தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, November 01, 2021

4.ஆதிக் கதை - கோணங்கி

 4.ஆதிக் கதை - கோணங்கி


'சாத்தூர் நரிப்பொடி, வாய்ப்பொடி,' புகையிலைத் தடை, கருஞ்சுருட்டு நெடியில் கரகரப்பான கதைக்குரலை புகையிலையாக உலர்த்தி ‘விருதுநகர் சுருட்டாக' விரித்த பாட்டியின் கதாமந்திரப்பரப்பில் காய்ந்த சுருட்டு இலையில் ஓடிய ரகசிய வாசனையால் ஆட்கொள்ளப்பட்ட என் பால்ய காலத்தை கதைச்சுருட்டாக சுருட்டி இன்னொரு உலகைக் கருக்கொண்டிருந்தாள் பாட்டி. 


அப்போதும் தாதுவருஷப் பஞ்சமென்று அறியப்பட்ட பழங்காலத்தில் ஜனங்களின் குடல்வயிற்றுக்குள் சடைசடையாய் முளைத்த குதிரைவாலிக் கதிரால் மண்ணீரல் மீதும் காதுவடித்து பாம்படம் அசைய ஓட்டு வீட்டு திருணைபூராம் கிடந்த பாட்டி உடல் மீதும் எழுதத் தொடங்கி இருந்தேன் முதல் கதையை. 


நாகலாபுரத்திலிருந்து வந்த பாட்டியின் தடித்த சகோதரிகள் பம்பையம்மாளும் வேடபட்டிப் பாட்டியும் மெதுவாகத் தெருவை உரசி நகர்ந்து வந்து ஊர் ஊராய் விருந்தாடி போன ஞாபகங்களையும் அங்குள்ள வம்சாவளி மரத்திலிருந்த கிளைகொத்து உறவுமுறைகளைப் போட்டுப் பார்க்காத பல தாயாதிகளின் விஸ்வரூபங்களை பரம்பரைத் திருடர்களை படுகொலைகாரர்களை கடகப் பெட்டியில் கொண்டு போன 'புள்ளம்மா'வின் ஆவியை பேச வைத்திருந்தனர். வேடபட்டிப்பாட்டி வயது சென்றவள். நெடுங்காலம் புருஷனில்லாமல் காடுகளில் பயறு கிழங்கு வித்து வரும்போது அவளுக்கே தெரிந்த பழம் பாதைகளில் தோன்றிய கட்டுக் கதைகளை வறுமையின் ஆழத்தில் இருந்த கிராமங்களின் உருவங்களோடு சொன்னாள். பஞ்சதந்திரத்தில் இல்லாத 'பூமத்தியரேகை மனிதர்களை' கருப்பு கக்கரை எரிசெவல் தேரிகள் போடுமண் மேவிமேவி எழுந்த வேனல்சார் நிலப்பரப்பை பாட்டி உடல் மீது பார்த்தேன். காடை, வரிக்குயில், ஆக்காண்டி, கல்லாந்தை எல்லாம் பம்பையின் உடம்பில் பறந்து சுற்றும். காட்டிலந்தைப் பழமாகத் தித்திக்கும் அவள்குரல். 


பம்பை, ஆதக்காள், வேடபட்டிப்பாட்டி மூவருமே மண்ணுக்குள் போனபின்னும் செய்வதறியாது கதைகளுக்குள் ஆவியாய் உலவுகிறார்கள். பீர்க்கங்கொடி பாட்டி உடம்புக்குள் பூத்துப் படரும் போது ஈஞ்ச மரங்களுக்கிடையில் கூந்தல் வளர்க்க ஆண்கள் சிணுக்கோலியால் முடி சிலுப்பி மரிக்கொழுந்தும் ஈஞ்சம்பூவும் முடிந்த கொண்டையில் சூடி, வேல்கம்பும் சூரியும் கொண்டு போர்க்குணம் வாய்ந்த இனக்குழுவாக யுத்தத்தின் கொடுமைகளால் பூமியை வெறுமனே உழுது கொண்டிருந்தார்கள் ஈஞ்சநாட்டு வம்சாவழிகள், குதிரைவாலிச் சடைத்தவசத்தை விதைத்தார்கள். அந்த வெப்ப மண்டல மண்புழுக்கள் ஒடிந்த குறு வாட்களைச் சுற்றி நாட்டியமாடும் போது குதிரைவாலிச் சடைக் கொண்டைகள் அசைந்தன. 


அதன் சாம்பல் நீலக்குருதியோடும் பம்பையம்மாள் எழுதுதாளும் மையும் இல்லாமல் அந்த காட்டு வழி நெடுக காடோ செடியாக அலைந்துவரும் காற்றின் குரல் அடுக்கில் குரல்வளைக்குள் ஒற்றை சடைக்குதிரைவாலிக் கதிருடன் கடகப் பொட்டியில் சுமந்த வரகு மேல் 'புள்ளம்மா' ஆவியோடு குலவையிட்டவாறு ஆடிவருகிறாள். அக்கினிச் சட்டிகள் தீ மூண்டு எரிகின்றன. 


நாற்று நடுகிறபோது 

களை எடுக்கிறபோது 

காட்டில் விறகொடிக்கும்போது 

பல்ஜாதிப் பெண்களும் கூட பருத்திக்காட்டல் நின்றபோது –

குனிந்து பெண்களும் ஆண்களும் நெறுநெறுவென்று கதிர் அறுக்கும் போது

நென்மேனிக் கம்மாய்க்குள் கருப்புப் பெண்ணொருத்தி வெள்ளரித்தோட்டத்தைச் சற்றிச் சுற்றிப் படரும்போது –

காது வடித்த கலிங்கமேட்டுப்பட்டிப் ஸ்திரீகள் வயக்காட்டில் குலவை போடும் போது 


கிழக்கே நெடுந்தூரம் பனைவிடலி அருகில் போய் பச்சை ஓலையை மோந்து பார்த்து ராசாத்தி அத்தையின் குமறுகள் சீரழிந்த மண்கூரை வீட்டில் சாணம் மெழுகிய சுவரில் இருந்த சாணக் கோடுகளில் மனித துக்கத்தின் ஆழத்தில் தீத்துக் கல்லால் கீறியிருந்த கோடுகளை நெருங்க நெருங்க தொலைவாய் போய்க் கொண்டிருந்தன சாணக் கோடுகள். 


நென்மேனிமேட்டுப்பட்டி வயல்வெளி இரு மேனிகண்ட தாதுவருஷ நினைவில் கோடிநெல் படர்கிறது ஆயிரம் கண்ணுடைய இருக்கன்குடி மாரியின் குத்திநிற்கும் சூலம்வரை. வயல்வெளிமேல் மாரியின் நிழல் ஓடும் அசுரர்களோடு. 


