தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, June 11, 2014

பிரக்ஞை வெளியில் - மௌனி, கபாடபுரம் - புதுமைப்பித்தன்

பிரக்ஞை வெளியில் - மௌனி

‘ அதோ பார் அந்தப் பெண்ணை ’ என்றான் சேகரன்.

‘ பெண்களை ...? ’ என்று திருத்தினான், அவனோடு கூடப்  போய்க்கொண்டிருந்த, அவன் நண்பன் கிட்டு  சிரித்துக்கொண்டே. இருவரும் மணற்பரப்பைக் கடந்து, சமுத்திரக்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே, மங்கும் மாலை ஒளியில் வசீகரத்தோற்றம் கொண்டு, அநேகர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அன்று கடற்கரையில் அதிக கூட்டமில்லை. கொஞ்சதூரத்தில் கடல் அலை மடியும் கரையின் சமீபமாக, மூன்று பெண்கள் அவர்கள் பக்கம் பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டே, தன் நண்பன் கிட்டுவுடன் பேசி நடந்துவந்த சேகரன்             ‘ எனக்கு பெண்களைப் பார்க்கும் வழக்கம் கிடையாது, அதோ அந்தப் பெண்ணைத்தான் சொல்லுகிறேன் ’ என்று மறுபடியும் சொன்னான். சேகரன், பார்வையில் குறிப்பிட்ட பெண்ணை கிட்டுவால், அம்மூவரில் யார் என்று தெரிந்து கொள்ளமுடியவில்லை. கிராம வாழ்க்கையில் அலுப்படைந்து அதைத் துடைத்துக்கொள்ள, பட்டணத்தில் சில நாட்கள் தங்கிப் போகலாமென்று வந்த சேகரன் பேச்சுகள், அவன் பாலிய சிநேகிதன் கிட்டுவால் கூட, சில சமயம் புரிந்து கொள்ளமுடியவில்லை. மற்றும் சமீப சில நாட்களாக சேகரன் போக்கும் ஒரு விதமாக கிட்டுவிற்குத் தோன்றியது.

‘ யாரைச் சொல்லுகிறாய் ...? வாயிலிருந்து தப்பி ஓடும் பற்களை, வெளியில் விடாது தடுத்து விழுங்குகிறவளையா ... பிச்சல மயிர் தலையிலிருந்து பறந்து போகாது இருக்க இரட்டைப் பின்னலாகத் தெரிவதையா ?’ எனச் சொல்லி  நிறுத்தினான் கிட்டு. பேச்சில் கேலி படர பேசினானே ஒழிய, இக்கற்பனைகள் அவர்களை ஆழந்து குறிக்கும் உவமைகளல்லாது ஏதோ மேலெழுந்த வாரியாக, பிறர் கேட்டுச் சிரிக்கவேண்டுமென்பதற்காகத் தான் இருந்தன. மேலும் மற்றுமொரு பெண்ணிடம் இவன் கற்பனைகள் ஓடவில்லையோ, அல்லது அந்த பட்டணச் சோதா மோஸ்தரில் கற்பனைகளைக் காண முடியவில்லையோ, எதினாலோ அவன் பேச்சு நின்றது.

‘ சரி கிட்டு நீ குறிப்பிட்ட பெண்களைக் கண்டு கொண்டுவிட்டேன். அவர்களைச் சொல்லவில்லை, நான் பார்க்கவுமில்லை.  அவர்கள் நடுவில் இருக்கிறாளே அவளைப் பார்த்ததும் உனக்குத் தோன்றுவதைச் சொல் ... பட்டண ரீதியில் முடியாவிட்டால். தமிழ்ப்பண்டிதர் பேச்சிலும் கொஞ்ச முயன்று பார் ..........’ என்றான் சேகரன்.

‘ அது முடியாதப்பா ... முடிகிறதா என்று பார்ப்பதற்கும் என்னால் முடியாது. நான் முறையாகத் தமிழ் படிக்க வில்லையே ’ என்றான் சேகரன்.

