தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, January 07, 2020

புதுமைப்பித்தன் : ரகுநாதன்ஒரு பேட்டி சுந்தர ராமசாமி

மறுவெளியீடு
புதுமைப்பித்தன் : ரகுநாதன்ஒரு பேட்டி  சுந்தர ராமசாமி : pdf from tamilvu.org
http://www.tamilvu.org/library/nationalized/pdf/73-raghunathan/puthumaipithanvaralaru.pdf
புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடித்து விட்டு, இந்த அனுபந்தத்தினுள் புகும்போது இதில் சிற்சில விஷயங்கள் வாசகர்களுக்குக் கூறியது கூறலாகப்படும் ஆயினும் அவையும் விளக்கமான புதிய தகவல்கனோடு கூறப்பட்டிருப்பதை அவர்கள் காண முடியும். மேலும், புதுமைப்பித்தன் வரலாற்று நூலில் கூறப்படாத பல புதிய தகவல்களும், விவரங்களும், மதிப்பீடுகளும் இந்த பேட்டிவில் இடம் பெற்றுள்ளன. எனவே புதுமைப்பித்தனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பும் வாசக நேயர்களுக்கு இந்தப் பேட்டியும் விருத்தாகவே அமையும் என்று கருது கிறேன்.
ரகுநாதன்ஒரு பேட்டி -

அமரராகி விட்ட தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களின் வாழ்வையும் பணியையும் பற்றிய நினைவுக் குறிப்புக்களைச் சேகரித்துச் சேமித்து வைக்கும் நல்லதொரு பணியைத் திருச்சி வானொலி நிலையத்தார் ஆற்றி வருகின்றனர். அத்தகைய எழுத்தாளர்களின் இலக்கியப் பணியை நன்கறிந்துள்ள தோடு அவர்களை நேரில் அறிந்து நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்ற எழுத்தாளர்களைத் தக்க இலக்கிய அன்பர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டு பேட்டி காணச் செய்து, அவர்கள் தமது வாய்மொழியாகக் கூறும் நினைவுக் குறிப் புக்களை வானொலி நிலையத்தார் ஒலிப்பதிவு செய்து வருகின் றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் பேட்டிகளுக்குக் கால வரம்பு ஏதும் இல்லை. பேட்டி எவ்வளவு நேரம் நீடித்தாலும், அதனை முழுவதும் பதிவு செய்து கொள்கின்றனர்.
இவ்வாறு பதிவு செய்யும் ஒலிப்பதிவைச் சுருக்கித் தொகுத்து. அமரராகி விட்ட குறிப்பிட்ட எழுத்தாளரின் நினைவு நாளை ஒட்டி ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய பின்னர், பதிவு செய்யப்பட்ட பேட்டி முழுவதன் ஒலிப்பதிவையும் வருங்காலத் தலைமுறையினருக்காக, வானொலியின் ஆவணக் காப்பகத்தில் பத்திரப்படுத்தி வைத்து வருகின் றனர்.
''இலக்கியச் சிந்தனைகள்'' என்ற தலைப்பின் கீழ் வானொலி நிலையத்தார் பதிவு செய்து வரும் இந்த வரிசையில் புதுமைப்பித்தனைப் பற்றிய எனது நினைவுகளை, நாடறிந்த எழுத்தாளரும் எனது நண்பருமான சுந்தர ராமசாமி 4-3-1978 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் கேள்விகள் கேட்டுப் பெற்ற பேட்டியே இந்த அனுபந்தம். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தப் பேட்டியின்போது அவர் கேட்ட கேள்விகள் அவற்றுக்கு நான் அளித்த பதில்கள் அனைத்தும் இதில் முழுமையாக அடங்கியுள்ளன. இந்தப் பேட்டியின் முக்கால் மணி நேரச் சுருக்கம் புதுமைப்பித்தனின் முப்பதாவது நினைவு நாளை ஒட்டி, 25-6-1978 அன்று இலக்கியச் சிந்தனை கன்' என்ற தலைப்பில் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ஒலி பரப்பப்பட்டது.
புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடித்து விட்டு, இந்த அனுபந்தத்தினுள் புகும்போது இதில் சிற்சில விஷயங்கள் வாசகர்களுக்குக் கூறியது கூறலாகப்படும். ஆயினும் அவையும் விளக்கமான புதிய தகவல்களோடு கூறப்பட்டிருப்பதை அவர்கள் காண முடியும். மேலும், புதுமைப்பித்தன் வரலாற்று நூலில் கூறப்படாத பல புதிய தகவல்களும், விவரங்களும், மதிப்பீடுகளும் இந்த பேட்டியில் இடம் பெற்றுள்ளன. எனவே புதுமைப்பித்தனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பும் வாசக நேயர்களுக்கு இந்தப் பேட்டியும் விருந்தாகவே அமையும் என்று கருதுகிறேன்
ரகுநாதன் ஒரு பேட்டி
சுந்தர ராமசாமி : அன்பார்ந்த நண்பர் ரகுநாதன் அவர்களே, வணக்கம். புதுமைப்பித்தனைக் குறித்தும் அவரது இலக்கியங்கள் குறித்தும் உங்களைப் பேட்டி காண நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி அடை கிறேன். புதுமைப்பித்தனின் இலக்கியத்தின் மீது நாம் கொண்ட ஈடுபாடுதான் நம் இருவரையும் இருபத்தைந்து. ஆண்டுகளுக்கு முன் இணைத்தது என்று எண்ணுகிறேன். சில வருடங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் புதுமைப்பித்தனே நம்மைச் சந்திக்க வைத்திருக்கிறார். இது ஒரு நல்ல Coinci dence இல்லையா? 
ரகுநாதன் : வணக்கம், நண்பர் சுந்தரராமசாமி அவர்களே. புதுமைப் பித்தனைப் பற்றி நாம் உரையாட நேர்ந்தது நல்ல Coinch dence தான். ஆனாலும் இது ஒன்றும் Strange Coincidence அல்ல. நாம் இருவரும் இலக்கியத் துறையில் இன்று எப்படி எப்படி வளர்ந்திருந்தாலும், ஆரம்பத்தில் இருவருமே புதுமைப் பித்தனை அடியொட்டி வளர்ந்தவர்கள்தான் என்று எண்ணு கிறேன். இருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன் நீங்கள் புதுமைப் பித்தன் நினைவு மலரை வெளியிட்டீர்கள். அப்போது. நமக்குள் கடிதத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் திருநெல்வேலியில் நடந்த புதுமைப்பித்தன் நினைவு விழாவில் கலந்து கொள்ள வந்தீர்கள். நேர்முகமாக அறிமுகமானோம். அதன் பின் புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் நீங்கள் முதற் பரிசு பெற்றீர்கள். அதன்பின் நமக்குள் நெருக்கம் ஏற்பட்டது. அன்றும் புதுமைப்பித்தன் தான் தோன்றாத்துணையாக இருந்து நம்மை ஒன்று கூட்டினார். இன்றும் அவர்தான் தோன்றத் துணையாக இருந்து நம்மைச் சந்திக்க வைத்திருக் கிறார். மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.

கேள்வி: புதுமைப்பித்தனை நீங்கள் எங்கு எந்த வருடம் சந்தித் தீர்கள்? அந்த முதல் சந்திப்பு பற்றியும் அதன் பின்னணி பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 
பதில் : புதுமைப்பித்தனை நான் முதன் முதலில் பார்த்த சமயம் வேறு. சந்தித்த சந்தர்ப்பம் வேறு. 913ல் தான் நான் அவரை முதன் முதலில் பார்த்தேன். அது நான் அரசியல் ஈடுபாட்டின் காரணமாகச் சில நாட்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இலக்கியப் பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த காலம். அந்நாளில் கதை எழுதும் கலை விஷயத்தில் புதுமைப்பித்தனே என்னை முழுக்க முழுக்க ஆட்கொண்டிருந்தார். எனவே "புதுமைப் பித்தனின் கதைகள்' என்ற தலைப்பில் புதுமைப்பித்தனே நெல்லை இந்துக் கல்லூரியில் பேசுகிறார் என்று தெரிந்து கூட்டத்துக்குப் போனேன். பேச்சைக் கேட்டேன். அதுதான் அவரை முதன் முதலில் பார்த்த சந்தர்ப்பம். 
ஆனாலும் அப்போது அவரைச் சந்தித்துப் பேச எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதன்பின் ஓராண்டு கழித்து அவரைச் சென்னையில் தான் சந்தித்தேன். இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். 1943ல் புதுமைப்பித்தன் நெல்லைக்கு வந்திருந்த சமயம் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் வீட்டில், 'என்ன சொ . வி ., உங்கள் வழியில் கதை எழுதும் என் மாணவன் ஒருவன் இருக்கிறான்' என்று பேராசிரியர் புதுமைப்பித்தனிடம் கூற , அங்கு உடனிருந்த, இப்போது சென்னை வானொலி நிலையத்தின் டைரக்டரான நண்பர் துறைவன், அந்தச் சமயத்தில் பத்திரிகையில் வெளிவந்திருந்த 'பிரிவுபசாரம்' என்ற எனது கதையைப் புதுமைப்பித்தனிடம் வாசித்துக் காட்டியிருக்கிறார். அந்தக் கதை புதுமைப்பித்தனுக்குப் பிடித்து விட்டது. எனவே 'யார் இந்த ரகுநாதன்?' என்று கேட்டு விட்டு என்னைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். எனினும் எங்களுக்குள் சந்திப்பு வாய்க்கவில்லை. இதன்பின் புதுமைப்பித்தன் "தினசரி' பத்திரிகையில் காலஞ் சென்ற ஆ. முத்துசிவன் எழுதிய 'அசோக வனம்' என்ற புத்தகத்தை மதிப்புரை என்ற பெயரால் வரம்பின்றித் தாக்கி எழுதியிருந்தார். முத்துசிவன் எனக்கும் நண்பர்; புதுமைப்பித்தனுக்கும் பால்ய நண்பர். அந்த மதிப்புரைக்கு மறுப்பு எழுதவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. எனவே புதுமைப்பித்தன் பாணியிலேயே நானும் ஒரு மறுப்பு எழுதித் தினசரிக்கு அனுப்பி வைத்தேன். மறுப்பு புதுமைப்பித்தன் கையில் போய்ச் சேர்ந்தது. ஆனால் மறுப்பு வெளியிடப்படவில்லை. இதன்பின் நான் சென்னை சென்று தினமணி காரியாலயத்தின் பிரசுரப் பிரிவில் முதுபெரும் எழுத்தாளர் பி. ஸ்ரீ. ஆசார் யாவுடன் உதவியாசிரியராகப் பணியாற்றி வந்தேன். புதுமைப்பித்தன் ஆசார்யாவைப் பார்க்க அங்கு ஒருநாள் வந்தார் . ஆசார்யா என்னை அறிமுகப்படுத்திக் குலமுறை கிளத்தியவுடன், புதுமைப்பித்தன் பேராசிரியர் சீனிவாசராகவன் வீட்டில் கேட்ட என் கதையையும் நினைவு கூர்ந்தார். இரண்டையும் எழுதியது நான்தான் என்று தெரிந்ததும் “ நீதானா அது? அப்போ நீ நம்ப ஆளு. உன்னைத்தான் இத்தனை நாளாய்த் தேடிக் கொண்டிருந்தேன்'' என்று குஷியாகப் பேசத் தொடங்கி விட்டார். எங்கள் முதல் சந்திப்பு இப்படித்தான் தொடங்கியது.

கேள்வி : அவரைச் சந்திக்கும் முன்பே அவரது படைப்புக்களில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தது என்பது என் எண்ணம். இது அவரைப் பற்றி சில கற்பனைகளை உங்கள் மனத்தில் உருவாக்கியிருக்கக் கூடும். முதல் சந்திப்பு நிகழ்ந்த போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள் என்ன? ஏமாற்றமா? கற்பனைக்கு அணுசரணையாகத்தான் நிஜக்கோலமும் இருந்ததா? 
பதில் : அவரைப் பார்ப்பதற்கும் முன்பே அவரது படைப்புக்கள் அனைத்தையும் நன்கு படித்திருக்கத்தான் செய்தேன். மேலும் அவரை நேரில் நன்கு அறிந்திருந்த எனது கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் சீனிவாசராகவன், வித்வான் அருணாசலக் கவுண்டர் , மற்றும் நண்பர்கள் முத்துசிவன் முதலியோரின் மூலம் அவரது நோக்கு, போக்கு , தோற்றம், நடையுடை பாவனை எல்லாவற்றையும் பற்றி ஓரளவு கேள்வியும் பட்டிருந் தேன். அதனால் நானாகக் கற்பனை செய்து கொள்வதற்கு அதிகம் எதுவும் இல்லை. அவரைப் பற்றி என் மனத்தில் விழுந்திருந்த சித்திரத்துக்கும் நேரில் கண்ட அனுபவத்துக்கும் வித்தியாசம் இல்லை எனலாம். இதைப் போலத்தான் ஓராண்டுக்குப் பின்னர் அவரைச் சந்தித்த போதும் எனக்கு ஏமாற்ற மில்லை. நான் தான் அவருக்கு மறுப்பு எழுதியவன் என்று தெரிந்தால், அவர் கோபித்துக் கொள்வார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. அவரும் கோபித்துக் கொள்ளவில்லை. ஆயினும் அந்த நாள் தொடங்கி அவர் என்னைத் தமது நிழலில் வளர வேண்டிய பயிர் என்று கருதியதும், என்மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்ததும், இருவரும் சந்தித்துப் பேசா நாள் எல்லாம் பிறவா நாளே என்று கருதியது போல் தினம் தினம் என்னைச் சந்தித்ததும், எனது கதைகளை வாசிக்கச் சொல்லிக் கேட்டதும், நான் சற்றும் எதிர்பாராதவை என்றே சொல்ல வேண்டும்.

கேள்வி அப்போது அவருக்கு என்ன வயதிருக்கும்? அவருடைய தோற்றம் எப்படி இருந்தது? 
பதில் சந்தித்தது 1944ல் தானே. அப்போது அவருக்கு வயது முப்பதெட்டு . என்றாலும் அப்போதே அவருக்குத் தலையில் நரை புரையோடிருந்தது. வாழ்க்கை நெருப்பில் அடிபட்டுக் காய்ந்த முகம்; வயதுக்கு மீறிய முதுமை; நோஞ்சான் உடம்பு. தொளதொளத்துத் தொங்கும் வெள்ளைக் கதர் ஜிப்பாதான் உடம்பின் சோனித் தன்மையை மூடி மறைத்திருந்தது. அவரது தோற்றம்பற்றிக் குறிப்பிடும்போது கண்களைப்பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். அந்தக் கண்கள் ஓர் அசாதாரண மான ஒளி நிறைந்த கண்கள். தீராத ஏக்கமும் பித்தமும் ஒளியும் தீட்சண்யமும் தென்படும் கண்கள். அந்தக் கண்களை வெகு நேரம் பார்க்க முடியாது. பார்க்கிறவர்களின் கண்களைச் சீக்கிரம் உறுத்திவிடும் கண்கள் அவை. ஆழக் குழிக்குள் அமிழ்ந்து கிடந்தாலும் தெறித்துச் சிதறும் ஒளியும் வேகமும் கொண்ட கண்கள் அவை. அவரை அறியாதவர்கள் முதலில் அவர் கண்களைச் சந்தித்தால், அது அவர்களுக்கு ஏதோ ஓர் இனந் தெரியாத அச்சத்தை எழுப்பிவிடும் என்று கூடச் சொல்லலாம்.

