தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, July 25, 2015

புலரி முதல் புலரி வரை - எம். முகுந்தன்


    There is no end to education. It is not that you read a book, pass an examination, and finish with education. The whole of life, from the moment you are born to the moment you die, is a process of learning

     – Jiddu Krishnamurti

    pm0489.pdfpmuni0489.htmlpmuni0489-6-inch.pdf

    489சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்

    எம். முகுந்தன் (தொகுப்பு)/ ம. இராஜாராம் (மொழிபெயர்ப்பு)சிறுகதைகள்


    http://www.projectmadurai.org/pmworks.html


    "சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்"

    தொகுப்பு : எம். முகுந்தன்

    மொழிபெயர்ப்பு: ம. இராஜாராம்
    நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
    முதற்பதிப்பு : 1980 (சக : 1901)
    இரண்டாம் அச்சு : 1990 (சக : 1912)
    அனைத்திந்திய நூல்வரிசை
    (© ) உரிமைகள் அந்தந்த ஆசிரியர்களுடையன
    தமிழாக்கம் (©) நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, 1979
    ரூ. 16.50
    வெளியிட்டவர்: டைரக்டர், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
    ஏ-5, கிரின்பார்க், புது தில்லி - 110016.
    Original title: Recent Malayalam Short Stories (Malayalam)
    Tamil title: Sameebathiya Malayala Siru Kathaikal.
    Printed at Kay Kay Printers 150-D Kamla Nagar Delhi - 110007
    புலரி முதல் புலரி வரை - எம். முகுந்தன்

    எம். முகுந்தன்
    1942-ல் ஒரு முன்னாள் ஃப்ரெஞ்சு பிரதேசமான மாஹியில் பிறந்தார். ஃப்ரெஞ்சு முறையிலான படிப்பு. இளமைக்காலம் முழுவதும் வருத்திய நோய் படிப்பை முடிக்க அனுமதிக்கவில்லை. 1961-ல் டில்லியில் வேலை தேடி வந்தார். ஒரு ஃப்ரெஞ்ச் பள்ளியில் இரண்டு வருடம் வேலை பார்த்தார்.  டில்லியில் ஃப்ரெஞ்ச் எம்பாஸியில், கல்ச்சுரல் டிபார்ட்மென்ட் பகுதியில் வேலை பார்த்தவர். 1961முதல் தொடர்ந்து கதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார்.. நவீன மலையாள இலக்கியத்தில்  முக்கியமான ஒருவர்.

    நூல்கள்- வீடு, நதியும் தோணியும், வேசிகளே, உங்களுக்கொரு கோயில், ஐந்தரை வயதுக் குழந்தை (கதை தொகுப்புக்கள்), டில்லி, ஆகாயத்தினடியில். ஆல்வாயில் சூரியோதயம், ஹரித்வாரில் மணிகள் முழங்குகின்றன. இவ்வுலகம், இதிலொரு மனிதன். மய்யழி நதி தீரங்களில் (நாவல்கள்).

    அவனை ஸ்டேஷனில் இறக்கி விட்டுவிட்டு ரயில் கூவிக்கொண்டு ஓசையுடன் வடக்கு நோக்கி ஓடிச்சென்றது. வண்டி கண்ணிலிருந்து மறைந்த பின்னும் அது கக்கிய புகைப்படலம் அழியவில்லை. உருவம் மாற்றிக் கொண்டு கருத்த புகைப்படலம் ஆகாயத்தில் படர்ந்து ஏறியது. புகையை நோக்கியவாறு, விளையவிருப்பதை ஊகிக்க முடியாதவனாய் அவன் நின்றான். புகைச் சுருள்கள் நீர்க்குமிழிகளைப் போல ஆயிரக் கணக்கான கால்களில் நீந்தின.

