தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, April 03, 2014

கிழக்கு வாசல் - பிரமிள்

கிழக்கு வாசல் - பிரமிள்

I

மேஷசூர்ய உதயவேளை,
கீழ்த்திசைக் கண்டம்,
காலம் இற்றைக்கு
ஆறு மில்லியன்
ஆண்டுக்கு முன்பு;

சிறகு தளர்ந்து
தாழ்ந்து பறந்து
இடியொலிக் குரலில்
இறுதியாய் அலறி
வீழ்ந்தது - இன்னும்
மனித வர்க்கம்
தோன்றியிராத அவ்
உதய வேளையில்-
பிரமாண்டமானதோர்
பெயரில்லாப் பட்சி.

சூழ்ந்து கிடந்த
கானக மரஙகள்
அலறலின் வீச்சில்
சிதறி முறிந்தன.
சிறகடிப்பின்
புயலில் எழுந்தது
புழுதிச் சுழல்முகில்.
அயலக மலையில்
பாறைகள் பெயர்ந்து
சரிவில் உருண்டன.
மலைக்குகைகளினுள்
எதிரொலி உறுமல்;
பூகம்பம் ஒன்றன்
ஒரு கண அதிர்வு.
தாரகை வடிவில்
பூமி பிளந்து
பட்சியிலிருந்து
சுற்றிலும் ஓடின
ரேகைகள் ஏழு.

தட்டச்சு நாள் 20-3-2014

II

இரும்புத் தகடாய்
இறுகின பட்சியின்
சிறகுகள், எலும்பும்
தசையும் கல்லின்
திரணைகள் ஆகின.
பரிமாணத்தின் நேர்
ஓட்டம் பட்சி
அலறி விழுந்தவிலங்கின் வரிசையில்
மனிதன் பிறந்து
மூளைத் தாதுவின்
சிறகுகள் விரிந்தன.
புலனில் மோதிய
உலகை மனிதன்
உவமை வடிவாய்
உருவகப் படுத்தினான்.
உணவாய் விழுந்த
கலைமான் ஒன்று
காற்றில்
ஏறி இறங்கும்
கிளையின் அசைவில்
தாவக் கண்டான் -
மிருகம் மாறி
மனிதம் பிறந்தது.
கிழக்கே ஏழுந்தது
சிம்ம சூரியவின்.
பிரக்ஞையினுள் ஒரு
பாதாளத்தில் அதன்
பிரதிபலிப்பு
பழம் எனக் குனிந்து
எடுத்த கையில்
பாம்பு ஒன்று நீர்ச்
சேறாய் நழுவிற்று.
பரவிற்று விஷம்.
கணதில் நின்றது.
நின்று ஜடத்தின்
காலத் துடிப்பை
நாளை நேற்றாய்
திசை மாற் றிற்று.
பட்சியின் உரு
மாற்றமடைந்து
இரண்டு மில்லியன்
ஆண்டுக்குள் பிர
மாண்டமான தோர்
பாறையாயிற்று.

தட்டச்சு நாள் 30-03-2014

III

விலங்கின் வரிசையில்
மனிதன் பிறந்து
மூளைத் தாதுவின்
சிறகுகள் விரிந்தன.
புலனில் மோதிய
உலகை மனிதன்
உவமை வடிவாய்
உருவகப் படுத்தினான்.
உணவாய் விழுந்த
கலைமான் ஒன்று
காற்றில்
ஏறி இறங்கும்
கிளையின் அசைவில்
தாவக் கண்டான் -
மிருகம் மாறி
மனிதம் பிறந்தது.
கிழக்கே ஏழுந்தது
சிம்ம சூரியன்.
பிரக்ஞையினுள் ஒரு
பாதாளத்தில் அதன்
பிரதிபலிப்பு
பழம் எனக் குனிந்து
எடுத்த கையில்
பாம்பு ஒன்று நீர்ச்
சேறாய் நழுவிற்று.
பரவிற்று விஷம்.

