தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, November 10, 2019

நினைவுப்பாதை - நகுலன் --- 13.4.'69 - 20.2.'70 -1

...... என்பது என் சித்தாந்தம். ஆனால் நடராஜன் அடிப்படை மனிதனை மீறினது ஒன்றுமில்லை என்பது. ஆனால் சொல்லி எதைச் சொல்லாமல், எதைத் தெளிவித்துடன் மறைத்து, எதை அழுத்தி, எதை அழுத்தாமல், எதை அப்பட்டமாகவும், எதை மென்மையான கோடுகளாலும் வரைந்து அனுபவம் மூலம் அனுபவத்தை அழிப்பது என்று எனக்கு இன்ன தெரியவில்லை . இருந்தாலும் நடராஜனிடமிருந்து நான் எனக் வேண்டியதை எடுத்துக் கொண்டேன். அதோ வருகிறான் அவன் அந்த வரை மீசை, இந்த நெட்டல் தேகம், அந்த மென்மையான முறுவல், ஏன் இப்படி என் உடல் புல்லரிக்கிறது? 

(4)
13.4.'69 - 20.2.'70 
என்னைப் பற்றி, சிவனைப் பற்றி, நடராஜனைப் பற்றி எழுதிவிட்டேன் என்றாலும் இது வரையிலும் எழுதியது முழுவதும் வெறும் கையெழுத்து, இனி எழுதப்போவதுதான் நிலையாக நிற்கும் நிற்கவேண்டும் என்று ஒரு அவா. 
சிவனைப் பற்றி நடராஜனைப் பற்றி ஏதாவது ஒன்றிரண்டு திட்டவட்டமாகச் சொல்லத் தெரியும். ஆனால் சுசீலாவைப்பற்றி உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஒன்றுமே தெரியாது. அது கூடத் தவறு. அறியாத ஒன்றை அறிவதற்கு ஒரு முயற்சிகூட எடுத்துக் கொள்வதில்லை. அதுபோல்தான் இவள் விஷயத்திலும். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால் இவளைப் போல் வேறு ஒருவரும் என் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
நானும் தமிழை முறையாகக் கற்றவன் தான். அது இந்த இடத்தில் சௌகரியமாகத்தான் இருக்கிறது. அகத்துறையில் தலைவியின் பெயரைக் கூறக்கூடாது என்று ஒரு ஐதீகம். ரகு சொன்னமாதிரி ஐதீகங்களுக்குள்ள அழகு வேறு ஒன்றிற்கும் இல்லைதான். ஞாபகம் இருக்கிறதா? நீ ஆட்டின் உயிரை பெரிதாகக் கருதுகிறாய். ஆனால் எனக்குச் சடங்கு, பலி என்ற ஐதீகங்கள் அதைவிடப் பன்மடங்குச் சிறப்பாக இருக்கின்றனவே என்று ஒரு கட்சி, அது எப்படியாவது போகட்டும். தலைவி பெயரைக் கூறக்கூடாது என்ற அதே தருணத்தில் நான் அடிக்கடி சுசீலாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றேனே என்று ஐயம் எழக்கூடும். ஆனால் அவள் பெயர் சுசீலா இல்லை ! பெயருக்கும் அது சுட்டப்படுவதற்கும் என்றுமே ஒரு பொருத்தம் இருப்பதில்லை. நமது சௌகரியத்திற்கு, இனம் பிரித்து அறிந்து கொள்வதற்கு, பெயர்களைச் சங்கேதங்களாக உபயோகப் படுத்துகிறோம். அவ்வளவுதான் ஆனால் எழுதுவதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதால் எனக்குத் தெரிந்த அளவு நான் உங்களுக்குச் கசீலாவைப்பற்றிக் கூற கடமைப்பட்டவனாகின்றேன். இந்த நாட்டில்' முன் கூறியபடி அழகிய பெண்களுக்குப் பஞ்சமில்லை . என்றாலும் இந்த அழகிய பெண்கள் அனைவரையும் விட என் அகத்தை மிகவும் கவர்ந்தவள் இவள். ஏன்? ஏன்? ஏன்? என்று என்னையே கேட்டுக்கொள்கின்றேன். மீண்டும் எழுதுகிறேன். வார்த்தைகளே நீங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்? 
அவள் அழகாக இருக்கின்றாள். 
அதை உங்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்றுதான் எனக்குத் தெரியவில்லை . 
ஏன் நானே நாட்கணக்காக மாதக்கணக்காக அவளுடைய மௌன ஆராதகனாகத்தான் இருந்திருக்கிறேன். அவளும்தான் என்னுடன் அதிகமாகப் பேசியதில்லை. உண்மையான அன்பு என்பது பேச்சு, ஸ்பர்சம், என்ற நிலைகளைக் கடந்த ஒன்றுதானோ என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளுடன் மனம் விட்டுப் பேசி. “உன்னை நான் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் என்னையே நான் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேன்” என்று கூட நான் சொல்ல விரும்பவில்லை. 
அவளிடம் “நீ அமரத்தன்மை பெற்றவள்” என்று சொல்வதுகூட எங்கள் உறவைக் கறைப்படுத்துவது போல்தான் எனக்குத் தோன்றுகிறது. 
நேற்று வரை ‘ஈசுவர சிருஷ்டியாக' இருந்தவள் இன்று அர்த்த நாரீசுவர வடிவைப் பெற்றுவிட்டாள் என்பதை நான் அறியதவனில்லை . 
என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன். யார்தான் யாரை யாருடைய உடமைப் பொருளாகக் கருதமுடியும்? எதிரும் புதிருமாக நாம் இருவரும் இருந்த நிலையில் நீ இருந்தநிலை வேறு; நான் இருந்த நிலை வேறு, பார்ப்பது - பார்க்கப்படுவது என்ற நிலையில்தான் ஒவ்வொரு விஷயமும் சலித்துச் செல்கிறது. ஒரு புத்தகத்தைப் படிக்கும்பொழுது வார்த்தைகளையா படிக்கின்றோம்? 
படிக்கப் படிக்க வார்த்தைகள் அழிகின்றன.
பிரக்ஞையின் நிதானமான போக்கு. 
வார்த்தைகள் புத்தகத்தைக் கறைப்படுத்துகின்றன என் ஒருவரும் சொல்வதில்லை என்று கூறும் அதே தருணம் அப்படியே ஒரு பிரசித்தமான கவிஞன் சொன்னதும் ஞாபகம் வருகிறது. 
ஒரொரு சமயம் உன்னுடைய இயற்கையிலேயே உன் எழில் மிக்க வதனம் அன்பின் சோபையினால் பன்மடங்கு ஒளிர்வகை நான் கண்டிருக்கின்றேன். இதற்குச் சம்பிரதாயமாகக் கூறும் வியாக்கியானத்தை என்னால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ? 
