தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

சி.மணி கவிதைகள்

அர்ப்பணம்
சி.மணி (1936 - 2009)

குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கவனித்துக்கொண்டு
என்னைச் சுதந்திரமாய்
அந்நியனாக இருக்கவிட்ட
ஜகதாவுக்கு

- மணி

கோணம்

நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்

மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்
ஒரு கோணத்தில் பார்த்தால் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.

மேலும்

அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.

பிரிவு - சி.மணி கவிதை

வேதனை, விழிக்கு  விளிம்பு கட்ட
நீர்காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க
தூறலிடைக் காடாக மாநிலம் மங்க
குளவியின் துளையொலி செவியில் சுழல
விழுந்த பிணமணம் நாசியில் ஏற
கசக்கும் நாக்கு மண்ணைச் சுவைக்க
அனலும்  பனியும் மேனிக்கு ஒன்றாக
சாக்காட்டு உலகில் என்னை விட்டு
கூடுவிட்ட பறவையென
ஓடி மறைந்தாய்

எழுத்து டிசம்பர், 1960

மயக்கம் - சி. மணி

சாய்வு நாற்காலியில்
வளைந்து கொடுத்து,
கதவு விளிம்பில்
காலை உதைத்து,
நீரில் தூண்டிலெனக்
கதையில் ஆழ்ந்திருக்க,
விழுந்தது விழியோரம்
எட்டிப் பார்த்த முகம்
என்றுநான் விழிதூக்க
சிமிட்டியது கால் விரல் நகம்.
எரிகல் வீழ்ச்சியென்று
பார்க்க முயன்று
சிரிக்கும் விண்மீன்
பார்த்த மயக்கம்.
தலையசைத்துத் திரும்பவும்
கவிதையில் ஆழந்தேன்

இடையீடு

1. சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை

2. எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

3. என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.

4. எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று

மினியுகம்

சனி த்துவிட்டது
மினி யுகம்; ஒழிந்தது
நனி பெரும்மனிதர் கொற்றம்.
இனி
மினி மக்கள் காலம்
மனி தனைவிட்டு
மினி தனைப்பாடு போற்று
குனி என்பேச்சைக் கேள், ஏ
னெனி லெனக்குத் தெரியும் நானொரு
மினி மேதை

இலக்கியம்

"இலக்கியம் என்றால் என்ன என்றேன்
 புலவர் ஒருவர், இது கூடத் தெரியாதா
இலக்கு கூட்டல் இயந்தான் என்றார்"

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள்
தமிழில் சி. மணி

படகுக்கு மேலே,
காட்டு வாத்துகளின்
வயிறுகள்.

- பாஷோ

அந்தமாதி ஒரு நிலவு.
சற்று நிற்கிறான் திருடன்,
பாட

- பாஷோ

மறுப்பு

தேன்நிலா சீழ்வடியும்
தொழுநோய்க் கூனனாக
வடிந்தசீழ் உருண்டோடி
மஞ்சள்மீன் கட்டியாக,
உலகத்துப் பசுமையெல்லாம்
விழியுறுத்தும் பழுப்பாக,

கூட்டுக்குள் மூச்சு
குமிழுக்குள் காற்றாய்
ஏகும் வழி தேட,
ஒரே கணத்தில் விரக்தி
வடிவாகி நரைக்க

ஓ நான் கேட்டதும்
நீ
தனி ஊசல் போல்
இடவலமாய்த் தலையசைத்தாய்





 காற்றுக்கு
 கயிறிட் டிழுத்து வந்து
 முளையடித்து
முடியிட்டுக் கட்டிவிட்டார் *


இருப்பதை நினை வூட்ட அசைவு தேவை.
விழி யசைவில் காதல்
இடையசைவில் கூடல்
மூச்சசைவில் வாழ்வு *


 காதடைக்கும் இரைச்சலுடன்
 டவுன்பஸ்கள் வரும்போகும் *

அணைப்பு

 என்னை
 நீரா யணைத்து யணைத்து
 விட்டதும் கரியானேன் ஆனதும்
 இருவிழிப் பொறியால் தீமூட்டித்
 திரும்ப நெருப்பாக்கி.
                                             -   எழுத்து ஆகஸ்டு 1965


சொல்கிறார்கள்
எழுத்திலே கூடாதாம் ;
பாலுணர்ச்சி கூடினால்
பச்சையாம்

வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கியூர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையாம்

எழுத்திலே பச்சை எழுத்தாளன்
மனத்திலே பச்சையென்றாகுமா?
 நாடகத்தில்
பாத்திரங்கள் பேச்செல்லாம்
 ஆசிரியர்
பேச்சா?
 நரகம் எனது நரகமா?
நரகத்
தலைவன் நரகமா?”
“பலவகை ஆறுகள்
 எனக்குள் இருக்கும் கடலில்
கலக்கும்;
 எழுபவை கடல்முகில்”


இறப்பு

சிறிதா பெரிதா
திலகமாய்த் திரண்டதா
பாழ்நுதலாய்ப் பரந்ததா
மாலியவள்
விழியாய்க் குறுகியதா
வாள்நோக்காய் நீண்டதா
அவள்
சடைபோல் ஒன்றா
சடையுண்ட குழல்போல பலவா
வண்டியாய்ச் செல்லுமா
பாலமாய் இருக்குமா
மணமடுத்த மஞ்சமா
மஞ்சமடுத்த துயிலா, உயிரா
கூண்டு தப்பிய கிளியா
கூண்டேகும் கிளியா
கூடேகும் புள்ளா
கூடு தப்பிய புள்ளா
வலைப்பட்ட புறாவா
சூடப் பறித்த மலரா
வாட எறிந்த பூவா
கிழியக் கழித்த உடையா
துவைக்கப் போட்ட துணியா
திரியெரிந்த விளக்கா
காற்றணைந்த சுடரா
செய்வினையா
செயப்பாட்டு வினையா
தொடர்கதையின் ஒரு பிரிவா
சிறுகதையின் முடிவா
கால்புள்ளியா
முற்றுப்புள்ளியா
?


சிக்கல்

பூஎன் றூதித் தள்ளக்
கூடி யதையும் கூந்தல் பிய்த்துக்
கொள்ளும் சிக்க லாக்கிக்
கொண்டும் விடும்புதுப் பழக்கம் நம்மைத்
தொத்திக் கொண்டுவிட் டது.தொடக்
கத்தில் பொழுது போகும் நேர்த்தி
கண்டும், மூளைக் கூர்மை
எண்ணத் திலும்பு தைந்து போனோம்.
அண்மை யில்யா வும்சாக்
கென்றும், இதுநம் மேதா விலாச
மேன்மைக் காக என்றும்
தோன்றி யது.இனி மீட்சிச் சிக்கல்

சிந்தித்தல்  


சிந்திப்பதற்கு மிகச்சிறந்த முறைஎது என்றால்
சிந்திக்காமல் இருந்து விடுவதுதான்.

சந்தேகமா?

சரி, ஒரு தொடக்கமாக, நீசிந்திக்க முயன்று
பார்க்கலாம், மொழியைப் பயன்படுத்தாமல்.

மேலும், மொழியைப் பயன்படுத்த வேண்டுமானால்
உனக்குத் தெரியாத மொழியை

உபயோகி.

புத்தர் கைகொடுக்கிறார் 
 
வெறுமையும் உருவமும்
வேறுபட வில்லை:
வெறுமைதான் உருவம்.
உருவந்தான் வெறுமை 

 
என்று புத்தர் சொல்லிப்
புண்ணியம் கட்டிக் கொண்டார். 

 
நல்ல வேளை,
இல்லை யென்றால்
இன்றைய இலக்கி யத்தில் உருவம்
இருக்கிற தென்பதை நிறுவும் வழியேது? 

கிளை தள்ளும் ஆலம்
வளைந்தள்ளும் வானவில்
அலைந்தள்ளும் கார்குழல்
இறக்க வேற்றம் துள்ளும்
கயல் புரளும் கண்ணி 

 

குரலென்னும் பனி வெளியில்
சல்லென்று சறுக்கியேறி
இறங்கியாட வரும் பாடல்;
சீர் விரல் சதிராடத்
தோல் அதிர்ந்தெழும் தாளம். 

 
விழியசைவில் காதல்
இடையசைவில் கூடல்
மூச்சசைவில் வாழ்வு 

 


செவ்விசைக்கருவி

“ஷெனாய் இசைக்கும் சோகம், ஆஹா
செவிமடுக்காத செவியென்ன செவியோ
செவிமமடுத்துக் கரையாத மனமென்ன மனமோ
என்கிறான் மணி. என்ன செய்ய?
ஒருமுறையேனும் மாலி
முழுவீச்சுத் தொனி
பூரண
சாரங்கி இழைப்பில், ஒற்றைச் சோகக்
கீற்றை, ஆஹா
மடுக்கச் சொல் செவியால்”

•              •                


பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;அ
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை;இ
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எ ழு த.



 'அறைவெளி'

தப்பிவிட்டேன் என்று விழித்தேன்
சுற்றும் முற்றும் பார்த்தேன் மேலே
வானம்;
நான்கு பக்கமும் கூரிருள்.
கூரை சுவர்கள் எதுவுமில்லை
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.

வெட்டவெளிதான் இது அரையல்ல
என்று சில கணம் துள்ளியது என் மனம்.

மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
எம்பிக் குதித்தேன் இடித்தது கூரை.

காதல்

‘காதல் காதல் என்ப; காதல்
வெறியும் நோயும் அன்றே; நினைப்பின்,
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்;
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வாம நீராம்’

நடை

நீரியல் பூஞ்சதை தளும்பியாலக்
கெஞ்சிடும் மென்னடை பயின்றபாவை
வீதியில் இட்டது தளும்புநடை;
நெஞ்சினில் இட்டது தழும்புநடை.

பின்னல்

சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு
நடக்க முடியாமல் நடந்த போது
அடக்க முடியாமல் அசைந்தவென் நெஞ்சாய்
நிலைக்க முடியாமல் அசைந்ததுன் பின்னல்

- எழுத்து அக். 1968


பிரிவு - சி.மணி கவிதை

வேதனை, விழிக்கு  விளிம்பு கட்ட
நீர்காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க
தூறலிடைக் காடாக மாநிலம் மங்க
குளவியின் துளையொலி செவியில் சுழல
விழுந்த பிணமணம் நாசியில் ஏற
கசக்கும் நாக்கு மண்ணைச் சுவைக்க
அனலும்  பனியும் மேனிக்கு ஒன்றாக
சாக்காட்டு உலகில் என்னை விட்டு
கூடுவிட்ட பறவையென
ஓடி மறைந்தாய்

எழுத்து டிசம்பர், 1960



பேதை

"முன்புறம் முகிழ்த்த இனமலர் இரண்டைக்
கண்கரம் விரித்துப் பறிப்பதை விலக்கப்
பின்புறம் அசையும் பின்னல் ஒன்றை
முன்புறம் கிடத்தினாள் சாட்டை என்று."

மொழி பெயர்த்த தாவோ தே ஜிங்
.
நன்றாக மூடத் தெரிந்தவனுக்குச்
சட்டம், தாழ்பாள் எதுவும் தேவைப்படுவதில்லை
என்றாலும் அவன் மூடிய பிறகு
அந்தக் கதவைத் திறப்பது சாத்தியமில்லை



மொழி பெயர்த்த சீன ஜென் கவிதை

வரும்போது போகும்போது விட்டுச்
செல்வதில்லை காட்டு நீர்பறவை
ஒரு சுவடு
தேவையும் இல்லை அதற்கு
ஒரு வழிகாட்டி.


தரத்தைக் கூற

“துணியின் தரத்தைக் கூற
 உறுதியான வழி வேண்டுமா?
துணியின் மீது மரபு / முத்திரை இருக்கிறதா
 பாருங்கள், அப்படி இருந்தால் உங்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை”
“அவருக்குத் தெரியும்
 வெற்றியின் இரகசியம்
ஐயமென்ன
 யாப்பின்
 தூயபருத்தி ஆடைகளே
  நீங்கள் எப்படித் தோற்றமளிக்க
  வேண்டும் என்பதறிந்த
மரபுக்குழுத் தயாரிப்பு.”

“இவருக்குக் கவலையில்லை
வருக்குக் கிடைத்துவிட்டன
 புதுமை
 தரும் பாவின் உலகின் பிரபலமான துணிகள்.”

சி. மணியின் ‘கவியரங்கம்’.

“யாப்பிட்ட பனுவலெனும் விரகஞ் சேர்க்கும்
காப்பிட்ட வனப்புமுலைக் குமரி பார்த்தும்
யாப்பற்ற வெறுங்கவிதை யதனை யெப்படிக்
கைப்பற்றத் துணிந்தாரைம் புலனு மொப்பியே”



“அன்று மணிக்கதவை
 / தாயர் அடைக்கவும் மகளிர் திறக்கவும்
 / செய்தார் மாறிமாறி என்றும்
 / புலவர் அடைப்ப / கவிஞர் திறப்பார்.”



ஞானம்

நீ நினைக்கிறாய்
 அதுவும் தவறாக நினைக்கிறாய்
ஞானம்
 அறியாமை மறுப்பு என்று
 எனென்றால்
நீ இப்போதெல்லாம் தெளிவாகப் பார்க்கிறாய்
 அது
அறிவு மறுப்பு என்று
 அதுசரி, அது எப்போது
 வேறு
எதுவாக இருந்தது?”