கேள்வி : சரி, அந்நாட்களில் அவரது ஈடுபாடுகள் என்ன? அவரு டைய படிப்பு - Reading - எழுத்து, சமூக அக்கறைகள் , லட்சி யங்கள் -- இவை பற்றிச் சொல்ல முடியுமா? 
பதில் : நான் அவரைச் சந்தித்துப் பழகிய காலத்தில் அவர் தினசரி'ப் பத்திரிக்கையையும் விட்டு விலகி, சுயேச்சை எழுத்தாள ராக , Free lance writer ஆக மாறியிருந்தார். அதே சமயம் சினிமாத்துறையிலும் காலடி வைத்து அவ்வையார்' படத் துக்குக் கதை வசனம் எழுதும் பொறுப்பையும் ஏற்றிருத்தார். இதற்கிடையிலும் அவர் சில கதைகள் எழுதினார். அன்றிரவு' ' எப்போதும் முடிவிலே இன்பம்', கபாடபுரம்' அவரது கடைசி கதை எனச் சொல்லத் தகும் ' கயிற்றரவு' முதலிய கதைகள் எல்லாம் அப்போது எழுதியவைதான். இந்தக் கதைகளின் தன்மையே 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளை எழுதிய புதுமைப்பித்தனின் ஈடுபாடுகள் வேறு, இந்தக் கதைகளை எழுதிய புதுமைப்பித்தனின் ஈடுபாடுகள் வேறு என்பதைப் புலப்படுத்தி விடும், 
படிப்பு -reading-ஐப் பொறுத்த வரையில் எப்போதுமே அவருக்கு அதில் ஒரு தணியாத தாகம் இருந்தது. சொந்தத்திலேயே ஏராளமான புத்தகங்கள் வைத்திருந்தார். இதுபோக, கையில் பணம் புரள்கிற வேளையில், புத்தகக் கடைக்குள் நுழைந்து விலையைப் பாராமல் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வருவதும் உண்டு. வாங்கிய புத்தகங்களை வாங்கிய சூட்டோடு படிக்கவும் செய்வார்; மாதக் கணக்கில் படிக்காமல் போட்டும் வைப்பார். ஆனாலும், தனியாக இருந்தால் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டுதான் இருப்பார். எனினும் படிப்பவற்றுக்கு ஒரு வரன்முறை கிடையாது. அது கம்பனாகவும் இருக்கலாம்; கண்ணுடையம்மன் பள்ளாகவும் இருக்கலாம். Arabian Nights ஆகவும் இருக்கலாம். அல்லது அண்மையில் வெளிவந்த W. H. ஆடனின் கவிதைத் தொகுப்பாகவும் இருக்கலாம். படிப்பு விஷயத்தில் அவருக்குப் பழைய இலக்கியங்களிலும் ஈடுபாடு இருந்தது; புதிய நூல்களிலும் ஈடுபாடு இருந்தது. புதிய இலக்கியங்களில் அவர் டி.எஸ்.எலியட் ,W. H. ஆடன், கிறிஸ்டபர் இஷர்வுட், லூயி மக்னீஸ், V. S. பிரிச்செட் மற்றும் பலரது புத்தகங்களை நான் பழகிய காலத்தில் வாங்கிப் படித்ததுண்டு. 
நான் அவரோடு பழகிய காலத்தில் அவர் சமூக அக்கறைகளைப் பற்றிப் பிரமாதமாகக் கவலை கொண்டார். என்றோ , அவை பற்றிச் சிந்தித்தார் என்றோ சொல்ல முடியாது. ஆனால் சமூகத்தில் காணும் சிறுமைகளைக் கண்டு வருந்தும், மனம் குமையும், சினந்து சீறும் குணம் அவருக்கு என்றும் இருந்தது. ஆனால் இந்த உணர்வு பெரும்பாலும் மனப் புழுக்கத்துடனேயே நின்று விட்டது எனலாம். 
லட்சியங்களைப் பொறுத்த வரையில், உலகில் தாம் இன்னின்ன கதைகளை, நாவல்களை எழுதி முடிக்க வேண்டும் என்று அவர் கூறிய நிறைவேறாத, நிறைவேற்றுவதற்கான வாய்ப்போ வசதியோ, அதற்கான மனஉறுதியோ திட்டமோ எதுவுமே இல்லாத ஆசைக் கனவுகளாகவே இருந்து வந்தன எனலாம்.

கேள்வி : 
வாழ்க்கைமீது அவர் கொண்டிருந்த அவநம்பிக்கை, அவர் எழுத்தில் பல இடங்களில் வெளிப்படுகிறது. அந்த நம்பிக்கை வறட்சியின் ஊற்றுக்கள் என்ன? பிறப்பிலும் வளர்ப்பிலும் நிகழ்ந்துபோன குறைகள் காரணமாக, தம்மளவில் முதலில் கசந்து, அக் கசப்பையே வெளி உலகத்திலிருந்தும் பொறுக்கிச் சேர்த்துவிடுகிறாரா? அல்லது சொந்தக் குறைகளை விலக்கி வாழ்க்கையை முழுமையாகவும் சுதந்திரமாகவும் பார்த்ததன் விளைவாகவே இந்த நம்பிக்கை வறட்சி. அவரிடம் தோன்றியுள்ளதா? 
பதில் : புதுமைப்பித்தனின் பிறப்பிலும் வளர்ப்பிலும் அவருக்குக் கசப்பான அனுபவங்கள் மலிந்திருந்தன என்பது உண்மை தான். ஆனால் அந்தக் கசப்புக்கும் மத்தியில் அவருக்குத் தாம் ஓர் இலக்கிய கர்த்தா ஆகவேண்டும் என்ற தாகமும் வேகமும் இருந்தது. அந்தப் பிடிப்பும் இல்லாது போயிருந்தால் அவர் என்றோ தற்கொலை கூடச் செய்து கொண்டிருக்கலாம். எனினும் வாழ்க்கையில் அவர் அனுபவித்த கசப்பு அவரது இலக்கியங்களிலும் பிரதிபலித்தது உண்மை . ''ஒரு கவியுள்ளம் - சோகத்தால் சாம்பிய உள்ளம் - வாழ்க்கை முட்களில் விழுந்து ரத்தம் கக்குகிற உள்ளம் - கதைகள் மூலம் பேசுகிறது. இதுதான் நான் கண்டது இந்தக் கதைக் கொத்திலே'' என்று ரா. ஸ்ரீ தேசிகன் புதுமைப்பித்தன் கதைகளுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறாரே, அது ஓரளவுக்கு உண்மைதான். தனிமனிதன் மட்டுமல்ல, சமுதாயமே வாழ்க்கை முட்களில் விழுந்து ரத்தம் கக்குகிற பரிதாபத்தையும் புதுமைப்பித்தன் பார்த்ததனால் தான் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் அவரது கதைகளிலும் கசப்பும் நம்பிக்கை வறட்சியும் பிரதிபலித்தன எனலாம். அவரே 'என் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி'' என்று ஒப்புக்கொள்கிறார். அவரே அதற்குப் பதிலும் அளிக்கிறார். 
எதிர்மறையான குணங்கள் இலக்கியத்துக்கு வலுக் கொடுக்குமா? என்று கேட்கலாம். அது ஏற்பவர்களின் மனப்பக்குவத்தைப் பொறுத்ததே ஒழிய, எதிர்மறை பாவத்தின் விஷயத்தன்மையைப் பற்றியதல்ல' என்று அவரே கூறுகிறார். அவரே ஒரு முன்னுரையில் கூறியதுபோல், அவரது கதையில் அவர் தமக்குப் பிடித்தவர்களையும் பிடிக்காதவர்களையும் . கேலி செய்கிறார். இதனைக் கண்டு அவர்களது முகம் சிவப்பதைக் கண்டு, புதுமைப்பித்தன் மகிழ்ச்சி கொள்கிறார். அவர்களது முகம் மேலும் சிவக்க வேண்டும் என்று விரும்புகிறார். சுருங்கச் சொன்னால், சமுதாயச் சிறுமைகளைக் கசப்புணர்ச்சியோடு , விரக்தியுணர்வோடு குத்திக் காட்டுவதன் மூலம், அவர் வாசகர் மனத்தில் சீற்றத்தைக் கிளப்பவே முயல்கிறார். அதாவது அப்படியாவது சமுதாயத்துக்கு ரோஷம் வரட்டும் என்பதுதான் அவரது நோக்கம். எனினும் இந்த ரோஷத்தைக் கிளப்பி விடுவது மட்டும் தான் தமது வேலை என்று அவர் கருதினார். அதற்குமேல் அவர் செல்லவும் இல்லை; செல்ல விரும்பவும் இல்லை.

கேள்வி : வாழ்வின் ஊனங்கள் பற்றியும் அதனைக் களையும் வழிகள் பற்றியும் எப்பொழுதேனும் அவர் உங்களிடம் பேசியது உண்டா ? 
பதில் : 
முந்தைய கேள்விக்கு அளித்த பதிலிலேயே வாழ்வின் ஊனங்கள் பற்றிய புதுமைப்பித்தனின் கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். வாழ்வின் ஊனங்கள், சிறுமைகள் குறித்து அவர் மனம் புழுங்கியதுண்டு. ஆனால் அவற்றைப் போக்குவதற்கு எது வழி என்று அவர் அதிகம் கவலைப்பட்டதுமில்லை; இதுதான் வழி என்ற திட்ட வட்டமான முடிவு எதையும் அவர் தேர்ந்திருக்கவும் இல்லை இதுபற்றி நான் அவரிடம் எப்போதாவது பேச முனைந்தால் , இலக்கிய கர்த்தாவின் வேலை அதுவல்ல என்று அடித்துத் கூறிவிடுவார். புதுமைப்பித்தனோடு நான் பழகிய காலத்தில் நான் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்நோக்கிக் கொண் டிருந்த 22 வயது இளைஞன். எனவே இந்த விஷயத்தில் தான் எனக்கும் அவருக்கும் முரண்பாடு இருந்தது. சொல்லப் போனால், அப்போது எனக்கிருந்த சமுதாய, அரசியல் கருத்துகளைத் தகர்த்துவிட வேண்டும் என்றுகூட அவர் முயன்றார். இதற்கு அவரது சமகாலத்து மேலை நாட்டு எழுத்தாளர்கள் சிலர், அவரது கவனத்தையும் கருத்தையும் கவர்ந்திருந்த எழுத்தாளர்கள் சிலர், அந்தக் காலத்துக்கும் முன்பே இத்தகையதொரு நிலையை ஏற்றுக் கொண்டிருந்ததும் ஒரு காரணம் என நான் கருதுகிறேன். அவர்களின் பாதிப்புக்குப் புதுமைப்பித்தனும் ஆட்பட்டிருந்தார் என்றே நான் உணர்ந்தேன்.

கேள்வி : அவருடைய மிக நெருங்கிய இலக்கிய நண்பர்கள் யார்? சமகால எழுத்தாளர்களில் யாருடைய எழுத்தின் மீது அவருக்கு அதிக மதிப்பு இருந்தது? 
பதில்: மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று கூறப்பட்ட அந்தக் காலத்து எழுத்தாளர்கள் பலரும் அவருக்கு நண்பர்கள் தான், குறிப்பாக, மணிக்கொடிப் பத்திரிக்கையோடு சம்பந்தப்பட்டிருந்த பி. எஸ். ராமையா, கி.ரா. என்ற கி. ராமச்சந்திரன், க நா. சுப்ரமண்யம், ந .சிதம்பர சுப்ரமண்யம், ந. பிச்சமூர்த்தி முதலியோர் பலரும் அவருக்கு நண்பர்களே. இவர்களைத் தவிர, பாரதிதாசன், காளிதாசன் என்ற பெயரில் எழுதிவந்த ச.து. சுப்ரமண்ய யோகி, மஞ்சேரி ஈஸ்வரன், சங்கு சுப்ரீ மண்யம், கொத்தமங்கலம் சுப்பு , வையாபுரிப் பிள்ளை முதலிய இலக்கிய கர்த்தாக்களும் அவருக்கு நண்பர்கள் தான். இளைஞர்களில் அப்போது நானும் அழகிரிசாமியும் அவருக்கு நெருங் கிய நண்பர்களாக இருந்தோம். சமகால எழுத்தாளர்களின் அவர் பி. எஸ். ராமையா, பிச்சமூர்த்தி, மௌனி போன்றோரின் கதைகள், பாரதிதாசன், ச.து. சு. யோகி போன்றோரின் கவிதைகள், கொத்தமங்கலம் சுப்புவின் கிராமியப் பாடல்கள் முதலியவற்றையெல்லாம் பாராட்டினார். எனினும் எவரையும் ஒட்டுமொத்தமாகப் பாராட்டிவிட மாட்டார்; சிலவற்றைப் பாராட்டவும் செய்வார். சிலவற்றை உதறித் தள்ளவும் செய்வார். என் விஷயத்திலும் அழகிரிசாமி விஷயத்திலும் அப்படித்தான். எனினும் ஒரு முறை எங்களை ஒரு கவிஞரிடம் அறிமுகப்படுத்தும்போது, இவர்கள் இருவரும் என் எதிர்கால நம்பிக்கைகள்'' என்று குறிப்பிட்டார்.