‘ இந்த வகையிலாவது நீ செய்தது ஒன்று சரி ... இல்லாவிட்டால், எழுத்தாலும் பேச்சாலும் பாயைப் பிராண்டிக்கொண்டிருப்பாய் ! .... நான் எதையோ சொல்லும்போது, நீ எதையோ பேசி என் எண்ணம் போகும் திசையை மாற்றிவிட்டாய். சரி, அது போகட்டும், அதோ அந்தப் பெண்ணைப் பார். உனக்கு என்ன தோன்றுகிறது, உன் உவமைகளும், பேச்சுக்களும் அவளிடம் எவ்வளவு பொருத்தம் காணுகிறது. பார்க்கலாம் ’ என்றான் சேகரன். அப் பெண்ணை  உச்சந்தலையிலிருந்து, கால் வரை தடவிய கிட்டுவின் பார்வையில் பட்டது ஒன்றுமில்லை. அவள் தோற்றம், அழகு, வசீகரம் எல்லாம் இவனை ஒரு பிரமிப்பில் ஆழ்த்தியது. அவள் சௌந்தரியம் எதில் அடங்கி, கேட்காது முணுமுணுக்கிறது என்மது தெரியவில்லை. மொத்தத்தில் பார்வையினின்றும் உதறமுடியாது நிற்கும், விடுவிக்க முடியாத ஒரு மௌன ஜீவப் புதிர் போன்று விளங்கினாள். பார்ப்பவர் மனது கொள்ளும் எந்தப் பாவனையையும் ஏற்று நிற்பவள் போன்று இருந்தாள். இவ்வளவு அழகி உலகிலிருக்க முடியுமோ என்று ஜடமாக பிரமித்துப் பார்த்து நின்றான் கிட்டு. அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி - அவனை உயிர்ப்பிக்க வேண்டிய நிமித்தம் போலும் - சேகரன் சொன்னான் ... இவளைப்போல் பார்த்ததில்லை என அவளைப் பார்த்து பிரமித்து ஜடமாக நிற்கிறாயே ... கற்பனைகளுக்கு இடமாக முடியுமோ எங்கேயோ எப்போதோ கண்டதொன்று, மனத்தடியில் மறந்தும் கிடக்கிறது. அதைத் தேடும் ஆர்வம் கண் விளிம்பில் ஒட்டிக் காத்திறுக்கிறது; இவளைப் பார்க்குங்கால் கண்களில், முகத்தில் பரவி, ‘ இதுதான் ’ .. எனக் களி கொள்ளுகிறது .. எந்த அதிசயமும், பிரமிப்பின்றி ஆனந்தமெனப்படுவது இவ்வகையில்தான் .. எனக்கு புரியும்படி சொல்ல வரவில்லை. அவகாசமும் அவசரப்படுகிறது ’ ... எனப் பேசிய சேகரன், சிறிது மௌனமானான். அவளை ஒரு தரம் பார்த்துவிட்டு... ‘ இவ்வகையில் அவளைப் பார்ப்பதில்தான், அவள் கற்பனை ஊற்றென உன் ஒவ்வொரு ஜீவ நாடியிலும் துடிப்பில் பரவுவாள் ... ‘ எனச் சொல்லி நிறுத்தினான்.

‘ சேகரா, உன் மூளை வன்மையும், உணர்வு வேகமும் எனக்குத் தெரியும், கற்பனைகளில் நீ உணர்ச்சி வசமாவது, உன்னை எங்கு கொண்டு செலுத்துமோ தெரியவில்லை எனக்கு ..  ’ என்று கிட்டு கொஞ்சம் வருத்தம் கலந்த குரலில் சொன்னான்.