    கூட்டம் நிறைந்த ப்ளாட்ஃபார்மில் தனியனாக நின்றான். எங்கும் பரிச்சயமற்ற முகங்கள் மட்டுமே. இவர்கள் யாரையும் தெரியாது. இவர்களுடைய குரல்கள் பரிச்சயமில்லை. இவர்களுடைய வாசனையும் பரிச்சயமில்லை. இவர்கள் யார்? இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்? காக்கியுடை தரித்த போர்ட்டர்களைக் கண்டவுடன் உற்சாகம் உண்டாயிற்று. பச்சைக் கொடியுடன் ஆஃபீசுக்குள் போன ஸடேஷன் மாஸ்டரும் ஆர்வத்திற்குரிய பொருளாயிருந்தார்.

    அவன் கண் நிறையக் குழப்பத்துடன் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் ஒதுங்கி நின்றான்.

    சற்று நேரமானபோது ப்ளாட்ஃபார்ம் காலியாயிற்று. அவன் தனியனானான். அப்போது வண்டியைப்பற்றி நினைத்தான். நீண்டு போகும் தண்டவாளங்களில் அவனுடைய கண்கள் சஞ்சரித்தன. தண்டவாளங்களின் எல்லையில் ரயில் மறைந்திருக்கிறது. தூரத்தில் சூன்யத்தில் தண்ட வாளங்களும் மறைந்துபோகின்றன. ரயில் விட்ட புகை இதற்குள் ஆகாயத்தில் சிதைந்து இல்லாமல்போயிருந்தது. அவன் தனிமையை உணர்ந்தான். தான், தொப்புள் கொடியிலிருந்து வேறுபடுத்தப்பட்ட குழந்தை என்று அவனுக்குத் தோன்றிற்று. இந்த ப்ளாட்ஃபார்மில், ஆளற்ற இந்த ப்ளாட்ஃபார்மில் தான் தனியன். தான் கேட்ட ஒலிகள் தனிமையின் ஒலிகளாயிருந்தன. கண்ட வர்ணங்கள் தனிமையின் வர்ணங்களாயிருந்தன. ப்ளாட்ஃபார்மின் மேற்கூரையைத் தாங்கி நிறுத்தும் துருப்பிடித்த இத் தூண்கள், மாமரத்தடியில் கிடக்கும் இந்த பெஞ்சுகள், வெயிலில் கிடந்து உளையும் இந்தத் தண்டவாளங்கள், தனிமையை உணர்த்துகின்றன. இந்த ரயில் நிலையம், இச் சிறிய நகரம், நகரத்தின்மேல் தொங்கும் ஜொலிக்கின்ற இவ்வாகாயம். ஆகாயத்தில் கொழுந்துவிட்டெரியும் இந்தச் சூரியன் இவையெல்லாம் தனிமையை அழைத்து எழுப்புகின்றன.

    இப் பெரிய பூமிக்கு மேலே, பரந்து கிடக்கும் இப் பெரிய ஆகாயத்தின் அடியில் தான் தனியன்.

    தன்னை ஸ்டேஷனில் இறங்கி விட்டுவிட்டு ஓடிப்போன வண்டியைப் பற்றி நினைத்து துக்கப்பட்டுக்கொண்டு அவன் ப்ளாட்ஃபார்மில் தனது பெட்டியின் மேல் அமர்ந்தான். ரயிலே, திரும்பி வா. என்னை ஏற்றுக்கொள். உஷ்ணமான, ஈரமான, மெத்தென்ற உன் உடமபினுள் என்னைத் திருப்பி அழை. தொப்புள் கொடியில் என்னைக் கட்டிப்போடு. வண்டி அவனுடைய குரலைக் கேட்கவில்லை. ரயில் அநேகம் நாழிகைகளுக்கு அப்புறத்தில் திரும்பிப் பார்க்காமல், பின் சென்ற பாதைகளைப்பற்றி நினைக்காமல், காலத்தைப்போல ஓடிக் கொண்டிருந்தது.

    "மகனே!--"

    தலையை உயர்த்திப் பார்த்தான். ஒரு வயதான மனிதர். ஒற்றை வேஷ்டியும் அரைக்கை ஷர்ட்டும்தான் வேஷம்.