தட்டச்சு நாள் 31-03-2014



IV

பூமிச் சுழற்சியின்
அச்சாணியிலே
சரிவு கண்ட
யுக்ம் ஒன்று
துருவங்களின்
உறைபனி வெளி
உருகிய காலம்
உருகலில் நீர்
அலையற்று
புயலற்று
மலை முகடுகளை எட்டி
மூடத்துவங்கியது.
ஓநாய்க் குளிரின்
வாயில் பூமியின்
சீதோஷ்ணங்கள்
யாவும் சிக்கின
மூழ்கி மடிந்த
மனித இனங்களில்
மீதி இருந்தவர்
வயிற்றுக் குகையுள்
பனிவெளிக் குளிரின்
ஓநாய் உறுமல்.
நீர் வடிந்து
நிலம் எழுந்தபின்
கண்டம் விட்டுப் புதுக்
கண்டங்களைத் தேடி
நாடோடி ஆகியவன்
கண்டான் ஒரு
இரவு கழிந்த
அரை குறை விடிவில்
பட்சி வடிவப்
பாறை ஒன்றை
பறக்கும் நிலையில்
பூமியில் பாதி
புதைந்த தோற்றம்
நீண்ட கழுத்தை
வளைத்துத் தனது
இதயத்தையே
குத்திக் கிழிக்கும்
அலகு அதற்கு!
நெஞ்சக் குழிக்கு
நேரே நிலத்தில்
நீலச் சுனை
நாலு புறமும்
ஓடும் ஏழு
சிறிய அருவிகள்
ஆறு பகல்
தொலைவில் அவை
பெருகி ஒரு
ஆறாகின.
நதிகரை புரண்டு
வடிந்த வேளை
விளைந்தது நிலம்.
உண்டு மீந்தது
பட்சிப் பாறைக்கு
பலியாகிற்று.
விளைச்சல் வட்டம்
கடிகார மாகி
பழக்கம் பசுமை
வரட்சி பயம் என
எதிர் முனை பின்னி
ஒழுக்கமாயிற்று.
வானின் மீன்களில்
வடிவுக் கோட்டு
மண்டலங்கள்.
பழையகற் காலத்து
மனிதனின் பூஜையில்
ஆவேசம் உயிர்த்து
ஊடுருவிற்று.
துயிலும் வேளையில்
துயிலுக்குள் துயில்;
பாறைக்குள் ஒரு
பறவையின் குரல்.
உறுமி எழுந்து
சிறகு சிலிர்த்து
அந்தரத்தில் எற்றித்
தாவிற்று ஒரு
மாபெரும் கல்.
அதன் கால்கள்
கவ்விய பிடியில்
மானுடத்தின் மூளை.
எழுந்த பாறை
பறக்கலாயிற்று.
புலன்கள் மறுக்கும்
தொலை தூரத்தில்
ஒளிர்ந்தது ஒரு தனி
நட்சத்திரம்
மானுட மூளைக்குள்
பிறந்தது லட்சியம்.


V

இன்றும்
கிழக்குக் கதவைத்
திறக்கின்றன
கடலும் வானும்
பலி பீடத்தில்
வழியும் உதிரச்
சிவப்பு உதயம்.
வெளிறும் வடிவில்
நட்சத்திரங்களின்
இறுதி நடுக்கம்
கடலுக்கு மேலே
சுற்றுகின்றன
சிறகற்றுப் பறக்கும்
சிறுசிறு கற்கள்,
ஒன்றை ஒன்று
தொட்டுத் தொடரும்
சொற்களின் தாதுக்கள்
உதித்துக் கொண்டிருந்தது
ஒரு பெரும் பிழம்பின் சிதறல்.



VI

இருள்வாய் ஒன்றுக்குள்
உடைந்து கொண்டிருக்கிறது
உதய வேளை
வானில் கடலின்
முகடு முட்டும்
கோடு தாண்டி
கிழித்த உடல்கள்
மிதக்கும் அந்தரம்.
அந்தரத்தில் இன்று
அது என்ன?
ஆளற்ற நாற்காலி!
பின்னணியில் ஒரு மேஜை.
முன்னணியில்
புரண்டு தத்தளிக்கும்
சமுத்திர ஊஞ்சல்.
' ஏ, ஏ, ஏன், யார்,
நான்?' என்றெழும்
அசரீரிக் கேவல்கள்
ஊஞ்சலில்
ஊர்கின்றன
சமுத்திர மடிப்புகள்
ஆகாயத்துக்குள
கிழித்த கோட்டுருவ
நாற்காலிப் பீடத்தில்
நீர், தீ, நிலம், காற்று -
அசைவற்ற ஒன்றனுள்
சுழன்றோடும் நான்கு;
ராகுவின் வாய்க்குள்
நான்கினுள் ஒன்று
பரிதீக் கங்கு.