உன்னிடம் என்றுமே அந்த மாதிரி உந்துதல் இருந்ததில்லை. அவள் அழகாக இருக்கிறாள் என்றேன். 
அழகு என்றால் அதை நாம் எப்படி வகைப்டுத்துகிறோம் என்பதே எனக்குத் தெரியவில்லை. ஒருமுறை நண்பர்கள் இருவருக்கும் அவளைக் காட்டி இவள் தான் சுசீலா என்றேன். 
இதில் விசேஷம் என்னவென்றால் அவளுக்கு அவள் தான் சுசீலா என்பது தெரியாது. 
நண்பர்கள் இருவரும் எழுத்தாளர்கள். ஒருவர் கவிஞர்; ஒருவர் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர். 
இருவருக்கும் அழகு என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். 
ஒருவர் என்னிடம் “இவளிடம் நீ எதைக் கண்டு இப்படிப் பரவசமுறுகிறாய்? இவள் என்னிடத்தில் ஒரு சலனத்தையும் எழுப்பவில்லையே” என்றார். 
மற்றவர்: “பட்டணத்தில் இருக்கும் பல பெண்களைப் போல் இவளிடம் தான் பெண் என்ற உணர்வே இல்லை போல் இருக்கிறதே” என்றார். 
ஆனால் இருவருமே என்னிடம் “இவள் அந்த மாதிரியான பெண் இல்லை” என்றார்கள். 
எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை . - நான் அவளை அந்த மாதிரியான பெண்ணாகவும் கருதவில்லை . 
 அவளும் என்னை , எனக்கு அவளிடமிருக்கும் ஈடுபாடு தெரிந்திருந்தும், அந்த மாதிரியான மனிதனாகக் கருதவுமில்லை என்பதும் தெரியும். 
ஆனால் ஒன்று, அவர்களைப் போல் நான் அவளை அழகுடன் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் பெண். என்றாலும் அவளிடம் சில தன்மைகள் இருந்தன. அவள் கூந்தலில் பூச்சூடுவதில்லை. ஆனால் இன்று பெண்கள் அதிகமாகப் பூச்சூடுவதை நான் அதிகமாகப் பார்த்ததில்லை. 
அதிகமாக நகைகள் அணிந்தும் பார்த்ததில்லை. ஆனால் அவள் ஒருவிதத்தில் ரஸனையைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்து கொண்டாள் என்பதும் வாஸ்தவம். 
என்னிடம் அவள் அன்பு காட்டினாள். இதில் கூட ஒரு வரையறையை வைத்திருந்தாள். 
இந்த வரையறையை நான் சந்தர்ப்பவசத்தில் மீறி விடுவேனோ என்று தடுமாறுகையில் அவளுடைய திடசித்தம் என்னை நிலையில் வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் இருவரும் அதிகமாகப் பேசினதே இல்லை . அப்படிப் பேசின சந்தர்ப்பங்களிலும் அவள் மறைமுகமாக - நானும் அவளும் வெவ்வேறு உலகில் இருக்கிறோம் என்பதை உணர்த்தாமல் உணர்த்தினாள். இதை எப்படிச் சுட்டிக் காட்டுவது என்பது எனக்குத் தெரியவில்லை. உதாரணமாக ஒரு சம்பாஷணையைக் கொடுக்கிறேன். 
“நான் கதை, கவிதைகள் எழுதியிருக்கிறேன்.''
“உண்மையாகவா?”
"ஆமாம்."
“உங்களைப் பற்றித்தான்." 
- “அப்படியா?"
“ஆமாம்.''
“பிரசுரமாயினவா?"
"ஆமாம்."
“உங்களுக்குக் கதை கவிதை இவைகளில் ஈடுபாடு உண்டா ?"
“ஈடுபாடு என்று சொல்லும் அளவுக்கு ஈடுபாடு கிடையாது."
“நீங்கள் என்ன கவிதைகளைப் படிப்பீர்களா?" 
கேட்டதற்கு வந்தனம். ஆனால் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் மனதைப் புண்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஆனால் நான் அவைகளைப் படிக்க விரும்பவில்லை ." 
இதைச் சொல்கையில் அவள் முகத்தில் ஒருவித பாவமும் இல்லை. அதற்குமேல் நான் ஒன்றும் சொல்லவுமில்லை. 
அதற்குப் பிறகு நானும் அவளும் ஒருமுறை தனியாக இருக்கும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம். எனக்கு நிலைகொள்ளவில்லை. அவள் இருந்த பக்கம் என்னால் பார்க்க முடியவில்லை. நான் எதைக் கண்டு பயப்பட்டேன்? எனக்குத் தோன்றியது; எந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் தன்னைக் கண்டு பயப்படுகின்றானோ, அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று. நான் இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஒருமுறை வெற்றிலை போட்டுக் கொண்டேன். சமீபத்தில் என் உறவினர் ஒருவருக்கு இந்தப் பழக்கத்தினால் கான்ஸர் வந்ததால், டாக்டர் சொன்னதின்பேரில் நான் இந்தப் பழக்கத்தை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் தடம் மாறிப் பழகுவதைவிட என்னை அழித்துக் கொள்வது எவ்வளவோ சிறந்தது என்று தோன்றியது. அவளைப் பற்றியே நினைவு ஓடியது. பலர் அவள் அழகானவள் என்றுதான் கருதினார்கள். ஓரிருவர் அவள் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை என்று கேட்டார்கள். என்றாலும் ஒருவரும் அவளிடம் மறந்தும் நிதானம் இழக்காமல் தான் பழகி வந்தார்கள். அவள் தொழிலில் திறமை உடையவள் என்பது மாத்திரம் இதற்குக் காரணமல்ல. அவளிடம், வேறுவிதமான உறவைச் சாதாரணமாக இரண்டுங்கெட்டான் நிலையில் உள்ளவர்களால் கூடக் கற்பனை பண்ணிக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு யோசனை பண்ணிக்கொண்டு நான் வெற்றிலைச் சக்கையைத் துப்பிவிட்டு என் இருப்பிடத்திற்குத் திரும்பி வந்தேன். சுசீலா அவளிருந்த இடமிருந்து எழுந்தாள். இடது கையில் அவள் சாதாரணமாகக் கொண்டுவரும் ஒரு கறுப்புத் தோல் பையைக் கச்சிதமாக மார்பில் அணைத்துக் கொண்டு, வலது கையில் குடையை வைத்துக் கொண்டு என்னருகில் வந்து நின்றாள். நான் என்ன செய்கிறேன் என்பதை அறியாமலேயே எழுந்து நின்றேன். அவள் முகம் புன்னகையில் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. சிரித்துக்கொண்டே, “ஏன் எழுந்து நிற்கிறீர்கள்?" என்று கேட்டுவிட்டு, அவள் பையைத் திறந்து வில்லியம் கார்லாஸ் வில்லியம்ஸ் எழுதிய பேட்டர்ஸன் என்ற புத்தகத்தின் ஒரு மலிவுப் பதிப்பை எடுத்தாள். நான் அதை வெகு நாட்கள் படிக்க வேண்டுமென்று ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த புத்தகம். அவள் என்னிடம் “இதைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள். நான் என்ன பதில் சொல்வது என்று குழம்பிக்கொண்டிருக்கையில் “இது ஸ்டேட்ஸி லிருந்து ஒரு சிநேகிதி எனக்கு அனுப்பியிருக்கிறாள். நீங்கள் வேண்டுமென்றால் இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். நான் மீண்டும் என்ன சொன்னேன் என்ற போதமே இல்லாமல் “நான் படித்த புத்தகம்தான்” என்றேன். அவள் புத்தகத்தை மறுபடியும் பைக்குள் வைத்துக்கொண்டு போய்விட்டாள். 