“பௌத்த
சந்நியாசிகளுக்கு ஒருநாள் சுபுத்தி
தந்த பதிலை இவருக்கும் தரலாம்
புரிவதற்கு
ஒன்றும் இல்லை
 புரிவதற்கு ஒன்றும் இல்லை”54

“வெறுமையும் உருவமும்
 வேறுபட வில்லை
வெறுமைதான் உருவம்
 உருவுந்தான் வெறுமை
என்று புத்தர் சொல்லிப்
புண்ணியங் கட்டிக்
கொண்டார்
நல்லவேளை
 இல்லை
யென்றால்
இன்றைய இலக்கியத்தில் உருவம்
இருக்கிற தென்பதை நிறுவும் வழியேது?”55

“சொல்ல விரும்பிய தெல்லாம்
/ சொல்லில்வருவதில்லை”
“சொல்ல வந்தது சொல்லில்
 / வந்தாலும் கேட்பதில் சிக்கல்
 / கனியின் இனிமை
 / கனியில் மட்டுமில்லை
 / சுவைப்போன் பசியை,
 / சுவைமுடிச்சைச் சார்ந்தது, எண்ணம்
/ வெளியீடு
/ கேட்டல்
/ இம்மூன்றும் ஒன்றல்ல
 / ஒன்றென்றால் /
 மூன்றான காலம் போல் ஒன்று


”36
“தேனீ காண்பது மலர்வனம்
 / ஆநிரை காண்பது பசுந்தரை
/ காண்பது நோக்கைச் சார்ந்தது”37



 ‘படைப்பு’

வீடுவிட்டுப் புறப்பட்டு
நேரேயென் அலுவலகம்
ஓட வரவில்லை;
பள்ளி செல்லும் வழியெல்லாம்
நின்றுநின்று மறந்து
பிடிக்காததை பிடித்ததை
போவதை வருவதை
இருப்பதை
பையனாய் வேடிக்கை
பார்க்க வந்தேன்

நீலத்தாள் படத்திற்குக்
கயிறுநீட்டிச் சரிபார்த்துக்
கலவை கொட்டிக் கல்லடுக்கிக்
கலவை கொட்டி வீடு
கட்ட வரவில்லை;
அருங்கல்லொன்று கிடைத்தபோது
அகத்திலூறிச் சுழல்கின்ற
 நிழலைச்
செதுக்க வந்தேன்

பல்லாண்டு படித்துப்
பழகிப் பழகிப்
 பாடும் பாட்டிற்கும்
போடும் தாளத்திற்கும்
ஆட வரவில்லை;
புதுப்புது மெட்டுக்கு
மயங்கி நினைவிழந்து
உடலாட்டித் தாளமிடும்
மக்கள்நடம்
ஆடவந்தேன்.

வாயில்முன் வழக்கம் போல்
புள்ளியிட்டுக் கோட்டைப்
போட வரவில்லை;
ஒற்றைக்கண் நிலவு
ஒற்றையடித்து வெள்ளை பூசி
ஒளியாக்கிய வானில்
வலிந்தோ மெலிந்தோ
எழுகின்ற காற்றில்
தானாய் இசைந்தரும்பும்
முகிற்கோலம்
போடவந்தேன்.

சாத்திரக் கோட்பாடுகளை
நெஞ்சில் கரையவிட்டு
குறித்தபடிக் கோயில்
எழுப்ப வரவில்லை;
நிறைந்த அனலாவியை
விழைந்த கோளமாக்கும்
விரிந்த பாழ்வெளியில்
பால்வெளியாய்ப்
படைக்க வந்தேன்”

- எழுத்து மார்ச் 1963

பழக்கம்

பழக்கத்திற்கு இவனொரு அடிமை
பழக்கமற்ற எதையும் இதுவரை
செய்ததில்லை- இனிமேல்
செய்யப்போவதில் பழக்கமற்றது
சாவதும்
பழக்கமானதோ என்னவோ,
அதுவும் நாள்தோறும்.


தீர்வு

என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
 வெறுந்தோள் முனைத்தொங்கல், தாங்காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.

நிலவுப்பெண்

 ஊடாத பெண்ணொருத்தி உண்டென்றால்,
ஊடிப் புலந்து வெண்முகம் திரும்பி
கருங்குழல் புரளும் புறம் காட்டாது
கலைமுகக் காட்சி தந்தே கூடல்
தீ வளர்க்கும் பெண்ணொருத்தி உண்டென்றால்
நீயல்லவோ அப்பெண்!


 ஈகை

 பட்டமரம் போலச் சாய்ந்த சாலை
இருபுறத்திலும் நடைபாதை
நெடுகிலும் மனிதர்
மறைந்து வாழ
பயன்படும் வளைகள்
ஒன்றில் சாக்குத்திரை;
அதில் நீளும் கிழிசல்
வழியே அசைந்த
 கல்பட்டுக் கீறலுற்ற
ரசம் போன கண்ணாடி
முகக்கொடிக்கு
ஒரு கணத் தயக்கத்தேர்
ஈந்து சென்றான்
இன்றைய பாரி.
 


‘சாதனை’ 
 
வேதனை வண்ணான் இன்னொரு
சாதனை செய்தான்
வெளுத்து வாங்கி விட்டான்
கறுத்த மயிரை
 


     1
பார்த்தேன் வெள்ளைப் பூவேலை
வார்த்த சோளி முதுகை
தெரிந்தது முகமே.
         2
கம்பி என்று காலிரண்டும்
எம்பி வீழ்த்தவும் இளித்தது
கம்பி யதன் நிழல்.
         3
மிரண்ட குதிரைத் தடதடப்பா
முரட்டுத் தரையதில் காற்றின்
சருகுக் குளம்பொலி.

நரகம்
சி. மணி 
http_tamildigitallibrary.in_admin_assets_periodicals_TVA_PRL_0000838_ezhuttu_1962_04-43
தனிமை, விழியில்
விழுந்து விழுந்த இனிமை,
இடைவேளை யின்றி யின்றி
ஆசையதை நீட்ட நீட்ட,
கூடற் கனவைக் கூட்ட கூட்ட,
சகதி கிடைத்த கொசுவாய்
வஞ்சிக் குலையைப் பெருக்க பெருக்க,
பித்த மேறிய உடலாய்
உடலும் உள்ளமும் அரிக்க அரிக்க,
பசி தீண்டிய நாயாய்                                      10
தெருத் தெருவாய்
அலைக்க அலைக்க...

நான்கு விரல்குதி யிட்டயிவ்
வாண்டு செருப்ப ணிந்து,
சேலைத் தலைப்பை பட்டம் விட்டு,
இடவலமாய் மருங்கசைத்து,
சோரில் சோர்வெழுப்பும்
கோதை நீளம் அரையாக்கி
தொங்க விட்டக் குதிரைவால்
முன்னும் பின்னும் நடையோடு                         20
இசைந்தே அசைந்து வாவெனக் கை
அசைத்தே யழைக்க வலம் செல்லும்
பைங்கொடி நிறையருந் தெருக்கள் ....

மரீனா மணற் பரப்பில்
வாரத்தில் ஏழுமுறை
மாலைக் கிளரும்
மாலை வேலையில்
அமைதி தேடிச் சென்றால்
எதிரொலிக்கும் கடலோரம்
கருமீர மணல் வெளியில்
ஆழியீந்த அணங்கை யெண்ணி                      30
கண்மூடி கால் கட்டி
மனதைத் தட்டிக் கொடுத்திருக்க
அவர்கை வினையெல்லாம்
ஓடையின் ஓலிசெய்ய,
துள்ளும் நகையெல்லாம்
இசைக் குழுவை நினைவூட்ட
செவிவழியே புகுந்த பெண்கள்
விழித்திரையை விலக்கிட ;
வாரிய குழலெல்லாம்
தென்றலில் மீனாகும்,                                        40
கண்களின் ஒளியெல்லாம்
வானின் வில்லாகும்,
விரிந்த இதழெல்லாம்
பிளந்த நெஞ்சாகும்.

கால் பட்ட மணலிலும்
கண் பட்ட மனதிலும்
பல சுவடு பதித்து,
பதித்த நிலை தெரியாது .
குதித்தோடும் ஒரு கும்பல் ;
அதைத் தொடரும் மற்றொன்று :                     50
இன்னல் தனித்த வராதா?

காலத்தின் கீற்றுகள்
வாசமாவில் மறைவதென
உள்ளங்கைக் கோடுகள்
இருளில் மறையும் வேளை
தந்த துணிவு செங்கையை
உந்த நின்ற தையலர்,
தலைவன் வரவும் சற்றே
உயரும் தலைவி விழியாக
மறைக்கும் சேலை சாண் தூக்கி,              60
காக்கும் செருப்பை உதறிவிட்டு,
கடலுக்கு வெம்மை யூட்ட
கிழக்கே அடிபெயர்ந்து ,
அலையை அணைக்க விட்டார்
ஓரடி ஒளிரும் கால்கள்
மாசறு மதங்கள் போல
வானுக்கு வழிகாட்ட .

பாழும் காற்றில்லை
தாவும் அலையில்லை
தெறிக்கும் துளியில்லை                        70
பரவையல்குல் ஒளி
புறத்தளிப்ப வில்லை.

துருப்பிடித்த இதயத்தை
துடைக்க வந்த நேரத்தில்
துருவேற்றுவோர் எத்தனை?
வளைந்திட்ட வாலை
நிமிர்த்த வந்த இடத்தில்
வளைத்து விடுவோர் எத்தனை?

மரீனா கடற்கரை
'லாங் பீச் ஆகாதோ ?'                                80
கூவமூறும் நகர்
சேய்னோடும் நகராகாதா?'
நானுழலும் இப்பகுதி
மேற்புறத்தில் இருக்காதோ ;
தென்கடல் தீவாக
இந்தியா இருக்காதோ ;

தமிழகம் கீழுமல்ல
முழுதும் மேலுமல்ல :
உலையேற்றி விட்டு
சோறாக்க மறியல் ;                                  90
பட்டினியும் அழிவுமே
கிடைத்த பயன் ;
பின்னாலும் போகவில்லை
முன்னாலும் நடக்கவில்லை;
நடுக்கிணற்றில் நிகழ்காலம்.
காழிட்ட மரபு
தாழிட்ட துணிவு
சிக்கலை வெட்ட
கைக் கொடுக்க மறுக்க -
செய்வ தென்ன ?.........  100

காமம் :
பல நோய் ஒரு மொழி
புற்று சோகை ஈளை
இரத்த அழுத்தம் இன்னுமென்ன
உண்டோ அத்தனை அத்தனையும்
காமத்துள் அடக்கம்..

வாங்கிய பாவம் போக்க
ஆடது வெட்டுதல் போல
தேங்கிய காமம் இறைக்க
திரைப்படம் தேடிச் சென்று                              110
அரங்கில் அடி வைத்தால்
தோகையர் குழாமும்
மைந்தர் சும்மையும்
துவன்றி யெங்கும்
காமனுக்கு ஓய்வில்லை
(வேண்டும் அவனுக்கு).
என தல்ல கலை வளையும்
என தல்ல காளையர்
குழாம் நீங்காப் பொழுது
எனக்கொண்டு மணியை                             120
முன் சேலைச் சரிவை யெண்ணி
அளந்திடும் குமரிக் கூட்டம் :
அதைச் சூழ்ந்து வளைத்து
புகைத்து இமைத்து சிரித்து
மறக்க முயலும் என் கூட்டம்.
ஒலியெழுப்பி, மறதி தேடி
வந்தோரை உலுப்பி, பணம்
கொடுக்கச் சொன்ன மணி
சிதறி தொடர்பை
நெறுக்கி சென்றது.  130

போன யுகத்தில்
படித்த தோழி
எவளா வதுஒருத் -
தீ
வரமாட்டாளா?

எட்டினால் தொட முடியும்
இதழ் தரும் சிரிப்பொலி
தெறித்து வளைந்து சுருண்டு
சுழன்று சுழியிட்டு வந்து
உந்திச் சுழிக்குத் தீயிட்டு                      140
முதுகுத் தண்டை எரியவிட்டு
மூளை நெளிவை நேராக்கும்
சூளையாய்த் தகிக்கும் சூட்டால்.

அரங்கத்தின் இருட்டில்
படம் பார்க்க யார்விட்டார்?
திரைப்படத்தைத் தோற்கடிக்கும்
மெய்ப்படம் சுற்றுமுற்றும்
காளானாய் பூத்திருக்கும்
பார்வைக்குத் தப்பிவிட்ட
பெருங் களிப்பில்                                              150
பள்ளியறை ஆக்கிவிட்டார்.
ஒரு நாள் :
பலவண்ண ஒலிகள்
பழங்கதை அசைவுகள்
இருளின்ப வகைக்கூவ
சகியாமல்,

வயதோ இருபத்தேழு
மணமோ ஆகவில்லை
இன்னும் எனக்கு
எனச் சொன்ன போதும்                            160
என்ன பயன்?

வயிற்றில் வளரும் கருவாய்
உதைக்கும் நெளியும் கிளர்ச்சி
ஊட்டும் காமமே நிறைக்கும்
எங்கும் .........

வேதனை குமிழியிட
இடுக்கண் களையும் வழிதேடி
எண்ணச் சிக்கல் பல போட்டு
வீட்டுச் சுவர்க்குள் முடிக்க வெண்ணி
தவமிருந்த காரணத்தால்                                170
தானியங்கி வரவும்,
சூடகத் தளிர்க்கைம் மாதரொரு
சிகரெட் பிடிகை மைந்தரும்
ஊடுற நெறுக்கி யேற்
சேவலே முன்னென் போரும், இல்லை
பெட்டையே முன்னென் போரும், இல்லை
வரிசையே நன்றென் போரும், ஏறுவோரும்
தேர்ந்ததே தேரினல்லால் யாவரே தெரியக் கண்டார்?