கேள்வி : சுவையான சம்பாஷணைக்காரர் என்று அவரைப்பற்றிக் கூறப்படுகிறது. அவருடைய சம்பாஷணையில் சுவை ஏறக் காரணம் என்ன? ஹாஸ்யமா? கிண்டலா? கோணல் பார்வையா? அவருடைய பார்வையினாலே அவர் தொடும் விஷயத்தின் தளம் மாறி விடுகிறதா? விஷயத்தில் சுவை ஏற வேண்டும் என்பதற்காக Facts-ஐத் திரித்தல், மிகைப்படக் கூறல் ஆகிய யுக்திகளை அவர் கையாள்வாரா? அதாவது முதன்மையான நோக்கம் பேசும் நேரத்தில் நண்பர்கள் மத்தியில் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதா? அல்லது உண்மை நிலையில் சிறு சிதைவும் ஏற்படக்கூடாது என்பதா? 
பதில் : ஆமாம். புதுமைப்பித்தன் சுவையாக உரையாடக்கூடியவர் தான். பேசுவதற்கு இதுதான் விஷயம் என்ற நியதி ஏதும் அவருக்குக் கிடையாது. பழைய இலக்கியம், புதிய இலக்கியம், வைத்தியம், சோதிடம், தத்துவ விசாரணை, ஊர்வம்பு - எது வேண்டுமானாலும் பேச்சுக்குரிய விஷயமாகிவிடும் அவருக்கு. அவரது சம்பாஷணை சுவையாக இருப்பதற்கு முதற் காரணம் அவர் பேசுகின்ற விஷயத்தை ஈடுபாட்டோடு பேசுவார். அவர் பேசுகின்ற பாணியைப் பார்த்தால், அவர் அந்த விஷயத்தில் அத்துபடியானவர் போன்ற ஒரு மயக்கம் தோன்றும். பொதுவாக விஷயத்தைத் திரித்துக் கூற முயல மாட்டார். ஆனால் தனது கருத்தை அழுத்திக்கூற மிகைப்படக் கூறுவதுண்டு. அவரது பேச்சின் முதன்மையான நோக்கம் பேசிக் கொண் டிருக்கும் நண்பர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதைவிட, எதிராளியை ஆழம் பார்க்கும் காரியமாகவே இருக்கும். பேச்சு சூடு பிடித்து வாதமாக மாறிவிட்டால், பிறகு தம் கருத்தை வலியுறுத்தத் தடம் புரளவும் தயங்கமாட்டார். ஜான்சனைப் பற்றிச் சொல்வார்கள். ஜான்சன் வாதத்தில் கெட்டிக்காரர். எனினும் தமது வாதத்தில் துப்பாக்கியில் குண்டு தீர்ந்துவிட்டால், அதாவது மேற்கொண்டு கூறுவதற்கு எதுவும் இல்லையென்றால், துப்பாக்கியை மாற்றிப் பிடித்துக் கட்டையால் அடிக்கவும் தயங்க மாட்டார் என்று. புதுமைப்பித்தனும் அப்படித்தான். நகைச்சுவை அவருக்கு உடன் பிறந்தது. அந்த நகைச்சுவையுணர்வு இல்லாவிட்டால், அவர் பட்ட கஷ்டங்களுக்கு வாழ்க்கையே அவருக்கு நரகமாகியிருக்கும். அவரது பேச்சிலும் ஹாஸ்யமும், கிண்டலும் தானாகவே குதித்துக் கொண்டு வரும். அவர் எதைப் பேசினாலும், அவர் நம்புவதைப் பேசினாலும் நம்பாததைப் பேசினாலும், மின்னல் வெட்டுப் போல். அபூர்வமான கருத்துக்கள், அற்புதமான வாக்கியங்கள், ஆழ்ந்த மேதா விலாசத்தைப் புலப்படுத்தும் உண்மைகள், அத்துடன் அதிர் வெடி போன்ற ஹாஸ்யங்கள் எல்லாமே புரண்டு புரண்டு வரும். மணிக்கணக்கில் அவர் பேசிக் கொண்டிருந்தாலும் இந்தச் சுவைகள் குன்றுவதில்லை.

கேள்வி : ஒரு விஷயத்தின் மீது அவர் பார்வை எப்படிப் படியும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையோ ஒரு சம்பாஷணைத் தொடரையோ வருணிக்க முடியுமா? அவருக்கே உரித்தான பாணியில் கொஞ்சம் பேசிக்காட்ட முடிந்தால் நல்லது. 
பதில் : ஒரு முறை நண்பர் அழகிரிசாமியும் புதுமைப்பித்தனும் நானும் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை வீட்டுக்குப் போனோம். அன்றுதான் அழகிரிசாமி என்னோடு வந்து புதுமைப்பித்தனை முதன்முதலில் நேரில் சந்தித்தார் . வையாபுரிப் பிள்ளை வீட்டுக்குப் போகும் வழியில் அழகிரிசாமி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அந்தச் சமயத்தில் வையாபுரிப் பிள்ளை திருவள்ளுவரின் காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அதில் மற்றவர்கள் கூறி வந்த காலத்துக்கும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர் திருவள்ளுவர் என்று எழுதியிருந்தார். இதைப் படித்த ஒரு பண்டித நண்பர் அழகிரிசாமியிடம் “இந்த வையாபுரிப் பிள்ளையே இப்படித் தான். பழைய தமிழ்ப்புலவர்களின் காலத்தையெல்லாம் மிகவும் பிற்பட்டதாகவே கூறுகிறார்'' என்று குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதைக்கூறி ''இதைப்பற்றி நீங்கள் என்ன. நினைக்கிறீர்கள்? பண்டித நண்பர்கள் கோபித்துக் கொள்வதில் அர்த்தமுண்டா?'' என்று புதுமைப்பித்தனிடம் கேட்டார். அதற்குப் புதுமைப்பித்தன், ''பண்டிதர்தானே. நம் பண்டிதர்களுக்கு நமது பழைய புலவர்களின் காலத்தையும் இலக்கியங்களின் காலத்தையும் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னால் தள்ளிப் போடுவதில் பரமதிருப்தி. அப்படிச் சொல்லிக் கொள்வதில் ஒருபெருமை. டார்வின் பரிணாமத் தத்துவப்படி தோன்றிய முதல் குரங்கே தமிழ்க்குரங்கு என்று சொன்னால் தான் நம்மளவனுக்குத் திருப்தி!'' என்று தமக்கே உரிய நகைச்சுவையோடு கூறிவிட்டார். கொஞ்சம் Crude ஆன ஹாஸ்யம்தான். என்றாலும் அவர் சொல்லக் கருதிய விஷயத்தை இதைக் காட்டிலும் அழுத்தமாகக் கூறியிருக்க முடியயாது, இல்லையா?

கேள்வி : பொதுவாக அவரிடம் நேரில் பழகும் போது ஒரு தீவிர நிலை எய்திவிட்ட மனத்துடன் தொடர்பு கொள்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுமா? அல்லது ஒரு விளையாட்டுப் போக்குடைய மனிதருடன் நேரம் சுவையாகக் கழிகிறது என்ற எண்ணம் ஏற்படுமா? 
பதில் : தீவிர நிலை என்று நீங்கள் கூறுவது ஒரு Superlevelதான் என்று கொண்டால், அவரோடு பழகும் போது நமக்கு அத்தகைய உணர்வு ஏற்படாது. என்றாலும், உலகஞானமும் அறிவு விசாலமும் மிக்க ஒரு மேதையோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு நிச்சயமாக ஏற்படும். அவருடைய பேச்சில் விளையாட்டுத்தனமான குறும்பும் வேடிக்கையும் ரவை மாதிரி புரளும். ஆனால் அவர் விளையாட்டு மனிதரல்ல. அவர் சீரியஸாகப் பேச முனைந்தால் சிவன் ருத்ராவதாரம் எடுத்த மாதிரியே இருக்கும் என்று சொல்லலாம். ருத்ர தாண்டவம் மாதிரி வானையும் மண்ணையும் அளந்து பாயும் வார்த்தைப் பிரயோகங்களோடு விஷயங்கள் அருவி மாதிரி கொட்டுவதும் உண்டு. அவரது மனோ நிலை விரக்தியுற்றிருக்கும் பொழுதில் தான், வார்த்தைகளில் கசப்பும் கைப்பும் அதிகமாகப் புரை யோடியிருக்கும். மற்ற வேளைகளில் அவரோடு பழகுவதும் பேசுவதும் இன்பானுபவமாகவே விளங்கும்.

கேள்வி: நீங்கள் அவருடன் பழகும் காலத்தில் அவருடைய உடல் நிலை எப்படி இருந்தது? ஆரோக்கிய நிலையில் அப்பொழுதே குறை இருந்ததாக உணர்ந்திருந்தீர்களா? 
பதில் : - நான் பழகத் தொடங்கிய காலத்தில் அவர் உடல் நிலை மோசமில்லை. ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அவரை எப்போதாவது கொடிய இருமல் வாட்டி வதைத்ததுண்டு. இரும ஆரம்பித்தால், விடாமல் கண்ணிலிருந்து கண்ணீர் தெறிக்கிறவரை இருமுவார். பிறகு மூச்சு வாங்குவார். கேட்டால், இன்னைக்கு வெளியிலேயே ரொம்ப நேரம் அலைந்து விட்டேன் பாரு' என்றோ, 'உன்னோடு சேர்ந்து நேற்று சிகரெட்டை ஊதித் தள்ளினேன் பாரு' என்று ஏதோ காரணம் சொல்வார். அந்த இருமலை அவரும் க்ஷயரோகம் என்று சந்தேகிக்கவில்லை; அவரோடு நெருங்கிப் பழகிய என் போன்ற நண்பர்களும் சந்தேகிக்கவில்லை. காரணம் க்ஷயத்திற்குரிய சாதாரண அறிகுறிகள் கூடத் தென்படாததுதான். எனினும் ஒரே ஒரு முறை அவர் இவ்வாறு கொடூரமாக இருமி முடித்த பிறகு, என்னைப் பார்த்து "என்ன ராசா! ஒருவேளை என்னைச் சாவு துரத்திக் கொண்டு வருகிறதோ? அப்படி ஒரு பயம் தோன்றியிருக்கிறது எனக்கு'' என்று சொன்னார். அப்போதும் நான் அவருக்கு உயிரைக் குடிக்கும் காச நோய் பற்றியிருப்பதாகக் கருதவில்லை. ஒருவேளை அவருக்கு அந்தச் சந்தேகம் மனத்தில் இருந்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

கேள்வி; அந்தக் காலத்தில் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பழக்க வழக்கங்கள் எதுவும் மேற்கொண்டிருந்தாரா? அதாவது உடற்பயிற்சி, நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள், போதுமான அளவு ஓய்வு முதலியவை. 
பதில் : ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பழக்க வழக்கங்கள் என்று எதுவுமே கிடையாது அவருக்கு . அதே மாதிரி உடற் பயிற்சி, திட்டமிட்ட ஓய்வு, நேரத்துக்கு உணவு என்ற நியதிகளும் கிடையாது. வாய்க்கு ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார். அதற்காகக் குறிப்பிட்ட ஓட்டலைத் தேடியும் போவார். ஆனால் சாப்பாடு குறைவுதான். அதே போல் வேளா வேளைக்குச் சாப்பிடவும் மாட்டார். சாப்பாட்டையே மறந்து விட்டு வேலையும் பார்ப்பார்; பேசிக் கொண்டும் இருப்பார். சாப்பிடவில்லையே என்று நினைவூட்டினால், ''ஓஹோ ! அப்படி ஒரு விஷயம் பாக்கியிருக்கிறதா? வா, சாப்பிடப் போகலாம்'' என்று எழுந்து விடுவார். அத்தகைய பிறவி அவர். 
கேள்வி : அந்த நாட்களில் அவருடைய வாழ்க்கைச் செலவுக்குப் போதுமான வருமானம் இருந்ததா? ஒரு எழுத்தாளனின் ஆசைகளான புத்தகம் வாங்குதல், கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தல் அல்லது நண்பர்களை உபசரித்தல் ஆகிய அபிலாஷைகனை யேனும் அவரால் நிறைவேற்ற முடிந்ததா? 
பதில் : நான் அவருடன் பழகிய காலத்தில் அவருக்கு நல்ல வருமானம் வந்த சமயமும் உண்டு; இருந்த பணமும் தீர்ந்து எந்த வருமானமும் இல்லாது இருந்த நாட்களும் உண்டு. பத்திரிகைகளில் வேலை பார்த்து வந்த காலத்திலும், குறைந்த வருமானமுள்ள எல்லா மத்தியதரக் குடும்பங்களையும் போலத் தான் அவரது வாழ்வும் இருந்தது. புத்தகம் வாங்குவது அவரது நிரந்தர ஆசை. கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்தது அது. ஆயிரக்கணக்கில் பணம் புரண்டபோது நூற்றுக்கணக்கில் புத்தகங்களை வாங்கினார். சினிமாவுக்கு எப்போதாவது போவார். நண்பர்களை உபசரிப்பதிலும் அவருக்குத் தாகம் உண்டு. கையில் பணமிருந்தால் தாராளமாகவே உபசரிப்பார். ஒருமுறை நான் இரானி ஹோட்டலில் சாப்பிடப் போனேன். புதுமைப்பித்தன் சுத்த சைவம் 'அதனால் அங்கு நீ சாப்பிடு. நீ சாப்பிடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று என்கூட வந்தார். சாப்பிட்டு முடிந்ததும் பில்லை அவர்தான் கொடுத்தார். அதேபோல் வீடு தேடிவரும் எழுத்தாள நண்பர்கள், அதிலும் சாப்பாட்டு நேரத்தில் வந்து விட்டால், அவர்களைச் சாப்பிடச் சொல்வார். ''எழுத்தாளன் சமயங்களில் பட்டினியாகக்கூட இருப்பான் . அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஜம்பமாகப் பேசிக் கொண்டும் இருப்பான். சாப்பிட்டாயிற்று என்றால் ஆயிற்று என்று பொய்யும் சொல்வான். அதற்காகத்தான் வருபவனைப் சாப்பிடச் சொல்வேன்'' என்று அவரே ஒருமுறை கூறினார்.

கேள்வி : பொருளாதார முடையினால் தான் அவர் சினிமாத்துறையில் நுழைந்தாரா? அல்லது சினிமா என்ற கலைச் சாதனத் தில் அவருக்குத் தனி ஈடுபாடு இருந்ததா? 
பதில் : 'மணிக்கொடிப்' பத்திரிகையில் சிறிது காலம் சம்பளம் என்று எதுவும் இல்லாமல் சேவை செய்த பிறகு, பத்தாண்டுக் காலத்துக்கும் மேலாக 'தினமணி', 'தினசரி' ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் மாதச் சம்பளம் பெற்று வேலை பார்த்து வந்தவர் புதுமைப்பித்தன். தினசரியை விட்டு விலகியதும். வருவாய்க்கு வழி என்ன என்பது அவரது நியாயமான கவலை , வேறு பத்திரிகைகளிலும் சேர முடியாது. சேர்ந்தாலும் தினசரியில் வந்த அளவுக்கு வருமானம் வந்திராது. எனவே அவர் சினிமாத்துறையில் நுழைவதற்குப் பொருளாதாரம்தான் முதற்காரணம் என்பது மட்டுமல்ல, அதுவே முழுக்காரணமும் கூட மற்றப்படி அவருக்கு அந்தக் கலைச்சாதனத்தில் தனித்த ஈடுபாடு எதுவும் கிடையாது. தமது போக்குக்கும் எழுத்துக்கும் அந்தத் துறையில் ஒத்து வராது என்று அவருக்குத் தெரியும். எனவே அவர்தான் அந்தத் துறையின் போக்குக்கு ஒத்துப் போய் சினிமாவுக்கு எழுத முற்பட்டார்.
கேள்வி : சோதனை' என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் யோசித்ததாக எழுதி இருக்கிறீர்கள். அவர் உயிரோடு இருந்திருந்தால், அதனை ஆரம்பித்திருப்பார் என்று கருதுகிறீர்களா? அல்லது அது எழுத்தாளரின் வழக்கமான கனவுதானா? 
பதில்: 
சினிமாவில் வரும் வருவாயைக் கொண்டு, தமது ஆத்ம சாந்திக்காக அவர் 'சோதனை' என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தத் திட்டமிட்டது உண்மைதான். அந்தப் பத் திரிகை இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று அவர் என்னோடும் அழகிரிசாமியோடும் யோசனைகள் கூறிப் பேசியதும் உண்டு. அவர் நினைத்தபடியே சினிமாத் துறையில் நிறையப் பணம் தொடர்ந்து வந்திருந்தால், அவர் அந்தப் பத்திரிகையை நிச்சயம் ஆரம்பித்திருப்பார். அப்படி ஆரம்பித்திருந்தால் அது நிலைத்திருக்குமா, நீடித்திருக்குமா என்பது வேறு விஷயம். என்றாலும், அவர் தமது கதைகளை, கருத்துக்களைத் தடையின்றிச் சுமந்து செல்ல ஒரு வாகனம் வேண்டும் என்று விரும்பியது உண்மை . அந்த அளவில் அது அவரது ஆசைக் கனவில் ஒன்றாகவே இருந்தது. ஆனால் அவரது ஆசைக் கனவுகளில் பலவும் கருகியதுபோல் அதுவும் கருகிவிட்டது. அவ்வளவுதான்.

