தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

பிரமிள் கவிதைகள்


பிரமிளின் சுய ஓவியம்
நான் என் கவிதைகளின் மூலம் மெட்டா-பிஸிக்சை உருவகப்படுத்துகிறேன் . நான் புதுமையான எல்லா எண்ணங்களுடனும் எனது சிந்தனைகளுக்குத் தெளிவு கிடைப்பதற்காகப் போராடுகிறேன் . இந்த மல்யுத்தம் தான் எனக்கு காவிய ரசனையையும் அளித்தது .நான் ஒரு புதுமை கவிஞராக ஆவதற்கோ ,சர்ரியலிஸ்டிக் கவிஞராவதற்கோ கவிதை எழுதவில்லை . நான் என்னையே தேடிச் செல்கிறேன் . இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது - பிரமிள் (மீறல் சிறப்பிதழ்)

http://maravantu.blogspot.in
பிரமிள் 
(உன்) பெயர்


சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
“அப்பாடா“ என்று
அண்ணாந்தேன்...

சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.

முதல் முகத்தின் தங்கைக்கு

துடித்து
அன்று விழுந்த பகலை மீண்டும்
மிதித்து நடப்பவளே
கொலுசு சூழாத நிசப்தத்தில் நின்
வெண்பாதச் சதைகள் மெத்திட்ட
புல்தரையைக் கவனி

உன்முன் சென்றவள் என்னை
உதறிச் சிந்திய சுவடுகள்
அழுதழுது வரளும் என்
மன வெறுமையிலே
ஏழுவண்ணப் புதிர்கள்
அவிழ எனவா நின்
ஒருதுளிப் பார்வை?
அல்ல
தோற்றழியும் என் தவிப்பை
என் உடலின் இலைநரம்புகள்
உள்ளுரப் பரிகசித்துச்
சிரிக்க என் முகம்தேடி
பார்க்க நிமிர்ந்தனையோ?

உயர்ந்து வளர்ந்த சின்னவளே
அண்ணாந்து
என் மாடியைப் பார்ப்பதேன்?

அழியத் துணிந்தும்
அழியாது தடுமாறி
எரிந்தெழுந்து
சாம்பல் புழுதியில்
உயிர் உடலாகத் திரண்டு
மீண்டும் நிலைத்த நிழல் நான்.
உன் முன்னவளின்
ஜால மருந்து தொடுத்த
பார்வைமழை நுனிகளை
எதிர்பார்த்து மறுப்பின்
குரூர நுனிகள் தைக்க
துடித்திறக்கும் எனது நாட்களை
மீண்டும் நிகழ்விக்கவா
என் வாசலில் நின்று
முகம் திரும்பினை?
கவனி-
என் மாடி உப்பரிகையல்ல
உச்சியில் ஒருகுடில்
என்னுள் கவிதையின்
காலதீதச் சழலெனினும்
நாசியில்-
உன் நாசியிலும் தான்-

நம்மிருவர் தெருவின்
எல்லையில் குடிகொண்டு
வாழ்வின் மறுப்புக்கணை பாய
இறந்து வீழ்ந்த
இதயங்களைச் சூழ்ந்து
பிழம்பு வளர்க்கும்
சுடலையின் வீச்சம்.
எனவே,
விளையாடாதே!
என் இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சு
உன் புன்னகை விரல்களில்
அவிழ்ந்து
கருநிற மெத்தைகளாய்
சிதறிச் சிரிக்க
மன நடு இரவு
பூ முகம் கொள்ளுமெனில்
சொல்,
சொல்லை இதயத்தின்
சொல்லற்ற சுனைதர
பேசு.
அது இன்றி
விளையாடினாயெனில்
ஹோம குண்டங்கள் கூட
வெற்றுப் புகைமுடிச்சாய் மண்ட
வேதனை மீண்டும்
அக்னியை உரிமைகொள்ளும்.


மோஹினி Thanks to http://ariyavai.blogspot.com

‘உனக்கே
உனக்கு நான்’ என
சப்தித்த நின் பார்வைகள்
உன் முகம் நீங்கி
எட்டாத நிலவாயிற்று.
வக்கரித்துத் தரையில்
இலைப்பார்வை பரப்பிற்று.

வழிதொறும்
நிழல் வலைக் கண்ணிகள்
திசை தடுமாற்றும் ஓர்
ஆயிரம் வடுக்கள்.
வேதனை வேர் நரம்பெழுந்து
மூடியது கானகம்.
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல்.
என் மன விகற்பத்தின்
வெண் இருள்
நிழலை வளைத்து
துளி வேல்கள் ஏந்தின
கருநீல முட்கள்.
உயரத்தே ஒரு கணம்
பார்வையைப்
பறிகொடுத்து
ஊளையிட்டது நிலவு.
அது கணம்
வெண்நிழல் அழைத்தது.
அணுக
அவளை என்

பாதங்கள் துணிந்து
அணுகக் கருநீல
வேல் நுனிகளில் என்
உதிரத்தின் மலர்ச் செம்மை.
முட்கள்
மொக்க விழ்கின்றன.
விரிகிறது
இதழ் வேளை.
ஊன்றி எடுத்த என்
பாதத்தில் ஊறி
உதிரத்தில் ஒலித்ததுவோ
நிலவின் விஷ ஊளை.

நாநுனி தவித்து

துளியளவு தீண்டி
பதிவுகள் தொடர
திசையறும்
வெண் இருளில்
ரகஸியக் கிணறு.
அதில் எரிகிறது
ஈரநெருப்பு.
குனிந்து பறந்து
கீழ்நோக்கி எழுகிறேன்.
தத்தளித்து
தாகம் தணித்த
நீர்வெளி
பாறையாய் இறுகி
என் புதைவை
சிறையிடுகிறது
கல்பீடம் ஆகிறது.

நிலவின் ஊளை வெளிறி
பலிசிந்தி வீழ
அவளது தந்தங்கள்
வெறிக்கின்றன.

ஓ! என்
பணிவுகளை உறிஞ்சும்
பலி பீடமடி நீ!

பசிதணிந்து
பசிகொண்டு
பாறை தளர்ந்து
தசை வெளியாய்
தத்தளித்து
பசியேற்றி
அசைகிற சுழலே,
இன்று கொட்டும்
இருளின் தமுக்கில்
நம் இருவர் தசைகளில்
தீராத
தினவுகள் அடியே!

பச்சைக் கதை - பிரமிள்

கானகத்தினுள்
பசுமைச் சாறுபொங்க
துடிக்கிறது
“அல்ல, அல்ல” என்ற உன்
சொல்லின் தாளகதி.

சற்றே நிழல்களுள் சரிகிறேன்,
வழிதடுமாறாத களைப்பு.
எதிர்வரும் என் வேளைகளினுள்
உன்னைச் சிறைபிடிக்கின்றன
தீர்க்க தர்சனங்கள்.

தளிரே - என் மன எலும்பு
உன்னகத்தில் கிளைபடர
இலைமுகம் கொள்கிறாய் நீ.
நாம் எதிலும்
மறைமுகப்பொருள்களை
சர்ச்சிக்க வேண்டாம்.
எது மறை பொருள்?
இந்த உருகிய மறுப்புகளின்
உரம்தான் - அவ்வுரம்
உன்னுள் என்கிளையின்
பணியாத பக்திகளாகட்டும்
பளுவற்றுச் சிறுசிறு
பச்சைச் சிறகுகளில்
எழுந்து தத்தளிக்கட்டும்.

சிறகுகளில் சில
துடிப்பு அணைந்து
மண்வண்ணமாகும்
வீழும்.. வீழினும் உரமாகும்.

மீந்திருப்பவற்றுள்
விளைகின்றன புதர்த்தீ இருள்கள்
உணவுகள்
விஷங்கள்
முட்கள்
முட்கள்
ஸ்தாவர மான்களும் புலிகளும்.

நகங்கள் என்னைக் கிழிக்கின்றன
ஆயின் உன்
மூலிகை இலைக்கண்கள்
சிகிச்சையளிக்கின்றன.

மண்டபம்
உடலம் துணுக்குற
மண்டபச் சுவர்கள்
அதிர்ந்து
திசையொன்று திறக்கிறது.
கதவில் ஜன்னலில்
கற்கள் இலை விரித்து
வழியை மூட
தரையில் பாதத்தின்
ஸ்பரிசம் மறைந்தது.
மேல் கீழாய்
மண்டபத் தரையில்
எல்லையற்று வெளித்தது
ஆகாயம்.
கீழே
எட்டாத தூரத்தில்
நட்சத்திரங்கள்.
எல்லையின்மையின்
அசைவற்ற சிறகுகளில்
வைரத் தூசிகளாய்
கோடானு கோடி
பெருவடிவச் சூரியர்கள்.

மண்டபத்தின்
கீழ்மேல் தரைக்கூரை
எதிரொலிக்க
நகைத்தது ஓர்
பெண்குரல்.
தூரங்கள் கலைந்து
முத்தங்களாகி
மொய்த்தன.
அணுகி அளைந்த
சிரிப்பின் கலீர்
ஒலி தீண்டி
சுவர்கள் பதறின.
பார்வைக்குப் பின்புறமே
பிரஸன்னமாகி
நான் திரும்ப எந்தன்
விழி வளைவின்
மறுபுறத்திற்கு
ஓடி
நினைவின் பின்பதுங்கி
பரிகசிக்கும்
பெண்சிரிப்பு.
சுற்றித் திரும்பினேன்.
மண்டபம் திரும்பிற்று
அந்தரத்தே மிதந்த என்
பாதங்களின் கீழ்
நட்சத்திர
ராசிகள் திரும்பின
முனகித் திரும்பிற்று
மூளைத் திகிரி.
உள் அறையின்
உள்ளிருக்கும்
கருவறையாய் எங்கோ
மீண்டும் சிரித்தது
அவள் குரல்.
குரலின் துகில் களைந்து
இன்மைக்குத் தசையணிந்து
அவளுருவைத் தழுவ
கிளர்ந்து வெறும் வெளியை
அளைந்தேன்
அவள் மீண்டும்
குரலாகவே சிரித்தாள்.
தேடித்தணிந்த நான்
“யார் நீ?“ என்றேன்.
“நீ முளைத்த நாளன்றே
முளைத்துன் முகத்திசைக்கு
எதிர்த்திசை நோக்கி
விழித்திருப்பவள்“ என்றாள்.
“நாள்மணி வினாடிகள்
திக்கற்றுச் சிதறிய
கணம் ஒன்றில் நீ குனிந்து
நடுங்கும் பளிங்கில் உன்
முகத் தேடிய வேளை
ஜலத்தின் கதவுகள்
அலையோடித் திறக்க
குளத்தின் கருக்கிருட்டில்
நகைத்தகடல் நான்“ என்றாள்.
“நாற்றிசையும் மேல் கீழும்
நடுநோக்கி ஓடிவர
நரம்புக் கயிறுகளில்
நான் பின்னும் திசைவலையின்
நடுவே கொலுவிருந்து
உனைவிழுங்கக் காத்திருக்கும்
புலிச்சிலந்தி நான் என்னை
யாரென்றா கேட்கின்றாய்
ஈயே?“ எனச் சிரித்தாள்.
மண்டபமெங்கும்
அவள் குரலின் உளியோசை
சுவரைச் செதுக்க
உருப்பெற்று நின்றன
துகிலைத் தளர்த்தி
உடலை நெளித்தென்னை
மருவ அழைக்கும்
பெண்மைப் பிரதிகள்.
அவள் சிரிப்பின்
நடையில் விளைந்த
சிலைவடிவச் சுவடுகள்.
தாபம் மீறும் என்மேல்
தாரகைக் கருணைகள்
தனித்தனிக் கதிர்வீச
கைவிரித்தபடி விளைந்து
மண்டபச் சுவரெங்கும்
என் நிழல்கள் அடர்ந்து
சிலைகளைப் புணர்ந்தன.
மீந்து மேலும்
மேலும் என்றெரிந்து
தீ கருக்க
சுவரெங்கும்
நிழல்கள் கீறி
விரிசல்களாயிற்று.
ஊடே பிளந்தது
அகாதம்.
சிலைகள் விரூபித்து
வெண்கலக்
கழுகுகளாயின.
என்னைச் சுற்றிற்று
கூக்குரல்களின்
சப்த வியூகம்.
குரல்களைக்கூட்டி
குவித்து உறுமிற்று
அவள் குரலைக் கிழித்து
விளைந்த குரலொன்று.
வியூகத்துள்
வியூகம் கூடி
குரல்களுள்
குரல்கள் பொழிந்து
திரைமுகம் உறைந்து
ஜலத்தின் அலையாடா
பளிங்கு பிறந்தது.
பிரதிபலித்தது அங்கே
நானோ அவளோ
அற்று
உருவம் இருந்தாற்போல்
ஏய்த்து உருமீறி
திசைகலங்கிப்
புலனொடுங்க
குரலற்று உறுமும்
பெயரற்ற மிருகம்.
அதன்
இல்லா முகத்தில்
மௌனம்.
வெற்று வெளியில்
ஒளியின் பிலம்.
ஊடுருவிற்று என்னை
பயங்கரம்.
அக்கணம்
பளிங்கின் குளிரினுள்
ஒரு உள்க்குளிர் பெருகி
தணலாயிற்று.
எரிந்தது ஏதோ
ஒரு பிணம்.
என் குரல்
உறுமி உயிராயிற்று.

பசுந்தரை 
கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!


என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.


எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.


பாலையில் படர்கிறது
பசுந்தரை.


ரஸவாதம் -  பிரமிள்

இதயத்தில் உன் மறுப்பின்
வேல் புதைந்து
வாய் பிளந்து
பசி என்ற குரல் எடுத்தது
வடு
குரல் மேட்டு
தாய் மன நிலவு
முலை சுரந்தாள்
சொரிந்ததுவோ
துக்கத்தின்
விஷ நீலம்
ஆனால்
பருகிய வடுவின்
இதய வயிற்றுள்
துக்கம் செரித்துப்
பிறந்தது
வேதனை அமிர்தம்.

கொல்லிப்பாவை - 4, 1978


 நன்றி   : வைகறை மாசி 09, 2007


பியானோ

இதயச் துடிப்புச்
சுவட்டின் தோல்கீறி
முள் தைக்க விடாத
கல்நாரினால் செய்த
காலணிகள் பூண்டு
தசை மினுக்கி
தசை பார்த்து
அறையில் அமர்ந்திருந்த
உள்வட்டக்  கூட்டத்தின்
இந்தியச் சலசலப்பினுள்
சிந்தித்தன மேற்றிசை
இசையின் கரங்கள்
நிலவின் நிலவெளிமேல்
சிறகெடுத்து விரல்நுனிகள்
மிதந்து தயங்கின

கைதொட  எட்டி
கண்தொட எட்டாத
தொலைதூரம் வரை
கட்டமிட்டு நின்றன
ஸ்ருதி பாறைகள்
இசையின் வெளியில்
வட்டமிட்டது ஒருநிழல்

திடீரிட்டு
வெளிநீத்து வெளியேறி
கையை நிழல்
கவ்விக் குதறிற்று
வேதனையில்
சிலிர்த்த விரல்கள்
நிலவில் ஒடுங்க்கின.
நிலவெளிமேல்
ஸ்ருதிப் பாறைகள்
தத்தளிக்க துவங்கின.
"அடடா!- ஆனாலும்
இண்டியன் கர்நாடிக்
மியூசிக்கிற்கு
அப்புறம்தான் இது -
நம்ப கல்ச்சர்
ஸ்பிரிச்சுவல் ஆச்சே"
என்று உருண்டன
உள்வட்டது
அசட்டுக் கற்கள்

இந்தக் கல்நார்
தோல் வட்டத்துக்கு அப்பால்
அரை இருளில்
காலணியற்று நின்ற
யாரோ ஒருவனின்
இதயச் சுவடுகளில்
குத்திய முட்கள்
சிறகுகளாயின

துடிப்புகள் கூடி
கழுகுகளாகி
நிலவில் ஒடுங்கின

நிசப்தத்தின் இமைதிறந்து
கவனித்துக் கொண்டது
இசையின் வெளியினுள்
குடிகொண்ட பெரு மௌனம்

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது


Epic

A feather detaching itself
From the wing
Render on the Pages of the
wind
The life of the bird



சைத்ரீகன்


வெண்சுவர்த் திரையிலென்
தூரிகை புரண்டது.
சுவரே மறைந்தது.
மீந்தது காட்சி.
ஓஹோ,
உயிர்த்தெழும் ஒளிக்கு
இருள் ஒரு திரையா?
பாழாம் வெளியும்
படைப்பினை வரையவோர்
சுவரா?

எழுத்து. டிச. 1961
வண்ணத்துப் பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களiலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளiரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த  சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

கலப்பு 

https://www.facebook.com/
PiramilukkupPirakuPiramil?pnref=story

ஒரு பாப்பாத்தி நகத்தோடு
என் பறைநகம் மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்.
பிறந்தது
ஒரு புது மின்னல்.
ஜாதியின்
கோடைமேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்.....



கலப்பு  : கண்கள்
(சி.சு.செல்லப்பாவிற்காக  பாப்பாத்தி என்பதை உயர்ஜாதிக்காரி  என பிரமிள்  திருத்தி எழுதினார்)

உயர்ஜாதிக்காரி 
ஒருத்தி நகத்தோடு 
என்பறை நகம்மோதி 
மனம் அதிர்ந்தது 
கோபத்தில் மோதி 
கலந்தன கண்கள் 
பிறந்தது ஒரு 
புதுமின்னல் 
ஜாதியின் 
கோடைமேவிப்பொழிந்தது 
கருவூர்ப் புயல்..  


கலப்பு  : புகைகள்


உயர்ஜாதிக் காரி
ஒருத்தி நகத்தோடு
என்பறை நகம்மோதி
ஊர்  அதிர்ந்தது
ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து
எரிந்தது என்சேரி...
புகைகள் கலந்து
இருண்fடது இன்றென்
உதய நெருப்பு... 


ஒளிக்கு ஒரு இரவு-


காக்கை கரைகிறதே
பொய்ப்புலம்பல் அது.
கடலலைகள் தாவிக் குதித்தல்
போலிக் கும்மாளம்.
இரும்பு மெஷின் ஒலி
கபாலம் அதிரும்.
பஞ்சாலைக் கரித்தூள் மழை
நுரையீரல் கமறும்.
அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின்
வருவாய்தான் கும்மாளம்.
லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்.
தாவிக் குதிக்கும்
காரியப் படகுகள்.
இயற்கைக்கு ஓய்வு ஓயாத
மகத் சலித்த அதன்
பேரிரவு.


நிழல்கள்

பூமியின் நிழலே வானத் திருளா?
பகலின் நிழல்தான் இரவா?
இல்லை,
பூமிப் பந்தின் பின்னே
இருளின் பிழம்பு,
இரவில் குளித்து
உலகம் வீசும்
வெளிச்சச் சாயை பரிதி.
ஆமாம்.
இரவின் நிழலே பகல்;

இருளின் சாயை ஒளி.

தெற்கு வாசல்
தெற்குக் கோபுர வாசலுக்கு
வந்த உன்முன் உனது
இடப்புறமாக நிற்கிறான்
காலபைரவன்.
பூணூலில் அவன்
கோர்த்தணிந்திருக்கும்
பொக்கிஷங்களைப் பார்.
பூக்களல்ல, புஷ்பராகக்
கற்களல்ல,
கபாலங்கள்.
ஒவ்வொரு கபாலமும்
பார்ப்பானில் இருந்து
பறையன்வரை ஐ
ரோப்பியனில் இருந்து
ஆப்பிரிக்க நீகிரோப்
பழங்குடி வரை,
ஒவ்வொரு மனித
இனப்பிரிவினை காண்.
நேர்கொண்டு பார், சிலையின்
கால்களுக்குப் பின் நாயாய்
உறுமுகிறது மரணம்.
அது, காலத்தின் வாகனம்.
காலபைரவனின்
சிரசில் அணிந்த
நெருப்புக்கீரிடமாய்
நின்று எரிகிறது
சரித்திர நியதி. அவன்
ஏந்தி நிற்கும்
சிவாயுதங்களிலும்
நடுங்குகிறது அதன்
நிர்மூல கதி.


டமருவில் பிறந்தது
நாதம்; நாதத்தில்
பிறந்த விந்து
கலைகளாய் விரிந்து
கால தேசங்களாயிற்று.
தேசங்கள் காலத்தின்
நேற்றின்று நாளை என்ற
மூவிலைச் சூலத்தில்
கிழிபட்டுக் குலைந்து
அழிந்து கொண்டிருக்கின்றன.
இடையில் கலைமான்
உள்முகம் நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறது.

