தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, April 21, 2014

தவம் - பிரமிள்

தவம் - பிரமிள்

ஆதி மனிதர்கள் அவனை வானில் முளைத்த நெருப்பு என்று
கணந்தோறும் பயந்தார்கள். யுகங்கள் கழிய பயங்கள் வியப்
பாகின்றன. கிரேக்கர்கள் அவனை அப்போலா என்றழைக்கத்
துவங்கினர். அவனுக்கென கையில் யாழொன்றையும் கண்டனர்.
வைத்தியனாதலால் சூர்யவெளிச்சம் என்ற நாளாந்த அனுமானத்தை
வாழ்விற்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஒளியும் ஒளி
இழைகளின் இடுக்கில் வசிக்கும் இருளும் அவனது கலை. அவனது
கலையும் வைத்யமும் சங்கமிக்கும்போது அவன் பேருணர்வுகளின்
உதரமாகிறான்.

ஆகையால் நான் எழுதமுயற்சிக்கும் போது மட்டும் அவன்
குகையாகிறான். எனது சித்தாந்தங்கள் வேட்டை நாய்களாக
அவனைத் தேடுகின்றன. அவற்றின் குரல்கள் மனசின் கானக
மரங்களில் மோதி எதிரொலிகளாகச் சிதறுகின்றன. 'டேஃப்னே,
டேஃப்னே' என அப்போலா தான் காதலித்தவளைப் பின்
தொடரும் குரல் எனது சித்தாந்தங்களின் குரைப்பில் கேட்கிறது.
டேஃப்னேயை அவனால் தீண்ட முடியவில்லை. மரமாகிவிட்டாள்.
அவள் கன்னிமையின் நிழலில்  நான் நிற்கிறேன். அதன் இலைகளை
ஒடித்து அப்போலாவைப் போலவே சிரசில் அணிந்து
கொள்கிறேன். எழுத வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
உள்ளிருந்து ஒரு புதிய இயல்பு பிறக்கிறது. என் விரல்களை மடித்துக்
கைகளையும் கட்டிக்கொள்கிறேன். வேட்டை நாய்கள்
முயல்களையும் முள்ளம் பன்றிகளையும் தேடி ஓடட்டும். எனது 
பிடரியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில்
வானை நிரப்புகிறது. மூச்சின் இறகுகள் நுரையீரலிறக்கைகளுள்
மடிகின்றன.

சூரியன் தன் உதரக்கோதுக்குள் ஆழ்ந்து கருவாகிறான், எல்லையற்று
ஒடுங்கிக் கொண்டிருக்கிறான்.




raja sundara rajan
Public


4w
அருவி
________ மூன்றாம் ஆடல்

இரண்டாம் அருவியாடலில் அரசியலுக்குள் போய்விட்டேன். தவறோ? ’அரசியல் இல்லாமல் இல்லை வாழ்க்கை’ என்பது கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பாலபாடம். உலகியலுக்கும் அது சர்வசத்தியம். தவறில்லை எனவே.

என்றாலும் அழகியல் மட்டுமே போதும் என்று எழுதுகிற கவிஞர்களால் நிரப்பப்பட்டதோ “அருவி” என்றொரு தோற்றம் தோற்றலாம். அதைத் தோற்பிக்கவே நேசமித்ரனை எடுத்துக்காட்டினேன்.

இனி, தான் புதுக்கவிதையைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டதாக சொல்லிக்கொள்கிறவர் கவிஞர் ரியாஸ் குரானா. அது உண்மைதானா? இக் கட்டுரையின் முதல் அருவியாடலில் எடுத்துக் காண்பிக்கப்பட்ட பிரமிளின் “கவிதை”யை வாசித்துப்பாருங்கள்! பிரமிள், ’modernity’ என்று சொல்லப்படுகிற புதுக்கவிதைக் காலத்தவர். காண்டின்ஸ்கி, ஸல்வடோர் தலி என இவர்களும் ’மார்டனிட்டி’ காலத்துக் கலைஞர்கள்தாம்; ஸர்ரியலிஸ்ட்டுகள். இவர்களிலிருந்து, தான் எங்கே வேறுபடுகிறேன் என்று விளக்கிக்காட்ட வேண்டிய தலைச்சுமை கவிஞர் ரியாஸ் குரானாவுக்கு இருக்கிறது. மனுஷ்யபுத்திரனைத்தான் மார்டனிஸ்ட் என்று அவர் புரிந்துகொண்டாரோ என்கிற கவலை எனக்கும்.

