தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, August 11, 2014

ஓடாதீர், மகா காவியம் – புதுமைப்பித்தன், அன்னபூரணி சந்நிதியில்- எம்.வி. வெங்கட்ராம், வழி – புதுமைப்பித்தன்



 ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948



ஓடாதீர் – புதுமைப்பித்தன்







நன்றி  புதுமைப்பித்தன் – கவிதைகள் Submitted by புதுத்தமிழ் ப.லோகேசு 
http://www.tamilvu.org/slet/lA100

I
ஓகோ, உலகத்தீர், ஓடாதீர்,
சாகா வரம் பெற்ற,
சரஸ்வதியார் அருள் பெற்ற,
வன்னக் கவிராயன் நானல்ல;

II
உன்னிப்பாய் கேளுங்கள்;
pupiஓடாதீர்;
வானக் கனவுகளை
வக்கணையாச் சொல்லும்
உண்மைக் கவிராயன்
நானல்ல

III
சத்தியமாய்ச் சொல்லுகிறேன்
சரஸ்வதியார் நாவினிலே
வந்து நடம் புரியும்
வளமை கிடையாது.

IV
உம்மைப் போல் நானும்
ஒருவன் காண்;
உம்மைப் போல் நானும்
ஊக்கம் குறையாமல்
பொய்கள் புனைந்திடுவேன்
புளுகுகளைக் கொண்டும்மை
கட்டி வைத்துக் காசை-
ஏமாந்தால்,
கறந்திடுவேன்.

V
ஊருக்கு மேற்கே
ஊருணியில் கண்டவளை
ஆருக்கும் வாய்க்கா
அரம்பை என்று கனவென்று
சொல்லில் வளைந்திடுவேன்.
சோற்றுக்கு அலைக்காதீர்

VI
கன்னி எழில் வேண்டாம்;
காதல் கதை வேண்டாம்;
சொன்னபடி
தேச
பக்தி எழுப்பிடுவாய்
என்றக்கால்,
அப்படியே, ‘ஆஹா
அடியேன் இதோ’ என்று
கல்லும் உயிர் பெற்று,
காலன் போல், நடமாட,
‘வெல்லு’, ‘வெல்லு’
என்று குத்தும்
வீறாப்புத் தார்க்குச்சி
எத்தனை வேணும், செய்து
இணையடியில் வைத்திடுவேன்.

VII
சற்று பொறும் ஐயா
சங்கதியை சொல்லுகிறேன்;
இன்றைக்குக் காசு
இருக்கிறது;
இனிமேலே
என்றைக்கோ, எப்போதோ
எதிரில் எனைக் கண்டக்கால்
ஓடி ஒளியாதீர்!
உம்மிடம் நாம் கேட்கவில்லை

VIII
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று;
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
‘வானத்து அமரன்
வந்தான் காண்!
வந்தது போல்
போனான் காண்’ என்று
புலம்பாதீர்;
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்.
‘சித்தெ’ பசியாற
செல்லரிக்கும் நெஞ்சாற
மெத்தப் பழங்கதைக்கு
மெத்தப் பழங்கதையை
புத்தி தடுமாறிப்
புகன்றாலும்
அத்தனையும், ஐயோ
அவை யாவும் லட்சியங்கள்!
வானத்துக் கற்பனைகள்!
வையம் வளர்க்க வந்த
மோகன மந்திரங்கள்!
மோட்ச வழி காட்டிகள் ஓய்!
அத்தனையும் உங்கள்
அறிவை வளர்க்க வந்த
சொத்துக்கள் ஓய்!…
சொல்லுக்குச் சோர்வேது
சோகக் கதை என்றால்
சோடி இரண்டு ரூபா!
காதல் கதை என்றால்
கை நிறையத் தரவேணும்!
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றது போல்.
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டிவைக்க முடியாது!
காசை வையும் கீழே. பின்
கனவு தமை வாங்கும்;
இந்தா!
காலத்தால் சாகாது,
காலத்தின்
ஏலத்தால் மலியாது!
ஏங்காணும்
ஓடுகிறீர்
ஓடாதீர்!
உமைப்போல நானும்
ஒருவன் காண்!
ஓடாதீர்!