அவள் கொடுத்த புத்தகத்தை நான் ஏன் நிராகரித்தேன். 
ஒரு வேளை நிராகரித்து இருக்கக் கூடாதோ? அவள் ஏன் எனக்கு அந்தப் புத்தகத்தைத் தர முன் வரவேண்டும்? 
சச்சிதானந்தம் பிள்ளை ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது. 'கலைஞர்கள் எல்லோரும்' கறுப்புத் தின்பவர்களைப் போல்தான். அவர்களுக்குப் பிறரை அறிய முடிகிறது என்பது கூட அவர்களது, அவர்கள் தங்களைப் பிறராகப் பாவித்துக் கொண்டு அந்தப் பாவனையை ஒரு பிரமை என்ற அளவுக்குச் செய்து விடுகிறார்கள். ஆனால் இதில் ஏதோ ஒரு வீதம் தாத்பரியம்தான் இருக்கலாம் என்றாலும் வீதம்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அதனால்தான் கலைஞர்களாக நாம் கணக்குப் பண்ணுகிறவர்கள் எல்லோருமே நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதமானம் மனோவியாதிக்காரர்கள்" சுசீலா எனக்கு ஏன் ஒரு புத்தகத்தைத் தர வேண்டும் என்ற கேள்வியை விட நான் படிக்காத, ஆனால் வெகு நாட்களாக ஆவலுடன் படிக்கக் காத்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் படித்து விட்டதாக ஏன் அவளிடம் பொய் சொல்ல வேண்டும்? எனக்கு இந்தக் கட்டத்தைத் தாண்ட முடியாதபடி மனங் குழம்பியது. ஸைக்கிளை உருட்டிக்கொண்டே சென்றேன். யாரோ என்னைக் கூப்பிட்ட மாதிரி ஒரு உணர்ச்சி “நவீனா?" ஆனால் ஒருவரும் இல்லை என்பது நிதரிசனமாகவே தெரிந்தது; வெற்றிலை பாக்குக் கடையில் நின்று வெற்றிலை போட்டுக் கொண்டேன். புகையிலை புளித்ததோ என்று ஒரு தடுமாற்றம். துப்பிவிட்டு வாயைக் கழுவி விட்டு உடனேயே மீண்டும் வெற்றிலை போட்டுக் கொண்டேன். அப்படியானால் 400 பக்கம் எழுத வேண்டியதை எப்படி எழுதி முடிக்கிறது? வீட்டிற்கு வந்தாகிவிட்டது. கடிகாரத்தில் முள் 10 இல் நின்றது. வழக்கம் போல் தூக்கம் வரவில்லை ; 11க்கு நகர்ந்து கொண்டிருந்தது. வெற்றிலை இரண்டு தடவை போட்டாகி விட்டது, மறுபடியும்? பயம். மணி 12. ஸிமினான் நாவல். ஒன்று முடித்தாகிவிட்டது. இலக்கியமா, இல்லையா என்ற பிரச்னையே சில புத்தகங்களைப் பற்றிக் கிடையாது. அப்படித்தான். ராமச்சந்திரன் க.நா,, சுப்பரமண்யம் க.நா., விருத்தாசலம் சொ., செல்லப்பா சி.சு., பிச்சமூர்த்தி ந. இதெல்லாம் என்ன? க.நா. ரா. ஸிமினானைப் பற்றி; இந்தப் பிரெஞ்சுக்காரர்களுக்கு வேறு எதுவும் தெரிகிறதோ இல்லையோ எழுத்தில் காரியபூர்வமான தொழில் திறமை இருக்கிறது. அதனால்தான் ஸிமினானைக் கீழே வைக்க முடியாமல் படிக்க முடிகிறது. ஒருமுறை அவள் யாருடனோ பேசிக் கொண்டிருந்தபொழுது அவள் இடது கையைப் பார்க்க நேர்ந்தது. தோள் மீது கண் சஞ்சாரம் செய்தது. ஒரு காலணா அளவுக்கு அம்மை குத்தின வடு தெரிந்தது. அதைப் பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. ஏன்? இந்த நாவலில் கூட இவளைப் பற்றி எழுதும் கட்டத்தில் ஒரு அனுபவம். நோட்புக்கில்தான் எழுதுகிறேன். தினம் உபயோகிப்பது சந்தன ஸோப். மைசூர் ஸான்டல்வுட், ராஜாராவ் நவாப் மாதிரி இருக்கிறார். அவர் நாவலில் வேதாந்தத்தை வடித்து எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இருக்கலாம். ஸோப் கூட்டைத் திறக்கிறேன், ஸோப்பைச் சுற்றி வைத்திருந்த வெங்காயத் தோல் போன்ற காகிதத்தை - அது வாசனை கமழ்கிறது - இந்த நோட்புக்கில் வைக்கிறேன். இது ஒரு பழக்கமாகிவிட்டது. சுசீலாவைப் பற்றி எழுதும் ஒவ்வொரு எழுத்தும் மணம் கமழ வேண்டும் என்று மனதின் துர்லபம் ஏன் இப்படி? யார் இந்தச் சுசீலா? ஏன் இவளைச் சுற்றி இப்படி மனம் வலம் வருகிறது? அவலான் எழுதிய ஸர்ப்பத்தின் வீர்யம். ஆங்கிலத்தில் The Serpent Power. வார்த்தைகள் வெருட்டுகின்றன. சீறிப் பாய்கின்ற ன. "Some Yogis can make both the penis and testes disappear in the public arch, so that the body has the appearance of that of a woman” (p. 239), 
ஆமாம். இராமகிருஷ்ணர்கூட ஒரு காலக்கட்டத்தில் தன்னைப் பெண்ணாகப் பாவித்துப் பெண்போல் ஆடை அணிந்து கொண்டு நடை உடை பாவனையில் கூடப் பெண் போல் பழகினார் என்று சொல்கிறார்கள். அண்மையில் ஒரு கவிதையிலிருந்து சில வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. 