இரவை மரம்போல கற்பனை செய்யப் பயமாக
இருக்கிறது.
கற்பனை செய்தால்
அதன் கிளைகளெங்கும்
எனதுகுரல்
ஓலங்களாகவும் கூக்குரல்களாகவும்
அநாதரவாக தொங்கத் தொடங்குகின்றன
சொற்கள்
உதிர்வதற்காகவே பூக்களாகின்றன.
வாக்கியங்கள்
விழுதுகளாகி தொங்க
கனிகள் அழுகி விழுகின்றன.
எந்தப் பறவைகளும்
வந்து அமர்வதே இல்லை.
அவள் கற்பனை செய்த இரவிலிருந்து
காதல் அழைப்புகள் கேட்கின்றன.
என்னைக் கடந்து
ஆனந்தமாய் பறவைகள் பறக்கின்றன.
ஆகவே,
நான் இரவை
இரவாகவே கற்பனை செய்கிறேன்.
அப்போதுதான்
கதவைத் திறந்து
அவள் உள்ளே வருகிறாள்.
பின் அவளின் விளையாட்டு ஆரம்பிக்கிறது.
மரம்போல மாறும்போதெல்லாம்
மிகக் கவனமாக
அதை இரவாக வைத்திருக்க
சிரமப்படுகிறேன்.

இது ரியாஸ் குரானா. (“அருவி” சிறப்பிதழ் – 2016, பக். 15). கவனியுங்கள், இதில் ஓர் அருவம் (abstract), இரவு, உருவமாக (concrete), மரமாக, மாறுகையில் வரும் குழப்பங்கள் பேசப்படுகின்றன. அப்படியாக, கவிதைக்குள் ஒரு கருத்து இருக்கிறது, ஆனால் அது சொல்லப்படுகிற விதத்தில் ஒரு புதுமை இருக்கிறது.

Literary modernism, or modernist literature, is characterized by a self-conscious break with traditional ways of writing. Modernists experimented with literary form and expression, adhering to Ezra Pound's maxim to "Make it new". This literary movement was driven by a conscious desire to overturn traditional modes of representation and express the new sensibilities of their time.

எஸ்ரா பவுண்டின் ஒரு புதுக்கவிதையை மாற்றியெழுதி நக்கலடித்த பின்நவீனத்துவக் கவிதை ஒன்றை, “அகநாழிகை” இதழில், எனது கட்டுரை ஒன்றில் காட்டியிருந்தேன். அதை ரியாஸ் குரானாவிற்கும் அனுப்பியிருந்தேன். அது இது:

we that were wood
when that a wide wood was

In a physical Universe playing with

words

Bark be my limbs my hair be leaf

Bride be my bow my lyre my quiver

- Susan Howe

இதுவே ஒரு நவீனத்துவக் கவிதையாய் எப்படி இருந்திருக்கும்? அது இது:

The Tree
-------------
I stood still and was a tree amid the wood,
Knowing the truth of things unseen before;
Of Daphne and the laurel bow
And that god-feasting couple old
That grew elm-oak amid the wold.
‘Twas not until the gods had been
Kindly entreated, and been brought within
Unto hearth of their heart’s home
That they might do this wonder thing;
Nathless I have been a tree amid the wood
And many a new thing understood
That was rank folly to my head before

- Ezra Pound

(இதில் பவுண்டின் கவிதை சுட்டும் தொன்மம் இப்படி: அப்பல்லோ, தன்னிலும் சிறந்த வில்லாளி இல்லை என்று கர்வம் கொண்டான். அதைப் பொய்ப்பிக்க, ஈராஸ் (மன்மதன்) அவன் மீது ஓர் அம்பு எறிந்தான். அதன் விளைவால், அப்பல்லோ டேஃப்னீயை விரட்டினான். ஆனால், அவளுக்குக் காதல் உணர்வு வராதிருக்க ஈராஸ் அவள் மீதும் ஓர் அம்பினை எய்தான். காதலற்ற அவள் அப்பல்லோவிடம் இருந்து தப்பிக்க, தன் தந்தையிடம் உதவி கேட்டாள். அவரோ அவளை ஒரு மரமாக உருமாற்றினார். அன்றிலிருந்து அப்பல்லோ, அம் மரத்து இலைகளால் கிரீடம் செய்து வெற்றியாளர்க்குச் சூட்டி வருகிறான்.)

