தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, May 25, 2021

புதிய புட்டியில் பழைய புளுகு ஜே.ஜே. சில குறிப்புகள் - பிரமிள்


புதிய புட்டியில் பழைய புளுகு ஜே.ஜே. சில குறிப்புகள் - நாவல் விமர்சனம்

இன்றைய சமூக சீர்திருத்த இயக்கங்கள், ஓரிரு மூலபுருஷர்களினால் உருவாக்கப்பட்ட மதிப்பீடுகளையும் இயக்கங்களையும், அரசியல் பகட்டாக மட்டும்தான் நடத்துகின்றன. நாலுவிதமான சமூகப்பிரதிநிதிகள் கூடும் பொது இடங்களில் மட்டும்தான், இந்தச் சீர்த்திருத்தங்கள் செயல்படும். இது, உண்மையில் செயல்படுத்தப்படுகிற சமூக சீர்திருத்தமே அல்ல. கிராமங்களில் கூட, சிறு பொது மேடைகளில் சரிநிகர் சமான ஸ்லோகத்தை உச்சரிக்கிற வாய்கள், தங்களவர்களுக்குள் போட்டு அரைக்கும் அவலை ஆராய்ந்தால், அது நாலாயிரம் வருஷங்களுக்கு முந்திய ஜாதிய உமி என்று காணலாம்.

அறிவியக்கம் என்பது, மூலபுருஷர்களின் சீர்திருத்த நெருப்பை அணையாமல் காக்கிற இன்னொரு இயக்கம். பொதுவாழ்வின் மீது கருணைகொண்ட மகான்களிடமே, இந்த ஜ்வாலையை உருவாக்கும் ரிஷிமூலப் பொறிகளை, நம் பகுதி உலகில் நாம் காண்கிறோம். சீரடி சாயிபாபா, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், இன்று இவர்கள் யாவரையும் மிஞ்சும் விஞ்ஞானவடிவ அணுகுமுறையை வெளியிட்ட ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை, இந்த மகான்களாக இனம்காட்ட முடியும். சமூக மட்டத்தின் கொடுமைகளையும் உள்முரண்களையும் அவற்றுக்கு ஆதரவளிக்கிற சுயமான நிகழ்ச்சிகளையும் நேர்முகமாகக் கண்டு திரஸ்கரிக்கும் ஆன்மிகம், உண்மையில் சமூகத்தையும் அதன் மதிப்பீடுகளையும் ஒப்புக்கொண்டதின் விளைவே அல்ல. 'மனமும் உலகும் ஒன்றே' என்கிற பிரமாணம், ஆன்மிக அணுகுமுறையின் அடிப்படை. நேரடியாகச் சமூகக் கொடுமைகள் பற்றிப் பேசாதவர்களிடம் கூட, இந்தப் பிரமாணம் அவர்களது சமுகப்பார்வையை இனம் காட்டிவிடும். இதற்காக, ஆன்மவியலின் லட்சிய மண்டலத்துக்குள் சமுகப்பார்வைக்கு இடமில்லை என்று தடையிட முடியாது.

லட்சியம் எத்தகையதாயிருந்தாலும், அதன் பிரகடனங்களினால் ஏமாறாமல், அதன் பெயரால் நடப்பவற்றை அவதானிப்பதே அறிவியக்கம். இது, லட்சியப்பாதையை சுத்திகரிக்கும் இயக்கமுமாகும். ஆனால் இந்த இயக்கம், லட்சியத்தை தங்களுடைய குறுகிய மனோபாவங்களுக்குப் பாதுகாப்பாக்கி கொள்கிறவர்களினால் தான் படும். அந்த நிலையில், அறிவியக்கத்திற்குத் தற்காப்புக் குணம் கொண்ட போர்முகம் பிறக்கிறது. சமீப வருஷங்களில், தமிழிலக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வளர்ந்த இந்த இயக்கத்தில் பிறந்துள்ள புதுமுகத்தின் நியாயம், இதுவாகத்தான் இருக்க முடியம்

தங்களை அறிவியக்கத்தின் போர்க்குணத்திற்கு இலக்காக்கிவிடுவதிலிருந்து. பார்த்துக்கொள்ளவேண்டிய அவசியம், லட்சியத்தை வாய்மொழி..... குறுகிய மனோபாவகாரர்களுக்கு உண்டு. இதற்காகத் தாங்கள் விரும் சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று, பிறர் கருதவைப்பதற்கான சுயப் பிரபாவங்களில் இவர்கள் இறங்குகிறார்கள்; தாங்கள் புனிதர்கள் என்று புளுகிக்கொகிறார்கள். இவர்களை வழிபடும் கூட்டம் அறிவியக்கத்துக்கு எதிரான வரிசையாக அமையத்தக்க வியூகம் ஒன்றை இதன்மூலம் வகுக்கிறார்கள். அறிவியலாளன் இந்த வியூகத்தையம் ஊடுருவ வேண்டியமை, இன்றைய தமிழில் ஒரு மேலதிகப் பின்னலாகும்.

புனிதப்புளுகர்கள் தங்களையே அறிவியக்கவாதிகளாகக் காட்டிக் கொள்கிறதும் உண்டு. பல வருஷங்களாகவே இந்த வேஷத்தைக் கட்டி ஆடிக்கொண்டிருந்த இவர்களின் அரிதாரப் பூச்சுகள், சமீப வருஷங்களில்தான் கரைய ஆரம்பித்திருக்கின்றன.

இலக்கிய சிருஷ்டித்துறையின் பின்னலான வெளியீட்டு முறைகளைப் புனிதப்புளுகர்களுள் 'புத்திசாலிகள்' கையாள முன்வந்த நிலைமை, இந்தப் பிரச்சினையின் இன்னொரு பரிமாணமாகும். இலக்கியக் கருக்களத்தில் கையாளும் விஷயாம்சத்தில், புனிதப் புளுகு சட்டெனத் தெரியாத வகையில் அதை வெளியிடுவது இவர்களுடைய யுக்திமுறை. இதனை ஒரு விஷேச பிரச்சினையாக, கொல்லிப்பாவை நிர்.12-இல் வெளியான எனது 'கருக்களம்' என்ற கட்டுரை ஆய்வு செய்துள்ளது. மற்றைய லகுவான நேர்முகப் பரிமாணங்களையும் சூழ்ச்சிகளையும், கொல்லிப்பாவை வெளியிட்ட விமர்சன ஊழல்கள் என்ற எனது பேட்டி நூலிலும் அதனுடன் தொடர்பு கொண்ட என இதர எழுத்துக்களிலும் காணலாம்.

தங்களைச் சிலவேளை சீர்திருத்தவாதிகளாகக் காட்டக்கூட முன்வரும் புனிதப்புளுகர்களின் மாய்மாலங்கள், வெறும் மாயமா தளத்தில் மட்டுமே நிலவுகிறவையாகும். தீவிரமான எழுத்தித்தியக்கமாகவோ, இதர நடைமுறைகளாகவோ அவை சாட்சியம் தில்லை, இருந்தும், 'இவை பிறருக்காக விடப்படவேண்டிய வசியமான எச்சங்கள்' என, சில விபரங்களை இவர்கள் அது கழிவுசெய்து வைக்கிறார்கள். இந்த யுக்திமுறையை, சுந்தரராமசாமி தம்முடைய ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற நாவலில் கையாண்டிருக்கிறார்."


ஒரு கலைப்பொருளின் தாரதம்யமாக சமூகநிலைமை பற்றிய தீவிரப்பார்வை அமையுமானால், அது வெறும் துருத்தலாக வெளியே தெரியவேண்டிய திருஷ்டிப் பரிகாரப் பொருளாக அல்லாமல், படைப்பின் அகவடிவங்களினூடே எதிரொலிகளாக வியாபித்துப் பன்முகம் பெறும். ஜே.ஜே.யில் சமூக நசிவின் பிரதிநிதிகள் கோமாளி முகமூடிகளாக மட்டுமே வெளிப்படையான தளத்தில் கட்டித் தொங்கவிடப்படுகிறார்கள். இவர்களுள், சேர்த்தலை கிருஷ்ண அய்யர் சமூகநசிவின் பிரதிநிதியாக்கப்படுகிறார் என்றுகூற, ஒரு பெரிய இடத்தைச் செயற்கையாக உருவாக்குகிறார் சுந்தர ராமசாமி. சேர்த்தலை கிருஷ்ணய்யரின் குடுமி காற்றிற்கு ஏற்றமாதிரி எப்போதும் பறக்கவிடப் படுவதும் விதரணையற்று தலைவர்களுக்குப் பரணிபாடும் அவரது இயக்கமும் பின்னாடி ஆனந்தவல்லி அம்மா என்ற ஆத்மிகக் கவிஞர் பற்றிய விகடங்களும் திருச்சூர் கோபாலன் நாயர் - ஓமனக்குட்டி ஆகியோரைப் பற்றிய விகடங்களும், இந்த கோமாளித்தனமான முகமூடிக் காட்சிகளாகும்; அத்யாவசியமான கழிவுகளாகும். இவற்றை வாசகருக்குக் காட்டி ஏய்த்துவிட்டு, உள்ளூர ஓடும் சுந்தர ராமசாமியின் மதிப்பீட்டு மண்டலத்தை கண்காணாமல் காப்பாற்ற, சுந்தர ராமசாமியின் வலது கையருகில் ரெடியாக நிற்கிறார் வெங்கட் சாமிநாதன் என்பவர்.

ஆனால் ஒரு நாவலின் இயல்பான மதிப்பீட்டுப் பரப்பு என்ற அளவில், ஜே.ஜே. எதை நிறைவேற்றுகிறது என அளவிடுவதே சுந்தர ராமசாமியைப் புரிந்துகொள்ள உதவும். இந்தப் பரப்பு, கதாநாயகனான ஜே.ஜே.யின் அறிவார்த்தக் கிருதாவாகக் காட்டப்படுகிற அவனுடைய தீர்க்கதரிசனமான 'தியரி ஆப் அப்ஹீவல்' அல்ல. ஏனெனில், அந்தத் தியரியை வெறும் புஸ்வாண வெருட்டலாக, பெயரளவில் மட்டுமே நாவலில் ஓரிருவரிகள் குறிப்பிடுகின்றன. பொதுவாழ்வையும் விஷேச இந்தியப்பிரச்சினைத் தளங்களையும் தீண்டி விடாமல், சோடா குடிப்பதைவிட இளநீர் குடிக்கலாம், பஸ்ஸில் இடம்பிடிக்க முண்டியடிக்கிறார்கள், பசுமாட்டின் மீது யாரோ காறிதுப்புகிறான் எனப் பாமரமான தர்மாவேசங்களை மட்டுமே, ஜே.ஜே.யின் அறிவார்த்தக் கிருதா மயிர்களென நாம் சந்திக்கிறோம்.