நாசத்திற்கு வழிகாட்டும்
ஈசான மூலையில்
குடியிருக்கும் காளியைக்
கண்டு மையலுற்றேன்.
மீள்வதற்கு வழியுண்டோ ?

விவேக சூடாமணி (?) எழுதிய சங்கரர்கூட 'சௌந்தரிய லஹரி'யை எழுதவில்லையா? சுசீலாவைப் பற்றி எழுதத் தொடங்கியவன் ஏன் இதையெல்லாம் எழுதவேண்டும்? பின்? என்னைப் பற்றியவரை சுசீலா ஒரு பிரத்யட்ச அனுபவம். ஆனால் இப்படி எழுதும் அதே சந்தர்ப்பத்தில் அவள் என்னைப் பொறுத்த வரையில் ஒரு சுவப்னாவஸ்தைதானே? அவள் விஷயத்தில் கனவு - நினைவு என்ற நிலைகள் ஒன்றிலொன்று ஐக்கியப்பட்டு கனவு எது? நினைவு எது? என்ற அவஸ்தையில் கொண்டு விடுகிறது. இதற்கு விடுதலையே கிடையாதோ? எவ்வளவு நாட்கள் எவ்வளவு நேரம் மனம் விட்டு இது விஷயமாகச் சிவனுடன் பேசியிருக்கிறேன். இந்தக் காரியத்தில் சிவன் பேச்சு ஒரே ரீதியில்தான் இறங்கியது. 
“இன்று சுசீலா எப்படி இருக்கிறாள்?"
“என்ன! நீ கூட இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாய்?"
“ஏன்?" 
“உனக்குத்தான் இந்த ஆண்-பெண் விவகாரம் எல்லாம் பிடிக்காதே!" 
“இல்லை. எல்லாமே அப்படித்தான்.''
“அப்படியென்றால்?"
“கைக்கெட்டாததின் கவர்ச்சி.''
“உனக்கென்ன தெரியும்?" 
“சுசீலாவைப் பற்றிய வரை தெரியும் - தெரியாது என்ற பாகுபாட்டையே நான் அடையவில்லை. 
“இதெல்லாம் வார்த்தைகள் "
“பின் நீ என்னதான் சொல்கிறாய்?"
“சுசீலா பெண்தானே?"
“ஆம்” |
“நீ ஆண்தானே!" 
“அப்படித்தான் தோன்றுகிறது!"
சிவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “ஏன் தோன்றுகிறது என்று சொல்கிறாய். அவள் பெண், நீ ஆண், இதுதான் விஷயம்." 
"அதாவது?"
 “பிரகிருதியின் சூழ்ச்சி .'' 
"உனக்குத் தெரியுமா சச்சிதானந்தம் பிள்ளை இது விஷயமாக நான் பேசும்பொழுது என்ன சொல்வாரென்று? 
“மறுபடியும் ஆரம்பித்துவிட்டாயா, அந்தச் சித்தாந்த சாமியின் பேச்சை. அவர்களைப் போன்றவர்களால்தான் இந்த நாடே மலினமடைந்துவிட்டது." 
“இருக்கலாம். நான் சுசீலாவின் பேச்சை எடுக்கும் பொழுதெல்லாம் அவர், 
“எப்பாலுக்கும் அப்பாலாய்
விளங்கும் சுத்தா!
உன்னை நான் காண்பதும் 
எந்நாளோ"
என்று பாட ஆரம்பித்து விடுவார். 
"அவர் அப்படித்தான் சொல்வார். மனிதன் மனிதனாக வாழ விரும்பச் செய்யும் முயற்சிகளையெல்லாம் அழித்து விட்டு மயான தாண்டவம் புரிய வேண்டும் என்பது அவர் வாதம். ஆனால் உனக்குத் தெரிந்திருக்குமே. நீதான் வர்ஜினியா வுல்ஃபின் நாவல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாயே.'' 
“என்ன ?” 
“இந்த வாதத்திற்கு எதிர்நேர் கலைஞன். கலைஞனும் சிருஷ்டி விஷயத்தில் ஈடுபடுகையில் பால் வேற்றுமையிலிருந்து அகன்று நிற்கிறான். அப்பொழுது அவன் ஆணானாலும் சரி, பெண் ஆனாலும்சரி அர்த்த நாரீசுவர வடிவவைப் பெறுகிறான். கலைக்குப் பொருந்துவதுதான் வாழ்க்கைக்குப் பொருந்தும். தான் இழந்த தன் பாதியைத்தான் இங்கு பிறந்த துவேஷத்தால் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.'' 
"எந்தப் பாதியும் எந்தப் பாதியுடனும் சேருமா?"
"ஏன்?" 
“புரியவில்லை ." |
 "ஆணும் - பெண்ணும் மாறுபட்ட சக்திகள் தானே?”
“இல்லை , வேறுபட்ட” 
"அந்த வேறுபாட்டிலும் ஒரு மாறுபாடு உண்டு. நீ சொல்வது போலவே இருந்தாலும் நடைமுறையில் நாம் காண்பது எந்தப் பாதியும் எந்தப் பாதியுடனும் சேருமா என்பதுதான் விஷயம்.'' 
“எங்கும்?" 
“எங்கும். மேலும் உனக்கு இருக்கும் கவர்ச்சி உன்னிடம் சுசீலாவுக்கு இல்லைதானே?" 
“இல்லைதான்" 
''அப்படியானால் அவளை அடைவதற்கு நமது முன்னோர் வகுத்தபடி பைசாச மார்க்கந்தானே உகந்தது?" 
“மன்னித்துக்கொள். உன் தாம்பத்ய வாழ்க்கையும் பைசாச சகவாசம்தானே?" 
“எனக்கு அவளால் இன்பம் கிடைக்கவில்லை என்று என்னால் சொல்ல முடியாது.” 
“இன்பம், இன்பம், இன்பம்! யாருக்கு அது வேண்டும்?”
 “உன்னுடன் இனிமேல் எனக்குப் பேசத் தெரியாது.'' 