அந்தத் தொன்மத்தைச் சுட்டாமலே சூஸனின் எழுத்து, தன் அளவில், கவிதை ஆகிறதைக் கவனியுங்கள்! மேலும், அது நவீனத்துவத்தின் பிதாமகரான எஸ்ரா பவுண்ட் எழுதியதைக் காட்டிலும் சிறப்பாக வந்திருப்பதையும். கூடவே, ‘word’ என்பது மையத்தில் தனிமைப் பட்டு, வார்த்தை விளையாட்டுக்காரர் என்று பெயர்பெற்ற பவுண்டை நகைப்புக்கு உள்ளாக்குவதையும்.

புதுக்கவிதையைத் தாண்டிவர நாம் சூஸனைப்போல் எழுதவேண்டும். எழுதுகிறோமா? நிச்சயமாக இல்லை. ஆனால் ரியாஸ் குரானா முதலிய “அருவி”க் கவிஞர்கள் தொடர்ந்து அதை முயல்கிறார்கள். இது “காலச்சுவடு”, “உயிர்மை” இன்ன அதாகப்பட்ட இலக்கியப்பத்திரிகைக் கவிஞர்களிடம் இல்லாத ஒன்று. விசயம் அதுதான்.

தொடரும்….
raja sundara rajan
Public

கலாப்ரியா - பனிக்கால ஊஞ்சல்
________________________________________

அனைவர்க்கும் வணக்கம்!

ஈரோடுப் பகுதியிலே ஒரு மாமியார்-மருமகள். அவர்களுக்கு பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அதிலே, கிழவி ஒரு ஓரத்திலும் எதிர் ஓரத்தில் மருமகளும், குடிசைபோட்டு, தனித்தனியே இருந்திருக்கிறார்கள். கிழவிக்கு கள்ளுக் குடிக்கிறது வழக்கம். கள்ளு ஊத்துகிற ஆளிடம் அந்தக் கள்ளிலே விஷம் கலந்து கொடுக்கச் சொல்லியிருக்கிறாள் மருமகள். அந்த ஆள் ஒத்துக்கொள்ளவில்லை. இவளே ஒரு இரும்புக் கம்பியால் மாமியாரைப் போட்டுத்தள்ளிவிட்டாள். மாமியார் பெயர் லட்சுமி. மருமகள் பெயர் சாமுண்டீஸ்வரி. இந்த செவ்வாய்க் கிழமை (20/12/2016) செய்தித்தாளில் படித்தது இது.

இப்படித்தானே, இந்த மூத்த முன்னோடி எழுத்தாளர்களைப் போட்டுத் தள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைமைக்கு சில பின்னோடி எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள்.

அரசியலிலே ஆர்வம் காட்டாத ஆட்களைக்கூட, இலக்கிய அரசியல் ஒதுங்கிப்போக விடாது. காரணம், ஓரொருவர்க்கும் தான் இலக்கியவாதி என்கிற நினைப்பு. எனக்கும்கூட உண்டு அது. நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது.

றியாஸ் குரானா என்று ஒரு கவிஞர் இருக்கிறார். இலங்கைக்காரர். விமர்சனமும் எழுதுவார். அண்மையில், முகநூலில், ஒரு பதிவு; அவருடைய வார்த்தைகளிலேயே தருகிறேன்: “எழுத்தாளர்களாக ஆக விரும்புகிறீர்களா.. நீங்கள் சிலரை நிச்சயம் வாசிப்பதை தவிர்க்க வேண்டும். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்ரா.. அதில் முக்கியமானவர்கள். அப்போதுதான் நீங்கள் புதிய இலக்கிய வெளியை நோக்கி போவீர்கள்.” இவ்வளவுதான். இதற்கு 37 கமென்ட்ஸ் கிட்டியிருந்த நாளில் இதைப் பார்த்தேன். 37-இல் 33 கண்டனம்; ஒத்து ஓதிய 4-இல் ஒன்று சாருவுக்கு மட்டும் விலக்கு அளித்திருந்தது. நல்ல எதிர்வினைதான், இல்லையா? ஆனால் முன்னோடிக் கவிஞர்களை யாராவது இப்படிக் குறைத்துப் பேசினால் ஆரோக்கியமான எதிர்வினைகள் எதுவும் எழுகிறதில்லை. இதற்கு கவிஞர்களாகிய நாம்தான் வெட்கப்பட வேண்டும். எண்ணிக்கையில் கவிஞர்கள் எக்கச்சக்கம், ஆனால் பொறாமையும் சிறுபிள்ளத்தனமான சந்தோஷமும் கொண்டவர்களாக இருக்கிறோம்.