இவை, நிகழ்ச்சிபூர்வமான பிரச்சினைகளாக மாறி, ஆழமான சிந்தனைத் தொடர்களை உருவாக்கத்தக்கவையுமல்ல. குஷ்டரோகி ஒருவனைப் பார்த்ததின் விளைவாக ஜே.ஜே.வுக்கு ஒரு சிந்தனை ஓட்டம் ஏற்பட்டதே என்றால். நமக்குக் கிடைப்பது உண்மையில் அவனது சிந்தனை ஓட்டமல்ல. மணிக்கணக்காக ஒரு கடையில் அவன் கல்லுப்பிள்ளையாராக உட்கார்ந்திருந்தான் என்ற தகவல் மட்டுமே கிடைக்கிறது. இதற்குப் பின்பு, அதாவது மணிகணக்காகக்குஷ்டரோகியினால் தூண்டப்பட்டுச் சிந்தித்து பின்பு, அந்தச் சிந்தனை  செயல் வடிவம் பெற்றது எப்படி என்றால், ஒரு ரூபாய் நாணயமாக வாகும். ஆனால் சுந்தர ராமசாமிக்கு என்று வாய்த்த குஷ்டரோகி நாவலில் கூறப்படாத ஏதோ ஒரு காரணத்தினால், தன்னை அந்த . அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கிறான். இந்தத் தெளிவின்மையுடன், இதற்கு முன்பின்னாக ஜே.ஜே. அடையும் 'மனப்பாதிப்புகள் என்ற வாசகருக்கு தொற்றாத வியாதிகள். குஷ்டரோகியை முகாந்துரமாக்கி முல்லைக் கல் மாதவன் நாயரின் கம்யூனிஸத் தீர்ப்பை இழக்க போட்டு, கூடவே கருநாகப்பள்ளி பாச்சுப்பிள்ளையையும் பிளாஷ்பாக் உத்தியிலே மாட்டி இழுத்து, இதுவரை இல்லாத சாங்கோபாங்கத்துடன் விகடக்கச்சேரி ஒன்றை நடத்தி முடிக்கிறார் ஆசிரியர். இந்தக் கச்சேரியில்தான் சுந்தர ராமசாமியின் இயற்கை வெளிப்படுகிறது. இதற்கு முந்திய அவசநிலைகளின்போது, அவரது நாயகன் ஜே.ஜே.வுக்குப் பிடித்திருந்தது சிந்தனை உலக மலச் சிக்கல் மட்டுமே.

சிந்தனாவடிவமாக அள்ளி எடுத்துத் தரப்படும் ஜே.ஜே.யின் டயரிப் பகுதி, முதிர்ச்சியற்ற பிரலாபங்களாகவும் பாமரமான தர்மாவேசங்களாகவும்தான் நிறைவுறுகிறது. சுயத்வமான பார்வைகளாகவோ கலைப்பாங்கான வெளியீடுகளாகவோ சிந்தனை அம்ஸம், இந்த டயரிப் பகுதியிலும் பிறக்கவில்லை. ஆனந்தத்தைத் தேடி எங்கோ (எங்கே கள்ளுக்கடைக்கா? ஜே.ஜே. ஒரு மது லோலன் என்பதைக் கவனிக்க) யாவரும் போவதாகப் பிரலாபிப்பதும் அது குளத்துப்பாசி போன்ற சாமான்கள் மூலம் பிறப்பதும் ஜே.ஜே. இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை வானத்தை அண்ணாந்து பார்ப்பதும், மானுடப் பிரச்சினையிலிருந்து ரொமான்டிக் லாகிரி மூலம் தப்பிக்கிற ஒரு மனோ பாவத்தின் பிரதிபலிப்பாகும். இதுவேதான், ஜே.ஜே.யின் குடிப்பழக்கத்திலும் அதன் விளைவான மரணத்திலும்கூட நிறைவுறுகிறது. அதாவது, சோடா குடிப்பதைவிட இளநீர் குடிக்கலாம். அதையும் மிஞ்சி சாராயத்தில் முழுகலாம்.

'உள்ஒளி' என்ற இன்னொரு ரொமான்டிக் பிரயோகத்திற்கு ஏற்ற ஜிகினா வேலைப்பாடுகள்தான், மேலே குறிப்பிடப்படுகிற சிந்தனைச் சங்கதிகள். எப்படி தியரி ஆப் அப்ஹீவல் ஓர் இன்டலக்சுவல் நகாசு வேலைப்பாட்டுக்காக, அதுவும் பெயரளவில் மட்டும் பிராஸ்தாபிக்கப் படுகிறதோ, அதேபோல் செய்யப்பட்ட ஒரு ஆத்மிக வேலைப்பாடுதா இந்த உள் 'ஒளி'. இதற்கு, நாவலில் நிகழ்வுகள், பாத்திர உத்வேகங்கள் மதிப்பீட்டு யாத்திரைகள், மாற்றங்கள், அதிர்வுகள், அகப்பார்வை என எவ்வித ஆதாரமும் இல்லை . இதுமட்டுமல்ல, உள் ஒளி பல சுந்தர ராமசாமியின் ஞானசூன்யம் மட்டுமே நாவலில் அங்கம் பொத்துக்கொண்டு வெளிப்படுகிறது.


புனிதப்புளுகர்களைப்பற்றிய அடிப்படை பிரச்சினையே, அவர்கள் தங்களுக்கு எனப் பாராட்டும் பிரபாவங்களின் அத்திவாரங்களை அவர்கள் அறியாதவர்கள் என்பதுதான். வெறும் வேஷங்களும் உபதேசங்களும், பெளராணிக வெருட்டல்களும்தான், அவர்களுடைய கைச்சரக்குகள். சுந்தர ராமசாமிக்குக் கனவுகளை ஆய்வதுகூட அலர்ஜி. இது நாவலில் இரண்டு இடங்களில் பிரஸ்தாபிக்கப்படுகிறது. கனவு என்பது. 'உள் ஒளி' சம்பந்தப்பட்ட மனோஉலகத்துப் பிரச்சினை என்பதை உணரத் திராணியற்றவன், மனோரூபங்களைத் தாண்டி 'உள்ஒளி'யைத் தரிசிப்பது எப்படி? இது மட்டுமல்ல, ஆனந்தமும் அந்தர்யாம் அழகும் கவித்துவமாக மலர்ச்சி அடையாமல், வெளியீட்டுக் குப்பையான ஜே.ஜே.யின் டயரிக் குறிப்புகளாகவா நிறைவுறும்? வாழ்வின் - மனிதக்கணங்களின் - நிறைவும் குறைவும், குழந்தைமையும் மிருகத்தனமும், உள் ஒளிக்காரரின் அவதானங்களில் மனிதமுகம் கொள்ளவில்லை.

உதாரணமாக, ஆடுமாடுகளை கிராமவெளியில் மேய்க்கும் ஈனச் சிறுவர்கள் போன்றோரின் மூலம், எவ்வித மனப்ரகாஸத் யும் ஜே.ஜே. உணரவில்லை. அவன் கண்ணில்பட்டது குளத்துப் பாசிதான். இதுவே அவனது மண்டைக்குள்ளும் இருந்து கிளம்புகிறது. இது மட்டுமல்ல, மனிதப் பிராணியின் விசித்ர உள்முரண்கள் சித்திரம் பெறவில்லை .

தன்னைப் பிறர் ஒதுக்குகிறார்கள், தன்னைப் பிறருக்குப் பிடிக்க வில்லை என்ற மனக்கலவரமும் உணர்வும்தான், ஜே.ஜே.யிடமிருந்து சுந்தர ராமசாமியின் உள் ஒளிப்பண்பாகப் பொத்துக் கொண்டு வெளிப்படுகிறது. இது, உள் ஒளிப் பாதையில் இறங்கிய ஒரு மனப் போர்வீரனின் இயற்கையல்ல; பிறரைக் கவரத் தோலை மினுக்குகிற மனத்தேய்வின் இயற்கை. இதன் ஒரே அக்கறை, தன்னைப் பிறர் விரும்புகிறார்களா என்பதுதான். இத்தகைய மனோபாவகாரன் தன்னை ஆய்வதில்லை. ஜே.ஜே.யும் பிறரிடம், தன்னை அவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டு, அவர்கள் உண்மை பேசதெரியாதவர்கள் என்ற திசையில் குடைகிறானேயன்றி, தனது தற்பரிவைச் சந்திக்கத் தயாராய் இல்லை. எனவே, எல்லோரிடமும் எப்போதும் பேரன்புடன் இருக்கவேண்டும் என்ற இவனுடைய கனவு, சுந்தர ராமசாமி என்ற சமூக ஜந்துவினுடைய தோல்மினுக்கிற்கு அளிக்கப் படுகிற ரொமான்டிக் பவிஷுதானேயன்றி, ஆன்மிகப் பரிமாணத்தை அடைகிற ஒன்றல்ல.

பேரன்பு பண்ணக் கிளம்பிய ஜே.ஜே., சந்திக்கும் முதல் மனிதனாலேயே சீண்டப்பட்டு உணர்வுநாசம் பெறுகிறானாம். (ஏன் பேசாமல் ஏதாவது கோயில் கலாச்சாரம் நடக்கிற இடத்துக்கு போவது தானே?) அப்புறம், ஜே.ஜே.யின் சிந்தனை தொடர்ந்து வேலை செய்கிறது. இத்தகைய உணர்வு நாசத்திற்கு - அதாவது, பிறரால் சீண்டப்பட்டு பேரன்பைப் பறக்கவிடுகிற நிலைக்குப் பயந்துதான். மகான்கள் ஓடி ஒளிந்து கொண்டார்களோ என உசாவுகிறான் ஜே.ஜே. இங்கேதான் ஜே.ஜே.யின் மதிப்பீட்டு மண்டலம் வெளிப்படுகிற அதாவது சுந்தர ராமசாமிக்கு மகான்களாகத் தென்படுபவர்கள் யாரென்பது இங்கே பெறப்படலாகும்: 1. அவர்கள் தங்களைப் பிறர் மதித்துப் போற்றவேண்டும் என்ற நோக்கமுள்ளவர்கள். 2. அவர்களை மதித்துப் போற்றாவிட்டால் போச்சு; தங்கள் கமண்டலங்களிலே வைத்திருக்கிற பேரன்பைச் சாக்கடையில் கொட்டி விட்டு ஒளிந்து கொள்வார்கள்.