கிழக்கே பரவிக்கிடந்த வளர்ச்சி குன்றிய வெளியாள் அதிகம் வராத கிராமங்களில் வேலாயுதநாடார் பெண்மக்கள் உடம்பில் பனைவாடை சுற்றிச் சுற்றிப் பரவிவரும் போது பதினிப் பானை தூக்கி சுத்துப்பட்டிக்கு போன தடத்தை மோந்து பார்க்கும் நாசியிலும் பனைவாடை வரும். பூமத்திய ரேகை மனிதர்களாய் நெட்டுவசமாய் முளைத்த கரும்பனை உயரத்தில் பேய்கள் அமர்ந்திருக்கும்போது பனையேறி தொண்டைக் கடியில் குடலுக்குள் முளைத்த குருத்துக் கதைகளை குடலைவிட்டு அறுத்தெடுக்கமுடியாமல் பாலைசீவிச் சீவிப்போன கருக்குமட்டையில் கூந்தப் பனை வாசம் தொடர்ந்து விரட்ட அந்த பனைகளின் செதில் உடம்பிலிருந்து ஓலை அறுத்துக் கீறிய வரிகளை பச்சை ஓலையாய் தருவதற்கு கதைமரபு காணும் ஆவலால் தூண்டப்பட்ட நவீன கதை சொல்லிக்கு வேலையிருக்கிறது இன்னும். 


தாவர ராசிகளின் காரவாசனையை நுகர்ந்து பெருமூச்சு விட்ட பாட்டி மயக்கத்தில் பூக்களுடன் உறவாடிப் பல வார்த்தைகளை செடிகளுக்கு சொன்னாள். அவள் பெரிய மூக்கில் தாவரங்களின் வாசனை நிறம் நிறமாகப்பிரிந்து தொலைவான கிராமப்பரப்பில் வீசிக்கொண்டிருந்த அலாதிக் கதைப்பாடலாய் உரசியது பனைகளில். பாட்டியின் உடல் கீறல்களே நட்சத்திரத்தினாலாகும். அவள் உடம்பில் உதிர்ந்த நட்சத்திரம் ஆறாகிறது. அடுக்கடுக்காகப் படிந்த நாகரிகங்களின் ஆறுகளில் கதைமந்திரத்தைத் தக்கவைப்பதற்கு 'சாத்தூர் நரிப்பொடி'த் தடையைத்தான் நம்பியிருந்தாள் பாட்டி. இப்போதும் அவள் நிலவுப்பரப்பில் கால் நீட்டி சாவுடன் அசைந்தவாறு அவள் குரலிலிருந்து வரும் இருண்ட, ஊற்றை நோக்கி வசீகரிக்கும் நிறக்கோடுகளை எங்கிருந்து பெற்றாள் என்பது பேய்களுக்கும் ஊரை அரசாளும் கூந்தப்பனைக்கு மட்டுமே தெரியும். 


உலர்ந்த காற்றில்' வைசூரி வந்த ஆட்டின் வீச்சம்  தெரு முழுவதும் காட்டு பாதையில் சளிக்கோடு கோடாய் வடிந்து கொண்டிருந்தது. புலம்பும் ஆடுகளின் செருமல், இறந்து விழுந்தன. நடக்க ஏலாத ஆடுகள். அவற்றின் மரண இருளில் நடந்து போன கீதாரிகளின் துயரப்பாடலை உலர்ந்த காற்றில் கண்தெரியாத பாட்டி கேட்டாள், இருண்ட கண்ணுக்குள் நூறுவகை தானியங்களுக்கும் பட்டம் பட்டமாக கதையிருந்தது. காற்றில் கலந்து வந்த பயிர்வாடையை இப்போது பாட்டியால் உணரமுடியாமல் போனாலும் ஆள் வில்க இடமில்லாமல் போன பத்துமொய் ஆடுகளும் தெருவையே அடைத்துப்போன நினைவின் ஏக்கத்தில் கடைசிவரை சாவுக்காகக் காத்திருந்தாள். ஆடுகள் வைசூரியால் செத்துமடிந்த ஏக்கம் தீரவில்லை . தெருமுனையில் செருமிய ஆடுகளின் கவுச்சியும் நோயின் வாடையும் பாட்டியின் அந்தராத்மாவில் விழுந்தது. திரைவிழுந்த கண்களுக்கு ஞாபகங்கள் இருந்தன. 

கொள்ளைநோயும் - வைசூரியும் இடைக்காட்டான் பஞ்சமும் கிழக்கத்தி கிராமங்களில் புயல்கொண்டிருந்த காலம். நோயின் ஆழத்தில் அசைந்த வறுமையான மண்வீடுகளில் மூதாதையின் தோற்றங்களை தொலைவிலே பார்க்கிறேன். கும்பினியார் துப்பாக்கி ஊளையில் அடங்காத பனங்காட்டு நரிகளாய் கள்ளர்கள் ஊரின் சருக்கங்களை வேனல்சார் மறைமுக நிலப் பரப்பாக்கியிருந்தார்கள். 

வேட்டையாடப்பட்டு முதுகில் இறங்கிய ஈயரவைகளுக்குக் கவண்கல்லால் பதிலடிகொடுத்து விட்டிபெருமாத்தேவனும் நத்தைக்கண் மாடனும் வெறியனும் துரைச்சாணிகளின் சாரட் குதிரைகளைத் திருடிப் போனார்கள். மாடு திருடும் பரம்பரைப் பழக்கத்தில் மறைந்திருக்கும் கிராமங்களில் வேல்கம்பு நட்டி கும்பினியார் நுழையவிடாமல் தனி எல்லைகளை வைத்திருந்தார்கள். கைநாட்டுச் சட்டமும் செயல்பட்டது. களவுக்குப்போன முறைகாரன் திரும்பி வராவிட்டால் சமைந்த பெண்ணுக்கும் துரட்டிக்கும் தாலிகட்டி குலவையிட்டு வாளை வார்ப்பதிலும் மாடு வளர்ப்பதிலும் சேவக்கட்டு கத்திகள் குறுக்கிட ஒருவருக் கொருவர் குத்துவெட்டும் ரத்தம் உலருமுன்னே ராசியாகி சனம்கூடி கொடை எடுத்து காவு கொடுத்து அறுத்துக்கட்டி பலி தீர்த்து வங்கொலையும் களவும் காய்ச்சிவடித்த சாராயத்தைத் துடியான தேவதைக்குப் படைத்து உடம்பில் ஈட்டக் சுவர்க்குத்தி கழுத்தில் ரத்தநார் தெறிக்கப் பாடி பெண்கள் குலவையிட்டு கோபத்தால் ரத்தமேறிய முட்டிகளால் மண் சுவர்களை முட்டினார்கள். வெறிமிக்க ஈட்டிகள் குருதியில் இறங்கி மூக்கறுப்புப் போரில் மைசூர்ப் படையை விரட்டி விரட்டி வழிநெடுக குருதியின் ரகசியப் பாடலை விட்டுச் சென்றிருந்தனர் எனக்கு முன்னே . 