கேள்வி : 
• இரவல் விசிறிமடிப்பு' என்ற தலைப்பில் அவர் பல எழுத் தாளர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்தியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த எழுத்தாளர்கள் யார்? அவர்களைப் பற்றி அவர் முன் வைத்த வாதத்தின் சாராம்சம் என்ன ? 
பதில் : 
'இரவல் விசிறி மடிப்பு' என்ற தலைப்பில் அவர் ஒரே ஒரு எழுத்தாளரைத்தான் தாக்கி எழுதியிருந்தார். புதுமைப்பித்தனுக்குப் பிறமொழிக் கதைகளைத் தழுவி எழுதுவது அதாவது மூலத்தைக் குறிப்பிடும் நேர்மையான தழுவல், மூலத்தைக் குறிப்பிடாத திருட்டுத் தழுவல் - இரண்டுமே பிடிக்காது. இரண்டுக்கும் அவர் எதிரி. பிறமொழிக் கதைகளை அப்படியே மொழி பெயர்த்துத்தான் தரவேண்டும் என்பது அவர் கட்சி. உதாரணமாக, பேராசிரியர் கே. சுவாமிநாதன் 'கட்டை வண்டி' என்ற தழுவல் நாடகத்தை எழுதியிருந்தார். அந்த நாடகம் நடிப்பதற்கேயன்றி படிப்பதற்கல்ல என்று குறிப்பிடுவதற்காக அவர் தமது முன்னுரையில் இது வெறும் காப்பி டிகாக்ஷன், மேடை, சீன், நடிகர்கள் என்னும் சர்க்கரையும் பாலும் சேர்ந்தால் தான் இது சோபிக்கும்' என்ற பொருளில் எழுதியிருந்தார். இதற்கு மதிப்புரை எழுதிய புதுமைப்பித்தன் ஒரே வரியில் இது காப்பி அல்ல. சிக்கரிப் பவுடர்!'' என்று எழுதி அதனைத் தகர்த்து விட்டார். இதே போல் சினிமாத் துறையில் புகுமுன்னர் ஏ . எஸ். ஏ. சாமி என்ற எழுத்தாளர் 'பில்ஹணன்' என்ற நாடக நூலை எழுதியிருந்தார். வடமொழியிலுள்ள பில்ஹணன் கதையையோ அதைப் பின்பற்றிப் பாரதிதாசன் எழுதியுள்ள புரட்சிக் கவி என்ற குறுங்காவியத்தையோ குறிப்பிடாமல், எனினும் அதிலுள்ள விஷயங்களை இந்த எழுத்தாளர் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்ற காரணத்திற்காகவே 'இரவல் விசிறி மடிப்பு' என்ற தலைப்பில் புதுமைப்பித்தன் 'தினசரி'யில் அவரைத் தாக்கி விமர்சனம் எழுதியிருந்தார். நீண்ட விமர்சனம் தான். இதேபோல் இதற்கு முன் 'ரசமட்டம்' என்ற புனை பெயரில் அவர் 'கல்கி' எழுதியுள்ள கதைகள் பலவற்றுக்கு மூலாதாரம் மேலை நாட்டுக் கதைகள் தான் குறிப் பிட்டு, ஒரு பெரிய கட்டுரைப் போரே நடத்தினார். இவ்வாறு திருட்டு இலக்கியம் படைப்பவர்களைப் பற்றி, ' இன்னொருவன் கதையைத் திருடி, தன் சொந்தக் கதையென்று கூசாமல் உரிமை கொண்டாடிக் கொள்பவர்களை, சோரம் போன மனைவிக்குப் பிறந்த பிள்ளைக்குத் தான் தான் தகப்பன் என்று கூறிக்கொள்ளும் வெட்கம் கெட்டவர்களுக்குத்தான் ஒப்பிடலாம்'' என்று ஒருமுறை கூறினார் புதுமைப்பித்தன்.

கேள்வி : 
துடுக்குப் பேச்சால் நண்பர்களையும் சில சமயம் அவர் புண்படுத்தி விடுவார் என்று சொல்லப் படுகிறது. இது உண்மைதானா? அல்லது தகுதியானவர்களுக்குத்தான் அந்த வெகுமதி கிடைக்குமா? 
பதில் : புதுமைப்பித்தன் கூறும் விமர்சனம் அல்லது Comment எப்போதும் கூர்மையாகவே இருக்கும். அது அவர் இயல்பு . பொதுவாக அதில் வன்மம் இருக்காது. அவரை அறிந்தவர்கள் அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள்; அறியாதவர்கள் அவரை நெருங்கவே அஞ்சுவார்கள். எனினும், பொதுவாக மாய்மாலக்காரர்கள், போலிப் பெருமை பாராட்டுபவர்கள் போன்றவர்கள் விஷயத்தில்தான் அவர் மிகவும் காரசாரமான வார்த்தைகளைப் பிரயோகிப்பார். அவருக்குப் பிடிக்காதது போலித்தனம். எனவே அத்தகையோர் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளத் தவறமாட்டார்கள். உதாரணமாக, என்னோடு வேலைபார்த்து வந்த இன்னொரு எழுத்தாளரிடம் கட்டுரை கேட்டுப் போவதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் வந்திருந்தார். அப்போது புதுமைப்பித்தனும் அங்கிருப்பதைப் பார்த்து உபசாரத்துக்காக, 'நீங்களும் ஒரு கதை எழுதித் தாருங்களேன்'' என்று அவர் கேட்டு விட்டார். அந்தப் பத்திரிகை தரமான பத்திரிகை அல்ல என்பது ஒரு பக்கம்; ஏதோ வந்த இடத்தில் போகிற போக்கில் கேட்டது ஒரு பக்கம், எனவே புதுமைப்பித்தன் அந்தப் பத்திரிகை ஆசிரியரைப் பார்த்து, 'அப்பா, நீ என்னிடம் கதை கேட்காதே. என் கதையை உன் பத்திரிகை தாங்காது. என் கதை நெருப்பப்பா நெருப்பு. உன் பத்திரிகை சாம்பலாகி விடும்!'' என்று கூறிவிட்டார். தமது எழுத்தைப்பற்றி அவர் கொண்டிருந்த மதிப்பின் காரணமாகத்தான் அவர் இவ்வாறு கூறினார். இந்த மாதிரிப் பல சந்தர்ப்பங்கள்.

கேள்வி : அவர் மணிக்கொடியில் எழுதியவர். காந்திஜி எழுப்பிய தேசிய உணர்ச்சி எங்கும் பரவியிருந்த காலம் அது. அவரது நண்பர்களில் பல தேசியவாதிகளாக இருந்திருக்கிறார்கள். சிலர் நேரடி அரசியலில் இறங்கி சிறையும் சென்றிருக்கிறார்கள். இவ்வுணர்ச்சிகளைப் புதுமைப்பித்தனும் பகிர்ந்து கொண்டுள்ளதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? 
பதில் : அரசியல் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஓர் அம்சமாகத்தான் இலக்கியத் துறையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது; அந்த மறுமலர்ச்சிக் காலத்தில் மலர்ந்து மணம் பரப்பியவர்தான் புதுமைப்பித்தன். இதை மறந்து விடுவதற் கில்லை. புதுமைப்பித்தன் நேரடி அரசியலில் இறங்கியது மில்லை, பங்கெடுத்ததுமில்லை என்பது உண்மைதான். ஆனால் அவரைத் தேசியவாதியல்ல என்று கூறிவிட முடியாது. காந்திஜியிடம் அவருக்கு மிகுந்த மதிப்புண்டு. தமது அந்திம காலத்தில் புனா நகரில் இருந்தபோது காந்திஜியைப் புனா நகரத் தைச் சேர்ந்த ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான் என்று கேள்விப்பட்டவுடன், நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் கூட 'புனா என்ற வார்த்தை புண்ணிய என்பதன் சிதைவு என்று சொன்னார்கள். இருகண் குருடனைத்தானே நல்ல கண்ணுபிள்ளை என்பார்கள். அதே மாதிரி சரித்திரத்தின் பாவத்தைக் கட்டிக் கொண்டது இந்த ஊர். எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை'' என்று எழுதினார். மேலும், புதுமைப்பித்தன் தமது கடைசிக் காலம் வரையிலும் கதரைத் தவிர வேறு எதையும் அணிந்ததில்லை. அவரது தேசிய இயக்க காலக் கதைகளைப் படித்துப் பார்த்தால், அவர் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக விளங்கினார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். துன்பக்கேணி என்கிற நெடுங்கதையே ஏகாதிபத்தியச் சுரண்டலின் கொடுமையை விளக்க எழுந்த கதைதானே. இதைப்போல் பல கதைகளில் அவரது இந்த உணர்வை நாம் இனம் காண முடியும்.

கேள்வி : இந்திய தேசிய விடுதலை இயக்கம். காந்திஜியின் எழுத்து ஆகியவை அவரைக் கவரவில்லை எனில், இவற்றுக்கு அப்பால் அவரை ஆட்கொண்டிருந்த நம்பிக்கைகள் என்ன? இந்தச் சமுதாயத்தில் ஓர் மாற்றம் நிகழ அவசியம் உண்டு என அவர் கருதினாரா? எவ்விதச் சிந்தனைகள் இம்மாற்றத்தை நிகழ்விக்கும் என அவர் கருதினார்? 
பதில் : காந்திஜி தலைமையில் நடந்த இந்திய விடுதலை இயக்கத்தின் அம்சமாகத்தான் புதுமைப்பித்தனும் தோன்றினார் என்று முன்னரே கூறினேன். எனவே தேசிய, இயக்கம் அவரைக் கவரவில்லை என்று அர்த்தமாகாது. தேசிய இயக்க விரோதமாகவோ ஏகாதிபத்திய ஆதரவாகவோ அவரது எழுத்துக்களில் ஜாடைமாடையாக எதுவும் காண முடியாது. எனினும் ஓர் உண்மையைக் கூறியாக வேண்டும். அவர் கரந்திஜியை மதித்தார். ஆனால் காந்தீயத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் இவற்றுக்கப்பால் அவரை ஆட் கொண்டிருந்த கருத்துக்கள் என்ன என்று பார்த்தால், அவரது ஆரம்ப காலக் கதைகளில் அவர் சமுதாயப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், இவற்றின் அடி யொற்றிப் பிறந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையே கதைப் பொருளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மேலும் ஓரஷை நாத்திக வாடை வீசும் Rationalist கருத்துக்களும், Materialist கருத்துக்களும் சற்று ஆழமாகவே வேர்பாய்ச்சியிருப்பதையும் காணலாம். எனவே அத்தகைய கருத்துக்கள் அந்தக் காலத்தில் அவரது கவனத்தைக் கவர்ந்திருந்தன என்று ஊகிக்க இடமுண்டு. சமுதாய மாற்றம் வேண்டும் என்று உணர்ந்தவர்தான் அவர். அந்த உணர்வு இல்லாவிட்டால் அவரது கதைகளில் சமுதாயப் புன்மைகளைக் கண்டு கொதிக்கும் அத்தனை வேதனை பிரதிபலித்திருக்காது. ஆனால் எந்த விதமான சிந்தனை அல்லது போராட்டங்கள் , அந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர் கடைசிவரை தெரிந்து கொண்டதாகவோ, புரிந்துகொண்டதாகவோ, அதுபற்றி அவர் என்றும் ஆழமாகச் சிந்தித்ததாகவோ தெரியவில்லை . 
கேள்வி : 
தமது இலக்கியக் கருத்துக்கள் பற்றி அவர் விரிவாக எழுதி வைக்க வில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நேர்முகப்பேச்சில் அவர் இது பற்றி உங்களிடம் கூறியிருக்கி ரூரா? அவருடைய இலக்கிய நம்பிக்கைகள் என்ன? இலக்கியம் சமுதாய மாற்றத்துக்கான ஒரு கருவி - மிக மேம்பட்ட நுணுக்கமான கருவி - என்றே வைத்துக்கொள்வோம். அவர் அவ்வாறு எண்ணினாரா அல்லது தமது பார்வையில் சமூகத்தைப் பிரதிபலித்தால் மட்டும் போதும் என்று எண்ணினாரா? 
பதில் : 
புதுமைப்பித்தன் , எழுதிய கட்டுரைகள் குறைவுதான். நிறையக் கதைகள் எழுதவேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஆனால் காலக்கிரமத்தில் வரவர அவர் கதைகள் எழுதுவதும் குறைந்து கொண்டுதான் வந்தது. காரணம், வயிற்றுப் பிழைப்புக்குத் தினசரிப் பத்திரிகைத் தொழில் என்று ஆனபிறகு , ஆலைவாய்க் கரும்புச் சர்க்கரையாய்த் திரும்பிவந்த புதுமைப்பித்தன் அதிகம் எழுதியிருக்க முடியாதுதான், மொத்தத்தில் அவர் கதைகளே நூறுதான் தேறும். இலக்கியம் சமுதாய மாற்றத்துக்கான ஒரு கருவி என்று அவர் திட்டவட்ட மாகக் கருதவில்லை. அவரே என்னுடைய கதைகள் பிற்கால நல்வாழ்க்கைக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஸ் யூரன்ஸ் ஏற்பாடு அல்ல'' என்று தமது கதைத் தொகுதியின் முன்னுரை யொன்றில் குறிப்பிடுகிறார். எனினும் அவர் தமது கதைகளின் மூலம் பல்வேறு சமுதாயப் பிரச்சினைகளை அப்பட்டமாகத் தொட்டுக் காட்டி, சமூகத்தில் ஒரு கலகக் குரலை எழுப்பினார் என்றே சொல்ல வேண்டும். சமூகத்தை நோக்கி அவரது கதைகள் கேள்விக் குறிகளைக் கணைகளாகத் தொடுத்தன. ஆனால் அவற்றுக்கு விடைகள் என்ன? அது பற்றி அவர் அக்கறையே கொள்ளவில்லை. சொல்லப் போனால் அது தமது வேலையல்ல என்றே அவர் கருதினார். சுருங்கச் சொன்னால் பிரச்சினைகளை அவர் கதைகளின் மூலம் தொட்டுக் காட்டினார். விடை காணவேண்டிய பொறுப்பு சமுதாயத்தின் வேலை என்று விட்டு விட்டார் என்றே நாம் கொள்ள வேண்டும்.