- வேளூர் வெ. கந்தசாமி பிள்ளை

மகா காவியம்
காளான் குடை நிழலில்
கரப்பான் அரசிருக்க,
வேளான் குடியூரில்
வெள்ளெருக்கு மூட்டருகே
கள்ளி தலைதூக்க
காட்டெருமை புறத்தேறி
சிட்டுக் குருவியவள்
சிங்காரப் பாட்டிசைத்தாள்.
வரிசை வைக்கும் பாங்கிமார்
வலசாரி இடசாரி
சில்லென்ற ரீங்கார
சிலம்புச் சிறகோடு
பம்புக் கருமேகப்
பந்தல் எடுத்து வர
ஆறாயிரம் பூச்சி
அமர்ந்த சபை நடுவே
அத்தாணி மண்டபத்தின்
அரியாசனத் தருகே
பல்லி யமர்ந்திருந்து
பதிவாய்க் குறிசொல்லும்.
உள்ளகுறி யத்தனையும்
உண்மை யுண்மை என்பது போல்
ஓணான் தலை அசைத்து
மண்ணாலும் மாராசன்
மனசைக் கவர்ந்திருக்கும்.
அச்சமயம், –
உயரப் பறந்து வரும்
வண்ணாத்திப் பூச்சியவள்
வாகாய் விலகி, ஒரு
தும்பை மலர் அமர்ந்து
துதி நீட்டத் தேன் எடுக்க,
தேனெடுக்கும் வேளையிலே
தெய்வச் சினத்தாலோ,
தேவர் அருளாலோ,
மண்டு மகரந்தம்
மங்கையவள் நாசியிலே
சுழிமாறிப் போனதினால்
சுருக்கென்று தும்மல்வர,
தும்மல்வர தும்மல்வர
தும்மல் பெருகிவர,
அத்தாணி மண்டபமே
அதிர நடுங்கிற்று!
அத்தாணி மண்டபத்துக்
கணியாய் இலங்கி நின்ற
கொற்றக் குடையும்
கோணிச் சரிந்தது காண்!
கோணிச் சரிந்த குடை
கொற்றவனார் தன் தலையில்
வீழ்ந்து பொடியு முனம்
வீரத் திரு மார்பன்
வீசி நடந்து,
வியன் சிறகைத் தான் விரித்துப்
பல்லிக்கு எட்டாத
பாழ்த்த இடுக்கினிலே
ஒண்டி உயிர் காத்து
உடல் நடுங்கி நின்றாரே!
சிங்காரப் பாட்டிசைத்த
சிட்டுக் குருவியவள்
சிரிப்பாணி மண்ட,
சிறகு விரித்து, அலகில்
நெளியும் புழுவேந்தி
நீள்வெளியில் தான் பறக்க
வந்திருந்த மந்திரிமார்
வரிசை பல கொணர்ந்த
குடிபடைகள் யாவருமே
உடற்பாரம் காக்க
ஓடி ஒளிந்தனரே!
காளான் நிழல் வட்டம்
கண்ணுறங்கிப் போயிற்றே
வேளான் குடியூரில்
வெள்ளெருக்கு மூட்டருகே
கள்ளி தலை தூக்கும்
கரை யருகே,
ஆளற்றுப் போச்சுது காண்,
அந்தோ அரசாட்சி!
2
மகா ரசிகர்
“வாரும்வோய் கவி ராயரே நுமது
கவியோவி தென்ன புகலும்?
வாக்கிலே பொருளிலே கருதிநீர் மறைவாக
வைத்ததெப் புதையல் ஐயா?
மாகாவியம் என, மனசிலே கொண்டு நீர்
மார் தட்டி வந்து நின்று,
கோரிய காசிலே குறிவைத்து எம்மை நீர்
குடுசங்கி போட வந்தீர்?
அங்குமிங்கும் ஓடும் அரணையைப் பல்லியை
அல்திணை ராசி ஒன்றை
அரியா சனத் தேற்றி அதனிலும் கடையான
அருவருப் பைக் கவியிலே
சிங்காரமாய்க் கூட்டிச் சின்னத்தன மிகு
சிறுமையைக் காட்டி விட்டீர்!
ஆலால முண்டவன் அற்றை நாள் மதுரையில்
அணி செய்த தமிழ ணங்கை
வாலாயமாய் வந்து வாக்கிலே குப்பையை
வாரிச் சொரிந்த கவியே!
ஏலாத செயலிலே ஏனையா முயலுதீர்?
ஏதும் பிழைக்க மார்க்கம்
அறியாது, அறியாத அவலட்சணத் துறை
அதிசயக் கருவின் விளைவை
மூலைக் கொருத்தராய் மூச்சுத் திணறவே
முயன்றிடில் கவி யாகுமோ?
3
மகா கவி
“தாளால் உலகளந்தான்
தனைமறந்து தூங்கி விட்டான்.
மூளாத சீற்ற
முக்கண்ணனும் இன்று
ஆளாக்கு அரிசிக்காய்
அல்லாடித் திரிகின்றான்.
காளான் அரசாட்சி
கசப்பாகித் தோற்றுகிற
ஆளான பெரியவரே,
அடியேன் ஒரு வார்த்தை.
இன்றைக்கு,
யாரையா காட்டுக்கு
அப்பன் மடத்தனத்தை
அப்படியே ஏற்றுத்தன்
பெண்டாட்டி கைப்பிடித்து,
பெரிய நிதியிழந்து,
திண்டாடி நின்று,
தீமைதனை சங்கரிக்க,
ராவணனார் காதுக்கு
‘ரதி போல்வாள் என் மனைவி’
என்பதனைச் சொல்லுதற்கு
இடும்பு பல புரிந்து,
அன்னவளைத் தானிழந்து
அதற்கப்பால்! மதியிழந்து
போகும் வழியினிலே
பொல்லாப்புக் கச்சாரம்
வாலி வயிறெறிய
வாங்கிச் சுமந்துகொண்டு,
பெரிய கடல்கடந்து
பெண்ணை, தன் நாயகியை
வில்லால், திறத்தால்,
விதிவலியால், மீட்டுப்பின்
அன்னவளைத் தீக்குழியில்
அருகிருந்தோர் நம்புதற்காய்
இறக்கி, தருமத்தை
ஏத்தி, எடுத்து
அரியாசனத் தேற்றும்
அதிசயங்கள் உண்டோ காண்!
கரப்பான் அரசிருக்க
கடுக்குதோ, உம்மனசு?
கரப்பானைப் போன்ற
காலறுவான் எத்தனைபேர்
மொண்டி அரசாட்சி
மூடக் குரோதமுடன்
தண்டெடுத்து,
தானே யறிந்த
தற்பெருமைச் சூனியத்தை,
பிறக்கும், இறக்கும்பின்
பேதுற்று மாளுகின்ற
அண்டாண்ட மூலத்தின்
அழியா விதி போல
நினைத்துத் தருக்கி
நடப்பதுவும் சரிதானோ?”
    o0o0o0o
‘நிசந்தானோ சொப்பனமோ':
பட்டமரம் தழைக்க,
பைரவியார் சன்னிதியில்,
வெட்டெருமை துள்ள,
விளக்கெடுக்க,
வட்டமுலை மின்னார்
வசமிழந்த காமத்தால்,
நீலமணி மாடத்து
நெடியதொரு சாளரத்தைத்
தொட்டுத் தடவிவந்து
தோயும்நிலாப் பிழம்பை,
எட்டி, எடுத்து, –
இடைசுற்றிச் சேலையென
ஒல்கி நடப்பதாய்
உவமை சொல,
நோட்டெழுத, சீட்டெழுத
நூறுநுணாப் பேய்விரட்ட,
உடுக்கடித்து –
உள்ளத்தனல் அடிக்கும்
கறுப்புக் கதைசொல்ல,
காவிரியின் வளமை சொல,
வடுப்படாக் காதல்
வானுலகத் தொழில்படர
பூவிரிந்த பந்தரிலே
புது மணத்தின் தேன் நுகர,
சித்தம் பரத்து
சிவனார் நடங்கூற,
வத்திவச்சுப் பேச;
வாய்ப்பந்தல் தானெடுக்க,
செல்லரித்த நெஞ்சின்
சிறகொடிந்த கற்பனைகள்
இடுப்பொடிந்த சந்தத்தில்
இடறிவிழும் வார்த்தைகளில்
ஊரில் பவனிவர
உவப்புடனே நீயிருந்து
முத்தமிழை –
பாலித்து, பயிராக்கி,
பசிய உயிர் தான் தோன்ற
வளர்த்து வரும் வார்த்தை
நிசந்தானோ?
சத்தியமாய்க் கேட்கின்றேன்
சரஸ்வதியே நிசந்தானோ?
2
கள்ளம் விளைந்த களர்
கவியாமோ? காவியங்கள்,
நொள்ளைக் கதை சொல்லி
நோஞ்ச நடை பயின்று
உன்னை வணங்கிடுமோ?
ஒரு வார்த்தை
நிசமாகக் கேட்கின்றேன்
ஒரு வார்த்தை!
துச்சா சனனுரிந்த
துகில் என்ன சருகென்ன,
தொட்டுரிய, தொட்டுரிய,
தோன்றாத சூனியமாம்
ஒன்றுமற்ற பாழ்வெளியை
உள்ளடக்கும்
வெங்காயம்போல்
விகற்ப உலகமென
வித்தகர்கள் சொல்வதுபோல்,
நீயுமிருத்தல், நினை வணங்கே,
நிசந்தானோ?
உள்ளத்து ஊஞ்சலினை
உந்தி உவகை துள
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ? சிரிக்காதே,
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ?​
- See more at: http://solvanam.com/?p=24482#sthash.SprEa4jZ.dpuf

புதுமைப்பித்தன் கவிதை : "இருட்டு"

http://suriyodayamtamil.blogspot.in/2009/09/2.html

நடந்தேன்நடக்கின்றேன் 
நடந்து நடந்தேகுகிறேன் 
நடந்தேன்நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகிறேன் 

செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு,
சிந்தை அறிவினிலும் 
தனி இருட்டு

நடையால் வழிவளரும் 
நடப்பதனால் நடை தொடரும்;
அடியெடுத்து வைப்பதற்கு 
ஆதிவழி ஏதுமில்லை.

சுமையகற்றிச் சுமையேற்றும்,
சுமைதாங்கியாய் விளங்கும் 
சுமைக்குள்ளே தானியங்கிச் 
சுமையேற்றும் சும்மாடே!

'எங்குஎதற்கு 
ஏனென்றுகேட்டக்கால்
'எங்கு எதற்கு 
ஏனென்றே கேள்வி வரும்?