தெற்கே வந்த உன்முன்
நிற்கிறது காலம்.
நிர்வாணமாய்
நேர்கொண்டு பார்க்காமல்
நீ தப்ப முடியாது.
உன் கண்களைச் சந்தித்த
கருணையில் குரூரத்தில்
ஊடுருவி உள்ஓடிப்
பிறக்கிறது காலத்தின்
புரியொணாப் புன்னகை.
உன் உடலில் அருவருத்து
உள் ஓடிப் புரள்கிறது
உனைவிட்டுப் பிரியாத
மரணத்தின் பூணூல்.
உன் உயிரை நேர்நோக்கி
பரிகஸிக்கின்றன
காலங்கள்.

கத்திமுனையாய்
துப்பாக்கியில் வெடித்துச்
சுழன்று வரும் குண்டாய்
உற்பாதங்கள் தந்து,
உருக்குலைக்கும் நோயாய்
உடன்கூடிப் படுத்தவளின்
புணர்ச்சி விஷமாய்
தெற்குக் கோபுரவாசலில்
நிற்கிறது காலம்
நிர்வாணமாய்.
காலிடறும் கல்லும்
ஒரு நாளில்லை ஒருநாள்
காலனுருக் கொள்ளும்-
ஓ, ஓ, மானுட!
ஓடாதே நில்!
நீ ஓட ஓட
தொடர்கிறது கல்;
நாயாக உன்
நாலுகால் நிழலாக.
நீ ஓடஓட
தொடர்கிறது அக்னி;
ஓயாத உன்
உயிரின் பசியாக.
நீ ஓட ஓட
தொடர்கிறது இடைவெளி;
சாவாக நீ
இல்லாத சூனியமாய்.

கற்பிதத் திளைப்பில்
நீ நின்ற கணம்
மனம் தடுமாறி நீ
சிருஷ்டியைப் பிரதி
பலித்த அவ்வேளையில்
எதிரே நிற்கும்
கவிதையே காலம்.

அறிவார்த்தத் திகைப்பில்
நீ நின்ற கணம்
திசைத் தடுமாறி உன்
அறிவு திருக
எதிரே எழுகிறது
காலத்தின் விபரீதக்
கருத்துருவக் கோலம்.
உனக்குள் ஓய்ந்து
நீ நின்ற கணத்தில்
உள்வெளி மாற்றி இக்
கணத்தில் மடிகிறது
காலமாய் வக்கரித்த
ஞாபக லோகம்.

நின்று நேர் கொண்டு
நோக்கிய கணத்தில்
நீ கண்டதென்ன?
தெற்குக்கோபுர வாசலில்
நியதி நெருப்பைச்
சிரசில் அணிந்து
நிற்பது நீதான்.
நீ அற்ற சூனியத்தில்
நிற்கின்ற பிரக்ஞைக்குள்
விழுகின்ற தத்துவ
நிழல் உன் பாலம்.
உனக்குள் உன்
உயிரென நீ
உருவேற்றிக் கொள்வதுவோ
உயிரல்ல, காலம்.

எனவே, எட்டாத
வெற்று வெளி ஒன்றில்
ஓயாத திகிரியை
மென்சிறகலைத்து
ஓட அசைத்தபடி
ஆடாமல் அசையால்
பறப்பது நீயல்ல
நானல்ல,
காலாதீதம்.

தெற்குக் கோபுர வாசலில்
திகைத்து நிற்கிறது
நீயற்ற நானற்ற
கல்.


முதுமை - பிரமிள்


காலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது
கபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக் காற்று
வாரியிறைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய
என் விழி வியப்புகள்
உயிரின் இவ் அந்திப்போதில்
திரைகள் தொடர்ந்து வரும்
சவ ஊர்வலமாகிறது.
ஓவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்
அந்தியை நோக்குகிறேன்.
கதிர்க் கொள்ளிகள் நடுவே
ஏதோ எரிகிறது
ஓன்றுமில்லை
பரிதிப்பிணம்.

இறப்பு

சிறிதில் பெரிதின் பளு
பாழின் இருளைத் தொட்டுன்
நுதலில் இட்ட பொட்டு
பார்வைக் கயிறு அறுந்து
இமையுள் மோதும் குருடு
ஓன்றும் ஏதும் இன்றி
இ;ன்மை நிலவி விரிதல்
வண்டியை விழுங்கும் பாலம்
மஞ்சம் கழித்த பஞ்சு
கூட்டை அழிக்கும் புயல்
புயலில் தவிக்கும் புள்
வாழ்வின் சூழலைத் துறந்து
என்றோ இழந்த வாசக்
காற்றுள் வீழும் ரோஜா
துணியே நைந்து இழையாய்
பஞ்சாய் பருத்தித் திரளாய்
பின்னே திருகும் செய்தி
காற்றை விழுங்கும் சுடர்
சுடரை உறிஞ்சும் திரி
வினையில் விளைவின் விடிவு
விளையா விடிவின் முடிவு
தொடங்காக் கதையின் இறுதி
நிறுத்தப் புள்ளிகளிடையே
அச்சுப் பிழைத்து
அழித்த வசனம்
வெறும்
வெண்தாள்ச் சூன்யம்.


Lakshmi Manivannan shared Prabakaran Praba's photo.


September 26 at 1:01pm ·


naveena kavingan premil

Prabakaran Praba




தத்தளிக்கின்ற
குளத்தின் பரப்பில்
நிலவை அள்ளிய
அலை
வெளவால்களுக்கு
கண்ணாடிச் சிறகுகள்.
அடைகாக்கும் சிறகினுள்
அடங்கும் முத்து.
முத்தினுள்
ஒரு துகள் சேறு.
துகளிலே விரிந்து
ஆழ ஓடும்
ஒரு பிலம்.


நக்ஷத்ரங்களாய்
தத்தளிக்கிறது
பிலத்தினுள்
குடிகொண்ட
அகாதம்.


-பிரமிள்.


குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஐPவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர்மொக்கு.

கன்னி

ஒரு நூற்றெட்டு
அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல்வெளியில்
ஏதோ ஒரு ஆள்நிழல்
மிதிக்க மடங்கி
சிரம் பிழைத்துக் கிடந்து
அறுவடை முடிய
ஆள்நகர
மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று
ஒரு கதிர், உச்சியில்
ஒரு நெல்,சுற்றிலும்
வரப்பு நிழல் நகரும்
திசை நூல்கள்-
இன்று நிழல் நகரும்
நாளை உதயம்
உனக்கும்
நாணத் திரை நகரும்
உயிர் முதிரும், உன்
கூந்தலின் உமி நீக்கி
வேடித்தெழும் வெண்முகம்
ஓரு அணுத் தான்யத்தின்
பகிரங்கம்


25.12.14



பிரேமிட்


கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்


http://www.navinavirutcham.in/2014/12/blog-post_25.html





தருமு அரூப் சிவராம்


மண்புயல் தணிந்து விட்டது.
ஆனால் போர் தொடர்கிறது - இடம் பெயர்கிறது
சாந்தி வீரர்கள்கூட
ஆபீûஸ கலைத்து விட்டு
யுதத சந்நத்தர்களாகின்றனர்.
இப்படியே, பிரெமிடபடிகளில்
காலம் உயிர்களை உருளவிடுகிறது -
மலைச்சரிவில் உதிரி இலைகளைப் போல.
ஆனால் வீரனின் உயிரோ
கற்பாறைப் பாலைகளின் சிறுகற்கள் போல
கணம்தான் என்றாலும்,
ஏதோ ஒரு யோசனையில்
உச்சியை நோக்கி எழக்கூடும்
உடல் தான், பிரெமிட்டினுள்ளேயே பதுமையாய்க் கிடந்து
கடவுளரை எதிர்பார்க்கிறது



வடக்குவாசல்: தபாலில் வந்த தனித்துவம்

தபாலில் வந்தது-
செந்தாமரையில்
சீட் பிடித்துக் கைகாட்டி
அருள் பாலிக்கும்
தெய்வத்தை அச்சிட்ட
சீப்பான காலண்டர் அல்ல.
காலம் சரசரத்து
ஓட விரியும்
டைரியும் அல்ல.
தபாலில் வந்தது
ஊர்பேர் அற்ற
தனித்துவம் ஒன்று.
“என்னை உனக்குத்
தெரியாது“ என்று
மைடியர் கூட
இல்லாமல் துவங்கி
“உன்னை எனக்குத்
தெரியும்“ என
முடிந்தது கடிதம்.
ஊர்தேதி கையொப்பம்
அனுப்புநர் முகவரி
எதுவுமே இல்லை.
தபால் தலையில் மட்டும்
ஜே.கே.ஜாக்பாட்
என்றொரு சீல்.
ஈதென்ன பைத்யம்
என்றொரு பிச்சுவாய்
காற்றாட வாக்போய்
பு.பி.க்குப் பிடித்தது
காபி என்று
குடித்து முடித்து
சிகரெட் யக்ஞத்தை
நடத்தத் துவங்கினேன்.
புகையிலைச் சுருளைப்
பிடித்த நெருப்பில்
இன்மையின் இருப்பு.
ஜடத்தின் உயிர்ப்பில்
உள்வாங்கும் பிழம்பு.
பிழம்பு புகைந்து
என்னுள் விகசித்து
உள்வெளி ஆயிற்று.
வெளியே சிலிர்த்த
சிகரெட் புகையில்
இலையும் உடலும்
இல்லை உண்டென
இணையும் ரஸவாதம்.
சிகரெட் புகைதான்
இருந்தும் அதுதான்.
புலனுக்கும் புலனெட்டாப்
பரிமாணங்களுக்கும்
இடைவெளிகளிலே
திரிந்துகொண்டிருந்தேன்.
வெளிதோறும் நின்றது
ஒருகணப் பொறி.
கையொப்பமின்றி
அனுப்புனர் பெறுநர்
முகவரி இன்றி
காலமும் இன்றி
அண்டத்தை அளாவி
நின்றது தனித்துவம்


கிழக்கு வாசல் - பிரமிள்

I

மேஷசூர்ய உதயவேளை,
கீழ்த்திசைக் கண்டம்,
காலம் இற்றைக்கு
ஆறு மில்லியன்
ஆண்டுக்கு முன்பு;

சிறகு தளர்ந்து
தாழ்ந்து பறந்து
இடியொலிக் குரலில்
இறுதியாய் அலறி
வீழ்ந்தது - இன்னும்
மனித வர்க்கம்
தோன்றியிராத அவ்
உதய வேளையில்-
பிரமாண்டமானதோர்
பெயரில்லாப் பட்சி.

சூழ்ந்து கிடந்த
கானக மரஙகள்
அலறலின் வீச்சில்
சித்றி முறிந்தன.
சிறகடிப்பின்
புயலில் எழுந்தது
புழுதிச் சுழல்முகில்.
அயலக மலையில்
பாறைகள் பெயர்ந்து
சரிவில் உருண்டன.
மலைக்குகைகளினுள்
எதிரொலி உறுமல்;
பூகம்பம் ஒன்றன்
ஒரு கண அதிர்வு.
தாரகை வடிவில்
பூமி பிளந்து
பட்சியிலிருந்து
சுற்றிலும் ஓடின
ரேகைகள் ஏழு.

தட்டச்சு நாள் 20-3-2014

II

இரும்புத் தகடாய்
இறுகின பட்சியின்
சிறகுகள், எலும்பும்
தசையும் கல்லின்
திரணைகள் ஆகின.
பரிமாணத்தின் நேர்
ஓட்டம் பட்சி
அலறி விழுந்தவிலங்கின் வரிசையில்
மனிதன் பிறந்து
மூளைத் தாதுவின்
சிறகுகள் விரிந்தன.
புலனில் மோதிய
உலகை மனிதன்
உவமை வடிவாய்
உருவகப் படுத்தினான்.
உணவாய் விழுந்த
கலைமான் ஒன்று
காற்றில்
ஏறி இறங்கும்
கிளையின் அசைவில்
தாவக் கண்டான் -
மிருகம் மாறி
மனிதம் பிறந்தது.
கிழக்கே ஏழுந்தது
சிம்ம சூரியவின்.
பிரக்ஞையினுள் ஒரு
பாதாளத்தில் அதன்
பிரதிபலிப்பு
பழம் எனக் குனிந்து
எடுத்த கையில்
பாம்பு ஒன்று நீர்ச்
சேறாய் நழுவிற்று.
பரவிற்று விஷம்.
கணதில் நின்றது.
நின்று ஜடத்தின்
காலத் துடிப்பை
நாளை நேற்றாய்
திசை மாற் றிற்று.
பட்சியின் உரு
மாற்றமடைந்து
இரண்டு மில்லியன்
ஆண்டுக்குள் பிர
மாண்டமான தோர்
பாறையாயிற்று.

தட்டச்சு நாள் 30-03-2014

III

விலங்கின் வரிசையில்
மனிதன் பிறந்து
மூளைத் தாதுவின்
சிறகுகள் விரிந்தன.
புலனில் மோதிய
உலகை மனிதன்
உவமை வடிவாய்
உருவகப் படுத்தினான்.
உணவாய் விழுந்த
கலைமான் ஒன்று
காற்றில்
ஏறி இறங்கும்
கிளையின் அசைவில்
தாவக் கண்டான் -
மிருகம் மாறி
மனிதம் பிறந்தது.
கிழக்கே ஏழுந்தது
சிம்ம சூரியன்.
பிரக்ஞையினுள் ஒரு
பாதாளத்தில் அதன்
பிரதிபலிப்பு
பழம் எனக் குனிந்து
எடுத்த கையில்
பாம்பு ஒன்று நீர்ச்
சேறாய் நழுவிற்று.
பரவிற்று விஷம்.

தட்டச்சு நாள் 31-03-2014



IV

பூமிச் சுழற்சியின்
அச்சாணியிலே
சரிவு கண்ட
யுக்ம் ஒன்று
துருவங்களின்
உறைபனி வெளி
உருகிய காலம்
உருகலில் நீர்
அலையற்று
புயலற்று
மலை முகடுகளை எட்டி
மூடத்துவங்கியது.
ஓநாய்க் குளிரின்
வாயில் பூமியின்
சீதோஷ்ணங்கள்
யாவும் சிக்கின
மூழ்கி மடிந்த
மனித இனங்களில்
மீதி இருந்தவர்
வயிற்றுக் குகையுள்
பனிவெளிக் குளிரின்
ஓநாய் உறுமல்.
நீர் வடிந்து
நிலம் எழுந்தபின்
கண்டம் விட்டுப் புதுக்
கண்டங்களைத் தேடி
நாடோடி ஆகியவன்
கண்டான் ஒரு
இரவு கழிந்த
அரை குறை விடிவில்
பட்சி வடிவப்
பாறை ஒன்றை
பறக்கும் நிலையில்
பூமியில் பாதி
புதைந்த தோற்றம்
நீண்ட கழுத்தை
வளைத்துத் தனது
இதயத்தையே
குத்திக் கிழிக்கும்
அலகு அதற்கு!
நெஞ்சக் குழிக்கு
நேரே நிலத்தில்
நீலச் சுனை
நாலு புறமும்
ஓடும் ஏழு
சிறிய அருவிகள்
ஆறு பகல்
தொலைவில் அவை
பெருகி ஒரு
ஆறாகின.
நதிகரை புரண்டு
வடிந்த வேளை
விளைந்தது நிலம்.
உண்டு மீந்தது
பட்சிப் பாறைக்கு
பலியாகிற்று.
விளைச்சல் வட்டம்
கடிகார மாகி
பழக்கம் பசுமை
வரட்சி பயம் என
எதிர் முனை பின்னி
ஒழுக்கமாயிற்று.
வானின் மீன்களில்
வடிவுக் கோட்டு
மண்டலங்கள்.
பழையகற் காலத்து
மனிதனின் பூஜையில்
ஆவேசம் உயிர்த்து
ஊடுருவிற்று.
துயிலும் வேளையில்
துயிலுக்குள் துயில்;
பாறைக்குள் ஒரு
பறவையின் குரல்.
உறுமி எழுந்து
சிறகு சிலிர்த்து
அந்தரத்தில் எற்றித்
தாவிற்று ஒரு
மாபெரும் கல்.
அதன் கால்கள்
கவ்விய பிடியில்
மானுடத்தின் மூளை.
எழுந்த பாறை
பறக்கலாயிற்று.
புலன்கள் மறுக்கும்
தொலை தூரத்தில்
ஒளிர்ந்தது ஒரு தனி
நட்சத்திரம்
மானுட மூளைக்குள்
பிறந்தது லட்சியம்.


V

இன்றும்
கிழக்குக் கதவைத்
திறக்கின்றன
கடலும் வானும்
பலி பீடத்தில்
வழியும் உதிரச்
சிவப்பு உதயம்.
வெளிறும் வடிவில்
நட்சத்திரங்களின்
இறுதி நடுக்கம்
கடலுக்கு மேலே
சுற்றுகின்றன
சிறகற்றுப் பறக்கும்
சிறுசிறு கற்கள்,
ஒன்றை ஒன்று
தொட்டுத் தொடரும்
சொற்களின் தாதுக்கள்
உதித்துக் கொண்டிருந்தது
ஒரு பெரும் பிழம்பின் சிதறல்.



VI

இருள்வாய் ஒன்றுக்குள்
உடைந்து கொண்டிருக்கிறது
உதய வேளை
வானில் கடலின்
முகடு முட்டும்
கோடு தாண்டி
கிழித்த உடல்கள்
மிதக்கும் அந்தரம்.
அந்தரத்தில் இன்று
அது என்ன?
ஆளற்ற நாற்காலி!
பின்னணியில் ஒரு மேஜை.
முன்னணியில்
புரண்டு தத்தளிக்கும்
சமுத்திர ஊஞ்சல்.
' ஏ, ஏ, ஏன், யார்,
நான்?' என்றெழும்
அசரீரிக் கேவல்கள்
ஊஞ்சலில்
ஊர்கின்றன
சமுத்திர மடிப்புகள்
ஆகாயத்துக்குள
கிழித்த கோட்டுருவ
நாற்காலிப் பீடத்தில்
நீர், தீ, நிலம், காற்று -
அசைவற்ற ஒன்றனுள்
சுழன்றோடும் நான்கு;
ராகுவின் வாய்க்குள்
நான்கினுள் ஒன்று
பரிதீக் கங்கு.

VII


கிழக்குக் கதவைத்
திறந்தேன் நான்
இன்றைய நாள்
வெற்றுத்தாள்
காலை வேளையில்
கனவு கழிந்த தெளிவு.
ஆயினும் எதிரில்
பட்சிப் பாறையின்
பலிபீடம்  அதில்
விழுந்தது ஒரு
சிசுவின் வடிவில்
நிழல்; என்குரல்
வீறிட்டு உடைந்து
நிசப்தம்! பூடத்தில்
உடல் துடித்து
சிரசு தனித்துக்
கிடக்கறது பிறப்பு.
வீறிட்ட குரலின்
மௌனத்துக்குள்
விளிம்புகட்டி நற்கிறது
மூலாதாரப்புயல்
பலிகொண்ட பட்சிப்
பாறைக் கொலுவில்
மூலைக்கு மூலை என்
பிரதிபிம்பம் ஒரு
கையின் உடுக்கைகுள்
பதுங்கிக் கிடக்கிறது.
ஒலித் திவலை
புவன வெளியைக்
கருக் கொண்ட
ஒரு துளி ஓசை அது
மறுகையிலே வளைந்து
தன்னையே, விழுங்கும்
காலபாசம்.
நேற்றின்று நாளை
என்றூரும் சர்ப்பம்
உனக்கும் எனக்கும்
பிரபஞ்சம் முழுதுக்கும்
அதன்
சூஷ்மாக்னிதான்
சங்கார மூலகம்.
கதவு தானாக
அடித்து மூட
வெளியே அதை
முட்டி உடைக்கும்
சிறகுகளின்
இரும்புத் தகட்டுத்
தடதடப்பு. எனக்கு
பார்வை அகமுகம்
பாய்ச்சல் பகிர்முகம்.
இன்னொரு கண்டத்தின்
அல்க்காட்ரஸ் பறவை
கழுத்தை வளைத்து
தன்னையே இதயத்தில்
குத்தி கிழிக்கிறது.
இன்னொரு கவிதையின்
சிலுவையில் இதயம்
அறைப்பட்டு மரிக்கிறது.
ஏன், எது, எங்கே,

எப்படி, எதற்காக, யார்
நான் என்ற கேள்விகள்
கதவுக்கு வெளியே
நின்று முட்டி
மோதுகின்றன.
பின்வாங்கித் தொடுவான்
தொலைவிலே கூடி
கோஷித்து மீண்டும் ஏ
கோபித்த மோதல்.
கதவைத் திறந்த
என்முன் நிற்கிறான்
என் பிரதி பிம்பமாய்
ஒரு முழு நிர்வாணி.
ஸ்தூலன் நான்
சூஷ்மன் அவன்.
எனது சிருஷ்டிக்கு
பூமண்டலத்து
வலக்கை மான்.
அவனுக்கோ
புவனவெளியின்
பிந்துதனைக் கருக்
கொண்ட உடுக்கை.
வலம் இடம் மாறிய
இருவேறு வெளிகள்.
மாறுகைகளிலே
அவரவர் வெளியில்
ஸ்தூலனின் மழுவும்
தூஷ்மனின் தீயும்.
மானுக்குப் பாய்ச்சல்
வெளியே, பார்வை
உள்ளே! எதிரும்
பதிரும் கலைந்து
சிதறின அக்கணம்
உள்ளே ஒரு
ஊஞ்சலாய் ஆடி
மிதந்து வந்து உட்
கார்ந்தது கூடத்தில்
அந்தரத்து நாற்காலி.
ஒரு சிறு மேஜையும்
மேல்கீழ் எங்கும்
மொய்த்துப் பறக்கும்
குரல்களும் கூட
கூடத்து நடுவில்..
கேளாமல் கேட்டது
பதுங்கிக் கிடந்த
பரமாணுவின் இதயக்
கர்ஜனை. உடனே
உள்ளே பார்த்தபடி
வெளியே பாய்கிறது
மூளைக்குள் சுழலும்
மூலாதாரப் புயல்.
நாற்காலியில் ஆள்
இன்மை.