அதாவது, மகான்கள் என்று சுந்தர ராமசாமி பிரபாவம் பாராட்டுவது. மேற்படி லட்சணத்தின் பிரகாரம், சமூகவசதிகளைப் பெற்ற மேல் கட்டுமான ரொமான்டிக் கேஸ்களைத் தானேயன்றி, உண்மையான மகான்களை அல்ல. ஏனெனில், உண்மையான மகான்களைப் பிறரது வெறுப்பு, பழிப்பு, சிலுவை எதுவுமே பாதித்து, அவர்களது பேரன்பை உசுப்பிய சரித்திரமே கிடையாது. அவர்கள் ஏகாந்தத்தை நாடுகிற ஒரு அகமுதிர்ச்சி பெற்றவர்களேயன்றி, சுந்தர ராமசாமி புரிந்து கொண்டுள்ளது போல், அவர்களது தனிமை 'ஓடி ஒளிதல்' அல்ல. உண்மையில், ஓடி ஒளிந்தவர்கள் மகான்களுமல்ல.

இந்த இழையைப் பிடித்தால்தான், இசைத்தட்டுச் சேகரிப்பு என்ற எக்ஸ்பென்ஸிவ் பொழுது போக்கைக் கொண்ட அரவிந்தாட்ச மேனனைப் போன்றவர்களை - மருமகளின் வீணாகானத்தின் மூலம், 'சங்கீத ஞானமுள்ள டாட்டர் இன் லா' வேண்டும் என்ற கனவுதனை நிறைவேற்றுகிற அரவிந்தாட்ச மேனனைப் போன்றவர்களை - உருவாக்கத்தான் மகான்கள் பாடுபட்டார்கள் என்று சுந்தர ராமசாமி அடையும் புளகாங்கிதம் புரியும். அதாவது, பிறரது வேதனை கண்டு உருகும் உள்ளங்களை உருவாக்க மகான்கள் பாடுபடவில்லை; சமூகச் சீரழிவுகளைக் கண்டு மனம் கொதிப்பவர்களை உருவாக்க மகான்கள் பாடுபடவில்லை.

இதற்கு அடுத்த தளம், சம்பத்தின் கனவும் அதைப் பிரதிபலித்து ஜே.ஜே. வரைந்த ஓவியமும் ஓவியத்தைப் பார்த்த டாக்டர் பிஷாரடி எஸ்.ஆர். ஆகியோரது அபத்தப் படலங்களும். இந்தியாவின் மகா கேவலத்துக்கு இங்கே முலாம் போடப்படுகிறது. ஆயிரக்கணக்கான வருஷங்களாக மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட பறையர்கள், சித்திரப் பொருள்களாக ஜே.ஜே.யின் சர்க்கஸ் ஓரு சேவை மூலம் உந்நதம் அடைகிறார்கள். இந்தத் தொடரிலே, சம்பத் என்ற பிராமணப் பாத்திரம் தனது கனவில் அடிப்பட்டுச் சாகிற விஷயம் மட்டுமே மிகமிக அக்கறையுடன் விஸ்தார வர்ணனை பெறுகிறதேயன்றி, பறையர்களின் கதை அல்ல. அவர்களது ஆடையின்மையை பிஷாரடியும் எஸ்.ஆரும் மனோவக்ரத்தோடு பார்க்கிறார்களேயன்றி, அவர்களைச் சித்திரமாக்கிய ஜே.ஜே. மூலம்கூட, அவர்கள் எத்தகைய சித்ரவதைகளுக்கு இன்னும் அங்கங்கே ஆளாகின்றனர் என்பது பிரதிபலிக்கப்படவில்லை. அவர்களுக்காக பிராமணன் செத்தான் என்ற தாத்பர்யம்தான், இந்தப் பகுதியின் கிசுகிசு லெவலில் வெளிப்படுகிறது. ஆனால் உண்மையில் இன்று ஒரு ஹரிஜனர் டாக்டர் ஆகி கிராமப்புறங்களுக்குப் போனால், அவர் தமது கடமையைக்கூட செய்ய முடியாத விதமாக அங்கே தீண்டாமைச்சூழல் இன்றும் நிலவுகிறது.

இது கிராமிய உலகம் என்றால், நகர்ப்புற இண்டலக்சுவல் உலகில் என்ன என்பதை அறிய வெகுதூரம் போகவேண்டியதில்லை. வெறிநாய்களைப்போல, யார் யாரை நோக்கிப் பாய்கிறார்கள் என்பதை சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ந.முத்துசாமி கும்பலின் யாத்ரா பத்திரிகைப் பக்கங்களில் தரிசிக்கலாம். இதன் விபரங்களுக்கு விமர்சன ஊழல்கள் என்ற நூலையும் பார்க்கலாம்.

புனிதப்புளுகர்களுக்குப் பொருள் மீதும் அதைத் தமக்கு சலுகையாக அளிக்கிற போஷகர்கள் மீதும்தான் மதிப்பு உண்டேயன்றி, திறன் மீதோ உந்நதத்துவத்தின் மீதோ அல்ல. ஆனால் பொருள் ரீதியான பிரதிமைகளுக்கே உந்நதப் பவிஷு கொடுக்கிற வகையில் சிந்தனை, கலாச்சார மதிப்பீடு ஆகியவற்றை இவர்கள் 'பண்ணுவார்கள். இப்படிப் 'பண்ணப்பட்ட' நாவல்தான், மகான்களுக்கு விசித்ர லட்சணம் காட்டுகிற சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள். இந்த நூலில், ஜே.ஜே. என்ற ஜோஸப் ஜேம்ஸ், ஏன் என்று ஆசிரியரால் காட்டப் படாத காரணத்துக்காக, குடித்துச் சீரழிகிறான். ஜே.ஜே.யைப் பற்றிய ஆசிரியரின் ஓட்டைகள் சிலவற்றுள் இதுவும் ஒன்று. ஜே.ஜே., பொருள் ரீதியான அத்திவாரங்களை உதாசீனம் செய்தமைதான் நாவலில் தெரிகிறதேயன்றி, பணத்துக்காக ஏதும் தரக்குறைவாக நடந்தான் என்ற விபரம் இல்லை. ஆனால், ஜே.ஜே.யின் சீரழிவிற்குப் பொருளின்மையே காரணம் என்று காட்டுவதோடு, இதை ஒரு மதிப்பீடாக்கி, பொருள் நாட்டத்தினை உதாசீனம் செய்த பாரதி, புதுமைப்பித்தன் இருவரையும் சுந்தர ராமசாமி மறைமுகமாக இழித்துரைக்கவும் முயற்சிக்கிறார். பாரதி ஜமீனுக்கு தூக்கு எழுதினான் - பித்தன், பாகவதருக்கு வசனம் எழுதினான் என்கிறார். இவர்கள், பிரிட்டீஷ் ராஜீயத் தொண்டர்களாக மாறி இருந்தால்தான், இழிவுரைக்கு இவர்களை இலக்காக்குவது நியாயமாகும். பட்டினி கிடந்து சாகிறநிலையிலும் இவர்கள் அதைச் செய்ததில்லை. அதாவது, இவர்கள் தங்கள் அடிப்படை லட்சியத்தைவிட்டுக் கொடுக்காமல், ஒரு சிறிதளவு சுயபாதுகாப்புக்காகப் நாடியதை சுந்தர ராமசாமி பழிப்பதன் அடியில், ஒரு சிறு மனப்பான்மையே செயல்படுகிறது. ஏனெனில், சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளரின் எழுத்தோ வாழ்வோ , பாரதி, பித்தன் போன்றவர்களினது போல், லட்சியார்த்தமும் கடினமான பின்னணிகளும் இதன் விளைவாக வீர்யதர்சனமும் உள்ளவையல்ல, ஆனால் வியாபாரார்த்தமான சமூகஜந்துவாக நடத்துபவர். இவருக்குப் பித்தன் போன்றவர்களது அகநெருப்பும் அதன் உள்நிலையில்... அனுபவித்ததாக அவர்களது எழுத்தில் சாட்சியம் பெறும் சுதந்திரமான மனோவிரிவும் எட்டாதவை. எனவே, தனது லௌகீக சௌகர்யங்களின் தளத்தில் நின்று, அவர்களை நோக்கி, எப்போதோ ஓரிரு கணங்களில் அவர்களது சிறுபிறழ்வு அடைந்தார்களா என்று கண்ணில் எண்ணெயை விட்டுத் தேடி, கண்டுபிடித்து 'வவ்வவ்வே' காட்டுகிறார் இத்தகையவரின் பார்வையில் பாரதி, பித்தன் போன்றவர்களை உருவாக்குவதற்கு மகான்கள் பாடுபடவில்லை; அரவிந்தாட்ச மேனன் சுந்தர ராமசாமி போன்றவர்களை உருவாக்கவே, மகான்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.

இவ்வளவுக்கு ஒரு போலியான உந்நதத்தை எழுப்ப முயற்சித்தால், தானறியாமலே சறுக்கியடித்துக் கீழ்த்தர மனோபாவங்களைச் சித்தரிப்பதிலிருந்து தப்பிக்கமுடியுமா என்ன? உண்மையில், புனிதப்புளுகு மண்டலமே வக்ரமண்டலம்தான் என்பதையே இது உணர்த்தும். ஜே.ஜே.யை சந்திக்க அவனது இல்லத்துக்கு போன கதையாளன் பாலு, அங்கே ஜே.ஜே.யினது மனைவி சாரம்மா ஜோஸப் தொடை தெரியத் தூக்கிக் கட்டிக்கொண்டு, கோழிப் பராமரிப்பில் ஈடுபட்டிருந்ததைத் தான் தரிசிக்கிறான். விதவையான பின் அதே சாரம்மா ஜோஸப், கதையாளன் பாலுவை டெலிபோன் மூலம் சிரித்துச்சிரித்து நீண்ட ரயில் பயணத்துக்கு அழைப்பதும் அரவிந்தாட்ச மேனன், மருமகளுடன் சங்கீத சம்பாஷணை பண்ணுவதும், உள் ஒளி' என்ற ஜிகினாத் தியானத்துக்கு எட்டாத வக்ரங்களைப் பிரதிபலிப்பவை.