என்னை அனைத்தேகும் 
இருட்டுக்குரல் தானோ?
என்னை அணைக்கவரும் 
மருட்டுக் குரல் தானோ?

நடந்தேன்நடக்கின்றேன்,
நடந்து நடந்தேகுகிறேன்.
நடந்தேன்நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகிறேன்.


" இணையற்ற இந்தியா!"

இந்தியா தேசம் - அது
இணையற்ற தேசம்! - என்று
யாங்களும் அறிவோம் - வெள்ளை
ஆங்கிலர் அறிவார் - பிள்ளைத்
துருக்கனும் அறிவான் - அறிவால்
சூழ்ந்தது தொல்லை.

சிந்தையிலே பின்னிவைத்த சிலந்திவலைச் செல்வி
செல்வழியில் கண்ணியிட்டு செயத்தம்பம் நாட்டும்!
"இந்தியர்கள் நாடல்லோ இமையவர்கள் நாடு!
கந்தமலர் பூச்செரிவில் கடவுளர்களோடு
கன்னியர்கள் கந்தருவர் களித்துவளர் நாடு"
என்று பல சொல்லியதை சொல்லளவில் நம்பி
எவனுக்கும் மண்டியிடும் ஏந்து புய நாடு!
ஆற்றுக் கரையருகே அணிவயல்கள் உண்டு;
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது!
வேதம் படித்திடுவோம், வெறுங்கை முழம் போட்டிடுவோம்!
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம்!
அத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதை பேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்.

இந்தியா தேசம் - அது
இணையற்ற தேசம்.



நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.
வே.சபாநாயகம்
http://puthu.thinnai.com/?p=15909



காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக்கோவைகள்தாம் இவை.

பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலைவளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நினைப்பில் பிறந்ததல்ல. அதனால்தான் என்னுடைய கதைகளில் இந்தக் கலை வியவகாரத்தை எதிர் பார்க்க வேண்டாம் என்று
எச்சரிக்க விரும்புகிறேன்.

என்கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற நண்பர் ஒருவர் இந்தக் காஞ்சனை கதையைப் படித்துவிட்டு என்னிடம் வந்து.”உங்களுக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை உண்டா? ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?” என்று கேட்டார். நான்,”பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே” என்றேன். ”நீங்கள் சும்மா விளையாட வேண்டாம். அந்தக் கதைக்கு அர்த்தமென்ன?” என்று கேட்டார். ”சத்தியமாக எனக்குத் தெரியாது” என்றேன். அவருக்கு இது திருப்தி இல்லை என்று தெரிந்து கொண்ட பிற்பாடு அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டு, இலக்கியப் பக்குவம் மிகுந்த என் நண்பர் ஒருவரிடம் போனேன். அவர் அட்டகாசமாக வரவேற்றார். ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரி கதை எழுதி இருப்பதாகவும் ‘கயிற்றரவு’ என்று சொல்லுவார்களே ஒரு மயக்க நிலை, அதை அழகாக வார்த்திருப்பதாகவும் சொன்னார். இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசிக்கொழுந்து என்று கருதப் படுகிறவர் ஜேம்ஸ் ஜாய்ஸ். அப்படிச் சொன்னால் யாருக்குத்தான் தலை சுற்றி ஆடாது? அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயம் காட்டுவது ரொம்ப லேசு என்பதைக் கண்டுகொண்டேன்.

நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர் பெற்று மனிதத்தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சிகள் அபிவாதையே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கதையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் ‘கல்லுப் பிள்ளையார்’ மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துத்கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று கொண்டு பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு.

கடைசிக் கதை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். திருப்பணியில் ஈடுபாடுடைய பக்தர்கள் பலருக்கு அவர்கள் ஆர்வத்துடன் செதுக்கி அடுக்கும் கல்லுக்குவியலுக்கு இடையில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் அவர்களுடைய இஷ்டதெய்வத்தை நான் மெதுவாகப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு விட்டதில் பரம கோபம். நான் அகப்பட்டால் கழுவேற்றிப் புண்ணியம் சம்பாதித்துகொள்ள விரும்புவார்கள். என்னுடைய கந்தசாமிப் பிள்ளையுடன், ஊர்சுற்றுவதற்குத்தான் கடவுள் சம்மதிக்கிறார். இதற்கு நானா பழி?

பொதுவாக என்னுடைய கதைகள் உலகுக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணிவைக்கும் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்; இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான்
அவர்களை இன்னும் கோபிக்கவைத்து முகம் சிவப்பதைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் கோபிப்பவர்கள் கூட்டம் குறையக் குறையத்தான் எனக்குக் கவலை அதிகமாகி வருகிறது.

இவர் இன்ன மாதிரிதான் எழுதுவது வழக்கம், அதைப் பாராட்டுவது குறிப்பிட்ட மனப்பக்குவம் தமக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கௌரவம் என்றாகி, என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப்போட்டு
மூடிவிடுவதுதான் என் காலை இடறி விடுவதற்குச் சிறந்த வழி. அந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது. மனப்போக்கிலும் பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் வெகு காலம்
ஒதுங்க முயன்ற கலைமகள் பத்திரிகை என் போக்குக்கெல்லாம் இடம் போட்டுக் கொடுத்து வந்ததுதான் நான் பரம திருப்தியுடன் உங்களுக்குப் பரிச்சயம் செய்து வைக்கும் காஞ்சனை. நீங்கள இவைகளைக் கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக் கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.

விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகஎ கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக் கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.



22-12-43 ”புதுமைப்பித்தன்”

கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில

http://solvanam.com/?p=24551


தெரிந்ததைச் சொல்வதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான். முதலாவது இலக்கியம்; இரண்டாவது சாஸ்திரம். முதல் கலை; இரண்டாவது ஸயன்ஸ். முதல் உணர்ச்சி நூல்; இரண்டாவது அறிவு நூல்.
ஒரு ஸி.வி.ராமன், ஜகதீச சந்திரவசு, ஒரு மார்க்கோனி, ஒரு எடிஸன், ஒரு கார்ல் மார்க்ஸ், ஒரு கீத் பிறக்காவிட்டால் நாகரிக வளர்ச்சிக்கு சாதனம் இருக்காது.
ஒரு பாரதி, ஒரு கம்பன், ஒரு தாகூர், ஒரு வால்ட் விட்மன் பிறக்கா விட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படாது; வாழ்க்கை ரஸிக்காது. வெறும் வெட்டவெளியாய், காரண காரியங்களால் பிணைக்கப் பட்ட ஒரு இருதயமற்ற கட்டுக்கோப்பாக இருக்கும்.
தெய்வத்தைப் படைப்பது கவிஞன்; தெய்வத்தை அறிவது ஸயன்டிஸ்ட்.
    *********
“உண்மையே இலக்கியத்தின் ரகசியம்”
    *********
கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு, ஆனால் அவற்றின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.
    *********
நான் எப்பொழுதும் ராமலிங்க சுவாமியைச் சாப்பாட்டு சாமி என்று சொல்லுவது வழக்கம். கடவுள் என்றால் எத்தனை டஜன் மாம்பழங்கள் என்று சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவர் திருவாசகத்தை அனுபவித்த அருமையைப் பாருங்கள்.
“வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!”
    *********
மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள் சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்னத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில் வாழ்க்கை ரகசியங்களில், அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறி விட முடியாது.
    *********
இன்று உள்ள நிலைமையில் தமிழ்ப்பாட்டு சீர் பெற வேண்டுமெனில் அதாவது இன்று பாட்டு எழுத வேண்டுமெனில், பாஷையின் வளத்தை அறிந்து அதை சாகசமாக உதறித் தள்ளவும், ஏற்றுப் பயன்படுத்தவும் தகுதி வாய்ந்த பயிற்சியும், உணர்ச்சியின் வேகத்தை அனுபவித்து அறிய அறிவிக்கக் கூடியவர்களாலேயே முடியும். இன்று அப்படிப் பட்டவர்கள் யாருமே கிடையாது என்பது என் கட்சி. இனி வருங்காலத்தில் வரட்சியா, வளமா என்பது இன்றைய நிலையில் ஊகிக்க முடியாத விஷயம். ஒன்றை, பாரதியை வைத்துக் கொண்டு உடுக்கடித்துக் காலந்தள்ளியது நமக்குப் பெருமை தரும் காரியம் அல்ல. ஆனால் கடையில் ‘பிஸ்கோத்து’ வாங்குவது போலவோ, கவர்மென்ட் அதிகாரம் செய்வது போலவோ, கவிராயருக்கு ‘ஆர்டர்’ கொடுக்க முடியாது. அவன் பிறப்பது பாஷையின் அதிருஷ்டம். அவனுக்கு உபயோகமாகும் பாஷையை மலினப்படுத்தாமலிருப்பது நமது கடமை.
    *********
உண்மைக் கவிதைக்கு உரைகல் செவி. கம்பன் சொல்லுகிறான் “செவி நுகர் கவிகள்” என்று.கவிதையின் உயர்வைக் காதில் போட்டுப் பார்க்க வேண்டும்.கவிஞன் தனது உள்ளத்து எழுந்த ஒரு அனுபவத்தைச் சப்த நயங்களினால்தான் உணர்த்த முடியும்………
கவிதையில், சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.
    *********
கலை ஒரு பொய்; அதிலும் மகத்தான பொய். அதாவது மனிதனின் கனவுகளும் உலகத்தின் தோற்றங்களும் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய். இந்தக் கலை என்ற நடைமுறைப் பொய்தான் சிருஷ்டி ரகசியம் என்ற மகத்தான மெய்யை உணர்த்தக் கூடிய திறன் படைத்தது……
தத்துவ சாஸ்திரிக்கு ஒரு கண்ணீர்த்துளி, ஒரு சொட்டு ஜலமும், சில உப்புகளும் என்றுதான் தெரியும். அந்தக் கண்ணீரின் ரகசியத்தை, அதன் சரித்திரத்தை அவன் அறிவானா? அது கலைஞனுக்குத்தான் முடியும்……கவிஞன் பக்தனாக இருப்பதில் ஆச்சயமில்லை. ஆனால், கவிஞன் பக்தனாக இல்லாமலிருப்பதிலும் அதிசயமில்லை. அவன் சிருஷ்டி அகண்ட சிருஷ்டியுடன் போட்டி போடுகிறது. அதில் பிறக்கும் குதூகலந்தான் கலை இன்பம்.
    *********
கவி என்கிற பகுதியைக் கவனிக்கும் பொழுது சங்கீதத்துடன் இணைந்தது என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கவேண்டும். சங்கீதத்திற்கு ஒரு வடிவத்தை அர்த்தத்தைக் கொடுப்பது பாட்டு. பாட்டும், சுருதியும் கலந்த கூட்டுறவுதான் பண். பாட்டின் ஜீவநாடி, உணர்ச்சி, அழகு, வாய்மை. அதுதான் கவி.
    *********
கவிதை தமிழில் இருக்கலாம். ஆனால் கவிதையைப் பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றி ஆராய்ச்சி இருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தை (Form) பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். கவிதைக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைப் போல் இயற்கையான அமைப்பு வேறு கிடையாதென்றே கூறி விடலாம்.ஆனால் கவிதை என்றால் என்ன என்று தமிழர்கள் ஆராயவே இல்லை.
    *********
கவிதை மனிதனின் அழகுணர்ச்சியையும், உணர்ச்சிப் பான்மையையும் சாந்தி செய்வது.
    *********
கடவுள் கனவு கண்டார், இந்தப் பிரபஞ்சம் பிறந்தது. கவிஞன் கனவு கண்டான்; இலக்கியம் பிறந்தது. இதிலே ‘பத்து தலை ராவணன் உலகில் இல்லையே; கவிஞன் பொய்யன்தானே’ என்று கவிதையிலே சரித்திரத்தையும், பொருளாதாரத்தையும், ஒழுக்கத்தையும் தேடிக் கொண்டிருக்கும் பெரியார்கள் கவிஞனை அறியவில்லை; அறிய முடியாது. சிருஷ்டியின் ரகசியத்தைச் சற்று அறிந்தவர்கள் கவிஞனைத் தராசில் போட்டுப் பார்ப்பவர்கள் அல்ல. கவிஞனது சக்தியை அனுபவிப்பவர்கள்.
சிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன். அவனுடைய ஆனந்தக் கனவுதான் இந்தப் பிரபஞ்சம். அதன் ரகஸியம்,, தத்துவம் வேறு. அது இன்பத்தின் விளைவு. அவனுடைய அம்சத்தின் சிறு துளிதான் கவிஞன். அவன்தான் இரண்டாவது பிரம்மா. கண்கூடாகக் காணக் கூடிய பிரம்மா.
    *********
கவிஞன் சமயத்தை அதன் உயிர் நாடியை வெகு எளிதில் அறிந்துவிடுகிறான்.
    *********
தமிழ் மறு மலர்ச்சியின் (Prometheus) பிரமாத்தியூஸ், நமது அசட்டுக் கலையுணர்ச்சிக்கு பலியான பாரதியார், அவரும் பாவங்களை எழுப்ப முடியவில்லையானால் பழைய நாகரிகச் சின்னங்களையணிந்து கொண்டு உலவி வரும் நமது மடாதிபதிகளைப் போல் தமிழும் ஒரு ‘அனக்ரானிஸமாகவே’ (Anachronism) காலவித்தியாசத்தின் குருபமாகவே இருக்க முடியும்.
    *********
புதுமைப்பித்தன் படைப்புகள் நூலிலிருந்து
(2ம் தொகுதி) ஐந்திணைப் பதிப்பகம்.
சென்னை 5

புதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை

வேளூர் வெ. கந்தசாமிப் பிள்ளையாக எழுதப்பட்ட ‘புதுமைப்பித்தன் கவிதைகள்’ மிக பிரபலம் என்று நினைக்கிறேன். ஆனால், இப்போதுதான் வாசிக்கிறேன் – ஒரு கவிதை நீங்கலாக.
“…கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே”
என்ற சத்திமுத்து புலவர் பாடலையொட்டி, காச நோய் பீடித்த கடைசி காலத்தில் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதியதாக இந்தப் பாடல் மட்டும் முன்னரே படித்த நினைவு -
“கையது கொண்டு மெய்யது பொத்தி
போர்வையுள் கிடக்கும் பெட்டிப் பாம்பென
சுருண்டு மடங்கி சொல்லுக்கு இருமுறை
லொக்கு லொக்கென இருமிக் கிடக்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!”
மற்றபடி எதுவுமில்லை.
புதுமைப்பித்தனின் கவிதை பாணியின் இன்றும் புதிதாய் வாசிக்கப்படும் சாத்தியங்களுக்குண்டான சமிக்ஞைகளை ரகுநாதன் தொகுத்து 1954ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறு நூல் முதல் பார்வைக்கும்கூடத் தந்துவிடுகிறது – ஒரு சிறு தாவலில் இவற்றின் கருப்பொருளையும் வடிவ அமைப்பையும் சொற்தேர்வையும் சமகாலத் தமிழுக்குக் கொண்டு வந்துவிட முடியுமே என்று ஆசையாக இருக்கிறது. செய்தால், தவறாகவும் இருக்காது.
pudumaippiththan
புதுமைப்பித்தன் கவிதைகளில் ‘மாகாவியம்’ என்ற அந்த ஒரு கவிதை மட்டுமாவது இன்றைக்கும் நிற்கக்கூடிய ஒரு செவ்வியல் தன்மை கொண்டதாக எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதை ஒரு விரைவு வாசிப்பிலேயே சொல்லிவிட முடிகிறது. இது போன்ற ஒரு கவிதையை டி. எஸ். எலியட்டோ ராபர்ட் ஃப்ராஸ்ட்டோ (ஃப்ராஸ்ட் இப்படி எழுதக்கூடியவர் அல்ல என்றாலும்) ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நம் கல்லூரி உப பாடக் கவிதைத் தொகுப்புகளில் சந்தேகமில்லாமல் அதற்கும் ஒரு இடமிருக்கும். ஆனால் இந்தக் ‘மாகாவியத்‘தை மறந்து விட்டோம், இதனால் நாம் தவற விட்ட பிற்காலத்திய கவிதைகள் எத்தனை இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் “ஐயோ!” என்றிருக்கிறது. இத்தனைக்கும், “மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்” என்று க.நா.சு சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
ஆலால முண்டவன் அற்றைநாள் மதுரையில்
அணி செய்த தமிழ ணங்கை
வாலாயமாய் வந்து வாக்கிலே குப்பையை
வாரிச் சொரிந்த கவியே!
என்ற ‘மகா ரசிகனி’ன் கண்டனத்துக்குக் காரணமான அந்த ‘மகா காவியத்’தையும், அதற்கு ‘மகா கவிஞன்’ கொடுத்த பதிலையும் விரிவாக எழுத வேண்டும். சுருக்கமாகச் சொன்னால்,
“தாளால் உலகளந்தான்
தனைமறந்து தூங்கிவிட்டான்.
மூளாத சீற்ற
முக்கண்ணனும் இன்று
ஆளாக்கு அரிசிக்காய்
அல்லாடித் திரிகின்றான்…”
என்பதில் இருக்கிறது பதில்.
முன்னுரையும் குறிப்புகளும் நீங்கலான இந்த அறுபது பக்கத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கான நியாயத்தை ரகுநாதன் மிக விரிவாகவே சொல்லியிருக்கிறார். இது அத்தனையும் இன்று காலாவதியாகிவிட்டது என்று சொல்லலாம், புதுமைப்பித்தனின் “பாட்டும் அதன் பாதையும்” என்ற கட்டுரையின் ஒரு மேற்கோள் நீங்கலாக. உயிர்த்துடிப்பு மிக்க அந்தப் பத்தியில் கவிதையை இவ்வாறு அணுகுகிறார் புதுமைப்பித்தன்:
“யாப்பு விலங்கல்ல. வேகத்தின் ஸ்தாயிகளை வடித்துக் காட்டும் ரூபங்கள். குறிப்பிட்ட யாப்பமைதி, பழக்கத்தினாலும் வகையறியா உபயோகத்தினாலும் மலினப்பட்டு விடும்போது, ரூபத்தின்மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பு. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளது என்றும் கொள்ள வேண்டும். வெண்பாவும் விருத்தமும் கண்ணிகளும் ஒரு விஸ்தாரமான அடித்தளமே ஒழிய, வெண்பாவிலேயே ஆயிரமாயிரம் ரூப வேறுபாடுகள் பார்க்கலாம். இன்று ரூபமற்ற கவிதை என்று சிலர் எழுதி வருவது, இன்று எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் என்று கொள்ள வேண்டுமே ஒழிய, அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்களென்று நினைக்கக் கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை. இன்று வசன கவிதையென்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கைகள் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல”.
pudumaipithan
ரகுநாதன் மிகத் துல்லியமாக “எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை”த்தான் புதுமைப்பித்தன் தமது கவிதையின் மூலம் நமக்கு உண்டாக்கித் தந்திருக்கிறார்,” என்று எடுத்துக் கொடுப்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதைகளை வாசிக்கும்பொழுது டெம்ப்ளேட்டுகளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் சமகாலத்துக்குரிய கவிஞர் பேயோனுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இதிலும் இன்னும் பல விஷயங்களிலும் ஒற்றுமையுண்டு என்ற ஆச்சரியம் தெரிகிறது.
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான்வேண்டேன்
பொற்றோளாய்! உன்னுடைய பெருமைமிகு சர்விஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ!
என்று ‘திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி யாள்வார் வைபவம்‘ எழுதிய புதுமைப்பித்தன், கொஞ்சமும் தளை தட்டாமல்
நிழலூது நெடுமரக்
கிளைகளிடை சாயும்
வெயிற்குழாய்கள்
ஆகப்பெரிதின்
அடியில் நின்று
வானோக்குகிறேன்
ஸ்காட்டியே, என்னை
பீம் செய்து ஏற்றிடு!
என்ற பேயோனின் ‘இயற்கை’ கவிதையையும் எழுதியிருக்க முடியும் . இரண்டு கவிதைகளும் ரூபங்களை எவ்வளாவு எளிதாக கலந்தடித்து விளையாடுகின்றன என்பதில் இருக்கிறது வியப்பு.
மேற்குறிப்பிட்ட “பாட்டும் அதன் பாதையும்” என்ற கட்டுரையில் புதுமைப்பித்தன் இதையும் எழுதுகிறார் – வசனம் குறித்து,
“யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைத் தொகுப்பதல்ல. வசனம் சமயத்தில் பேச்சு முறைக்குச் சற்று முரணான வகையில் கர்த்தாவைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, செயலை விளக்கும் நிலை அவசியமாகும் பொழுது பின்னிக் கிடந்து, வார்த்தைகளை அதன் பொருள் இன்னது என்று விலங்கிட்டு நிறுத்தும்,”
என்று இரு கால்களும் பூமியின் காங்கிரீட் தளத்தில் வேர்விட்டு நின்றதுபோல் துவங்கி, தான் முன்சொன்னதை விளக்கும் முகமாக,
“அதாவது சட்ட ரீதியான தத்துவ ரீதியான நியாயங்களைப் பற்றி விவாதங்கள் நடத்தும்பொழுது வார்த்தைகளின் பொருட்திட்பம் இம்மியளவேனும் விலகாது இருப்பதற்காக, இன்ன வார்த்தைக்கு இன்ன பொருள்தான் என்று வரையறுத்துக் கொண்டு, அவற்றின் மூலமாக செயல் நுட்பங்களை நிர்த்தாரணம் செய்து, மனித வம்சம் நிலையாக வாழ்வதற்கு பூப்பரப்பின் ஒவ்வொரு பகுதியிலும் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டு வரும் செயல் வகுப்பு வசனத்தினால்தான் இயலும்,”
