய்தார், காந்தி செய்தார் – அவர்கள் ஞானிகள்!’

இது பித்தலாட்டம் என்பது தான் இங்கே கவனிக்கப்படவேண்டியது. அதாவது, ‘சீர்திருந்திய நிலை ஒரு அபூர்வ நிலை’ என்பது பித்தலாட்டமாகும், கண்களைத் திறந்து பார்ப்பது ஒரு அபூர்வமான நிலை அல்ல அதுதான் இயற்கையானது, கண்ணிலிருந்தும் மூடினபடி, ‘உங்களுக்கென்ன நீங்கள் ஞானி, கண்ணைத் திறந்து பார்க்கிறீர்கள்’ என்று கூறுவது தற்கொலைக்குச் சமம். இங்கே நான் எதோ மர்மமான அகக் கண்ணைக் குறிப்பிடவில்லை. ஞானியோ ஞானி அல்லனோ, ஒருவன் தனது ரகசியப் பகுதிகளை தானே அலம்புகிறான் அல்லவா? இந்தத் தன்மையைத்தன் குறிப்பிடுகிறேன். ஜே.கி செய்த பாத்ரூம் கிளீனிங் இதன் நீட்சிதனே அன்றி ஞானத்தின் நீட்சி அல்ல. இந்த சில்லரை விஷயத்தையே ஞானத்தின் நீட்சியாக்கியமைதான் இந்திய வக்ரம். அது சரி, ‘ஒருவன் தனது ரகசியப் பகுதிகளை அலம்புவதற்குக்கூட ஸ்பெஷல் சிஷ்யர்கள் இருந்திருக்கின்றனர் அன்று! இந்த மரபினரரிடம் போய் கிருஷ்ணமூர்த்தி பற்றி பேசுவது மடமையின் சிகரம்.

'செய், செய்யாதே' என்பதாக அல்லாமல், தன்பாட்டுக்கு ஒரு வகையில் வாழ்வதையே ஒரு இயக்கமாக்கியவர்தாம் ஞானார்த்திகள். ராமகிருஷ்ண மிஷன், ராமகிருஷ்ணரின் நேரடி இயக்கமல்ல, அவரது அன்றாட வாழ்வின் எதிரொலி இயக்கம். இது இன்று என்ன நிலைக்கு வந்திருக்கிறது என்பது வேறு விஷயம். இங்கே நமது காலங்காலமான மலினத்தானங்கள் வேலைசெய்யும் கதைபற்றி பேசவேண்டிவரும் . இப்படி எத்தனையோ கேந்திரங்கள் உள்ளன. அதாவது இத்தகைய ஞானார்த்திகளைச் சுற்றி மலர வேண்டிய பேரியக்கங்கள் வைதீகச் சாக்கடைப் பிரதேசங்களாக்கப்படுகின்றன மீண்டும், மீண்டும்.

விருப்பு - வெறுப்பு, வன்முறை, இந்தக் கிளைகளைத் தாங்கும் நம்பிக்கை, நம்பிக்கையின் வேரான அச்சம் இவ்வளவையும் களைந்தவன், அதுவும் ஞானார்த்த நிலையில் எவ்விதம் உலகின் வக்ரங்களைச் சந்திப்பான்? கருணையின் மூலம் அல்லவா? அவனை இந்திய வக்ரம் எப்படிச் சந்தித்திருக்கிறது? தனது வக்ரத்துக்கு அவனை ஆதாரமாக்குவதற்காக அல்லவா? இதன் விளைவு என்ன? இதன் விளைவு, மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறும் இந்திய வைதீகம் தான்.

எனக்கு ஒரு ஆர்.எஸ்.எஸ்.கார நண்பர் இருக்கிறார். அவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியையும் படித்துக் கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பற்றியும், கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும் விபரம் அறிந்தவர்களினால் மேற்படி அன்பரின் மூளை அமைப்பைப் புரிந்துகொள்ள முடியாது.ஆனால் கிருஷ்ணமூர்த்தி ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்ற விபரத்தை முன்வைத்துப் பாருங்கள். புரிகிறதா?

நிச்சயமாக கிருஷ்ணமூர்த்தி உயிருடன் இருந்தபோது அவர்முன் போய்நின்று, 'நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரன் உங்கள் பேச்சு எனக்கு சம்மதம், ஏனென்றால் யூ ஆர் எ பிராமின், ஐ ஆம் எ பிராமின்' என்று என் நண்பர் என்று சொல்லியிருக்க மாட்டார். இவரைப் போன்ற எவரும் கிருஷ்ணமூர்த்தியிடம் இப்படிப் பேசியதுமில்லை. இதன் ஏதாவதொரு சாயலில் பேசியவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் தீவிர சாடுதலுக்கு தப்பித்ததும் இல்லை. இது எல்லாமே எனது ஆர்.எஸ்.எஸ். நண்பருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் தமது ஸ்டைலை அவர் பேணிக்கொள்கிறார்.

கண்களை மூடியபடி 'ஆக எல்லாமே நன்னா பளிச்னு தெரியறதே!' என்று கூறிக்கொண்டு பாதாள விளிம்பை நோக்கி நடக்கிறவரை நாம் என்ன செய்ய முடியும்? 'கட'வுள் கூட அவருக்கு உதவமுடியாது. தமது நிலையை தாமாகவே கிடப்பதுதான் உதவும்.

தங்களை பிறப்பு, பெயர், மதம், ஜாதி, இனம் முதலியவற்றின் மூலம் அடையாளப்படுத்திவிடாமலிருப்பதற்காக இவற்றுள் எதையும் தெரிவிக்காத ஞாரார்த்திகள்கூட உள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தில் இப்படி ஒருவர் இருந்திருக்கிறார். இவரை வந்து பார்க்கிற ஒவ்வொருவருமே தம்மவர்தாம் இவர் என்று பாவித்தது உண்டு. புரவிபாளையத்தில் இருந்த அவரை ஹிந்துக்கள் எவ்வளவுக்கு ஹிந்து என்று நம்புகிறார்களோ அவ்வளவுக்கு முஸ்லீம்கள் அவரை முஸ்லீம் என்கின்றனர். சில மேற்கத்திய இனத்தவர் வந்து பார்த்து இவர் மேநாட்டுக்காரர் என்றிருக்கின்றன. 'எல்லாமே தப்பு' இவர் ஒரு சைனீஸ் என்கிறார்கள் சில சீனக்காரர்கள்.

இவ்வளவுக்கு எல்லாவித அடையாளங்களையும் உதறுவதுதான் ஒருவனை மானுடன் ஆக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மஹாமனிதாயமாகும்.

- லயம் 1998