மேனனை அவரது மகன் காரில் கொண்டு போய் லைப்ரரியில் விட, அவர் ஏதோ திருட்டுப்புணர்ச்சிக்குப் போகிற தோரணையிலேயே கடலோரமாக நடந்து மருமகளின் வீணை இசைக்கு வருகிறாராம். மருமகளுடன் மாமனாரின் சம்பந்தம்தான் இங்கே முக்கியம்; அவளது கணவனும் தனது மகனுமாக உள்ள ஜீவனைப் பற்றி ஒரு பேச்சு மில்லை . அதில் 'கவர்ச்சி' இராதே! வாந்தி வருகிறது!

ஆனால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகத் தங்களை ஸ்தாபித்துப் பழகிப்போனவர்களிடம், 'உள்ஒளி'யிலிருந்து சிருஷ்டிகரம் வரை எந்த விவகாரத்திலுமே நுட்பமான பொறுப்புகளை எதிர்பார்க்க முடியாது. திறன் இருப்பவர்களிடம்கூட, அவர்கள் சிறுமைகளுக்கு மகுடம் சூட்ட முயற்சித்தால், வெளியீட்டுச்சக்தி தங்களை தாங்களே அம்பலமாக்கும் சக்தியாகத்தான் தொழில்படும். சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதை நாவலும் சரி, ஜே.ஜே சில குறிப்புகளும் சரி இத்தகைய சுயஅம்பலங்களை காட்டத் தவறாதவை யாகும். இரண்டிலுமே, திருவிதாங்கூரின் பழைய சமஸ்தானத்தின் பிரதிமைகள் செல்லமாகப் பாதுகாக்கப்படுகின்றன - விமர்சனங்களுக்கு அப்பாற்படுத்தப்படுகின்றன. புளிய மரத்தில், சாக்கடைப் பிராந்திய நாற்றத்தைத் தாமே நுகரும் வரை அறியாது பரிபாலனம் செய்த ராஜாவுக்கு ஒரு ரொமான்டிக்கான பரிவுகாட்டுகிற அதே சுந்தர ராமசாமி, ஏழைக் குழந்தைகளுக்குப் பால் வார்த்த அமெரிக்கன் மிஷின் பாதிரியாரை, தமது விகடக்கச்சேரிக்கு ஆட்படுத்துகிறார். ஜே.ஜே.யில் பழைய சமஸ்தானத்து நிழல்கள், ஓடுகிற ஓட்டத்தில் சிராய்க்கப்பட்டு விடாமல் விமர்சனத்திலிருந்து தப்பிக்கவைக்கப் படுகின்றன. ஆனால் குறியீட்டின் வழியாக அவை குதிரைகளின் வடிவம் பெற்று, அதன் சாயல்கள் சுந்தர ராமசாமியின் பிரக்ஞையை மீறியே போற்றுதல் பெறுவது கவனிக்கத்தக்கது.

பழைய மனோபாவகாரர்களான பிஷாரடியும் எஸ். ஆரும், காந்தியின் ஆலயப்பிரவேச இயக்கத்தை ஜே.ஜே. வரைந்த ஓவியத்தில் சந்தித்த கட்டத்தில், அவர்கள் உண்மையில் அன்று பட்டக் கொதிப்பும் ஆத்திரமும் தந்திரமாக மறைக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பதிலாக இவர்கள், ஹரிஜனப்பிரச்சினை சம்பந்தமாக, வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத பாப்பாக்கள் போல் சுந்தர ராமசாமியால் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறார்கள். எனவே, சமூகவெறிகளின் மூர்க்கங்களைப் பாதுகாப்பதற்காக, ஒரு திறனாளி தனது முழு சக்தியையும் பச்சை விபச்சாரம் பண்ணிய அபார சாதனை, இந்த ஜே.ஜே. சில குறிப்புகள்.

சமஸ்தான ராஸலீலா மனோபாவம்தான் ஓமனக்குட்டிக்கும் ஜே. ஜே.க்கும் இடையில் பொத்துக்கொண்டு வருகிறது என்று கண்டால்தான், முப்பது மணிநேரம் துஷ்யந்தனும் சகுந்தலையுமாக இருந்தும் கூட, ஓமனக்குட்டியின் வயிற்றில் ஆயிற்றா என்ற விபரம் ராஸலீலைக்கு ஒத்துவராது என ராமசாமி தவிர்த்ததை உணரலாம். 

லட்சியமும் அதன் பெயரால் செய்யப்படுவதும், ஒன்றை ஒன்று அநுசரிப்பதாக இருப்பதுதான் விஞ்ஞானபூர்வமாகும் என்பதை, உணராததின் விளைவுகளுள் ஒன்று மேலே கோடி கட்டப்பட்டுள்ளது. இழிவான உபாயத்தின் மூலம் உந்நத லட்சியத்தை அடைய முடியாது. இது, விஞ்ஞானக்கூடத்திலேயே நிரூபணம் பெற்ற ஒன்று. மெய்மையின் மூலமே மெய்மையை அடைதல் - சுதந்திரத்தின் மூலமே சுதந்திரத்தை அடைதல் - புனிதத்தின் மூலமே புனிதத்தை அடைதல் - இது கடினமானது, பரிசோதனைகள் நிறைந்தது, பக்குவத்தை விளைவிப்பது

புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பிலுள்ள தலைப்பற்ற இறக. கதையில், காலங்காலமான ஒரு கேள்வி எழுதப்படுகிறது. மிக உயரிய லட்சியம் யாரோ ஒருவனாலேயே அடையப்படும்; அவ்விதம் பாடு ஒருவன் மட்டும் அடைவதால் உலகுக்கு என்ன பயன் என்பது தோன் இந்தக் கேள்வி, மனித சமூகம் உள்ளவரை கேட்கப்பட்டுக்கொன்ன இருக்கும். ஆனால் சுந்தர ராமசாமியின் உள் ஒளிக்கார நாயகன் ஜே.ஜே.க்கு, இந்தப் பிரச்சினையின் வால்நுனி ரோமம்கூட சிலிர்ப்புக் காட்டவில்லை. பந்தாட்டத்தைக் குறியீடாக்கி, குழுதான் முக்கியம் என்கிறான் அவன். பேசாமல் 'ஜாதிதான் முக்கியம்' என்று சுந்தர ராமசாமி பச்சையாக எழுதியிருந்தால், நான் புதுமைப்பித்தனைப் போன்ற ஆழ்ந்த தர்சிகளையோ அவர்கள் எழுப்பிய விசாரங்களையோ இழுத்திருக்க மாட்டேன். உள் ஒளியின் அந்தரங்கத்தை உணராமல், குழு - அதாவது ஜாதிகள் - முக்கியம் எனக் கிசுகிசுக்கிற ஒரு எழுத்து வளைவுக்குள், உபநிஷத்துக்கும் கீதைக்கும் ருத்திராட்ச கொட்டைகளுக்குரிய மதிப்புதான் இருக்க முடியும். எனவே, ஆல்பர் காம்யுவிடம் சுந்தர ராமசாமியின் பாத்திரம் உபநிஷத்துக்குப் பதிலாக, 'இந்தாங்கோ, உங்க பேருக்கு மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில்வே அர்ச்சனை பண்ணின பிரசாதம் புடிங்க,' என்று கொடுத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

இவ்வளவு நுட்பமாகப் பார்த்து வாசிக்கத் தெரியாத ஒரு 'பாமர இலக்கிய ரஸனை'யின் பார்வையில், சரித்திர நாவலாசிரியர் திருச்சூர் கோபாலன் நாயர் நையாண்டி பண்ணப்படுவதுதான் தென்படும். சம்பத்தின் கனவு பற்றிய வர்ணனையில், திருவிதாங்கூர் மஹாராஜா தமது மதிநுட்பத்தால் எட்டுவீட்டுப் பிள்ளைமாரிடமிருந்து தப்பித்தது போன்ற லாவணிகளின் அடியில், திருச்சூரின் சரடுகளுக்கு ஆதாரம் இருப்பது தென்படாது. உண்மையில், சுந்தர ராமசாமி எந்த மஹாராஜாக்களின் மதிநுட்பங்களையும் சாகஸங்களையும் கிசுகிசு லெவலில் புகழ்கிறாரோ, அவர்களைப் பற்றிய முழுவிபரங்களும் நமக்குத் தெரிவராதவை என்பதுதான் இங்கே முக்கியம். எவனோ சரித்திரக் கதை என்று, உண்மைக்குப் பொருந்தாதவற்றை எழுதினதில் தான் ராமசாமிக்குச் சங்கடம் என்றால் மஹாராஜாக்களைப் பற்றிய உண்மைகளையும் அவர்களது பரிபாலன லட்சணத்தையும் இவர் அம்பலப்படுத்த முற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருச்சூரைப் பற்றி விகடகச்சேரி பண்ணுவதுக்குமேல், இவர் இம்மியும் இது விஷயத்தில் நகரவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தான லட்சணத்தைப் புகழ செய்கிறார். எனவே, நாம் ராமசாமியாருக்கும் அவரைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடுகிறவர்களுக்கும்  முன்னிலையில், சில சரித்திர விபரங்களைக் கொண்டு வருவோம்.

 திருவிதாங்கூரின் மேற்படி மதிநுட்பக்கேஸான மார்த்தண்டவர்மன், தமது மந்திரி நீலகண்டபிள்ளை கிறிஸ்துவராகி கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்ததுக்காக, அவரைக் காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை, செய்து, இறுதியில் கொலை செய்திருக்கிறான். இது'. கன்னியாகுமரி மாவட்டத்துக் கிறிஸ்துவ சரித்திரத்தின் மிக முக்கியமான அத்யாயம். கிறிஸ்துவ நாயகனைவைத்துக் கதை பண்ணி இருக்கும் சாமியாரின் பிராந்திய மனோவியலில், இதன் வாடை கூட வீசவில்லை என்றுதான் தோன்றும். ஆனால், இதற்கும் ஒரு கிசு கிசு லெவல் உண்டு. சம்பத் என்ற பிராமண பாத்திரம், தனது கனவில் அடிபடுவது, எட்டுவிட்டுப் பிள்ளைமாருக்கு மேனாட்டிலிருந்து வந்து கைதியாக இருந்த ஒருவன் செய்துதந்த ஆயுதங்களால், அதாவது, மேனாட்டுச் சமத்துவ மதிப்பீடுகள் இந்திய சமாதானத்தை எதிர்த்தமை, இவ்விதமாக வக்ர உதாரணம் பெறுகிறது.