என்று வெகு விரைவிலேயே விலா நோகச் சிறகடித்து மேகங்களைத் தொட்டு விடுகிறார் புதுமைப்பித்தன். இந்தப் பகடிகளும் சுய எள்ளல்களும் நமக்கு இப்போதெல்லாம் ரொம்பவே பழகிப் போயாச்சு என்றாலும், வரையமைக்கப்பட்ட நம் கற்பனையின் ரூப ஒழுங்குக்கு எதிரான இந்தத் துணிகரக் கொள்ளை மூச்சிரைக்க வைக்கிறது.
கற்பனையை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை புதுமைப்பித்தனுக்கு மிகுந்த உறுத்தலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ‘ஓடாதீர்’ என்ற கவிதை இப்படி போகிறது என்றால் -
சொல்லுக்குச் சோர்வேது
சோகக்கதை என்றால்
சோடி ரெண்டு ரூபா!
காதல் கதை என்றால்
கைநிறையத் தர வேணும்!
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றதுபோல்;
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை.
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டி வைக்க முடியாது!
காசை வையும் கீழே, – பின்
கனவு தனை வாங்கும்,-
இந்தா!… இது
காலத்தால் சாகாது
காலத்தின்
ஏலத்தால் மலியாது!
பாரதிக்குப் பின்’ என்ற கவிதையில்,
வேளைக்கு வேளை
விருதாக் கவிசொல்லி
நாளும் பொழுதும்
கழிஞ்சாச்சே – ஆழாக்குப்
பாலுக்கோ விதியில்லை;
பச்சரிசிக்கோ தாளம்;
மேலுக்கேன் ஆசாரப்
பேச்சு?
என்று போகிறது.
தொழில்‘ என்ற கவிதையில் முருகனுடன் உரையாடல்: கடவுளிடம் என்னென்னவோ பேசி, ‘கவிதை கொடு,’ என்று கெஞ்சுகிறார். முடிவில் முருகன் சொல்லும் பதில் இது -
வேலன் உரைக்கின்றான் : “வேளூரா! இன்னமு நீ
காலம் கலி என்றறியாயோ? – ஆலம்
உண்டவனும் நானும் உடுக்கடித்துப் பாடிடினும்
அண்டிவந்து கேட்பவரார் சொல்?
பண் என்பார் பாவம் என்பார் பண்பு மரபென்றிடுவார்
கண்ணைச் சொருகி கவி என்பார் – அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?”
புதுமைப்பித்தன் கவிதைகளைச் சுரண்டினால் வெகு விரைவில் எள்ளல் வெளிப்பட்டுவிடும் என்பதை ஒரு பொதுக் குறிப்பாகச் சொல்லலாம். மேலும், மீமெய்யியல் சுரத்தால் பிணிக்கப்பட்ட தமிழைக் கையாள்வதிலுள்ள கோட்டிமை விலக்கப்பட முடியாதது என்று சொல்லி, அதை அடிக்கோடிடவும் செய்யலாம். தவறில்லை.
கள்ளம் விளைந்த களர்
கவியாமோ ? காவியங்கள்,
நொள்ளைக் கதை சொல்லி
நோஞ்ச நடை பயின்று
உன்னை வணங்கிடுமோ?
- ‘நிசந்தானோ சொப்பனமோ’ கவிதையில் புதுமைப்பித்தன் சரஸ்வதியிடம்,, “ஒரு வார்த்தை / நிசமாகக் கேட்கிறேன்/ ஒரு வார்த்தை//’ என்று தேடுகிறார் – அவரது தேவை நிசமான ஒரு வார்த்தை மட்டுமல்ல, நிசமாகக்கூடிய ஒரு வார்த்தையும்தான்.  “நீயுமிருத்தல், நினைவணங்கே/ நிசந்தானோ?//” என்ற கேள்வி,
உள்ளத்து ஊஞ்சலினை
உந்தி உவகைதுள
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ? சிரிக்காதே,
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ?
என்று மீமெய்யியல் விசாரத்துக்குக் கொண்டு  சென்று விடுகிறது. நிசமான வார்த்தை இல்லாமல் நம்பிக்கைக்கு இடமில்லை. நம்பிக்கை இல்லாமல் சிரிப்பில்லை, மொழிபாற்பட்டவை அனைத்தும் சொப்பனமாகி விடுகின்றன.  கவிஞனுக்குப் பொய் சொல்லும் தொழில்தான் மிச்சம் என்றாகிறது.
இவ்வாறாக ‘எமக்குத் தொழில் பொய்மை’ என்று  தன்னை என்னதான் நொந்து கொண்டாலும், உருப்படியாக ஏதாவது செய்யச் சொன்னால் வலிக்கிறது, சமகால இலக்கியவாதிகளின் அறச்சீற்றம் புதுமைப்பித்தனிடமும் காணக் கிடைக்கிறது. யாரோ புதுமைப்பித்தனுக்கு அறிவுரை சொல்லிவிட்டார்கள் போல, ‘உருக்கமுள்ள வித்தகரே’ என்ற கவிதை இப்படி துவங்குகிறது -
ஓடும், உழையும்
உழைத்து உருப்படியாய்
வாழு மென்று –
நம்மிடமே
வித்தாரமாக விளக்கும்
வினோதரே!
பொறுமையுடன் கேட்டிருந்து
புத்திமதி சொல்லவந்த
புரவலரே
அத்தனைக்கும்
அடியோம் கடப்பாடு!
இப்படி சுதி சேர்த்துக் கொண்டு, பிழைப்பை கவனிக்கக் சொன்னவரை ஒரு பிடி பிடிக்கிறார் பாருங்கள்…
யோக்கியமாய்
வாழ இங்கே
எந்த தொழில்
உண்டு?
என்று கேட்டுவிட்டு,
வேற்றரசர் நிழலிலே
வேலைக்கும் வழியுண்டு!
கூடை முறம் பின்னிடலாம்;
தேசத்து லெச்சுமியை
மானத்தை,
கவுரவத்தை,
கூட்டிக் கொடுத்திடலாம்;
நச்சி வந்த பேருக்கு
நாமங்கள் சாத்திடலாம்!
வேற்றரசர் ஆட்சியிலே
வேலைக்கும் வழியுண்டு
கூலிக்கும் அட்டியில்லை.
இந்தத் தொழில் செய்ய
எத்தனையோ பேருண்டு;
இந்தத் தொழில் செய்ய
என்னை அழைக்காதீர்!
அறச்சீற்றத்துக்கு அடுத்து தனி மனித தாக்குதல்! அதை இங்கு மேற்கோள் காட்டப் போவதில்லை.
கடைசியில் கவிதை இப்படி முடிகிறது :-
ஒற்றைச் சிதையினிலே
உம்மெல் லோரையும்
வைத்து எரித் திட்டாலும்
வயிற்றெரிச்சல் தீராது!
கட்டுரையின் முடிவுக்கு வந்துவிட்டோம் – முத்தாய்ப்பாக ஒரு வருத்தம்.
பட்டமரம் தழைக்க / பைரவியார் சன்னிதியில் / வெட்டெருமை துள்ள…” என்பதாகட்டும், “சித்தம் பரத்துச் / சிவனார் நடங்கூற, / வத்திவச்சுப் பேச…” என்பதாகட்டும்,
வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்
மீளாத நரகமெனச் சிறையதனில் உற்றாரை
ஆளாக்கி வருத்திடினும் அதனையும்யான் பரவுவனே!
என்ற பைசாச சிரிப்பாகட்டும், மரபுக்கு எதிராக புதுக்கவிதை தன் முதுகைத் திருப்பிக் கொண்டது தமிழுக்கு ஒரு பேரிழப்பு என்பதில் சந்தேகமே இல்லை என்ற வருத்தம் புதுமைப்பித்தனின் கவிதைகளை வாசித்தபின் வருகிறது.
சினிமாக்காரர்களுடன் சண்டை என்றால் ஒரு கவிதை (ஜெமினியின் அவ்வையார் படத்துக்கு புதுமைப்பித்தன் கதை வசனம் எழுதிய நாட்களில் பாடியது) -
அவ்வை எனச் சொல்லி
ஆள்விட்டுக் கூப்பிட்டு
கவ்வக் கொடுத்தடித்தால்
கட்டுமா? – சவ்வாது
பொட்டுவச்சுப் பூச்சணிந்து
பூப்போல ஆடைகட்டும்
மொட்டைத் தலையனையே
கேளு!
கதை கேட்டவன் ஊரில் இல்லை என்றால் அவன் வீட்டில் விட்டு வர ஒரு சீட்டுக் கவி -
வருகின்றேன் சென்னைக்கு;
வந்தவுடனே கதையைத்
தருகின்றேன்; தவணை சொலித்
தப்பாதே – உருவான
பாதிக்கதை இங்கே
பஞ்சணையின் கீழிருக்கு;
மீதிக்கதை அங்கே
வந்து!
திருநெல்வேலி அல்வா கேட்டு ஒரு கவிதை -
அல்வா எனச்சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா நீ தப்ப
முடியாதே! – அல்வா
விருது நகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான்.
இலக்கியவாதிகள் என்ற பெருங்கூட்டத்தை விடுங்கள், ஆத்திர அவசரத்துக்கு இது போல் ஒரு கவிதை எழுத இன்றுள்ள கவிஞர்களில் எத்தனை பேரால் இயலும்?
தமிழுக்கு நிசமான ஒரு வார்த்தை கிடைக்கிறதோ இல்லையோ, இந்த மாதிரியான எளிய, விரைவான, வேகமான சொல்லடுக்குகளைப் பார்க்கவாவது பழைய ரூபங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வராதா என்ற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.
 
