தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, April 12, 2014

முதல் அம்பு - ஆனந்த், சற்றைக்கு முன்…

முதல் அம்பு - ஆனந்த்


நான் முதல் அம்பு
பன்னெடுங்காலமாய்
இந்த மலையுச்சியில்
கிடக்கிறேன்

யார்மீதும் விரோதமற்ற
ஒருவன் வந்து
தன்வில்கொண்டு
என்னை
வெளியில் செலுத்துவானென

நன்றி:  http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01006pp2e.htm

 சற்றைக்கு முன்…

 சற்றைக்கு முன்
 ஜன்னல் சட்டமிட்ட வானில்
 பறந்து கொண்டிருந்த
 பறவை
 எங்கே?
 அது
 சற்றைக்கு முன்
 பறந்து கொண்டிருக்கிறது

நன்றி:
ஆனந்த் கவிதைகள் - ஒரு பார்வை
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் - http://www.keetru.com/

மதிமை சாலா மருட்கை (மதிப்புரை)

– ஞானக்கூத்தன்

https://gnanakoothan.wordpress.com/review1/

திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான ‘அளவில்லாத மலர்’ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் ‘சந்தியாவின் முத்தம்’. மற்றது சூரியநிலாவின் ‘இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு’. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் ‘தனப் பேச்சி’யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள். 2008ஆம் ஆண்டில் ஆகஸ்டு முடியும்போது புதுக்கவிதைக்கு 50 வயது முடிந்துவிட்டது. 1958ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத சரஸ்வதி இதழில்தான் அமரஜீவி க.நா. சுப்ரமணியம் அவர்களின் ‘புதுக்கவிதை’ என்று பெயரிடப்பட்ட கட்டுரை வெளியாயிற்று. ‘புதுக்கவிதை’ என்ற பெயர் புழக்கத்துக்கு வந்தது அப்போதிலிருந்துதான். 50 ஆண்டு நிறைவு பெற்ற சமயம் வெளிவந்த புதுக்கவிதைகள் பெருமைப்படத் தக்கனவா என்ற கேள்வியுடன்தான் நான் கவிதைகளைப் படித்தேன். புதுக்கவிதை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்துக்குப் பின் பக்தி இலக்கியத்துக்குப் பின் தோன்றிய மிகப் பெரிய இலக்கிய இயக்கம். முதல்ப் பார்வையில் இவ் இயக்கம் கவிதை சார்ந்ததாகத் தெரிந்தாலும் உண்மையில் இது எல்லாத் துறைகளையும் சார்ந்ததுதான். புதுக்கவிதை மாறுதல் வேட்கையைக் குறித்த சின்னம்தான். அதனால்தான் தாங்கள் கவிஞர்களாக இல்லாவிட்டாலும் புதுக்கவிதையில் வேறு துறையினருக்கும் ஈடுபாடு இருந்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இளமையுடன் முன்னேறிக்கொண்டிருக்கும் ‘புதுக்கவிதை’ என்ற பெயரையே கொண்டாட வேண்டும் என்று ஓர் அவா. சிறிய, பெரிய பத்திரிகையாளர்களுக்கு இதைப் பற்றிய நினைவே இல்லை. ஒன்றிரண்டு பேரிடம் இதைக் குறித்துப் பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு இதில் அக்கறை இல்லை. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எத்தனைப் பேர் பெயரும் பணமும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஒரு விதத்தில் விசனமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை நூறாண்டுக்குக் குறைவாக எதையும் கொண்டாடும் உணர்வு தமிழர்களிடத்தில் எழுவதில்லையோ என்னவோ.

2008-9ம் ஆண்டு புதுக்கவிதையின் ஆண்டாக எனக்கு நானே அறிவித்துக்கொண்டு கவிதைகளைப் படிக்கத் தொடங்கினேன். புதுக்கவிதையின் முதல்வர்களான ந. பிச்சமூர்த்தி மற்றும் க.நா.சு. இவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நான் படிக்கத் தொடங்கிய கவிதைத் தொகுப்புகளில் சிலதான் ஆனந்த், கவிதா, சூரியநிலா மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் முதலானோரின் தொகுப்புகள். இவர்களில் மூத்தவர் ஆனந்த். ந. பிச்சமூர்த்தியை அவர் பார்த்திருக்க மாட்டார். ஆனால் க.நா. சுப்ரமணியத்தை அவர் அறிவார். க.நா.சு.வுக்கும் ஆனந்தைத் தெரியும். ஆனந்தின் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ என்ற படைப்பை நான் நாவல்1 என்று குறிப்பிட்டதைப் பற்றிக் க.நா.சு. என்னிடம் கேள்வி கேட்டார். நானும் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.