தமது மதிநுட்பத்தை உபயோகித்து வர்மன் பண்ணிய காரியம் எது? திருவிதாங்கூர் ராஜ்யத்தைப் பத்மநாபன்வாமி கோவிலுக்குள் உள்ள கல்லுச்சாமிக்கு அர்ப்பணித்து விட்டு. ஒரு ஹிரண்ய கர்ப யாகத்தின் மூலம் பிராமணன் ஆனான் என்றால், அப்போதுதான் அவனது மதிநுட்பத்தின் கையாலாகாத்தனம் புரியும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களிடமிருந்து தன்னையும் ராஜ்யத்தையும் காப்பாற்ற ராஜா செய்த இது, வெறும் கிராமியத் தந்திரமேயன்றி ராஜரீக மதிநுட்பமல்ல, சரித்திர கதியைப் பின்னே தள்ளிப்போட்ட வேலையே அன்றி, நிகழ்கிற நிலைமைக்கு வளைந்து கொடுக்காமலே சரித்திரத்தின் முன்னேற்ற மதிப்பீடுகளையும் உருவாக்குகிற ராஜதந்திரமல்ல; ஒரு வீரனுக்குரிய செயல்கூட அல்ல. இத்தகைய ஒருவனால், வேறு ஒரு மதத்தை அதிலும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்ட சமூக சமத்வத்தை அடிப்படை மனோபாவமாக்கிய கிறிஸ்துவம் போன்ற ஒரு மதத்தை. மனிதக் தன்மையோடு சந்தித்திருக்க முடியுமா என்ன? மனிதக்தன்மையும் தீரமும் இணைபிரியாதவை. மாற்றுக்கருத்தினை மனிதத்தன்மையுடன் சந்திக்கத் திராணியற்ற மார்த்தாண்டவர்மனின் சரித்திரவடிவம், பரிசீலனைக்கு உரியதே அன்றி ராமசாமிகளின் லாவணிகளுக்கு அல்ல.

ஏதோ காந்தி வந்ததும் ஹரிஜனர்களுக்கு சூரியோதயமாயிற்று என்று, ஜே.ஜே. வரைந்த ஓவியத்தையும் சம்பத்தின் கனவையும் மட்டுமே சித்தரித்த ராமசாமி, எத்தகைய மகாகேவலமான ஒரு சட்டவியலின் சரித்திரத்தை மழுப்புகிறார் என்பது வியப்புக்குரியது. உண்மையில், இங்கே செயல்பட்டிருப்பது மாகேவலமான ஒரு அயோக்யத்தனமாகும்.

பிராமணனாகத் தம்மை மாற்றிக்கொண்டவனின் ராஜ்யத்தில்... சலுகைகளையும் பெற்றிருக்கக்கூடியவர்கள் யார் என்பது சொல்லாமல் புரியும். ஆனால், இந்த சலுகையின் யதார்த்த நிலையான சட்டவியல் எவ்விதம் இயங்கியது என்பது விவரிப்புக்கு உரியது. அங்கே மனு தர்மமே சில குறிப்பிட்ட நிலைகளில் பவித்திரச் சட்டமாயிற்று: ஒரு மாட்டை பிராமணனல்லாதவன் கொன்றால், மனிதனைக் கொன்றற்கு உரிய ஆயுள் தண்டனை வரை அவனுக்குக் கிடைக்கும். ஆனால் ஒரு மனிதனை ஒரு பிராமணன் கொன்றால், நாலைந்து வருஷங்கள் அல்லது மாதங்கள் வரைதான் அவனுக்குச் சிறை. இது, பிரிட்டீஷ் காலத்தில்கூட திருவிதாங்கூரில் செயல்படும்படியாக, அங்கே ராஜாங்க மதிநுட்பங்கள் ஏற்பாடுகளைப் பண்ணி இருந்திருக்கின்றன. அதே சமயம், அந்த மதிநுட்பத்தின் அத்தகைய சட்டவியல் போக்கின் விளைவாக, ஒரு உயர்ஜாதிக்காரன் ஒரு கொலையைச் செய்துவிட்டுக் குற்றத்தைக் குறவர்கள், ஹரிஜனர்கள் போன்றோர்மீது சுமத்தலாம். இத்தகைய ஒரு காட்டுமிராண்டி உலகினுள் ஊடுருவிய, பிரிட்டிஷ் தீட்சண்யமும் காந்தீய மனிதார்த்தமும்தான் கொண்டாடத்தக்கவை. இவற்றின் வளர்ச்சிதான் இன்று பேணப்படவேண்டும். இதைவிட்டு, இன்றைய மலையாள கம்யூனிஸ மனோபாவத்தை (தமிழக திராவிட இயக்கத்தை நையாண்டி பண்ணத் திராணியற்றுத்தான் ராமசாமி அங்கேபோய் நின்று மலையாளிகளை நையாண்டி பண்ணுகிறாப் போலிருக்கிறது!) நையாண்டி பண்ணும்போதே, பழைய காட்டுமிராண்டித்தனத்தைப் பூசி மெழுகிப் புகழ்வது கீழ்த்தரமானது; அருவருப்புக்கு உரியது. இன்றையது நையாண்டிக்கு உரியது என்றால், நேற்றையதை நோக்கி நாம் காறித் துப்பவேண்டும்.

இன்று, மிகவும் அருவருக்கத்தக்க சூழல்கார வெங்கட்சாமிநாத மனோபாவத்தின் பாதுகாப்புத் தமக்கு இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான், சுந்தர ராமசாமியின் இந்த சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது. நமது சூழல்காரரின் அந்தப் பாதுகாப்பு இருக்கிறதே, ஆஹா! எவ்வித அறிவார்த்த ஆதாரமுமற்ற ஒரு ஆஸ்பத்திரி கேஸ் தரும் பாதுகாப்பு அது. அவர்போன்று அறிவுலகத்துடன் சம்பந்த இல்லாதவர்தான் ராமசாமி யாரும். அதற்குப் பரிகாரமாகத்தான் அறிவியல் துறையையும் அறிவாளியையும் வைத்துக் கதைபண்ண முயன்றிருக்கிறார் இவர். எப்பேர்ப்பட்ட அறிவு! எப்பேர்ப்ப அறிவாளி! லெனினின் முழுப் பெயராகப்பட்டது, விளடிமிர் இலியிச் உலியனோவ் லெனின் என்பதை, இந்த அறிவு நூலிலிருந்து அறியலாம். ஆனால், இந்நூலின் அறிவாளிக் கதாநாயகனுடைய அலாதிய டயரிப் பகுதிகளில்கூட, உள்ளூரில் சாகும் பறவைகளின் உடல்கள் பற்றியோ, அவற்றுக்குச் சாவுவரும் விதம் பற்றியோ அறிய முடியாது. ராமசாமீய ஞானத்தின்படி, எங்கோ (எங்கே காசி, ராமேஸ்வரத்துக்கா?) போய் அவை உயிரை விடுகின்றனவாம். மனிதரும் கடைசி காலத்தில் இப்படித் தொலையவேண்டும் என்பது ராமசாம்ய நாயகனின் அபிலாஷை. இது, இந்த நாவலைப் படித்த எனக்குத் தோன்றி மறைந்ததுதான். நாவலாசிரியரது இலக்கிய வாழ்வின் முடிவு இவ்விதம் ஏற்பட்டிருந்தால் கௌரவமாகவே இருந்திருக்கும். மரம்தோறும் துயிலும் பறவைகளை இரையாகக் கொள்ள சிறுமிருகங்கள் உள்ளன என்ற கிராமீய அவதானம்கூட இல்லாத நாவலாசிரியருக்கு, வேறு எது கௌரவமாக முடியும்?

சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல், ஏதோ பெரிய எதிர்ப்புகளைக் கிளப்பியதாகக் கூறுகிறார், 21.09.85 இண்டியன் எக்ஸ்பிரஸில் சு.ரா.வைப் பேட்டி கண்டவர். அந்த நாவலை ஆய்வுரீதியாக நான் விமர்சித்து, அதில் இந்திய சரித்திரமும் காந்தீயப் போரும் அதன் பிரதி பலனங்களும் மழுப்பப்பட்டுள்ளமையை, மேலே காட்டியுள்ளேன். ஹரிஜன் ஈடேற்றத்துக்காகப் பிராமணன் கொல்லப்பட்டான் என்ற பொய்மையைப்புகட்டும் தந்திர நோக்கம் நாவலில் உள்ளதை, நான் காட்டி உள்ளேன். ஒரு மாட்டைக் கொன்றவன் பிராமணனல்லாதவன் என்றால் அவனுக்கு ஆயுள் தண்டனை, ஒரு மனிதனைக் கொன்றவன் பிராமணன் என்றால் அவனுக்கு ஐந்து ஆண்டுச் சிறைத்தண்டனை மட்டுமே என்ற ரீதியில், பிரிட்டிஷ் காலத்திலேயே, நாவலின் காலத்திலேயே நடைமுறையிலிருந்த சமூகநிலையைத் திரிபுபடுத்துகிறது நாவல். இந்த நாவல் அபரிமிதமாகப் புகழப்பட்டதுக்குப் பதிலாக, நான் எழுதிய, மேலே புதுப்பித்துத்தந்துள்ள கட்டுரையினை, ஞானரதம் பத்திரிகை ஆசிரியப் பொறுப்பிலிருந்த கே.வி.ராமசாமி பிரசுரித்தார் (ஞானரதம், ஏப்ரல் 1984). இத்தவறை இவர் செய்தமைக்காகப் பத்திரிகையின் உரிமையாளரான அப்பாஸ் இப்ராஹிம்', கே.வி.ராமசாமியைப் பதவி நீக்கம் செய்துள்ளார். நாவலுக்கு இந்த விதமான எதிர்ப்பு ஏதும் இல்லை. நாவலை எதிர்க்கவேகூடாது என்ற கெடுபிடிதான் சு.ரா.வின் ஆதரவாளர்களுடையது. தமது நாவலை தமது வாயாலேயே பேட்டியில் சு.ரா. வெற்றிகரமானதாகக் கூறுவது இதில் உச்சக் கட்டமான கெடுபிடி சு.ரா.வைப் பேட்டி கண்டவரைப் போன்று இலக்கிய ஸ்மரணையற்றவர்களுக்கு மட்டுமே இந்நிலை வசதியானது.