‘ கிட்டு, நீ சொல்லுவது ஒரு வகையில் சரியெனப்படுகிறது .. சமீப காலமாக, எனக்கு ஒன்றுமே புரிவதில்லை .... சுசீலாவைத்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே, அவளை மனைவியாக அடைந்தது என் பாக்கியமென்றாலும் தவறியே இவ்வுலகில் பிறந்த அவள், என்னை அடைந்ததும் அவளுக்கு ஒருவித  பாக்கியம்தான். அவளை நான் இப்போது பார்க்கும்போது, என்னென்னவோ தோன்றுகிறது .... மனைவியை கணவன் பார்ப்பதில் என்னென்னவோ எல்லையற்று தோன்றவிருக்கிறது. சிறிது காலமாக, என் பிரியம் அவளிடம் அளவு கடந்துவிடுகிறது ... உடனே மனது ஒரு பயம் அடைகிறது... பயம் என்று சொல்வது சரியல்ல. மனதில் ஒரு விநோத பயங்கரம் காணுகிறது. அந்த பயங்கரத்தில், ஒரு வசீகரமும் காண முடிகிறது போலும். கிட்டவும் இழுக்கிறது, எட்டவும் துரத்துகிறது. இது, இப்போது என் மனைவி சுசீலா செய்கிற வேலை...குடும்பக்காரியங்களில் எனக்கு அடிக்கடி அலுப்பும் சலிப்பும் தோன்றுகிறது. இங்கு வந்து சில நாள் தங்கிச் செல்வதில் மனது கொஞ்சம் லேசாகும்  என எண்ணித்தான் இங்கு வந்தது...இங்கேயும் பெண்ணைப் பார்க்கும்போது அவளைக் காணும் தோற்றம் கொள்ளுகிறேன்...’ ஒரு வேகத்தில் பத்து தப்படி நடக்குமுன் இவ்வளவையும் பேசிவிட்டான். ஆனால்  அதற்கடியிலும் ஒரு நிதானம் தெரிந்தது. சிரித்துக்கொண்டே கிட்டுவைப் பார்த்து, ‘ ஏதோ உளறுகிறேன்-நீ ஒன்றும் நினைத்துக்கொள்ளாதே ... அதோ நடுவில் உட்கார்ந்து இருக்கிறாளே, அவளைத் தான் சொன்னேன். சமீப காலமாக சுசீலாவைப் பார்த்தால் எனக்கு என்னவோ தோன்றுகிறது என்று சொன்னேனே. அதுதான் இவளைப் பார்க்கும்போது கொஞ்சம் தெளிவடைவதுபோல தெரிகிறது. என்ன  என்பதுதான் புத்திக்கு புலப்படவில்லை. அதைத்தான் உன்னிடம் சொன்னேன். உனக்கும் நன்றாகப் புரிந்து இருக்கும் ! ... உன்னிடமில்லாமல் வேறு யாரிடமாவது சொன்னால் தவறாகவும், கேவலமாகவும் என்னை நினைப்பார்கள் ... அதோ அவளைப் பார் .. அவள் அழகு எவ்வளவு வசீகரமாக துணிவு கொண்டு தாக்குகிறது. அவள் கலியாணமாகத கன்னிப்பெண். பெண்மை எனப்படுவது அவள்தான் போலும். எவ்வளவு பயங்கர சக்தி பெண்மை என்பது உனக்குத் தெரியுமா ?  பெண்ணென்றால் ஒருவனுக்கு மனைவியாகத்தான் வேண்டும். பிருமாண்ட வெளியில் உருக்கொள்ளும் பெண்மையை, சட்டத்திற்குட்பட்ட சிறு கற்பலகையில், மனைவியென சித்திரம் வரைந்து இன்பமடையப் பார்க்கிறான் கணவன். அவளிடம் பெண்மையைப் பார்ப்பதோ, பயம் கொள்ளுவதுதான் ... என்ன கிட்டு, நீ எப்போதாவது உன் மனைவியைக் கண்டு பயம் கொள்ளுவது உண்டோ ’ என்றான், சிரித்துக் கொண்டே சேகரன்.