- See more at: http://solvanam.com/?p=24480&#sthash.ArmOdVsi.dpuf


(எம்.வி. வெங்கட்ராமும் புதுக்கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டினார். அவர் கவிதைகளை ‘விக்ரஹவிநாசன்’ என்ற புனை பெயரில் எழுதினார். ‘அன்னபூரணி  சந்நிதியில், அவரது கவிதைகளில் குறிப்பிடப்பெற வேண்டிய படைப்பு ஆகும்.)

அன்னபூரணி  சந்நிதியில்

சிலா சுந்தரி, தேவி, அன்னபூரணி!
எனது நகைமுகமும் நிறை கலசமும்
கலைக்கு ஓர் இலக்கு ஆயின;
காவியரும் ஓவியரும் எழுத முயன்று
எழுதுகோல் தேய்ந்தது!
என்று மமதையுடன் நிமிர்ந்து நிற்கிறாயல்லவா? நில்!
மண்ணையும்
எங்கோ உள்ள விண்ணையும்
ஒன்றாகப் பிணைப்பேன் என்று
அன்று சிற்பி கண்ட கனவைத்தான்
மண்ணும் எங்கோ கிடந்த கல்லும்
கரமும் கொண்டு,
சிலையாக்கி-உன்னைக்
கடவுளாக்கினான் எனில்-
காரணம்?
கலையன்றி வேறன்று என்றறி!
கலையை இகழ்வாரும்
கலையை அறியாரும்
கல்லே! உன்னைப் பணிகிறார் எனில்-
காரணம்?
கலையன்றி வேறன்று என்றறி!
கலையும் அழகும் மனமுவந்து
கலவி கொண்டதால்
விளைவான தேவி!
அன்று சிரித்தாய்,
நாளை சிரிப்பாய்,
இன்றும் சிரிக்கின்றாய் எனில்-
காரணம்?
கலையின்றி நீ இல்லை என்றறி!