கேள்வி : தமது படைப்பைப் பற்றி வீருப்புடன் அவர் பேசியிருக்கிறார். சரி. தம் படைப்பு என்ன பிரதிபலிப்பை ஏற்படுத்திற்று என்பதை அவர் மதிக்கும் இலக்கிய நண்பரிடமோ அல்லது வாசகரிடமோ ஆராயும் குணம் அவருக்கு இருந்ததா? அவரது படைப்புப் பற்றி உங்களிடம் ஆராய்ந்துள்ளாரா? எந்தப் படைப்புப் பற்றிக் கேட்டார்? அதற்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்? 
பதில் : நண்பர் அழகிரிசாமி புதுமைப்பித்தனைப் பற்றி கட்டுரை யொன்றில், ''அவருடைய கதைகளில் நமக்கு எவ்வளவு மதிப்புண்டோ அவ்வளவு மதிப்பு அவருக்கும் உண்டு'' என்று எழுதியிருக்கிறார். இது உண்மைதான். புதுமைப்பித்தனுக்குத் தமது எழுத்துக்களில் அத்தனை ஈடுபாடு உண்டு. தம்முடைய கதைகளை தமது குழந்தைகளைப்போல் அத்தனை புனிதமாகவும் அன்போடும் மதித்துப் பேசுவார். தனது எழுத்துக்களில் தனக்கே விசுவாசமும் நம்பிக்கையும் இல்லாத எழுத்தாளன் நேர்மையான எழுத்தாளனாக இருக்க முடியாது. ஆனால் புதுமைப்பித்தனிடம் அத்தகைய நேர்மையும் நாணயமும் பக்தியும் தம் எழுத்தின் மீதே இருந்தன. இது போற்றத் தக்க விஷயம். இது இல்லா விட்டால், எழுத்தாளன் தன் எழுத்தையே விலையாக்கவும் தயங்க மாட்டான். எனவே அவர்தம் கதைகளைப் பற்றி வீறாப்புடன் பேசினால் அதில் அர்த்தம் உண்டு. அது ஓர் அறச் செருக்கு ; மறச்செருக்கு அல்ல. தமது எழுத்தின் தரத்தை. தகுதியை உணர்ந்த, அறிந்த நண்பர்கள் அது பற்றிக் கருத்துத் தெரிவித்தால் அவர் கவனமாகக் கேட்பார். அத்தகைய கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதும், கேட்காததும் கருத்தைத் தெரி விக்கும் மனிதனைப் பற்றி அவர் வைத்துள்ள மதிப்பு அல்லது செய்துள்ள மதிப்பீடு - அதனைப் பொறுத்ததாகவே இருக்கும். ஒரு கடைத்தர எழுத்தாளன் அவரை முகஸ்துதி செய்வதற்காக அவரது கதையைப் பாராட்டினால் அவர் சீறிவிடுவார். 'நீ யார், என் கதையைப் பாராட்டுவதற்கு?'' என்றே கேட்டு விடுவார். அவர் மதிக்கும் நண்பர்கள் விமர்சன ரீதியில் கருத்துத் தெரிவித்தால், கூர்ந்து கேட்பார். ஆனாலும் அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்வாரா என்று சொல்ல முடியாது. அதை வாங்கி மனசில் அசை போடுவதற்கு வைத்து விடுவார். ஒருமுறை நான் அவரிடம் 'பிரம்ம ராட்சஸ்' என்ற கதையைப் பற்றிப் பேசினேன். அந்தக் கதையில் என்னதான் சொல்ல விரும்புகிறீர்கள்? அதில் என்னவோ ஏழு சஞ்சிகளைப் பற்றி வேறு சொல்கிறீர்கள். எதுவும் புரியவில்லையே?'' என்று ஆரம்பித்தேன். முதலில் அவர் அந்தச் சஞ்சிகளை என்னவென்று விளக்கவே தொடங்கி விட்டார். "இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம். அந்தக் கதையை ஏன் எழுதினீர்கள்? நோக்கம் என்ன?'' என்று நேராகவே கேட்டேன். உடனே அவர் சடசடவென்று சிரித்தார். பிறகு சொன்னார். " பச்சையாகச் சொல்லட்டுமா ? வார்த்தைகளை வைத்துக்கொண்டு வாசகனைப் பயங்காட்டி மிரட்ட முடியும் என்பதற்காகவே அதனை எழுதினேன். படித்தால் பயமாக இருக்கிறதல்லவா?'' என்று கூறி முடித்து விட்டார் அவர். 


கேள்வி : அவரது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், அவர் காலத்து இளம் தலை முறையினரின் எழுத்துக்களையும் - அவற்றில் பொருட்படுத்தத் தகுந்தவற்றையேனும் - படித்துப் பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்ததா? இப்படிப்பு அவரிடம் ஏற்படுத்தும் எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்வாரா? அல்லது ரகசியமாக வைத்துக் கொள்வாரா? 
பதில் : தமது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் படைப்புக்கள் எல்லாவற்றையும் அவர் படித்தார் எனச் சொல்ல முடியாது. என்றாலும், அவற்றை அவர் நிறையவே படித்திருந்தார். அவற்றில் பாராட்டுக்குரியவற்றைத் தமது கட்டுரைகளில் அவர் பாராட்டியும் இருக்கிறார். உதாரணமாக, மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் சிலவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், எஸ். வி. வி., கொனஷ்டை போன்றவர்கள் எழுத்துக்கள் சிலவற்றையும் அவர் பாராட்டியிருக் கிறார். ராஜாஜியின் அரசியலை அவர் விமர்சனம் செய்ததுண்டு. என்றாலும், அவரது தேவானை என்ற கதையை அவர் பாராட்டியிருக்கிறார். இளம் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில், அவரது கவனத்துக்கு வந்தவற்றைப் படித்துப் பார்ப்பதும் உண்டு. தமது மனத்தில் அவை பற்றி ஏற்பட்ட கருத்தை அவர் சொல்லத் தயங்குவதில்லை. அதை நேரிலும் சொல்வார்; எழுதவும் செய்வார். அதில் ஒன்றும் அவருக்கு ரகசியம் கிடையாது. இளம் தலைமுறையினரில் நம்பிக்கையளிக்கக் கூடியவர்களை ஊக்குவிக்கவும் செய்வார். உதாரணமாக , எனது கதைகளைக் கையெழுத்துப் பிரதியிலேயே என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். சில நல்ல திருத்தங்களுக்கும் கூட அவர் யோசனை கூறியதுண்டு. அதே போல் ஒருமுறை அழகிரிசாமியின் 'வெந்தழலால் வேகாது' என்ற கதையின் சாராம்சத்தை நான் அவரிடம் சொன்னேன். உடனே அவர்,அந்தக் கதையைக் கொண்டு வரச் சொல். அது நல்ல பத்திரி கையில் வெளிவர வேண்டும்'' என்று சொல்லி, அந்தக் கதையின் கையெழுத்துப் பிரதியைத் தாமே வாங்கி, அதனை ஒரு பிரபல பத்திரிகையில் கொடுத்து வெளிவரவும் செய்தார்.

கேள்வி : தாம் வாழ்ந்த காலத்தில் தமது எழுத்துக்கள் பரவலாகப் படிக்கப்படவில்லை என்ற குறை அவருக்கு இருந்ததா? அல்லது தமது எழுத்தின் தன்மை அதுபோன்ற ஒரு பிரசாரத்தை அளிக்காது என்ற சுய மதிப்பீடு செய்து கொண்டிருந்தாரா? 
பதில் : அப்படிப்பட்ட குறையும் அவருக்கு இருந்தது. அதே சமயம் தமது எழுத்தின் தன்மை அத்தகையது என்ற பிரக்ஞையும் அவருக்கு இருந்தது. ''புகழ் இல்லாமல் இலக்கிய கர்த்தா உயிர்வாழ முடியாது. நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்துக்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது?'' என்று கடிதம்' என்ற கதையில் அவர் எழுதுகிறாரே. அது புதுமைப்பித்தனின் இதயக் குரல் என்றே சொல்லலாம். அதே சமயத்தில் தமது கதைகளை எல்லோரும் ரசித்துவிட முடியாது. அவை பாமர ரஞ்சகமானவையல்ல என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். எனவேதான் அவர் தமது கதைத் தொகுப்பின் முன்னுரையொன்றில் 'வாழையடி வாழையான வரும் எவனோ ஒரு ரசிகனுக்காக நான் எழுதுகிறேன்'' என்று குறிப்பிடவும் நேர்ந்தது. அந்த வாழையடி வாழையான ரசிகர் கூட்டம் இன்றுள்ள அளவுக்குக்கூட அவர் காலத்தில் இல்லை என்பதும் உண்மை . எனவே அப்போதும் அவர் எழுதினார் என்றால், பலனை எதிர்பாராத கர்மயோகியைப்போல், தமது இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் விஷயங்களைக் கதைகளாக எழுதித் தீர்ப்பதொன்றே தமது கடமை என்று அவர் கருதினார். அவ்வாறு பாரத்தை இறக்கி வைப்பதில் தான் அவர் மகிழ்ச்சியம் நிவர்த்தியும் கண்டார் என்றுகூடச் சொல்லலாம். 


கேள்வி : பண்டை இலக்கியத்தில் அவருடைய கவனத்தைக் கவர்ந்த நூல்கள் என்ன? தமிழின் மகோன்னதமான படைப்பு என்று அவர் எதைக் கூறிவந்தார்? 
பதில் : பண்டைய இலக்கியங்களில் கம்பராமாயணம், திருக்குறள், கலிங்கத்துப் பரணி, அப்பர் தேவாரம், நாலாயிரக் பிரபந்தத்தில் பெரியாழ்வார், ஆண்டாள் பாசுரங்கள், காரைக் காலம்மையார், பட்டினத்தார் பாடல்கள், சித்தர் பாடல்கள், பின்னால் வந்த சிற்றிலக்கியங்களான நந்திக்கலம்பகம், முக்கூடற் பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, பஞ்சலட்சணத் திருமுக விலாசம், விறலிவிடு தூதுக்கள் முதலியவை எல்லாமே அவரைக் கவர்ந்திருந்தன என்றே சொல்லலாம். தமிழின் மகோன்னதமான படைப்பு என்று அவர் கருதியது கம்ப ராமாயணம்தான். " கம்பன் தான் எனக்குத் தமிழ் நடையைக் கற்றுத் தந்தவன்'' என்று அவரே கூறுவார். ஒரு பெண்ணை வருணிக்கும்போது அவளைக்' கவிதா ரசிகனுக்குக் கம்பன் மாதிரி'' என்று கூட அவர் வருணித்திருக்கிறார்.

கேள்வி : சிலப்பதிகாரம் பற்றி அவர் எதுவும் பிரஸ்தாபித்துள்ளதாக நான் படித்ததில்லை. அந்தக் காப்பியம் அவரைக் கவர வில்லையா? கவர்ந்திருந்தும் அது பற்றி எழுதச் சந்தர்ப்பம் இல்லாது போயிற்று? 
பதில் : 1 சிலப்பதிகாரம் பற்றி அவர் எதுவும் எழுதவில்லை என்பது உண்மைதான். என்றாலும், அந்தக் காவியத்தை அவர் படிக்கவில்லையென்றோ, அது அவரைக் கவரவில்லையென்றோ சொல்லமுடியாது. அவர் சிலப்பதிகாரத்தையும் நன்கு கற்றிருக்கிறார் என்பதை அவரது 'சிற்பியின் நரகம்' என்ற கதையைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். பட்டினப்பாலையையும் சிலப்பதிகாரத்தையும் படித்து, அவற்றில் கண் கொள்ள புகார் நகரச் சித்திரத்தை மனத்தில் உருவேற்றிக் கொள்ளாமல், அந்தக் கதையில் அவர் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி எழுதியுள்ள வரிகளையும், அந்தக் காலத்துச் சூழ்நிலையை வடித்துக் காட்டும் கற்பனையையும் எழுதியிருக்கவே முடியாது. இல்லையா?
கேள்வி : தமிழில் வசனம் தோன்றிய பின் எழுந்த இலக்கிய ஆசிரியர்கள் பற்றி அவர் என்ன அபிப்பிராயங்களைக் கொண்டிருந் தார்? வேதநாயகம் பிள்ளை , ராஜமய்யர் , மாதவய்யா, வ. வெ. சு. ஐயர், மறைமலை அடிகள் , உ . வே. சாமிநாத அய்யர் , திரு. வி. க., டி. கே. சி., பரிதிமாற் கலைஞர், எஸ். வையாபுரிப்பிள்ளை, பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோர் பற்றி அவருடைய அபிப்பிராயங்களைச் சுருக்கமாகவேனும் கூற முடியுமா? 
பதில் : பலபேரைப் பற்றிய அபிப்பிராயங்களையும் கேட்டு விட்டீர்கள். அவற்றைச் சுருக்கமாகக் கூறுவதும் சங்கடமான காரியம். ஆயினும் இவர்கள் எல்லோரையும் பற்றி அவருக்கு அபிப்பிராயங்கள் உண்டு. வேதநாயகம் பிள்ளையை அவர் தமிழ் நாவலின் தந்தை என்றே மதித்தார். ராஜமய்யரிடம் அவர் ஈடுபாடு கொண்டிருந்ததை ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதிலிருந்தே கண்டு கொள்ளலாம். எனினும் ராஜமய்யரின் 'கமலாம்பாள் சரித்திரத்தை அவர் ''இதன் முற்பாதி நாவல், பிற்பாதி கனவு'' என்று கூறிவிட்டார். பிற்பாதியில் வேதாந்த விசாரம் கதையின் சுவையைக் குறைக்கிறது என்பது புதுமைப் பித்தனின் கருத்து. உண்மையும் அதுதான். மாதவையாவின் குசிகர் குட்டிக்கதைகளை அவர் பாராட்டுவார். எனினும் மாதவையாவின் கதைகள் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்ததால், கதைகள் வெறும் உபாக்கியானமாக அமைந்து விட்டன என்பது புதுமைப்பித்தன் பட்டுக்கொண்ட குறை. வ. வெ. சு. அய்யர்பற்றிப் புதுமைப்பித்தனுக்கு மிகவுயர்ந்த அபிப்பிராயம் உண்டு. தமிழில் சிறுகதைக்கு உயிரும் உருவும் கொடுத்தவர் அவர்தான் என்பது அவர் கருத்து. அவரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்றே மதிப்பார். உ. வே. சா. தமிழுக்குச் செய்த தொண்டு மிகப்பெரிது என்று போற்றுவார். திரு. வி. க. வின் பத்திரிகையுலக சேவையைப் பாராட்டுவார். ரசிகமணி டி.கே.சி.யிடம் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது கருத்துக்களோடு புதுமைப்பித்தன் வேறு பட்டதும் உண்டு. பாரதிதாசனைப் 'பாரதி விட்டு வைத்துப்போன சொத்து' என்று புதுமைப்பித்தனே எழுதியிருக்கிறார். அவரைப் பற்றித் தனிக் கட்டுரையும் எழுதியிருக்கிறார். கவிமணியின் கவிதைகளின் எளிமையைப் பாராட்டுவார். ஆனாலும் ச. து. சு. யோகியாரையும் பாரதிதாசனையும் மதித்த அளவுக்கு அவர் கவிமணியைப் போற்றியது இல்லை. பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள் முதலியோரைப் பற்றி புதுமைப்பித்தன் உயர்ந்த அபிப்பிராயம் எதுவும் கொண்டிருக்கவில்லை. அதற்கு அவர்களது தனித் தமிழ் நடை என்ற பொய்யான நடைதான் காரணம்.