இவர்கள் பேசிக்கொண்டே அப்பெண்கள் சமீபமாக வந்துவிட்டார்கள். தங்கள் பேச்சு, அவர்கள் காதில் விழுந்து இருக்குமோ என்ற சந்தேகம் கொண்டு திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்தினர். இசைந்து தொடரொலியெனக் கேட்டு வந்த ஒரு சப்தம், இவர்கள் பேச்சை நிறுத்தியதும், திடீரென மறைந்ததான  தோற்றம் கொண்டனர். பேசிக்கொண்டிருந்த அப்பெண்களும், இவர்களைச் சமீபத்தில் கண்டதும் இவர்களைப் போன்றே பேச்சை நிறுத்தினர் போலும் ஒருவர் ஒருவர் தத்தம் பேசியது மற்றவர் காதில் ஒருக்கால் விழுந்து இருக்குமோ, என்ற சந்தேகத்தின் சஞ்சலத்தில், ஒருவரை ஒருவர், ஓரக்கண்ணால், சிறிது புன் சிரிப்பில் மாறி மாறிப் பார்த்துக்கொண்டனர். இருவருக்கு, ஒரேவிதமான உணர்வு பிடிப்பு ஒரே சமயத்தில் உண்டாவதின் நிமித்தமாக, அவர்களிடையே ஒரு சூக்ஷுமமான பிடிப்பு, அவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகிறதுபோலும். மேலும் அப்பிடிப்பு, பின் சமய சந்தர்ப்ப விசேஷங்களைப் பொருத்து, இறுகவோ நழுவவோ, மற்றும் என்னென்ன விதத்தில் பாதிக்கவோ காத்து நிற்கும் போலும்.

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு சேகரன் காப்பி சாப்பிட, ஒரு ஹோட்டலுக்குப் போய்க் கொண்டிருந்தான். அந்த ஹோட்டல் வாயிலில் அப்பெண்ணை யதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. வியப்பில் ஒருவரை ஒருவர் சிறிது பார்த்து நின்றனர். இருவர் முகத்திலும் ஒரு சிரிப்பு படர்ந்தது.

‘அவர்கள் !?’ என்று அப்பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, சேகரன் கேட்டான். அதைத் தொடர்ந்து அவள் ‘ அவர் !? ’ என்று கேட்டுவிட்டு, மேலும் ‘ இது மாலை வேளை அல்ல ; கடற்கரையும் அல்ல ; அவர்களுடன் பேசி பொழுது போக்க ’ என்றாள்.

‘ சரிதான் கொஞ்சம் காப்பி சாப்பிட்டுவிட்டு போகலாமே .. ’ என்றான் சேகரன்.

‘ வேண்டாம் இப்போது ... பிறகு பார்த்துக் கொள்ளலாம்... ’ என்றாள் அப்பெண்.

‘  சரி, சாயங்காலம் பார்த்துக் கொள்ளலாம் ... ? ’ என்றான். தலையை அசைத்துவிட்டு, அப்பெண் ஒரு அவசரத்தில் போய்விட்டாள். அவள் சென்றவுடன், சிறிது நேரம் சேகரன் அவ்விடத்தைவிட்டு அகலாமல் நின்றிருந்தான். ஒரு இன்பக் கனவு கண்டதான ஒரு தோற்றம் கொண்டான்.

அன்று மாலை, சேகரன் மட்டும் தனியாக கடற்கரைப் பக்கம் போக நேர்ந்தது. சிறிது தூரத்திலிருந்து முதல் நாள் உட்கார்ந்து இருந்த இடத்தில் உட்கார்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை,  கவனித்தான். அவர்களருகில் நெருங்கியதும் ,  ‘ வெகு நேரமாகக் காத்து ... ’ என்று ஆரம்பித்தவன், சிறிது தயங்கி ‘வந்து நேரமாகிறதோ ...’ என , மாற்றிக் கேட்டான். அப்பெண்கள் சிறிது திடுக்கிட்டனர். அப்பெண் ‘ வந்து கொஞ்சம் நேரமாகிறது ’ என்றாள். அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி இவன் உட்கார்ந்து கொண்டான். அப்பெண் மற்றவர்களைப் பார்த்து, ‘ அவரை, மத்தியானம் டவுனில் சந்திக்க  நேரிட்டது’ என்று குரலில் ஒரு பாவமும் தோன்றாவகையில் சொன்னாள். ஒரு கயிறு கொண்டு, இருவரையும் சேர்த்து பிணைத்து போன்று அவ்விரு பெண்களும் இவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.