    "என் பேரு நாணு நாயர்."

    நாணு நாயர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வெற்றிலைக் காவிபடிந்த பற்களைக் காட்டி சிரித்தார்.

    "நாணு நாயரைத் தெரியாதா?"

    அவன் பெட்டியின்மேலிருந்து குதித்தெழுந்தான். நாணு நாயரோ? யாருக்குத்தான் அவரைத் தெரியாது? எவ்வளவோ காலமாக‌ அவருடைய பெய‌ரைக் கேட்கிறான்! எத்தனையோ தடவைகள் எவ்வளவோ பேர்கள் தன்னிடம் நாணு நாயரைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். பார்க்கவேண்டுமென்றும் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமென்று பலதடவை ஆசைப்பட்டதுண்டு. இப்போதாவது அதற்கு சந்தர்ப்பம் உண்டாயிற்றே. நாணு நாயர் தயாளசீலரும் தீனர்களுக் கிரங்குபவருமாவார். இனிமேல் யாரைப்பற்றியும் பயப்பட வேண்டியதில்லை. இவ்வாகாயத்திற்கடியில், இப்பூமிக்கு மேலே, இனி யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. தனக்கு நாணு நாயர் இருக்கிறார்.

    "வண்டி எப்ப வந்தது?" நாணு நாயர் கேட்டார். "நான் கொஞ்சம் பிந்திட்டேன்."

    நாணு நாயர் சொன்னதை அவன் கவனிக்கவில்லை. நாணு நாயரைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான் அவன். தொண்டையில் பெரியதோர் குமிழ். தலைமயிர் முழுக்க நரைத்திருக்கிறது. காலில் வார் அறுந்த செருப்பு. இப் பெரிய மனிதனின் உருவம்தான் சிறியது.

    நாணு நாயர் கையிலிருந்த துண்டால் கழுத்தையும் முகத்தையும் ஒற்றிக் கொண்டார். வியர்வையில் குளித்திருக்கிறார். ஷர்ட் முதுகில் நனைந்து ஒட்டிக்கிடக்கிறது.

    "அப்போ நடக்கலாமா?"

    அவன் தலையாட்டினான்.

    "பெட்டிய இங்கக் கொடு"

    "நானே வச்சிருக்கேன்."

    "இப்படிக் கொடு மகனே."

    நாணு நாயர் பலவந்தமாகப் பெட்டியை வாங்கிக் கொண்டார். பெட்டியைத் தூக்கிப் பிடித்தபோது அவருடைய மெலிந்த கை மேல் நரம்புகள் இழுத்து முறுக்கேறின. நாணு நாயரின் கையில் சதையும் எலும்பு இல்லாதது போலவும் வெறும் நரம்புகள் மட்டுமே இருப்பது போலவும் தோன்றும்.

    "பிரயாணம் சௌர்யமாயிருந்துச்சா?"

    "ம்"

    நாள் முழுதும் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தானல்லவோ.

    "சாப்பாடெல்லாம் கெடைச்சுதா?"

    நாணு நாயர் ஒவ்வொன்றும் கேட்டுக்கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே நடந்தார். பின்னால் நடந்தான். வெளியே நல்ல கூட்டம். கார்கள் வரிசையாக நின்றன. நாலைந்து குதிரை வண்டிகளும் இருந்தன. மாமரங்களின் நிழலில் பட்சி சாஸ்திரம் சொல்கிற. எலிகளைச் சுட்டுத் தின்னும் குறவர்கள் கூடாரம் அடித்திருந்தார்கள் சாலைக்கு அப்புறத்தில் கடைகள் நிறைந்திருக்கின்றன.

    "நடந்துடலாமா?" காருல போகிற தூரம் இல்லை மகனே."

    "நடக்கலாம்."