வழி – புதுமைப்பித்தன்

http://azhiyasudargal.blogspot.in/2012/09/blog-post_14.html

அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது.
தன்னருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்று தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம், என்னமோ ஒருமாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது.
அவள் விதவை.
நினைவு ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாpudu2ழ்க்கை இன்பத்தின் முன்னொளி போலத் துரிதமாகச் சென்றது. பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிச்ருஷை என்ற தியாகத்தில், வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக மாறி, வைதவ்யம் என்ற வாழ்க்கை – அந்தகாரத்தைக் கொண்டு வந்தது.
அன்று முதல் இன்றுவரை வாழ்க்கை என்பது நாள் – சங்கிலி. கணவன் தேகவியோகச் சடங்குகள், சம்பிரதாயங்கள் துக்கத்தைத் தந்தாலும் பொழுதையாவது போக்கின. அப்படிச் சென்றது ஒரு வருஷம்.
அன்று அவர் இறந்தபின் பதினாறு நாட்களும் இவளைப் பிணம் போல் அழும் யந்திரமாகக் கிடத்தி, சுற்றியிருந்து அழுதார்கள். அவள் உயிர்ப்பிணம் என்ற கருத்தை உணர்த்தவோ, என்னவோ!
அலமி பணக்காரப் பெண்தான். பாங்கியில் ரொக்கமாக 20000 ரூ. இருக்கிறது. என்ன இருந்தாலும் இல்வாழ்க்கை அந்தகாரந்தானே? அவள் நிலை உணவு இருந்தும் உண்ண முடியாது இருப்பவள் நிலை.
அவளுக்குத் தாயார் கிடையாது. தகப்பனார் இருந்தார். அவர் ஒரு புஸ்தகப் புழு. உலகம் தெரியாது அவருக்கு. வாழ்க்கை இன்பங்கள் புஸ்தகமும் பிரசங்கமும். சில சமயம் அலமியையும் கூட அழைத்துச் சென்றிருக்கிறார்.
மரண தண்டனையனுபவிக்கும் ஒருவன் சார்லி சாப்ளின் சினிமாப்படத்தை அநுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டிவிட்டு சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா அது?
அன்று அவளுக்குத் தூக்கம் வரவில்லை. துக்கம் நெஞ்சையடைத்தது. தொண்டையிலே ஏதோ ஒரு கட்டி அடைத்திருப்பது மாதிரி உணர்ச்சி. உதடுகள் அழவேண்டுமென்று துடித்தன.
உறக்கம் வரவில்லை.
எழுந்து முந்தானையால் முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியிலிருந்த நிலா முற்றத்திற்கு வருகிறாள்.
வானமாத்யந்தமும் கவ்விய இருட்டு. உயர இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது மாதிரி கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். அவளுக்கு அவை சிரிப்பன போல், தன்னைப் பார்த்துச் சிரிப்பன போல் குத்தின. மணி பன்னிரண்டாவது இருக்கும். இந்த இருட்டைப் போல் உள்ளமற்றிருந்தால், தேகமற்றிருந்தால் என்ன சுகமாக இருக்கும்!
இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். ‘சதி’யை நிறுத்திவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்கிறான். அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப் பேத்துகிறார்கள். முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும். பிறகு… ஆனால், வெள்ளைக்காரன் புண்ணியத்தால் வாழ்க்கை முழுவதும் சதியை, நெருப்பின் தகிப்பை அநுபவிக்க வேண்டியிருக்கிறதே! வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்?…
அவர் இருந்திருந்தால்…
அதை நினைத்தவுடன் மனம் ஐந்தாறு வருஷங்களைத் தாண்டிச் சென்றுவிட்டது. பழைய நினைவுகள், எட்டாத கனவுகள் அதில் முளைக்க ஆரம்பித்தன.
அவள் உடல் படபடத்தது. நெஞ்சில் சண்டமாருதமாக, பேய்க்கூத்தாக எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதின.
எதிரே விலாசத்தின் வீடு. இன்னும் தூங்கவில்லையா? அவளுக்கென்ன, மகராஜி கொடுத்து வைத்தவள்!
அப்பொழுது…
‘கட்டிக் கரும்பே தேனே…’ என்ற பாட்டு. கிராமபோனின் ஓலம். பாட்டு கீழ்த்தரமான சுவையுடைய பாட்டுத்தான்.
அன்று அவளுக்கு மூண்டெழுந்த தீயிலே எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது. அவளுக்குப் பாட்டு இனிமையாக இருந்தது. கேட்பதற்கு நாணமாக இருந்தது. இருட்டில் அவள் முகம் சிவந்தது. இனி இப்படி யாராவது அவளையழைக்க முடியுமா?
இவ்வளவுக்கும் காரணம் இயற்கையின் தேவை.
இதிலே ஒரு முரட்டுத் தைரியம் பிறந்தது. ஏன், அந்தக் கோடித்தெருச் சீர்திருத்தக்காரர் திரு. குகன் சொல்லிய மாதிரி செய்தால் என்ன? அப்பாவிடம் சொல்ல முடியுமா? அவர் அந்நியர். மேலும்… நான் விதவை என்று தெரியும். போனால் அவருக்குத் தெரியாதா?
திரு.குகன் செய்த பிரசங்கத்தின் வித்து வேகமாகத் தழைத்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஊரிலுள்ளவர்கள் தூற்றுவார்கள்! அவர்களுக்கு வேறு என்ன தெரியும்.
நினைத்தபடி நடக்க ஹிந்துப் பெண்களுக்குத் தெரியாது. ‘இயற்கையின் தேவை’ என்ற ஈட்டி முனையில் அவள் என்னதான் செய்ய முடியாது? மேலும் தாயார் இருந்தால் ஓர் ஆறுதல், கண்காணிப்பு இருந்திருக்கும். இதுவரை தனக்கு வேண்டியதை அவளே செய்து கொண்டவள். அவளுக்குக் கேட்டுச் செய்ய ஆள் கிடையாது. மனம் சீர்திருத்தவாதியை அணுகிவிட்டால் உலகமே மோட்ச சாம்ராஜ்யமாகிவிடும் என்று சொல்லுகிறது. சீ! போயும் போயும், மூளையில்லாமல், ஆண்பிள்ளையிடம் போய் என்ன! கத்தரிக்காய்க் கடையா வியாபாரம் பண்ண? அவளுக்குச் சீர்திருத்தவாதி உள்பட இந்த உலகமெல்லாவற்றையும் கொன்று துடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று படுகிறது. சீ, பாவம்! உலகமாவது மண்ணாங்கட்டியாவது! நெருப்பில் போட்டுப் பொசுக்கட்டுமே! மார்பு வெடித்துவிடுவது போலத் துடிக்கிறது. இருளில் கண்ட சுகம், அந்தச் சங்கீத ஓலத்தில் போய்விட்டது. அவளுக்கு விசாலத்தின் மீது ஒரு காரணமற்ற வெறுப்பு. அவளையும், அவள் புருஷன், கிராமபோன் எல்லாவற்றையும் நாசம் செய்யவேண்டுமென்று படுகிறது. காதைப் பொத்திக்கொண்டு உள்ளே வந்து படுக்கையில் பொத்தென்று விழுகிறாள்.
அசட்டுத்தனமாகத் தலையணைக்கடியில் வைத்திருந்த கொத்துச் சாவியில் இருந்த முள்வாங்கி முனை விர்ரென்று மார்பில் நுழைந்துவிட்டது.
அம்மாடி!
உடனே பிடுங்கிவிடுகிறாள். இரத்தம் சிற்றோடைபோல் பீரிட்டுக்கொண்டு வருகிறது. முதலில் பயம். அலமி இரத்தத்தைப் பார்த்ததில்லை. அதனால் பயம். ஆனால், இத்தனை நேரம் நெஞ்சின் மீது வைக்கப்பட்டிருந்த பாரங்கள் எடுக்கப்பட்ட மாதிரி ஒரு சுகம். இரத்தம் வெளிவருவதிலே பரம ஆனந்தம்; சொல்ல முடியாத, அன்றிருந்த மாதிரி ஆனந்தம். அதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரத்தம் பிரவாகமாகப் பொங்கி மேலுடையை நனைக்கிறது. இரத்தத்தின் பிசிபிசுப்பு தொந்தரவாக இருந்ததினால் மேலுடையை எடுத்துவிட்டாள். இரத்தம் வெளிப்படுவதில் என்ன சுகம்! நேரமாக, நேரமாக பலம் குன்றுகிறது. ‘அவரிடம் போவதற்கு என் உயிருக்கு ஒரு சின்னத் துவாரம் செய்து வைத்திருக்கிறேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடும்! ஏன் போகாது? போனால் இந்த உடல் தொந்தரவு இருக்காது…’
அலமியின் தகப்பனார் புஸ்தகப் புழு. அன்று வெகு நேரமாயிற்று கையிலிருந்த புஸ்தகத்தை முடிக்க. முடித்துப் போட்டுவிட்டு வராந்தாவிற்கு வந்தார். அலமியின் அறையில் வெளிச்சம் தெரிகிறது. “இன்னும் தூங்கவில்லையா?” என்று உள்ளே சென்றார்.
என்ன?
அலமி மார்பில் இரத்தமா? அவள் ஏன் இம்மாதிரி அதைச் சிரித்தவண்ணம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்?
“அலமி, நெஞ்சில் என்னடி?” என்று கத்திக்கொண்டு நெருங்கினார்.
“நெஞ்சின் பாரம் போவதற்குச் சின்ன வாசல்!” என்றாள் ஈனஸ்வரத்தில். குரல் தாழ்ந்திருந்தாலும் அதில் கலக்கமில்லை. வலியினால் ஏற்படும் துன்பத்தின் தொனி இல்லை.
“இரத்தத்தை நிறுத்துகிறேன்!” என்று நெஞ்சில் கையை வைக்கப் போனார் தகப்பனார்.
“மூச்சுவிடும் வழியை அடைக்க வேண்டாம்!” என்று கையைத் தள்ளிவிட்டாள் அலமி.
“பைத்தியமா? இரத்தம் வருகிறதேடி!” என்று கதறினார்.
“இந்த இரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! வழியையடைக்காதீர்கள்!” என்றாள்.
தலை கீழே விழுந்துவிட்டது.
மணிக்கொடி, 06-01-1935