க.நா.சுப்ரமண்யத்தால் ஒருசமயம் நம்பிக்கை ஊட்டக்கூடிய எழுத்தாளராகக் குறிப்பிடப்பட்ட சு. ரா., மொழியைக் கையாளும் திறமையைமட்டும் வைத்துக்கொண்டு வாழ்வின் மீதான தர்சனத்தையும் அபிமானத்தையும் வெளிப்படுத்தமுடியாது. அதற்குக் காரணம், இன்றைய சமுதாய அரசியல் நிலைபாடுகளில், ஒரு ஆரோக்யமான நேர்மையான அணுகுமுறையை அவரால் கையாள முடியாமையில்தான் இருக்கிறது. இவர் பிராமணிய ஜாதிய இந்துக் குழுவைச்சார்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராய் உள்ளார். நேற்றைய தீண்டத்தகாதவர்கள் இன்று மரியாதைக்குரிய இனமாகப் பரிணாமம் பெற்றுவரும். மனிதாபிமான அடிப்படையிலான நவீன சமுக அமைப்பில் பொருந்திவராது. இதன் விளைவுதான், சு.ரா. போன்றவர்கள் சமகா கருத்துக்களிலிருந்து தூர விலகிநிற்கும் அதேநேரத்தில் அவர் கூடிக்குலாவுவதாகப் பாவனை செய்தலும். 

மௌனியைப் பொருத்தவரை, சு.ரா.விடம் புத்திசாலித்தனம் மட்டும் தான் உள்ளது. இது பாராட்டாகப் பேட்டி கண்டவரால் எடுத்தாளப்படுகிறது. புத்திசாலித்தனம் கலையைக் கொன்று விடும் என்ற கருத்தை, மௌனி அதன் தொடர்ச்சியாகக் கூறியது இங்கே, மழுப்பப்பட்டுள்ளது. க.நா.சு., ஜே.ஜே. சில குறிப்புகள் புத்திசாலி தனமானது, கலையாக உயர்வடைந்ததல்ல என்று ஒதுக்குமிடத்திலும் இப்பதம் பயன்படுத்தப்பட்டது. சு.ரா.வின் புத்திசாலித்தனம், விகடத்தனம்தான். கலைஞனை வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஆழமான மனநிலையும் புதுமை உணர்வும் இவரிடம் இல்லை .

இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில், 'ஸ்டைலிசம்' என்பது என்ன வென்று சு.ரா.வுக்கோ, பேட்டி கண்டவருக்கோ தெரியவில்லை. சு.ரா.வை 'ஸ்டைலிஸ்ட்' என்று பட்டயம் கட்டுகிறார் பேட்டி கண்டவர். சு.ரா. திருப்பிச் சொல்லும்போது, அவருடைய ஸ்டைல் அவருடைய உள்ளடக்கத்தால் விவரம் பெறுகிறது என்கிறார். அவர் உண்மையில் ஸ்டைலிஸ்ட்டாக இருந்தால் - இப்படியில்லாமல், அவருடைய ஸ்டைலின் அழுத்தத்தினால் அவருடைய உள்ளடக்கம் தான் உருமாற்றம் பெற்றிருக்க வேண்டும். இந்தக் காரணத்தினால் தான், ஸ்டைலிஸ்டுகள் புதுரகமான பண்டிதவாதிகளாகவும் ஆகிறார்கள். சு.ரா.விடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவரிடம் மங்கி விட்ட தர்சனம், அவருடைய ஸ்டைலை அங்கத நடைக்கு மெதுவாக மாற்றி அதிலேயே ஸ்திரம் பெறச்செய்துவிட்டது. அவருடைய  தற்போதைய நிலை இதுதான்.


(என்னுடைய இந்தக் கட்டுரை, உருவத்தை உள்ளடக்கத்திலிருந்து தனிமைப்படுத்தும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றல்ல்ல. பாத்திரங்கள் கோமாளித்தனமானவை என்றும் நிகழ்ச்சிகளிடையே தர்க்க ரீதியாக ஒழுங்கீனம் என்றும் நான் குறிப்பிட்டால், அது உருவ  குறையையே குறிப்பிடும். பாத்திரமும் நிகழ்ச்சித் தர்க்கமும் உருவ ரீதியானவை. சு.ரா. இது விஷயத்தில் ஜே.ஜே. சில குறிப்புகளில்  செய்துள்ளது சோதனை அல்ல; விகடக்கச்சேரி. இலக்கியத்தில் சோதனை  என்பது, இதுவரை எட்டப்படாத பாத்திர பரிமாணங்களை எட்டும் முயற்சியாகும்; இதுவரை உணரப்படாத நிகழ்ச்சி ஒழுங்குகளை உணர்த்தும் யத்தனமாகும். நாவலின் கட்டமைப்பு வெறும் உத்தி ரீதியானது. இந்த உத்தி முறையில் புதுமை செய்பவன், அதன்மூலம் புதிய பாத்திரப்பரிமாணங்களை எழுப்ப வேண்டும். ஆனால் இதோ பார் இன்ட்லெக்சுவல் பாத்திரம் என்ற ஜபர்தஸ்துடன் ஆரம்பிக்கிற ராமசாமி, வெளிக்கொணரும் பாத்திரம் வெறும் காட்டுமிராண்டிக் குறளிதான். இதற்கும் மேற்சென்று, எத்தகைய குற்றங்களை எல்லாம் ஒரு கலைஞன் செய்யமாட்டானோ அவற்றையெல்லாம் செய்தும் வைத்துள்ளார் ஆசிரியர்.) |

* ஜே.ஜே.யின் உள்ளடக்கமான இன்டலெக்சுவல் நாயகனுக்கும் அவனது தியரி ஆப் அப்ஹீவலுக்கும்கூட ஒரிஜனல் மவுஸு கிடையாது. ஸால் பெல்லோவின் Mr. Sammler's planet:-ஐப் படித்தவர்கள் இதை உணர முடியும். மிஸ்டர் ஸாம்ரின் நண்பர் நிஜ உலகத்து பிரிட்டிஷ் இன்டலெக்சுவல் எச்.ஜி.வெல்ஸ். ஜே.ஜே.யில் பாலுவின் தூரத்து நண்பன் ஜோசப் ஜேம்ஸ். ஸாம்லர், தமது சூழலில் நடப்பவற்றிற்கான தீர்க்கதரிசனங்களை, வெல்ஸின் பேச்சிலும் எழுத்திலும் ஒப்பீடு காட்டுகிறார். இன்றைய நகரியல் பயங்கரவாதம் (Urban terrorism) வெல்ஸின் தீர்க்கதரிசனமாகும். ஆனால் பாலு மூலம் ராமசாமி கண்ட ஜே.ஜே.யிடமிருந்து அந்த தியரியையும் காணோம்; அது குறிப்பிடும் அப்ஹீவலின் அடையாளங்களும் நாவலில் இல்லை. இமிட்டேஷனில் கூட கையாலாகாத்தனம்!

நாவலின் 'உள்ளடக்கம்' இப்படி ஒரு அரைவேக்காட்டு இரவல் என்றால், அதன் உத்திமுறை, ஜான் அப்டைக் (John Uptike) எழுதிய Bech: A Book என்ற நாவலிலிருந்து அபேஸ் பண்ணப்பட்டிருக்கிறது என்பதையும், அக்கறை உள்ளவர்கள் தாமே ஒப்பு நோக்கிப் பார்த்து நிச்சயித்துக்கொள்ளலாம். Bech என்பது கற்பனைப் பாத்திரமான ஒரு நாவலாசிரியரின் பெயர். Bech-ஐப் பற்றிய புத்தகம் என்பது Bech: A Book என்ற தலைப்பின் பொருள். இந்தத் தலைப்பே ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற தலைப்பாகவும், சுந்தர ராமசாமியாரால் திரும்ப வார்க்கப் பட்டிருக்கிறது.

இன்டியன் எக்ஸ்பிரஸ் பேட்டி முடிவில் சு. ரா., பிறருக்காகவே தாம் இனி எழுதப்போவதாக ஒரு சுயவிளம்பரம் தருவதை, ஜே.ஜே. நாவலுடன் ஒப்பிடுவது அவசியம். பிறர் என்றால் யார் என்பதை அவர் விளக்கவில்லை. மேலும், இந்த முடிவுக்கு முந்தி, தாம் எழுதியவை பிறருக்காக அல்ல என்ற பொருளும் அவரது கூற்றில் உள்ளது. எனவே, 'யார் வேணாலும் வாங்க' என்ற தொனிதான் இந்த விளம்பரம் என்று ஆகிறது. ஜே.ஜே.யில் நான் குறிப்பிட்ட மாமனார் மருமகள் உறவின் வக்ரம், விதவை ரயில் பயணத்துக்குச் சிரித்துச் சிரித்து அழைக்கும் வக்ரம் ஆகியவை, இந்த விளம்பரத்துடன் சு.ரா. தரும் சாம்பிகளாகும். இத்தகைய வக்ரங்களை, அதுவும் இதே மறைமுகப்பாணியில் எழுதுவோர் தாம், வெகுஜனப் பத்திரிகைகளினால் வரவேற்கப்படுகிறார்கள். எனவே, சு.ரா.வின் இந்தியன் எக்ஸ்பிரஸ் விளம்பரம் ஏதோ வாசகரது லெவலுக்கு தமது இமாசலச் சிகரத்தை விட்டிறங்கி வரத் திருவுளம்பூண்ட அவதார இன்டலக்சுவலின் கூற்று அல்ல. இப்ப ரொம்ப சீப் ஆயிட்டேங்க, யாரு வேணாலும் வாங்க 'அழைப்பு தான் அது. -

ஞானரதம், ஏப்ரல்-ஜுன் 1984 /தீக்ஷண்யம்:: 1


* ஞானரதம் (ஏப்-ஜூன் 1984) இதழில் வெளியான 'புதிய புட்டியில் பழைய புளுகு ' கட்டுரைக்குப் பின்னிணைப்பாக, 'ரஸ மட்டம் பகுதியில் வெளியிடவென்று ஞானரதத்திற்கு 24 செப் 1984 எழுதப்பட்ட கடிதம் பிரசுரிக்கப்படவேயில்லை. இந்த இருபத்திகளும் தாம் அக்கடிதம் - (கா.சு). -