தன்னரசாண்ட பெருங்காமநல்லூர் கலகத்தில் சுடப்பட்ட பதினாறு தாயாதிகள் ஆவிகளோடு ஒரு பெண் ஆவியும் ஏவிய இந்த மொழியே பாதரஸ ஓநாய்களின் தனிமையாய் உருவெடுத்து புலப்படாத கள்வரைத் தேடிப் பரங்கித் துப்பாக்கிகள் நீண்டுவர கவண்கல் இரும்புத் தொப்பியில் தெறித்த ஒலி இரும்புக்காலத்திற்குத் தாவியது வேகமாய். 


கொக்குப்பறக்கும் கலிங்கல் மேட்டுப்பட்டிக் கம்மாயில் அலைமோதும் மீனிடம் உடைமரத்தில் தொங்கும் குருவியிடம் இழுவங்கிணத்திடம் உப்போடைச் செடியில் கருவாட்டுக் குச்சிமுள்ளில் ஈக்கியில் ஊர் இடுக்கில் , ஈறுவுளியில் பேனிடம் கதாமந்திரப் பரப்பு விரிவு கொள்கிறது. பித்தனின் 'கட்டிலை விட்டிறங்காக் காதலியை' வாஸித்தபின் துரும்பிலும் எறும்பிலும் பாட்டி ஒளித்து வைத்த கதை மரபை அடுக்குப் பானைக்குள் தேடி எடுத்து முந்திச் சேலையில் முடித்தகதை ஓட்டைத் துட்டாகக் கிடந்தாலும் அவள் பாம்படத்தைக் களட்டி மேயும் சேவலை எரியக் கூடியவள். புஷ்கின் தங்கச்சேவல் கதைப்பாடல் மரபு ஏனோ தொடர்கிறது அவளின் கிழிந்த காதுகளின் அசையும் பாம்படத்தில் சுழலும் அண்டகோள சதுர முக்கோண வடிவத்தில். 


கதாச்சுருளிலிருந்து சீறிவரும் அவள் குரல்பட்டு பொருட்கள் யாவும் விந்தை உருவங்களாக தொடரும் அடையாளங்களாக வேறு தோற்றம் கொள்ள என் சுயத்தில் பட்டு வார்த்தை எல்லைகளை மௌனத்தின் எல்லையை மீறிப்பாய்கிற கதை மரபை அதிர்வடையச் செய்தாள் பாட்டி. 


காகிதங்களை அறிந்திராதவளின் ஈரக்குலையில் துடித்துக் கொண்டிருந்த சொல்கதை அச்சு எந்திர நாகரீகம் காணா சுருட்டுக் கிழவியின் குரல் வளைக்குள் ஒளிந்து கொண்டிருந்த மாய உருவங்களைக் காற்றின் குரல்வாள் கொண்டு இருட்டை வெட்டத்தொடங்கிய அவள் நரிப்பொடி நாக்கு அரிக்கும் கார நெடியான கதைக்குள் வாள் வீச்சாய் நீண்டு கிடந்தது தெரு. 


அவள் உடம்புடன் இருந்த புகையிலை வாசனையை சேலையில் இருந்த உவர்மண் நிலப்பரப்பையும் என் கதைகளால் மீட்டெடுக்க முயன்றேன். ஊரைவிட்டு வெளியேறி அந்நியமான நகரங்களில் திரிய நேர்ந்த போது கூடவே கொண்டு போன பாட்டியின் கத்தரிப் பூக்கலர் கண்டாங்கிச் சேலையில் உடல் புதைந்து விஷமேறிப்போன நகர இருளிலிருந்து மீண்டேன் கதைகளோடு. பாட்டியின் சேலையுடன் வந்த ஊர் வண்ணாத்தி கோப்பம்மாளின் பால்யகால உரு எப்போதுமே கதைகளுக்கு நடுவே அலைவுறுகிறது. கோப்பம்மாளின் கதையில் இருந்து தான் அவள் கண்ணீரின் நிழலாய் எழுத்தின் ஊடே உவர்மண் பரப்பைக் காக்க வந்திருக்கிறேன். என் கதை தொடங்குவதற்கு துவைக்கிற கல்லிலிருந்து முடிவற்று நீர்தேங்கிய கண்மாய்க்குள் மண்கூரைகளோடு கோப்பம்மாளின் உரு நீரில் தலைகீழாய் அசைவதை மொழியாக மாற்றி நீரின் ஆழத்தில் கோப்பம்மாளின் உருவைப் படியவிட்டு அவளிடமிருந்து உரையாடலைத் தொடங்கியபோது அவள் உரு கருக்கிருட்டில் மங்கி மங்கிச் சரிந்து மிதந்து அலைவுறும் விதியிலிருந்து விலகிப்போகிற கதையை விவரிக்க முயல்வேன். நீரிலிருந்து அவள் உருவை ஈஸ்வரி அக்காளின் பாடலாக எழுதினேன். அவளுடைய பாடல் எப்போதும் இசைக்கப் படவும் எளிய வாழ்வின் நேசத்தின் ' விதியாக இருக்கவும் விரும்புவேன். 