தட்டச்சு - ரா ரா கு





மேல்நோக்கிய பயணம்  (காவியம் - பிரமிள்)

தட்டச்சு -       04-04-2014 முதல்  27-04-2014

I.காவிய முகம்

சேற்றில் விழுந்த சொற்கள்
தானியமாயின
புல்தரைமீது பூக்களாயின
சருகுகளாகி
தெருவிலலைந்தன பல
மாளிகையோ
குடிசையோ
என்றெனக்குத் தெரியாத
ஒருபூமித் தளத்திலே
குழந்தைகளாயின
மழலைகளாகி
இதயத்தில் பொழிந்தன
மலிந்தன
மலிந்தவை
புழுதிகளாயின
புயல்களுக்கு துவஜங்களாகி
கண்ணைக் கெடுத்து
காதைக் குடைந்தன
புயல் ஒடுங்க மண்டின
வேறுவேலையற்றுத்தவித்தன.

தவிக்காமல்
காற்றுக்கும எட்டாமல்
கண்ணைக் கெடுக்காமல்
காதைக் குடையாமல்
கனம் இழந்து
குரல் துறந்து
கருணைகொண்ட
ஏதோ ஒன்று மட்டும்
தானியமாயிற்று
இதயத்தில் வேரூன்றி
மனமழலைப்புழுதித்தூளில்
மழைத்துளிகளாய்த்திரண்டது
மேல்நோக்கிப் பொழிந்த்து
வானோடு இலைகோர்த்து
பார்வை கொண்டது
கனிந்து
உயர விடிந்தது.

II. திரை இரைச்சல்

பன்னிரண்டு வருஷங்களாக
குருத்தெலும்பு குறுகுறுத்து
இன்றென் எலும்புக் கூடுநடுங்க
கணுக்கால்கள் வெடித்து
நரைத்து நிலவிய
வெள்ளித் தாடிகளாய்
முளைத்தன இறகுகள்.

கண்ணுற்ற நண்பர்கள்
'டாக்டரைப் போய்ப்பார்
ஆபரேட் பண்ணிக்கொள்'
என்றெனக்கு
ஆலோசனை தந்தனர்.
'இப்போது கணுக்கால்
இனிப் பிளக்கும் தலை;
முடிவில் நீ தூளாவாய்.
இது ஏதோ குஷ்டம்
அல்லது பிளவை
எட்டநில்' என்றனர்
'காலில் முளைத்து
ஆகப்போவதென்ன
சிறகால்?' என்று
சிரித்தனர்
'தோளில் முளைத்தாலாவது
பறக்கலாம், கோவில்
வௌவால்களோடு
வௌவாலாய்த் தொங்கலாம்
பார் இதோ!' என்று சிலர்
முழங் கைகளை
விரித்து விலாவில்
சடபட என்றடித்து
சிறகின் இயற்கையை
விளக்கினர்.
உத்தரத்தில் தலைகீழாய்
தொங்கினர்

'பறக்கிறதென்றால்
இப்படி!' என்று சிலர்
எகிறி எகிறி
குதித்தனர்
பின்பு யாவரும்
மேல் மூச்சு
கீழ்மூச்சு வாங்க
'உரிய இடத்தில்
சிறகு முளைக்க
அரனாரின் அருளுக்கு
அப்ளை பண்ணு.
காதைக் கட்டைவிரல்
கார்க்கால் அடைத்து
கண்மூடிக் கண்கெட்டு
புலனின் பொத்தல்களை
தூர்த்து
வாழாமல் பாழ்பட
வழிபாரு
தோள்பட்டையிலே
தோல் முளைக்கும்
அதுதான் அசல்சிறகு
காலிலா முளைக்கும் சிறகு?
அசிங்கமடா!
ஆபரேட் பண்ணிக்கொள்.
உயிருக்கே ஆபத்து
போ போ!' என்றார்.

மழையின் குரலைமடக்கும்
தவளைகளின் உபதேசம்.
திரும்பும் திசையெங்கும்
திரை இரைச்சல்.
சிஷ்யப் பிறவி
ஈசல் இறகெறும்பை
குருவின் வயிற்றுக்குள்
வசமாக வீசிவந்து
ஒட்டிச் சுருட்டும்
நுனி நாக்குக் கும்பல்கள்
அருவருத்து விலகி
கையெடுத்துக் கும்பிட்டேன்.
இரண்டு கால்களிலும்
சிறகுகள் வெட்கி
குறுகுறுத்து ஒடுங்க
நொண்டி நடந்து அந்த
பிரதேசம் விட்டகன்றேன்.
அன்றிலிருந்து இப்பாதங்கள்
ஓயாது நச்சரிக்கும்
செய்திப் பரப்பில்
ஊர்ந்து அலைவதில்லை.
அவர் இவர் என்று
பிரிந்து பிறாண்டும்
உபதேசி மார்களின்
தத்துவத் தகவல்கள்
அச்சேறி நச்சரிக்க,
நினைவின் கசப்புகள்
வீறாப்புக் கதைபேசி
கட்சிகளின் மீதேறி
எச்சரிக்கைப் பவனிவர,
என் பாதங்கள்
கணம் ஒன்றில் வெளிகண்டு
குருவிகள் ஆயின.

அன்றிலிருந்து இப்பாதங்கள்
ஓயாது கிணுகிணுக்கும்
கோவில் மணிகளின்
உபதேசக் கொசுபாடும்
புராண வெளியினிலே
தவமாய்க் கிடக்கவில்லை.

முழங்கைச் சிறகை
விலாக்கூட்டில் தட்டி
பறந்த புஷ்பக
விமானச் சடசடப்பு
ஒலிக்காத வீதி
ஒன்றுண்டு.
ஒருசில அடிகள்
எகிறிக் குதித்துவிட்டு
"கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்து முன்தோன்றி
உயரப் பறந்தகுடி
நமது குடி" என்று
பல்லிளிக்கும் போஸ்டர்கள்
ஒட்டாத வீதி
ஒன்றுண்டு; அங்கேஎன்
பாதங்கள் பறந்தன.
வெட்ட வெளியோடு
கூட நடித்தன.
துன்மார்க்கன் என்று என்னை
தூஷணைகள் தொடர
முறைதவறி அகம்பிசகா
திசைஒன்றில் நடந்தன.
வெட்டவெளி மேடையிலே
வெட்கத்தின் இருட்டுக்கள்
பகலாகி நிலவின.
மிருகவியல் பரிணாமம்
முறைதவறாத
தோள்பட்டைச் சிறகாக
நளைக்கு முளைக்குமென்று
ஞாபகத்தைப் புள்ளிவைத்த
பேரேட்டுப் பாரங்கள்,
நாளைக்குச் சிறகாகி
ஆளைத் தூக்குமென்று
நம்பிச் சுமந்த
நேற்றைய கற்கள்,
தானே நழுவும்
சுமைகூட வீழாமல்
வரிக்கின்ற ஞாபகங்கள்,
அழுத்தும் பளுவை
மறைக்க மறக்க
உரத்துக் குரைக்கும்
உபதேசங்கள்-
முழுதையும் உதறி
"ஆளைவிடு" என்றகன்றேன்.

III புகை இரும்பு

கிளைநுனியின் இலைக்கண்ணில்
வெய்யிலின் ஒளித்திரவம்,
கண்படலம் நாவின்
தசைத்தகடாய் ஆகிறது.
விழிபேசி நா பார்க்க
கிளைகளிலே மனக்குரல்கள்,
துணுக்குற்று
குரல்சிதற காற்றலற
முதிர்ந்த மர இருளுள்
புதைகிறது கோடரியின்
இரும்புக் கூர்நாவு.
வீசும் புஜத்தில்
எஃகுநீர் வேர்வை-
தசையின் அசைவில்
வேர்வை வெளிநடங்கி
இலையின் அலையோட்டம்.
அருகே வந்த
புதிய தாடிக்
கணவானைத் தொட்டு,
உயிரும் விறகும்
ஊடுருவி எரியும்
சூழலின் இடையறாத்
திகிரியைக் காண்என்றேன்.
என்வியப்பைப் பகிர்ந்து
'பருகு' என்றேன்
'பயித்தியமோ?' என்று
என்னைப் பார்த்தார்
எல்லாம் அறிந்த
பார்வையில் இந்தப்
பையனை அளந்தார்.
உதட்டைப் பிதுக்கினார்
"இமயத்தில் வெள்ளியினால்
ரெடிமேட் அழகிருக்கு,
உயர உயர நடந்தால்
ஆளே கிடையாது
உள்ளம் அடங்கும்" என்றார்;
"உபதேசத் தகவல்" என்றார்;
"முக்திக்கு மனுப்போட
மாடர்ன் மந்திரம்
இந்தா பிடி' என்றார்.
வெட்ட வெளியிலே
நிலவும் பகலைச்
சொல்லாக்கி
கக்கத்தில் அடக்கினார்.
சீமைக் குளிகை ஒன்றை
எடுத்து விழுங்கி
சமாதியில் அடங்கினார்.
பழைய தாடிபோய்
புதியதாடி
முளைத்தென்ன?
அதே தாடையும்
மயிரும் தான்.

காங்கிரீட் மூளைக்குள்
ஆகாசப் பொந்து-
அதையும் அடைக்கிறது
புகை இரும்பு.
ஊரெங்கும் நிழல்மழை.
சொல்பதிந்த பக்கம்
உண்மையை வடிகட்டும்
சல்லடை ஆகிறது.
காற்றில் எங்கும்
வயிற்றுப் பசியை
விழுங்கும் கபந்தப்
புளுகுவாக் குறுதிகள்.
என்றைக்கும் வாராமல்
எதிர்காலத்தே நிலைத்து
பின்வாங்கும் சுவர்க்கங்கள்
சுவரெங்கும்
போஸ்டர் வாதப்
புது மதங்கள்.
சொல்லின் சல்லடைக்கு
தப்பித்த உண்மை
முணுமுணுத்து எழுந்த
ஒரு கணத்தை
அச்சறுத்திக் குரைக்கும்
இருளின் வாய்கள்.
இருந்தும் நிகழும்
அரைகுறை அற்புதங்கள்.
சொல்லுக்குள் பதுங்கிய
பகலின் விதைக் கங்கு
உதயச் செடியாகி
சல்லடைத் திரைகீற
இருளின் பாறைப்பொழுது
அதிர்ந்து பிளக்கும்.
அந்தக் கணமேனும்
இருளின் வாயில்
நாவுநாய் வாலாகி
சுருளும் கணமாகும்.

IV.  வேட்டை

செல்லும் திசை மறைத்து
தழைத்தன சுவர் நிழல்கள்.
அறிமுகமற்ற
இருள்மூலைகள்
போர்முகம் கொண்டன.
வாய்பொந்து காட்டி
கோஷங்களை
உறுமிக் குரைத்தன.
ஒருதிடீர் திருக்காட்சி :
'அதோ சிவன்' என்ற குரல்.
'விடாதே பிடி'
என்றோர் எதிர்க்குரல்.
எதிர்க்குரலுக்கு
துணைக்குரலாக
'பிடி அடி உதை குத்து!'
என்ற கூக்குரல்கள்.
'யாரோ இக் கூட்டம்?'
என்று விசாரித்தால்,
'அரனாரை சிறைபிடித்து
அறுவைச் சிகிச்சைசெய்யும்
சித்தாந்த ,
கட்சிலட்சிய
ஜட்ஜுகள்'
என்றுபதில் வந்தது.
ஜட்ஜுகள், சர்ஜன்கள்
மேலும் சேர்ந்து
குரல்கள் குவிந்து
கைகள்நாய் வாய்களாய்
கவ்விக் கடிக்க
'ஒழிக!ஒழிக!' எனும்
புதுவேத கோஷம்
குரைக்க
தப்பித்தடுமாறி
ஓடுகிறார் சிவனார்.


ஜடையில் கங்கையின்
இமயப் பனிமூச்சு
அனலாய் அடிக்கிறது
நதிநாக்கு வரண்டு அவள்
நீர்கேட்டுத் தவிக்கிறாள்.
அர்த்த நாரிஇவள்
பாரிச வாதத்தில்
பின்னே இழுக்கிறாள்.
ஜடை இருளுள் பிறைகவிழ்ந்து
விவேகப் பித்தம்
கோஷப் புயலில் கலைந்து
புத்தி தெளிந்து
பிழைக்கும் வழிதேட
இடிஒலி எழுப்பிய உடுக்கை
பொத்தல் விழுந்து
'பொத் பொத்' என்றொலிக்க
திரிசூலம் துருப்பிடித்து
கையைக் கடிக்க
மறுகையில் மானின்
கால் எலும்பும்
இன்னொரு கைநெருப்பு
அணைந்து புகைந்து
அரனார் இருமவும்
பின்தொடர்வோர் கல்லடியில்
படம் ஒடுங்கி
பாதிசெத்த பாம்புமாலை
புழுவாகிப் புரள
ஊழித்தீ தீவரண்டு
நெற்றிக்கண் குழிவிழுந்து
திருதிரு எனவிழிக்க
அறந்து பறக்கும் பூணூலை
பொடிமட்டையில் சுருட்டி
பொத்திப் பிடித்தபடி
அரனார் ஓடுகிறார்.
பின் தொடர்ந்து
'கடவுள் ஒழிக!' எனும்
சுலோகக் குரல்எழுப்பி
கடலாய் வருகிறது
கட்சி லட்சிய
ஜட்ஜுக் கும்பல்.
தலைமை வரிசையிலே
'அசல்சிறகு முளைக்க
அரானரை விசாரி'
என்று எனக்கு
அன்று அருளிய
பஞ்சாங்கங்கள்,
இன்று 'ஓய் நாஸ்திகரே
உம் கட்சி எம் கட்சி
ஒழிக கடவுள்!' என
முகமே வாயாகிப்
பிளக்க அலறி
தொடர்ந்து விரட்டுகிறார்.
ஓடித் தெருமுனையில்
கடவுளின் தலையும்
கும்பலும் மறைய
சிரிப்பதா வாந்தி
எடுப்பதா என
என்தலை சுழல
போகும் வழியும்
புரியாது திசைசிதற
நடைபாதை மீது
தடுமாறி உட்கார்ந்தேன்,
உடனே ஏதோ
புதிய சின்னங்களும்
சட்டையிலே
புதிய மடிப்புகளும்
புதிய பொத்தான்களுமாய்
புதிய வர்ணத்தில்
சீருடை அணிந்த
இருவர் ஓடிவந்துஎன்
முதுகில் தம் கைக்கழியால்
ஒருபோடு போட்டனர்
'ஓடு, ஓடு!
ஓடும் உலகத்தில்
நிற்காதே நடக்காதே
உட்கார்ந்து
இருக்காதே கிடக்காதே
ஓடோடு, ஓடு!
ஓடும் உலகத்தில்
ஊரோடு ஓடு!
உலகம் ஒருநாள்
ஓய்ந்து நிற்கும்
அப்போது நில்!
பிறகு தபஸில்
உட்காரும் அப்போது
உட்காரு.
பிறகு உலகு
முழுதும் ஒரு
சமாதி கூடி
யாவரும் கிடப்பர்;
அப்போது நீயும்
கிடக்காமல் முடியாது
இப்போது ஓடு!'
அதுவரை நடந்தநான்
ஓடினேன். ஓட
பாத நரம்புகள்
திமிறின. கணுக்
கால்களுள் சிறகின்
வேர்கள் குமுறின.
மறுகணம் ஓட்டம்
உயரஎழுந்தது
பறந்தது பாதம்.
என்னை ஏற்றி
விரிந்தன சிறகுகள்.
தெருவில் ஓடுவோர்
தலைகள் தரையில்
உருளும் தலைகளாய்
காட்சியின் புதுக்கோணம்
அப்போது கண்டேன்
விளம்பரக் காட்சித்
தெருவின் முகப்புச்
சுவர்களின் பின்புறம்
கிடந்து பெருகும்
சேரியின் அவலம்.
போஸ்டர்கள் செய்திகள்
எதிலும் பதியாத
'பொய்' களின் பெருக்கம்.
உயர எழுந்த
என்னை அண்ணாந்து
பார்த்தது பசியில்
குழிந்த கண்களின்
சிறுநெருஞ்சிப் பரபரப்பு.
திரும்பிய திசையெங்கும்
நேர்நோக்கில் உயிரைத்
தைக்கும் கேள்விகள்.
கெஞ்சலில் கரைந்து
தனிமுகம் இழந்த
ஒருமுகப் பாறை
கூப்பிக் குவிந்து
கேட்டு விரியும்
கைகள் முளைத்த
எலும்பு வயல்.
நரம்பு சில்லிட
தயங்கி எழுந்தது
'பசிக்குது' என்ற
ஒருபெரு மூச்சு.
பசியின் ரகசிய
விசும்பல் கேட்டு
தெருவின் கோஷங்கள்
ஸ்தம்பிதம் ஆயின.
கோஷம் பதுங்கக்
காரணம் கேட்டு
வானமுகட்டைப்
பார்த்த காவலர்
கண்டனர் என்னை.
'தெருவில் ஓடாமல்
சுவரை மீறிப்
பறக்கிறான் இவன்
ஒற்றன், விடாதே!
பிடி அடி உதைகுத்து!'
என்று சீறுடை
காவலர் சீர்கெட்டு
கத்தினர் விசில்களை
ஊதினர். என்வேகம்
மீறிற்று. தூரத்தில்
குரலும் விசிலும்
குழம்பித் தேங்கின.

சிறகுகள் அடங்க
ஊர்முகப்புக் கண்டேன்.
அங்கே அரசின்
விளம்பர விழா.
'புதுயுகமே வருக!' என
வாயைப் பிளக்கும்
கபந்த வளைவுகள்.
போஸ்டர்கள் மீத்
சொற்களுக்கு பல்முளைத்து
மீசைக் குரூரத்தை
இளிப்பால் மழித்த
பரிகாசத் திருவருள்.
கைகுவித்து போஸ்கொடுத்து
ஒண்ணேமுக்கால் ஆளுயரம்
பதிப்பித்த மூஞ்சிகள்.
வர்ணங்கள்
தெருமருங்கே கட்சிச்
சின்னங்கள்-சின்னம்
ஸ்வீட்டு வடிவெடுத்து
விநியோகம் ஆகிறது.

இந்த மிட்டாய்ச்
சின்னம் அன்றி
வேறு வடிவிலோ
வேறு ருசியிலோ
மிட்டாய் இருந்தால்
சட்ட விரோதம்.
சித்தாந்த அபினியின்
இல்லாத எதிர்காலம்-
பாமரச் சிறுநெஞ்சில்
திரைப்படமாய் விரிந்து
வசக்கும் கட்சியின்
அற்புதப் பிரசாதம்.
'நேக்கு நேக்கு' என்று
கைநீட்டிப் பெற்ற
குழந்தைக் கூட்டங்கள்
நக்கிச் சுவைக்க,
நாவில் ருசி
வெற்றுச்சொல் ஆயிற்று.
'கசக்குதே' என்று
கண்டு பிடித்தோர்க்கு
'கசப்பே இனிப்பு' என்ற
கல்வி  கிடைத்தது.
குழந்தைகள் யாவர்க்கும்.
முறைப்பே இனிப்பின்
வியப்பு என முகமும் மாறிற்று.