கேள்வி : | அவசரமாகக் கதைகள் எழுத நேர்ந்தது என்று சற்றுப் பெருமையுடனேயே அவர் சொல்லிக் கொள்கிறார். 'செல்லம்மாள்,' சாபவிமோசனம்' 'சுப்பையாபிள்ளையின் காதல்கள்,' 'சிற்பியின் நரகம்' ஆகிய கதைகளைப் படிக்கும்போது நிதானமாக உருவாக்கிய தன்மையை அவை காட்டுகின்றன. சந்தர்ப்ப சௌகரியத்தை ஒட்டி இரண்டு விதமாகவும் அவர் எழுதியிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. உங்கள் அபிப் பிராயம் என்ன? 
பதில் : அவசரமாக எழுதினேன் என்று அவர் சொல்வது ஒன்றும் பெருமை பாராட்டிக் கொள்வதல்ல. எனக்குத் தெரிந்த வரையில் அவர் பல கதைகளையும் அப்படித்தான் எழுதினார். அவர் எழுத உட்கார்ந்தால், அசுரவேகத்தில் கை ஓடும். அநேகமாக அடித்தல் திருத்தல் அதிகம் இருக்காது. சில நிதானமாக யோசித்து எழுதியவையாகத் தோன்றுகின்றன என்கிறீர்கள். ஆனால் அவரே சொல்கிறார், ''எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி காண்பதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்து கொண்டே இருக்கும். அந்தக் கிடங்கிலிருந்து நான் எப்பொழுதும் எடுத்துக் கொள்வேன்'' என்று. ஆம், எந்தவொரு எழுத்தாளனுக்கும் நெஞ்சக் குகையில் கருக்கொண்டு, மணலின் உறுத்தலைத் தாங்கமாட்டாது சுருண்டு சுருண்டு முத்தாக மாறும் சிப்பிப் புழுவைப்போல் பல கதைகள் உருவாகி வருவதுண்டு. எனவே எழுதும்போது நிதானம் வேண்டுமென்பதில்லை. எழுதுவதற்கு முன் கதையை நெஞ்சில் உருச்சமைப்பதில் தான் நிதானம் வேண்டும். இவ்வாறு உருச்சமைவது ஒரு நாளிலும் நடக்கலாம். ஒன்பது வருஷமும் ஆகலாம. எனவே புதுமைப்பித்தன் அவசரத்தில் எழுதினேன் என்று சொன்னால், கதையே அவசர கோலத்தில் பிறந்தது என்று அர்த்தமல்ல. அது அவரது நெஞ்சில் வளர்வதற்கு எவ்வளவு காலம் பிடித்ததோ, அது நமக்குத் தெரியாது. சொல்லப்போனால், ஒரே Sittingல் எழுதி முடிக்கும் கதையே மிகவும் நன்றாக வாய்த்து விடுவதுண்டு. எனக்கும் இத்தகைய அனுபவம் ஏற்பட்டதுண்டு.

கேள்வி : மணிக்கொடிப் பத்திரிகையைச் சிறந்த பத்திரிகையாக அவர் கண்டாரா? அல்லது ஓர் இயக்கத்தின் ஆரம்பமாக எண்ணி இருந்தாரா? 
பதில் : மணிக்கொடிப் பத்திரிகையை அவர் அந்தக் காலத்தின் தரமான பத்திரிகையாகவே மதித்திருந்தார். மணிக்கொடிப் பத்திரிகை வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் புதிய பரிசோதனை களுக்கு இடம் கொடுக்கும், உற்சாக மூட்டும், அவற்றை வரவேற்கும் பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடை யாது. அவர் தமது காலத்திலேயே எழுதினார். அன்று மறுமலர்ச்சி என்ற வார்த்தை புதிய வேகமும் பொருளும் கொண் டதாக இருந்தது என்றும், அதனைச் சிலர் வரவேற்றார்கள், பலர் கேலி செய்தார்கள் என்றும் அவரே குறிப்பிடுகிறார். இந்த மறுமலர்ச்சியின் விடிவெள்ளியாகத்தான் புதுமைப் பித்தன் மணிக்கொடிப் பத்திரிகையைக் கருதினார் என்பதில் சந்தேகம் இல்லை. மணிக்கொடிப் பத்திரிகை நின்று போனதைப் பற்றிக் கூறும்போது, ''இதுதான் மணிக்கொடியின் கதை. தமிழில் புதிய பரிசீலனைகள் செய்ய வேண்டும் என்று கோட்டை கட்டியவர்களின் ஆசையின் கதை. இந்தக் கதையின் ஒரு அம்சம்தான் எனது கதைகள்'' என்று அவரே எழுதியிருக்கிறார்.

கேள்வி : | மேல் நாட்டு இலக்கியத்தில் அவரைக் கவர்ந்த ஆசிரியர்கள் யார்? அவர் செய்த மொழிபெயர்ப்புக்கள் அவருக்குப் பிடித்தவற்றிலிருந்து அவ்வப்போது கைக்குக் கிடைப்பதைப் பத்திரிகைத் தேவையை முன்னிட்டு மொழிபெயர்க்கப் பட்டவையா? அல்லது தமிழ் இலக்கியத்தில் புது முயற்சிகளைத் தூண்டவேண்டும் என்ற பிரக்ஞையில் தேர்ந்தெடுக்கப் பட்டவையா? 
பதில் : நான் அவரோடு பழகத் தொடங்கிய காலத்தில் அவர் எந்தெந்த ஆசிரியர்களிடம் ஈடுபாடு கொண்டிருந்தார் என்று முன்பே கூறியிருக்கிறேன். மேலை நாட்டு ஆசிரியர்களில் அவரைக் கவர்ந்த எழுத்தாளர்கள் பலர். ஆங்கில எழுத்தாளகளில் ஷேக்ஸ்பியர் , தாமஸ் ஹார்டி, பிரெஞ்சு எழுத்தாளர்களில் எமிலி ஜோலா, பால்ஜாக், அமெரிக்க எழுத்தாளர்களில் மார்க் ட்வெய்ன், சிங்களர் லெவிஸ், ஹென்றி மில்லர், இத்தாலிய எழுத்தாளர்களில் பொக்காசியோ, லூயிஜி பிரண்டெல்லோ , இக்னேஷியோ சைலோன், ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கி, செகாவ் - இவ்வாறு ஒரு பெரிய பட்டியலே போட்டுக் கொண்டு போகலாம். ரஷ்ய நாட்டின் தற்கால இலக்கியங்களில் இலியா இரென்பர்கின் Fall of Paris, வாஸிலி கிராஸ்மனின் The People Immortal Fan of Paris, and some he staple unortal இரண்டையும் அவர் படித்திருந்தார். எனினும் மாக்சிம் கார்க்கியின் Mother நாவலை அவர் படித்ததாகத் தெரிய வில்லை . 
கதைகளை மொழிபெயர்க்கும்போது அவர் திட்டமிட்டுச் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்ததாகத் தெரிய வில்லை. சொல்லப்போனால், அந்தக் காலத்தில் அயல் நாட்டுக் கதைகளை மொழிபெயர்த்துத் தந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பலரும், தாம் படித்த கதை நன்றாக இருப்பதாகத் தோன்றினால் அதனை மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட்டார்கள் எனலாம். என்றாலும் பிற நாட்டுக் கதைகளை அப்படியே தமிழில் அறிமுகப் படுத்துவதன் மூலம் பிற நாட்டு இலக்கிய வளர்ச்சியைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தும், இங்கும் புது முயற்சிகளைத் தூண்டும் பிரக்ஞையும் புதுமைப்பித்தன் உட்பட பலருக்கும் ஓரளவுக்கு இருந்தது என்றே சொல்லலாம்.

கேள்வி : அவர் இரண்டு வாழ்க்கை வரலாறுகளை எழுதியிருக்கிறார். ஒன்று ஹிட்லரைப் பற்றி. மற்றொன்று முசோலினியைப் பற்றி. இந்தச் சர்வாதிகாரிகள் பேரில் அவருக்குப் பாராட்டுணர்வு இருந்ததா? அறிமுகப்படுத்தும் நோக்கம் மட்டும்தான் எனக் கொண்டாலும் இவர்களைத் தேர்ந் தெடுக்கக் காரணம் என்ன? 
பதில் : ஆம். அவர் ஹிட்லரைப் பற்றியும் முசோலினியைப் பற்றியும் அவர் இரு வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். எனினும் அவற்றின் தலைப்புக்களே அவர்களை அவர் எப்படி மதித்தார் என்பதை விளக்கி விடும். ஹிட்லரைப்பற்றிய நூலின் தலைப்பு 'கப்சிப் தர்பார்'. முசோலினியைப்பற்றியதன் தலைப்பு பேசிஸ்டு ஜடாமுனி.' புதுமைப்பித்தன் ஏகாதிபத்திய விரோதியாகத்தான் இருந்தார் என்று முன்னர் சொன்னேன். நாஜிசத்தை யும் பாசிசத்தையும் அவர் எவ்வாறு மதித்தார்? "சோனியாக மெலிந்து வந்த முதலாளித்துவம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த பயத்துடன் பெற்றெடுத்த குழந்தைகள் தான் பாசிசமும் நாஜிசமும்'' என்று அவரே எழுதியுள்ளார். அதேபோல் முசோலினியின் பாசிசத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ''பாசிசம் புதிதாகப் பிறந்த தத்துவமல்ல. புராதன எதேச்சாதிகாரத்துடன், தற்போதைய மெஷின் யுகத்தின் அவசியத்துக்கேற்ப மனிதச் சிந்தனையையும் சுதந்திரத்தையும் நசுக்குவதற்காக கட்டிக்கோக்கப்பட்ட கடுதாசிக் குப்பையே அது'' என்று எழுதி, 'இது நிரந்தரமான தத்துவமாக இருக்க முடியாது என்பதில் ஆச்சரியமில்லை'' என்றே முடிக்கிறார். 
பின் ஏன் அவர் இவர்களைப்பற்றி எழுதினார்? 1937ம் வருஷத்தில் மணிக்கொடிப் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் நவயுகப் பிரசுராலயம் என்ற புத்தக வெளியீட்டுப் பிரிவையும் தொடங்கி, மளமளவென்று பல புத்தகங்களை வெளிக் கொணர்ந்தார்கள். புதுமைப்பித்தன் கதைகளும் அதன் வெளியீடாகவே வெளிவந்தது. அந்தப் புத்தக வெளியீட்டுப் பிரிவில் பலரது வாழ்க்கை வரலாறு நூல்களும், முக்கியமாக அரசியல் உலகில் பிரபலமானவர்களின் வரலாற்று நூல்களும் வெளிவந்தன. உதாரணமாக ஈமன் டிவேலரா, மைக்கேல் காலின்ஸ், லெனின் முதலியோரின் வரலாறுகள் வெளிவந்தன. இந்த வரிசையில் பல எழுத்தாளர்களும் எழுதினார்கள். இந்த வரிசையில் தான் புதுமைப்பித்தன் ஒரு நூலைத் தனியாகவும் இன்னொன்றை இவர் பாதியும் இன்னொருவர் பாதியுமாக எழுதி முடித்தனர். அவைதான் முசோலினியையும் ஹிட்லரையும் பற்றிய நூல்கள். இந்த இரு புத்தகங்களையும் அசுரவேகத்தில் எழுதி முடித்து விரைவில் கொண்டுவர வேண்டும் என்ற அவசரமே, இந்தப் புத்தகங்களை எழுதி முடிக்கும் பொறுப்பை இவரிடம் தள்ளிவிடச் செய்திருக்கும் என்றே நினைக்கிறேன். வேறு விசேடக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி : 
எழுதவிருக்கும் கதைகளைப்பற்றி அவர் உங்களிடம் கூறியதுண்டா? அப்படிக் கூறும்போது கதையின் சிந்தனை அம்சத்தைப்பற்றிப் பேசுவாரா? அல்லது சம்பவக் கோவையுடன் கதையைச் சொல்வாரா? 
பதில் : எழுத நினைத்திருக்கும் கதைகளைக் குறித்து அவர் கூறியதுண்டு. அப்படிப் பல கதைகள் கூறியிருக்கிறார். ஆயினும் கதையைச் சம்பவக் கோவையாகச் சொல்ல மாட்டார். கதையில் தாம் பிரதிபலிக்கவிருக்கும் மையக் கருத்தை , அது சம்பந்தப்பட்ட கதை அம்சத்தை மட்டும்தான் கூறுவார். உதாரணமாக, 'அன்றிரவு' கதையை எழுதிய மாதிரி, பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த புராணக் கதையை மையமாகக் கொண்டு ஒரு கதை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். கதையம்சமும் கருத்தும் இதுதான். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையவில்லை. மாருக தேவர்கள்தான் இரண்டு பக்கமும் நின்று கடைந்தனர். ஒரு பக்கத்திலுள்ள தேவர்கள் கடை வதைத் தர்மமாகக் கருதிப் பயன் கருதாது கடைந்தார்கள். மறுபக்கத்திலுள்ளவர்கள் அமுதம் வந்தால் எப்படி பங்கு வைக்கலாம் என்ற எண்ணத்திலேயே கடைந்தார்கள். அப்படி நினைத்தவர்களின் எண்ணம் வலுப்பெற வலுப்பெற அவர்கள் அசுரராக மாறிவிட்டார்கள். இதுதான் அவர் சொன்ன கதை . இதேபோல் பட்டினத்தாரை வைத்து ஒருநெடுங்கதை அல்லது நாவல் எழுதவேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டி ருந்தார். பட்டினத்தாருக்கு வாழ்க்கையில் பாசமும் பற்றும் கடைசியில் தான் அறுந்தன என்பது கதைப் பொருள். மனைவி, மகன், தாய் ஆகிய மூன்று பாசக் கயிறுகள் அவரைப் பிணித்திருக்கின்றன. முதலில் மகன் மறைகிறான். பிறகு மனைவியை விட்டு அவர் பிரிகிறார். என்றாலும் தாயின்மீது பாசம் அறவில்லை. அது அவளைச் சிதையில் ஏற்றிய பின்னர்தான் அறுகிறது. இந்தப் பாசப் பிணைப்பின் காரணமாகவே அவருக்குச் கசப்புணர்வு ஏற்படுகிறது. இந்தப் பாசக் கயிறுகள் அறுந்து விடுதலை பெற்ற பிறகுதான் அவருக்குப் பேய்க் கரும்பும் இனிக்கிறது. இப்படிச் சென்றது அவரது கற்பனை. அவர் இவ்வாறு பட்டினத்தாரைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம், இதே போன்ற தொனியில் Christ ஐப்பற்றி எழுதப்பட்டிருந்த A Certain Jesus என்ற மேலை நாட்டு நாவலைப் படித்ததினால் எழுந்தது என்றும் அவரே சொல்லியிருக்கிறார். இப்படி அவர் சொன்ன கதைகள் எத்தனையோ உண்டு. எனினும் அவை யாவும் கருக் கொண்டதோடு சரி. உருப்பெற்று வெளிவரவே யில்லை .