குழுமினர், துவன்றி முயல,
கால் மிதிப்பன, கைபிடிப்பன,                                 180
தோள் இடிப்பன, மயிர் இழுப்பன்,
பொய்யோ வெனும் இடையோடு
ஐயோவெனும் அரும்பினர்
கிடைத்தாரென நெறிப்பன்,
பாடியல் யானைப் பந்தியங் கடையின்
கூரியல் சாதனை நெறுக்கி ஆய்வன
எல்லாம் வண்டியில் அடுத்த கணம்
கலைந்த மழையுள; மறைந்த பூவுள் ;
தாங்கிய செங்கைத் தலைக்கண் மேலுள்ள ;
ஒலித்த வளையுள் ; ஓய்ந்த விரலுள;                     190
சரிந்த தலைப்பால் தெரிந்த பூவுள.

பாலூட்ட கிடைத்தனவோ? பால்
உணர்ச்சியூட்டிடவே
ஆழக் கழுத்தெடுத்து
நீளம் மிகக்குறைந்து
சேரப் பிடித்த சோளி,
நின்று கவனித்து சோர்வு
நடை பின்னச் செய்யும்........

வீட்டிற்கு வந்த உடன்
இலக்கியத்தில் தஞ்சம் புக
அருப்பேந்திய கலசத்துணையமுதேந்திய மதமா
மருப்பேந்திய எனலா
முலை வஞ்சி........ காவின்கீழ்
போத ரகடாரப் புல்லி முயங்குவேந்
முகடு காப்பியாத்து விட்டாங்கு ..........
சேர்ந்த மார்பில் கன தனம் யிரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற் றென்றெ அங்கையால் தடவிப் பார்த்தாள் ;
செவ்வரியால் சுடும் விழியால் அறையை வலம் வந்தேன்,
என் காண்பேன் என்னல்லால் யான்? 
தாள் புரட்டுந் தொறும் பெரும்                              210
கிளர்ச்சி பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
போல வளர்கின்றதே
என் செய்ய?

கடலாடை நிலத்துக் கவிஞர்
காலமெலாம் கனவில் நனவில்
கற்பனையில் காணும் களிக்குளத்தை
வெட்டுண்ட புண்ணென விம்மிய
பருக்களென பட்டென்றுடனே
கதவாய் மூட வியலாதே.

உந்தாது நெய்வார்த் துதவாது தானெரியும்
நந்தா விளக்கின் நெடுஞ்சூடு
குளிப்பினும் சுடுமே குளிர்சாந்தம்
தெளிப்பினும் சுடுமே.........

மூட்டை யொழிக்க கொல்லி தெளிப்ப
முடுக்க வானொலிப் பெட்டியினை :
வாடிக்கை மறந்ததும் ஏனோ?
பார்த்தால் பசி தீரும்.

திடுமென் றோராண் வரவே
வாரிச் சுருட்டும் மரபு  230
வளர்த்த வொருமங்கையென
விரைந்தே யணைத்து விட்டு
பேயறைந்த நிலையில் வெறிக்க ,
ஈயிரண்டு ஒன்றும் நிலை கண்டு
துள்ளிப் பதறி தவிப்படங்க
இறையறைக்குள் நுழைந்தவுடன்
கடவுளைக் கண்டு கரம் குவிக்
காமலே திணறித் திடுக்கிட்டு -
முக்தி :
சிவனின் மிக வெளிய உருவச் 240
சிலையது உணர்த்துதல் தானோ?
காயெல்லாம் சிவலிங்கம்
கனியெல்லாம் சிவலிங்கம்
விழியினிலே படுமெல்லாம்
எழிற்கோலம் இணை கூடல்
அதை நினைவூட்ட வூட்ட,
பஞ்சணை போலரு ளாளன்
யாரினி யுண்டெனத் தேர்ந்தே
தஞ்சம்
அடைய எண்ணிச் செல் லுழி  250
தற்செயலாய் விழி
அத்தளை யில்லா வெளியொளி
பலகணி யூ டேக்
எதிர்வீட்டுக் குலவிளக்கு
தீராத் தீராப் புதிர்,
கோடை மஞ்சற் புல்வெளியில்
ஊரும் அரவின் மென் னொலியாய்
சேலை நடையால் சரசரக்க,
அடங்காக் குழற்சுருள் ஒன்றிரண்டு
மிடுக்காய்த் தழுவிக் கொஞ்சும்  260
மாசில் திங்கள் நெற்றியிலே
நால்வர் நோக்கைக் குவித்தீர்க்க
வாலம் திலகம் ஒன்றிட்டு,
ஏற்றத் தாழ்விக் குறையுலகில்
தேவை தேவை யெழிற்படுத்த
எனவே கூறும் நிறைவடிவு
கண்டோர் நெஞ்சாய் ஆட ஆட,
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும்
இரை நோக்கிய புலிவிழியாய்
கட்டிற் கூத்தை 270
முன்கண் டொளிர,
வாலைமலர்க் கொத்து கூந்தற்
கற்றையுடன் கவிதை பாட
கள்ள விழி அறியாப் பேதை
சந்தநடை யிட்டிரைந் தேக,
நெஞ்சு நினைவா யூறும்

நண்டு நுரைவா யோரம்
நீள்கடற் கரை மணல் விரிப்பில்
சேவடி புதைத்து புதைத்து
சிறுமணல் சிதற வெடுக்கும்  280
சந்தனக் குமரியின்
தேன் கூடு மறைக்கும்
சேலைத் தலைப்பாய்
காற்றடைத்த பை நடுங்க,
கேளா விழிதனைச் சினந்து
சுடுவிரலால் மிகவழுத்தி,
பொதிவண்டி இழுத்திடவே
பெருமுயற்சி செய்மாடென
தள்ளாடித் தள்ளாடி

படுக்கையில் விழுந்திட்டால்  290
துயிலழகி ஊடி நின்றாள்.
எரிக்கும் வெயிலதனில்
துடிக்கும் என்பிலதாய்
இப்படியும் அப்படியும்
தவி தவித்து மயங்கியபோது
உலகத்துப் பெண்ணெல்லாம்
அணங்காகி வெறியூட்ட
விழித்துயிர்த்து மயங்கியோர் கணம்
கழித்து விழித்து உயிர்த்து
நரகம்  300
பெரு நகரம்.

அருமைச் சேவல் தண்ணொலி எழுப்ப
விண்ணென் றெழுந்ததும் என்ன தெரிவது
பலகணி வழியே?
கொடுத்து வைத்தவன் தன்னொரு பாதி
வாயில் முன்னால் ஆடை நெகிழ
கூடல் மயக்கைக் கூட்டி யோட்ட
பொல்லாப் பெருமுயற்சி எடுத்தனள்.
பகல் பன்னிரண்டு மணி : பின்
இரவு பன்னிரண்டு :  310
நரகப் பகல், பெரு நரக
இரவு எத்தனை எத்தனை?
ஐயோ ..........
திரைப்பட வரங்கு நுழைவதற்கே
சீட்டு வழங்கும் அறைக்கதவு
திறப்பது எப்போ தெப்போதென
உளம்வெறி யேறப் பார்ப்பதுபோல்
தந்தைவாய் திறப்பதென்றோ
எனவயர்ந்து நோக்கி நோக்கி,

விளக்கணைப்பை வரவேற்பை  320
செய்திச் சுருளை திரைப்படத்தை
மனக்கண்ணில் ஓட்டும் நிலை ;
தானியங்கி ஏற நின்று நிற்காமல்
போவதை ஏங்கி நோக்கும் மலடி நிலை.

புணர்ச்சி மறத்தல் இன்றி
புறவொழுக்கம் உயிரினும் ஓம்பி
பேய்க்காற்று சீறும்போது
மொய்குழல் தொங்கு மலராய்
வீழ்ந்தொழிந் தாகவேண்டும் ;  330
தேய்புரிப் பழங்கயிறு
தாங்கவே தாங்காது
காலம் வரும் அதுவரை
காற்றிருந்தால்.  334

     ‘கொலைகாரர்கள்’

     1. புகழாசை பிடித்தாட்ட போர் மீது சென்று எண்ணற்றோரைக் கொன்று வெற்றி
வீரன் எனப் பெயர் பெற்ற கொலைகாரன்.

     2. மதம், கடவுள் என்று பேசி நாலாயிரம் பேர்களைக் கழுவேற்றினவர்கள்.

  3. மூன்றாவதாக நாகரிக ரகம்.
கள்ளிலே போதையில்லை.
சதையெழில் தளும்பித் தளும்பி
வழியும் கன்னியில் போதையில்லை;
கண்முன் தெரியாமல் காற்றாகக்
காரை ஓட்டுவதில் தான் என்ன போதை!
மரம் வீடு வண்டி பாய்ந்தோட
கையை ஹாரனில் அழுத்தி,


கண்ணைப் பாதையில் வைத்து,
பல்லை உதட்டில் தைத்து
60, 70, 80, 95-ஐயோ!
வண்டி நின்றது
மனிதப் பிணம் நிறுத்த.

4. கள்ள நோட்டுக்களை நல்ல நோட்டுக்கள் என்று தள்ளி விடுவோர்.
5. உண்மையும் போலியும் ஒன்று தான்
வாங்குவது என்னவென்று தெரியாமல்
வாங்கும்போது எல்லாமே ஒன்றுதான்;
கிடைத்தால் போதுமென்று தவிக்கிறார்கள்.
பழியேற்க உண்டு கடவுளும் டாக்டரும்,
நமக்கோ உண்டு லாபம்.
ஒன்றுக்கு நூறு. போ,
மருந்தைக் கடைக்கு அனுப்பு.
     6. கு.ப.ராவின் ‘ஆற்றாமை’ கதாநாயகி சாவித்ரி மாதிரி; தான் அனுபவிக்கக் கிட்டாத
இன்பத்தை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பொறுக்காமல் குறுக்கிட்டு ஊறு செய்து திருப்தி
காண்கிறவர்கள்.
 
கொலைகாரனின் தத்துவம்!-
இதுக்கென்ன பெரிய வாதம்?
நான் கொலைகாரன் தான்.
பல கொலைகளைச் செய்தவன்தான்
அப்போது, கழுத்தை அறுத்த போது
வெள்ளரிப் பழத்தை அறுப்பது போல் அறுத்தபோது
நான் கடவுளாக இருந்தேன்
நான் நினைத்தால் உயிர்
கொடுக்கலாம், போக்கலாம்,
நீங்கள் யாரும் கொலைகாரன் ஆனதில்லை;
அதனால் நீங்கள் யாரும் கடவுள் ஆனதில்லை!









காதடைக்கும் இரைச்சலுடன்
டவுன் பஸ்கள் வரும் போகும்


  பணி புரிந்து மிகக் களைத்து
மனைக்கே வழிதேடி
வேர்வைத் துளி பல்லிளிக்க
சோர்வோடு உடல் வளைத்து
சுற்றி நிற்கும் ஒரு கும்பல்;
பூத்துவிட்ட விழி குறுக்கி
அத்திப்பூ டவுன் பஸ்ஸை
அலுத்து நோக்கும் பிறிதொன்று;
பழைய நட்பு பேச்சிலாளும்;
புதிய நட்பு வலைவீசும்
நட்பில்லா மனிதர்களோ
செவி தீட்டி நெருங்கி நிற்பர்;
செவிக்குணவு மட்டுமின்றி
விழிக்குணவும் இருக்குமெங்கும்

     பலர் வாழ்வு பூராவும் ‘உழைத்துப் பெறுகின்ற வருவாயை ஒரு மூச்சில் விழுங்கிய
கார்’ ‘நடுத்தரக் கார்’ டாக்ஸி ஆட்டோ அத்தனையும் வரும் போகும், ‘மனம்நீங்கி
உருப்பெற்று உலவுகின்ற ஆசைகளாய்.’

     இளைஞர், வஞ்சியர் அலங்காரத் தோற்றங்கள் பல ரகம். இவர்களிடையே நடக்கும்
உணர்ச்சி நாடகங்கள்தான் எப்பேர்ப்பட்டவை?

  கோடிவரை யோட்டிக் கள்ள விழி சுழற்றி
நோக்கி நேர்நோக்கி யெதிர் நோக்கி
நோக்கிப் பயனில்லை யெனத் தெளிந்து
தீட்டிய இதழ் விரித் தோச்சி
என்ன என்ன வாய்ச் சொற்கள்
வண்ண வண்ணச் சிரிப்பொலிகள்;
இளமை ‘போயிங்’ உணர்ச்சி வானில்
பறக்கும் வேளையில் கிளம்புமொலிகள்,
அவ்வேளையிலே வஞ்சியிடம்
எத்தனை மலர்ச்சி துள்ளல் துவளல்
எத்தனை உணர்ச்சியின் வானவில் திரட்சி
எத்தனை அருகில் வா எட்டி நில்;
வஞ்சி நோக்கி வெடிப்போரிடம்
எத்தனை கவர்ச்சி துள்ளல் ஆட்டம்
எத்தனை தலைமுறை வேட்டையின் வளர்ச்சி
எத்தனை சிக்கியதா தப்பிவிட்டதா

     ‘மலட்டு ஒத்திகையின் மலட்டு முன்னோட்டம்’ ஆன இது இளமையின்
இனிமைக்கூத்தாய் சுவைக்கிறது. வந்து போகும் டவுன் பஸ்கள் ‘பொய்த்துப் பொய்த்து’
மேஜை மேல் பைலெனக் குவிக்கிறது கும்பலை!’ இடம் பிடிக்கும் வலிமையும் கயமையும்
இளமையும் இல்லாமல் நிற்கின்ற கவிதை நாயகன் ‘வெளியிலே உருப்பெற்ற ஆசைஉலா’
கண்டு பொழுது போக்க வேண்டியதாகிறது.