    நடந்தால் சுற்றுப்புறத்திலுள்ள காட்சிகளை விஸ்தாரமாகப் பார்க்க முடியும். நாணு நாயர் பெட்டியைத் தரையில் வைத்து, மடியிலிருந்து ஒரு சுருட்டை எடுத்துக் கொளுத்திப் புகை விட்டார். சுருட்டையும், அதன் நுனியில் கனலையும் அதிசயத்தோடு பார்த்திருந்தான். நாணு நாயரின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் புகை வெளியேறியபோது அவன் இன்னும் அதிகமாகத் திகைப்படைந்தான். நாணு நாயர் ஓர் இளம் புன்சிரிப்புடன் பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தார். சுருட்டை வாயில் கடித்துப் பிடித்திருந்தார். வெயிலில் தன்னுடையவும் நாணு நாயருடையவும் நிழல்களை அவன் கண்டான். தங்களோடு நகர்கிற நிழல்களை வியப்படன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

    "வேகமா நட மகனே, சரியான வெய்யிலப்பா!"

    நாணு நாயர் பெட்டியைக் கை மாற்றிக் கொண்டார். அப்போது எதிரேயிருந்து ஒரு குதிரை வண்டி வந்தது. குதிரையின் வாயில் நுரை தள்ளியிருந்தது. கழுத்தில் சலங்கைகள் குலுங்கின. குதிரை வண்டி நகர்ந்து பக்கத்தில் வந்தபோது குதிரையைச் சுட்டிக் காட்டிக் கொண்டு அவன் கேட்டான்:

    "அது என்ன மிருகம்?"

    "அது குதிரை".

    நாணு நாயர் சுருட்டை வாயிலிருந்து எடுக்காமல் பதில் சொன்னார். குதிரை வண்டி கடந்துபோன பிற்பாடும் குதிரைமேலிருந்து அவன் கண்ணை எடுக்கவில்லை. திரும்பி நின்று குதிரையை நோக்கினான். குதிரை, வண்டியின் முன்னால் இருந்ததனால் அதனுடைய கால்களை மட்டுமே அவனால் பார்க்கமுடிந்தது. உருண்டுகொண்டிருக்கும் சக்கரங்களுக்கிடையில் குதிரையின் கால்கள் தாளத்தோடு ஆடிக் கொண்டிருந்தன.

    "நட மகனே"

    நாணு நாயர் உணர்த்தினார். நடக்கையிலேயே அவர் குதிரைகளைப் பற்றிப் பேசினார். முன் காலத்தில் குதிரைகள் காட்டு மிருகங்களாயிருந்தன. அவை தாகம் எடுத்தபோது தண்ணீர் குடித்தும், பசியெடுத்தபோது புல்லைத் தின்னும், இணைசேர நினைத்தபோது இணை சேர்ந்தும் காடுகளில் வாழ்ந்து வந்தன. காட்டில் வாழ்ந்திருந்த மனிதன் என்ற குரங்கு, குதிரைகளை வேட்டையாடிச் சுட்டுத்தின்றான். பிற்காலத்தில் மனிதன் குதிரைகளைக் கண்ணி வைத்து உயிரோடு பிடிதது வயலில் வேலை வாங்கினான். படிப்படியாக அவர்கள் குதிரையின் மேல் சவாரி செய்யக் கற்றனர். அக்காலத்தில் குதிரைதான் மனிதனின் முக்கிய வாகனம். சக்கரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும் குதிரைகள் வண்டியிழுக்கவாரம்பித்தன. குதிரை மனிதனையும் இழுத்துக்கொண்டு காடுகளிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் சஞ்சரித்தது.

    "மனிதன் குதிரையைச் சரியானபடி உபயோகப்படுத்தினது எப்ப தெரியுமா?"

    "ம்ஹும்"

    அவன் தலையாட்டினான்.

    "யுத்த காலத்துலதான். முன் காலத்துல யுத்தத்துல குதிரைகளுக்குக் குறிப்பிட்ட ஒரு பங்கு இருந்தது. அதிகம் குதிரைகள் உள்ள நாடு குறைந்த குதிரைகள் உள்ள நாட்டைத் தோற்கடித்தது."