மேலே பார்த்தால் சொந்தமான நட்சத்திரக்கூட்டம். இடையே கைவிடப்பட்ட கழுதைகள் துக்கத்தில் அசையாது இருளை மென்று கொண்டிருக்கின்றன. அதன் கண்ணுக்குள்ளேயே அலைவுறும் நிலவு. தெருவில் கிடக்கும் பூச்சிகள். எல்லாமே சத்தம் எழுப்பின... ஒவ்வொரு இரவிலும் ஈஸ்வரியக்காள் நிறைந்து கிடக்கிறாள். மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்து யார் கூப்பிட்டாலும் என்ன.. வென்று பதில் குரல் கேட்கும். ஊருக்கு புதுகண்மாய் வந்தபோது வட்டமான கரையைச் சுற்றி புளியங்கண்ணு வைத்தவள் ஈஸ்வரி தான். புளியங்கண்ணுக்காக காடெல்லாம் தேடித்திரிந்தோம். ஈஸ்வரி ஊன்றிய - புளியங்கண்ணுகளே அவ்வளவும். எல்லோரும் சேர்ந்து நீர் ஊற்றி வந்தது. தண்ணீர் இல்லாத பஞ்சத்திலும் கல்வெட்டாங்குழியில் இருந்து சுமந்து ஊற்றிய தண்ணீரில் பிழைத்தன எல்லாம். கண்ணுகள் வளர்ந்து மரமாகிவிட்டன. வெள்ளை அங்கியுடன் ஊருக்குள் வந்தவர்கள் ஈஸ்வரியைக் கூட்டிக்கொண்டு மரங் களுக்கிடையே அசைந்து மறைந்தார்கள். கூடவே போன எல்லோரும் கல் வெட்டாங்குழி வரைபோய் நீர் பார்த்துத் தொலைவில் ஈஸ்வரியைக் கூவி அழைத்தார்கள். நீருக்குள் அக்காளின் முகம் தெரிவதும் மூடுவதுமாய் வந்த அலையில் எல்லோருடைய முகமும் சேர்ந்து நகர்கிறது மெல்ல. கூப்பிட்டுக் கொண்டே நிற்க, கண்ணைவிட்டு மறையும் வரை அவள் உரு மெலிந்து தோற்றம் கொள்ள சிறிது சிறிதாக குரலை மெலிதாக்கி மெளனமான நீரில் முணுமுணுத்தார்கள். சின்ன சத்தம் கேட்டு வெளிப்பட்ட கல்வெட்டாங்குழி முனி தனது மாபெரும் ஒளிமிகுந்த கதையை நீரில் படவிட்டு சாதாரண நீரைத் தொட்டு பச்சைப் பொன்னாக்கியது. தங்கத் தகடாகிவிட்டது எல்லாம். கூவி அழைத்த மீன்கள் கல்வெட்டாங் குழிக்குள் தொங்கி ஊர்ந்து வந்தன. உயிரின் அனந்தத்தின் ஒளிக் கரணத்தால் பிரமித்து நின்றோம். வேறு கதையில் இல்லாத குரலில் பேசியது முனி. நம்பமுடியவில்லை. வைத்தகண் வாங்காமல் பார்த்தாள் நீரிலிருந்த ஈஸ்வரி அக்காள். மயக்கும் வித்தை கற்றிருந்த ஈஸ்வரி அக்கா எங்களை வா வா என அழைத்தாள். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கையைக் கோர்த்து விரல் நடுங்க ஈஸ்வரி அக்காளிடம் கேட்டோம். 'எல்லாம் உன்னுடையது தானா... நிஜம்தானா..' விந்தை அலைகள் பாறைகளில் தத்தித் தத்தி இளைக்கிறது. மூச்சு இரைத்தபடி கெதக்... கென்று உள்ளே தள்ளிவிடும் பயம் கால்களில் அசைய பாறைகளுக்குள் எட்டிப்பார்த்து 'உள்ளே விழுந்துவிடவா...' நீர் இருட்டி காணாமல் போன மீன்களைக் கூவி அழைத்தோம். சிரிசிரியென முனியின் கண்களில் மின்னல் வெட்டி வெட்டிக் கூசியது. நீரின் குளிர் ஊசிகள் உடலில் பற்றி எலும்பை ஊடுருவி அரளிப்பூ நெடித்தது. பூவின் காந்தப் பரப்பின் வசீகரத்தில் சிவந்து வெட்கினோம். வெள்ளை அரளியின் நுனிமூக்கு விம்மி ஈஸ்வரி அக்காளின் குரல் மட்டும் தொலைவில் மெல்லக் கேட்டது. முன்னொரு நாள் விட்டுச் சென்ற ஈஸ்வரியின் குரல் காற்றில் வருவதும் வராது கேட்பதுமாய் சுழன்றடித்தது மேல்காற்று. மரங்கள் இடைமறித்தன. பாறைகளைத் தாண்டித் தாண்டி ஓடிய எங்கள் கால்கள் நகரவில்லை இன்னும் முனியிடமிருந்து. 


குருமலையில் இடி விழுந்து முதல் கல் உருண்டது சாமி நாயக்கர் என்ற முறட்டு சமுசாரி ரூபத்தில். காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்த விதியை உடைக்கக் கொண்டு டவுணைப் பார்த்து வந்து கொண்டிருந்தார் சாமிநாயக்கர். 

நூறு வருஷங்களுக்குப் பிந்திப்போன நம்ம கீகாட்டு கிராமம் திசை மிரண்டு கிடக்கிறது. இருபது யானைகள் வரிசையாக நின்ற தோற்றத்தில் குருமலை படுத்துக் கிடக்கிறது. கிழக்கில் நீட்டிக் கிடக்கிறது. நம்ம ஊர் ஆட்கள் ஆழிகள் மாதிரி பெரிய பெரிய லகுடுகள். கடும் மொரடுகள். இந்த ஆட்கள் உசுரைக் கொடுக்க வேண்டியதிருக்கு. திரேதாயுகத்துக் கலப்பை திணறுகிறது. மேலே கெடந்தாமேகம், கீழ கெடந்தா தண்ணி நம்ம உயிர்தான மேகம்' என்று சாமி நாயக்கர் சொன்னார். கம்மஞ்சோறு தின்ன கொழுப்பு விடலை. எதுக்கும் பணியமாட்டான் சமுசாரி. சாவன்னா மேழி புடிச்சு உழுதால் கலப்பை திணறும். சாவன்னா உழுதுவிதச்சாத்தான் இந்த வருவும் விளையும். முதல் விதைப்பு. புஞ்சைக்குள் பச்சை லங்கோடு அசைந்தது. 


உழவுமாடுகள் மூக்கந்தண்டு வலிக்க உழைத்து நுங்கு நுரைதள்ளி நூல் நூலாய் வடிகிறது எச்சில். மாட்டை நிறுத்தி தடவிக் கொடுக்கிறான் திம்முரெட்டி. செல்லமாய் வளர்த்த வீட்டுக் காளையை தண்ணிக்குள் முங்கவைத்து வைக்கோலைக் கொண்டு மாறி மாறித் தேய்க்கிறார். இடுப்புத் துண்டை அவுத்து குளித்த மாட்டைத் துவட்டிவிட்டு 'என்ன மாதிரி ஆயிட்ட. இப்படி எலும்பும் தோலுமா ஆகிப் போனயே உன்ன எப்படி வச்சு காப்பாத்தப் போரனோ.. என்று கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினார். மாடு துள்ளாமல் சம்சாரி உயிர் வச்சு இருக்க மாட்டான். தோட்டத்தில் சோளம் கதிர்வாங்கி இருக்கு. குண்டு குண்டாய் கதிரு. சாமி நாயக்கர் தோட்டத்தில் கல்லுப்போல இருக்கு கதிரு. தோட்டத்துக் கடவுக்குள் துள்ளித் துள்ளி குதிக்கிறார் சாவன்னா. நம்ம கௌட்டு எளவு என்ன மாதிரியா துள்ளுது எளவட்டப்பள்ள மாதிரி. '


வெயிலும் மழைகளும் உளறும் மேகாத்தும் அடித்துத்திரட்டிய திரள் மாதிரி திரேகம். பசித்து வெளுத்துப் போன கருசல் தரையைப் போல சாம்பல் ஓடிய முகம். சாவன்னா வெட்டித்தரிசு. பளாரென்று விடிய கோவில்பட்டி டவுணில் தெட்சிணாமூர்த்தித் தெருவில் கைத்தடியூன்றி பெண்டு ஒடிந்த முதுகை நிமுத்தினார். நிமுரவில்லை. தலையைச் சாய்த்து தெருவை நோட்டம் பார்த்தார். 'அடத்தாயளி விடிஞ்ச வீட்டக் காணமே...' தெருவில் எழுந்த முதல் மனிதர்கள் மாதிரி தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கிஹீ கிஹீ... என ஆக்கங்கெட்ட கூகையாட்டம் சிரித்தார். சிரிப்பில் அனல் அடித்தது. சுவர்கள் எதிரொலித்தன. சிரிப்பு இருமியது. பழைய பெட்போடு மோட்டாரைப் போல் பெரிய ஹூங்காரத்துடன் உருமி சளியைத் துப்பினார். 