அவன் பஸ் வந்ததும் ஏறிப் போய்விட்டான். தெருவிளக்குகள் திடீரென்று அணைந்துவிட்டன. நிர்ஜனமான ஒரு சந்து. ஸைக்கிளை உருட்டிக்கொண்டே சென்றேன். ஒரு ஒதுக்கமான மறைவிடம். இது யார்?... இந்த நிசியில்? வெட்டவெளி...மனதின் திகம்பரப் பரப்பு.... நல்ல உடல்கட்டு. . .இந்தச் சதையின் நிர்ப்பந்தத்தைப் போல் . . . அவளுடைய அலட்சியமான புன்னகையிலும் ஏதோ ஒரு கவர்ச்சி ... பேர் தெரியாது, ஊர் தெரியாது. . . ஆதி பராசக்தி.... அந்தகாரத்தின் பிரவாகம். அவளுடைய அலக்ஷ்யம்... என்னுடைய தடுமாற்றத்தைக் கண்டு உரக்கச் சிரிக்கிறாள்... அதாவது என்னிடம் தருவதற்கு நிறைய இருக்கிறது.. வேண்டுமானால் எடுத்துக் கொள் என்று சொல்வது மாதிரி, அவள் விரல்கள்..? அவள் கண்களில்...? ஆசையின் குரூரம். . மனம் வெறுமையாக.. நான் மறுபடியும். ஸைக்கிளை எடுத்துக் கொண்டு. . . அவள் ஒன்றும் சொல்லவில்லை. . . என்னைத் தடுக்கவும் இல்லை ... அந்த ஆசையின் குரூரத்தில் கூட அவள் கை என் சட்டைப்பையைத் துழாவவில்லை. ஸைக்கிளில் ஏறி மிதிக்கின்றேன்... திரும்பிப் பார்த்தபொழுது அந்த இருட்டிலும் அவள் தன் ஆடையைத் திருத்திக் கொண்டு, தலைக் கூந்தலை வாரி முடித்துக் கொண்டு, நான் செல்லும் எதிர்த்திசையில் சென்று மறைவதைக் காண்கிறேன். . . அடுத்த தெருவில் புகுந்ததும் விளக்குகள் குபீரென்று எரிகின்றன... அப்படியானால் சிவன் சொன்னது சரிதானா? அன்று அப்படி முடிந்தது. ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கும்பொழுது என்னில் ஒன்று பரவச நலை அடைகிறது. அவளைக் கண்டால் பயம்; கம்பனைப் படித்திருக்கின்றேன். அவளை யார் என்று நினைக்கிறாய்? கற்பின் கனலி. நிருதர் குலத்தை வேரறுக்க வந்த விஷம். ஆனால் சுசிலாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே. பாரதி ஞாபகம் வருகிறது. 'சேரநாட்டு நங்கையருடன்' என்றான். இப்பொழுது அவள் எங்கிருப்பாள்? யாருடன் பேசிக் கொண்டிருப்பாள்? வாசலில் நிழல் தட்டுகிறது. தம்பி முகம் வெளுத்து வருகிறான். ராத்திரி 11 மணி. ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. என் சகோதரி, “நவீனா போ; என் கைக் குழந்தையை விட்டுவிட்டு வரமுடியாது. அவன் மனைவி வீட்டிலிருந்து வந்த ஆட்கள் அங்கிருப்பார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தள்ளாத வயது. காலையில் வந்துவிடலாம்.'' அவளுக்கு என்னைத் தெரியும். மனதில் மாத்திரம் உறவு இருந்தால் போதாது, செயலிலும் செய்கையிலும் சைகையிலும், அது வெளிப்பட வேண்டும்; ஒரு ஜமக்காளத்தையும் தலை அணையையும் சைக்கிள் பின்னால் வைத்துக் கட்டுகிறேன்; ஒரு பொதி; வெற்றிலைப் பாக்குப் புகையிலைப் பொதி; ஸிகரெட் Malcom Lowry-யின், Lunar Caustic எவ்வளவு வேண்டியிருக்கிறது. மனதைச் சமனப்படுத்த என் சகோதரி “போ, நவீனா, போ” என்றதும் நான் ஏன் சுசீலாவைப் பற்றி அந்தச் சாட்சாத் சந்தர்ப்பத்தில் நினைக்க வேண்டும், ஏன்? ஏன்? ஏன்?
இராத்திரி முழுவதும் அந்த நர்ஸிங் ஹோமில் இருந்தேன். நடுவில் நானும் தம்பியும் 12 மணி, 2 மணி என்று விட்டுவிட்டுத் தெருவில் டீக்கடையில் சென்று டீ குடித்தோம். என் தம்பியின் மாமியார் தன் பிள்ளைக்குப் போர்வை கொண்டு கொடுத்தார்கள். அறையில் குழந்தைக்கு ஆக்ஸிஜன் கொடுத்தார்கள். கடிகாரத்தில் முள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மால்கம் லௌரியின் புஸ்தகத்தை எடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். இரண்டு மூன்று தடவை படித்தது தான். ஆனால் இப்பொழுது ஒரு பக்கம்கூட நகரவில்லை. காலையில் வெள்ளி முளைத்ததும் பல்லைத் துலக்கக் காத்துக் கொண்டிருக்கையில் மறுபடியும் அந்த அம்மாள் அங்கு வந்தாள். வீட்டு ஞாபகமாகக் கையை நீட்டினேன். அந்த அம்மாள் தன் கையிலிருந்து பல்பொடி பொட்டலத்தை என்னை எடுத்துக் கொள்ளச் சொன்னாள். எடுத்துக் கொண்டேன். ஹோட்டலில் சென்று ஒரு கப் காபி குடித்துவிட்டு ஜமக்காளத்தையும் லௌரியையும் ஸைக்கிளின் பின் ஸீட்டில் கட்டிவிட்டு தம்பியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். குழந்தைக்கு மறுபடியும் ஆக்ஸிஜன் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தெருவும் நிர்ஜனமாக இருந்தது. வீடு சேர்ந்ததும் வாசலில் டாக்ஸி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். 
உள்ளே சென்றதும் சகோதரி தந்த காபியை மறுபடியும் குடித்தேன். ஸைக்கிள் பின் ஸீட்டிலிருந்த ஜமக்காளத்தை எடுத்து அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு லௌரியை மேஜைமீது வைத்தேன். அதன் பச்சை அட்டையைப் பார்த்துக் கொண்டே நின்றேன். சகோதரியின் குரல் என் சிந்தனை மௌனத்தைக் குலைத்தது. 
“குழந்தைக்கு எப்படியிருக்கிறது?"
“ஆக்ஸிஜன் கொடுக்கிறார்கள்.'' 
அப்பா ஆஸ்பத்திரிக்குப் போகத் தயாரானார். 