    இன்றைக்கென்னவென்றால் குதிரைகளின் உபயோகம் குறைந்து வருகிறது. வயற்காடுகளில் வேலை செய்ய ட்ராக்டர்கள் இருக்கு. மனுஷன் போகக் காரும், விமானமும், கப்பலும் இருக்கு. குதிரைகளோ எண்ணிக்கையில் குறைந்தும் வருகின்றன. 

    "ஆனாலும் சர்க்கஸ்காரனுக்கு இப்பவும் குதிரைகள் தேவையிருக்கு." நாணு நாயர் முடிவாகச் சொன்னார்.

    ம‌ஞ்ச‌ள் நிற‌மான‌, லாட‌ம‌டித்த‌ கால்க‌ளுள்ள, கடிவாளமணிந்த, அசை போடும் குதிரையைக் கனவு கண்டவாறு அவன் நடந்தான். அவர்கள் மூன்று சாலைகள் சேரும் ஒரு சந்திப்பை அடைந்தனர்.

    "வீட்டுக்குப் போற வழி எது தெரியுமா?"

    "ம்ஹூம்"

    அவன் தலையாட்டினான். அவ‌னுக்கு ஒன்றும் தெரியாது. சொந்த வீட்டுக்கு வழிக்கூட‌த் தெரியாது. நாணு நாய‌ர் வீட்டிற்கான‌ சாலையில் திரும்பினார். சாலை, தார் போட்ட‌ அக‌ல‌மான‌ சாலைய‌ல்ல. ச‌ர‌ளைக‌ள் நிறைந்த‌, குண்டும் குழியுமான‌ கிராம‌ப் பாதைதான். வாக‌ன‌ங்க‌ளின் சுவ‌டுகள் காணப்படவில்லை. ஆனால் மனிதர்களுடையவும் பிராணிகளுடையவும் அடிச்சுவடுகள் காணப்பட்டன. சில ப‌ற‌வைக‌ளுடைய‌ சுவ‌டுக‌ளையும் காண‌முடிந்த‌து.

    "கோழியுடைய‌தோ, காகத்துடைய‌தோவாக‌ இருக்கும்."

    நாணு நாய‌ர் சொன்னார். அவ‌ர் பெட்டையைக் கீழே வைத்து மடியிலிருந்து இன்னொரு சுருட்டை எடுத்துப் ப‌ற்ற‌ வைத்தார். 

    "சிறிய‌து சிறுவ‌ர்க‌ளுடைய‌‌வும், பெரிய‌வை வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுடைய‌வும் கால‌டிச் சுவ‌டுக‌ள்." 

    நாணு நாய‌ர் விள‌க்கினார். பெட்டியைத் தூக்கிக் கொண்டு ப‌ய‌ண‌த்தைத் தொட‌ர்ந்தார்.

    த‌ன‌து கால்க‌ளுக்குப் பின்னால் தான் ந‌ட‌ந்த‌ வ‌ழியில் பாத‌ச் சுவ‌டுக‌ள் பிற‌ப்ப‌தை அவ‌ன் உவ‌கையுட‌ன் பார்த்தான். நாணு நாய‌ரின் கால‌டிக‌ளின் சுவ‌ட்டிலும் பாத‌ச்சுவ‌டுக‌ள் பிற‌ந்துகொண்டிருந்த‌ன‌. அவ‌ருடைய‌ அடிச்சுவ‌டுக‌ள் த‌ன‌து அடிச்சுவ‌டுக‌ளைப்போ லிருக்க‌வில்லை.

    "நான் செருப்புப் போட்டிருக்கேன். ஒங்கால்ல‌ செருப்பில்லைல்லே!" நாணு நாய‌ர் விள‌க்கினார்.

    அடிச்சுவ‌டுக‌ளின் ஊர்வ‌ல‌த்திற்கு முன்பாக‌ அவ‌ர்க‌ள் ப‌ய‌ண‌ம் தொட‌ர்ந்த‌ன‌ர்.