ஆனந்தை எனக்குத் தெரிவதற்கு முன்பாக அவருடைய தந்தையைத்தான் எனக்குத் தெரிந்திருந்தது. என்னை விட மூத்த, ஆனால் வாலிபராகவே பலராலும் கருதப்பட்ட ஒய்.ஆர்.கே. சர்மா அவர்களின் மகன்தான் ஆனந்த் என்பது பின்னர்தான் தெரிந்தது. சர்மா பெரிய வாசகர். எல்லா எழுத்தாளர்களுக்கும் நண்பர். சர்மா அமரஜீவி லா.ச. ராமாமிருதத்துக்கு உறவினர். ஆனந்த் எழுதத் தொடங்கியிருக்கிறார் என்று தெரிந்தாலும் நான் எதையும் அவரிடமிருந்து படிக்கக் கேட்கவில்லை. அவர் எழுதத் தொடங்கியபோது கசடதபறவின் மூன்றாவது அவதாரம் வெளிவந்துகொண்டிருந்தது. முதலில் பெரிய அளவிலும் இடையில் சற்றுச் சிறிய அளவிலும் மூன்றாவதாக வாராந்தரப் பத்திரிகை அளவிலும் கசடதபற வெளிவந்தது. கசடதபற வெளிவந்துகொண்டிருந்தாலும் அவர் தன் கவிதைகளை அதில் வெளியிட முன்வரவில்லை. தான் எழுதியவற்றைக் கவிதைகள் என்று கூட சொல்ல முன்வரவில்லை. எதேச்சையாக ஒரு நாள் அவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தபோதுதான் அவர் கவிதைகள் எழுதி வைத்திருப்பது தெரிந்தது. நான் அவற்றைக் கவிதைகள் என்றும், வெளியிடத் தகுந்தவை என்றும் சொல்லி ஒரு கவிதையைக் கசடதபறவில் வெளியிடச் செய்தேன். அது வெளியாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இன்றும் அதன் சுவடுகள் – மனப் பதிவுகள் – என்னிடம் உள்ளன. அந்தக் கவிதை கவனிக்கப்பட்டது. அந்தக் கவிதையின் வெளியீடு ஆனந்தைக் கவிதையின் சன்னதியிலேயே இருக்க வைத்தது. ஆனந்த் கவிதைகள் பின்பு தொகுக்கப்பட்டு ‘அவரவர் கைமணல்’ என்ற பெயரில் வெளியாயின. அத்தொகுப்பின் மற்றொரு பகுதியில் தேவதச்சனின் கவிதைகள் இடம்பெற்றன. பின்பு ‘காலடியில் ஆகாயம்’ என்ற தொகுப்பும் வெளியாயிற்று. இப்போது வெளிவந்திருக்கும் ‘அளவில்லாத மலர்’ அவருக்கு மூன்றாவது தொகுப்பாகும்.

தொடக்கத்திலிருந்தே ஆனந்த் தனித்துவம் உடையவராகவே இருந்துவருகிறார். அவரது கவிதையல்லாத எழுத்துகளிலும் இதைப் பார்க்க முடியும். இலக்கியத்தில் தனித்துவம் ஒரு சிறப்பான மதிப்பாகக் கவிஞன் விஷயத்தில் கருதப்படுகிறது. ஒரு படைப்பாளி தனித்துவத்தை அடைவது மிகக் கடினம். அதை விடக் கடினம் அதிலிருந்து அவன் விடுபடுவது. க.நா.சு.வும்2 தனித்துவம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

எனக்கு, எனக்கு, எனக்கு என்பதில்தான் இலக்கிய சிருஷ்டியும், இலக்கிய விமரிசனமும் அடங்கியிருக்கிறது. தத்துவ தரிசனம் ஆணவத்தைப் போக்க அவசியப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில் ஆணவம், தனித்தன்மை அவசியப்படுகிறது. அதில்லாவிட்டால் மெஷின்கள் உற்பத்தி செய்யும் இலக்கியம்தான் இருக்கும். மனிதர்கள் ஒருவரிடமிருந்து மாறுபட்டுச் செய்யும் இலக்கியம் இராது.
– க.நா. சுப்ரமணியம், இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், பக். 27