விழாவின் ஒருபுறத்தில்
பழைய கோவிலா?
கட்சிச் சின்னத்தை
நக்கும் கும்பலுக்கு
கோவிலேன்? கோவிலும்
அசல்கோவில் அல்ல,
கமிஸாரியேட் கலந்த
கூழ்கலைக் கட்டிடம்.
பிள்ளையார் கோவிலில்
பிள்ளையாராக
புரட்சித் தத்துவ
சிந்தாந்தியின் சிலை.
கோபுரமீது
ஓர் ஆயிரம்
நாயன் மார்களின்
வண்ணச் சுதைகள்
ஒருவர் தோளிலே
வெண்ணிறப் பூணூல்.
மீதிப்பேர் தோள்களில்
கறுப்பு நூல் சிவப்புநூல்
கலந்த புது நூல்.
'அறுபத்து மூவர்
ஆயிரவரானது
எப்படி?' என்றேன்
'ஒவ்வொரு சுதையும்
ஒவ்வொரு ஜாதி.
ஆயிரம் உண்டிங்கு
அத்தனை பேரையும்
புதுயுகப் புரட்சியில்
நாயனார் ஆக்கினோம்.
ஜாதியை விடாத
மாபெரும் புரட்சி.
ஆயிரத்து
ஒண்ணா நீ?
ஆபிஸில் போய்
ஆளைக்கேட்டு
கோபுரத்திலே
ஏறப் பார்' என்றார்.
கருப்பு நூல் புது நூல்
அணிந்த ஒருவர்.
'உன்ஜாதி என்ன?' என்று
என்னைச் சூழ்ந்து
கேட்டது ஒருகும்பல்.
குரல்ஒன்று கனைக்க
கும்பல் பிரிந்தது
காணாமல் எனைக்கண்டு
முன்வந்தார் ஓர்
கட்சிலட்சிய ஜட்ஜு
'கோவிலுள் கோவிலுள்'
என்றென்னைச் சுற்றி
வளைத்தது திருக்கும்பல்
கூட்டம் குவிய
கோவிலுள் மட்டும்
வழி விரிய
உள்ளே திரும்பினேன்.
கமிஸாரின் சிலையே
கடவுளாய் நிற்குமென்ற
எதிர்பார்ப்பை ஏய்த்து
நின்றார் சிவனார்.

கர்ப்பக் கிருகத்தில்
ஒருகால் தூக்கி
அகஇருளின் குறியீட்டை
உதைத்து விரட்டும்
ஜடவாதப் புரட்சியின்
மெர்குரி லைட்மினுக்கில்
அசல்தனம் பூராவும்
அப்படியே விளங்க
ஆட்டம் உறைந்து
அசடான கோலம்.
அடுத்த அசைவை
நிகழ்த்தும் கலைஞனின்
வீர்யம் இழந்து
போன வெறும்போஸ்
கையில் சூலத்தின்
மூவிலையைக் காணோம்.
பிடிக்கு அடங்காத
உலக்கைதான் நின்றது.
உற்றுப் பார்த்தேன்,
சூலமே அல்ல.
ஐ.ஸி.பி.எம்.
போல இருந்தது.
நெருப்பு எழுந்தகையின்
விரல் ஒன்றிலிருந்து
ஆடித்தொடங்கியது
ஆயில் டின்.
மானிருந்த கையில்
கைக்கு அடக்கமாய்
கலர்கள் மலிந்ததாய்
கமிஸார் நடித்த
சினிமா விளம்பரம்
உடுக்கை கிழிந்து
ஒலிபெருக்கி ஆயிற்று.
பாம்புகள் கேபிள்கள்;
நெற்றிக் கண்
ஓவென்று திறந்த
எலக்ட்ரானிக் கண்ணாகி
கோவிலில் நடப்பதை
கமிஸாருக்காக
ஒற்றுப் பார்த்தது.

ஜடையிலே பிறைஇப்போ
கட்சிச் சின்னத்தின்
உருவிலே பாதி - ஓர்
குழாய்வேலைப் பாட்டின்
திருவருளால் ஜடைவழியே
புனித குளோரின்
கலந்த கங்கை
புறப்பட்டு ஓடியது.
போனது போக
முகமும் உருவமும்
மொத்தக் கணக்குக்கு
மாறவும் இல்லை.

V.  சர்ஜரி

சித்தாந்த கோதமரின்
தவச்சிரிப்பாய் ஏறம்
இதழோரச் சிறகுகளை,
கொலைக்கருவி தாங்கிய
காட்டாள் கடவுள்
இரவல் வாங்கி,
தர்மச் சக்கரமும்
ஸ்வஸ்திகமும்
சென்றிணைய
நடராஜ வடிவத்தில்
உடல்ரூபச் சக்கரம்.
விபரக் கணக்கில்
வித்யாசம் உண்டு.
இருந்தாலும்
புதிய சிவனல்ல,
கட்சி லட்சிய
ஜட்ஜுகளின்
சித்தாந்த சர்ஜரியில்
ஆபரேட் ஆகி
புதுப்பிக்கப் பட்டஅதே
பழைய பரமசிவம்.
இருந்தாலும்
இதழோரத்தே நிகழும்
அற்புதம் மறையவில்லை.
சித்தாந்தக் கத்திகள்
கபடாக்கள் எதற்கும்
எட்டாமல் நிலவும்
வெட்டவெளிப் புன்னகை.
எளிமையின் சிகரத்தை
எட்டிய குறியீடு
புலைக்கண் பார்வைக்கு
தட்டுப்படாமல்
தப்பித்த ரகஸியம்.
தட்டுப் பட்டாலும்
புன்னகை என்ன
கயிறா திரிக்க?-என்
சிந்தனையைக் கலைத்தது
கனைப்பு ஒன்று.
திரும்பிப் பார்த்தால்
திருவாளர் ஜட்ஜு
'ஆபரேஷன்
ஆச்சா?' என்றார்.
'அறுத்து விடுங்களேன்'
என்று சிரித்தேன்.
சிரிப்புக்கு முறைத்து
என்கண்ணை நேரே
தன்கண் பாராத
பவிஷுப் போஸ்கொடுத்தார்.
'உன்பெயர் எம் பதிவேட்டில்
உட்கார்ந்து நாளாச்சு.
கருணாகரக் காவல்
தொழிலாளர் கூட்டமொன்று
உன்னைப் பிடித்து
தொழுவத்தில் கட்ட
தயாராக இருக்கிறது.
பறக்கமுயன்றாலுன்னை
காக்கை சுடுவதுபோல்
க.கா.தொ. கூட்டத்துத்
தோழர் சுடுவர்
ஜாக்கிரதை' என்றார்.
பழைய நண்பரின்
புதிய குரல்
துருப்பிடித்து ஒலித்தது.
'கருணாகரக் காவல்
தொழிலாளர்
கூட்டமென்றால்
என்ன?' என்றேன்.
'சித்திர வதைசெய்யும்
சிப்பந்திகளுக்கு
சூத்திரமான குறி!
வெளிநாட்டு நிருபருக்கு
விஷயத்தைத் தலைகீழாய்
காட்டும் கலையில்
விளைந்த பெயர்.
அந்தக் கலைக்குழைக்கும்
தொழில்கவிதை'
என்றுரைத்தார்.
கொஞ்சம் நிசப்தம்;
நெட்டுயிர்த்தேன் நான்.
உடனே ஜட்ஜு
'கவிதையின் முதல்மூச்சு.
சிவனார் சேர்ந்தகட்சி
நமது கட்சி' என்று சொல்லி
அவன் நின்றதிசைக்கு
ராணுவ பாணியிலே
அடித்தார் சல்யூட்.
கால்விறைத்தார்
கைவிறைத்தார்
வலது கைமடித்தார்
நெற்றியிலே புறங்கையால்
அடித்தார். அந்த
லட்சணத்தைப் பார்த்து
வாய் பிளந்தேன். அங்கே
பக்தர்கள் யாவரும்
சல்யூட் அடிக்கும்
விபரமும் கண்டேன்.

'பழைய சிவன்  நமது
உருவெளித்
தோற்றமென்றாய்.
புதிய சிவன் இவன்
உருவோ ஜடம்
அடி சல்யூட்'
என்றார் ஜட்ஜு
அவரது ஆணையில்
நாற்புறமும் நின்றோரின்
சல்யூட்கள் தான்
சடசடத்துப் பொழிந்தன.
'உன்சல்யூட் விழவில்லை.
எனவே நீ
அன்றும் நாஸ்திகன்
இன்றும் நாஸ்திகன்.
அன்றைய நாஸ்திகன்
அலையலாம் ஆனால்
இன்றைய நாஸ்திகன்
அழியணும்' என்றார்.
இந்தக் களபேரத்தை
சிவனின் நெற்றிக்கண்
ஒற்றுப் பார்த்தது.
புதிய ஒரு
குரல் கேட்டது.
'தப்பிக்க வேண்டுமென்றால்
கமிஸாரின் கருணைக்கு
மனுப்போட்டுப் பாடு, ஒரு
நவீன தேவாரம்.
உன்னை மன்னித்து
பைல் பைலாக
க.கா.தொ.கூ. க்கள்
கூடி எழுதிடுவர்.
யாவற்றுக்கும்
கமிஸார் ஸீல் விழவும்
கவிதைகள் என ஆகும்.
ஆனால் திசையற்று
நடை போடும் உன்சிறகை
உருவி எடுத்திடுவர்.
உண்மையின் குற்றங்கள்
மலியாமல் காக்க
மார்க்கம் அது.
பின்பு நீ
அவ்வப்போது சில
அரங்கங்களிலே
பறப்பது போல
எகிறிக் குதிக்கும்
புரட்சி யுகக்கவி' -
பேசியது
சிவன் நின்றதிசையின்
யந்திரக் குரல் -
கமிஸாருக்குக் கட்சிகட்டும்
கடவுளின் திருவாக்கு!
'சிறகை உருவி
எடுத்து உதவுங்கள்
அது மீண்டும்
முளைக்கும் இயல்பை
உணர எனக்கு நீர்
உதவியதாகும் - ஆனால்
உண்மையின் இயல்பு
குற்றமா?' என்றேன்
'உன்னுடைய இயல்புக்கு
பிரதி பலனில்லை
உண்மைக்கு எங்கும்
உபயோகம் இல்லை'
என்றார் கடவுள்!
அவர் உதிர்ந்த நவமறையில்
என் இதயத்துள் சிறகதிர்ந்து
கெக்கலிப்பின் கூத்து.

ஜட்ஜின் கண்ணும் என்
கண்ணும் சந்தித்த
அக்கணத்தில் அவருள்ளே
எண்ணில் அடங்காத
இன்பத்தின் கூத்தொன்று,
அவரே உணராஓர்
இருளில் நிகழ
நானே அவரானேன்.
ஜட்ஜு திடுக்கிட்டு
முகந்திருந்தி முகம்திருப்பி
சிவன்கண் எட்டாத
தூண்மறைவில் எனைஅழைத்து
குரல்தாழ்த்திக் கிசுகிசுத்தார்
“நாஸ்திகன் ஆனாலும் உனக்கு
உள் விஷயம் புரிந்திருக்கும்
அந்த பழைய
பரமசிவனாருக்கு
வலப்புறமாக அன்று
சுற்றி வழிபடும்
வளமுறை ஏன்?”

“எனக்குத் தெரியாது”
என்றேன், “எனினும்
ஊகித்துச் சொல்கிறேன்;
ஆநந்தம் பிறப்பது
இதயத்தின் வலத்தேயாம்
ரத்த பிண்ட
ஸ்தூல ஹ்ருதயத்தின்
வலப்புறத்தே தான்
சத்ய சொரூப
நர்த்தன ஹ்ருதயம்
என்று வதந்தி.
அதனையே
இறைவனாகக் காண்கின்ற
குறியீடுதான்
வலத்தை அவனுக்கு
வைத்தபடி சுற்றிவரல்.
அந்த இதயத்தின்
இயல்பை இது
இடத்தே கிடந்து
தன்னதாய் பாவித்து
காலத்தைக் கணக்கிட்டு
எகிறிக் குதிக்கிறது.
இன்பவெளியில்
பறக்க நினைக்கிறது.
அதுதான் பறக்கும்; இது
கடன்பெற்ற இன்பத்தை
அதை இழந்த துன்பத்தை
காலத் திரைத்தூசித்
துகள்களைக் கணக்கிட்டு
களைத்து இறக்கும்.
இதுவும் வதந்தி,
வணக்கம்” என்றேன்.
நகர முயன்றேன்-
மறித்து நிறுத்தி
ஜட்ஜி கர்ஜித்தார்.
“ஹா! அப்படியா?
நமது புரட்சிச்சிவனுக்கு
உதிரம் உண்டு
இதயம் கிடையாது.
இறக்குமதியான பொருள்
'பம்ப்' ஒன்றுண்டு.
இந்த சிவனுக்கு
எதார்த்த இருதயம்
இடப்புறத்துப் 'பம்ப்'
இடத்தை அதற்குவைத்து
அப்பிரதட்சணமாய்
சுற்றுங்கள்.
கைகளைக் குவிப்பது
செயலின்மைக்கு அறிகுறி
சல்யூட்  அடியுங்கள்.
புரட்சியின் புதிய
ஆகமம் இது” என்று
எனக்கன்றி
கூட்டம் எதிலோ
கூறச்செய்த ஒத்திகையாய்
லெக்சர் அடித்தார்.
“என்னுடன் வா உன்
சிறகைப் பிடுங்கி உன்னைச்
சீராக்க வேண்டும்” என்றார்.


VI.கர்ப்பம்

கோவில் மணியை
அடித்தார் ஜட்ஜு
நிலவறை திறந்தது
தரிசனம் தந்தனர்
தடியர்கள் இருவர்.
தரதர என்றென்னை
அதல பாதாள
ஆஸ்பத்திரி ஒன்றுக்குள்
இழுத்துச் சென்றனர்.
அங்கே
அவர்கள் விழிக்க
நானும் வியக்கஎன்
சிறகைக் காணோம்.

கோவிலில் தேடி
நிலவறைப்படிகளில் தேடி
எக்ஸ்ரேயை ஏவிஎன்
உடலுள்ளும் தேடினர்.
போன தடம்விட்டு
சிறகு பறக்குமா?
“காற்றில் உதிர்கிற
பழைய இலைபோல்
அலைந்து அகன்றிருக்கும்.
மீண்டும் முளைக்கலாம்.
அதுவரை ஆளை
சிறைவார்டில் வை”
என்றார் ஜட்ஜு.
சிறகு முளைத்தபின்
வேரோடு சேர்த்திழுத்துப்
பிடுங்கி
ஆராய வேண்டும். இது
ஆகிவரும் உலகத்தை
அழிக்கின்ற
வெட்டுகிளி வர்க்கமா
இடையன் எறும்பா
இறகு முளைத்த
கரப்பானா?
கண்டு பிடித்து
கன்னா பின்னாஎன்று
சிறகு முளைத்து
சிரமம் கொடுக்காத
சமுதாயம் உருவாக
அழிவு மருந்து
ஆயத்தம் வேண்டும்என்று
எதிர்கால வம்புகளை
அளந்தனர்,
தீர்க்க தரிசன
தத்துவ சித்தாந்த
சர்ஜரி படித்தசில
நிபுணர்கள்.

எனக்கு உணவு
செல்லவில்லை
துயிலும் தவறியது.
நரம்புகள் யாவும்
அடிக்கடி சிலிர்த்தன.
துயிலைக் கிழித்தது ஒரு
கதவுச் சிறகு.
நடுஇரவில்
கழுகுகளின் விண்படைபோல்
எனைமேவி
நதியொன்று பாய்ந்தது.
 விழித்து எழுந்தது
சிறு குழந்தை
ஆன உணர்வு.
இருந்த இடமே
மெத்தென் றிருந்தது;
உடல்வாழ்வு மாறியது.
டாக்டர்களோ
‘புரட்சிக்குத் தேவாரம்
பாடு” என்று கத்தினர்.
வக்கரித்து
தந்தமும் நகமும் நீட்டி
கெக்கலித்தனர்
டாக்டர்களுள் ஒருவர்
சித்திரவதையுடன்
சிகிக்சையும் செய்கிற
சிநேகிதரானார்.
திடீரென்று ஒருநாள்
நிலவறை நீக்கிஎன்னை
தெருவுக்குக் கொண்டுவந்தார்.
ஒருவீட்டின் உள்ளே
பழைய ஸ்டைலில்
வெண்பூணூல் தரித்த
மனிதர்களை வரவழைத்து
பந்தி எடுத்து எனைஇருத்தி
இலைபோட்டு அமுதளித்து,
“சாப்பிடு இது
சூத்திரர்களுக்கு
கிடைக்காத கவுரவம்.
உன்னுடன் சாப்பிட்ட
பாவத்தை
பூணூல் மாற்றி
அகற்றி விடுவோம் நாம்.
புதுப்பூணூல் கூட்டம்
அறியாத நுட்பம் இது.
மந்திரங்களிலே
இருக்குது தந்திரம்.
இன்றுனக்கு இவ்வமுதம்
அபூர்வ கவுரவம்.
உனக்காக நாம்செய்யும்
டெம்பரரிப் புரட்சி. நீ
வழிக்கு வந்தால்
அடிக்கடி இந்த
புரட்சி இலைகிடைக்கும்”
என்றார் டாக்டர்.
இதுகேட்டு
“இரைஇலை போட்டு
கவிதைமீன் பிடிக்கும்
ஒரிஜனல் குப்பமா?”
என்று வியந்தேன்.
பொறுமை காட்டி
டாக்டர் சொன்னார்.
“அன்று நீ
கருப்பு நூல் சிவப்பு நூல்
புதுப்பூணூல் கார
சூத்திர ஜட்ஜுக்கு
வலப்புறம் இடப்புறம்
என்றேதோ
விளக்கம் கொடுத்ததை
கோவிலில் உள்ள என்
ஒற்றன் சொல்கிறான்.
ஜட்ஜும் நானும் ஒரு
கலாச்சாரப் புரட்சிப்
பதவித் தலைமைக்கு
போட்டி இடுகிறோம்
உள்கட்சிப் போராட்டம்.
உன் விளக்கம் கேட்டஜட்ஜு
லெக்சர்களில் புதுசுகளாய்
அவிழ்த்து விடுகின்றார்.
எனக்கு நீ ஒரிஜினல்
பூணூலை விளக்கு” என்றார்.
“இதோ பூணூல்கள்
இவர்களைக் கேளுங்கள்”
“இவர்களில், இப்படி
இவர்களில் எத்தனையோ
ரகங்களைக் கேட்டாச்சு,
இரண்டாம் பிறப்பின்
அறிகுறி என்பர்.
உடலாய்ப் பிறந்த பின்
ஆத்மாவாய்ப் பிறந்தோம்
அதைக் குறிக்கும் என்பார்கள்.
நானும் அது அறிவேன்”
என்றார் டாக்டர்.
இரண்டாம் பிறப்புக்கு
இடுப்பிலே கையிலே
கழுத்திலே இல்லாமல்
தோளிலே நூலேன்?
பொருளற்று வரட்டுப்
புதிர் என்று தள்ளாமல்
பிரச்னை ருசிக்க
வியந்து மௌனித்தேன்,
விளக்கம் வெளியாச்சு.
“பிறவிபெற் றுதித்த
கணத்தில் சிசுவின்
உடலைச் சுற்றியுள்ள
தொப்புள் கொடியுமக்கு
தெரியும்...?” என்றேன்.
“சொல் மேலே சொல்லு
சொல்” என்றார் டாக்டர்.
“நான்’ ஆகப்பிறந்து பின்
‘தான்’ ஆகப் பிறப்பது
இக்கணத்து மின்னலின்
தரிசனப் பிழம்பிலே.
அந்த மின்னலே
இதயத்தின் குழந்தைமைக்கு
தொப்புள் கொடியாகும்