உன்
காகிதக்கப்பல்
மிதப்பதும் மகிழ்ச்சி
என்
காகிதக்கப்பல்
மூழ்குவதும் மகிழ்ச்சி
உனக்கு

என்கிறார் இதை கலாப்ரியா. இதிலுள்ள ‘காதிதக்கப்பல்’ என்னும் குறியீடு, நாம் எழுதிக்குவிக்கும் புனைவுகளுக்கு பொருத்தமாக இருக்கிறது இல்லையா? இதோடுகூட, கொஞ்சம் பொறுமைகாக்கச் சொல்லியும் அறிவுறுத்துகிறார்:

மேலே வந்தால்
நீயே
பறித்துக் கொள்ளலாமே
ஏன் கல்லெறிகிறாய்
கீழே நின்று


இவ்வளவில் மட்டுமல்ல, தான் கீழேவிழத் தயாராக இருப்பதாகவும் அறிக்கை யிடுகிறார். ஆனால் அதற்கொரு தகுதிவேண்டும் என்கிறார்:

நீ மேல் படிக்கு
வந்தவுடன் என்னைக்
கீழே தள்ளு
கீழ்ப்படியிலிருந்துகொண்டே
காலை இழுக்காதே


சரி, இந்த மூத்த முன்னோடி எழுத்தாளர்கள் அந்தப் பத்து ஏக்கர் நிலத்தை விட்டுவிட்டுப் போகலாம் இல்லையா? இன்னும் ஒரு ஓரத்தில் குடிசைபோட்டுக் கொண்டு ஏன் உட்கார்ந்து இருக்கிறார்கள்?

அதற்கான காலம் இன்னும் வரவில்லை. வந்தபின்னாலும் அந்த நிலத்தில் அவர்களுக்கான பங்கு அப்படியே கிடக்கவே வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அந்த சொத்து, மெய்யாலுமே, அவர்கள் உழைத்துச் சம்பாதித்தது.

கலாப்ரியா, ’குற்றாலம் கவிதைப்பட்டறை’ (மொத்தம் எட்டு) நடத்தி, கவிதை வளர்த்தவர். நாங்களெல்லாம் அதுவழி வளர்ந்தவர்கள்தாம். இன்று எழுதிக்கொண்டு இருப்பவர்கள் ஓரொருவருடைய மொழியும் அந்தப் பட்டறைப் பங்காளிகளில் எவரிடமிருந்து வந்தது என்று சொல்லமுடியும். என்றாலும் இந்த கலாப்ரியா, இவர்க்கென்று ஒரு கூட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இவருக்குள் ஒருகூட்டம் ஊற்றுக்கண் தூர்ந்துபடாமல் இருக்கிறது இன்னும்.

சிறகொடுக்கித்
தூங்குகிறது பறவை
யாரும் ஆடாத
தோட்டத்துப்
பனிக்கால
ஊஞ்சலென.

என்று ஒரு குட்டிக்கவிதை எழுதி, அதில் வரும் ’பனிக்கால ஊஞ்சல்’ என்னும் உவமத்தை இத் தொகுப்புக்கு தலைப்பாக்கியிருக்கிறார். //சிறகொடுக்கித்/ தூங்குகிறது பறவை// என்பதில், ’சிறகு’ என்றால் இன்னதென்று விளக்கத் தேவையில்லை. அது வானத்தை அளப்பது. ’தோட்டத்து ஊஞ்சல்’ சிறுவர்கள் உந்தி ஆடுவது. ’பனிக்காலம்’ நம்மை அடைத்த கதவுக்குள் இருத்துவது, ஆனால் தற்காலிகமானது. கவித்துவக் கற்பனையும், அப்படித்தான், பிறகு விழித்துக்கொள்ளும்; வானை அளக்கும். இதில் ’தூங்குகிறது’ என்னும் சொல்லிடுகை இன்னும் சிறப்பு. அது ஊஞ்சலுக்கும் தற்காலிக உறக்கத்துக்கும் பொதுவாய் நிற்கிறது. இந்த ‘பனிக்கால ஊஞ்சல்’… அடடா, என்ன அழகான உவமை இது! ’கலாப்ரியா’ என்னும் பெயர், ஒருவேளை, மறைய நேர்ந்தாலும் இவர் ”பனிக்கால ஊஞ்சலார்” என்று விளிக்கப்படுவார்.

முன்னோடிக் கவிஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கிட்டுவது இவைதாம்: சொற்சிக்கனம், பொருத்தம்.  

”எட்டயபுரம்”, “சுயம்வரம்” என நெடுங்கவிதைகள் எழுதிய கலாப்ரியாதான், இன்று, இப்படிக் குறுங்கவிதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறார். இன்றைய வலைவெளி உலகில், நீளமான கவிதைகளை வாசிக்க பொறுமை இல்லை. பன்னிரண்டு பதினான்கு அடிகளுக்கு மேல் எழுதினால் அது தொல்லை.