VII


கிழக்குக் கதவைத்
திறந்தேன் நான்
இன்றைய நாள்
வெற்றுத்தாள்
காலை வேளையில்
கனவு கழிந்த தெளிவு.
ஆயினும் எதிரில்
பட்சிப் பாறையின்
பலிபீடம்  அதில்
விழுந்தது ஒரு
சிசுவின் வடிவில்
நிழல்; என்குரல்
வீறிட்டு உடைந்து
நிசப்தம்! பூடத்தில்
உடல் துடித்து
சிரசு தனித்துக்
கிடக்கறது பிறப்பு.
வீறிட்ட குரலின்
மௌனத்துக்குள்
விளிம்புகட்டி நற்கிறது
மூலாதாரப்புயல்
பலிகொண்ட பட்சிப்
பாறைக் கொலுவில்
மூலைக்கு மூலை என்
பிரதிபிம்பம் ஒரு
கையின் உடுக்கைகுள்
பதுங்கிக் கிடக்கிறது.
ஒலித் திவலை
புவன வெளியைக்
கருக் கொண்ட
ஒரு துளி ஓசை அது
மறுகையிலே வளைந்து
தன்னையே, விழுங்கும்
காலபாசம்.
நேற்றின்று நாளை
என்றூரும் சர்ப்பம்
உனக்கும் எனக்கும்
பிரபஞ்சம் முழுதுக்கும்
அதன்
சூஷ்மாக்னிதான்
சங்கார மூலகம்.
கதவு தானாக
அடித்து மூட
வெளியே அதை
முட்டி உடைக்கும்
சிறகுகளின்
இரும்புத் தகட்டுத்
தடதடப்பு. எனக்கு
பார்வை அகமுகம்
பாய்ச்சல் பகிர்முகம்.
இன்னொரு கண்டத்தின்
அல்க்காட்ரஸ் பறவை
கழுத்தை வளைத்து
தன்னையே இதயத்தில்
குத்தி கிழிக்கிறது.
இன்னொரு கவிதையின்
சிலுவையில் இதயம்
அறைப்பட்டு மரிக்கிறது.
ஏன், எது, எங்கே,

எப்படி, எதற்காக, யார்
நான் என்ற கேள்விகள்
கதவுக்கு வெளியே
நின்று முட்டி
மோதுகின்றன.
பின்வாங்கித் தொடுவான்
தொலைவிலே கூடி
கோஷித்து மீண்டும் ஏ
கோபித்த மோதல்.
கதவைத் திறந்த
என்முன் நிற்கிறான்
என் பிரதி பிம்பமாய்
ஒரு முழு நிர்வாணி.
ஸ்தூலன் நான்
சூஷ்மன் அவன்.
எனது சிருஷ்டிக்கு
பூமண்டலத்து
வலக்கை மான்.
அவனுக்கோ
புவனவெளியின்
பிந்துதனைக் கருக்
கொண்ட உடுக்கை.
வலம் இடம் மாறிய
இருவேறு வெளிகள்.
மாறுகைகளிலே
அவரவர் வெளியில்
ஸ்தூலனின் மழுவும்
தூஷ்மனின் தீயும்.
மானுக்குப் பாய்ச்சல்
வெளியே, பார்வை
உள்ளே! எதிரும்
பதிரும் கலைந்து
சிதறின அக்கணம்
உள்ளே ஒரு
ஊஞ்சலாய் ஆடி
மிதந்து வந்து உட்
கார்ந்தது கூடத்தில்
அந்தரத்து நாற்காலி.
ஒரு சிறு மேஜையும்
மேல்கீழ் எங்கும்
மொய்த்துப் பறக்கும்
குரல்களும் கூட
கூடத்து நடுவில்..
கேளாமல் கேட்டது
பதுங்கிக் கிடந்த
பரமாணுவின் இதயக்
கர்ஜனை. உடனே
உள்ளே பார்த்தபடி
வெளியே பாய்கிறது
மூளைக்குள் சுழலும்
மூலாதாரப் புயல்.
நாற்காலியில் ஆள்
இன்மை.


தட்டச்சு - ரா ரா கு