ஆனால்
பரம்பரைச் செருக்கை
பவித்ரமாக்கும்
ஜாதிவாதிக்கு
இக்கணம் ஏது?
எனவே -
அவனது தோளில்
பழமை புழுத்து
வழியும் சீழ்நூல்
பூணூல்” என்றேன்.
விளக்கிய முடிவில் என்
வயிறு குமட்டியது.
புரட்சி இலையில்
வாந்தி விழுந்தது.
பிரக்ஞை கழன்றது
விழித்தேன் மீண்டும்
நிலவறைச் சிறையில்.
அன்றிரவே ஜட்ஜு வந்தார்.
க.கா.தொ.கூ.
தோழரும் ஒருவர்
கூடவே வந்து
நோட்டம் விட்டார்.
“டாக்டருக்கு தந்துவிட்டாய்
ஏதோ விளக்கம்.
கூட்டத்தில் அவிழ்க்கிறார்
புதுப்பூணூல் குழுவை
கவிழ்க்கும் கருத்துக்கள.
மறுக்காதே எனக்கு
ஒற்றர்கள் எங்கும் உண்டு.
மேலும் -
அவர்கருத்தில் உன் கவிதை
வாடை அடிக்கிறது.
நாளை உனக்கு
க.கா.தொ.கூ. வின்
சித்திர வதைச்சாலை.
சிறகின் ரகசியம்
அறிவோம் நாம்.
ஜடத்தை மீறி எந்த
ஜாலமும் கிடையாது.
எலும்பு முளைத்து
எழுந்தால் சிறகு!
பார் எங்கள் கட்சியிலே
எத்தனை எலும்புகள்!”
என்றார் ஜட்ஜு.
கட்சி மட்டுமே
பத்திரிகை நடத்தலாம்
என்ற புதுவிதியில்
வெளியான காகிதங்கள்
கட்சிச் சின்னம்
மீசைகள் பற்கள்
கமிஸார் படங்கள்
மேடையின் மீது
கணுக்கால்களிலே
ரெக்கைகள் விறைத்து
உயிரற்று உறைய
போஸ்கள் கொடுத்து
புன்னகைப் பல்லணிந்த
நபர்கள்.
‘கவிஞர்கள் அல்லர் இவர்
கொக்குகள் போலிருக்கு.
ஓடு மீன் ஓடி
உரு மீன் வந்த்தும்
கொத்தி விழுங்குவோர்.
சிறகும் எழ
ஒட்டுவேலை
வெற்று ஜடம்.
மேலும் மெய்ச்சிறகு
எச்சில் இலைக்கு ஆடும்
நாய்வால் அல்ல.
கவிதை எழுத
வாழ்வினூடே
ஓடும் தர்க்கத்தின்
இழையை உணரும்
திறன் வேண்டும்.
அதன் விளைவு
தார்மீக உணர்வாகி
வீர்யத்தின் உலையில்
உருகிப் பிழம்பின்
நிலையை எய்திப்பின்
எழுத்தில் வர வேண்டும்.”
என்றேன் நான்.
க.கா.தொ.கூ.
முறைத்து முகம்சுளித்து
சிந்திக்கத் துவங்கினார்.
“வீர்யமா?
தார்மீகமா?
இன்னொரு ‘ர்’ எழவு
எனன அது?
தர்க்கமா? இதெல்லாம்
எமக்குத் தெரியாது.
வேண்டுமட்டும்
கிடைக்கிறது
வெளிநாட்டு ‘ர்’ ஒன்று
சர்ர்ர்...ரியலிஸம்”
குறுக்கே விழுந்தார்ஜட்ஜு.
“அதாவது அந்த இஸம்
எங்கள் தத்துவத்தை
அனுசரிக்கும் கலைக்கொள்கை.
எங்களுக்குக் கொஞ்சம்
எக்ஸிஸ்டென்ஷிய
லிஸமும் வரும். அந்த
சிவனையே வசக்கி
தொழுவத்தில் கட்டிவிட்டோம்
இவை எல்லாம் என்ன
பிரமாதங்கள்” என்றார்.
எதையோ உளறிவிட்டு
திருதிருவென விழித்த
கருணாகரக் காவல்
தொழிலாளர் இப்போது
கவிதைச் சரம் தொடுத்தார்.
“நாங்கள் நெருப்பர்கள்.
மனிதாபி மானத்தில்
புஷ்பித்த பிம்பங்கள்.
பசியே இல்லாத
பார் ஒன்றைப்
படைத்த தடியர்கள்”
என்றார் பின்பு
“ஒரு திருத்தம் உண்டு.
இறுதி வரி ‘படைத்த
ஓடுகால் மனிதர்கள்’ -
ஊஹூம் சரியில்லை” -
அவர் தயங்க நான்
““படைத்த மடையர்கள்’
என்பதாய் திருத்துமேன்”
என்று கை கொடுக்க
பிரசவ வேதனை
தீர்ந்த திருப்தியில்
“தேவலை! ஆனால்
எங்கள் கவிதைகளை
திருத்த உனக்குஇன்னும்
கார்டு கிடைக்கவில்லை
ஆனாலும் உனக்கு
அடுக்கு மொழி வருகிறது”
என்று சிரித்தார்.
“கட்சித் தலைவர்கள்
பிரிஸ்கிரிப்ஷன் செய்த
கனவுகளை மட்டும் கண்டு
கண்கள் சரியான
கபோதிக் கவிஞரே
வணக்கம் ” என்றேன்.
“அன்றைக்கும் இன்றைக்கும்
ஓயாது நீடிக்கும்
பசியின் தகவலை
திசைகள் அறியாமல்
கருவருக்கும் புலையரே
வணக்கம்” என்றேன்.
“எனினும் ஒருகேள்வி.
கரித்துண்டு ஒன்றுக்கு
சிவப்புக் கலர்தோய்த்து
நெருப்பின் பெயரை
இட்டுவிட்டால் என்னஅது
சுட்டுப் பொசுக்கிடுமோ
இல்லை வெறுமே
சிவப்பாய்க் கிறுக்குமோ
சொல்லும்'” என்றேன்.
‘ஹா,  ஹா! கிறுக்கும்
சிவப்பாய்! ஹா,  ஹா! ”
என்று க.கா.
தொ.கூ. சிரிக்க
“நாளைக் காலை
ஆளை அங்கே
நகர்த்து!” என்று
ஜட்ஜு கத்தினார்.
க.கா.தொ.கூ.
கப்சிப் ஆனார்.
“தரையில் ஊர்ந்து
அலைகின்ற தம்பிகளே,
சிறிது பறந்து விட்டு
தொப் என்று விழுகின்ற
அண்ணாந்தைக் கோழிகளே
வணக்கம்” என்று
வழியனுப்பி வைத்தேன்.


VII.  ஜனனம்

நிகழ்ச்சித் திரை மறைவில்
நிகழும் ரகசியத்தை
சிந்தனை தொடர்ந்து
தீண்டத் தவித்து அதன்
முயற்சிக் கதிர் உருகி
வெளியாய் விலகிற்று.
அழுகையின் விளிம்பில்
பிரக்ஞை பெருகிற்று.
எந்த நிலையில் இக்
கணத்தில் இருந்தாலும்
அக்கணத்தில் அதுமெய்மை,
அடுத்த கணம் என்ற
கனவற்ற பிரக்ஞை,
எதிர்பார்த்து எதிர்பார்த்து
இக்கணத்தை இழக்கும்.
உயிர்ப்புச் செலவின்றி
திரண்டது அகத்தீ,
தீயும்
வைரநூலாகி
மின்னி எழுந்தது.
இருளின் கபாடத்தில்
இடியோசை ஓடிற்று.
இதயத்தில் மௌன
லயத்தில் மிதந்து
கொப்பளித்து
எழுந்தெழுந்து
கூத்தொன்று கூடிற்று.
கடந்த கணங்களின்
ஞாபக மந்தை
இக்கண உணர்வின்
வெறுமையில் பொழிந்தது.
நடு இரவில் என்
மடியிலோர் உயிர்உருவம்.
கன்னங் கரிய
குழந்தை ஒன்று.
என்மடியில் இருந்துஅது
பெரிய விழிஉயர்த்தி
வாய்இதழ் மடித்து
வவ்வவ்வே காட்டியது.
எட்டிஎன் முகத்தை
பிறாண்டியது.
'சித்திரவதை செய்யும்
சின்னஞ்சிற
க.கா.தொ.கூ.
யார் நீ?' என்றேன்.
குழந்தையோ விருட்டென்று
மேஜையின் மேலேறி
காகிதங்களை அள்ளி
அறைஎங்கும் வீசிற்று.
பேனாவை எடுத்து
சுவர்மீது அறைந்துடைத்து
சிதறிய இங்கி
இருளைக் காட்டிற்று.
'கமிஸாரின்
கடைசிப் பட்டாளம்!
விட்டேனா பார் உன்னை!'
என்று எழுந்தேன்.
குழந்தை நிலத்தில்
குதித்து விழுந்தது.
வலித்து அழுதது.
'அச்சச்சோ' என்றேன்.
அணைக்க ஓடினேன்.
பிடியில் வெளியாய்
நழுவிய குழந்தை
எழுந்து ஓடிற்று.
வெளித்தாள் இட்ட
அறைக் கதவு
என்னைவிட்டோடும்
குழந்தையின் கைதீண்டி
பூட்டின் வில்தெறித்து
விலகிவிழக்கண்டேன்.
.குனிந்து எட்டித்
தொட்டுவிடும் தூரத்தில்
குழந்தையின் பாதத்துடிப்பு
ஈர்க்கத் தொடர்ந்தேன்.
வேகம்கூடி
ஓடினேன் தொடர்ந்து.
குழந்தையின் குடுகுடு
கதிமாறாக் குறுநடையோ
எனைமீறி ஓடிற்று.
வெறிச்சோடிக் கிடந்த
நடுஇரவின் கூடம்,
நிலவறைப் படிகள்.
பின்முன் எங்கும்
காவல் முகமற்ற
கணங்கள் வழிதர
குழந்தையின் கைதீண்டி
கதவுகள் மாயத்
திரைகள் போலகல
விடுதலை! வெளியே
குழந்தையைத் தேடிய
திசையெங்கும்
இருள் அழுது
பகலாயிற்று.
பகல் சிரித்து
பார்த்த இடமெங்கும்
சிசுவாயிற்று.
எதிரே வளர்ந்து
ஓடிற்று என் நிழல்.
பசித்த துன்பமும்
கேட்டு வாங்கி உண்டு
பசியகன்ற இன்பமும்
அன்று வேறு
சுகதுக்கம் ஏதுமின்றி
எங்கேஎன் ற்றியாது
நடந்தேன்.
போலிப் பூக்களாய்
வெளிறி எரித்த
நகரின் விளக்குக்
கும்பல்கள் நீங்க
கிராமங்கள் கடந்தேன்.
இரவின்
புதிய மறுமைகள்
கணந்தோறும்
அறுவடை ஆகி
கணந்தோறும் விளையும்
விண்வைரப் பண்ணையில்
சில்லென்று பூத்தன.
வா, வா என்றன.
ஒரு இரவு,
நாய்கள் தொடர்ந்துவிரட்ட
சந்தேகக் கண்கொண்ட
காவலர்கள் சிலர்
வாய்பேசாத என்னை
கைது செய்து விசாரித்து
ஊமைதான் என்று
முடிவு கொண்டனர்.
ஊரெல்லைக்கு அப்பால்
அடித்து விரட்டினர்.
ஓயாத தூரத்து
ஹூங்காரமாக
யாதோ ஒன்றன் கர்ஜனை
சிதறி எதிரொலித்தது
புலன்களை ஊடுருவி
அழைக்க நடந்தேன்,
ஒரு யாமம்.

நான் நின்ற இடம்
கடலோரம்.
கடல்
அலைவரிசை
முன்கொணர்ந்து
தீண்டியதும் என்னூடே
இடியொலி பாய்ந்தது.
கணுக்கால்கள் பிளந்தன.
சிறகுகள் பிறந்தன.
வெட்ட வெளியை
தொட்டுச் சிலிர்த்தன.
கடலின் மேலே
அலையை ஈர்த்துப்
படர்ந்த வெளி
பிறந்த சிறகுகளை
ஊடுருவிற்று.
இரவு ஒரு கோடி
ஒன்பத்து முக்கோடி
நக்ஷ்த்ரத் தேர்களை
அதீத வியூகமாய்
தொடுத்து முடுக்கி
யாத்திரை மேற்கொண்டு
வா, வா என்றது.
என் உயிரின் குருத்து சிரித்தது,
சிறகு படபடத்தது
மின்னி மறைந்தது.
உடன்
ஏதோ என்னை
ஊடுருவிற்று.
பாதங்களிலிருந்து
இடைக்குப் பாய்ந்தெனது
காம உணர்வின்
விருக்ஷ வேர்களை
வீசி அறுத்து
களைந்து எடுத்துயர்த்தி
இதயத்தில் பொறிவிட்ட
சுடர்க்கூத்தில் அவ்வுணர்வை
பொழிந்து நெருப்பாக்கி
கோள உருவெடுத்து
ஒரு மின்னல் சுற்றிற்று.

திசைக்கிளை முழுதும்
இலைத்தீ முகங்கள்
திசைகள் முறிய
வீசின திவ்ய
வெறிகள் வைரச்சிறகுகள்
குரல்வளையின்
ஜடமுடிச்சில்
பதுங்கும்  கபந்தம்
மறுவீச்சில் முடிச்சறுந்து
திசைமுகம் முழுதும்
ஒருமுகமாய் உதிர
பரந்து எழுந்ததது.
என்னறிவைவிட
எண்ணொணாக்
கோடிமுறை
பெரிதான அறிவுவெளி.
உடல் கிழிந்து
திரைச் சேலைகளென
அகன்று உதிர்ந்தது.
உயிர் வெளியின்இக்
கணம் நிலைத்து முழங்கி
திசை எங்கும் பொழிந்தது.
வேறொரு வெளியில்
கீழே அலைந்தது கடல்.
அலை விளிம்பில்
கிடந்தது உதிர்ந்து
ஏதோ ஒரு உடல்.

பொழுதின் வசிய
வலை வெளிமீது
படர்ந்து எரிந்து
பொசுக்கி நீறாக்கி
காலத்தின் அச்சுச்
சாலைச் சரித்திரங்கள்
பாரம்பரியப்
பவித்திர ஞாபகங்கள்
யாவற்றின் மீதும்
பற்றி எரிந்தது
மூலிகைப் பேரொளி.
ஒளியின் நெடியில்
புண் கண்ணாயிற்று.
கண் கருணையின்
ஊற்றாயிற்று.
நேற்றற்று நாளையற்று
நிகழ்கால வினையாக
உயிர்த்தது 'உள்ளல்'
உனக்கும் எனக்கும்
இடையே நிமிர்ந்த
காலங்கள் தலைகவிழ
வாடாத புத்துணர்வின்
மொக்கு முளைத்தது.
காலா காலங்கள்
எத்தனை ஆனாலும்
ஓயாது உணர்வின் இப்
புத்தொளி நரம்பு
ஊடுருவும் பேருறவு.
இதயத்தின் அணுத்தொகுப்பில்
அண்டத்தின் பெருநிகழ்வு.
கணத்தின் மொக்கவிழ்ந்தால்
காலாதீதம்.
புவனத்தின் நிகழ்ச்சித்
திகிரிக்கு மலர்அச்சு.
பிறிதில் பிறனில்
தன்மயமாய் எழுந்து
அசைந்து அசையாது
வீசும் திகிரியின்
நிச்சலனப் புயல்மூச்சு,
எங்கும் உணர்வின்
நீங்காத பெருந்திசைகள்.
பளிங்கு நீர்வெளியில்
ஆநந்தத் தீக்குதிப்பு.
இதயத்தின் துடிப்பு அதில்
பொறிக்கூத்தாய் எழ, அந்த
அணுமயக் கணநடிப்பும்
அண்டத்தின் காலா
தீதமும் ஒன்றை
ஒன்று ஊடுருவி,
ஒரு பொறி எல்லையற்ற
ஒளியிருள் அற்றஒரு
பெருவெளி தோறும்
அணுமய உயிராய்
அதேகணம் உயிர்த்தது.
மொக்கு
அவிழ்ந்து அவிழ்ந்து
துடித்தது;

நிலைத்தது இக்கணம்.
கணத்தின் மொக்கவிழ்ந்தால்
காலாதீதம்.


குறுங்காவியம் :

கண்ணாடியுள்ளிருந்து

(தட்டச்சு - ரா ரா கு)

1.

யாரிது?
இதுதான் என் பிறப்பா
இது பிரதி,
எனது புதிய மறுமை
பிறப்பல்ல.
பிறப்பதற்கு
வாழும் கணமே
சாவாக வேண்டும் ,நாமோ
வெறுமே சாகிறோம்.

கண்ணாடி சமீபிக்கிறது
எனது எண்ணங்கள்
கதவைத் தட்டுகின்றன.
தட்டும் ஒலி எதிரொலித்து
எனது இரட்டையின்
காலடியில் சப்திக்கிறது.
ஒவ்வொரு
அடிச்சுவட்டுடனும்
என் இதயத்திலிருந்து
வீழும் ஒரு நக்ஷத்ரம்
எனது இருளுருவின்
விளிம்புவரை தானிந்த
உலகின் தொடுவானம்.

கண்ணிமைகள்
தொட்டுக்கொள்கின்றன.
கண்கள்
இமைகளின் ஆழத்துள்
எதையோ தேடி
தாமே தயாரித்த
தரிசனங்களைப்
பருகுகின்றன.

2.

நாம் ஒருவருள் ஒருவர்
ஊடுருவ முடியாதா?
ஊடுருவி நின்றாடி
எமது ரத்தத் துடிப்பின்
நடனத்தைப்
பருகமுடியாதா?
எதிர்பார்த்து எதிர்பார்த்து
மனம் வாய்புலம்புகிறது
எமது காலடிகள்
சமன் கோடுகளில் வளர்கின்றன.
பொறுமையிழந்து
எம்மிடையே நிகழும் வெளிமீது
மின்னல்களை வரைகிறேன்.
விடிவு வருகிறது
புறாக்களின் வெள்ளித் துடிப்பில்
எனது மலட்டுத்தனம்
தூக்கம் கலைகிறது.
அத்துடன் மரணமும்
இதயத்தின் உதிரத்தாலாட்டில்
மரணம்
புரண்டு படுக்கட்டும்.

கேள்,
குரல்கள்!
ஒளியின் திடீர் ஊளை,
இந்த வெற்றொளி
கண்காணா ஊற்றொன்றின்
ஊளைதான்.
ஒளியின் பேராழத்துள்
ஊற்று ஒளித்திருக்கிறது.
தனது நீர்ப்பெருக்கின்மீது
தானே மிதந்து
ஊற்று எதிரேறட்டும்.
தொடுவான் மீது
இவ் ஒளி உதரம் அழட்டும்.
அழுகை இறுகி
நக்ஷத்ர சக்திகளின்
சிற்றலைகளாகட்டும்,
அவை தமது அச்சுகளிலிருந்து
உலகங்களையும்
மண்துகள்களையும்
கக்கட்டும்...
அல்ல -
நீர்ப்படலத்தில் ஏறி மிதப்பது
ஊற்றாகாது
குமிழ்.

3.

சிகிக்சைக் கருவிபோல்
ஒரு கதிர்
என்னைத் துளைத்து
நுழைகிறது.
தனது நகத்தைக் கழற்றி
என்னுள் எங்கோ
எரிய விடுகிறது.
அவ்வுயின் மீதெனது
நடனங்கள் பிறக்கின்றன,
புலன்களின் மீது
கதவுகள் பூக்கின்றன.
பிறகு பிறந்து
நடக்கும் இரவு
இரவுடன் நடக்குமொரு
அந்தகாரத்தின் அளவின்மை
என்னுடன் பின்தங்கும்
அதன் ஒரு துளி -
இருண்ட நெருப்பு,
ஊமை நட்பு.
பகலூடே,
எனது இருப்பினூடே,
நடக்கும் நிழல்.
மதியக் கணத்தில்
என் இதயத்தை நெருடுமொரு
ஊமைத்தனம்.
என்னிலிருந்து எழும்
லிங்கமாய்த் துடித்து
இரவினுள் புதைய
இணங்குகிறான்.
இரவினுள்,
காலம் காலமாய்
கொள்ளை
போய்க்கொண்டிருக்கும்
வைரங்கள் போல்,
போகாத நக்ஷத்ரங்கள்
வெறுமை மீது
ஒன்றையொன்று
 உற்றுநோக்கும்
இரண்டும் கண்ணாடிகளினுள்
வெளியினுள் வெளி.
.எங்கும்
கோடானுகோடி
பிரதிபிம்பங்கள்.
கர்ப்பக் கிரகத்து
வௌவால்களாய்த் தவிக்கும்
நிழல்கள்.
போக வழியற்று
சுற்றிக் குவியும்
இருள் குழுவினுள்
சூர்ய ஊற்று
நிழலாய் உறைகிறது.
கதிர்களின்
காக்கை அலகுகள்,
இருண்ட அலறல்கள்.
இருள் நெருங்கி
வைரப் புன்னகைகளில்
வர்ணவில் சமிக்ஞையிட்டு
அழைத்ததும்
எனது நிழல்
நிமிர்ந்து
இரவினுள் புதைகிறது.
எங்கும்
உருவெளித் தோற்றங்கள்,
இரவினுள் புதைந்து
முடங்கிக்கிடக்கும் நிழல்கள்
ஒன்றையொன்று கண்டு நிற்கும்
கண்ணாடிகளினுள்
புதைந்து
தனது பிரதிகளின் கானகத்துள்
தன்னை மறக்கிறது
எங்கும் வியாபித்த
ஒற்றை யுரு.