முனங்கலுடன் கைத்தடி நகர்ந்தது. 'ஏம்மா அப்பிடிப்பாக்குர சமுசாரிதான்மா.. சாமிநாய்க்கன் சமுதாரி தான்மா.. கீழ கொட்ரத போடுமா.. நான் பிச்சைக்காரன் இல்லேம்மா...' பப்புத்தாத்தா பிச்சை எடுக்க விதி செய்தோம். கைத்தடி கேட்ட நூறுகேள்விகள். தண்டவாளங்களில் வெயில் முறுகிக் கனகனக்க தண்ட வாளங்களைத் தாண்டி ஏன்? ஏன்? ஏன்? என்று கேட்கும் கைத்தடியோடு போய்க்கொண்டிருந்தார் சாமிநாயக்கர். 

அரங்கு இருட்டில் அவையும் பிறந்தன. மௌனமும் ஒருவகை இரைச்சலும் தானிய பாரமம் வரும். பிள்ளை பெத்துட்டா பிறந்த மேனியும் தானியமும் கூடி இருட்டு பதமாகிறது. உள்ளே இருந்து வெந்துவிடாத இருட்டு ஒவ்வொரு பிறந்த பிள்ளையுடன் சேர்ந்து வளரும். நெல் விளைவதற்கு வெள்ளாமைவாசி நல்லபடியாக இருப்பதற்கு கருப்பட்டியும் வெளக்கெண்ணயும் கொண்டு தெருப்பெண்கள் காளியம்மா பிள்ளை பெத்ததை பார்க்கப்போனார்கள். பிறந்த பிள்ளையும் தாயாரின் பச்சை உடம்பும் இருட்டைத் தீண்டி வளர்கிறது. 

 தீனமானக் குரலில் பிள்ளை அழுகையும் தாயின் - முனகலும் இருட்டில் வெளிப்படாத சிறுதீப்ம் போல் குணக்கும். பிள்ளை உடம்பு மட்டும் தெரிகிற வெளிச்சம். காளியம்மாளின் முகலெட்சணம் தாயான போது பார்க்க வேண்டும். கிராமம் முழுவதும் அவள் பிள்ளை பெத்த - சேதியில் குளிர்ந்தது. பெண் பிள்ளைகள் ஆறும் தாயாருக்கு அடங்குகிறார்கள், மச்சுவீடு காலியாக இருந்தது. உள்ளே பழம்பெரும் இருட்டு, அரக்கனைப் போல் வாய்திறந்தது. பூனை அழுது நீளும் இரவுக்குள் அரக்கனைக் கண்ட பூனை மெதுவாக 'நடந்து அவள் பின் தொடர்ந்து மறைந்தது. அரங்கு 'வீட்டில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கிய மண்பானைகளும்- மிகப்பழையவை. பல வாய் பிளந்த செம்மண் பானைகளில் மூன்னோர்கள் கொடுத்த தானியங்கள் இருக்கும். கொல்லனுக்கு வாழ்க்கைப் பட்டவள் பாடு தரித்திரமாவது சாஸ்திரநியதி. - தெருவிலிருந்தவர்கள் வந்து பார்த்தார்கள். மீசைக்காரத் தேவர் கோட்டூருக்கு வேண்டிகட்டிக் கொண்டுப்போனார் கொல்லனை. கோட்டூர் வைத்தியன் பார்வை பார்த்துச் சொல்லி விட்டான். 


கொல்லனுக்குப் பச்சவாதம். பரம்பரய்யா இருக்கும். தைலம் தடவி கைகால்களை (முறுக்கி விட்டான் வைத்தியன். திரும்பிக் - கொண்டு வந்தார்கள் கொல்லனை. வருகிற வழியில் கூண்டு வண்டிக்குள் கொல்லன் ஏலாமல் போனது பற்றி தேவர் மடியில் கிடந்து அழுதான். வெள்ளச்சாமி மனசு விடாதப்பா நாங்க இருக்கம்.... உனக்கு ஒரு அழிவும் வராதப்பா மனசாரிக்கோ  வெள்ளைச்சாமி என்றார் சுந்தரத்தேவர். 


கொல்லனைக் கொண்டுவந்து சேர்த்தார்கள். வண்டியிலிருந்து இறக்கி தூக்கிய போது கொல்லன் விசும்பி விசும்பி அழுதான். புள்ளை குட்டிகளும் சேர்ந்து அழுதன குருவு அய்யாவைக் கெட்டிக் கூப்பாடு போட்டது வயசுப்புள்ளை அழுவதைப் பார்த்து தெருவில் இருந்த பெண்கள் மருகினார்கள். அழாதம்மா (குருவு பெரிய புள்ளே அழக்கூடாது, தங்கச்சிகளுக்கு கஞ்சி ஊத்தும்மா போயி அடுப்பப்பாரும்மா” என்றார் சுந்தரத்தேவர் அப்புறம்  தீங்கருதுப்பருவத்தில் கொல்லன் காட்டுக்குப் போனான். கூடவே ஆறு பெண்களும் போனார்கள். பிள்ளைகள் - தின்பண்டத்துக்கு நகலந்து போனது. ரெண்டு பாகம்மங்கருதை நிலக்கசக்காய் கசக்கி கொம்பையை ஊதி வாயில் போடவும் பிள்ளைகளுக்கு ஒரே 'குதிப்பு: 


தட்டையை விலகி வரும்போது தீங்கருதின் அடித்தூரில் குருவி கட்டிய கூடு. காய்ந்த சருகும் பச்சைப்புல்லும் தழையத் தழைய விட்டு அடுக்கிவருகிறது. இன்னும் கட்டி முடியாத கூடு. சாம்பல் புள்ளிவைத்த முட்டையைச் சுற்றி பச்சைப் புல்லை மூடியிருந்தது குருவி. குனிந்து ஆடும் கருதுக்குமேல் பறந்து புர்ர்ர்ர்ர்ர் ரென்று கொல்லனைச் சுற்றி வட்டமடித்தது குருவி. 