க.நா.சு. சொல்லியுள்ள கருத்துகளைக் கொண்டு தமிழ்ப் படைப்பாளிகளை எடைபோடுவது சுவையான விஷயமாக இருக்கும். ஆனால் ஆணவம், தனித்துவம் இருந்தால் மட்டும் ஒரு படைப்புக்குப் போதுமானதல்ல. சில சமயம் இவை இரண்டும் இடையூறாகவே கூட அமையலாம். ஆனால் இந்தச் சொற்கள் எப்படிப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆனந்தின் தனித்துவம் என்ன? அதை உருவாக்கும் கூறுகள் எவை? தொடக்கத்திலேயே அவர் எழுத்தில் நான் அவதானித்தது ஒரு விதமான ‘அயன்மை’. நேர்ப் பழக்கத்தில் இந்த அயற்பண்பு அவரிடம் காணப்படுவதில்லை. ஆனால் எழுத்தில்தான் இப்பண்பு புலப்படுகிறது. எனவே இது அவரது அக உலகத்துடன் தொடர்புடையது எனக் கூறலாம். இப்பண்பு அவரது படைப்புகள் மூலம் ஒரு வினோதமான உலகத்தை சுட்டிக்காட்ட விரும்புவதாய்த் தெரிகிறது. விசாலமான, உயர்வான, விரைவான உணர்வுகளை வாசகனிடத்தில் எழுப்பும் முயற்சிகளே ஆனந்தின் கவிதைகள் என்று மதிப்பிடத் தோன்றுகிறது. வனம், ஆறு, மலை முதலியன அந்த வினோத உலகத்தையும் உணர்வையும் எழுப்பிக் காட்டும் படிமங்களாக அமைகின்றன3. இந்த வினோத உணர்வுக்கு அளவு ஒரு குறுக்கீடாகும். ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை – எனவே பாதுகாப்புணர்வைத் தருவது ‘அளவு’ என்கிற தத்துவம். பரிச்சயமான உலகில் எல்லாப் பொருள்களும் அளக்கப்பட்டுள்ளன; கலையும் வடிவப் பொருள் என்கிற முறையிலும், அதன் உபகரணங்கள் அளவுக்குரியது என்பதாலும் அளவுக்குரியதாகிறது. அளவினால்தான் கலைகள் அறியப்பட்டுள்ளன. நான் ரமேஷ்-பிரேம் உப்பு கவிதைத் தொகுதி பற்றிக் குறிப்பிட்டது போல, கலை யதார்த்த – நிஜ உலகப் பொருள்களின் அளவை மாற்றி அமைத்துக்கொள்கிறது. பொருள்களை அவற்றின் அளவிலிருந்து விடுவிப்பதே கலையின் பிரதான நோக்கம் போல் காண்கிறது. ஒரு பொருளின் துல்லியத்தை பொருளிலிருந்து அகற்றினால் பொருளிடத்தில் நமக்கிருந்த பரிச்சயம் பாதிக்கிறது. பொருளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய அளவு மருட்சியை விளைவிக்கிறது. எனவேதான் புதுமையின் விளைவுகளில் ஒன்றாக மருட்சியைக் கூறுகிறார் தொல்காப்பியர்.

புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே

என்பது தொல்காப்பியம். ‘மருட்கை என்பது வியப்பு. அற்புதம் எனினும் அமையும்’ என்கிறது உரையாசிரியரான பேராசிரியரின் விளக்கம். மருட்கை பற்றிய தொல்காப்பியரின் நூற்பாவுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ‘அளவு’ பற்றியும் குறிப்பிடுவது கவனிக்க வேண்டிய ஒன்று. தொல்காப்பியரின் நூற்பாவே பெருமை, சிறுமை என்று அளவு பற்றிய சொற்களைப் பயன்படுத்துகிறது. எனவே வியப்புக்கும் அளவுக்கும் தொடர்பிருக்கிறது என்று சொல்லலாம். தொல்காப்பியர் கூறும் வியப்பு என்கிற மெய்ப்பாடுதான் ஆனந்த் கவிதையில் இயங்குகிறது என்பது என் கருத்து.