4.

பிரதி பிம்பத்துக்கு
முதுகு இருக்குமா?
கண்ணாடியின் மர்மப்படலம்
கண்ணுக்குத் தெரியாது.
அதன் வித்தை ஒரு
போலிவெளி
பகலைக் கவ்வும் ஒரு
நிழல் நோய்.
என் இருப்பைக் கவ்வும் ஒரு
மூளை.
கதிரின் மீது
நரம்பு வலை,
ஆனால்
தனித்த சுடருக்கு
நிழலில்லை.
சுடரைச் சூழ்ந்து
இரவாய் விரிகிறது என்
தசையின் நிழல்,
இரவினுள்
ஒரு சுடர்,
இதயத்துடிப்பு,
வெளியில் ஒளிப்
பிளவு,
மிருதுச் சுவடு.
முரசொலி கேட்கிறது,
மத்தளங்கள் நடனம்.
சொர்க்கத்துள் நுழைகிறது
மயானச் சாம்பல்.
பரிதியைத் தீண்டும் ஒரு
பனி விரல்.
இவ்வொளி யோனியை
தடவி விரித்தது எவர்கை?
எவ்வகைப் பிரியம்?
இதயத்தின் மத்தளத்தில்
அதிர்வு
மௌனம்
உயிர்ப்பு
மரணம் :
இக்கணம்
இக்கணம்.
யாவற்றினுடனும்
எனது உடன்பிறப்பு,
என்னுடன் யாவும்
யானெனும் கோஷம்.
யுகாந்திரங்களாயினும்
நிலைத்திருப்பது ஒரு கணம்.
இக்கணம்.
மறுகணம்
மீண்டும் எதிரேறும்
எதிர்காலம்
ஒளியைப் பிரதியெடுக்க
மனசை விரித்தேன்
மனசானேன்.
இருள்.
இதயத்தை மூடும்
மனசின் சவப்பாறை.
மலரின் மீது ஓர்
ஊமை வியாதி.
ரத்தச் சக்தியுள்
புதையும் ஒளித் தாவரங்கள்,
ஓளி குவிந்து
வெறும் புழுதி
மணல்.
கண்ணாடிப் பாலைமீது
நடுக்கம் பிறக்கிறது,
புழுதியுடல் பெற்றது காற்று.
எரிந்து கோஷிக்கும்
மணற் சுவாலைகள்
என்னைச் சூழுமொரு
அசைவுச் சுவர்.
பிறகு
ஒவ்வொரு மணல்மீதும்
எனது தசை நிழலின் படிவு,
பாரம்
இறங்குதல்
மண்டுதல்.
உதரக் கண்ணாடி
என்னை அழைக்கிறது.
முகத்தில் முளைத்த
முலைகளாய் மயக்கும் என்
பிரதிகளின் கண்கள்,
என் மீதழுந்தும்
பார்வைக் குவடுகள்.

உதரக் கண்ணாடி
என்னை அழைக்கிறது,
மூடிய கதவின்
சாவித் துவாரத்தில்
வாழ்க்கையின் நடிப்பு
புல்நுனி மீதுறையும்
பனித்துளியில்
ஒரு மலையின் பிரதிபிம்பம்.
மீண்டும்
நான் கண்ணாடியுள் பிறக்கிறேன்
ஆனால், கண்ணாடியுள் நிற்பவன்
நிழலுக்கும் பதிதன்
கண்ணாடி
ஊடற்ற ஒரு
போலி வெளி
வெற்றுத் தளம்
நிர்பரிமாணம்

5.

தசைச் சுவர்வீசும் இப்
புவன நிழல் வெளியில்
சுடர்கள் ஆடுகின்றன.
ஒவ்வொரு சுடரும்
பெண்குறி விரிப்பு
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி
காற்றில் ஏறும்
மயானச் சாம்பலாய்
எனது லிங்கம்
மீண்டும் எழுகிறது
பனிவிரலாய் நிற்கிறது
உடனெழுந்து நிற்கும்
கேள்விகள்.
இச்சுடர்களின் பொருள்?
பார்வை?
இவற்றில் துடிப்பது
இக்கணம்.
பயத்தில் உறைகிறேன்.
விரிந்து மூடி
துடிக்கும் கதவு.
பார்த்துப் பழகச்
சமீபித்தால் கண்ணாடி.
இக்கணம் இக்கணம்
எனது கண்கள்
குகைகளாகின்றன.
என்னை என் கபாலம்
எதிர்கொண்டழைக்கிறது.
வெளியெங்கும் சுடரா?
நிழலெங்கே?
உள்ளே.
புற வுலகெங்கும்
ஒளிப் புழுதி,
புழுதிச் சுவர்.
திரும்பி நடக்கிறேன்.
திரும்ப திரும்ப
வளைய வருகிறேன்,
எரியும் மணல்மீது
சேற்றுச் சுவடுகள்.
சுடர்களோ என்னோடு
இதயத்துள் ஒடுங்குகின்றன.
ஆனால் இங்கே,
பாலைமீ தெங்கும்
திசையின்மையுள்
திசை தவறி ஓடும்
சுவடுகள்.
கண்ணாடி
வெறிச்சிட்டு நிற்கிறது.

 *
 Doubling Up - a small poem published in QUEST.  Then expanded by Pramil to கண்ணாடியுள்ளிருந்து  - அஃக் -1973.

பிரமிளின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் கண்ணாடியுள்ளிருந்து.
கண்ணாடியுள்ளிருந்து (1973) என்பது 5 பகுதிகளாய் இருக்கும் நெடுங்கவிதை.
(எதிரெதிரில் இருந்து, எண்ணற்ற பிரதிகளை ஒன்றுக்குள் ஒன்றாய் உருவாக்கும் சலூன் கண்ணாடிகளை மனதிலிருத்திக்கொள்ளவும்)

விமலாதித்த மாமல்லன் @maamallan
27th April 2014 from TwitLonger





உள் முரண்

அலைகளின் சொல்தொடர்கள்
செவிட்டு மண்கரையில்
காற்றின் யாத்ரையை
கண் தொடர்ந்தால்
விழிப்பின் நடையை
தடுக்கி விழுத்தும்
மண்துகள்
தீயின் தௌiவினுள்
இமைவிழும் சாம்பல்.


பார்வை 
பதிவிட்டவர்;  குவளைக் கண்ணன்
நன்றி;http://www.kalachuvadu.com/issue-92/page34.asp

நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்.
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து.
கவியானான்.
வெயிலை வழியவிட்டான்
வெளிக் கடவுள்.
இரவு பகலுக்கு
எதிரிடை யாச்சு.
மனிதன்
இருமையை விசாரித்தான்.
போகப் போக
வியப்பும் விசாரமும்
தளரத் தளர
மீந்தது கண்வெளி
உலகு ஒன்றே.
இன்று
சூர்ய சந்திரச்
சிற்றணு ஒதுக்கி
புவனப் படர்ப்பை
கால வெளியைக்
கணித நோக்கால்
கடந்து
நட்சத்திர மண்டல
காலக்ஸிக் குவியல்
குவாஸர் சிதைவைக்
கண்டான்.
கொஞ்சம் வியப்பு
ஒருகண விசாரம்
மறுகணம் மனிதன்
கண்டதைப் பிடித்து
ஆராய்ந்தான்.
கண்டதைக் கண்டது
கண்ணீர் விட்டது.
********************************


எரிகல்

வெளிவானம் எரிகல்லில்
கிழிபட்டுத் தெரிகிறது
வானக் கடல் முத்து
விழுகிறது இருட்கரியின்
வயிரம் உதிர்கிறத..
இயற்கை தன் இருளைமொழி
பெயர்த்துஉதிர்த்த கவி..
உதரக் குடல்நாடி
உதிரும் சிறு குழவி
 
வழி

வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்டன -


வானம்
எல்லையில்லாதது.

அறைகூவல்

இதுபுவியை நிலாவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.

நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது.

சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்

நீ ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல் நீறாகு!




பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல். என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
*
(1973)

ஸ்கூட்டரில் வந்த தோழர்
கால்நடைக்காரன் என்னை,
குறி, பார்த்து வந்தது
அவரது ஸ்கூட்டர்.
தோழர் அவர் எனக்கல்ல. எனவே
நின்றபடி ஓடும்
எஞ்ஜினுடன் ஓடவிட்டார்
இயங்கு இயல் வாதத்தை-
’நீ பூர்ஷ்வா
உன் அப்பன் பூர்ஷ்வா
உன் பாட்டன் முப்பாட்டன்
உன் பரம்பரை
பூராவும் பூர்ஷ்வா
பூ ஊ ஊ ஊர்ஷ் வாஹ்!’ என்றார்.
’நீ?’ என்றேன்.
’நானா?’ என்று
பிரேக்கை ரிலீஸ் பண்ணி
‘நான் ஒரு லெப்ட்…’ என்று

பள்ளத்தே பாய்ந்த
முன்சில்லைத் தூக்கி
‘டிஸ்ட்’ என்று எம்பினார்.
‘டூ’…என்றார் ‘டா’ என்றார்.
பறந்தார் ஸ்கூட்டரில்.
பள்ளம் பார்த்துப் பாதை பிடித்து
நடந்தேன் நான்.

*
(1986)



வலை

மாலைக் கதிர் வாள் வெட்டு
பரிதிப் புறாத் துடிப்பு
நெஞ்சின் பால் வெளiயில்
பாலைத் தகட்டுப்
படபடப்பு.
நடை தளர்ந்தது.
இது எல்லை?
ஊத்ந்த தொடர்ந்த நிழலின்
விரல் விளiம்பு.
எதிரே
நில விரிப்பு - வாழ்வு
வலை விரிப்பா? - வாழ்வா?
திரும்பிப் பார்த்தேன்.
தசைத்திரள் உருகி வழிந்து
தார் பாறையாக நீண்டு
வான் கடல் படுகைத்
தொடுவான் வரை கிடந்த
நிழலின் இழிப்பு.
கால் விரல் கண்ணியில்
நான்.


கேள்விகள்


தாய்ப்பரிதி ஆகர்ஷண
முலையுரிஞ்சும் பூமிக்கு
வானெல்லாம் தொட்டிலோ?

சந்திரனில் வழிகின்ற
விந்தின்னும் கருவுற்றுத்
திரளாத காரணமென்?

தீ முளைத்துக் காற்று எனும்
பூமியிலே வேரைவிட்டால்
பூக்கிறது எத்திசையில்?

தெரியாது?

அறிவின் குரலடைத்த
கவிதைக் கவளத்தைக்
கக்கி எறிந்துவிடு.
ஞானத்துப் பயணத்தில்
இடறும் கற்பனையின்கல்
எட்டி உதைத்துப் போ.

மூளை மலர்த்தடத்தில்
ஏதோ நாற்றமிது
மூக்கைப் பொத்தி நட.

அப்பால்....

பதிலின் இழையற்ற
கேள்வித் திரையகலும்...
பாதை எதிர் செல்லும்..




E=mc2
    Posted by Riyas Qurana

ஒற்றைக் குருட்டு
வெண்விழிப் பரிதி
திசையெங்கும் கதிர்க்கோல்கள்
நீட்டி
வரட்டு வெளியில் வழிதேடி
காலம் காலமாய்
எங்கோ போகிறது.
‘எங்கே?’
என்றார்கள் மாணவர்கள்.
ஒன்பது கோடியே
முப்பதுலெச்சம் மைல்
தூரத்தில்
எங்கோ
ஒரு உலகத்துளியின்
இமாலயப் பிதுக்கத்தில்
இருந்து குரல்கொடுத்து,
நைவேத்தியத்தை
குருக்கள் திருடித் தின்றதினால்
கூடாய் இளைத்துவிட்ட
நெஞ்சைத் தொட்டு
‘இங்கே’ என்றான் சிவன்.
‘அசடு’ என்று
மாணவர்கள் சிரித்தார்கள்.


ஒரு குழந்தை விரல்பயிற்ற
ஐன்ஸ்டீனின் பியானோ
வெளியாய்
எழுந்து விரிகிறது.
மேஜையில் அக்ஷர கணிதத்தின்
சங்கேத நதி!
மனித மனத்தின் மணற்கரையில்
தடுமாறும்
ஒரு பழைய பிரபஞ்ச விருக்ஷம்.
நதி பெருகி
காட்டாறு.
காலமும் வெளியும் ஒருமித்து
ஓடும் ஒற்றை நிழலாறு.
ஒரு புதிய பிரபஞ்சம்.
நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒருநாள் அவிந்த
நக்ஷத்ர கோளங்கள்
ஒளிவேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன -
காலமே வெளி!


இன்று கண்டது
நேற்றையது,
இன்றைக்கு நாளைக்கு.
இக்கணத்தின் கரையைத்
தீண்டாத
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்.


விரிந்து
விண்மீன்களிடையே
படர்ந்த நோக்கின்
சிறகு குவிகிறது.
பிரபஞ்சத்தின்
சிறகு குவிந்தால்
அணு.
அணுவைக் கோர்த்த
உள் அணு யாவும்
சக்தியின் சலனம்.
அணுக்கள் குவிந்த
ஜடப்பொருள் யாவும்
சக்தியின் சலனம்.
ஒளியின் கதியை
ஒளியின் கதியால்
பெருக்கிய வேகம்
ஜடத்தைப் புணர்ந்தால்
ஜடமே சக்தி!
மெக்ஸிக்கோவில்
பாலைவெளிச் சாதனை!
1945
ஹிரோஷிமா நாகசாகி.
ஜடமே சக்தி.
கண்ணற்ற
சூர்யப் போலிகள்.
கெக்கலித்து
தொடுவான்வரை சிதறும்
கணநேர நிழல்கள்.
பசித்து
செத்துக் கொண்டிருக்கும்
சிவனின்
கபாலத்துக்
கெக்கலிப்பு.


இசைவெளியின் சிறகுமடிந்து
கருவி ஜடமாகிறது.


பியானோவின் ஸ்ருதிமண்டலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது.
உலகின் முரட்டு இருளில்
எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.
ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி.
ஒரு கணப் பார்வை.





மின்னல்

ககனப் பறவை
நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை

கடலுள் வழியும்
அமிர்தத் தாரை

கடவுள் ஊன்றும் 
செங்கோல்


பேச்சு

கேள், அழகு கதைக்கிறது
பச்சைச் சதையுதடு
ரத்தப் பளபளப்பு
கண்ணின் இமைக்கரங்கள்
மெல்ல அருகழைக்கும்
பார்வைச் செவிப்பறையில்
பருவம் முரசறையும்.

பூவின் இதழ்ச்சுவருள்
வண்டுக்குரல் ஒலிகள்
மோதி மடிகிறது
முத்தத்திரை மறைவில்
பேச்சுப் புதைகிறது
ஆனால், ரத்தம் கதைக்கிறது
மவுனம் அதிர்கிறது.


திரையும் படமும்

காலம் விரித்ததிரையா?
வாழ்வு ஓடும் படமா?
தீக்கண் திறந்தால்
தீக்குத் திரையா?

படம்?

திரைதப்பித் திசையுள்
எறியப்பட்டுவிடுமா?


- தரும சிவராமு

பிரமிள் (20.04.1939 - 06.01.1997)





தவம் - பிரமிள்

ஆதி மனிதர்கள் அவனை வானில் முளைத்த நெருப்பு என்று
கணந்தோறும் பயந்தார்கள். யுகங்கள் கழிய பயங்கள் வியப்
பாகின்றன. கிரேக்கர்கள் அவனை அப்போலா என்றழைக்கத்
துவங்கினர். அவனுக்கென கையில் யாழொன்றையும் கண்டனர்.
வைத்தியனாதலால் சூர்யவெளிச்சம் என்ற நாளாந்த அனுமானத்தை
வாழ்விற்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஒளியும் ஒளி
இழைகளின் இடுக்கில் வசிக்கும் இருளும் அவனது கலை. அவனது
கலையும் வைத்யமும் சங்கமிக்கும்போது அவன் பேருணர்வுகளின்
உதரமாகிறான்.

ஆகையால் நான் எழுதமுயற்சிக்கும் போது மட்டும் அவன்
குகையாகிறான். எனது சித்தாந்தங்கள் வேட்டை நாய்களாக
அவனைத் தேடுகின்றன. அவற்றின் குரல்கள் மனசின் கானக
மரங்களில் மோதி எதிரொலிகளாகச் சிதறுகின்றன. 'டேஃப்னே,
டேஃப்னே' என அப்போலா தான் காதலித்தவளைப் பின்
தொடரும் குரல் எனது சித்தாந்தங்களின் குரைப்பில் கேட்கிறது.
டேஃப்னேயை அவனால் தீண்ட முடியவில்லை. மரமாகிவிட்டாள்.
அவள் கன்னிமையின் நிழலில்  நான் நிற்கிறேன். அதன் இலைகளை
ஒடித்து அப்போலாவைப் போலவே சிரசில் அணிந்து
கொள்கிறேன். எழுத வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
உள்ளிருந்து ஒரு புதிய இயல்பு பிறக்கிறது. என் விரல்களை மடித்துக்
கைகளையும் கட்டிக்கொள்கிறேன். வேட்டை நாய்கள்
முயல்களையும் முள்ளம் பன்றிகளையும் தேடி ஓடட்டும். எனது
பிடரியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில்
வானை நிரப்புகிறது. மூச்சின் இறகுகள் நுரையீரலிறக்கைகளுள்
மடிகின்றன.

சூரியன் தன் உதரக்கோதுக்குள் ஆழ்ந்து கருவாகிறான், எல்லையற்று
ஒடுங்கிக் கொண்டிருக்கிறான்.

பிரியும்போது - பிரமிள்

அவள் நாடகபாணியில் தலையை நிமிர்த்திக் கொண்டாள்
எனக்கோ களைப்பு. மாலை இருளினுள் புரண்டது. ஏதோ,
சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிரியுமுன்
கைகளைப் பற்றிக் கொண்டோம். சில வேளை, ஒரு
பார்வையின் விபத்து பழைய நினைவுகளைத் தொட்டு
மறைந்திருக்கலாம். விரல் நுனிகளை நோக்கி நழுவிய கைகள்
திடீரென விழித்த பாழ் நிலங்களாயின. உடன் ரத்தமும்
இந்திரியத் துளியுமாய் மலர்கள் வீசின........



மௌனி 

முன் ஒருநாள் நீர் தேடி 
புத்தகப் பாலையின் முள் எழுத்தில்
வழிபிடித்து நடந்தான் அவன்.
தூரத்தே தத்தளித்த 
தரிசனத் திசை தவறி
முள்முள்ளாய்த் தைத்தன
தத்துவ நெருஞ்சிகள் .  

பின் ஒரு நாள் தோள்க்கழியில் 
தொங்கிய முன்பின் 
பதநீர் க் குடங்களிடை 
தாகம் தாகம் என தவித்து 
எதிரே தத்தளித்ததை
தொடர்ந்தான் அவன்.
கைக்கெட்டி எட்டாமல் 
அதே தொலை தூரத்தில் 
அவனுடன் நகர்ந்தன இருபுறக் குடங்கள் 

என்றோ ஒருநாள் ,
விஷமமாய் அல்லது அகஸ்மாத்தாய்
அவன் கைப்பேனவின் பூனை நகம்
நிலவை பிராண்டியது .
முள் கிழித்த முகத்தில்
பதநீர் இனிப்புடன்
உதிரம்கசிய
அவன் கண்டது என்ன?
அதிசயமாய் எதிரே ஒரு
வெண்தாள் வெளியில்
ஆழ ஓடியது இருள் .
அகாதமா ? ஓரளவுக்கு ஆமாம்

இருளின் எல்லையில் 
எதோ ஒன்றன் 
தொலைத் தூர தத்தளிப்பு .
அவன் மறைந்ததும் 
மறையாமல் அவனுக்காய் 
காத்திருக்கும் அது அவன் தேடிய நீரல்ல -
இடையறாத அவனது தாகம் 
தாகத்துக்குதவாத தாரகையின் பாதரசம் .
புகையற்று   தீயின் நிறமற்று
அழிவற்ற  சுடராய் 
எரியும் தவம்.      