    "அதென்ன‌ ம‌ர‌ம்?"

    சாலையோர‌த்தில் க‌ண்ட‌ ப‌லாம‌ர‌த்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டு அவ‌ன் கேட்டான். சுருட்டை வாயிலிருந்து எடுக்காம‌ல் நாணு நாய‌ர் ப‌தில் சொன்னார்.

    "அது ப‌லா."

    நாணு நாய‌ர் தொட‌ர்ந்தார். 

    "பலாமரத்துலதான் பலாக்காய் காய்க்கும்.”

    “மாங்காய்?”

    “மாங்காய் மாமரத்துல காய்க்கும்.”

    “மாமரம் எங்கே நாணு நாயரே?”

    “காட்டறேன், காட்டறேன்.”

    நாணு நாயர் நடந்துகொண்டிருக்கையில் கழுத்தையும், மார்பையும் துண்டை எடுத்துத் துடைத்தார். அவர் முழுக்க வியர்வையில் மூழ்கியிருந்தார். நெற்றியில், கன்னத்தில், கழுத்திலெல்லாம் வியர்வை வழிந்து ஓடிக்கொண்டிருந்தது, மூச்சும் வாங்கிற்று.

    “பெட்டிய நான் எடுத்துக்கறேன், நாணு நாயரே.”

    “வேண்டாம் மகனே. நாணாயர்க்கு இது பழக்கந்தான்.”

    செம்மண் நிறைந்த சாலை வழியாக அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

    “நாணாயரே!”

    “என்ன மகனே?”

    ”மா, கொடியா மரமா?”

    “மரந்தான் மகனே.”

    “அப்போ, எது கொடி?”

    “வெள்ளரிக்கா, பாவக்கா, இதெல்லாம் கொடியில் காய்க்கும். மிளகும் கொடியில்தான் உண்டாகும்.”

    “மிளகுன்னா என்ன நாணு நாயரே?”

    “பொறு மகனே, எல்லாம் படிக்கலாம்.”

    அவன் சற்று நேரம் எதுவும் பேசாமல் நாணு நாயரின் பின்னால் நடந்தான். வேஷ்டியின் நுனி மண்ணில் இழைந்தது.

    மயிரடர்ந்த கால்கள் வியர்த்திருந்தன. ஆனாலும் அவனுக்குச் சோர்வு உண்டாயிருக்கவில்லை. மூச்சு இழைக்கவில்லை. சோர்வுற்றதும் மூச்சிறைத்ததும் நாணு நாயரல்லவோ-

    “அதோ அங்கே தெரிகிறதுதான் மா.”

    நாணு நாயர் ஒரு மாமரத்தைச் சுட்டிக் காட்டினார். படர்ந்து பந்தலிட்டு நிற்கும் ஒரு மாமரம். கிளைகள்தோறும் மாங்காய்கள். கிளைகளெல்லாம் கட்டிப் பின்னிக் கிடந்தன. ஒரு தாழ்ந்த கிளையின் மேலமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த காகத்தின்மேல் அவனுடைய கண் பதிந்தது.

    “நாணு நாயரே!-”

    “அது காக்கா. காக்கைகளில் பல ஜாதியுண்டு. பலி காக்கை, மாப்பிள்ளைக் காக்கை, கடல் காக்கை....”

    “இது பலி காக்காய், இல்லியா?”

    ”இல்லையப்பா, இது மாப்பிள்ளைக் காக்காய்.”

    “மாப்பிள்ளைக் காக்காயையும் பலி காக்காயையும் பார்த்தா எப்படிப் பிரிச்சுத் தெரிஞ்சுக்கலாம்?”

    “அது சுலபம் மகனே. பலி காக்கை கருப்பு. உடம்பு நல்ல அமைப்பா இருக்கும். மாப்பிள்ளைக் காக்காய்னா ஒல்லியா இருக்கும். கழுத்துல நரைச்ச மயிர் இருக்கும். திருட வேற செய்யும்.”