    இவன் மனம் குறுகுறுக்கிறது--

  யார் சொன்னார் இந்தியா
பிற்பட்ட நாடென்று?
முத்தர வகுப்பென்று?
பிற்போக்கு நைலான் உடுத்துமா?
கடை நடுத்தரம் கார் வலம் வருமா?
இங்கே இப்போது
தெரிவதெல்லாம் மேல்தரம்,
வறுமை யேது, இங்கே
இருப்பதெல்லாம் பெருமைதான்
இன்பந் தான்; சிலோன் சீனா
பாக்கிஸ்தான் எதுவுமில்லை;
இருப்பவை
மவுன்ட்ரோடு வாய்ப்பேச்சு விழிவாள் வீச்சு
பற்சர மின்னல் நகை ஜலதரங்கம் தேர்வு
இழப்பு இளிப்பு இளமையின் இயல்பு.

     இரைச்சலோடு டவுன் பஸ்கள் வரும்போகும் இடத்தில், காலம் ஓட கால்வலிக்கக்
காத்துநிற்கும் வசதியற்றவனின் மனம் பெரிய இடங்களின் யுவர்களும் யுவதிகளும் பயில்கிற
நடுத்தெரு நாகரிகத்தை மேலும் மேலும் கண்டுசிலிர்க்கிறது. எப்பவோ குடித்த ஒரு கப்
காபி வயிற்றில் கரைந்து போன உணர்வு. கண்முன்னாலோ--

  பசிக்காமல் உண்ண முடியாமல்
திணித்து முடித்து விட்டு
நீட்டிய தட்டில் எறிந்தபடி-
பிளேயர்ஸ் ஓன் பாக்கட்-ஓ
கீப் தி சேன்ஜ் வெயிட்டர்-
ஓயிலாக சிகரெட் பற்றவைத்து
சுருள் சுருளாய் புகை கிளப்பி,
தவளைக்கும் பாம்பின் வாய் விரிப்பாய்
அவள் வியப்பின் விழிவிப்பை
கடைக் கண்ணில் களித்து-
டிரைவர். நீ போ.
பட் பீ ரெடி அட் டென், சற்றே
மிகச் சற்றே தயங்கிப் பின் தங்கி
இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்
இசைந்தே ஆடும் சடையழகை
நெளிந்தே குலையும் பின்னழகை
வெறித்து நோக்கி விருந்துண்டு,

     கிறங்கிடும் மனம் அவள் தோளில் கைபோட்டு நடந்து, தொட்ட சுகம் மயக்க
இடித்தும் இணைந்தும் சென்று, கடற்கரையில் தனிமை இடம் தேடி இன்பம் சுவைத்து
வியக்கிறது.

    நின்ற இடத்திலேயே நிற்கும் அவனுள் ஆசை மலர்கள் விரிகின்றன.

    பஸ் வரும். போகும். ஒரு கப் காபி கரைந்து போயிற்றே என்ற தவிப்பு
தலைதூக்குகிறது.

     அவனது ‘சிவப்புச் சேலை அழகி’ சிறிது நின்று போக மாட்டாளா என்ற ஏக்கம்.
பயன்தான் இல்லை.

  செல்வம் இளமை யின்மை
நடைபாதையில் காக்க வைக்கும்
கூட்டம் குறையும் வரை.
பொறுமை தீரும் வரை
மயக்கம் தள்ளும் நேரம்
சிவப்பழகி சற்று நிற்க
புத்துணர்ச்சி துளிர்க்க..

     இவனுக்கு இடம் கிடைத்து விடுகிறது. ‘காசம் பிடித்து உலுக்குவதுபோல், துடிக்கின்ற
பழுதுடல்’ பஸ் சூடேறிய காற்றோடு, டீசலின் பெரு நாற்றத்தோடு நகர்கிறது. அந்தச்
சூழலிலும்,

  பக்கத்து மங்கையின் உரசல்
பல்லற்ற வாய்க்குக் கரும்பு:
ஆசைக்கு அழிவேது?
செல்வம் மங்கை பெருமை இளமை
இவைகளுக்கு அழிவேது?
ஆயினும் இவன் நிலைமையோ?
முதுமை.
வறுமை,
சிறுமை.
நாய் வால் முதுகு.
சீவாத தலையாகக் கலைந்து
சிதறிக் கிடக்கும் தாள்கள்,-
இப்பிறவியில் விடிவில்லை.
 வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கி ஊர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழ விட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையம்!

     எழுத்திலே பச்சை என்றால், எழுத்தாளன் மனசிலே பச்சை என்றாகுமா? நாடகத்தில்
பாத்திரங்கள் பேச்செல்லாம் ஆசிரியர் பேச்சா? ‘நரகம் எனது நரகமா. நரகத் தலைவன்
நரகமா என்றெல்லாம் கேட்டுவிட்டு, கவி சொல்கிறார்.

  பலவகை ஆறுகள்
எனக்குள் இருக்கும் கடலில்
கலக்கும்; எழுபவை கடல் முகில்,
அருவிக்கு வெறுப்பில்லை
வருவோரைக் குளிப்பாட்டும்.
காற்றுக்குத் தடுப்பில்லை
காற்றெங்கும் புகுந்து விடும்,
நீயிழுத்த காற்றணுக்கள்,
நானிழுத்த காற்றணுக்கள்;
கதிரொளிக்கும் மறைப்பில்லை;
கதிரொளியில் பச்சையில்லை;
படைக்கின்றேன் பச்சையத்தால்.


பற்பசையில் முத்துச்சரம்
எண்ணெயில் தாழ்கூந்தல்
செருப்பில் மலரடி
உடையில் சிலையுரு
பௌடரில் பட்டழகு
சோப்பினில் நட்சத்திரம்
விற்றிடுவாள் விளம்பரத்தால்
முலைக்கோண வலைக்குமரி.

     இப்படிப் பல நிகழ்ச்சிகள் சுவையாகச் சித்திரிக்கப்படுகின்றன. இலக்கியத்திலிருந்து
பற்பல வரிகள் நினைவு கூரப்படுகின்றன. இவ்வாறு ‘இச்சைக்கு வழிபாடு’ எங்கும்
எப்போதும் நடை பெறுவது சுட்டிக்காட்டப்படுகிறது. உடலில் உப்பு மாதிரி ‘கவர்ச்சிக்
கலப்பு’ நிறைந்து காணப்படுகிறதே!

  ஆற்றல் இழந்த கடவுளர்
சாலையில் காட்சிப் பொருளாகிப்
பெற்றனர் அழகியல் போற்றல்
பக்தி மலருக்குப் பதிலாய்.
அறிவியல் இக்கையில் பறித்துப்
பறித்ததை நீக்கி மகிழக்
குவித்தது அக்கையில் பல பொருள்;
முன்னேற்றம், நைலக்ஸ், சினிமா
இறைவனை விட்டபின், மற்றது
பிறப்பு மர்மம் ஆண் பெண்
பிணைப்பு மர்மம் ஒன்றுதான்,
நாயக நாயகி
பக்தி போனதும்
தலைவன் தலைவி
சித்தி வந்தது.
கோவில் போனதும்
கொட்டகை வந்தது;
கடவுள் போனதும்
நட்சத்திரம் வந்தது.
டும் டும் டும்.

படிப்பும் பணியும்
கதவைத் திறக்கவும்
ஆடினர் பாவையர்
பாம்புக்குப் பால் வார்த்து
துலங்கல் மறந்து
தூண்டுதல் ஓம்பி,
வினையில் எதிர்வினை,
அறுவடை செய்கிறார்.

     இந்தக் குழப்பம் எல்லாம் ஒருசில தலைமுறை நீடிக்கும். பிணியற்ற இனிப்பார்வை,
குலமற்ற மனப்பார்வை அதற்குள் கிட்டிவிடும். என்னதான் சொன்னாலும், உயிரியல்
தேவையிது.

  கவிஞனும் நடிகன் தான், கவிஞன்
எழுத்தில் நடிப்பான்; எழுதிய
வரிக்கு நடிகன் குதிப்பான்
கனிந்த நடிகனே என்றாலும்
நடிப்ப தெல்லாம் நடிப்பா,
கலப்பிலா நடிப்பா? சற்றும்
இமைப்பிலா நடிப்பா? சற்றும்
இமைபப்பில்லா விழிப்புடன் நடிகன்
நடிக்கட்டுமே, ஒருமுறை கூடவா
உணர்வுடன் புணர்ந்து தன்னை
மறக்க மாட்டான்? மறந்து
கலக்கமாட்டான். நடிப்பு
மறந்து சொந்தம் கலப்பது
அறிவது அருமை கலப்பது
அரிதல்ல. புறவயப் பார்வை
அழிப்பதல்ல அகத்தை; தட்டி
பிழைப்பதில்லை கவிஞன் தன்நிழல்


.

சி. மணியின் “வரும்போகும்”
சுரா நினைவுகள் 12
சுந்தர ராமசாமி



http://www.kalachuvadu.com/current/issue-214/சி-மணியின்-வரும்போகும்




சி. மணி, எழுத்து பத்திரிகையில் தோன்றித் தெரிய வந்தவர். எழுத்து பெருமைப்பட்டுக் கொள்ளும் கவிஞர். இவருடைய ‘நகரம்’ எனும் நீண்ட கவிதை வெளியானபோது எழுத்து ‘புதுக்கவிதையில் ஒரு மைல் கல்’ என்று தலையங்கம் எழுதிற்று.

சி. மணியைக் கருத்துலகக் கவிஞர் என்று சொல்லலாம். வாழ்க்கை, அதன் எளிமையை இழந்து சிக்கலாகிவிட்டது இவரைச் சங்கடப்படுத்துகிறது. சங்ககாலக் கவிதைகளைப் படிக்கிறபோது அன்றைய வாழ்க்கை எத்தனை எளிமையாக இருந்திருக்கும் என்று நம்முள் ஒரு கற்பனை எழும். அதுபோன்ற ஓர் வாழ்க்கை முறை - சிக்கலற்ற வாழ்க்கை முறை மணிக்கு உவப்பாக இருந்திருக்குமோ என்று அவர் கவிதைகளைப் படிக்கும்போது எனக்குத் தோன்றும். மற்றப்படி இளம் பெண்களின் அழகும் பகட்டும் இன்றுபோல் அன்றும் அவரை வருத்தக்கூடும். ஆனால் அவர்கள் நிலையை நினைத்து வருந்துவது, உள்ளூர அவருக்குப் பிடித்துத்தான் இருக்கிறது.

தற்கால வாழ்க்கையின் ஆத்மார்த்தமற்ற தன்மையும் மதிப்புக்களுக்கு ஏற்பட்ட சரிவும் போலித்தனமும் இவர் மனம் சுருங்க வைக்கின்றன. இவ்வுணர்வின் மெய்த்தன்மை படாடோபம் துறந்த அடக்கமான உணர்ச்சிகொண்ட இவர் கவிதைகள் மூலம் நிரூபணமாகின்றது. படைப்பு எழுத்தாளனின் அடிமனக்குணங்களை அவருடைய சம்மதமின்றியே வெளிப்படுத்துபவை.

மணியின் அனுபவங்களின் வெளியீடு, இவருடைய முன் முடிவுகள் அல்லது சார்பு நிலை அல்லது கட்சி அல்லது குழுபோன்ற கால்கட்டுகளால் திரிபு படாமல் கலை நியதிகளுக்கு மட்டும் ஆட்பட்டு வெளிவருதல் நம் கவனத்தைத் தொடுகிறது. அவற்றைப் பரிசீலனைக்கு உள்ளாக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது. என்றாலும் ஒரு கவிஞனின் கவித்துவ, இந்தக் குணத்தினால் மட்டும் - அதாவது படைப்பு மெய்யான அனுபவத்தின் ஜீவனைச் சார்ந்து நிற்கிறது என்பதனால் மட்டும் - தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை. கவிதையின் நாணயத் தன்மைக்குத்தான் இது அடிப்படை. நாணயத்தன்மை கொண்டிருப்பவை சிறப்பான கவித்துவம் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சி. மணியின் கவிதைகளின் வரையறைகளைத் தெரிந்துகொள்கிறவர்களுக்கு இவ்வுண்மை மேலும் துலங்கும். மெய்யான அனுபவத்தைச் சார்ந்து நிற்கும் இயற்கையான எளிமையான காரியம்கூட ஒரு விசேஷ லக்ஷணமாக நமக்குத் தெரியும்படி இன்றைய பின்னணி மோசமாக இருக்கிறது. இன்றைய கவிதை உலகம் மேற்போக்கான மோஸ்தர்களுக்கும் பொறுப்பின்மைக்கும் ஆளாகிக் குழம்பிப் போலிக்கவிதைகளும் போலிக் கவிஞர்களும் ஏராளம் தோன்றிவிட்டார்கள் போலிருக்கிறது. கட்டுக்கும் காவலுக்கும் உட்பட்ட கரன்சியில் போலி நோட்டுக்கள் மிகுந்துபோன ஒரு தேசத்தில் கவிதை உலகம் என்ற சுதந்திர வனத்தில் நடக்கும் கூத்துக்களும் கும்மாளங்களும் ஆச்சரியப்படத்தக்கவை அல்ல. நேற்று இருந்த தீவிரமான நோக்கத்தைக் கவிதை இன்று இழந்துவிட்டது என்றே தோன்றுகிறது. கவிதை எழுதுவது வெகு சுலபம்; அப்படியே சுமாராக இருந்தாலும்கூட ஆடம்பரமான பதிப்பாகப் போட்டு சரிக்கட்டிச் சங்கப்பலகையில் ஏற்றிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் போலும். இன்றைய நிலை விமர்சிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமான காரியமாக இருக்கிறது.