வாக்கு - பிரமிள் 

சரி இது தவறது
என்று உணர்ந்துருகி
அறிவில் தெளிந்ததை
முறை பிசகற்று
வெளியிடும் தவம்
சுய வெளியீடல்ல.
சுயத்தின் எல்லைக்குள்
நில்லாத உயிருக்கு
அதுவே வேரும்
கிளையும் இலையும்
பிராணனும் பிராண
வெளியின் உயிரும்.
சுயத்தை மீறி
உலவும் வெளியில்
உள்ளல் உடன் பூண்டு
சொல்லாயிற்று.
உணர்வில் நான் நீ
இருமைஉருகி
அறிவில் ஒளிர்ந்து
கருவும் உருவும்
பிசகாது பிறந்து
பொருளாயிற்று.
சுயத்தின் சுமை
அற்ற பொருளே
பறக்கும் பரந்து
ஆழ்ந்து நிலைக்கும்.
இதனால் தான் போலும்,
“ சொல்ல வந்ததை
முறையற்று வெளியிட்டால்,
அர்த்தம் மட்டுமல்ல
உயிரும் ஒருவிததில்
சிதையும்” என்றான்
கிரிட்டனிடம் அன்று
பிளேட்டோ.
                                       (வே.மு.பொதியவெற்பனுக்கு)

சுவர்கள்

(Thanks to http://ariyavai.blogspot.in)
மனசின் இருண்ட அநுஷ்டானங்கள் என்னை வீடு திரும்ப
விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.
இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று
நகரச்சந்தையில் அலைகிறது
வீடு திரும்பும் வழி தெரியவில்லை.
அன்று
ஒரு மாட்டுக் கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது
பிறந்து கிடந்த சிசு மூன்று சக்ரவர்த்திகளை நோக்கித்
திறந்த பாலைவெளியினூடே ஒரு நக்ஷத்திரத்தின் அழுகையில்
அழைத்து வழி காட்டிற்று.
நான் சக்கரவர்த்தியுமல்லன்.
சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்த வெளியுமல்ல - பாலையாயினும்
வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாசமான பசியைப் போன்று
நிற்கக் கண்டவனாயினும்,
வீடு
ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.
இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.
கருவாகி

புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச்சுனையைக் காண.


இடம்

மீனுக்குத் தண்ணீர்
மிருகத்துக்கு
பிராண வாயு
மனிதாத்மாவுக்கோ
மனம் தான் வெளி.

லயம். ஏப்ரல் 1995.

“அற்புதம்” 

துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப் பாறைகள்
வரண்ட நதிபோல் கிடக்கும்
ஒரு துறைமுகத் தெரு
எங்கும்
இரும்பின் கோஷம்,
முரட்டு இயக்கம்
ஒரு தொழிலாளி
சூரியனை அவனது சிரசு மறைக்க
பனை உயர கிரேனின் உச்சியிலிருந்து
பீடிப் புகையோடு
காறித் துப்புகிறான்
அற்புதம்
விரல்கள் வில்நீத்த அம்பாய் நடுங்க
பரிதியின் விரித்த கையிலிருந்து
ஒரு மழைத்துளி பிறக்கிறாள்
முகத்தில்
வைரத்தின் தீவிரம் அவள்
மூளையில் ஒரு வானவில்
எச்சில் துளி
என் விழிப்பந்தில் வீழ்கிறது
அக்கணம், ஒரு கணம்
கிரேன்கள் லாரிகள் யாவும்
தொழிலற்றுச் சமைந்தன

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள் 
http://www.maamallan.com/2011/02/blog-post_3141.html
பொய்யின் கூன்முதுகில்
விட்டெறிந்த மண்ணுருண்டை
மோதிச் சிதறிற்று பட்டாபிஷேகம்.
மண் வளர்ந்து
கானகப் பாதையாயிற்று...
நகர் நீங்கி நெடுந்தொலைவில்
எதிரே,
முலைமொக்கு குத்தி நிற்க
கூனிக் கிடந்தது ஒரு கிழவிப் பாறை.
அகலிகையும் கூனியும்
ஆத்மா கலந்துறைந்து
கல்லாயினரோ?

என்றோ ஒரு நாள்
தனது விளையாட்டுச் சிறுபாதம்
அறியாது மிதிக்க –
அற்புதம்! –
ஒருகல்
துயில் கலைந்தெழுந்த்து!

பழைய கருணையை
பரிசோதித்துப்
பார்ப்போமென்று
இன்றிக்கல்லை
வேண்டுமென்றே இட்றி
நின்று
கவனித்தான்.

கல்லில் கலந்து நின்ற
கூனியின் பாபமோ
கந்தல் வரலாறு
கருணையின் பாதியை
நழுவவிட்ட காரணமோ
அற்புதம் நிகழவில்லை.
மிஞ்சியது
இடறிய கால் விரலில்
ஒரு துளி ரத்தம்.
கால் விரல் வலித்த்து
கருணை கலைந்தது.
’த்ச்’ என்றான்
மனிதன் ராமன்.

வழி நடந்தது
அவதாரம்.

*
(1976)



https://www.facebook.com/vairamuthu.mech?fref=nf


கோதம-இந்ரம்
__________________
சூரியனைத் தொழக் குவிந்தன
நாற்பத்தெண்ணாயிரம் ஜோடி
ரிஷிக் கரங்கள்.
நதியோரங்களில்
பாசி தகதகக்கும்
ஜல பிந்துக்களில்
ஆடை களைந்து நீராடும்
அகலிகைகளை
தேடி வருகின்றன
இன்னும் இன்னும் என
இந்ர தாபங்கள்.
ரே, இந்ர
அவர்களை முகர்ந்த உன்
தேவதா நாசியில் நிலவும்
நாற்றம் யாது?
உன் உலகை
ரிஷிக் கரங்களின்
சூர்ய வழிபாடு
ஊடுவுருகிறதே,
சதிபதிகளான கரங்கள்
ஒன்றை ஒன்று
புணர்ந்தன பார்!
உடனே அவை
கரங்களல்ல
சாபமுக்தனாகாத
உன் தசை வெளியில்
ஆயிரம்
பெண்குறிப் பிளவுகளாகி
மீன்வாடை அடிக்கும்
மாமிச மலர்கள்.
சொல், உன் உலகினுள்
ரிஷிக் கரங்களின்
சூர்ய வழிபாடு
ஏற்றி ஓடும் புரை எது?
இந்ர உவாச:
'மனிதர்கள் யாவரும்
கோதமர்கள்
பிள்ளைகுட்டிக்கார ரிஷிகள்.
அதே மனிதர்கள்
சந்தர்ப்பம் சமைந்தால்
இந்ரர்களும் கூட.
காலைக் குளிர்காற்றில்
தாடிகள் தத்தளிக்க
லோகசிக்ஷூவைக் கண்டதும்
இந்ரமோஹம் கூவி விடியாத
அசல் காலை இது என்று
கெக்கலித்துக் கும்பிட்டு
நீரேறிய கமண்டலங்களுடன்
கரையேறி
குடில்கள் நோக்கி
வேத மனனங்களை
அசைபோட்டு நடக்கின்றனர்.
நிசி வர
நிச்சலனத்தை
ஊடுருவும்
உன்மத்த விகற்பங்களில்
உடல் விழித்து
உணர்வுகளை
செயற்கை உபாதைகளாக்கும்
சம்சார விபரீதங்களை
தாமே நிகழ்த்தத் துணிகின்றனர்.
சாலையில் ஏறிய நீரில்
தத்தளிப்பு.
கமண்டலத்தினுள்
ஒருசிறு மீன்!
இந்ரன் நகைக்கிறான்.
ஆனால் ரே, இந்ர!
ஹே, கோதம!
மொக்குகளினுள்
மலர முயற்சிக்கும்
பேரதிர்வுகள்
காளையை
நடுநடுங்கவைக்கின்றன.
உங்களுள்
ஒருவர் மற்றவரை ஏய்க்க
மற்றவர் சபிக்கும் களேபரத்தில்
அதை அறியீர்.
சூர்யனைக் கேளுங்கள், புரியும்.
ப்ரஹ்ம முஹூர்த்தங்களுக்கு
துளைபோட்டு
ஓட்டுப் பார்த்து
பூமியை அகலிகையாக்கி
குடியைக் குதித்து
இறங்கிக்கொண்டேயிருக்கும்
முப்பத்து முக்கோடி குருட்டொளி
நிசிவேளைப் புழுக்களைக்
கேளாதீர், புரியாது!
சூர்ய உவாச:
யாரோ முரணற்று
யோகம் கொண்டு
ஒரே கணத்தில்
கோதமேந்ரனாகிறான்.
அவனிடத்துதித்த
இடையறாத பிரியத்தின்
தைல தாரை
வேரூன்றிட
யாரோ ஒரு அகலிகை
ஸ்தாவரமாகிறாள்
ஸ்தாவரங்களின்
புணர்ச்சிக் கருவிகள்
மீன்வடை அடிப்பதில்லை.
தசை அரிப்பின்
தன் முரணற்ற அவை
என்னைச் சிறை பிடிப்பவை
குழந்தைகளால்
இனிதென முகரப்படுபவை.
இதோ
மலரிதழ்களினுள்
புரட்சி!
ஆயிரம் அதிர்வெடி!
திசையெங்கும்
ஒரே ஒரு மலர்
பூக்கும் பேரொலி.
- பிரமிள்

புதிய கவிதை – சார்லஸ் ரைட்

அது சமுத்திரத்தின் பிரதிபிம்பமாய்ப் பிறக்காது
அதன் மரத்த கைகளில் மண் இருக்காது
அது சீதோஷ்ண நிலைகளின் பகுதியாயிராது

அது தன் பெயரை வெளியிடாது
அதிலிருந்து உறுதி தரும் கனவுகள் பிறக்காது
அது போட்டோவில் அழகாய் வராது

அது எங்கள் துக்கத்தை விசாரிக்காது
அது எங்கள் சந்ததிக்கு ஆறுதலளிக்காது
எங்களுக்கு உதவ அதற்குத் திறனிராது.

அருவுருவம்



தூரத்துச் செம்பாறை
சமீபத்திற்குக் களிமண்ணாயிற்று,
கால்பட்டு உள்வாங்கி
கடித்தது.
‘பாம்பு’ என்று பதறி ஒடி
ஆசுவாசும் ஆகி
காலைப் பரிசோதித்து
ரத்தம் கண்டு
கடிவாயின் மேல்
வேட்டிக் கரையால்
கட்டுப் போட்டு
உயிரைக் கையில் பிடித்தபடி
விஷத்தின் வேலையை
எதிர்பார்த்து ஏமாந்து
திரும்பி
தூரத்துச் செம்பாறை
சமீபத்துக்குக் களிமண்ணான
ஸ்தலுத்துக்கு வந்து
கால்பட்டு உள்வாங்கிய
பிலத்தில் எட்டிப்
பார்த்தால்
விளிம்புப் பற்களை
சிரித்துக் காட்டிற்று
களிமண்ணின் அடியில் ஒரு
செம்பாறை. (நன்றி http://sarwothaman.blogspot.in/)


Kutti Revathi
shared Kaala Subramaniam's post.
முதலில் பிரசுரமான கவிதை
--------------------------------------------


நான்
-------
ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!
வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடு(ம்) அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்ற நிற்பது என்
இல்!
யாரோ நான்?
ஓ! ஓ!-
யாரோநான் என்றதற்கு
குரல்மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!
..........,,,·
எழுத்து, ஜனவரி 1960.
----------

- பிரமிள்இறுதியில் பிரசுரமான கவிதை----------------------------------------------

நித்திரைக்குள்
--------------------
நித்திரைக்குள்
நின்ற நிலவில்
தஹித்தது தணல்.
நிலவோ,‘நான்
நெருப்பல்ல இங்கே
பளிச்சிடுவது
புழுதிக்கடல்’ என்று
பசப்பிற்று.
நித்திரைக்குள்
திரைத்த கடலில்
எரிமலைப் பிழம்பு.
கடலோ ‘நான்
கரிப்பேன் உப்பாய்
எரித்து அறியேன்.
இந்தப் பிழம்பு
நிலவின் வம்பளப்பு’ என்று
இளித்தது.
நித்திரைக்குள்
நித்திரை அமிழ்ந்து
பரி தீ பிறந்தது.
பசப்பல் இளிப்பு
இரண்டையும் கிழித்தது.
நிலவின் மீது
பிளந்து கிடந்த
கடலுக்குள்
எரிந்தது தீயின்
கள்.
............
(1996) லயம், ஜூலை 1998.

- பிரமிள்


Shanmugam Kalimuthu
6 hrs ·
கடலும் சுருங்கும்
நெருப்பும் தடுமாறும்
காற்றின் விரல்களும்
வெறும் வெளி வீணையில்
பேசாமல் மடங்கும்;
வானத்தில்
பரிதியே நின்று
கிணற்றுள் தன் பிம்பத்தை
பட்டம் விட்டாலும்
குடிதண்ணீர்
வாளி வீச்சில்
நடுங்காது நிற்குமா?
அலைக்காமல்தான்
அள்ள முடியுமா?
#பிரமிள் .

1Kutti Revathiவாழ்வுப் பாடல் - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ - பிரமிள்)

உலகு முழுவதையும்
உன் ஆசையின் மூலம்
உன்னுடையதாக்கிவிடு
உனது காதல்
உலகம் முழுதையும் தழுவட்டும்
எண்ணங்களின் வழியே
உலகத்துக்கு மனசைக் கொடு
உனது செயல்களில்
உலகம் நித்தியமடையட்டும்.

வெறும் தனிமனித ஆசைகள்
எத்தனை கிணற்று நீராலும்
தாகம் தணியாதவை
************
************
உனது எண்ணங்கள்
உயர்ந்த குறிக்கோள்களாகலாம்
ஆனால் முரண்பாட்டில் சிக்கி
அவை உன்னைத்
தளைப் படுத்தப் போகின்றன

உறுதிகொண்ட புஜங்கள் எய்த
அம்பாகப் பறந்து
உனது லட்சியம்
நிரந்தரத்துவத்தினுள்
ஆழப்புதையட்டும்
தூய்மையினால் தீவிரம் கொண்ட
மலையருவிபோல்
உன் மனம் விடுதலையை நாடட்டும்

முடிவற்ற துக்கத்தில் ஜனித்து
அன்பிலே விழிப்படைந்த குரல் இது.



முற்றுப் பெறவில்லை


ஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)

கனவில் மூழ்கிக் கிடக்கும் கடல்மீது
கிழக்கே உதிக்கிறான் சிவந்த சந்திரன்.
சப்தம் செய்யாமல் வரும் இரவினுள்
கரிய பனை ஒன்று பெருமூச்சு விடுகிறது.

தூரத்தே கூட்டுக்குத் திரும்பும்
ஒரு தனிப்பறவையின் குரல்
கதகதப்பு மறையாத கரையை
குளிர்ந்த சிற்றலைகள் வந்து தொடுகின்றன.

இதயத்தின் வேதனைபோல்
உன்மத்தம் கொண்ட ஆநந்த போதை.
என் தேவை எதையும் புரிந்து கொள்ளும் இதயம்.

ஆழ்ந்துறங்கும் நிழல்களிலிருந்து
புலம்பி எழுகிறது ஓர் இனிய பறவைக்குரல்.
ஒலியற்ற இரவின் காற்று கனன்று கனக்கிறது

ஆனால் என் இதயத்தில் வேதனைபோல்
உன்மத்தம் கொண்ட ஆநந்த போதை


1927 -31.

Kutti Revathi
Monday, ‎October ‎12, ‎2015Yesterday at 7:33pm · Chennai · Edited · 

மழுவும் கொழுவும் - எம் கோவிந்தன்
(மொ. பெ. : பிரமிள்)
மழுவுக்கும் கொழுவுக்கும்
மரத்தடி கைப்பிடி

கொழு, மண்ணை உழுது புரட்டும்
புல்லரித்துப் பூமியில் முளையெழும்
பயிர் வெளியில் புதுவிழா அலையெழும்.
கூடை நிறையும் பானைநிறையும்
வயிறு நிறையும்
தாயும் சேயும் வளரும்

மழுவும் மழு எடுத்தவனும்
தாய்க்கழுத்தைத் துண்டிப்பான்
துண்டித்தும் வெறி தீராது,
ஆயிரங்களைக் கொல்லுவான் -
ஒரு முறையல்ல இருமுறையல்ல
இருபத்தியொரு முறை.
குழந்தைகள் - கஹ்லீல் கிப்ரான்
_____________
Kaala Subramaniam shared Thuraiyur Saravanan's post.
2 hrs ·
Thuraiyur Saravanan
23 hrs · Edited ·

பின்பு தனது குழந்தையை மார்புடன் அணைத்தபடி நின்றிருந்த ஒரு பெண் "எங்களுக்கு குழந்தைகளைப் பற்றி சொல்லுங்கள்" என்றாள்.
அதற்கு, தீர்க்கதரிசி கூறினான் :
உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை,
வாழ்வு தன்னையே தான் அடையக்கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.
உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.
உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடைமைகளல்லர்.
அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம்,
உங்கள் எண்ணங்களை அல்ல. ஏனெனில்,
சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.
அவர்களது உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்.
உயிருக்கு அல்ல. ஏனெனில்,
உங்கள் கனவில் கூட நீங்கள் அடைய முடியாத எதிர்காலம் தான் அவர்களது உயிர் உறையும் வீடு.
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்காக கடின முயற்சி செய்யலாம், ஆனால் உங்களைப் போல் அவர்களையும் ஆக்கிவிடக்கூடாது. ஏனெனில்,
வாழ்வு பின்னடித்துச் செல்வதில்லை, நேற்றைய நாட்களில் சுணங்குவதுமில்லை.
உயிருள்ள அம்புகளாக உங்களிடமிருந்து எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.
வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத்துடன் தொலைதூரம் செல்லும்படி உங்களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.
வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆநந்திக்கட்டும். ஏனெனில்,
பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.
- கஹ்லீல் கிப்ரான்
(தமிழில் பிரமிள்)
படிமம் 1981
ஆடும் பாம்பு - சார்லஸ் போதலேர்
தமிழில்: பிரமிள்
"சூரியன் தகித்த நிறம்" தொகுப்பு

தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம்.

(சார்லஸ் போதலேரின் கவிதைகள், சிக்கலான உணர்வுச்சேர்க்கைகளும், சொற்கோர்வைகளும் கொண்டவை. பிரமிள், அவற்றைத் தமிழ்ப்படுத்தியிருக்கும் பாங்கும் நளினமும், அவற்றின் போதம் தொனிப்பவை.)
ஆடும் பாம்பு

* கட்டுக்கடங்காத கண்மணியே, உன் வடிவுடலில் என் பார்வையின் ஆர்வத்தைத் தூண்டும் உன் பீதாம்பரத்தோல். கசப்புகள் கமழ மணந்து அலையும் உன் கூந்தலின் ஆழங்காணாத சமுத்ரத்தில் மண் வண்ணமும் நீலமுமாய் மாறிமாறி எழும் அலைகள் மேல் வைகறைக் காற்றெழ விழித்தெழுந்த கப்பலாய் ஒரு தூரத்து ஸ்வர்க்கம் நோக்கி பாய்விரித்தேகும் கனவுதோய்ந்த என்னுயிர்.

* உன் கண்கள் கசப்போ இனிப்போ தோன்றாத இரண்டு குளிரேறிய இரத்தங்கள்; அவற்றுள் பொன் உருகி உருகிய எஃகுடன் கலக்கிறது.

* அழகு ததும்பும் அலட்சியங்களோடு கவிதையின் தாளகதியில் செல்லும் நின் நடை! இது பற்றி ஒன்று சொல்லலாமா? கொம்பு நுனி ஒன்றில் நின்றாடும் பாம்பு நீ!