கேள்வி : பாரதியாரின் 'சந்திரிகையின் கதை'க்கு எதிரொலிபோல் 'கோபாலய்யங்காரின் மனைவி' என்று புதுமைப்பித்தன் ஒரு கதை எழுதியிருக்கிறார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இவற்றின் அடிப்படையில் பாரதியாரை முற்போக்காளர் எனவும் புதுமைப்பித்தனைப் பிற்போக்காளர் எனவும் சிலர் வகுக்கிறார்கள். உங்கள் கண்ணோட்டம் என்ன? 
பதில் : இவ்வாறு பாரதியைப் பற்றியும் புதுமைப்பித்தனைப் பற்றியும் எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரதியைப் புதுமைப்பித்தன் பெரிதும் மதித்தார். இந்த நூற்றாண்டில் நல்ல இலக்கியம் படைக்க முனைந்த எந்தவொரு எழுத்தாளரும் எவ்வாறு பாரதியின் செல்வாக்கிற்கு ஆட்படத் தவறவில்லையோ அவ்வாறே புதுமைப்பித்தனும் தவறவில்லை. உதாரணமாக, அவர் கதை எழுதிய காலத்தில் ஓர் அதிர்ச்சி வைத்தியக் கதையாக விளங்கி பெரிதும் சர்ச்சைக்குள்ளான கதையான 'பொன்னகரம்' என்ற கதைக்கு அடியெடுத்துக் கொடுத்தவரே பாரதியார் தான். ''கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!'' என்று முடிக்கிறாரே கதையை. அதுவே பாரதியின் எதிரொலிதான். 
பேணுமொரு காதலினைக் கருதியன்றோ 
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்; காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்துவைத்துக் 
கற்புகற்பு , என்று உலகோர் கதைக்கின்றாரே. என்ற பாரதியின் அடிகள் தான் பொன்னகரம் கதைக்கான தோற்றுவாயும் விளக்கமும் ஆகும். இதேபோல் 'துன்பக் கேணி' என்ற அவரது நெடுங்கதைக்கு அடியெடுத்துக் கொடுத்ததும் பாரதியின் 'கரும்புத் தோட்டத்திலே' என்ற பாட்டுத்தான். "துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுங்குரல் மீட்டும் உரையாயோ?'' என்று பாரதி கேட்டாரே. அதற்குப் பதில் எழுதுவதுபோலத்தான் கரும்புத் தோட்டத்துக்குப் பதிலாக, தேயிலைத் தோட்டத்தைக் களமாக்கி. 'துன்பக்கேணி' என்ற கதையில் தமிழ் நாட்டுப் பெண்கள் பட்ட துயரைக் கூறினார் புதுமைப்பித்தன். என்றாலும், 'கோபாலய்யங்கார் மனைவி' என்ற கதையை அவர் ஏன் எழுதினார்? பழைய கதைகளை எடுத்து அதற்கு ஒரு twist கொடுத்து, புதுமைப்பித்தன் எழுதியதற்கு அன்றிரவு, அகல்யை, சாப விமோசனம் எல்லாம் உதாரணங்கள். அதே போலத் தான் பாரதியார் கதைக்கும் அவர் ஒரு twist கொடுத்து, அதனை ஒரு நகைச்சுவைக் கதையாக மாற்றினார். இந்தச் செயலில் வேடிக்கைத் தன்மையைத் தவிர விஷமத் தன்மை எதுவும் கிடையாது. எனவே, இதை வைத்துக் கொண்டு மட்டும் முற்போக்கு , பிற்போக்கு என்று எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆட இடமில்லை. ஆனாலும் புதுமைப் பித்தன் விஷயத்தில் அவ்வாறு கட்சியாட இடமுண்டு. அதற்குக் காரணங்களும் வேறு விஷயங்களில் தான் உள்ளன.

கேள்வி : புதுமைப்பித்தன் யாப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை , வசன கவிதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று புதுமைப் பித்தன் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில் சாராம்சமாகக் கூறி இருக்கிறீர்கள். யாப்பையும் துறந்த, வசன கவிதையும் அல்லாத இன்றைய புதுக் கவிதைகளைப் புதுமைப்பித்தன் வர வேற்றிருப்பாரா? புதுமைப்பித்தனின் கவிதை முயற்சிகள் தற்கால இலக்கியத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது? யாருடைய கவிதைகளை அவருடைய முயற்சிகளின் தொடர்ச்சி யாகப் பார்க்கிறீர்கள்? 
பதில் : புதுமைப்பித்தனே 'பாட்டும் அதன் பாதையும்' என்ற கட்டுரையில் குறிப்பிட்ட யாப்பமைதி பழக்கத்தினாலும் வகையறியா உபயோகத்தினாலும் மலினப்பட்டு வரும்போது ரூபத்தின் மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பு. ரூபமில்லாமல் கவிதை இருக்காது. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளது என்று சொல்ல வேண்டும். இன்று ரூபமற்ற கவிதை எனச் சிலர் எழுதி வருவது எவற்றையெல்லாம் ரூபமென்று பெரும் பாலோர் ஒப்புக் கொள்கிறார்களோ அவற்றுக்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயல்கிறார்கள் எனக்கொள்ள வேண்டுமே ஒழிய அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை. இன்று வசன கவிதை என்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கைகள் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல'' என்று எழுதியிருக்கிறார். இன்று புதுக் கவிதை என்று பெயரை மாற்றிக்கொண்டு வந்துள்ள படைப்புக்கள் பழைய வசன கவிதைப் பாணியிலேயே பெரும்பாலும் இருக்கின்றன. எனவே இந்தப் படைப்புக்களைப் புதுமைப்பித் தன் வரவேற்றிருப்பார் என்று நான் கருதவில்லை. 
புதுமைப்பித்தன் அவரே சொன்ன மாதிரி ஒரு புதிய ரூபத்தில் கவிதை எழுதும் முயற்சியைத் தொடங்கி வைத்தார். எனினும் அவர் அவ்வாறு எழுதிய கவிதைகளில் நிசந்தானோ' சொப்பனமோ?' 'ஓடாதீர்!' ' காதல் பாட்டு,' ' மாகாவியம்' என்ற நான்கும் தான் உருப்படியானவை, என்றாலும், அவருக்கே இது தொடக்கம்தான். ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் இதே பாணியில் மேலும் வலுவான சோதனை களைச் செய்திருக்கலாம். அவரது கவிதைகளால் அதிகமான பாதிப்பு எதுவும் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டுவிடவில்லை . என்றாலும், காலஞ்சென்ற திருலோக சீதாராமும் நானும் அவரது கவிதையின் உருவ ரகசியத்தைப் புரிந்து கொண்டு அந்த வழியில் நடை பயின்று சில கவிதைகளை எழுதியிருக் கிறோம் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆபத்தைப் பல விதத்திலும் வளர்த்துப் பயன்படுத்தி யிருக்கிறேன் என்றும் நினைக்கிறேன். என்னைப் பின்பற்றி இந்த ரூபத்தைக் கையாண்டு சிலர் அடியொற்றி வருவதையும், வர முயல்வதையும் பார்க்கிறேன்.

கேள்வி : புதுமைப்பித்தன் அதிக வெற்றியடைந்த இலக்கியத் துறை எது? சிறுகதையா? குறு நாவலா? நாடகமா? கவிதையா? 
பதில் : புதுமைப்பித்தன் சிறுகதை, குறு நாவல், நாடகம், கவிதை எல்லாம் எழுதியிருந்தாலும், அவர் பெரு வெற்றியடைந்த ஒரே துறை சிறுகதை மட்டும்தான். அதில் சந்தேகமில்லை. அவர் எழுதியுள்ள 'சிற்றன்னை' என்ற குறுநாவலும் அவரது மேதாவிலாசத்துக்கொத்த சிறந்த படைப்பு எனச் சொல்ல முடியாது. நாடகம், கவிதை முதலியவை யெல்லாம் அவரைப் பொறுத்தவரையில் சோதனை நிலை யோடு நின்றுவிட்டன எனலாம். சிறு கதையைத் தவிர, அவர் நாவல் துறையிலும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. நாவல் எழுதுவதற்கான அனுபவம், திறமை, வாழ்க்கையைப் பரந்த வீச்சில் பார்க்கும் பார்வை, பலவிதமான பாத்திரங்களையும் வடிக்கும் திறமை எல்லாம் அவருக்கு இருந்தன. ஆனால் நாவல் எழுதுவதென்றால் இவற்றோடு கூட, அதில் முழுமூச்சாக ஈடுபட்டு, அதனை எழுதி முடிப்பதில் தொடர்ச்சியான விடாமுயற்சியும், திட்டமிட்டுச் செயலாற்றுவதும் அவசியமாகும். ஆனால் புதுமைப்பித்தன் அப்படியெல்லாம் திட்டமிட்டு எதையும் செய்ததும் இல்லை; அவரது போக்குக்கும் அப்படி யெல்லாம் திட்டமிடவும் முடியாது. எனவேதான் Forsyte Saga மாதிரி பல தலை முறைக் காலத்தை உள்ளடக்கி அவர் எழுதத் திட்ட மிட்டிருந்த அன்னையிட்ட தீ!' என்ற நாவல் கூட, நாலாவது அத்தியாயத்தைத் தாண்டாமல் அரைகுறையாக நின்று விட்டது.

கேள்வி : அவருடைய சிறந்த சிறுகதைகள் என நீங்கள் எதை மதிக் கிறீர்கள்? அதற்கு என்ன விளக்கம் தருவீர்கள்? 
பதில் : சிறந்த சிறுகதைகள் எவை எனக் குறிப்பிடும் முன்னர் புதுமைப்பித்தனின் பொதுவான சிறப்புக்கள் என்ன என்பதை யும் குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். 
முதலாவதாக, வாழ்க்கையில் பிறர் எதிர் நின்று பார்ப்ப தற்கே கூசிய சமுதாயப் புன்மைகளைச் சாட்டையடி கொடுப்பது போல் எதிர்த்துச் சாடியதில் புதுமைப்பித்தனே தமிழ்ச் சிறு கதை உலகில் முதல் எதார்த்தவாதியாகவும் கலகக்காரராகவும் விளங்கினார். அவரது கதைகள் பலவும் சமுதாயத்தை நோக்கி ஆணித்தரமான கேள்விகளை எழுப்பின. அழுகி நாற்றமெடுத்துப் போன சமுதாய நியதிகள், சம்பிரதாயங்கள், ஊழல்கள் முதலியவற்றைக் கீறிப்பிளந்து காட்டின. இந்த மாதிரியான விஷயங்களைச் சுட்டிக்காட்டி, 'கவந்தனும் காமனும்' கதையில் அவர் எழுதியுள்ளதைப் போல், 'சும்மா நாசுக்காகக் கண்களை மூடிக்கொள்ளாதீர்கள்' என்று இடித்துக் கூறி, இதற்கு நீங்களும்தான் பொறுப்பு என்று சொல்லாமற் கூறின. இந்த நோக்கிலே பார்த்தால் 'கவந் தனும் காமனும்', 'பொன்னகரம்', 'துன்பக்கேணி" 'கல்யாணி', 'வழி' 'மகாமசானம்', 'ஆண் சிங்கம்' முதலிய கதைகள் சிறந்தவை என்று கூறலாம். 
இரண்டாவது, அவர் காலத்திய எழுத்தாளர்கள் பலரும் வெறுமனே காதல் - கத்திரிக்காய் என்று பொதுவாகக் கதை பண்ணிக்கொண்டும், கருத்தாழமற்ற சாதாரணக் குடும்பக் கதைகளை எழுதிக்கொண்டும் இருந்த சமயத்தில் அவர் ஒருவர் தான், சமுதாய அமைப்பின் பொருளாதார உறவுகள், முரண்பாடுகள், சுரண்டல் முதலியவற்றினால் வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதைகள் எழுதினார். "வறுமை என்பது முதலாளித்துவத்தின் விலக்க முடியாத நியதி. வியாதியும் கூட. மனித சமூகத்தின் அபார , அற்புதக் கற்பனையான தெய்வம் என்ற பிரமை தனக்கு ஆக்கவும், வளர்க்கவும். அழிக்கவும் சக்தி இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம்தான் உண்டு'' என்று தமிழ் இலக்கிய உலகில் முதல் குரல் கொடுத்தவர் அவர்தான். ஆனால் இந்த சஞ்சீவி எங்கே யார் வசம் இருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டாவிட்டாலும், தொட்டுக்கூடக் காட்டாவிட்டாலும், இந்தக் குசேல வியாதியின் ஆணி வேர் எங்கிருந்தது என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். ''பட்டணத்திலே மாவிலைக்கும் கூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். மாவிலைக்குமா விலை என்று மலைத்துப் போகாதீர்கள். மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் மரத்தில் ஏறிப் பறித்து வீடு கொண்டு வந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த உழைப்பின் மதிப்பை அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். அதுதான் விலை என்பது. பட்டணவாசிகள் மண்முதல் மாங்காய் வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இதுதான் அழகு, நாகரிகம்!'' என்று விநாயகர் சதுர்த்தி ' என்ற கதையிலே அவர் எழுதினார். இரும்பு யுகம்' என்று அவர் குறிப்பிடும் இன்றைய சமுதாய அமைப்பில் எல்லாமே விலைக்கு வாங்கப்படுவதுதான் நாகரிகமாக இருக்கிறது என்பதை அவர் கண்டார். இந்த உணர்வின் பயனாகத்தான் அவரது கதைகள் பலவும் பொருளாதார உறவின் விளைவாக எழும் பிரச்சினைகளை அடி நாதமாகக் கொண்டிருந்தன. இவ்வாறு பார்த்தால் 'மனித எந்திரம்', 'ஒருநாள் கழிந்தது', 'இது மெஷின் யுகம்', ' நியாயம்தான்', 'செல்லம்மாள்', 'நாசகாரக் கும்பல்' முதலியவை எல்லாம் சிறந்த கதைகளாக விளங்கு கின்றன எனலாம். 
மூன்றாவதாக காலஞ்சென்ற நண்பர் கு. அழகிரிசாமி புதுமைப்பித்தனைப் பற்றி எழுதும்போது, "இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க்கவிதைக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் பாரதி. தமிழ் வசனத்துக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். ஆனால் பாரதிக்கு முன் தமிழில் மிகச்சிறந்த கவிச் செல்வங்கள் இருந்தன. புதுமைப்பித்தனுக்கு முன் மிகச் சிறந்த வசனச் செல்வங்கள் இருந்தன எனச் சொல்ல முடியாது. புதுமைப்பித்தனின் - இலக்கியம் தமிழ் நாட்டு வசன இலக்கியத்தின் சொத்து. அவர் வசன இலக்கிய மன்னர்'' என்று எழுதினார். இந்தச் சிறப்பும் புதுமைப்பித்தனுக்கு உண்டு. சொல்லப்போனால்,. ஏனைய பல எழுத்தாளர்களின் கதைகளைப்போல், சரித்திரக் கதையானாலும் சமூகக் கதையானாலும் தம்புராவை மாதிரி வசன நடை ஒரே சுருதியில் பேசிக் கொண்டிராமல், கதையின் கரு , காலம், களம், பாத்திரம் ஆகியவற்றுக்கேற்ப, புதுமைப்பித்தனின் தமிழ்நடை சுருதி மாறிப் பேசும். பொதுவாக இந்தச் சிறப்பு அவரது பெரும்பான்மையான கதைகளுக்கு உண்டு. சிற்பியின் நரகம், அன்றிரவு, சாப விமோசனம் முதலிய கதைகள், மற்றும் நெல்லை வட்டார வழக்கைக் கொண்டு அவர் எழுதிய பல கதைகள் யாவும் இந்தச் சிறப்புக்கு உள்ளானவை. 
இவை தவிர கதை சொல்லும் முறை, கதை அமைப்பில் புதுப்புது வடிவங்கள் முதலியனவற்றுக்கும் சிறந்த உதாரணங் களாக அவரது பல கதைகளைச் சுட்டிக் காட்ட முடியும். 
சிறப்பைக் கூற வந்த நான் அவரது கதைகளில் புகுந்துவிட்ட ஒரு குறையையும் சுட்டிக் காட்ட வேண்டும் 
ஆரம்ப காலத்தில் சமூகத் தீமைகளை அங்கீகரிக்காது. அதற்குச் சாட்டையடி கொடுத்துக் கலகக் கொடி தூக்கிய புதுமைப்பித்தனின் கதைகளில் ஒரு தர்மாவேசமும் ஆத்திரமும் இருந்தன. ஆனால் வாழ்வின் பிற்பகுதியிலோ இந்த ஆவேசம் அடங்கி, தர்ம விசாரம் என்ற பெயரில் லௌகிகச் சம்பிரதாயங்கள் சிலவற்றுக்கு வளைந்து கொடுக்கும் போக்கு அவரது கதைகளில் தென்பட்டது. உதாரணமாக அவர் முதலில் எழுதிய 'அகல்யை கதையில் ' சந்தர்ப்பத்தினால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்? மனத் தூய்மையில் தான் கற்பு'' என்று கூறி, அகல்யையை மன்னித்த அவர். பல ஆண்டுகளுக்குப் பின்னால் உருவ அமைதியிலும் சொல்லாட்சியிலும் பன்மடங்கு சிறந்த முறையில் எழுதிய 'சாப விமோசனம்' என்ற அகல்யை பற்றிய கதையில் "சாபத்துக்குத்தானே விமோசனம். பாபத்துக்கு இல்லையே'' என்று மனம் குமைந்து மீண்டும் அகலிகையைக் கல்லாக்கி விடுகிறார். முன்னதில் லௌகிக நியதிகளையும் மீறி இதய நீதி பேசும் புதுமைப்பித்தன், பின்னதில் இதயத்தையும் லௌகிக தர்மம் எனப்படுவதற்கு இரையாக்கி விடுவதைப் பார்க்கிறோம். 
இதைப் போலவே, 'காலனும் கிழவியும்' என்ற அவரது முற்காலக் கதையில், " உன்னால் என் உசுரத் தானே எடுத்துக்கிட்டுப் போவமுடியும். யோசிச்சுப்பாரு, ஒண்ணெ வேறையா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா? அதை உன்னைப் படைச்ச கடவுளாலேயே செய்ய முடியாதே!'' என்று எமனிடமே எதிர்ச்சவால் விடுத்து, materialism பேசும் கிழவியைப் பார்க்கிறோம். ஆனால் புதுமைப்பித்தன் கடைசியாக எழுதிய கதை எனக் கருதத் தக்க 'கயிற்றிரவு' என்ற கதையிலோ, ''நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப் போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் அதுவும். நான் அற்றுப் போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு!'' என்று தன்னளவே உலகம் என்று தனிமனித வாதத்தின் உச்ச நிலையில் நின்று existentialism பேசும் புதுமைப்பித்தனைக் காண்கிறோம். இதிலும் முன்னதில் இருந்த புரட்சித் தன்மை பின்னதில் குடியோடிப் போகிறது. அவரே குறிப்பிட்ட அவரது கதைகளின் நம்பிக்கை வறட்சி', அதன் தர்க்கரீதியான விளைவாக அவரை எப்படிப்பட்ட தனிமைவாதத்திற்கு கொண்டு போய் நிறுத்துகிறது என் பதையே இவை யாவும் புலப்படுத்துகின்றன. இது இன்றைய எழுத்தாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையும் பாடமும் ஆகும் என்றுதான் கருதுகிறேன்.