அதோடு புதுக்கவிதையே பழைய கவிதையாக மாறிக்கொண்டிருக்கிறது. புதுக் கவிதையை ஒரு சவாலாகக் களத்தில் புகுத்தியவர்களே பழைய பண்டிதர்களாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். கவிதை மூலம் வாசகர்களுடைய பழைமை ருசிகளை மாற்றியாக வேண்டும் என்று புறப்பட்ட புதுக்கவிதை ஆதரவாளர்களில் சிலர் கல்லூரி ஆசிரியர்களின் ருசிகள் என்ன, தேவைகள் என்ன என்று சிந்திப்பது புதுக்கவிதை வளர்ச்சிக்கு அனுகூலமாய் இராது. பலருக்குப் பழைமையிலிருந்து விடுபட்டு ஒரு புது சகாப்தத்தையே தோற்றுவித்த திருப்தி ஏற்பட்டுவிட்டது.

தொடர்ந்து இயக்கத்தை முடுக்க வேண்டும் என்பதைவிடத் தங்களுடைய சாதனையைச் சரித்திரத்தில் சீக்கிரமாகப் பொறித்துவிட வேண்டும் என்பதே முதன்மையான லட்சியமாக இருக்கிறது. சரித்திரத்தை நாம் சொடக்குப் போட்டு வாலாட்டவைக்க முடியுமா என்பது தெரியவில்லை.

பலருக்கு இன்றைய கவிதை பழைய கவிதையிலிருந்து வெகுதூரம் விலகி முன்னேறி வந்து நிலைபெற்றுவிட்டது என்று எண்ணம். தங்களுடைய தீர்க்க தரிசனமும் பாதை வகுப்பும்தான் இதற்குக் காரணமென விமர்சகர்கள் உற்சாகம் கொள்ளுகிறார்கள். நமக்கு நாமும் கிளர்ச்சியூட்டிக் கொள்ள மறுத்து உண்மையாகச் சாதித்தது என்ன என்பதை ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்று தோன்றுகிறது. யாப்பை வீசியெறிந்து விட்டோம் என்ற காரணத்தாலேயே பழைமையிலிருந்து விடுதலை பெற்று முன்னோக்கிப் பெரும் பாய்ச்சல் எடுத்துவிட்டோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் இன்றைய கவிதைகளை மொத்தமாகப் பார்க்கிறபோது முன்னேறியது நேர்க்கோட்டில் அல்ல என்பதும் பாரம்பரியத்திலிருந்து ஆரம்பித்து அதிலேயே முடியும் ஒரு வட்டத்தில்தான் என்பதும் தெரியவருகிறது. இனிமேல் இதே வழியில் அதிக வேகம் கொள்ளும்போது பழைமையுடன் அதிக நெருக்கம் கொள்வோம்.

யாப்பு நாம் கற்பனை செய்த விதத்தில் ஆதிக்கம் கொண்டதல்ல என்பதை அது கழன்றுவிழுந்த சுலபம் வெளிப்படுத்திற்று. முன்னர் யாப்பை உதறி வெளியே தள்ளியதற்குக் கவிதையின் பொருள் நியாயம் சொல்லிற்று. இன்றைய அநேகம் கவிதைகளில் காணும் பத்தாம்பசலிச் சமாசாரங்களுக்கும் அரசியல் கோஷங்களுக்கும் யாப்பு எப்படி வில்லங்கம் என்பது எனக்குப் புரியவில்லை.

இந்தச் சிந்தனைகளின் பின்னணியிலேயேதான் சி. மணியின் கவிதைகளைப் படிக்கிறேன். சி. மணி பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த பரிச்சயமுள்ளவர் என்பதை அவர் கவிதை காட்டுகிறது. மரபைச் சார்ந்த சொற்சேர்க்கையும் பிரயோகங்களும் பழைய வரிகளின் ஒலி வரிசையும் அவரிடம் ஆட்சி செலுத்துகின்றன. இதை நான் சாதகமாகக் குறிப்பிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். நமது பழைய கவிதை வளத்தை நாம் செம்மையாகத் தெரிந்துவைத்துக் கொள்வது ஒன்று. பழைய கவிஞர்களின் கவித்துவம் வெளிப்பட்ட மனநிலைகளையும் உத்திகளையும் வார்த்தைகளையும் நாம் சார்ந்து நிற்பது மற்றொன்று. புதுக்கவிதைக்கு அடிப்படை ‘நான் என்னை வெளிப்படுத்துகிறேன்’ என்பதாகும். எனது இன்றைய நிலையை, எனது இன்றைய மூளையை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, என்னிடம் மிஞ்சியிருக்கும் கவித்துவம் எனும் என்னுடைய சாதாரண - எடுத்துக்கட்டிய அல்ல - உணர்ச்சியை வெளியிடுகிறேன் என்பதாகும். உண்மையில் எதையும் நான் உதறித்தள்ளவில்லை. யாப்பையோ பழைய விஷயங்களையோ பழைய வார்த்தைகளையோ பழைய ஒலிநயங்களையோ எதையும் நான் உதறித் தள்ளவில்லை. அவை என்னிடம் இல்லை. அவ்வளவே. ஒரு பெண்ணைக் கண்டதும் எப்போதும் என் மூளை பெண் என்றுதான் உணர்த்துகிறது. நான் பெண் என்று சொன்னால் வராத கவிதை, மங்கை என்று சொன்னால் வந்துவிடும் என்றோ கோதை என்றும் ஆரணங்கு என்றும் சொன்னால்தான் வரும் என்றோ சொன்னால் அதை மறுத்துக் கவிதை என்ற சவாலை ஏற்றுக்கொண்டதற்குப் பெயர்தான் புதுக்கவிதை. வார்த்தை உதாரணத்தை வைத்து நான் சொன்ன விஷயத்தைப் பழைய கவிதையின் பிற குணாம்சங்களுக்கும் நீங்கள் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

மணியின் கவிதை ஒன்றைப் பார்ப்போம்.

குறையீடு!

சிறுசிறைச் செருப்பில் கால்விரல் முடக்கம்
எனதுயிர் உணரும் சதையினை அரித்த
எலும்பு, தோலைப் பொத்தல் செய்யும்.
வெளிச்சம் வழியில் பேரறை; இருளோ
அனிச்ச முயக்கு. தவிப்பு யாமத்தில்
விண்மீன் வெட்டி வெருட்டும்; சிலந்தி
வேய்ந்த நியூரோன் மரங்கள் தோன்றும்.
காத்துகிடக்கிறேன். சோம்பேறி,
எத்தனை ஆண்டுகள் ஒரு குழிதோண்ட.

இறுக்கமும் திடத்தன்மையும்கொண்ட கவிதை இது. இக்கவிதையில் நியூரோன் மரங்கள் என்ற ஒரு வார்த்தைதான் இக்கவிதையை இன்றைய காலத்தோடு பிணைக்க வற்புறுத்துகிறது. மற்றப்படி இக்கவிதை எந்தக் காலப்பகுதிக்கும் சொந்தமான தன்மைகாட்டி எந்தக் காலப்பகுதிக்கும் இணைந்தது அல்ல என்று ஆகிவிடுகிறது. வெளிப்பட்ட விதம் இன்றைய மூளைப் பதிவுகளைப் பிரதிபலிக்கவில்லை.

இதற்கு நேர்மாறாக ‘சுட்டு’ என்ற கவிதை. இத்தொகுப்பில் என்னை மிகுதியும் கவர்ந்த கவிதையும் இதுதான்.

இவனை விட்டுவிடுங்கள் என்றோ
கரையில் பிடிப்பிடியாய் மணல் எடுத்த
நினவில், நீரைப் பற்றி இறுக்கி
எடுத்துப் போட்டுக் கொள்ள முயல்கிறான்.

உவனைவிட்டு விடுங்கள். சிறுகைப்
பொருளைப் பார்க்கத் தொலை நோக்கியும் தொலைப்
பொருளைப் பார்க்க நுண்ணோக்கியும் பயன்
படுத்தி உற்றுநோக்கி விழிக்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். இருட்டில்
நீண்ட நாள் இருந்து விட்டதால் அவன் கண்
கூம்புகள் உருளையாய் மாறின. அதனால்
இருட்டை வெளிச்சம் என்று மருள்கிறான்.
அரிஸ்டார்கஸ் சொன்னதை கிரேக்கர் கேட்டமா
திரிதான் இம் மூவரும் கேட்பார். கோபர் நிகஸ்
விளக்கும் நாள் வரைக்கும் காத்துக்
கிடக்கட்டும். போதும் விட்டுவிடுங்கள்.

மணியின் கவிதைகளில் ஆங்காங்கு பழைய கவிதைகளின் எதிரொலிகளைக் கேட்கிறோம். இது இரண்டு வகையில் வெளிப்படுகிறது. பழைய வரிகளைப் பகிரங்கமாகச் சேர்த்துத் தருவது. இது மேல்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தி. இதனால் கவிதை பெறும் அதிகப்படியான பரிமாணத்தைப் பற்றி வாசகர்கள் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள விட்டுவிடுகிறேன்.

மற்றொன்று பழைய ஒலிச்சேர்க்கையின் நினைவுகளால் ஏற்படுகின்ற பாதிப்பு. “ஆழக் கழுத்தெடுத்து நீளம் மிகக் குறைத்து, சேரப்பிடித்த சோளி,” இவ்வரிகளின் இறுக்கத்தையும் அழகையும் ஏற்றுக்கொள்ள ‘கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத் தரிக்க குறள்’ என்ற வரிகள் தமிழில் இல்லாமலிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதுபோல் பல இடங்களில்.
சி. மணியின் புதிய நோக்கும் சொற்சிக்கனமும் வரிகளை நாம் சற்று எதிர்பாராத விதத்தில் இவர் பிரித்துப் போடுவதில் இவர் ஏற்படுத்தும் பலன்களையும் (போன யுகத்தில்) படித்த (தாழீ / எவளாவதொருத் / தீ - என்று தீ தனியே பிரிந்து வருதலுள்ள அதிர்ச்சி) இன்று எழுதப்பட்டுள்ள கவிதை என்றாலும்கூட கோவில் பிரகாரத்தில் எண்ணெய் படிந்த தூண்கள் உணர்த்தும் காலம் விழுங்கிய குணமும் திடத்தன்மையும் வாசகர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை.

‘க்ரியா’ புத்தக வெளியீட்டில் வாசித்த கட்டுரை. பிரக்ஞை 19 ஏப்ரல் 1976

சுந்தர ராமசாமியின் இதுவரை தொகுக்கப்படாத கட்டுரை. இக்கட்டுரையைக் கண்டுபிடித்து அளித்தவர் நாவலாசிரியர் சு. வேணுகோபால். அவருக்கு நன்றி.
##000000000000000000000000000000000000000000000000000000000000000000000








தாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்

ஆசை


http://tamil.thehindu.com/general/literature/தாவோ-தே-ஜிங்-செயல்படாமையின்-வேத-நூல்/article8147674.ece


படம்: இயான் லாக்வுட்


சீனாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டது ‘தாவோ தே ஜிங்’. இந்நூலே தாவோயிசத்துக்கு அடிப்படை. கன்பூசியஸைவிட 50 வயது மூத்தவரான லாவோ ட்சு சீனத் தலைநகரில் ஆவணக் காப்பாளாராகப் பணிபுரிந்தார். அரசியல் நிலைமை மோசமானதால் பதவி விலகினார். இவர் தலைமறைவாகப் போக எண்ணி எல்லையைக் கடக்கும் முன் எல்லைப்புற அதிகாரி இவரை வற்புறுத்தி ஏதாவது எழுதித் தரச் சொன்னதால், இவர் 5,000 சித்திர எழுத்துகளில் ‘தாவோ தே ஜிங்’ எழுதியதாகத் தெரிகிறது. இவரைப் பற்றி நிலவும் பலகதைகளில் ஒன்று இது.

‘தாவோ’ என்பதற்குப் பல பொருள்கள், அவற்றுள் இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமானது ‘வழி’ என்னும் பொருள். ‘தே’வுக்கு ‘நேர்மைக்கு உந்துதல் அல்லது ஊக்கம் தேவை’ என்று இப்புத்தகத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ‘ஜிங்’ என்றால் நூல். ஆக, ‘தாவோ தேஜிங்’ என்றால் ‘தாவோ’வையும் ‘தே’யையும் பற்றிய நூல் என்று பொருள்.

இன்றைய வாழ்க்கை முறை மிக வேகமாகச் சென்றுகொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. வேகம்தான் மனிதர்களை அழைத்துச்செல்கிறது என்றே தோன்றுகிறது. வேகம் குறைந்தாலோ நின்றாலோ அவர்கள் பதற்றமாகிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

தாவோ மிதத்தை, மெலிவை, குறைவை, தேய்வைப் பற்றி மட்டுமே பேசுகிறது. வலியது, கடினமானது, அதீதம், மூர்க்கம் எல்லாம் மரணத்தின் அறிகுறிகள் என்கிறது:

‘உயிரோடு இருக்கும்போது மனிதன்
மென்மையாக, மிருதுவாக இருக்கிறான்;
உயிர் போன பிறகு அவன்
கடினமாக, விறைப்பாக இருக்கிறான்

......................

கடினமும் விறைப்பும் சாவின் கூறுகள்;
மென்மையும் மிருதுவும் வாழ்வின் கூறுகள்;
எனவே மிகக் கடுமையாக இருக்கும்போது போர் வீரன்
வெற்றி பெற முடியாது;
மிகக் கடினமாக இருக்கும்போது மரம்
முறியாமல் இருக்க முடியாது’

என்கிறது ஒரு பாடல்.