* உன் இளம் சலிப்பின் பளுவில் குழந்தைமை ததும்பும் உன் தலை குட்டியானைத் தலையாய் மெல்லென ஆட, உன்னுடல் கடைந்தெடுத்து நீண்டு கடலின் உவர்நீரில் துடுப்புகள் புதைத்து நழுவும் கப்பலாய் இருபுறம் சரிந்து சரிந்தாடுகிறது
.
* கர்ஜித்துப் பனிப்பாறைகளாய் நகரும் நதிகள் நீர்வீங்கிய ஓடைகளாய் உமிழ்நீர் ஊறி, உன் பற்களில் விளிம்பு கட்டும்போது, கூர்மை கொண்டு எனை மீறும் நாடோடித் திராட்சை மது ஒன்றை, என் இதயத்தில் நட்சத்திரங்களைக் தெளிக்கும் ஒரு திராவகவெளியை ருசிக்கிறேன்.

‘பேட்டர்ஸன்’ (காவியம்)

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்
(1983-1963)

.
Your interest is in the bloody loam
But what I'am after
Is the finished product.

'PATERSON'
by WILLIAM CARLOS WILLIAMS



உனது அக்கறை 
விளைநிலத்தின் சேற்றில்தான்
எனக்குத் தேவை 
விளைச்சல்.


ஆங்கிலக் கவிதை
டி.ஜே. என்ரைட்

உதயமாகிவரும் அரசியல்வாதிக்கு

முட்டைகளை உடைக்காமல்
ஆம்லெட் பண்ண முடியாது
என்று தகவல் தருகிறாய்.
யதார்த்தமான வாதம் - உண்மையும் கூட.
ஆனால்,
எத்தனை முட்டைகள் உடைக்கப்பட்டுள்ளன?
ஏன் இந்தப் பரபரப்பு?
ஆம்லெட்டுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருப்போர் யார்?
ஆம்லெட்டின் ருசிதான் என்ன?
சமைப்பதை விட
முட்டைகளை உடைப்பதில்
உனக்கு ஏன் இவ்வளவு ருசி?
அடித்து உடைக்கப்பட்டுக்கிடக்கின்றனவே 
அவை, தரையில்
என்ன செய்து கொண்டிருக்கின்றன?
இந்த அழகுகெட்ட பெட்டைக் கோழிகளுக்கு
நீ ஒருவனே சேவலாகிய சங்கதி
எப்படி நடந்தது?
உனது நிலையிலுள்ள 
ஐயா அவர்களுக்கு
இறக்குமதி செய்யப்பட்ட
பழமொழிகளின் உபயோகம் இதுதான்:
உள்ளூர்க் குரல்களை மூச்சடைக்க வைக்கலாம்.

D.J.ENRIGHT
'ENCOUNTER', JULY, 1970
இணை மொழிபெயர்ப்பாளர்:
டேவிட் சந்திரசேகர்.



பிரெஞ்சுக்கவிதை:
மாக்ஸ் ஜேகப்
ரவீநன் தெரு

“ஒரே நதியெனினும் இரண்டாவது தடவை அதில்
நீராடும் போது
அதே நதியல்ல”
          என்றான்
          தத்துவவாதி ஹெராக்ளிட்டஸ்.

இருந்தும் அதே மனிதர்கள் மகிழ்ந்து, விசனித்து
அதே வேளைகளில் அதே மனிதர்கள்.

ரவீநன் தெருவில் நடமாடும் மனிதர்களே,
உங்களுக்கு
மரணமடைந்த சரித்திர நாயகர்களின்
பெயர்களைச் சூட்டி இருக்கிறேன்:

          இதோ வருகிறான்
          ஏகெம்னன்,
          அதோ மேடம் ஹன்ஸா,
          யூலிஸஸ் ஒரு பால்காரன்,
          தெருக்கோடியில் பெட்ரோக்கிள்ஸ்,
          அருகில் ஒரு எகிப்திய ஃபேரோ,
          கேஸ்டரும் பொல்லக்ஸும்
          ஆறாவது மாடியிலுள்ள பெண்மணிகள்.

ஏ தோட்டிக் கிழவா! மாயாஜாலங்கள் நிலவும்
காலைவேளைகளிலே
எனது நல்ல நெய் விளக்கை நான்
அணைக்கும் போது,
இன்னும் ஜீவனுடன் மின்னும்
குப்பை கூளத்தை அகற்றவரும்
அறிமுகமற்ற மர்மமான தோட்டியே!
புகழ்மிக்க ஒரு மகத்தான பெயர் கொண்டு
உன்னை அழைக்கிறேன்:
டாஸ்டாயவ்ஸ்கீ!

தமிழாக்கம்: பிரமிள்.

La Rue Ravignan - Max Jacob

"Y ou can't bathe in the same river twice," said the
philosopher Heraclitus. But here it's always the same
ones climbing the street! Happy or sad, they go by at
the same times. I've named all of you who walk the rue 
Ravignan for famous dead people. Here's Agamemnon.
There's Mme. HanskaUlysses is the milkman!
Patroclus lives down the street and a Pharoah is next
door. Castor and Pollux are the ladies on the fifth
floor. But you, old ragman, who come to take the still
unspoiled scraps in the magic morning when I'm turning
off my good big lamp, you that I don't know, mysterious,
poor ragpicker, I've given you a celebrated
name: I call you Dostoevsky!

Le cornet à dés

-37-

Questia, a part of Gale, Cengage Learning. www.questia.com

Publication Information: Book Title: The Selected Poems of Max Jacob. Contributors: Max Jacob - author, William Kulik - editor, William Kulik - transltr. 
Publisher: Oberlin College Press. Place of Publication: Oberlin, OH. Publication Year: 1999. Page Number: 37.

பிரமிள் கவிதைகள் - 4 (http://mounampesummozhi.blogspot.in/2012/02/blog-post_10.html)

நீ - நான்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம் உன் கோஷம்
அதுவும் வேண்டாம் ஆளைவிடு
என்ற கூச்சல் என் கூச்சல்.

(1986)
மீறல், அக். 1993.


தவளைக் கவிதை

தனக்கு புத்தி
நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்

தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.

‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -

         ’நூறு புத்தரே!
         கோர்த்தரே!
         ஆயிரம் புத்தரே!
         மல்லாத்தரே!
         கல்லேத்தரே!
         ஒரு புத்தரே!
         தத்தரே!
         பித்தரே!

http://www.maamallan.com/2011/04/blog-post_20.html

இண்டியன் ரைட்டர் பேட்டி

‘இந்தியாவுக்கு இன்று
எது தேவை?
ஹிந்து மதத்தின்
ஜாதீயக் கட்டமைப்பா?
ஜாதீயத்தை உதறி
மனிதாயத்தை உயர்த்தும்
அரசியல் சாசன
மதச்சார்பின்மைப்
பிரக்ஞையின் வளர்ச்சியா?
அதுவும் க்ஷீணித்து
உப்புச் சப்பற்ற
லெளகீகம் ஆகிவிடும்
ஆத்மீக ஆபத்தா?
மனசின் மர்மத்தை
ஆராயும் புத்தரின்
பேராழம் போன்று
ஒரு புது அகமுக
விஞ்ஞான நோக்கமா?
எது?’ இதைக்கேட்டு
அக்கமும் பக்கமும்
பார்த்துவிட்டு
நடுங்கும் குரலில்
பதிலைச் சொன்னார்
இண்டியன் ரைட்டர்:
’எனது தத்துவம்
என்ன என்கிறீர்கள்
குதிரை கனைக்கிறது
கொசு ஙொய் என்கிறது
மோட்டெருமை போடுகிறது
முக்காரம் இதில்
சத்தம் எது
புத்தம் எது என்று
மண்டையைக் குழப்பாமல்
ஒவ்வொன்றாய் டேப் பண்ணி
ஒழுங்காய் விற்றால் நல்ல
யாவாரம்!’

- பிரமிள்

*
(1986)
மீறல், அக்டோபர் 1993.

http://www.maamallan.com/2011/03/blog-post_23.html


முடிச்சுகள்

கீழே நிலவு
நீரலையில் -
சிதறும் சித்தம்
சேரக் குவிகிறது
மேலே நிலவு.

' மலைமேல் நிலா ஏறி
மழலைக்குப் பூக்கொண்டு
நில்லாமல் ஓடிவரும்
குடிசைக்குள் சிதறும்
கூரைப் பொத்தல் வழி
மல்லிகை ஒளி.
மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று ஆகி
அது என்ன உளிச்சத்தம்?
கல்லை செதுக்கிச் செதுக்கி
கடவுளைப் பிடிக்கிறது
மண்.

ஜாதியம்தான் வாய் ஓதும்
நாளாந்த வேதம்
அப்பப்போ வாய்
கொப்பளித்துச் சாக்கடையில்
துப்பும் எச்சல்
வேதாந்த வாயலம்பல்.


சாக்கடைக்கும் சமுத்திரத்துக்கும்
சேர்ந்தாற்போல் சாந்நித்யம்
நிலவொளியில்

முடியாது மணலைக்
கயிறாய் திரிக்க
காலத்தைக் திரித்து
நேற்று நாளை
இரண்டுக்கும் நடுவே
இன்று முடிந்திருக்கிறது
முடிச்சின் சிடுக்கு - நான்.

அத்துவிதம் கணந்தோறும் நான்
செத்த விதம்

சொல்வேன் உண்டென்று
சொல்லில் இல்லாதது

சொல்வேன் உண்டென்று சொல்லில்,
இல்லாதது

சொல்வேன் உண்டென்று
சொல், இல்
இல்லாத
அது.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=702

http://rozavasanth.blogspot.in/2006/05/3.html


Kaala Subramaniam shared Thuraiyur Saravanan's post.
Thursday, ‎September ‎3, ‎2015 ---- 16 hrs · 

Thuraiyur Saravanan
'அனுபவத்தின் விபரங்கள் பல, தீவிரநிலையில் இறுக்கம்பெற்று, அதன் விளைவாக ஒரு வேகத்தை அடைகிறது. இந்த நிலைமையில் பொருளாழம் வேறு, ஜீவன் வேறு என்ற பாகுபாட்டுக்குக் கவிதையில் இடமில்லை. சொல்லப்படுகிற பொருள் லகுவில் "புரிகிறதா, அல்லவா" என்ற பிரச்னைக்கும் இடமில்லை. அந்தப் பொருளை ஏந்திவரும் வேகம் இயல்பானதா, முதிர்ந்த்ததா என்பதுதான் பிரச்னை... இந்த வேகம் அறிவு முதிர்ச்சிக்குத் திருப்திதராத பொருள்களைக் கையாள்வதால் பிறக்க முடியாதது. இந்த ஸ்திதியில் பொருள் வேறு, வேகம் வேறு என்று சொல்வதற்கில்லை. புரிந்துகொள்வதற்கு ஒன்றுமே இல்லாத கவிதைகளில் வேகம் என்ற ஜீவன் சூன்யமாக இருப்பது இந்த அடிப்படையில்தான்.'

- பிரமிள் ('வானம்பாடி' அக்-1979, பேட்டியில்...)

இருந்தாலும், இம்மேற்கோள் கால சுப்ரமணியத்தின் (ph,D.) ஆய்வேட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அள்ளல் - 2

Friday, Ma


என்று

"உங்கள் இலக்கிய எழவெடுப்பு
எப்படி இருக்கு?" என்று
கவிஞரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
"எப்படி எழுதிப்பேர்த்தும்
வரவில்லை வரவில்லை
வரவே இல்லை
என் கவிதையில் கவிதை.
எனவே வருவது வரட்டும் என்று
நடத்திக் கொண்டிருக்கிறேன்
கவிதைக்கு என்று
ஒரு சிறு பத்திரிகை"

"உங்கள் விமர்சனக்கழுத்தறுப்பு
எப்படிப் போகுது?" என்று
விமர்சகரைக் கேட்டேன்.
"எப்படி எழுதிப் பார்த்தும்
வரவில்லை வரவில்லை
வரவே இல்லை
என் விமர்சனத்தில் விமர்சனம்.
எனவே வருவது வரட்டும் என்று
எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஸ்ட்ரக்சுரலிஸத்துக்கு
விளக்கம்"


பிரசுரம்

விலை ரூபாய் 30.
வெளிநாட்டுக்கார
முகமூடி எழுதியது.
உள்நாட்டில் தலை
இல்லாமல் அலையும்
முண்டத்தின் மொழிபெயர்ப்பு.
நூலின் பெயர்:
"இருப்பின் அமைப்பு முதல்
தலையின் இன்மை வரை"


இண்டியன் ரைட்டர் பேட்டி

"இந்தியாவுக்கு இன்று
எது தேவை?
ஹிந்து மதத்தின்
ஜாதீயக் கட்டமைப்பா?
ஜாதியத்தை உதறி
மனிதாயத்தை உயர்த்தும்
அரசியல் சாசன
மதச்சர்பின்மைப்
பிரக்ஞையின் வளர்ச்சியா?
அதுவும் க்ஷீணித்து
உப்புச் சப்பற்ற
லௌகீகம் ஆகிவிடும்
ஆத்மீக ஆபத்தா?
மனசின் மர்மத்தை
ஆராயும் புத்தரின்
பேராழம் போன்று
ஒரு புதுமுக அகமுக
விஞ்ஞான நோக்கா?
எது?" இதைக் கேட்டு
அக்கமும் பக்கமும்
பார்த்து விட்டு
நடுங்கும் குரலில்
பதிலைச் சொன்னார்
இண்டியன் ரைட்டர்:

"எனது தத்துவம்
என்ன என்கிறீர்கள்?
குதிரை கனைக்கிறது
கொசு ங்ய் என்கிறது
மோட்டெருமை போடுகிறது
முக்காரம் இதில்
சத்தம் எது
புத்தம் எது என்று
மண்டையைக் குழப்பாமல்
ஒவ்வொன்றாய் டேப் பண்ணி
ஒழுங்காய் விற்றால் நல்ல
யாவாரம்!"


வைரவர்

இடம் போவதா இந்த நாய்க்கு வலம் போவதா என்று
சகுனம் பார்த்த சில பழைய சாமிகளின்
கெண்டைக் கால்களை கிழித்தது நாய்.
கண்டார் இதனை ஒரு புதிய ஆசாமியார்.
நமக்கேற்ற நாயென்று தமது முன்றலில்
நாயைக் கட்டிப்போட மந்திர தந்திர
வசிய முறைகளைப் பிரயோகிக்கலானார்.
"சுபமங்கொழகொழா" உச்சாடனம் எடுத்தார்.
"பாய்ந்து அதன் பேட்டைத் தொட்டிலே
விழுவிழு" என்றார். நாய் அசையவில்லை.
"ஹிந்து வாராந்தரிக்கு ஆள் புடிப்பவன் நான்
எழுதெழுது" என்றார். உசும்பலை நாய்.
லைட்ரீடிங் லெவலைவிட்டுக் கிளம்பாத இந்த
சைட்பிஸினஸ் பத்திரிகை சண்டே இதழெல்லாம்
நாய்ப்பல்லுக்குதவாத வரட்டு வெள்ளெழும்புத்
துண்டே என அறியா மண்டை அவருக்கு.
எதுகைமோனையிலே நாயைப் புகழ்ந்து
எடுத்துக்கட்டி முடித்தார் ஒரு வெண்பா.
ருசிபார்த்துக் கறி தின்னும் நாய்க்குதவாத
வரட்டு வைக்கோல் கட்டு அது.
மசியாதோ இந்த நாய் ஆசுகவிக்குக்
கூட என்று ஆசாமிப் பெருமகனார்
யோசித்துப் பின்பு பொறுமை கடைப்பிடித்து
தமிழை விடுத்து இங்க்லீஷுக்குள் இறங்கி
"விளடீமர் நபக்கவுக்கு ஆங்கிலம் தெரியாது" என்றார்.
"அப்டைக் சுமார்" என்று சொடுக்கு விட்டார்.
"எப்பேர்ப்பட்ட கிரிட்டிக் நான் நாயே
உனக்கு நானே எஜமான், கமான்" என்றார்.

தெருப்புழுதியிலே அசுவராஸ்யமாய்
அரைத்தூக்கத்தில் கிடந்த நாய் சிலிர்த்து
எழுந்து உறுமியது. உடனே ஆ சாமியார்
வேட்டியை உதறித் தூக்கிமடித்துக்கட்டி
அகலக் கால்வைத்து ஆராய்ச்சித்தொடை தட்டி
"இருள்" என்றார் "ஒளி" என்றார்
ஜபர்தஸ்தாய் இதற்கெல்லாம்
அரிச்சுவடிப் பொருள் சொன்னார்
பொல்லென்றார் பொல்லனொரு பொலன் என்றார்
தமிழின் ஆன்மீகப் பொருளில் பதில் தந்து
"வள்" என்றது நாய். "வள்" எனில் குரைப்பல்ல.

"இந்த நாய் 'வள்' எனில் சிந்தனை கண்டுகொள்
இந்த நாய் வள்ளு என்றபோ தெல்லாம்
உம்முடையோர்க்கு வாயிலே இருந்து
வடிந்தது ஜொள்ளு இந்த நாய் எந்த நாய்?
இந்தியா சிந்துவாய் ஆரிய திராவிடப்
பிரிவினைகளுக்கெல்லாம் முந்திய ஒன்றதாய்
நின்ற காலத்து நாய். இந்த வாய் எந்த வாய்?
பன்றிகளுக்கிடும் முன்றிலின் வேலிகள்
என்றெதும் இல்லதாய் எங்கணும் யாவரும்
வாங்கி உயிர்க்கும் காற்றை விரிக்கும்
பிராண சக்தியின் அக்ஷரம் சுழல்கிற
அச்சடா இந்தவாய்!" என்றது நாய்.

இது கேட்டு "ஆ ஊ! அடாவாம் புடாவாம்
அன்னிக்குக்கூட அவாளைப் பார்த்து
அடா இன்னுப்புட்டான்!" என்றெடுத்தார் ஆசாமி
அவருக்கே பொருந்தாத ஜெண்டில்மேன் ஒப்பாரி!
"அடி" என்று தன்னை விளித்த கம்பனை
"ஆரைஅடா சொன்னாய் அது?" என்றாள் ஔவை.
கம்பனின் கதையே அப்படி என்றால்
அறிஞன் ஒருவனை அடிமை பிடிக்கவரும்
மடையனைப் பார்த்து 'அடா' என்று விளிப்பது
மரியாதை என்றே கருதிட வேண்டும்.
ஆசாமி உடனே மந்திரம் தந்திரம்
இங்கிலீஷ் எஜமான் வேலை எல்லாம்
விடுத்து எடுத்தார் கடவுள் வடிவம்.
"நீ நாய் நான் யார்? கடுகடு வடுக வைரவனார்
நாய் என் வாகனம் உன் இடம் எனக்குப்
பின்புறம் முன்புறம் வந்தாய் என்றால்
கிடைக்கும் உனக்குக் கல்லெறி எனவே
கம் கம்" என்றபடி தம்பின் புறத்தை
நாய்க்குக் காட்டினார். தெருநாய்க்குப் பின்புறப்
பொறியைக் காட்டும் இப் புதுமாடல் வைரவர்
சரியான இடியட் என்று சும்மா நின்ற நாய்
எகிறிப் பாய்ந்து இழுத்தது எட்டி
உரிந்தது வைரவ சாமியின் வேட்டி.
அதுசரி அம்மணம் இல்லாமல் என்ன வைரவ வேஷம்?
அம்பலம் ஆயின அவாளுக்கும் இவாளுக்கும்
ஏற்றபடி பேசும் ஆசாமியின் டபுள்
மர்ம விபரங்கள், மறைமுக ரோகங்கள்
வைரவர் வாய்தனில் இருந்து எழுந்தது
வாள்வாள் சப்தம், கண்டது ரத்தம்-
அன்று அவாளுக்குக் கெண்டைச்சதையில்
இன்று இவாளுக்குக் குண்டிச்சதையில்


நடைபாதை நழுவிய கவிதை

வான்மீகப் புற்றிருந்த
மருந்தீசுவரச் சந்நிதியில்
ஞானசம்பந்த
மோஹினி நாயனாரும்
மாஜி சமண ஹோமோ சாமி
நாவுக்கரசுப் பிக்ஷாடனாரும்
உதிர்த்த திருச் சுக்கிலத்தில்
உதித்தவன் போல்
எடுத்தான் தமிழை
நடைபாதை நழுவி
நடுத்தெருவுக்கு வந்த
குடிகாரன் ஒருவன்.
தொடுத்தான் சமத்துவ
தத்துவங்கள் முழுதையும்
சரித்திர நிஜத்துடன்:
'ஒரே இனம்
ஓர்ர்ரே பொணம்.'

(ஜ்யோவ்ராம் சுந்தர் - தடாலடிக் கவிதைகள் என்று கொஞ்ச காலம் பிரமிள் கனவில் எழுதிக் கொண்டிருந்தார்.  அந்த வரிசையில் வந்தது இது)