ஆனந்த் தன் கவிதைத் தொகுப்புக்கு ‘அளவில்லாத மலர்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்தத் தொடரை ‘உயிர்ச் சுனை’ என்ற தன் கவிதையிலிருந்து அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார். மலர் அளவற்று இருக்க முடியுமா? பொதுவாக மலர்கள் எண்ணற்றவையாகவே உள்ளன. பெரிய மலர்கள் எண்ணப்படுகின்றன. எனவே மலர் எண் என்ற அளவுக்கு உட்படவே செய்கிறது. மலர் வேறு சில அளவுக்கும் ஆட்பட்டதுதான். முதலில் அது பார்க்கப்பட்டதும் சிறியது, பெரியது என்பது அறியப்படுகிறது. அதன் இதழ்கள் இத்தனை என்பது அறியப்படுகிறது. ஆறு பருவங்கள், ஐந்து திணைகள், இரண்டு பொழுதுகள், மற்றும் ஏழு வண்ணங்கள் இவற்றுக்கு ஆட்பட்டே அது மலர்கிறது. இப்படிப்பட்ட மலர் ஒன்றுதான் நம்மால் அறியக்கூடியது. அதற்குத்தான் நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மலரை அளவில்லாத என்று குறிப்பிடும்போது மலரை அதன் உற்பத்தி தத்துவத்திலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. உற்பத்தியான, உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றைத்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியும். எல்லா மலரும் அளவுடையனவே. அளவில்லாத மலரோ உற்பத்தியான ஒன்றல்ல; உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றல்ல. ஆனால் இதைப் பார்க்க முடியுமா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம், பார்த்திருக்கிறீர்கள். ஆனால் பார்க்கவில்லை என்றுதான் பதில் சொல்வீர்கள். ஞாபகப்படுத்திப் பாருங்கள். ‘வெண் தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ’ என்று கேட்கிறது சகலகலாவல்லி மாலை. சகலகலாவல்லியின் பாதம் வெண் தாமரையின் மேல் இருக்கிறது. வெண் தாமரைப் பூவின் மேல் சரஸ்வதி நின்றிருப்பதாக சகலகலாவல்லி மாலை சொல்கிறது. பாரதியும் வெள்ளைத் தாமரைப்பூவில் இருப்பாள் என்கிறார். சரஸ்வதியை வீணையும் கையுமாக உட்கார்த்தி வைத்துக் காட்டினாலும் லக்ஷ்மியை செந்தாமரைப் பூவின் மேல் நிற்பதாகக் காட்டியிருக்கிறார் ஓவியர் ரவிவர்மா. ராட்சதத் தாமரைப் பூக்கள் அல்ல இவை. இந்தப் பூக்களின் உற்பத்தி ஸ்தானம் வேறு. இராமனைப் பார்க்க சாளரத்தில் தோன்றிய பெண்களின் முகத்தை சாளரம் தோறும் பூத்த தாமரை என்றார் கம்பர். இந்தத் தாமரை உருவகத் தாமரை, அளவுடையது. ஆனால் ஆனந்தின் அளவில்லாத மலர் இத்தகையதல்ல. ஓரளவு சகலகலாவல்லியும், செந்திருவும் நிற்கும் மலர்களோடு உறவுள்ளதெனக் கூறலாம். அந்த மலர்கள் கூட இனம், எண்ணிக்கை மற்றும் நிறம் போன்ற அளவுடையதாக இருக்கிறது. ஆனால் ஆனந்தின் மலர் என்ன மலர் என்றே தெரிந்துகொள்ள முடியாது!

உயிர்ச்சுனையின் ஆழத்தில்
மலர்ந்து கொண்டே
துளிபொழிந்த அந்த
அளவில்லாத மலரைக் கண்டேன்.

என்கிறது கவிதை. எனவே மலரின் உற்பத்திஸ்தானம் – உயிர்ச் சுனை – அசாதாரணமானது, ஆகவே மலரும் அப்படியே ஆகிறது. அளவில்லாத என்றாலும் அந்தப் பொருள் ‘மலர்’ என்றே பெயரிடப்படுகிறது. ஏன்? உயிர்ச் சுனை என்ற கவிதையில் கிட்டிய அனுபவம் ‘மலர்’ என்ற பெயருக்கு அருகில் இருப்பதால் அப்படிப் பெயர் பெறுகிறது. ‘மலர்’ என்று ஒரு பகுதி அறியப்பட்டு இன்ன மலர் என்ற மற்ற பகுதி அறியப்படாமல் போவதால் குழப்பம் ஏற்படுகிறது. இந்தக் குழப்பமும் இயல்புதான்.

அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது
அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை

என்கிறது ஆனந்தின் மற்றொரு கவிதை. ஒரு பகுதி தெரிந்தும், மற்றொரு பகுதி தெரியாமல் போவதும் மனித இயல்புதான் என்பது போல. எனவே அளவில்லாத மலர் மாயாஜாலத்தில், தாந்த்ரீகத்தில் பார்க்கப்படுவதாக அமைகிறது. ஆனந்த குமாரசுவாமி சொன்னார்: “விக்கிரகங்கள் அவை குறிக்கும் இறைவர்களின் பிம்பங்களே தவிர அவையே இறைவர்களில்லை” என்று. இந்த பிம்பம் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிற பிரதிபிம்பம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்4.

ஆனந்தின் கவிதையில் பல நான்கள் வருகின்றன. ஒரு குறுநாவலுக்குக் கூட ‘நான் காணாமல் போகும் கதை’ என்று பெயர் வைத்திருக்கிறார். கவிதை இயல் கவிதையில் இடம்பெறும் நான்கள் வேறு வேறானவை என்றே அறிந்திருக்கிறது. கவிதை ஒருவருடைய கூற்றாகையால் கூறுவோர் பலராகக் கூறுகிற நானும் பலவாகிறது. ‘நான்’ என்கிறபோது கூறுவோரின் திணையும், பெயரும், பாலும் தெரிவதில்லை. நகுலனின் கவிதையிலும் இந்த ‘நான்’ பற்றிய நிலைபாட்டு விவாதம் நடைபெறுகிறது.

பணமுண்டா?
செலவுண்டு
முதல் இல்லை
உனக்கென்று
என்ன உண்டு
நான் கூட இல்லை
– சச்சிதானந்தம் பிள்ளையின் தனிமொழி

நான் ஒரு
உடும்பு
ஒரு
கொக்கு
ஒரு
ஒன்றுமே இல்லை
– சச்சிதானந்தம் பிள்ளையின் தனிமொழி

மழை இன்னும் வரவில்லை.
என்னுடன் ஒருவருமில்லை
நான் கூட இல்லை.
– மழை மரம் காற்று

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்
தானே. அவர்
எழுதியிருந்தார்
இன்று காலையில்
உறங்கி
விழித்ததும்
என்னை நான்
காணவில்லை
– கண்ணாடி

ஆனந்தின் ‘வேகம்’ என்ற கவிதை ‘என்னை மட்டும் காணவில்லை’5என்று முடிகிறது. ‘உயிர்ச்சுனை’ என்ற கவிதையில் ‘யாருமற்று/அவ்வப்போது நானுமற்று’ என்று சொல்லப்படுவது கவனிக்கத் தகுந்தது. எழுத்தாளர்களில் மௌனி தன் கதைகளில் இத்தகைய அனுபவத்தை ஆராய்ந்திருக்கிறார். க.நா.சு.வின் ‘சாவித்ரி’6 என்ற சிறுகதை கூட இந்தச் சமயத்தில் நினைவில் வருகிறது.

எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையைத் தொடர்ந்து 70களில் வெளியிட்ட கவிஞர்களின் தத்துவ விசாரங்களில் ஒன்று ‘நான்’ மற்றும் ‘பெயர்’ பற்றியுமாக இருந்தது. புனைபெயர் வைத்துக்கொள்வது கூட அழகுக்காக இல்லாமல் தன் பெயரை மறைத்துகொள்ளவும் உண்மையான விமரிசனக் கருத்துகள் எழச் செய்யவும்தான். ‘அனாமி’, ‘அநாமிகா’ போன்ற பெயர்கள் கூடப் பத்திரிகைப் பெயராக சிந்திக்கப்பட்டதுண்டு. ஆனந்தின் ‘பெயரைத் தேடி’ என்ற கவிதை

அகராதியில்
என் பெயரைத்
தேடிக் கொண்டிருந்தேன்

என்று தொடங்குகிறது. கோகுலக்கண்ணனின் ஒரு கவிதை ‘அகராதியில் விழுந்த குழந்தை’ என்று பெயர் பெற்றிருக்கிறது.