இதன் தொடர்ச்சியாக ‘வீரம்’, ‘மேலாதிக்கம்’ ஆகிய கருதுகோள்களையும் அப்படியே புரட்டிப்போடுகிறது தாவோ:

‘மிகச் சிறந்த போர்வீரன்
வீரத்தனமாக இருப்பதில்லை;
மிகச் சிறந்த போராளி
மூர்க்கத்துடன் இருப்பதில்லை.
மிகச் சிறந்த வெற்றிகளைக் குவிப்பவன்
போரில் பங்குபெறுவதில்லை;
மிகச் சிறந்த முதலாளி
வேலைக்காரர்களுக்குக் கீழே தன்னைத்
தாழ்த்திக்கொள்கிறான்’

என்கிறது ஒரு பாடல்.

இன்றைய வாழ்க்கை முறையின் அதீதங்களாகிய போர், ஆயுதங்கள், தீவிர அதிகாரம் போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளை ‘தாவோ தே ஜிங்’ நெடுகக் காண முடிகிறது. ஆக்கிரமிப்புக்கான போரையும் மரண தண்டனையையும் தவிர்ப்பது, முற்றிலும் எளிமையாக வாழ்வது, தீவிர அதிகாரத்தை வற்புறுத்த மறுப்பது ஆகிய மூன்று வழிகளைப் பரிந்துரைப்பதன் மூலம் நடைமுறை வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் அரசியலுக்கும் வழிகாட்டுகிறது ‘தாவோ’.

‘தாவோ’வின் கருத்துகளிலேயே மகத்தான தாகவும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுவும் ‘செயல்படாமை’ என்ற கருத்தாக்கம்தான். ‘செயல்படாமை’ என்பதற்கு எதையும் செய்யாமல் சும்மா இருப்பது என்பது பொருளல்ல. மிகக் குறைந்த முயற்சியுடன் சரியான சமயத்தில் ஒன்றின் அல்லது ஒருவரின் இயல்பைச் செயல்படவிடுவது என்பது இதன் பொருள்.

நாம் எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறோம் (தாவோவின் அர்த்தத்தில்). நமது இயல்பைச் செயல்பட விடுவதில்லை. மலையளவு முயற்சியைக் கொண்டு தினையளவு பலனை அறுவடை செய்கிறோம். ஆனால், செயல்படாமை அப்படியல்ல; தினையளவு முயற்சியைக் கொண்டு மலையளவு பலனை அறுவடை செய்வது.

‘புலமையை நாடிச் செல்கிற மனிதன்
நாள்தோறும் வளர்வான்;
தாவோவை நாடிச் செல்கிற மனிதன்
நாள்தோறும் தேய்வான்
தேய்வான், தொடர்ந்து தேய்வான்,
செயல்படாமையை அடைகிறவரையும்
மேலும்
எல்லாவற்றையும் செய்ய முடியும்,
செயல்படாமையினால்.’

இந்தக் கருத்துகள் மிகவும் சிக்கலானவை; மேலோட்டமான பார்வையில் குழப்பக்கூடியவை. மேலோட்டமான பார்வையில் இப்படி முரண்படு கிற, வெறும் வார்த்தை விளையாட்டு என்று தோன்று கிற பல பாடல்கள், வரிகள் தாவோவில் உண்டு; அவை எல்லாமே நல்லது x கெட்டது, அழகு x விகாரம், நன்மை x தீமை போன்றவற்றைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருதுகோள்களைத் தூக்கி எறியக் கூடியவை:

‘அழகாயிருப்பது அழகு என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
விகாரம் தோன்றுகிறது.
நன்மையை நன்மை என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
தீமை தோன்றுகிறது.’

நன்மை, அழகு போன்ற விஷயங்களெல்லாம் பிரக்ஞைபூர்வமானவை அல்ல. இயல்பானவை. அழகாக இருப்பது அழகு என்பதால் அழகாக இருக்க முயல்வதும், நன்மை செய்வது நன்மை என்பதால் நன்மை செய்ய முயல்வதும் இயல்புக்கு அதாவது தாவோவுக்கு எதிரானது. நன்மை என்று ஒன்றைக் கருதும்போது தீமையும் அழகு என்று ஒன்றைக் கருதும்போது அந்த இடத்தில் விகாரமும் தோன்றிவிடுகிறது. கடவுள் என்று நினைத்தால் சாத்தான் தோன்றிவிடுகிறது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.

‘தாவோ’ வெறும் தத்துவம் அல்ல; நூறு சதவீதம் நடைமுறைக்கானது. தாவோவின் கருத்துகளை, முக்கியமாக செயல்படாமையை, அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தலாம்; பயன்படுத்தியுமிருக்கிறார்கள். இன்றைய வாழ்வுக்கு மிகச் சரியான வழிமுறையை ‘தாவோ தே ஜிங்’ நமக்குப் பரிசளிக்கிறது.

உலகில் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ‘தாவோ தே ஜிங்’கும் ஒன்று. தமிழிலும் இதற்குப் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. அவற்றில், சி.மணி மொழி பெயர்த்த ‘தாவோ தே ஜிங்’ தனித்துவமானது.
################################################################################################################################


சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும்
தவசி கருப்புசாமி·WEDNESDAY, 4 OCTOBER 2017

https://www.facebook.com/notes/தவசி-கருப்புசாமி/சிமணி-கவிதைகளில்-மரபின்-தாக்கமும்-புத்தாக்கமும்/1925477331046865/?fref=mentions
சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும் ( பகுதி 1 )- பொதிகைச்சித்தர்

எந்த ஒன்றையும் மீற வேண்டுமானால் அதற்கான முன்னிபந்தனை என்னவென்றால் அதனைப்பற்றிய புரிதலின் அடிப்படையிலிருந்து தான் அம்மீறல் தொடங்கப்பட்டாக வேண்டும் என்பதே. மரபின் சாராம்சத்தை உட்கிரகித்துக் கொண்டாலன்றி புதுமையைச் சமைத்திட ஒருபோதும் இயலாது. மரபையறிந்து மரபைமீறுதல் என்பதற்குத் தமிழின் ஆகச்சிறந்த உதாரணம் சி. மணியே. அவருக்கு இத்தகைய சரியான புரிதலுக்கு வழிவகுத்தது எது?

“Traditional and Individual” என்ற கட்டுரை எங்களுக்குப் பாடமாக இருந்தது. அதிருஷ்ட்டவசமாக அதில் மரபை முழுதாக அறிந்து கொண்டால் தான் நீ எதை மீற வேண்டும் என்பது தெரியும். நீ மரபைத் தெரிந்து கொள்ளாதவரை நீ புதுமையைப் படைக்க முடியாது. ஆகையால் நீ பழைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.”1

என அவர் ஆங்கில இலக்கியம் பயின்ற போது அவருக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த டி.எஸ். எலியட்டின் கட்டுரையையே அவர் சுட்டிக்காட்டுவார். மரபை மீறுவது புதுக்கவிதை என்னும் போது அது ஏதோ யாப்பை மீறியதே புதுக்கவிதை என்பதான பிழையான அர்த்தப்பாட்டில் பிரயோகப்படலாயிற்று. புதுக்கவிதை என்பதன் உள்ளார்ந்த பொருண்மை அதுவன்று.

“புதுக்கவிதையின் விசேசத் தன்மை / யாப்பினை மீறல் அல்ல இதனை / ‘யாப்பியல்’ நூலில் கவிஞன் சி. மணி / அன்றே அறுதியிட்டதைக் கவனி / கணிப்பொறித் தனமாய் ஓடும் பிரக்ஞை / திடுக்கிடும் படிக்குப் பிறக்கும் / புதுவிதக் கருத்தமைப்புத்தான் கவிதை”- பிரேமிள்2

சிவசேகரத்துக்கான தம் அதிரடிக்கவிதையில் இவ்வாறு எடுத்துரைப்பார் பிரேமிள். தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, யாப்படைவிருத்தி, யாப்பதிகாரம் எல்லாவற்றையும் ஈராண்டுகள் ஆராய்ந்து ‘யாப்பும் கவிதையும்’ என விரிவாக எழுதினார். அதன் சுருக்கமே செல்வமென்ற புனைபெயரில் ‘நடை’ இதழின் துணையேடாக வெளியிட்ட ‘யாப்பியல்’ எனும் நூல். அவரது கவிதைகளைப் புரிந்து கொள்ளமாட்டாத புதுக்கவிதையாளர்க்கும் மரபுக்கவிதையாளர்க்கும் சவாலாக தம் அறைகூவலை யாப்பியலுக்கு ஊடாகவும் எழுப்பினார்.

“என் பார்வை விசாலமானது. புதுக்கவிதை எழுதுகிறவர்களுக்குப் பழைய கவிதை தெரியாது. யாப்பு, எதுகை, மோனை, சீர், வெண்பா, ஆசிரியப்பா, குறள், வெண்பா, கட்டளைக்கலித்துறை தெரியாது. ‘நடை’யில் வந்த கவிதைகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை. ‘ஒளிச்சேர்க்கை’யில் வஞ்சிப்பா என்று யாரும் சொல்லவில்லை. யாராவது ஒருவர் கூடச் சொல்லவில்லை. எங்கே மரபு மீறுகிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. உங்களுக்கென்ன மரபு தெரியும்?.... மரபுக்காரர்களுக்குக் கவியரங்கம் மட்டும் தான் தெரியும். மற்றொன்றும் தெரியாது.”3

மட்டுமல்லாமல் தம் கவிதைகளுக்கு ஊடாகவும் நயம்பட இவற்றைச் சித்திரித்தார்.

“துணியின் தரத்தைக் கூற / உறுதியான வழி வேண்டுமா? / துணியின் மீது மரபு / முத்திரை இருக்கிறதா / பாருங்கள், அப்படி இருந்தால் உங்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை”

“அவருக்குத் தெரியும் / வெற்றியின் இரகசியம் / ஐயமென்ன / யாப்பின் / தூயபருத்தி ஆடைகளே / நீங்கள் எப்படித் தோற்றமளிக்க / வேண்டும் என்பதறிந்த / மரபுக்குழுத் தயாரிப்பு.”

“இவருக்குக் கவலையில்லை / இவருக்குக் கிடைத்துவிட்டன / புதுமை / தரும் பாவின் உலகின் பிரபலமான துணிகள்.”

என விளம்பர மொழியில் விளம்பரக் கட்டமைப்பிலேயே தொடங்கித் தொடரும் சி. மணியின் ‘கவியரங்கம்’.

“யாப்பிட்ட பனுவலெனும் விரகஞ் சேர்க்கும்

காப்பிட்ட வனப்புமுலைக் குமரி பார்த்தும்

யாப்பற்ற வெறுங்கவிதை யதனை யெப்படிக்

கைப்பற்றத் துணிந்தாரைம் புலனு மொப்பியே”

எனச் செவ்வியல் முடுகிசையில் தொடர்ந்து

“அன்று மணிக்கதவை / தாயர் அடைக்கவும் மகளிர் திறக்கவும் / செய்தார் மாறிமாறி என்றும் / புலவர் அடைப்ப / கவிஞர் திறப்பார்.”4

எனவாங்கு முடித்து மரபுப் புலவோர் அடைத்த கவிதையின் மணிக்கதவங்களின் தாழ்திறக்கின்றார் சி. மணி. இதன் விளம்பரமொழி வடிவரீதியான கட்டமைப்பின் காட்சிப்படுத்தல் எனத் தொடங்கி வாதவிவாதத் தரப்புகள் செவ்வியல் மொழியொடும் முடுகிசையோடும் ஊடாடி அவருக்கே உரித்தான அங்கத முத்தாய்ப்புடன் நிறைகின்றது இக்கவிதை. இக்கவிதையில் அவர்தம் செவ்வியில் குறிப்பிட்டது போல ’மரபுக்காரர்களுக்குக் கவியரங்கம் மட்டும் தான் தெரியும். மற்றொன்றும் தெரியாதெ’ன்பதும், புதுக்கவிதை எழுதுகிறவர்களுக்குப் பழைய கவிதை யாப்பு முதலானவை தெரியாது என்பதும் மிக இயல்பாக எளிமையாக அவரது உத்திகள் வாயிலாக அருமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ள பாங்கு கவனிக்கத்தக்கதாகும்.

அவரது ‘எழுத்து’ச் சகபயணிகளுக்கு மத்தியில் யாப்பு பற்றிய புரிதல்கள் எவ்வாறிருந்தன, அவர்களிடமிருந்து சி.மணி எவ்வாறு வேறுபட்டிருந்தார் என்பதுபற்றிக் கண்போம்.

பிச்சமூர்த்தி மரபுக்கவிதையிலிருந்து மாறுபட்டு எழுதியபோதிலும் அவருக்கு யாப்புகுறித்த போதுமான புரிதல் இல்லை, கு.ப.ரா.வுக்கும் கூடத்தான். இது குறித்துத் தாம் அவர்களுடன் இட்ட சண்டையின் விளைவாகவே, பயிலமுயன்றும் கைகூடாமல் ந.பி. யாப்பினைத் துறந்தாரெனவும், கு.ப.ரா.வோ அத்தகைய கவிதை முயற்சிகளையே கைவிட்டாரெனவும் கரிச்சான்குஞ்சு5 ‘புதுக்கவிதைக்குப் பாரதியா வழிகாட்டி’ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். வசனகவிதை முயற்சியில் தலைப்பட்டவர்களின் யாப்பு பற்றிய புரிதல் குறித்து இன்னும் சில பதிவுகளையும் இத்துடன் ஒரு சேரக் காண்போம்.

“வசனகவிதைச் சாத்தியத்தை முன்வைத்தவர்கள் மரபுக்கவிதை இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். இவர்கள் செய்யுள்மரபை மட்டுமல்ல தமிழ்மரபையே மறுக்கும் அளவுக்கு மரபறியாதவராயும் தம்மைத் தனித்த மரபுள்ளவர்களாகவும் கருதும் போக்கினால் கவிதையைப் பற்றிய விவாதங்கள் வேறு தளங்களிலும் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பாரதிதாசனைப் போன்றோர் இப்புதிய முயற்சிகளைப் புறக்கணித்தனர்” - சு. அரங்கராசு.6

மரபுக்கவிஞர்களில் பாரதிதாசனும், புதுக்கவிஞர்களில் சி. மணியும் யாப்பினைக் கையாளும் வல்லமையில் துறைபோகியவர்கள்.