ஞானரதத்துக்கு இரு கடிதங்கள்


கடிதம் 1


சென்ற ஞானரதம் (ஏப்ரல்-ஜூன் 19840) இதழில் வெளியான என் 'புதிய புட்டியில் பழைய புளுகு' கட்டுரையில், என் கைப்பட்ட தவறு ஒன்றுள்ளது. 23ஆம் பக்கத்தில், திருவிதாங்கூர் சமஸ்தான கோர்ட் தீர்ப்பு பற்றியது இது. ஒரு மாட்டைக் கொன்றவன் பிராமணனல்லாதவனாயின் அவனுக்கு ஆயுள்தண்டனை வரை உண்டு என்பதைத் தொடர்ந்து, அதே மாட்டைக் கொன்ற ஒரு பிராமணனுக்கு நாலைந்து வருஷங்களோ மாதங்களோ என எழுதியுள்ளேன். மனிதனைக் கொன்ற பிராமணனுக்கு நாலைந்து வருஷங்களே சிறை என்பதுதான் சரி. இதற்கு ஆதாரம்: Witness To An Era by Frank Moraes. இது பிரிட்டிஷ் காலத்தில், பிரிட்டிஷாரின் சட்டத்தைக்கூட இதுபோன்ற சந்தர்ப்பங் களில் சம்பிரதாய (mandatory) சட்டத்தின் மூலம் முடக்கிய முறை. இருந்தும் தொடர்ந்து நான் சிலாகிக்கும் பிரிட்டிஷ் தீட்சண்யம், சட்டமன்றங்களில் பழைய அநீதிகளுள் ஒரு குறிப்பிட்ட வகையைத் தொடரவிடாமல் செய்துள்ளது. ஒரு வழக்கில், கிராமத்தவன் ஒருவனைச் சூன்யக்காரிகளாகிக் கொன்றதாக குறப்பெண்கள் குற்றம்சாட்டப்பட்டனர். சூன்யவேலைக்கு, அவர்கள் கொல்லப்பட்டவனின் எலும்புகளை உபயோகித்ததாகக் கூறி, அவை சாட்சியமாக்கப்பட்டன. இதில், நவீன பிரிட்டிஷ் அணுகுமுறை சார்ந்த குறுக்கு விசாரணைகளும், எலும்புகள் எந்த ஜந்துவினுடையவை என்ற விஞ்ஞான ஆய்வும், அந்த ஏழைகளைக் காத்துள்ளன. எலும்புகள் மாட்டெலும்புகள். ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற சுந்தர ராமசாமியின் நூலில், திருவிதாங்கூரின் இந்தப் பொட்டுக்கேடுகள் பூசி மூடப்பட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டும்.

சமுகப் பின்னணியை ஆராய்வதன் மூலம் ஒரு நல்ல நாவலை மோசமானதாக நான் காட்டுவதாகவோ, உருவத்தை விட்டு உள்ளடக்கத்தைக் குத்தம் சொல்வதாகவோ எனது அணுகுமுறை படுகிறதா? உருவிம் வேறு உப்பாடக்கய பயறு னெற சததாம் மறுப்பது எனது விமர்சன அடிப்படை,

உருவம், உள்ளடக்கம் என்ற பிரிவுக்கு, சென்ற நாம் பின்பகுதி ஐரோப்பிய விமர்சனம் - முக்கியமாக பிரெஞ்சு - ஆரம்பப் பொறுப்பு. இது, சமுகக் கட்டுக்கோப்பில் ஏற்பட்ட மாறுதலின் எதிர்விளைவு. அந்தச் சமயத்தில் உருவவாதி, அந்தக் காலகட்டத்தில் பிற்பட்டிருந்த வர்க்கம் சுய முனைப்பு  பெறுவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இதன் காரணம். . வாழக்கூடாது என்பதல்ல. அவர்களது ரஸனைகளும் மதிப்பீடுகளும் மட்டமானவை என்பதே காரணம். இதை, 'அவர்கள் வாழக்கூடாது  என்று உருவவாதிகள் கூறுவதாக' திரிபு செய்தவர்கள். பின் ஐரோப்பிய இடதுசாரிகள். இந்த இரண்டு எல்லைகளும், தங்களை தாங்களே அழித்துக்கொண்டவை. ஒரு தீவிரமான ஆழ்ந்த விமர்சன பார்வை எதிலுமே, உருவமும் உள்ளடக்கமும் ஒரே கணிப்பில்தான் நிதானிக்கப்படுகின்றன.

இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தின் தவிர்க்கமுடியாமை பற்றி பின்னாடி சந்தர்ப்பம் கிடைத்தால் விபரமாகப் பேசலாம். ஆனால் அது தவிர்க்க முடியாதது என்பது கண்டு கொள்ளப்பட வேண்டும். காந்தியம் அதன் உயிர்மையத்தை விட்டு நழுவிச் சீரழிந்த போது அதனை விமர்சிக்க இந்தியாவில் எழுந்த ஒரு எதிர்முகாம் இடதுசாரி முகாம்தான். வைதிக மரபுகள், காந்தியையும் சரி - எந்த தர்மபூர்வமான இயக்கத்தையும் சரி - அநுசரித்ததில்லை .

தன்னிகழ்வான ஆண்பெண் ஊறவு, இந்நாவலில் அபத்தமாக பரிகசிக்கப்படுகிறது. இது ஓமனக்குட்டி கதை. ஆனால் சாராம் மாவை ஜே.ஜே. 'கலியாணம் கட்டி வாழ்ந்த கதை. அப்படியே நாவலுக்குள் சௌக்யமாகக் கொலுவீற்றிருக்கிறது - அதிலும் வக்ரப்படுத்தப்பட்டு,

வைதிகங்களுக்கு முக்கியமானவை சம்பிரதாயங்கள்தாம். இதைப் புரிந்து கொண்டால்தான், எவ்வித இயற்கைக்கும் பொருந்தாத அகம் விகடமாக, ஓமனக்குட்டிக்கும் ஜே.ஜே.க்கும் சம்பிரதாயத்தைக் கடந்து பிறந்த காதலுறவு சித்தரிக்கப்படுவதை உணரலாம். ராமசாமிக தன்னிகழ்வான ஆண் - பெண் உறவின் இயற்கை வடிவுகளே எட்டாத என்பதையும் இது காட்டிக் கொடுத்து விடுகிறது. கவிதைக்காரா ஓமனக்குட்டி - அதுவும் தன் கவிதையை நிராகரித்ததுக்காக ஜே.ஜே-யுடன் உறவு முறிவு கொள்ளுமளவு - தன் கவிதையை முக படுத்துபவள்; அவனுடன் வேறு எந்த உறவும் கொள்ளுமுன்பே முதல் படியாகத் தனது கவிதையைத்தான் கொடுத்திருப்பாள். இந்த நியதியை அநுசரித்திருந்தால், உறவு கொண்ட பிறகு கவிதையை கொடுத்ததும் அதன் விளைவான அகடவிகடங்களும் பிறக்க இடமிராது. நமது இலக்கிய ரஸிக சிகாமணிகள், இத்தகைய நுட்பங்களை உணராமல் வெறும் அகடவிகடத்தை மட்டும் ரஸித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இது, பொழுதுபோக்கை முக்கியமாகக்கொள்கிற மனோபாவத்தின் விளைவு. ஆழ்ந்த அனுபவங்களை நாடுகிறவன் விகடத்தில் திருப்திப்படமாட்டான். அவனது ரஸனைக்கு, ஆழ்ந்த நகைச்சுவை இருக்கவேண்டும். உதாரணமாக, 'தாடிவளர்த்தால் ஞானம் வந்தாலும் வரலாம்; முகவாய்க் கட்டையில் பேன் பிடித்தாலும் பிடிக்கலாம்' என்ற புதுமைப்பித்தனின் 'சிவசிதம்பர சேவுகம்' கதையின் ஆரம்பம், அகடவிகடமல்ல - ஆழ்ந்த நகைச்சுவை; ஹாஸ்ய ரஸம் என்ற இலக்கியப் பண்பாகப் பிறப்பது. இங்கே, துறவின் மனோபாவம் ஞானத்தின் சின்னமாக முடிவது போலவே, மனோவிகாரத்தின் உபத்திரவங்கள், ஒளித்திருந்து தொல்லை கொடுக்க இடமும் தருவது என்ற ஆழ்ந்த பொருளை உணரலாம். மீண்டும்மீண்டும் வியப்பை உண்டாக்கக்கூடிய ஹாஸ்யம் இதுதான். ராமசாமியின் அகடவிகடம், அதன் கோணங்கித் தளத்தை மீறிவிட முடியாதது. காரணம், அவரது விகடம் உண்மையின் சாயலை ஏற்காமைதான். உண்மை நிலையை இது உணர்த்த எழுந்ததல்ல என்று தென்பட்ட உடனேயே, இத்தகைய விகடம் செத்துவிடுகிறது. ஏதோ இத்தகைய விகடங்களைத்தான் - இதுவும் ஒரே தடவை மட்டும் - ஜே.ஜே.யில் படிக்க முடிகிறது எனலாம். விகடமாக எழுதப்பட்ட நாவல்கள் இல்லாத சூழலில், இதுதான் ஜே.ஜே.யின் ஒரே பரிதாபகரமான மவுசு; ஆனால் இது இலக்கியமல்ல.

ஜே.ஜே.யின் பாத்திரம் திரட்சி பெறாததுடன், எவ்வித நிகழ்ச்சி யிலும் செயலிலும், பாத்திரரீதியான தர்க்கத் தொடர்பற்றது என்பதை என் கட்டுரை தெரிவிக்கிறது. ஓமனக்குட்டி விஷயமும், பாத்திர நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அபத்தங்களைக் காட்டுகிறது. ஜே.ஜே. கையாள்கிற சீர்திருத்த மனோபாவமுள்ள சம்பத் சங்கதியும் இதுதான். இதை ஆழ்ந்து பரிசீலிக்கிறபோதே. நாம் திருவிதாங்கூர் சமஸ்தான லட்சணத்தினைக் காட்டவருகிறோம். இதைமட்டும் எனது கட்டுரையின் மண்டலமாகக் காணவோ, நான் ஒரு உள்ளடக்கப் பூதம் என்று வாதிடவோ இடமில்லை. பாத்திர சிருஷ்டிகள், நிகழ்ச்சித்தர்க்கங்கள் ஆகியவற்றின் அபத்தங்களைக் காட்டவே, ராமசாமியின் மதிப்பீட்டு மண்டலமும் கோடிகாட்டப்பட்டுள்ளது.

பாத்திரம், நிகழ்ச்சித்தர்க்கம் போன்ற அம்சங்கள் உருவரீதியானவை. இவற்றுக்கும் என் கட்டுரை ஆராயும் உள்ளடக்கம் என்ற அம்சத்துக்கும் வேறுபாடு என்ன?

சென்னை , 11.9.1984.