நாம் எத்தனையோ கவனத்துடன் இருந்தபோதிலும்
குழந்தை திடீரென விழுந்துவிட்டது அகராதிக்குள்

என்று அதிர்ச்சி தருகிறது கோகுலக்கண்ணனின் கவிதை. படைப்பாளிகள் சிலர் – சிலர்தான் – தாங்கள் உணரும் அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளவை இத்தகைய கவிதைகள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன கவிதை அதிர்ச்சியை சற்றுக் கூடுதலாகப் படைத்துக் காட்டியிருந்தும் அது தன் நகைச்சுவையை இழந்துவிடவில்லை. சொல்லப் போனால்7 20ஆம் நூற்றாண்டில்தான் தமிழில் நகைச்சுவை அதிகமாகக் கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. அதுவே பலவகையான சாயல்களைக் கொண்டுள்ளது. அனந்தவர்தனரின் ‘த்வன்யா லோகா’வில் சொல்லப்பட்ட ‘ஸ்தாயி பாவம்’, ‘சஞ்சாரி பாவம்’ எல்லாம் இக்கவிதைகளில் காணப்படுகின்றன.

கோரைப்பற்கள்

நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப் பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது
பயத்துக்கு
– ஆனந்த்

இக்கவிதையில் ‘துடித்து’ என்ற வினைச்சொல் அச்சமூட்டும் நோக்கம் உடையது. ஆனால் கவிதையின் குரலோ நகைச்சுவைக் குறிப்புடையது.

முத்தம்
பரிமாறிக்கொள்பவர்களின்
சொர்க்கமாகத் தொடங்கி
சிறைக்கூடமாக முடிகிறது.
– கவிதா – ‘சந்தியாவின் முத்தம்’ தொகுப்பில்

ஆனந்தின் கவிதையில் பயம், ஹாஸ்யம் என்றால் கவிதாவின் கவிதையில் சிருங்காரம், ஹாஸ்யம் என்று அமைப்பு உருவாகிறது. நகைச்சுவையில் ஒரு அதிசய வகையைச் சேர்ந்தது ஆர். ராதாகிருஷ்ணனின் ‘அலறல்’ என்ற கவிதை.

அலறல்

எட்வர்டு முன்ச்சின் மறக்க முடியாத
ஓவியம் ‘அலறல்’ எனப் பெயர்
பெற்றது. அவ்வளவுதான்.
ஒன்றுமே சொல்ல இயலாத
இந்த ஓவியத்தைப் பற்றி பல
புத்தகங்கள், அதற்கும் மேலே
கட்டுரைகள், விவாதங்கள்;
ஆத்ம ப்ரகடன வாதம் என்ற கலைச் சித்தாந்தம்
அன்று பஸ்ஸில் ஜன்னலோரமாக
அமர்ந்திருந்தவரின் வாய் முற்றிலும்
திறந்த வண்ணமாக்வே இருந்தது.
கடைசி ஸ்டாப்பில் இறங்கப் போன நான்
அவரை எழுப்பலாமென்றால்
அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
– ‘நெகிழ்ச்சி ஒரு நிகழ்ச்சியல்ல’ தொகுப்பில்

பழனிவேளின் ‘தவளை வீடு’ என்ற தொகுப்பிலிருந்து ஒரு கவிதை,

எளிமையானதாகச் சிக்கலானதாக
மிகப் பெரிய திகைப்பை ஏற்படுத்தும் தண்ணீர்
கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதும்
உள்ளே ஊடுருவ அனுமதிப்பதும்
தன்னில் இருப்பதை ஒளிர்வு மறைவோடு காட்டுவதும்
தனக்கென ஓர் ஒலியை வைத்துக்கொண்டு
ஒரே சமயத்தில் எல்லாத் தன்மையோடும்
தண்ணீரால் மட்டுமே இருக்க முடிகிறது
இந்த மாயச் சவால் மீது
தவளை யொன்று குதிக்கிறது.

பழனிவேளின் கவிதையில் ஸ்தாயி பாவம் (நிலையான பாவம்) சஞ்சாரி பாவம் – இரண்டாவதாகக் கவனத்தைக் கவரும் – வெளிப்படும் பாவம் என்ன என்பதை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

பஞ்சவர்ண வெட்டுக்கிளி தவ்வும்போது
பூமிக்குச் சிறிது எடை குறையக்கூடும்

என்று பழனிவேள் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார். விண்வெளி சாதனையின் விளைவாக பூமியின் எடை சிறிது குறைக்கப்பட்டது அதிசயமான சாதனை. ‘பூமிக்குப் பாரம்’ என்ற பழங்கருத்தை எண்ணிக்கொள்ளவும் இக்கவிதையின் அவதானிப்பு தூண்டுகிறது.