“பாரதிதாசன் மரபைப் போற்றியவர். மரபுக்கு ஓர் அழகையும் நெகிழ்ச்சியையும் இனிய இசையையும் அந்த மரபுக்கு ஒரு தகுதியையும் தந்துவிட்டுப் போனார். அவர் யாப்புக்களை ஒரு தளையாக - வெறும் வாய்பாடாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனை உயிர்ப்புடையதாக, ஆக்கமும் சுவையும் உடையதாக மொத்தத்தில் கவிதையாக ஆக்கிக் கொண்டார். யாப்பையும் மரபையும் ஒரு கவிஞன் எப்படி வெற்றிகொள்ள முடியும் என்பதற்குப் பாரதிதாசன் சான்று” - தி.சு. நடராசன்7

எவ்வாறு யாப்பையும் மரபையும் ஒரு கவிஞன் மரபுக்கவிதையில் வெற்றிகொள்ள முடியும் என்பதற்குப் பாரதிதாசனே தலைசிறந்த உதாரணம் என தி.சு.ந. சுட்டிக்காட்டுகின்றாரோ அவ்வாறே புதுக்கவிதையிலும் யாப்பையும் மரபையும் வெற்றிகரமாகக் கையாளவல்ல வல்லமைக்கு ஆகச்சிறந்த உதாரணம் சி. மணியே எனலாம். மரபுக்கவிதை புதுக்கவிதை இரண்டிலுமே யாப்பைச் சிறப்பாகக் கையாள்வதென்பது சிற்பிக்கும் கைவந்த கலையே.

உருவம் உள்ளடக்கம் குறித்த அன்றைய காலக்கட்ட விவாதத்தரப்புகளிலிருந்து பொதுவாக வடிவச்சோதனையைப் பிரதானப்படுத்திய எழுத்துமரபு, உள்ளடக்கப் பாடுபொருளையே பிரதானப்படுத்திய வானம்பாடிமரபு இரண்டிலிருந்தும் மாறுபட்டதே சி.மணியின் பார்வை.

“உருவம் கவிதையின் புறமாகும். உள்ளடக்கம் கவிதையின் அகமாகும். உருவத்திற்குக் கட்டுக்கோப்பைத் தருவது யாப்பு. உள்ளடக்கத்திற்குக் கட்டுக்கோப்பைத் தருவது இறுக்கம். கவிதையின் புறமாகிய உருவத்தில் விட, அகமாகிய உள்ளடக்கத்தில் தான் கட்டுக்கோப்பு (அழகும்) முக்கியமானது. உள்ளடக்கத்தின் இயல்பே படிமம் என்னும் அழகு தான்; உருவத்தின் இயல்பு, தொடை என்னும் அழகு என்று சொல்ல வேண்டியது இல்லை”- செல்வம்8 (சி. மணி)

உருவம் உள்ளடக்கம் என்ற இயந்திரவயப் புரிதலைக் கடந்து புறக்கட்டுமானம், உள்கட்டமைப்பு எனக் காணவல்ல தீர்க்கமான பார்வைத்தீட்சண்யம் சி. மணிக்கு அன்றே வாய்த்திருந்ததனை இனம்காட்டும் இந்தப் புள்ளியும் அவரது தனித்துவச்சிறப்பின் குறிப்பிடத்தக்க அம்சமே எனலாம்.

“இந்திய இயக்கத்தில் நவீனத் தமிழ்க்கவிதை விரைவானதோர் உந்துசக்தியாகச் செயல்பட்டது. சென்னையில் (1959) ‘எழுத்து’ முதல் இதழில் ந. பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற கவிதையை வெளியிட்டுப் புதுக்கவிதை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் சி.சு. செல்லப்பா” - கமில் சுவலபிள்9.

தமிழில் தமக்கு யாரும் முன்மாதிரி கிடையாது எனத் தம்முடனான சிபிச்செல்வன் செவ்வியில் பிரகடனப்படுத்தும் சி. மணி தமது ‘எழுத்து’ச் சகபயணிகளிடமிருந்து தாம் வேறுபடும் புள்ளியை அச்செவ்வியில் சுட்டிச்செல்கின்றார்.

“ந.பி. பெட்டிக்கடை எழுத்துவில் வந்ததைப் பார்த்து நிறையப் பேர்கள் எழுத ஆரம்பித்தார்கள். ஆனால் எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது”

“முக்கோணம் என்ற கவிதை எழுத்துவில் 1959-இல் முதல்முதலாக எழுதினேன். டி.எஸ்.எலியட்டின் பாதிப்பில் ‘முக்கோணம்’ எழுதினேன்”.

“அப்போது நான் ‘பெட்டிக்கடை நாரணன்’ படித்தது கிடையாது. சங்க இலக்கியம் படித்திருக்கிறேன். பட்டினப்பாலையின் ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாத் தலைக்காவிரி’ என்று தொடங்குகிற கவிதை இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பத்துப்பாட்டிலும் இருந்த பாடல்கள் என்னைப் பாதித்தன. இவ்வளவு நீண்ட கவிதைகள் பட்டினப்பாலையிலும், பத்துப்பாட்டிலும் படித்தேன். சி.சு. செல்லப்பாவுடன் எழுதி ‘எழுத்து’வில் பிரசுரமானது”.

“பழைய ஆட்களுக்கு நாம் எல்லோரும் கடன்பட்டிருக்கிறோம். அண்மையில் இருக்கிற யாருக்கும் கடன்படவில்லை. ஆனால் தொன்மையில் இருக்கிறவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம்”.

“சீரடி வஞ்சிப்பா தமிழில் இப்போது பழக்கமானதாகிவிட்டது. எதுகை, மோனை இப்படியும் வரலாம். அப்படியும் வரலாம். இது யார் கொடுத்தது. 20ஆம் நூற்றாண்டின் சி.மணி தான் இதைக் கொடுத்தார். ‘நரகத்தில்’ நீண்ட கவிதைகளில் கொடுத்தேன்.”10

இந்தப்புள்ளியும் சி.மணி தம் சகபயணியரிடமிருந்து தனித்து வீற்றிருக்கும் இடம். சங்கப்பாடல்களின் செவ்வியல்மரபை அவர் மீட்டெடுக்கும் இடம். பட்டினப்பாலை வரிகளுடன் சி.மணியின் ‘நரகம்’ வரிகளை ஒப்பிட்டு நிகழிடம், காலம், களன் ஆகியவற்றை ஒப்பிட்டும், செயற்கை வழித் தடுமாற்றத்தை விதந்தோதியும் முன்வைக்கப்படும் ஓர் ஒப்பாய்வுப் பதிவினை சி.கனகசபாபதி அருமையாக முன்வைத்துள்ளார்.11

“சங்ககாலம் செவ்வியல் இலக்கியக் காலம். நமக்குத் தற்காலத்தில் புதுக்கவிதையால் செவ்வியல் மரபு திரும்பியிருக்கிறது. அதிலும் அதீதப் புனைவியல் போக்கை விட்டு மாறியிருக்கிறது.

பட்டினப்பாலையில் ஒருசில வஞ்சிவரிகளைப் பார்ப்போம்.

‘பொய்யா மரபின் பூமலி பெருந்துறைத்

துணைப்புணர்ந்த மடமங்கையர் / பட்டுநீக்கித்

துகிலுடுத்து / மட்டுநீக்கி மகிழ்ந்து / மைந்தர்

கண்ணி மகளிர் ஆடவும் / மகளிர் கோதை

மைந்தர் மலையவும் / நெடுங்கான் மாடத்து

ஒள்ளெரி நோக்கிக் / கொடுத்திமிற் பரதவர்

குரூஉச்சுடர் எண்ணவும் / பாடல் ஓர்த்தும்

நாடகம் நயந்தும் / வெண்ணிலவின் பயன் துய்த்தும்’

இங்கே ஆசிரியப்பாவுடன் தொடர்ந்து வருகிற வஞ்சிவரிகளுக்காக உதாரணமாக நான் காட்ட விரும்பவில்லை. இதிலுள்ள செவ்வியல் பாங்கையே உணரவேண்டுமென்று சொல்லுகிறேன். சி.மணியின் ‘நரகம்’மில் இதுக்கு ஒப்பான பகுதி காணப்படுகிறது. என்ன இது, உருத்திரங்கண்ணனாருக்கும் சி.மணிக்கும் ஒப்புமையா என்று அதிர்ச்சி அடைவார்கள் கவிதை வாசகர்கள்.

‘பகல் பன்னிரண்டு மணி; பின் / இரவு பன்னிரண்டு நரகப்பகல், பெருநரக / இரவு எத்தனை எத்தனை? ஐயோ… / திரைப்படவரங்கு நுழைவதற்கே சீட்டு வழங்கும் அறைக்கதவு / திறப்பது எப்போதெப்போதென / உளம் வெளியேறப் பார்ப்பதுபோல் / தந்தைவாய் திறப்பதென்றோ / எனவயர்ந்து நோக்கி நோக்கி, / விளக்கணைப்பை வரவேற்பை செய்திச்சுருளை திரைப்படத்தை / மனக்கண்ணில் ஓட்டும் நிலை; / தானியங்கி ஏற நின்று / நிற்காமல் போவதை ஏங்கி / நோக்கும் மலடிநிலை’

இந்தப் புதுக்கவிதையில் வஞ்சிவரிகளின் நினைவு எழுந்து அதே அசைவு பிறக்கிறது.”

“பட்டினப்பாலை வரிகளிலும் நரகம் வரிகளிலும் செவ்வியல் பாங்கே தழைக்கிறது. இந்த ஒன்றையே சிந்தியுங்கள் நீங்கள். புதுக்கவிதைக்கும் சங்கப்பாட்டுக்கும் மரபுத்தொடர்ச்சி இல்லாமலா போகிறது?”

கவிதைரசனையோடு சி.க. இங்கு அவர் வலியுறுத்தும் சங்கப்பாடல்களின் செவ்வியல்மரபின் தாக்கம் மட்டும் அல்லாமல் யாப்புமரபு, கவிதைமரபு என்கிற வகையிலும் விதவிதமாக விதந்தோதி இனங்காணப்பட வேண்டியதே சி.மணியின் ‘நரகம்’ ஆகும். ‘நரகம்’ கருத்தியல் முறைமையாக மரபு மார்க்சியர்களாலும், ‘பாதையில்லாக் காட்டில் பயணம்’ செய்யும் முயற்சி, ‘பழைய இலக்கியவரிகளுக்கு வலிப்புநோய்’ என உருவவியல் நோக்காளர்களாலும், டி.எஸ். எலியட் செய்ததை சி.மணி செய்கிறார் என மிகை எளிமைப்படுத்திப் பிறழ முன்வைப்பதாய் பழமரபறியாதவர்களாலும் அன்று குறுக்கீடுகள் நிகழ்த்தப்படலாயின. இத்தகைய தரப்புகளையும் இவற்றிற்கு எதிரதான மாற்றுத்தரப்புகளையும் இங்கே ஒருசேர ஒத்துறழ்ந்து நோக்குவோம்.

சி.மணியின் ‘நரகம்’மில் கலித்தொகை, கம்பராமாயணம் விவேகசிந்தாமணி வரிகள் ஊடிழைப் பிரதிகளாகக் காணக்கிடக்கின்றன.12

‘சூடகத் தளிர்க்கை மற்றைச் / சுடர் மணித்

தடக்கை பற்றி’ எனும் கம்பராமாயண வரிகள்

‘சூடகத் தளிர்க்கை மாதரொடு / சிகரெட்

பிடிகை மைந்தரும்’ என வாங்கும்

‘மாந்தரே பெரிதென்பாரும் / மகளிரே

பெரிதென்பாரும் / போந்ததே பெரிதென்பாரும் /

புகுவதே பெரிதென்பாரும் / தேர்ந்ததே

தேரினல்லால் / யாவரே தெரியக் கண்டார்’ எனும் கம்பர் வரிகள்

‘சேவலே முன் என்போரும், இல்லை / பெட்டையே

முன் என்போரும், இல்லை / வரிசையே

நன்றென் போரும் ஏறுவோரும் / தேர்ந்ததே

தேரினல்லால் / யாவரே தெரியக்கண்டார்’ எனவாங்கும்

‘பொய்யோ எனும் இடையாளொடும் / இளையானொடும்

போனான் / மையோ மரகதமோ மறி / கடலோ

மழைமுகிலோ / ஐயோ, யிவன் வடிவென்பதோர்

அழியா அழகுடையான்’ எனும் கம்பர் வரிகள்

‘பொய்யோ எனும் இடையோடு / ஐயோ வெனும்

அரும்பினர் கிடைத்தாரென நெறிப்பன’ எனவாங்கும்

‘அரும்பேந்திய கலசத்துணை அமுதேந்திய மதமா

மருப்பேந்திய எனலா முலை வஞ்சி, .. காவின்கீழ்

போதர் அகடாரப் புல்லி முயங்குவேம் / துகள்தபு காட்சி

வையத்தார் ஓலை / முகடு காப்பி யாத்துவிட்டாங்கு… /

கற்பகஞ் சேர்ந்த மார்பில் கன தன மிரண்டுந் தைத்தே /

அப்புறம் உருவிற்றென்றே / அங்கையால் தடவிப் பார்த்தாள்’

என முறையே கம்பராமாயண, கலித்தொகை, விவேகசிந்தாமணி இலக்கியவரிகள் அப்படி அப்படியேயும் ஊடிழைப்பிரதிகளாக ஊடாட விடப்பட்டுள்ளன. இவ்வாறு இவையிவை இன்னின்ன இலக்கியத்திற்குரிய வரிகள் என இனங்காண முடிந்தபோதிலும் ஊடிழைப்பிரதியான உத்தியெனப் பிடிபடாமல் இதனை ‘ஈயடிச்சான் காப்பி’யென ஜகன் ‘தாமரை’ இதழில் முன் வைத்திருந்தார்.13

“புரியும் விஷயங்களைக் கூட புரியாமல் செய்து திணர அடிக்கிறார்கள். பழைய இலக்கியத்தின் செழிப்பான மரபுக் கவிதைளிலிருந்து மேற்கோள் காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு அவற்றை வெட்டிவெட்டி விறகுக் கட்டைகளாகப் போட்டு இலக்கியத்தையே கறைப்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக ‘நரகம்’ என்னும் ஒரு கவிதையில்”…..