அம்மா கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தாள். அப்பாவிடம் “நான் வரவேண்டுமா?” என்று கேட்டாள். சகோதரி, “அம்மா நீயும் போய்விட்டு வந்துவிடு” என்றாள். 
அவர்கள் போகக் கார் திரும்பி வந்தது. சகோதரியின் குழந்தை அழுதது. அவள் அதற்குப் பால் கொடுக்க ஃபீடிங் பாட்டிலில் பால் விட்டுக் கொண்டிருந்தாள். பாலை விட்ட பிறகு குழந்தைக்குப் பாலை கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் திரும்பி வந்தார்கள். மறுபடியும் சகோதரி கேட்டாள் “எப்படி இருக்கிறது?" அப்பா “ஒன்றும் சொல்வதற்கில்லை" என்றார். அம்மா தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள். சகோதரி ஒருடம்ளர் ஹார்லிக்ஸைக் கொடுத்து “அம்மா இதைக் குடி” என்றாள். அவள் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. மத்தியானம் 3 மணிக்குத் தம்பி வந்ததும் அவன் சொல்லாமலேயே எங்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. 

அப்பா மாத்திரம் மயானத்திற்குத் தம்பியுடன் போனார். அவர் போகும்பொழுது சகோதரி ஒரு டவலை அவரிடம் கொடுத்துவிட்டு "அப்பா இதுவும் இருக்கட்டும்” என்றாள். 
அப்பா அதை வாங்கிக் கொண்டு போனார். அடுத்த நாள் என் தம்பி ஆபீஸிற்குப் போகவில்லை. நடந்ததை நினைத்து நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தான். அவன் மனைவி கட்டிலில் அசையாமல் ஒன்றும் பேசாமல் படுத்துக் கொண்டிருந்தாள். அடுத்த நாளும் அவன் ஆபீசுக்குப் போகவில்லை. அன்றுதான் அவன் ஒரு மாதம் லீவ் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அன்று அம்மா ஏதோ நினைத்துக் கொண்டே மாதிரி என்னிடம் “நீயும் கல்யாணம் பண்ணிக் கொண்டால் இப்படித்தான் இருப்பாயா?" என்றாள். 
என் சகோதரி: “அம்மா பேசாமல் இரு” என்றாள். “சரசு, நீ பேசாமல் இரு. நவீனா, அந்த அம்மாள் (என் சகோதரனின் மாமியாரைத்தான் சொன்னாள்) கல்யாணம் ஆகி அவள் சீமந்தத்தின் பொழுது சொன்னாளாம் - பிள்ளை கொடுத்தவன் தான் பேற்றுச் செலவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று. இப்பொழுது கருமாதிச் செலவும் வந்து சேர்ந்தது.'' 
நான் ஒன்றும் சொல்லவில்லை. என் சகோதரி : “அம்மா ராத்திரிக்கு என்ன சமையல்?" 
அம்மா அதற்கு “ஏதோ சமைக்கிறது சாப்பிடுவது என்று உண்டா இந்த வீட்டில். அவருக்குக் குழம்பில் கடுகு அதிகம் இல்லாவிட்டால் கோபம் வருகிறது. இவனுக்கென்றால் ஒரு கடுகு கூட கண்ணில் படக்கூடாது. எவ்வளவோ அம்மா நீ பார்த்துச் செய்தால் சரிதான்” என்று சொல்லவும் என் சகோதரி அங்கிருந்து சென்றுவிட்டாள். 
கடுகு விஷயத்தில் கூட அபிப்பிராயபேதம், நானும் என் அறைக்குச் சென்றுவிட்டேன். சற்று நேரங்கழித்து வாசலில் ஸைக்கிள் மணி சத்தம் கேட்டது. தபால்காரன் தங்கப்பன் ஒரு புக்போஸ்டைக் கொடுத்தான். 
ஏதோ ஒரு திருமண அழைப்பு. பார்த்ததும் என் அசிரத்தை மறைந்துவிட்டது. 
அன்று மாலை “அம்மா நான் நாகர்கோவிலுக்குப் போய்விட்டு வருகிறேன் - இரண்டு வாரம் ஆகலாம்” என்றேன். 
“ஆமாம் போய்விட்டு வா. எப்பொழுதும் என்ன ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது” என்றாள். 
அது அவள் சுபாவம். அப்பாவுக்கு நான் ஏன் இப்படி திடீரென்று போகிறேன் என்று கேட்க ஆவல். ஆனால் அம்மா இப்படிச் சொன்னதும் கேட்கவில்லை. சகோதரி “போய்விட்டு வந்து சொல்” என்றாள். நாகர்கோவிலில் சிநேகிதர்கள் கண்ணில் படாமல் ஒரு தனி அறையில் ஒரு ஹோட்டலில் தங்கினேன். 
ஒன்றும் செய்யவுமில்லை. இரண்டு நாள் கழித்துத் திரும்பிவிட்டேன். 
“வந்தபின் சொல்” என்ற என் சகோதரியும் ஒன்றும் கேட்கவில்லை; நானும் ஒன்றும் சொல்லவில்லை. 
நான் இரண்டு நாளில் திரும்பி வந்த காரணமும் எனக்குப் புரிந்துவிட்டது. நேராகக் கரண்ட் புக் ஹௌசுக்குச் சென்று 'ராஜமல்லிகை' என்ற கதைத்தொகுப்பையும் (அதில் ‘தகர்ந்த கனவு' என்ற கதை என் மனதைக் கவர்ந்த து.) W.B.Yeatsஇன் ஒரு கவிதைத் தொகுப்பையும் வாங்கிக் கொண்டு அந்த ரிஸப்ஷனுக்குச் சென்றேன். முதலில் அவளைக் காணவில்லை பிறகு அவள் வந்ததும் அவளைப் பார்த்தேன். குருவாயூரில் கல்யாணம் நடந்தது என்று கேள்விப்பட்டேன். வாடின புஷ்பம் மாதிரி இருந்தாள். மிகவும் சோர்வாக இருந்தாள். நான் வாங்கிவந்த புஸ்தகங்களைக் கொடுத்தேன். அதில்கூட “சுசீலாவுக்கு நவீனனிடமிருந்து” என்று ஒரு காகிதத்துண்டில் எழுதி அதை ஒவ்வொரு புஸ்தகத்திலும் பின் பண்ணி வைத்திருந்தேன். ஒருவிதமான பயம். அவள் என்னிடம், ‘காப்பி சாப்பிவிட்டுப் போகலாம்' என்றாள். 
நான் : “உன் கணவரைப் பார்க்கலாமோ” என்று கேட்டேன். 