பானு, சுசீலா, சுமதி இம்மூவரும் வசதியான, மூன்று கௌரவக் குடும்பப் பெண்கள். படிப்பு முடிந்தவுடன், மேற்கொண்டு செய்வ தென்னவென்பது, இவர்களுக்கும் இவர்கள் பெற்றோர்களுக்கும் புரியவில்லை போலும். மாலை நேரத்தில் பொழுது போக்குவதற்காக, கடற்கரை சென்று பேசி காலம் கழிப்பது வழக்கம். சேகரன் இவர்கள் கோஷ்டியில், மாலைப் பேச்சில் கலந்து கொண்டதில் இவர்களுக்குப் பொழுது போவது சிறிது லேசாகியது. சேகரன் பேச்சுகள், கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். அவன் நல்ல குணமும் இவர்களுக்குப் பிடித்ததாக இருந்தது. அம்மூவருக்கும் இவனிடம், அவர்களை அறியாதே ஒரு பிரியம் ஏற்படலாயிற்று. இக்குறுகிய கால பழக்கத்திலும், அவனை வெகு நாளாகத் தெரிந்த ஒரு நண்பனென அவர்கள் எண்ணலாயினர். இதுவரையிலும், யார் யார், எவர் எவர் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும், பெயர் என்ன வென்று கேட்டுக்கொள்ளாமலும் தான் பழகி வந்தனர். சந்தித்தவுடன், முதலில் இவ்வகைப் பேச்சிற்கு இடமில்லாது போய்விட்டால், பிறகு கொஞ்சம் பழக்கமானவுடன் இவ்வகையில் கேட்டுக்கொள்ளுவது ஒரு அலௌகீம் தான்.

ஒருநாள் சேகரன் சிறிது பதட்டத்தில் காணப்பட்டான். அப்பெண்களில் சுசீலாவைப் பார்த்து ஏதோ பேச வாயெடுத்தவன், ‘ என்ன சுசீலா ... ... என்றவுடன் திடுக்கிட்டு பேச்சை, எட்டிய வெளியை நோக்கியபடி நிறுத்தினான். இப்பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களும் ஆச்சரியமடைந்தனர்.

கொஞ்சம் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டே பானு சேகரைப் பாரத்து, ‘ உங்கள் பெயர் என்னவோ ... ’ என்றாள். இவளைப் பார்த்துத் திரும்பிய சேகர், ‘ சேகர் .. அப்பெண்ணின் பெயர் ? ’ என்றான். ‘ நீங்கள் இப்போதுதான் சுசீலா என்று சொல்லிவிட்டு, என்னைக் கேட்கிறீர்களே ’ என்றாள். ‘ இல்லை, எனக்கு இது வரையில் தெரியாது ’ என்றான்.

சிறிது சென்று, ஒரு நிதானத்தில், ‘ நீங்கள் ஊஞ்சல் ஆடுவது உண்டோ, ஊஞ்சல் விளையாட்டுத் தெரியுமோ ? சிறுவயதில், அப்படியாக ஒருவரை ஒருவர் ஊஞ்சலில் வைத்து, நீங்கள் வீசி ஆட்டி விளையாடி இருக்கலாம். வேகத்தில், கிட்டவும் எட்டவும், ஆட்டுபவருக்கு ஊஞ்சலில் இருப்பவர்கள் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள். கிட்ட ஒருவராகவும், எட்ட ஒருவராகவும் ஊஞ்சலில் இருப்பவர் ஒருவரே தோற்றம் கொடுத்தால், அந்த ஊஞ்சல் விளையாட்டு இன்னும் எவ்வளவு விநோதமாகத் தோன்றும் ? முன்பு நான் ஒரு உருவை வைத்து இருவராகக் கண்டு ஆட்டினேன் போலும் ’ என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தது வெகு வசீகரமாக இருந்தது ... ‘
என்னை மன்னித்து விடுங்கள். உங்களிடம் நான் இவ்விதம், இவ்வளவு சீக்கிர பழக்கத்தில், சுவாதீனமாகப் பேசுவதை ... எனக்கு மிகவும் தெரிந்தவள், எனக்கு வெகு பிரியமான ஒருவள் பெயர் சுசீலா. இப்போது உங்கள் பெயரும் சுசீலா என்பதில் ஒரு யதேச்சை பெயர் ஒற்றுமை என்பதில் என்னென்னவோ என் மனது விநோத விதத்தில் எண்ணுகிறது. அதுதான்.