உலாந்த காற்று, கோப்பம்மாள,  ஈஸ்வரி அக்காளின் பாட்டு, அப்பாவின் குகையில் இருக்கிறேன் . கொல்லனின் ஆறு பெண்மக்கள். , கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்  

  யதார்த்தத்துடன் உருகும் திரவம நீர்ப்பரப்பில் கிராமத்தின் ஒரு பெண் எப்போதுமே மிதந்தும் நீரடியில் மறைந்தும் கதை போடுகிறாள். உலர்ந்த காற்றில் கண் தெரியாத பாட்டியின் ஈர ரெப்பையின் மீது கருக்கிருட்டில் அசையும் பயிரினத்தில் நினைவும் ஆடுகளை விட்டத்தில் தொங்கும் பூதம் சந்தைக்கு அழைத்துப் போவதும் அரசாங்க டிமாண்டு நோட்டீஸ் கிழவியை மிரட்டும் பூதமாக உரையாடலைத் தொடங்குகிறது. ஒரு சில மிச்சமாயிருந்த ஆடுகளையும் தரகனாய் வேடமணிந்து வந்த பூதம் கூட்டிக்கொண்டு போக யதார்த்தமும் ஆடுகளின் வைசூரி வாடையும் கலந்த நிலப்பரப்பில் மெல்ல நுழையும் சட்டத்தின் பிடியே அதீத ரூபத்தை கொண்டுவிட உலர்ந்த காற்றில் வரும் சிறு சிறு ஒலியிலும் கண்தெரியாத பாட்டி சலனமடைகிறாள். வெவ்வேறு உருவமெடுக்கும் புராணபூதம் நிகழ்காலத்துடன் கதை சொல்லும் பாட்டியுடன் ஆடுகளுடன் இணைந்து கொண்டிருப்பதாகப்படுகிறது. ஈஸ்வரி அக்காளின் பாட்டு, கோப்பம்மாள் இரண்டுமே எழுதப்பட்ட காலம் வேறு வேறாயினும் நீரப் பரப்பிலிருந்து உயிர்பெறக்கூடியவர்கள். பின்னே எழுத நேர்ந்த கதைகள் சில கோப்பம்மாளின் கண்ணின் அடியில் இருந்த மையெடுத்து தீட்டப் பட்டவைகளாக இருக்குமோ, கம்மாய் நீரும் வட்டமான பெரிய கண்ணாக அபாந்திர வெளிபார்த்து உருளும்போது விண்ணக எரிகோடுகளும் கிரக விதிகளும் ஒளிப்புள்ளிகளும் கோப்பம்மாளின் வளையும் கண்பரப்பில் சுழல்வதால் இவ்விருகதைகளும் ஒழுங்கான எதார்த்த அடுக்கை கொண்டிருந்தபோதும் எதார்த்தத்தை மறுக்கும் எதார்த்தங்களுடன் மிதக்கும் பிம்பங்களாக அலைவுறுகிறார்கள். கண்ணின் கருமணியில் இருட்டும் உலகில் கொல்லனின் ஆறு பெண்ருதுக்கள் அரங்கு இருட்டின் கண்களில் ஜனித்திருக்கக்கூடும். 

கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் குறுநாவலும் அப்பாவின் குகையில் இருக்கிறேன் குறுநாவலும் மாறுபட்டவை. கி.ராஜநாராயணனின் முன்னத்தி ஏர் மறைந்துவிட திரேதாயுகத்துக்கலப்பையுடன் அவர் பின்னே சென்ற சாமிநாயக்கரும் பப்புத்தாத்தாவும் (கருவேப்பிலைகள்) அருகருகே சாயல் கொள்ள கி.ராவின் பல சிறுகதைகளில் இருந்தே ஆங்கில மல்லாத பிராந்திய குணங்களுடன் வறட்டுப் பாறைகளுடன் துவங்கிய உரைநடையிலிருந்து பூமணி, பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி ச.தமிழ்ச் செல்வன் மு.சுயம்புலிங்கம் என விரியும் நிலப்பரப்பில் இருந்துதான் முப்பத்தி மூன்று சிறுகதைகளையும் ஒரு குறுநாவலோடு எழுத நேர்ந்தது. கி.ராவின் பேதை, கதவு, ஜீவன், 'கருவேப்பிலைகள்' பூமணியின் பிறகு மு.சுயம்புவின் 'மூளிமாடுகள்', 'மானாவாரி மனிதன்' பா, செயின் தாலியில் பூச்சூடியவர்கள்' ச.தமிழ்ச்செல்வனின் 'கருப்பசாமியின் அய்யா' 'வார்த்தை ' யிலிருந்து உருப்பெற்ற மொழியை இவர்களின்றி அடைந்திருக்க முடியுமா? பின்னே மாறிய கதைகளுக்கும் அவர்களே காரணமாக இருந்திருக்கக் கூடும். வெள்ளைத்தோலும் ஆங்கிலமும் பிஸ்லரி வாட்டர் கேனும் ஏன்? என்பதும் கைத்தடி கேட்ட நூறு கேள்விகளில் ஒன்றுதான். 

பிறந்த பிஞ்சிகளுக்கு சாராயத்தைத் தொட்டு சேணை வைத்து பிள்ளைகளை வளர்க்கும் காட்டுக்கூட்டம். அம்சவல்லிக்கு அறுத்துக் கட்டிய தாலியோடு பல பனை மணந்து வெளியேறினாள், சூரியன் கீழே இருள்மேலே காட்டுப் பாதையில் எழுந்து நடக்கிறாள், தெம்மாங்கு இழந்த காற்று வீசும் கிராமப் பாதை. கல்லோடையில் மலையனோடு புணர்ந்த இரவு வால்நட்சத்திரம் எரிந்து மறைந்தது. கூண்டு வண்டிகள் வைப்பாற்று மணலில் உரசிச் செல்கிறது. ஆழத்தில் விழுந்த மரத்தில் ஒரு பூ விரிந்து கொம்பூதியபடி கருப்பு வம்சம் சுற்றிச் சுற்றி வந்து மறையும். பனைகளின் கூந்தல் அறுந்து விழுந்தது. அறுந்த பனை மேல் இருளில் நகரும் பெண் பறவை அமர்ந்து கூவும். நிலங்களில் ஒடுங்கிய பூர்வகால ஸர்ப்பம் ஒன்று வானம் முழுவதும் எழுந்து மறையும். விருவோடிய நிலங்களைக் கடந்து நடந்தார்கள். காய்ந்த சருகில் மிதித்துக் காடோ செடியாக அலையும் கருப்பு இனம். சாராயம் காய்ச்சித் திரியும். ஊரைச் சுற்றிலும் உடங்காடு. ஊர் எல்லையில் காப்புலிச்சியம்மன் கோயில், வருவும் ஒரு கொடை. சேவலை காவுகொடுத்து சாராயத்துடன் சுருட்டுப் படையல். துடியான தேவிக்கு ஆட்டுத் தலையை அறுத்து வைக்கும் கிராமம். ஆதக்காளின் கிழிந்த காதுகளோடு மேற்கே. நகர்ந்த கூட்டம் கழுத்தை ஒட்டிக் கட்டிய தாலியில் காட்டு மருக்கொழுந்தைச் சுற்றி பிராயத்தில் தாலிகட்டி காதுகளை கிழித்துக்கொள்ளும். சீக்கிரமே பிஞ்சிகளை ஈன்ற பச்சை உடம்பில் வெதுவெதுத்துப் பொங்கிய அமிர்தத்தை உறிஞ்சி வளரும் சிசு. கருப்பு நிற மயிரடர்ந்த உருவங்கள் கையில் தீப்பந்தங்களுடன் ஆடிவரும் புராதன நடனத்தில் தீப்பற்றிய கால்களுடன் ஆடிவருகிறார்கள். அதன் ஒளிபட்டு உருவங்கள் தோன்றி மறையும். நெருப்பைச் சூழ்ந்த ஆதி மகளிர். குலவையிட்ட பாடல். 