கோரமான காக்கைவலிப்பு நோய்க்குத் தமிழை உட்படுத்தும் முயற்சி எனக் குற்றஞ்சாட்டினார் ஜகன். மாற்றுத்தரப்புகளை இத்துடன் ஒருசேரக் காண்போம்.

“இங்குமட்டும் பழம்இலக்கியத்தை அதுவும் அப்படிஅப்படியே ‘காப்பி’யடிக்கலாமோ என்று ஒருத்தர் குஸ்திக்கு வரக்கூடும். அந்த ஒருத்தர் டி.எஸ். எலியட்டின் ‘பாழ்நிலம்’மைப் படிக்க வேண்டும். எலியட் தங்கள் ஐரோப்பிய இலக்கியங்களிலிருந்து மட்டும் அல்ல, இந்திய நூல்கள் வரை மேற்கோள்ரீதியில் சேர்த்திருக்கிறான். அது அவனது பாண்டித்தியத்தைக் காட்டுகிற டம்பம் என்று தான் ஆரம்பத்தில் பலர் கருதினார்கள். ஆனால் போகப்போகத் தெரிந்தது. அப்படி மேற்கோள்களாக அவன் பிற நூல்களுக்கு வாசகன் மனத்தை அலைய விட்டிராவிட்டால், ஐந்து பிரிவுகளுக்குப் பதிலாக, பத்து பதினைந்து பெரிய புத்தகங்களே எழுதியிருக்க வேண்டும் என்று அவ்வளவுக்கு அவன் செய்த வேலை பிரம்மாண்டமானது.”

“ஷேக்ஸ்பியர் பாஷையில் எலியட் சொல்லும் வரிகள், அதே அனுபவத்தை எழுப்பும் இதை, அதுவும் ஓரளவுக்குத்தான் மணி செய்திருக்கிறார் - முதல்முயற்சி என்ற அளவுக்கு. இதுக்கும் தம்மிடம் சொல்ல தமதனுபவம் இன்றிக் காப்பியடித்து இமிட்டேட் செய்வதுக்கும் வித்தியாசம் உண்டு.”

“பிச்சமூர்த்தியின் கவிதைத்தொகுப்பில், காலம் பிரித்து அவர் சப்தநயத்தை எப்படி மாறி மாறி பொருளின் இசைவுக்கு ஏற்ப உபயோகித்து வந்திருக்கிறார் என்று கண்டால், அதற்குப் பக்கத்திலேயே நிற்கும் இன்றைய புதுக்கவிதைக்காரர்கள் தொகுப்பில், சப்தம் பொருள் இரண்டும் தங்களை மனச்சலனத்தின் இழைக்கு அர்ப்பணித்துள்ளதைக் காணலாம். இந்த மனச்சலனத்தை, பிரக்ஞை ஓட்டத்தை, தூலமான பொருள்களில் அவற்றின் சப்தநயத்தோடேயே சூசகமாக எழுப்பும் முயற்சி, சி.மணியின் ‘நரகம்’மில் வந்திருக்கிறது. அதை ஆரம்பத்தில் ஒன்றிரண்டு வாசிப்பில் நான் சரியாக உணரவில்லை. அதில் நிரம்பியிருக்கும் பழம்இலக்கிய வாடை எனக்குச் சலிப்பூட்டியது, வார்த்தைப் பிரயோக விஷயமாக: ‘சேலைத்தலைப்பைப் பட்டம் விட்டு’, ‘வானுக்கு வழிகாட்டும் காலச்சுவடு’ போன்ற சி.மணியின் தனிமுத்திரைகள் விழுந்த படிமங்களைத் தவிர வேறு அதிகம் இல்லையென நினைத்தேன்”14 பிரேமிள்.

சி.சு.செல்லப்பாவும் பரிபாடலின் தாக்கத்தில் ‘மெரினா’வைப் படைத்தளித்தார். பல்வேறு சங்கப்பாடல்களைப் ‘புதுமெருகு’ என புதுக்கவிதை வடிவில் தந்தார். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றிலிருந்து 8 பாடல்களை இவ்வாறு மீளாக்கம் செய்திருந்தார். ஆனால் சி.மணியின் பாநெசவில் பழந்தமிழ் இலக்கியம் முதல் தனிப்பாடல் திரட்டு மற்றும் திரைப்பாடல் வரிகள் வரை ‘நரகம்’மிலும் ‘பச்சைய’த்திலும் இழைபின்னிய ஊடுபாவின் ஊடாட்டத்தின் பரிமாணத்தில் புத்துருக்கொள்வனவாய் இழையோடிச் சிறக்கக் காணலாம். இத்தகு பரிமாணத்தினை நகுலன், நாஞ்சில் நாடன் மற்றும் எனது கவிதைகளுக்கூடாகவும் இனம் காணலாம்.

“பழந்தமிழர் வார்த்தைகள் விரவிய யாப்பில் நவீன நிகழ்வுகளை சி.மணி கொண்டு வந்தது தமிழில் புதிய முயற்சி. எளிமை மறைந்து போய், சிக்கல்களும் போலித்தனங்களும் நிரம்பியதாகவும், உயர்ந்த மதிப்பீடுகள் சிதைந்து போனதாயும் நவீனவாழ்க்கை ஆகிவிட்டதை இவரது கவிதைகள் பொதுவாக உணர்த்துகின்றன” - மீட்சி15

“அவர் (சி.மணி) யாப்பியல் அறிந்தவர் ஆதலின் தமிழ்யாப்பைச் சிதைத்தும் மாற்றியும் பழந்தமிழ்ச் செய்யுள் வடிவங்களில் புதிய உள்ளடக்கத்தைப் புகுத்தியும் கிழக்கின் சாயலைப் புதுக்கவிதைக்கு அளித்தார். டி.எஸ். எலியட்டின் ‘பாழ்நில’த்தில் முந்தைய ஆங்கிலக் மரபுக்கவிதை வரிகள் உத்திக்காகச் சேர்க்கப்பட்டிருந்தன. சி.மணியோ தமது நரகத்தில் மட்டுமல்லாமல் எழுதிய அனைத்துக் கவிதைகளிலுமே பழமரபுச்சாயலை ஒரு கோட்பாடாகவே கொண்டார் என்று தெரிகிறது. அவரிடமுள்ள சமூகப் போலிமைகளைத் தோலுரித்துக்காட்டும் ஆழ்ந்த அங்கதத்தொனிக்கு இப்பழமரபுச்சாயல் வெகுவாகப் பயன்பட்டது” - அக்னிபுத்திரன்16.

“சி.மணியின் நெடுங்கவிதைகள் மூன்று ; நரகம் (360 வரிகள் 1962) வரும் போகும் (350 வரிகள் 1965), பச்சையம் (250 வரிகள் 1966)

முதல் இரண்டும் நகரவாழ்க்கையின் நெருக்கடிகளையும் மாறிவிடும் மதிப்பீடுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு சித்திரிக்கின்றன.”

“மொழித்தளத்தில் சங்க இலக்கியங்களிருந்தும் கம்பனிலிருந்தும் பொருத்தமான பாடல் வரிகளை இயல்பாக இழையோட விட்டிருப்பது சி.மணியின் தனித்தன்மை. இதன்மூலம் செவ்வியல் ரசனையையும் அதே நேரத்தில் கிண்டல் தொனிக்கிற ஒரு வக்கிரத்தையும் இந்த நெடுங்கவிதைகள் முன்னிருத்துகின்றன” - தி.சு. நடராசன்17

இவை மூன்றும் சி.மணியின் சிறப்பியல்புகளையும் வெவ்வேறு பரிமாணங்களையும் இனங்காணும் வேறுபட்ட வாசிப்பின் வெவ்வேறு பிரதிகளே. டி.எஸ்.எலியட் செய்ததை சி.மணி செய்தார் என்னும் க.நா.சு.வின் தரப்பு பொருட்படுத்தத் தக்கதன்று. ‘பாழ்நில’த்தின் தமிழாக்கமன்று ‘நரகம்’. ‘பாழ்நில’த்தின் சாராம்சத்தையும் உத்தியையும் உள்வாங்கிச் செரித்துத் தன்வயமாக்கி அதன் தாக்கத்தில் தமிழ் இலக்கிய மரபின் தாக்கமும் மீக்கூரப் புத்தாக்கமாகப் புனையப்பட்டதே சி.மணியின் ‘நரகம்’. ‘பாழ்நிலம்’ பற்றிக் காண்போம்.

“எவ்வளவு படித்திருப்பவர்களுக்கும் இலியட்டின் கவிதைகள் எளிதில் புரிந்துவிடுவதில்லை. இலியட் மேற்கோள்கள், மறைமுகக் குறியீடுகள், வேற்றுமொழி இலக்கியங்களின் பகுதிகளைப் பயன்படுத்தி ஒரு மொசைக் அமைப்பை உருவாக்குகிறார். சில சமயங்களில் புரிதலுக்குத் தடையாகக் கவிதையை அணுகமுடியாத அளவுக்கு இந்த உத்தி அமைந்துவிடுகிறது.”

“இலியட்டின் கவிதைகள் முழுமையாகப் புரிய வேண்டுமானால் தீவிரமான ஆழ்ந்த படிப்பு அவசியமாகிறது. குறிப்பாக ‘பாழ்நிலம்’ ஒரு கவிதைப்புதிராக இருக்கிறது”.

“முற்றிலும் அர்த்தமிழந்த, உடைந்த சில்லுகளை ஒத்த கலாச்சாரம் - மில்டன், ரிச்சர்ட் வேக்னர், பெட்ரோனியஸ், ஷேக்ஸ்பியர், நெர்வால் போன்றவர்களின் கலைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிதறல்கள் - இவை ஒன்றின் மீது ஒன்றாகக் குவிக்கப்பட்டுப் ‘பாழ்நில’த்தின் சிதைவு வெளிப்படுத்தப்படுகிறது” - பிரம்மராஜன்18.

“பிரக்ஞை எப்பவும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த உள்ளத்துக்குத் தான் புதுக்கவிதையின் உள்ளோட்டம் தெரியும். ஒரு சொல்லென்றால், அதன் அகராதி அர்த்தத்துக்கு மேல் ஓடாத மரத்த உள்ளங்களில் பிரக்ஞை இப்படிச் செயல்படப் போவதில்லை. ‘பாழ்நிலம்’மிலோ இந்த பிரக்ஞையின் சலனத்தை நூலறிவு வரை ஓட விட்டிருக்கிறான் எலியட். ‘ஓட’ என்பதை விட, உள்மனசுக்கு ஆழ்ந்துபோக என்பது பொருந்தும்”- பிரேமிள்19.

“டி.எஸ்.எலியட் என்ன படித்திருக்கிறாரோ அதை எல்லாம் படிக்க வில்லை என்றால் ‘wasteland’ புரியாது. எகிப்து, இந்தியா என்றெல்லாம் திரிந்தார் அவர். இங்கிருந்தெல்லாம் விஷயத்தை எடுத்துக்கொண்டார்”.

“மிகப் பரிகாசமாகவே கடித்த பாம்பு மெத்த வீங்கியது மாதிரிப் போகிறது. டி.எஸ்.எலியட்டின் எழுத்துகளில் சூஃபிசம், புத்திசம், உபநிஷதம், யுங், ஆட்லர், டெராகார்ட் இப்படி எல்லாமே கலந்து இருக்கும். இவை அத்தனையும் எனக்குத் தெரியும்”- சி.மணி20

பிரம்மராஜனின் பார்வை எலியட்டின் கவிதைகளின் எளிதில் புரிந்துகொள்ள இயலாமை குறித்தும் அவரது உத்தியான மொசைக் அமைப்பின் மேலைநூற்கலைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிதறல்கள் குறித்தும் பேசுகிறதெனில், சி.மணியின் பார்வை எலியட்டின் பயில்வு குறித்தும் பிரம்மராஜன் குறிப்பிடும் வேற்றுமொழி இலக்கியங்கள் இன்னின்னவை என்பது குறித்த கீழைமரபின் கொடைகள் குறித்தும் பேசுவதாகின்றது. பிரேமிளின் பார்வையோ எலியட்டின் உத்திவித்தையின் உள்ளார்ந்த நுட்பங்குறித்துப் புலப்படுவதாகின்றது. ‘பாழ்நிலம்’ குறித்த மேலதிகப் புரிதல்களுக்கு இம்மூவர் பார்வைகளும் வழிவகுக்கின்றன. இத்தகைய புரிதல்களின் வெளிச்சத்தில் நரகத்தின் சிறப்பம்சங்களும் நமக்குத் துல்லியமாகின்றன. போகிறபோக்கில் க.நா.சு. முன்வைத்த பிழையான தரப்பு இவற்றால் தகர்ந்துபோகின்றது.