சேகரன் ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போகிறது. வந்த சில நாட்கள் வரையில் கிட்டுவுடன் தங்கி, ஊர் போவதாக அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியவன் ஒரு விடுதியில் தங்கிக் காலம் கழித்துக் கொண்டிருந்தான். பட்டணத்தைவிட்டுப் போக அவனுக்கு இன்னும் மனம் வரவில்லைபோலும். ஆனால் சமீபமாக, சில நாளாகவே அவனுக்கு ஊர் ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ‘ அநேகமாக நாளைக்கு ஊருக்குப் போகலாம் ’ என மாலையில் அப்பெண்களிடம் சொல்லுவதும், மறுநாள் மாலையில் அவர்களைக் கடற்கரையில் சந்தித்துப் பேசுவதாகவும் இருந்தான்.

அன்றைய தினம் ‘ இன்று நிச்சயமாக ஊருக்குப் போயிருப்பான் ’ என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடையே தன் தோற்றம் திகைப்பைக் கொடுக்கும் என்ற நினைவில் சேகரன் கொஞ்சம் முன் நேரத்திலேயே கடற்கரையை அடையும் ஆவலிலிருந்தான். அவசியம் ஊர் போக வேண்டிய தென்ற எண்ணம் ஒரு பக்கமும், அப்பெண்களிடையே பேசுவதில் காணும் இனபத்தில் இங்கேயே இருக்க நினைப்பது ஒரு பக்கமும் இவனை ஆட்டுவித்து, என்ன செய்வது என்று தோணாது இருந்தான். ஒளிபடராத பிரக்ஞைவெளியில் சேகரன் தடுமாறிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடு வெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -- வஸ்துக்கள் வாஸ்தவமெனப் படுவதற்கு மாயைப் பூச்சு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும், விழிப்பில் மறக்கவும் ......

அன்று பகல்பொழுதை ஏதோ அவஸ்தையில் கழித்து, மாலையில் கடற்கரையை அடைய, கொஞ்சம் முன்நேரத்திலேயே பஸ் ஸ்டாண்டில் சேகரன் நின்றிருந்தான். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில், முன்னேறத் தெரியாது இரண்டு பஸ்ஸுகளை விட்டான். தன்னை விட்டு நகர்ந்து செல்லும் அவைகளைப் பார்க்கும்போது உலகமே தன்னைத் தனிமையில் விட்டு, நகர்ந்து போவதாக நினைத்தான். கடற்கரையில் அப்பெண்களையாவது விட்டுச்செல்லாதா என்ற ஏக்கப்பார்வையில், மற்றொரு பஸ்ஸும் போய்விட்டது. இருபக்க மரங்களையோ, அப்பால் நின்று தெரியும் பங்களாக்களையோ, கவனியாதே போன்று, நகர  வீதி அகண்டு, நீண்டு குறுகி, கிழக்கு மேற்காக எட்டிய வெளியை அடிவானம் வரையில் சென்று தொட வெகுதூரம் போய்க்கொண்டிருந்தது. வீதி ஓரத்தில் மரங்கள் அப்பாலும் இப்பாலும் பலபல விசித்திரத் தோற்றத்திலும் பலவித நிறத்திலும், மரங்களிடையே, பாதி தெரிந்தும் தெரியாமலும், வீடுகளும், பங்களாக்களும் பார்வையில் பட்டன.