“இருங்கள். அழைத்துவருகிறேன்.” என்றாள். பிறகு 10 நிமிஷம் கழித்து “காணவில்லை சிநேகிதர் யாருடனோ வெளியில் போயிருப்பதாகத் தெரிகிறது. வருகிற ஞாயிற்றுக் கிழமை நாங்கள் இருவரும் உங்களை வீட்டில் வந்து பார்க்கிறோம்" என்றாள். ஞாயிற்றுக்கிழமை அவள் வரவில்லை ; நானும் “ஏன் வரவில்லை?” என்று கேட்கவும் இல்லை. 
வீட்டில் தனிமையாக இருக்கவே விரும்பினேன். மனிதனுக்கு நினைவுகள் இருக்கிற வரையில் அவன் எப்பொழுதும் தனி மனிதனாகிவிடுகிறான். வீட்டில் தனி அறையும் கிடையாது சகோதரி மாத்திரம் எப்பொழுதாவது அறையில் வந்து என்னைப் பார்த்துவிட்டுக் கேட்க வரும் பாவனையில் கேட்காமலேயே போய்விடுவாள். அவளுக்குச் சுசீலாவைப் பற்றித் தெரியும். அம்மா ஒரு முறை என்னிடம் “ஏண்டா ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று கேட்டுவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டாள். அப்பா ஒன்றிலும் ஈடுபடாமலே இருந்து விட்டார் . அவர் மாதிரி மாத்திரம் இருக்க முடியுமானால்? 
மனம் அவளைச் சுற்றி வட்டமிட்டது. குருவாயூரில்தான் அவள் கல்யாணம் நடந்தது. அதில்கூட எனக்கு பொருத்தம் இருந்ததாகத் தெரிந்தது. அவளை அந்த ரிசப்ஷனில் பார்த்ததும், அவளுடைய சோர்வுள்ள முகம், பறித்த புஷ்பம் மாதிரி தோன்றியது. அவள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பாள்? அவனுடன் பேசிக் கொண்டிருக்கலாம். அவனை ஒரு முறை பார்க்கக்கூட முடியவில்லை. சாத்தன் விபூதியைத் துலாம்பரமாகப் பூசிக்கொண்டு, "பைலார்க்கஸ், பைலார்க்கஸ், பைத்தியக்காரன்," என்று சொன்னான். ஆனால் பைலார்க்கஸைப் போலப் பைத்தியக்காரனாக இருப்பது சாத்தனைப் போல் விபூதி பூசிக் கொள்வதைவிட எவ்வளவோ மேல், ஒன்றுமே ஓடவில்லை. சில கசப்புகள் அடியோடு மாறாது என்றுதான் தோன்றியது. “என்ன பைத்தியக்காரத்தனம்" என்று சொல்லிக்கொண்டு ஷெஃபிலிருந்து ஒரு புஸ்தகத்தை ஹெமிங்வேயின் “மூவபில் ஃபீஸ்ட்” டை எடுத்துப் புரட்டினேன். அவன் எழுதியிருந்த ஆரம்பக் குறிப்பு என் மனதைக் கவர்ந்தது, கௌமாரதசையில் பாரிஸில் இருக்கும்படியாக அதிர்ஷ்டம் படைத்தவனாயிருந்தாயானால் பின்னால் நீ எங்கு போனாலும் அது உன்னை விட்டு அகலாது; உன்னிடமேயே ஒட்டிக்கொண்டு விடுகிறது; ஏனென்றால் “பாரிஸில் உன் உடன் வரும் ஒரு விருந்து." “For Paris is a Movable feast” என்ப தை என் மனம் முணுமுணுத்த வண்ணமே இருந்தது. இதை என்னவென்று சொல்வது - இன்பம் என்று சொன்னால் போதுமா? 
சுசீலா ?
உனக்கு என்ன தெரியும்? 
நீ இருக்கும் இடம் பார்க்காமல், உன்னைப் பற்றிக் கூட நினைக்காமல், கண் சலிக்க, வாய் குவிய, மனம் வியக்க, நீ இருக்கும் அதே இடத்தில் நானும் இருக்கிறேன் என்ற ஒரு உப போதமே என்னை உன்மத்தமாக எவ்வளவு நிமிஷங்கள் யுகாந்திர காலமாக கற்பூரம் கரைவதைப்போல நான் இருந்திருக்கிறேன். ஆனா காலந்தான் கற்பாந்தத் தத்வத்தையும் சிறைப்படுத்தி விடுகிறது 
ஒரு தும்மல்.
யாரோ சொன்ன ஞாபகம். 
அடுக்களையில் சென்று ஒரு கற்பூரத்தைக் கைக் குட்டையில் முடிச்சாக்கி அதை முகர்ந்து கொண்டிருந்தேன். 
இந்த வேதனை கலந்த இன்பம்? எதன் பொருட்டு? சுசீலா ஏன் என்னை இப்படி வதைக்கிறாள்? “நெருநல் செருப்பறை கேட்டு" என்ற பாட்டுத்தான் ஞாபகம் வந்தது. இருந்தாலும் அவளுக்கு 30 வயதிற்கு மேல் இருக்காது. ஆனால் என்ன நினைத்து என்ன பயன்? 
இதன் பிறகு அவளை விட்டுப் பிரிய ஒரு சந்தர்ப்பம் தனியாகவே வந்து சேர்ந்தது. ராமநாதன் என்னை வலுக் கட்டாயமாக கல்கத்தாவில் நடந்த எழுத்தாளர் மகாநாட்டிற்கு கூட்டிப்போனார். நானும் சந்தோஷமாகவே போனேன். எனக்கு இங்கிருந்து எங்கேயாவது போய்விட்டால் போதுமென்று தோன்றியது. ஒரு புது சூழ்நிலையில் கொஞ்ச நாட்கள் இருக்க வேண்டுமென்று ஒரு ஆவல். 