கேள்வி : புதுமைப்பித்தன் எழுத்துக்களில் இன்னும் அச்சேறாதவை எவை? அவற்றை அச்சில் கொண்டுவர நீங்கள் ஏதேனும் முயற்சி எடுத்து வருகிறீர்களா? 
பதில் : புதுமைப்பித்தன் எழுத்துக்களில் இன்னும் புத்தக வடிவில் வெளிவராதவை அவர் எழுதிய புத்தக மதிப்புரைகள், மற்றும் ரசமட்டம் என்ற புனைபெயரில் அவர் தினமணியில் கல்கியோடு நடத்திய வாக்குவாதக் கட்டுரைகள், அபூர்ணமாக நின்று விட்ட அன்னை இட்ட தீ' என்ற நாவலின் சில அத்தியாயங்கள் ஆகியவைதான். இவற்றையெல்லாம் நான் ஏற் கெனவே சேகரித்துக் கொடுத்தாயிற்று. அவை இன்னும் புத்தகமாக வெளிவராததற்கு நான் பொறுப்பாளியல்ல .

கேள்வி : புதுமைப்பித்தன் எழுத்துக்களைப்பற்றி உருப்படியான மதிப்பீடுகள் புத்தக உருவில் வந்துள்ளதா? உதிரியாக வந்துள்ள கட்டுரைகளில் எவை உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்தன? 
பதில் : ஒரு சில புத்தக வடிவில் வந்துள்ளன. என் பார்வையில் பட்ட வரையில் இரா. தண்டாயுதம் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள்' என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலில் புதுமைப் பித்தனைப் பற்றிப் பல பக்கங்களில் சற்று நீளமாகவே எழுதி யிருக்கிறார். திருநெல்வேலி தனித்தமிழ்க் கழகம் நடத்திய 'புதுமைப்பித்தன்' பற்றிய கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற 'பொதியவெற்பன்' என்ற இளைஞரின் கட்டுரையும் நூல் வடிவில் வந்துள்ளது. சுமார் 100 பக்கமுள்ள இந்த நூல் இளைஞர் ஒருவரின் முயற்சி என்ற முறையில் பாராட்டத்தக்கதாகவே உள்ளது. அண்மையில் மதுரை பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் புதுமைப்பித்தன் பற்றிய திறனாய்வு ஒன்றை எழுதியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். நான் அதனை இன்னும் பார்க்கவில்லை. வெளிநாட்டிலும் புதுமைப்பித்தனைப் பற்றிய மதிப்பீடுகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக, சோவியத் நாட்டில் எல். பைச்சிக்கினா என்ற பட்டமேற் படிப்பு மாணவர் ஒருவர் புதுமைப்பித்தனைப் பற்றி ஓர் ஆய்வுரை எழுதி முடித்திருக்கிறார். இதுவும் என் பார்வைக்கு இன்னும் கிட்டவில்லை. உதிரியாக வந்த கட்டுரைகளில் பலவும் யானை பார்த்த குருடர்கள் சொன்ன கதையாகத்தான் உள்ளன. ஏதா வது ஒரு அம்சத்தைப் பாராட்டுவது அல்லது குறை கூறுவது என்ற முறையில்தான் உள்ளன. புதுமைப்பித்தனைப் பற்றி அவர் வாழ்ந்த காலதேச வர்த்தமானத்தில் பின்னணியில் விரிவாக ஒரு விமர்சன நூல் எழுதுவதற்கான விஷயமும் உண்டு; அவசியமும் உண்டு.

கேள்வி: பல்கலைக் கழகங்கள் புதுமைப்பித்தனைத் தகுந்த முறையில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளதா? இல்லையெனில் இனியேனும் இம்முயற்சியை மேற்கொண்டு என்ன பணியாற்ற வேண்டும் என நீங்கள் கூற முடியுமா? 
பதில் : நமது பல்கலைக் கழகங்கள் இப்போது தற்கால இலக்கியங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ் எம். ஏ. மாணவர்களுக்கு, 'புதுமைப்பித்தன் கதைகள்' சிலவற்றைப் பாடமாக வைத்திருப்பதாகக் கேள்வி. எனினும் நமது பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இலக்கிய ஆராய்ச்சிகளின் பாணியும் பந்தாவுமே வேறு. பெரும்பாலும் அந்த ஆராய்ச்சிகளின் ஒரு குறிப்பிட்ட பாணியில் தலைப்புக்களை classify பண்ணிவிட்டு, பிறகு பட்டியல் போடும் விவகாரமாகத்தான் உள்ளது. எனவே புதுமைப்பித்தனைப் பற்றிய நல்ல ஆராய்ச்சிகளை நமது பல்கலைக்கழகங்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பதைவிட, பல்கலைக் கழக மரபுக்கு அப்பாற்பட்ட முறையில் வெளியே நடை பெறுவதுதான் பயனுள்ளதாக என்று நம்புகிறேன்.

கேள்வி: | கடைசியாக நீங்கள் புதுமைப்பித்தனை எப்பொழுது பார்த்தீர்கள்? அது பற்றிக் கூறுவீர்களா? 
பதில் : புதுமைப்பித்தனை நான் கடைசியாகப் பார்த்தது 1947ம் ஆண்டு மத்தியில். அப்போதுதான் அவர் கைப்புறாவைக் கொண்டு மணிப்புறாவைப் பிடிப்பதுபோல், சினிமாவில் வந்த கொஞ்சப் பணத்தைக்கொண்டு, தாமே சினிமாத் தயாரிப்பாளராக அவதாரம் மேற்கொண்டு, - மணிப்புறாவும் கிட்டாமல் கைப்புறாவையும் பறிகொடுத்து நின்றார். இதன்பின் நான் திருநெல்வேலி வந்து விட்டேன்; அவரும் புனா போய்விட்டார் 
இவ்வாறு இருவேறு திசையில் பிரிந்த நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளவில்லை. 1948 ஜூன் மாதம் நான் திருநெல்வேலியில் இருந்த காலத்தில், புதுமைப்பித்தனுக்கும் எனக்கும் நண்பரான திருவனந்தபுரம் சிதம்பரத்தின் மூலம் புதுமைப் பித்தன் தம்மை வந்து பார்க்குமாறு தகவல் அனுப்பியிருந்தார். நான் ஒரு வாரத்தில் திருவனந்தபுரத்துக்கு வருவதாகச் சொல்லியனுப்பினேன். ஆனால் புறப்படுவதற்கு முன்னால் நண்பர் சிதம்பரத்திடமிருந்து ஒரு தந்தி வந்தது. 'புதுமைப்பித்தன் நேற்றிரவு காலமாகி விட்டார்' என்பதுதான் செய்தி. அவரைக் கடைசி காலத்தில் கூடப் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற அங்கலாய்ப்புதான் மிச்சமாயிற்று.

கேள்வி : புதுமைப்பித்தனின் இலக்கியம் அவருக்குப் பின் வந்த இலக்கியத்தைப் பாதித்துள்ளதா? இனி வரும் நாட்களில் அவரது பாதிப்பு விரிவடையும் எனக் கருதுகிறீர்களா? அல்லது சுருங்கும் என மதிக்கிறீர்களா? ஏன்? 
பதில் : புதுமைப்பித்தன். தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சி யிலும் வரலாற்றிலும் ஒரு மைல்கல்; ஒரு திரும்பு முனை; ஒரு சகாப்தம். அதில் சந்தேகமில்லை. எவ்வாறு பாரதி தமிழ்க் கவிதை உலகில் நடை , வடிவம், உள்ளடக்கம் முதலிய வற்றில் புதியன புகுத்தி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்குத் தலைமகனாக விளங்கினாரோ, அதேபோல் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு சிறப்புமிக்க தலைமகனாக விளங்கிய வர் புதுமைப்பித்தன். 
அடிமைத்தனத்தின் மீது வெறுப்பு, வாழ்க்கைப் புதரின் முட்களில் விழுந்து தவிக்கும் மக்களின் மீது பரிவு, சமுதாயத்தில் நிலவும் செல்லாகிப்போன சம்பிரதாயங்கள், சடங்குகள், சட்டங்கள் ஆகியவற்றின் மீது ஆத்திரம் முதலியவை புதுமைப் பித்தனின் எழுத்துக்களிலும் குடிகொண்டிருந்தன. இலக்கிய உலகில் அவர் ஒரு கலகக்காரராகவும், அதே சமயம் தாம் கண்ணால் கண்ட வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டுவதில் அவர் ஓர் எதார்த்தவாதியாகவும் விளங்கினார். 
எனவே அவர் காலத்திலும் அவருக்குப் பின்னும் தமிழில் எதார்த்த இலக்கியம் படைக்க விரும்பிய எந்தவொரு எழுத்தாளரும் புதுமைப்பித்தனின் செல்வாக்குக்கு ஆளாகாமற் போகவில்லை எனலாம். இந்தப் பாதிப்பு கூடவோ, குறையவோ , துலாம்பரமாகவோ, மறைமுகமாகவோ இருக்கலாம். நானும் கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன் மற்றும் பல எழுத்தாளர்களும் இந்தச் செல்வாக்குக்கு ஆளானவர்கள் தான். 
சுருங்கச் சொன்னால் சமுதாய உண்மைகளைக் கருப்பொருளாகக் கொண்டு தமிழில் சிறுகதைகளை எழுத முற்பட்ட இலக்கியகர்த்தாக்களுக்கும் புதுமைப்பித்தனின் சிறுகதைகளே பாலபாடமாகவும், மூலபாடவும் விளங்கின. விளங்கி வருகின்றன என்பதே அவரது தனிச் சிறப்பாகும். அதே சமயம் அவரிடம் தென்பட்ட பலவீனங்களும், சில வக்கிரப் பார்வைகளும், தனிமனித வாதமும் இன்றைய எழுத் தாளருக்கு ஒரு பாடமும் எச்சரிக்கையும் ஆகும். 
கதை எழுதும் உத்தி, கதையின் வடிவம், கதையில் இடம் பெறும் கருப்பொருள், சமுதாயச் சூழ்நிலை, காலம், களம் ஆகியவற்றுக்கேற்ப கதையின் நடையை மாற்றும் சிறப்பு, வைரம் பாய்ந்த சொல்லாட்சி , வளமிக்க வசன நடை, மற்றும் எதார்த்தமான பிரதிபலிப்பு முதலிய பல அம்சங்களில் வருங்கால எழுத்தாளர்களும் புதுமைப்பித்தனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ உண்டு. எனவே வருங்காலத்திலும் அவரது பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் என்பதில் ஐயமில்லை. அவர் அடியெடுத்துக் கொடுத்த பாதையில், போட்டுக் கொடுத்த அஸ்திவாரத்தில், தெம்பும் திராணியும் மிக்க புதிய புதிய இலக்கியங்கள் தோன்றத் தோன்றத்தான், அவரது பாதிப்பு புதியன புகுதலுக்கு இடம் விட்டு விலகிக்கொள்ளும். அந்தப் பாதிப்பினால் ஆலம் விழுதுபோல் தரையிறங்கி வேர் பாய்ச்சித் தனிமரமாகும் கிளை மரங்கள் தோன்றத் தோன்றத்தான் அந்தத் தாய் மரத்தின் பாதிப்பும் முற்றுப்பெறும் என்றே நான் கருதுகிறேன். 
- முற்றும் - 



1 comment:

  1. மணிக்கொடி எழுத்தாளர்கள் கதைகளை படித்திருக்கிறேன்,மதிப்பிற்குரிய புதுமைப்பித்தன் அவர்கள் குறித்து அறிந்துகொள்ள இந்த பேட்டி மிகவும் உதவியாக இருக்கிறது . நன்றி

    ReplyDelete