    மாமரத்தின் மேலிருக்கிற காகத்திற்கு மெலிந்த உடலும் ஒல்லிக்கால்களும் கழுத்தில் செம்பட்டை மயிர்களும் இருக்கின்றன.

    “சரிதான் அது மாப்பிள்ளைக் காக்காய்.”

    அவன் தலையைக் குலுக்கினான். அவர்கள் சாலையிலிருந்து திரும்பி வயற்காட்டில் இறங்கி வரப்பினூடே நடந்தனர்.

    “அதுதான் ஒன் வீடு.”

    நாணு நாயர் சுட்டிக் காட்டினார். நுழை வாயிற் கட்டடமுள்ள, ஓலை வேய்ந்த ஒரு பெரிய வீடு. வயலைத்தாண்டி அவர்கள் வீட்டின் முன்பை அடைந்தனர். நாணு நாயர் நுழைவாயிற் கட்டடத்தின் கதவைத் தள்ளித் திறந்தார். வீட்டு முகப்பில் யார் யாரோ நின்று கொண்டிருந்தார்கள்.

    “வந்தாச்சா! எம்பிள்ளை வந்துட்டானா?”

    காதில் தங்கத் தோடணிந்த, வெள்ளை வஸ்திரம் தரித்த ஒரு ஸ்திரீ முற்றத்தில் ஓடியிறங்கி வந்தாள். அவள் அவனைக் கட்டியணைத்தாள். குழம்பி நின்றான். அதைப் பார்த்து நாணு நாயர் ஒரு சிரிப்புடன் சொன்னார்: “ஒன் அம்மா மகனே.”

    அவன் தாயைத் தழுவினான். அம்மாவின் வாய்க்குக் களிப்பாக்கின் மணம் இருந்தது. அவர்கள் முகப்பில் ஏறினார்கள். நாணு நாயர் ஒவ்வொருத்தராக அறிமுகப்படுத்தினார்.

    “இது ஒங்கப்பா...”

    அப்பா துணி நாற்காலியில் படுத்திருந்தார். நல்ல கனமும் பருமனுமான, காதில் கடுக்கனணிந்த, சிவப்பான ஒரு மனிதர். வாசலின் பின்னால் மறைந்து நிற்கும் வாயில் ஸாரியுடுத்த பெண்ணைச் சுட்டிக் காட்டிக்கொண்டு நாணு நாயர் கேட்டார்:

    ”அது யார்னு தெரியுமா?”

    “ம்ஹும்”

    “ஒம் பெண்டாட்டி மகனே, சந்திரிகா.”

    அவன் வாசலினருகில் சென்று நின்று அவளைப் பார்த்தான். நெற்றியில் சாந்துப் பொட்டு. சங்கு போன்ற அழகான கழுத்து. நிலைப்படியின்மேல் படிந்திருந்த அவளுடைய கை விரல்களை அவன் மெதுவாக வருடினான். தலை குனிந்து நின்ர அவளுடைய கன்னங்களில் இரத்தப் பிரவாகமுண்டாயிற்று.

    ”போய்க் குளிச்சிட்டு வா.” அம்மா சொன்னாள்: “தண்ணி சேந்தி வச்சிருக்கு. சோப்பும் துண்டும் குளியலறையில் இருக்கும்.”

    அவன் குளியலறைக்குப் போய்க் குளித்துவிட்டு வருவதற்குள் மேஜை மேல் சாப்பாடு தயாராக இருந்தது.

    ‘நாணாயரே, சாப்பிடலாம்.”

    அப்பாவும் நாணு நாயரும் செம்பில் நீரெடுத்து முகம் கழுவினார்கள். அவனும். அவர்கள் புற்பாயில் அமர்ந்து சாப்பிட்டார்கள். சோற்றையள்ளிச் சாப்பிடுவதனிடையில் நாணு நாயர் அவனிடம் கேட்டார்:

    “எல்லாரும் அறிமுகம் ஆயாச்சு இல்லியா, எல்லாம் புரிஞ்சிக் கிட்டாச்சில்லியா?”