கள்வெறி கணக்கும் கண்களுடன் பாளை சீவும் அருவாள்கள் மின்னியது. ஊழிப் பெருவெளியில் பாதை வெட்டிக்கொண்டே போன கருப்பு வமிசம். நெஞ்சில் கருப்பு வடுக்கள் விழுந்து காய்த்துப்போன இருளன். கற்பகவிருட்சம் பாளையில் கள் சுரந்தது. பனையேறிக் கூட்டம். சுற்றிலும் கருப்பு வமிசத்தார் சபையில் இருக்க பனை ஓலைக் குருத்தை முடிந்து தாலியாகக் கட்டி கல்யாணம் நடந்தது. இருளன் கட்டிய தாலியோடு ஆதக்காளின் வமிசம். மண்ணைக் கிண்டி மாளாமல் கொழு முனையில் விழுந்து செத்தார்கள். 

பல்வேறு கதைகளை உபகதைகளாகக் கொண்ட 'மதினிமார்கள் கதை' யின் தொடர்ச்சியை 'பாழ்' கதையில் வரும் பண்டாரமகளிடம் பன்னீர் விருட்சத்தில் மறைந்திருக்கும் விருட்சகன்னியிடம் மரவெட்டி ஒருவன் ஒளிந்திருந்து பார்த்து விருட்சம் திறந்து நிலவொளியில் திராட்சைகளைப் பறித்து உண்டு கொடிக்காலில் வெற்றிலையும் கமுகுமரத்தை அசைத்து குருதி நிறங்கொண்ட வித்துதிர்த்து தாம்பூலம் தரித்து நிர்வாண கன்னி கிணற்றில் இறங்கி நீராடி தன் படர் கூந்தலை சிணறு பூராம் விரித்து முடிசிலுப்பி மோந்துபார்த்து கற்பூரம் வாசனையுடன் மஞ்சள் தண்டு தேய்த்து நீரில் முகம்பார்த்து மரத்துள் போய் மறைவதை முன் கதையாக மறு சொல்லில் மீமனித மாயச்சுருளை முன்னிறுத்தி செம்புக் கூத்தான் பட்சி விடிய விடிய அகவும் விருஷகன்னியைத்தேடி.. இன்று எழுதி முடித்த 'சிணற்றடி ஸ்திரீகளும் ஈஞ்சாளின் நெல்வயலில் அசையும் ஈஞ்சநாட்டு நிலப்பரப்பில் அதிரும் நெல் நரம்பில் மயங்கும் சுருதி வரை மதினிமார்கள் கதையொன்றின் உப கதைகளாக வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து படித்தவர்களால் உணரமுடியும். 

பூவுதிராத 'கம்மங்கதிரில்' தோன்றி நகர்ந்து வரும் நத்தையின் உணர் கொம்புகள் மெல்ல ஊர்ந்து 'நத்தைக் கூடெனும் கேலக்ஸி'யாக வடிவம் எடுத்துள்ளதை ஊர் கம்மாய்க்கரை கருவமரத்தில் ஆடிக் காற்றில் உலர்ந்து ஒட்டிய வெறும் நத்தைக் கூடுகளின் விசில் ஒலி காடுகளில் கேட்கும் போதெல்லாம் சுருளும் ஓசையில் தட்டாண்கள் பறந்து திரிவதை நத்தையுடன் இணைத்து பறக்கவிட்ட பால்யகாலக் கண்சுருளில் மாறும் வடிவத்தை இன்று கேலக்ஸியாக்கினேன். 

கருப்புரயிலில் புறப்பட்டுப்போன முனியம்மாமகன் சிவகாசிக்குப் போய் விட்டான், ரயில் விளையாட்டையெல்லாம் அங்கு வைத்துக் கொள்ள வேண்டியது தான். என் கிராமத்தின் தெருக்களைக் கடந்து இருந்த ஆரம்பப் பள்ளிக்கு போகும் சிமெண்டு வாய்க்கால் வளைந்து வளைந்து செல்லும் கோட்டைச் சுவர்மீது பென்சில் சிலேட் குச்சி கொண்டு கோடு இழுத்த வண்ணம் போவதும் வருவதுமாக இருந்தேன். தெருத் தாண்டும் சாக்கடைப் பொந்துகளில் கோடு உள்போய் அடுத்த விளிம்பில் வெளிவந்துவிடும். பின்னர் எல்லாம் மறைந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு கிராமத்துக்குப் போய் தெருவழி சென்றபோது நான் இழுத்த பென்சில் கோடுகளைக் கண்டு அதிர்ச்சியும் பரபரப்புமடைந்து கூடவே சென்னைக்குப் போன ரயிலில் கோடுகளையும் காலித்தீப்பெட்டிகளில் சுருட்டிக் கொண்டுபோய் தனிமையில் திரிய நேர்ந்தது. அந்த தொலைவான குக்கிராமத்தின் சுவரில் பதிந்த கோடுகளைக் கண்டு தொலைவிலிருந்தே தலைவணங்குகிறேன். திரும்பத் திரும்ப அந்தக் கோடுகளை எழுத முடியுமா? அதைநோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அந்த கருப்பு ரயிலில் தான் என் பிராயகால சகாக்களான கூலு, தங்கராசு, சாமிகேசவன், சித்திரைவேலு, பழத்தோட்ட ராமசாமி பனைவிட்டத்தில் நாண்று கொண்ட தம்பி வீரசின்னுவரை எல்லோரும் போய் மறைந்தார்கள். இன்று அந்த ரயிலுக்காகக் காத்திருக்கிறேன். இனி கிடைக்கப்போவதில்லை என்றாலும் ரயிலைத் தவறவிட்டவனின் பரிதவிப்புடன் பிளாட்பாரத்தில் தவறவிட்ட பொன்வண்டுகளை தீப்பெட்டிகளில் அடைத்து கலர் நூலினால் இடம் விட்டு இடம் இணைத்த பெட்டிகளில் எல்லோரது அதிசய உலகத்தையும் கொண்ட ரயிலுக்காகக் காத்திருக்கிறேன். இருளில் மறைந்த கருங்கோடுகளில் பயணமான அப்பாவின் குகையில் இருக்கிறேன் குறுநாவலும், போடிநாயக்கனூர் பாசஞ்சர் ரயிலும் தனுஷ்கோடி ரயில் நிலையமும் இன்னும் ஆளற்ற வெறும் ஸ்டேஷனில் இலங்கை அகதி ஒருவனின் காத்திருப்பாக துயரம் தொடர அழிந்துபோன தனுஷ்கோடி நகரின் இடிபாடுகளிடையே காணாமல் போன ரயிலில் உல்லாசப் பிரயாணம் போன நூறு சிறுவர்களும் கடலுக்குள் ரயிலோடு மறைந்த தனுஷ்கோடிப் புயலில் காணாமல் போன ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறேன் மணல்வெளி மீது. 