புதுமை என்பதே ஒரு சுவையாகத் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். ‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று செய்யுளியலில் குறிப்பிட்டிருக்கிறார். ‘விருந்து’ என்பது வெளியிலிருந்து வந்து ஏற்கப்பட்டதிடமிருந்து மதிக்கப்படுவது. அது யாப்பின் மேற்று என்று சொன்னாலும் ஒரு சுவைக்குப் புறத்திலிருந்தும் இன்னொரு சுவை முதல் சுவையை சேர்க்கையால் சிறப்பிக்க முடியும் என்பதுதான் கருத்து. இந்தக் கருத்தை ‘காவ்ய மீமாம்சை’ என்ற நூலை வடமொழியில் எழுதிய ராஜசேகரர்8 நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மரபியலில் இளமைப் பெயர்கள் பற்றி எழுதும்போது தொல்காப்பியர்,

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே

என்று விதிக்கும்போது அவர் ஒரு முறுவல் செய்தது போல் என் மனதுக்குப் படுகிறது. நெல்லுக்கும் புல்லுக்கும் இளமையின் பெயர் கிடையாது என்பது நூற்பாவின் கருத்து. இதைக் கூறும்போது தொல்காப்பியருக்குப் பிரிப்பு வந்திருக்குமோ.

புதுக்கவிதையின் நடை இடைக்காலத்தில் மாறிவிட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. ஒரு புதுவகையான அழகும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. ஆனந்தின் கவிதைகளிலிருந்தே சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

பெரிய கன சதுரத்துக்கும்
சிறிய கோளத்துக்கும் கீழே
மூன்று பௌர்ணமிக்கு ஒருமுறை
நட்சத்திரங்கள் சில
கடந்து போகின்றன.
– ‘இரண்டு இடுக்குகள்’ கவிதையிலிருந்து

சூரியன் மறுபக்கம் சுழன்றபின்
தம் நிழல் விழாதென நினைத்து
தாவரங்கள் ரகசியங்களை
தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன …
… … …
– ‘இருளுக்குள் விழும் நிழல்’ கவிதையில்

திரைகள் விலகிய பின்னும்
விக்கிரகங்கள்
உடையற்று நிற்கின்றன
– ‘காத்திருக்கும் வேளை’ என்ற கவிதையில்

ஆனந்தின் அளவில்லாத மலர் தொகுப்பில் ‘புதியது’ என்ற கவிதை பல வரிகளைக் கொண்டது. மாணிக்கவாசகரின் சிவபுராணம் மாதிரி, பாரதியாரின் அகவல் மாதிரி ஒலித்துக்கொண்டு நகர்கிறது இந்தக் கவிதை. கவிதையில் ஒரு மூதாட்டி வருகிறாள். தமிழில் காதம்பரி என்று ஒரு மொழிபெயர்ப்புக் காவியம் இருக்கிறது. அதைப் பாரதியார் படித்திருப்பார் அல்லது கேள்விப்பட்டிருப்பார் என்று சொல்லலாம். அந்தக் காதம்பரி குயிலில் எதிரொலிக்கிறது. கானகம், மையத்தில் குளம், காதல் முதலிய படிமங்கள் ஆனந்தின் ‘புதியது’ கவிதையில் காதம்பரியை நினைவூட்டுகின்றன.

ஆனந்தின் கவிதைத் தொகுப்பில் வேகம், ஆதிமொழி, அந்த நாள், எனக்கான இடங்கள், இரண்டு இடுக்குகள், காதல், ஊர்வலம், மரங்கள் பேசும் ரகசியங்கள், மீன்கொத்தி முதலாக யாளிகளின் வரலாறு வரை இருபது கவிதைகள் சிறப்பாக நமது கவனத்தைக் கவர்கின்றன.