கல்கத்தாவில் என் சகோதரன் வீட்டில் தங்கியிருந்தேன் - அவன் இருந்தது - சமூகத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவன் என்பதால் ஒரு ஃப்ளாட்டில் - குளிப்பதற்குத் தொட்டி, மேலும் கீழும் எலெட்டிரிக் விளக்குகள், ஐஸ் பெட்டி பட்லர், அறைக்கு அறை மின்சார விசிறிகள், இப்படி, இப்படி அடிக்கடி பெண்கள் போன்ற ஆண்களும், ஆண்கள் போன்ற பெண்களும் வருவார்கள். ஃபோன் அடிக்கொரு தடவை சப்தித்துக் கொண்டிருக்கும், நான் புஸ்தகக்கடைதோறும் 
ராமநாதனுடன் சுற்றிக்கொண்டிருக்காவிட்டால் வீட்டில், கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பேன். அது என் சகோதரனுக்குப் பிடிக்காது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேண்டிய ஊக்கம் என்னிடமில்லையென்பான். நான் எழுந்து ஒரு வெற்றிலை போட்டுவிட்டுத் துப்பிவிட்டு நின்று பார்த்தால் எதிர் வீட்டு புராதனமான கட்டிடம் தெரியும். சிதிலமாகிக்கொண்டிருந்தது. துளசி மாடம், குசினிக்காரர்கள். அங்கு வசித்திருந்த சட்டர்ஜி மகானுபாவரை - அவர் ஒரு பெரிய அரசாங்க உத்தியோகஸ்தர் என்றும் வெகு திறமைசாலி என்றும் தெரிய வந்தது. அவர் வீட்டில் பெண்களை நான் ஒரு முறைகூடப் பார்க்க முடியவில்லை. யாராவது வந்தால் சட்டர்ஜியைக் குனிந்து அவர் பாத தூஸியை நெற்றியில் தரிப்பதைப் பார்த்தேன். அந்தக் காட்சியைப்  பார்த்துக் கொண்டே நிற்பேன். சகோதரன் வந்து “நான் ஒரு பார்ட்டிக்குப் போகிறேன், நீ வரவில்லை இல்லையா?" என்பான். "இல்லை" என்று நான் திரும்பியே பார்க்காமலேயே பதில் அளிப்பேன். அப்பொழுதெல்லாம் எனக்கும் சுசீலா ஒரு நாளாவது நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ளாமல் இருக்கமாட்டாள் என்பது நினைவிற்கு வந்தது. இப்படித்தான் ஒவ்வொன்றும். நான்தானா அல்லது ஒரு சமயம் இல்லாவிட்டால் நாமெல்லாருமே புராதன மனிதர்கள் தானா, ஒரு சமயத்தில் இல்லாவிட்டால் இன்னொரு சமயத்தில்? எலியட்டின் கவிதை ஞாபகம் வந்தது. செத்த பிறகும் கதை முடியவில்லையா? 
இப்படியாகத்தான் ஒவ்வொன்றும் ராமநாதனுடன் 'கண்டக்டெட்டூரில்' தாகூர் வீடு பார்க்கச் சென்றேன். அங்கு அவர் கையெழுத்துப் பிரதிகளைப் படம் போட்டு வைத்திருந்தார்கள். அவர் அடித்துக் திருத்தியதுகூடக் கலைப் பாங்குடன் மிளிர்ந்ததைக் கூறியவுடன் ராமனாதன் இதிலிருந்து தான் அவர் சித்திரம் வரைய ஆரம்பித்தார் என்றார். மறுபடியும் சுசீலா ஞாபகம் வந்தது. இதைப் படிக்கும் உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்குமா என்பது எனக்குத் தெரியாது. அவள் ஆங்கிலத்தில் S என்ற பெயர் எழுதிக் கையெழுத்துப் போட்டாள், அதை பார்த்தால் அவளைப் பார்ப்பது போலவே இருக்கும் அதே ஒயில், சாயல், ராமனாதனிடம் இதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரும் சிவனைப்போல் “அவள் பெண் - நீ ஆண்'' என்று சொல்லிச் சிரித்திருப்பார். ஆனால் அவரே ஒருமுறை என்னிடம் சொன்னது ஞாபகம் வந்தது. (அவர் டான்டே பக்தர்) காதல் என்பதே கவிஞர்கள் பாஷையில் ஒரு ஐதிகம். 
மீண்டும் கேட்கிறேன் “வார்த்தைகளே நீங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?", மறுபடியும் ஒரு ஞாபகம். கடைசியாகப் பரமஹம்ஸர் இருந்த இடத்திற்குப் போனோம். தட்சிணேசுவரத்தைப் பார்த்தோம். அவர் தியானத்திலமர்ந்த மரத்தடியைப் பார்த்தோம். அவர் சயனக்கிருகத்திற்கு அழைத்துப் போனார்கள். இரண்டு படுக்கைகள் - ஒன்று அவரது, ஒன்று சாரதாமணியுடையது. என்றாலும் பரமஹம்ஸர் தன் தாரத்துடன் உடல் உறவு கொள்ள வில்லை என்று ஞாபகம் வந்ததும் எனக்கென்னவோ செய்தது. நல்ல குளிர்ச்சியான பச்சைத் தண்ணீரில் குளித்த மாதிரி, அதன் பிறகு நான் அதிகமாகப் பேசவில்லை. வீட்டில் சென்றதும் என் சகோதரன் கூப்பிட்டுக் கேட்டான். “ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. என்றுதான் யார்தான் ஒரேமாதிரி இருக்கிறார்கள்? 
அதன் பிறகு நான் மீண்டும் ஊர் திரும்பினேன். திரும்பியதும் ஒரு வாரம் வரை எனக்குச் சுசீலா ஞாபகமே வராதது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது முதல் தடவை இல்லை . இருந்தாற்போல் இருந்து எனக்கு அவள் ஞாபகமே வராது - பிறகு தொடர்ந்தாற்போல் பைத்தியம் பிடித்தாற்போல் அவள் நினைவின்றி வேறொன்றுமே என் போதத்தில் இருக்காது. ஏதோ ஒரு தொந்தம், பாசம் அல்லது சாபம் எதுவாயிருந்தால் என்ன? இதிலிருந்து எனக்கு விமோசனமே கிடையாது என்றுதான் தோன்றியது. 
நான் எழுதிக் கொண்டிருந்தேன். 
அம்மா ஒரு தூக்கம் போட்டுவிட்டு எழுந்து “என்னடா இன்னுமா தூங்காமல் இருக்கின்றாய்?” என்று கேட்டு விட்டு தூங்கப் போய்விட்டாள். 
அப்பா என்றும்போல் ஒன்றரை மணிக்கு வாசல் பக்கம் சென்றவர் திரும்பித் தன் அறைக்குப் போகும் முன் என் அறைக்கு வந்து கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “மணி ஒன்றரை ஆகிவிட்டது'' என்று சொல்லிவிட்டுப் போனார். 
நான் விடாமல் எழுதிக்கொண்டிருந்தேன். மனது சுசீலாவையே சுற்றிக்கொண்டிருந்தது.
பாயல் இரண்டு 
பரமஹம்ஸர் இருந்த இடத்தில்
பாயல் இரண்டு;
பரமஹம்ஸர் இல்லை ;
அவர் அருகில் அவள் இல்லை ;
அன்று போல் இன்றும்
நிழல்கள்;

“மௌனி' எழுதிய மாதிரி
எவற்றின் நடமாடும்
நிழல்கள் நாம்?

உண்மையின் குரூரங் கண்டு
மனம் மடங்க
வந்த வழி திரும்பி
நடு வீதியில் நடந்து 


"

No comments:

Post a Comment