ஆங்கில வகுப்பறையில் சுழலும் நூலகத்தில் மாறிமாறி வந்த காலனிய அடிமைச் சாசனத்துடன் இறக்கப்பட்ட ஆங்கில இலக்கியப் பிரதி மடிப்புக்குள் நெளியும் வெள்ளிப் புழுவாய் ஈயநிறத்தில் வெள்ளைத்தோல் மோகத்திலிருந்து இன்று வரை விடுபடாத படித்த வர்க்கம் பிராந்தியமொழி மரபிலிருந்தே சுயம்புவான கலாச்சாரத்தின் ஆதித்தன்மைகளை விட்டு விலகியே தங்கள் அளவுகோல்களை கம்பனியார் தொப்பிக்குள்ளிருந்து எடுத்து நீட்டினார்கள் போலும். கழுவக் கழுவ கைவிரல்களில் எஞ்சிய சாம்பல் நீலக் குருதியிலிருந்து ஆலீஸை உதறி. 


வெள்ளைத்தோலுக்கும் ஆங்கில மோகத்துக்கும் பலியான நீண்ட இருநூற்றாண்டுகளுக்குப் பின்னும் 'எழுத்து' சிற்றிதழ் வரையும் பிறகும் இலக்கிய மதிப்பீடுகளுக்கு காலனிய அளவுகோல்களைத் தொடர வேண்டிய நிலை என்பதுகளுக்குப்பின் மாறத் தொடங்கியது. 


அலாதியான தமிழ் கலாச்சாரத்தின் நிலத்தோற்றங்களை புதுமைப்பித்தன், வண்ண நிலவன், பூமணி, கி.ரா., ஆர். சண்முகசுந்தரம், கு. அழகிரிசாமி, பா. செயப்பிரகாசம், ஆர். ராஜேந்திர சோழன், நா. முத்துச்சாமி, தமிழவன் என நவீன கதை சொல்லவந்த பிராந்தியக் குணங்களில் இருந்துதான் எண்பதுகள் தொடக்கத்தில் துவங்கிய என் சிறுகதைகளில் கிழக்கில் விரிந்து சிடந்த நிலப்பரப்பின் சமுதாய நினைவுகளை தனிமொழியில் சுருளவைத்து ‘மதினிமார்கள் கதை' 'கொல்லனின் ஆறு பெண் மக்கள்' ஆக முதல் இரு தொகுதிகளில் அடங்கிய முப்பத்து மூன்று கதைகளில் யதார்த்தமும் புனைவும் கலந்த பல கதைகள் இருக்கக்கூடும். புதுமைப்பித்தன் இலக்கிய மரபின் சுற்பனாசக்தி செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்ததும் எதார்த்தம் விலகிய கதைகள் சில அடங்கும். பாழ், இருட்டு, கருப்புரயில், ஆதிவிருட்சம் என முதல் தொகுப்பில் இடம் பெற்ற ஆரம்பக்கதைகளே நான்காவது தொகுதிக்குப் பின் இத்தொகுப்பின் கதைகளில் தொடர இழைக்கதாமந்திரப்பரப்பை விரிக்கவும் தொன்மத்தின் ஆழத்தில் சலனமுறும் மொழிப்படிவுகளில் கதையின் விசை இருப்பதாக அறியமுடியும். மரபு வடிவங்களை விட்டு விலகி வெகுதூரம் வந்து விட்டபின் தொல் மனப்படிவங்களில் உறைந்த தமிழின் அகராதி இடம்மாறிக் கொண்டே புதிய கதைவெளியின் நிகழ்காலத் தொன்மத்தை புராணத்தின் தொல்கதையின் கலவையில் சாத்தியப்படுத்த வேண்டியதாகிறது. ஜப்பானிய மரபில் கபூகி சடங்குகளில் ஓலங்களும் ஓநாய்களின் ஊளையும் புராதனத்தை எழுப்புகின்றன. கணக்குழுக்களின் மந்திரங்களும் கதையும் பாஷாணக்கட்டும் மருத்துவமும் தொடுகுறியும் முன்னுணர்ந்து சொல்லும் கிழ ஆந்தைக் குரல்வளையும் கொண்ட தமிழ்முதுகுடி ராசிமண்டலத்தில் நேரப்போகும் கிரகணத்தின் ஆதிப்பூடக விஞ்ஞானமும் ரஸவாதமும் உப்பும் கஷாயமும் கொதித்துத் திரட்டிய மொழிப்பரப்பில் இருந்துவிலகிய எதார்த்த முகத்தில் எழுத்தைக் காணோம். 


கிராமத்தில் மறைந்து கொண்டிருக்கும் சூனியக்காரிகள் என்மேல் ஆட் கொண்டதால் எதார்த்தவாத எழுத்து முறையை மாற்றி நேர்கோட்டை தலைகீழாகவும் ஈக்கி ஈக்கியாக ஒடித்தும் சிதைத்தும் ஒருமை நோக்கி படரும் கோடுகளை குறுக்கே கீறி வேறுமொழிக்கு மெல்ல உருமாறும் கதைகள் உள்ளுரையாகக்கொண்ட புறநானூறு கலித்தொகைவழி வேனர்சார் திரிந்த திணைசமிக்கையில் கரு, உரி மறைமுக நிலவிலாஸத்தில் சில கதைகளிலிருந்தே மாறிக் கொண்டிருக்கிறது. 

வனராக்கியருக்கு பானபலிகள் இட்டு சடைநாக்கில் தொங்கும் அகரர்களின் மொழியை எழுத்தாக்கும் தொன்மத்தின் அடித்தட்டில் பயங்கரச் சடங்குகளுக்குள் ரத்ததாகம் கொண்ட வழிபாட்டில் இருபத் தோராயிரம் நடுகற்களில் நடுங்கும் தமிழ்க் கதை மரபை யாரும் எழுது வாரின்றி ஊர் ஊராய் எட்டிப்பார்த்து நிற்கிறது நடுகல், 


-தாது வருஷம், பங்குனி மாதம் 



No comments:

Post a Comment