எஸ்.ஏ.பிரேம்வேள்

 கடிதம் 2 

என் கட்டுரை புதிய புட்டியில் பழைய புளுகு' சம்பந்தமாக : 

கட்டுரை வெளிவந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பின் சென்னை சற்று வெளியே நடந்த இலக்கியக் கூட்டம் ஒன்றில் ஜே.ஜே. நாவலைப் பிரஸ்தாபித்து புளுகித் தள்ளிய ஒரு புதிய விமர்சகர் ஒனது கட்டுரையைக் கண்டுகொள்ளவில்லை. இன்று தமிழிலக்கியத் துறையே இப்படி தீக்கோழிகள் தலைகளை மணலில் புதைத்துக்கொண்டு நிற்கும் பிராந்தியமாகி இருக்கிறது. பிரஸ்தாப தீக்கோழியின் பேச்சை எதிரொலித்தால் : மாடர்னிஸம் மாடர்னிட்டியாகி, எக்ஸிஸ்டென்ஸ் எக்ஸ்டென்ஷலிஸமாகி, மானாவாரியான சர்ரியலிஸம் நிலவுகிறது இந்த லட்சணத்தில் இங்கே நான் தருகிற திருத்தத்துக்கு அர்த்தமென்ன
 
23ஆம் பக்கத்தில் திருவிதாங்கூர் சம்ஸ்தான கோர்ட் தீர்ப்பு பற்றிய இது: ஒரு மாட்டைக் கொன்ற பிராமணல்லாதவனுக்கு ஆயுள் தண்டனை; ஆனால் மனிதனைக் கொன்ற பிராமணனுக்கு நாலைந்து வருஷங்களே சிறை என்று இதைத் திருத்திப் படிக்க வேண்டும் இதெல்லாம் என்ன எழவுக்கு...? - 

மேலே நான் குறிப்பிட்ட தீக்கோழி விமர்சகரின் சரித்திர சமுகம் பிரக்ஞையின் பிரகாரம், இந்திய நிலத்தின் தென்கோடியில் எவ்வித சலனமுமில்லாமல்' நிம்மதியாக வாழ்கிறவர்களாயிற்றே நாம்! பிராங் மொராயஸ் வேறு எதையோ கிறுக்கியிருக்கிறார். திருவிதாங்கூரில் நடந்ததுதான் இதுவும் : ஏழைக் குறப்பெண்கள், கிராமத்தவர் ஒருவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். கொல்ல பட்டவனின் எலும்புகள் என்று சாட்சியமாக்கப்பட்டவற்றை மாட்டெலும்புகள் என்று கேடுகெட்ட சயன்ஸ்காராளும் பிரிட்டிஷ் கோர்ட்டும் கண்டுபிடித்துத் தொலைத்துவிட்டனர். இந்தத் தென்கோடியில் எவ்வித சலனமுமில்லாமல் வாழமுடியாமல் இப்படி சலனங்கள் - இன்றும் கூட. உங்களுக்குத் தெரியுமா? ஹரிஜனன் ஓருவன் டாக்டர் பட்டம் பெற்று கிராமப் புறங்களிலுள்ள அரசு மனைக்குப் போனால், அவனை முந்திக்கொண்டு, பறையன் என்ற சலனம் போய்விடும். டாக்டர் அங்கே சரிவர வேலை செய்ய முடியாதவாறு, சிப்பந்திகளினாலேயே முடக்கப்படுவார். தீக்கோழி, தம்முடைய தலையை மணலுக்குள்ளிருந்து உருவி எடுத்து  பார்த்தால், ஹரிஜனனுக்காகச் செத்த பிராமண சம்பத்தை சுந்தர ராமசாமியின் கதைகள்தாம், பிணப்பார்வையாக சலனமுமற்று நின்றுவிட்டதைக் காணலாம். 


என்னுடைய கட்டுரை, உருவத்தை உள்ளடக்கத்திலிருந்து தனிமைப் படுத்தும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றல்ல. பாத்திரங்கள் கோமாளித்தனமானவை என்றும் நிகழ்ச்சிகளிடையே தர்க்கரீதியான ஒழங்கீனம் என்றும் நான் குறிப்பிட்டால், அது உருவக் குறையையே குறிப்பிடும். பாத்திரமும் நிகழ்ச்சித் தர்க்கமும் உருவரீதியானவை. சுந்தரராமசாமி இது விஷயத்தில் ஜே.ஜே. சில குறிப்புகளில் செய்துள்ளது. சோதனை அல்ல - விகடக் கச்சேரி. இலக்கியத்தில் சோதனை என்பது, இதுவரை எட்டப்படாத பாத்திரப் பரிமாணங்களை எட்டும் முயற்சி யாகும்; இதுவரை உணரப்படாத நிகழ்ச்சி ஒழுங்குகளை உணர்த்தும் யத்தனமாகும். நாவலின் கட்டமைப்பு வெறும் உத்திரீதியானது. இந்த உத்தி முறையில் புதுமை செய்பவன், அதன் மூலம் புதிய பாத்திரப்பரிமாணங்களை எழுப்பவேண்டும். ஆனால், 'இதோ பார், இன்டலெக்சுவல் பாத்திரம்!' என்ற ஜபர்தஸ்துடன் ஆரம்பிக்கிற ராமசாமி வெளிக்கொணரும் பாத்திரம், வெறும் காட்டுமிராண்டிக் குறளிதான். இதை என் கட்டுரை ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது. இதற்கும் மேற்சென்று, எத்தகைய குற்றங்களை எல்லாம் ஒரு கலைஞன் செய்ய மாட்டானோ அவற்றை எல்லாம் செய்தும் வைத்துள்ளார் ஆசிரியர். இதன் முழப் பின்னணிகளையும் நான், புனிதப்புளுகு என்ற தனிக்கட்டுரை நூலாக எழுதி சுமார் இரண்டு வருடமாகிறது. இலக்கியத் துறையின் 'அகரத்திலிருந்து 'க்ரியா' சிகரங்கள் வரை, நான் இது பற்றி பிரஸ்தாபித்திருக்கிறேன். அவர்கள் சலனிக்கவில்லை . சென்ற இதழில் ஞானரதம் வெளியிட்ட என் கட்டுரை, எனது மேற்படி நூலின் முதல் அத்தியாயமாகும். இதை இன்றைய இருட்டடிப்புச் சூழலில் வெளியிட்ட ஞானரதம் பாராட்டுதலுக்குரியது. 

ஜே.ஜே.யின் உள்ளடக்கமான இன்டலெக்சுவல் நாயகனுக்கும் அவனது தியரி அஃப் அப்ஹீவலுக்கும்கூட, ஒரிஜினல் மவுஸுகிடையாது. ஸாம்லர்ஸ் பிளானெட்டைப் படித்தவர்கள் இதை உணர முடியும் (Mr. Sammler's Planet by Saul Bellow). மிஸ்ட ர் ஸாம்லரின் நண்ப ர், நிஜ உலகத்து பிரிட்டிஷ் இன்டலெக்சுவல் எச்.ஜி.வெல்ஸ்; ஜே.ஜே.யில் பாலுவின் தூரத்து நண்பன் ஜோஸப் ஜேம்ஸ். ஸாம்லர் தனது சூழலில் நடப்பவற்றிற்கான தீர்க்க தர்சனங்களை, வெல்ஸின் பேச்சிலும் எழுத்திலும் ஒப்பீடு காட்டுகிறார். இன்றைய நகரியல் பயங்கரவாதம் (Urban Terrorism), வெல்ஸின் தீர்க்கதர்சனமாகும். ஆனால் பாலு மூலம் ராமசாமி கண்ட ஜே.ஜே.விடமிருந்து, அந்த தியரியையும் காணோம்; அது குறிப்பிடும் அப்ஹீவலின் அடையாளங்களும் நாவலில் இல்லை இமிட்டேஷனில்கூட கையாலாகாத்தனம். மேலதிகமாக இவ்விடத்தில், . இமிட்டேஷனையும் தாண்டிய திருட்டு ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். வெகுசமீபத்தில்தான் ராபர்ட் பிரஸ்ஸன் (Robert Bresson) இயக்கிய Au hasard Balthazar பார்த்தேன்.. ஆபிரஹாம் சொல்லி, வெங்கட் சாமிநாதன் எழுதிய திரைநாட அக்ரஹாரத்தில் கழுதை, இந்தச் சினிமாவின் அப்பட்டமான திருட்டு இதிலும் மேலுள்ள இமிட்டேஷனின் கோளாறு உண்டு. பிரஸ்ஸன் படத்தில், கழுதை குழந்தைகளினால் குட்டியாகபோது இருக்கும் சுவீகரிக்கப்படுகிறது. பிறகு பெரிதானதும் அதை யாரும் கவனிப்பதில்லை. இதன் இயற்கைத் தனம், வெ.சா.வினால் கொலை செய்யப் பட்டுள்ளது. இயற்கைக்குப் புறம்பாக, ஒரு புரொபஸர் தமது வேலையையே விட்டு, கழுதைக்குத் தம்மை அர்ப்பணித்ததுடன், கழுதையை சுற்றிச் சுற்றி வெ.சா. ஒரே 'லோ லோ' என்று கூப்பாடு போடுகிறார் கழுதையைக் குறியீட்டுரீதியாகப் பார்த்தால் மட்டும்தான் முடியும் என்பதாலும், சினிமாவடிவில் இது நிறைவேற இடமுண்டு என்பதாலும், இதற்கு ஒரு குறியீட்டுச் சிபார்சு பண்ணி. அவரது திரைநாடகத்துக் என் முன்னுரையைத் தந்திருந்தேன். ஆனால் வெ.சா. என் முன்னுரையிலிருந்து மாறுபட்டு, தமது கழுதை குறியீடல்ல என்று தமது முகவுரையில் எழுதி, எந்த அடிப்படையில் அவரது கழுதையைச் சகித்துக்கொள்ள முடியுமோ அந்த அடிப்படையையே கோட்டைவிட்டு விட்டார். மற்றப்படி, பிரஸ்ஸனின் கழுதையில் பெண் கெடுக்கப்படுகிறதுக்கு. ஆபிரஹாம் -சக-வெ.சா. பெற்ற கழுதையிலும் மறுபிறப்பு உண்டு. இரண்டு கழுதைகளுமே முடிவில் வழிபாட்டுக் குறியீடுகளாகவும் ஆகின்றன. வெ.சா. தமது திரைநாடகத்தை ஜெயகாந்தனுக்கு சமர்ப்பிக்கப்போவதாக அறிந்தபோது, நான் எனது முன்னுரையைத் தரமறுத்தேன். இந்தச் சமர்ப்பண யோசனையை வெ.சா. கைவிட்டது, எனது முன்னுரையைப் பெறுவதற்காகத்தான். பிரஸ்ஸனின் படத்தைப் பார்த்தபிறகு, அவர் அந்தச் சமர்ப்பண யோசனையைக் கைவிடாமல் இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. 
சென்னை , 24 
செப்டம்பர் 1984. 
பிருமிள் (பிரசுரமாகாதவை) 


No comments:

Post a Comment