கலாப்ரியாவுடைய மொழி பேச்சுமொழி. யானை இல்லை, அது ‘ஆனை’; சுடலை மாடன் இல்லை ‘சொடலை மாடன்’. என்றாலும் மொழிநடை அதன் கூர்மை கெடாமல், தவறியும் வளவளா வந்துகூடாமல் அமைந்திருக்கிறது. இதுவும் இவரில் நாம் கற்றெடுக்க வேண்டிய நேர்த்தி. கவிதை என்றால் என்ன என்றும் ஒரு வரையறை காட்டுகிறார்:

ரத்தத்தின் பாதையில்
குறுக்கிடும் கூர்மை
வார்த்தைகளின் பாதையில்
கவிதை போல.

அதென்ன கூர்மை? ‘கத்தி’யா? ‘ஊசி’யா? எதுவுமாகலாம். இதில், ‘போல’ என்னும் சொல் ஓர் உவம உறுபாகவும் அசைநிலையாகவும் இயங்கி இதன் பாடுபொருளுக்கு மேலும் மெருகூட்டுகிறது. நமக்குள் ஒரு குறுநகையும் தோற்றுகிறது.

கிட்டத்தட்ட எல்லாக் கவிதைகளிலும் ஒரு குறுநகை ஒளிந்திருக்கிறது.

தவறாக
ஆயிரங்கால் மண்டபத்தினுள்
புகுந்துவிட்ட நாய்
திகைத்து நிற்கிறது

என்று நம் இயல்பும் நிலவரமும் கூறுகிற சில கவிதைகளில் வெடிச்சிரிப்பும்.

நீ கொஞ்சம்
மெதுவாகப் போயிருக்கலாம்
உன்னைமுத்தமிட
நினைத்து உதிர்ந்த
மழைத் துளி
என் இமையை நனைக்கிறது.

என்னும் கவிதை, மேலோட்டமான பார்வைக்கு, ஒரு ‘பைக்’கில் போகிற இருவரில் முன்னிருப்பவரிடம் பின்னிருப்பவர் கூறுகிற கூற்றாகத் தோன்றலாம். ஆனால் உட்கிடையில், அதாவது ’ஸப்-டெக்ஸ்ட்’டில், தனக்கு முந்தி இறந்துபோன தகுதியான ஒருவரை எண்ணி இரங்குவதாக இருக்கிறது. இதுவும், ”முகபடாத்தை தடவிக்கொடுக்கிற பாகன்”, ”ஒளிந்து கூவுகிற அக்காக்குருவி” என ஒன்றிரண்டும் இழப்புணர்வு தோற்றுகிற கவிதைகள். இழப்புணர்வுதான், ஆனால் புலம்பல் என்பது எதிலுமே இல்லை.

கவிதையில் சொற்சிக்கனம் தேவை என்று கண்டோம். ஆனால் வாசிப்பதில்? அதுபற்றி அறிய, ”இப்படித்தான் கனவுகளைச் செரிக்கிறேன்” என்று ஒரு கவிதை இதில் இருக்கிறது. வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஆனால் என் அனுபவம் வேறே. ‘தண்ணி’யடிக்கிற பார்ட்டிகளுக்கு இது புரியும்: ’குவார்ட்டர்’ பாட்டில் அல்லது ’ஹாஃப்’ பாட்டில் என்றால், சரக்குபூராக் கவிழ்த்த பிறகு, கொஞ்சூண்டு தண்ணீரை ஊற்றி அலசி எடுக்கலாம். ’ஃபுல்’ பாட்டில் என்றால், அதிலே ஒரு ப்ளாஸ்டிக் உள்மூடிவேற இருக்கும், எப்படி தண்ணீர் ஊற்றி அலசுறது? பாட்டிலை கொஞ்சமா சாய்ச்சுப் பிடிச்சுக்கணும். தாழ்ந்திருக்கிற ஓரத்து ஓட்டை வழியா, கொஞ்சங்கொஞ்சமா, தண்ணீர் விடணும். உயர்ந்திருக்கிற ஓரத்து ஓட்டை வழியா air எஸ்கேப் ஆகி…

வாசிப்பில் சிக்கனம் என்பது இதுதான்.

நன்றி!

*
(23/12/2016 ”பனிக்கால ஊஞ்சல்” நூல்வெளியீட்டுவிழாவில் பேசியது.)