ஆனந்த் கவிதை இயல் குறித்தும் தொடர்ந்து எழுதியும், தனிப்பட விவாதித்தும் வருகிறார். திரு. பெருமாள்முருகனின் ‘நீர் மிதக்கும் கண்கள்’ (2005), திரு. கோகுலக்கண்ணனின் ‘மரம் பூக்கும் ஒளி’ (2007) ஆகிய தொகுப்புகளுக்கு ஆனந்த் எழுதியிருக்கும் குறிப்புகள் சிந்தனையைத் தூண்டுவன. கடந்த 30 ஆண்டுகளில் ஆனந்த் சூப்பர் கவிஞராகிவிட்டார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நேற்று நடந்தது போல் இருக்கிறது அவரது முதல் கவிதையை அவரது கையெழுத்தில் படித்தது.

கட்டுரையின் தொடக்கத்தில் புதுக்கவிதையின் 50 ஆண்டு நிறைவைக் குறிப்பிட்டேன். இக்காலகட்டத்தில் முதல் 25 ஆண்டுக்குள் அறிமுகமான கவிஞர் என்கிற முறையில் ஆனந்தின் கவிதைகளைக் குறித்துக் கூடுதலாக இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனந்தின் கவிதைகளோடு 50 ஆண்டு நிறைந்த மகிழ்ச்சிக்காக நான் மீண்டும் படித்த கவிஞர்கள் பலர்: தேவதச்சன், சேரன், நாஞ்சில் நாடன், லதா (சிங்கப்பூர்), தேவேந்திர பூபதி, யவனிகா ஸ்ரீராம், யுவன், யூமா வாசுகி, புதுவை இளவேனில், ஆர். ராதாகிருஷ்ணன், அழகியசிங்கர், கவிதா, சூர்யநிலா, மாலதி மைத்ரி, ர. ஸ்ரீனிவாசன், கோகுலக்கண்ணன், தமிழ் மணவாளன் முதலியோர் அவர்களில் சில பேர்.

இனிய கனவொன்று
சுவடற்று தேய்வதைப் போல்

என்பது பெருமாள்முருகனின் ஒரு கவிதை வரி. புதுக்கவிதை அப்படியில்லை.

ஞானக்கூத்தன்

குறிப்புகள்

1) சிறுகதை, நாவல் அல்லது குறுநாவல் இவற்றின் நீளத்தைப் பற்றிக் க.நா.சு. பேசுவார். வடிவம் பற்றியே நாவல், குறுநாவல், கவிதை என்பது குறிப்பிடப்படுவதால் அதன் நீளம் ஒரு பொருட்டல்ல என்பார் க.நா.சு. ஒரு சிறுகதை 300 பக்கம் கூட இருக்கலாம் என்பார் க.நா.சு. ஆனந்தின் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ ஒரு நாவல் என்று நான் குறிப்பிட்டது அதன் வாசிப்புத் தரும் இயல்பைப் பற்றி. மற்ற அத்தியாயங்கள் படிக்கத் தரப்படாமலேயே ஒரு நாவலின் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் மட்டுமே வாசகனுக்குத் தரப்படலாம். வடமொழியில் கூறப்படும் கண்ட காவியம் (கண்டம் என்றால் ஒரு துண்டு) அகண்ட (துண்டமற்றது) காவியம் பற்றிய கருத்துகளைப் போன்றது க.நா.சு.விடம் நான் சொன்னது.

2) விரும்பத் தகுந்ததும் சலிப்புத் தருவதுமாக தனித்துவம் காணப்படுகிறது. இசைத் துறையில் இதற்கு உதாரணங்கள் கூறலாம். சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சிதம்பரம் ஜெயராமன் இவர்களின் தனித்துவம் சலிப்பூட்டுகிறது.

3) சர்ரியலிசம், உருவகம் முதலியவை இவ்வுலகைப் படைத்துக் காட்டுகின்றன. ஆனந்தின் படைப்புகள் வினோதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

4, 5) ந. பிச்சமூர்த்தியின் ‘காதல்’ என்ற கவிதையின் இறுதி அடியும் ‘என்னைக் காணவில்லை’ என்று முடிகிறது.

6) 1939ம் ஆண்டு மணிக்கொடியில் வெளியான க.நா.சு.வின் சிறுகதை ‘சாவித்ரி’ நுட்பமாகப் பின்னப்பட்ட ஒன்று.

7) க.நா.சு.வின் ‘அபஸ்வரம்’ கவிதை நவீன கவிதை இலக்கியத்தின் நகைச்சுவைக்குக் கொடியேற்றம் செய்வது.

8) கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். கவிஞர், நாடகாசிரியர் மற்றும் கவிதை இயலாளர்.