    ஆமாம் என்று அவன் தலையாட்டினான். சாப்பாடு ஆனபிறகு அப்பாவும் நாணு நாயரும் வெற்றிலை போட்டுக்கொண்டும், ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அவன் தூணில் சாய்ந்து நின்று ஆகாயத்தினுடையவும் மரங்களுடையவும் அழகை ருசி பார்த்தான். மரங்களின் நிறம் பச்சை, ஆகாயத்தின் நிறம் நீலம். இதெல்லாம் அவன் இதற்குள் புரிந்துகொண்டிருந்தான். எல்லாம் படித்திருக்கிறான். இப்போது எல்லாம் தெரியும்.

    "மூணு நாலு நாள் பிரயாணம் செய்தாயில்லியா? களைப்பா இல்லியா மகனே ஒனக்கு?” அம்மா கேட்டாள்.

    “போய்க் கொஞ்சம் படுத்துத் தூங்கு” அப்பா சொன்னார்.

    அவன் மாடிப்படியேறி மேலே தன் அறைக்குப் போனான். அறையில் ஜன்னலினருகில் சந்திரிகா முகம் குனிந்து நின்றிருந்தாள். ஜன்னல் வழியாக வரும் காற்றில் அவளுடைய மயிர்கற்றைகள் பறந்து விளையாடின. அவன் அவளருகில் சென்று நின்று அவளது முகத்தைப் பிடித்து உயர்த்தினான். அவளுடைய மை தீட்டிய கண்களில் ஈரக்கசிவு தெரிந்தது.

    “அழறியோ?”

    அவள் மந்தகாசம் புரிந்தாள்.

    அவர்கள் கட்டிலில் அமர்ந்தனர். அவன் அவளுடைய கையை எடுத்துத் தன் மடியில் வைத்து மணிக்கட்டில் ப்ளாஸ்டிக் வளையல்களை எண்ணினான். ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு. அவன் அவளுடைய தலைமயிரையும் கன்னங்களையும் வருடினான். மலர்ந்து கிடக்கும் அவளது கழுத்தில் தன் கன்னத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவன் படுத்தான். வலது கை அவளுடைய மார்பில் தங்கியது.

    விழித்தபோது அந்தியாகியிருந்தது. கட்டிலில் எழுந்து உட்கார்ந்த போது அவன் சட்டென்று நினைவுகூர்ந்தான். எல்லா விஷயங்களையும் நான் நாணு நாயரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், நான் யாரென்ற விஷயம் கேட்டுத் தெரிந்துகொண்டேனா? நானொரு முட்டாள். எல்லோரையும் தெரிந்து கொண்டேன். எல்லோருடைய பெயர்களையும் தெரிந்து கொண்டேன். என்பெயரைத் தெரிந்து கொள்ளவில்லை. நான் படு முட்டாள். நாணு நாயர் கிட்டப் போய் கேட்கலாம். அவன் மாடிப்படி இறங்கிக் கீழே போனான்.

    “நாணு நாயர் எங்கே அப்பா?” “இதோ இப்பத் தான் போனார்.”

    அவன் முற்றத்திலிறங்கி நுழைவாயிற் கட்டடத்தை நோக்கி ஓடினான். தெருவில் இறங்கிப் பார்த்தான். தொலைவில் நாணு நாயர் நடந்து போவதைக் கண்டான்.

    “நாணாயரே! “ உரக்கக் கூப்பிட்டான். நாணு நாயருக்குக் கேட்கவில்லை. அவன் முடிந்த அளவு உரக்கக் கூப்பிட்டுக் கேட்டான். “எம் பேரென்ன நாணாயரே? நான் யாரு நாணாயரே?”

    நாணு நாயர் கேட்கவில்லை. திரும்பிப் பார்க்கவில்லை. அந்தியின் கூடிவரும் இருளில், மங்கிய வெளிச்சத்தில் நாணு நாயர் மறைந்து போனார். 
    ---------------------------