தன்னைப் போன்றே திகைத்து வீதிமரங்களும், வீடுகளும் நகரமுடியாது நின்றிருப்பதை சேகரன் பார்த்தான். லேசாக மரங்கள் காற்றில் அசையும் போது, அதன் தலையிலிருந்து பூக்கள் பொல பொலவென்று உதிருவது வெகு விநோதமாகத் தெரிந்தது. எதிர் பங்களாவிலிருந்து நாய் குரைப்பு சத்தம் கேட்டது. எதிரொலியில் அப் பங்களாவே நாயெனக் குரைப்பது போன்றிருந்தது. எட்டிய தூரத்தில் ஒரு பட்ட சவுக்கு மரம் நட்டுத் தெரிந்தது. அது தன் தலையில் ஓரு கொடியைக் கட்டிக் கொண்டு ‘ பொலிடிகல் ’ குஷியில் கூத்தாடுவது எவ்வளவு அபத்தமாகத் தெரிகிறது ! மேற்கே சூரியன் மறைய விருக்கிறான். உலகமே ஒரு லேசான மஞ்சள் காவித் தோற்றத்தில்  ஒரு வரட்டு விரக்தி கொள்ளுகிறது. வெளியடைய முடியாத ஒரு பளு கொடுக்கும் வேகம், சேகரன் மனதிற்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அவன் முகத்தில் ஒரு கடுமை கண்டும், உதட்டின் விளிம்பில் ஒரு ஏளனப் புன்னகை அருவிக் கொண்டிருந்தது. கோவிலில் தற்கால பக்தர்களின் சிரிப்பில் மாடத்திலிருந்து பார்த்து நிற்கும் ஒரு ஜீவகளை சிலை என, பட்டணப் போக்குகளைப் பார்த்துக் கொண்டு, சேகரன் நின்றிருந்தான்.

பட்டணச் சந்தடிகள் , பொறுமையிழந்த கூக்குரல்கள் போன்று வீதிவழியே, யார் கவனிப்பிலும் படாது, போய்க் கொண்டிருந்தன. மோட்டார்கள் பறந்து சென்று மறைந்தன. தங்களை விட்டுச்சென்ற உயிரைப்பிடிக்க, நடைப்பிணங்களென, அநேகர் கடந்து சென்றனர். மற்றும் சிலர் தங்களை விட்டு, உயிர் ஓடாது இருக்க, அதைப் பிடித்துக்கொண்டு ஓட்டத்திலும் நடையிலும் சென்றனர். உருவங்கள், தெரிந்தும், மறைந்தும் சப்தங்கள் கேட்டும் கேட்காமலும், எல்லா சந்தடிகளும் ஒரு அலங்கோலத்தில் ஒரு புலனாகாத நியதியில் அவதிப் பட்டுச் சிதறித் தெரிந்தன. இந்த உரு, இந்த சத்தம், இந்தப் பெயர், இந்தத் தோற்றம் என்ற இசைவுமுறை நழுவி, தனித்தனியாகக் காணும் புலணுர்வுகளை, மனது ஒப்புக் கொள்ள முடியவில்லை.

எட்டிய வெளியிலிருந்து, சினிமா மெட்டு காதை சுவைக்கத் துளைத்துக் கொண்டிருந்தது. ஒரு டீக்கடைக்காரனுடைய வியாபாரம் விசுவரூபம் கொள்ளமுயலும், நவீன நாகரிக சத்தம் அது. பஸ்ஸுகளைத் தவறவிட்டுக்கொண்டு இவ்வகைப் பார்வையில் அங்கு நின்று கொண்டிருந்தான். உலகமே, ஒரு நஷ்டக்கணக்கில், இவ்வித ஆர்பாட்டங்களில் தேய்ந்து கொண்டு போவதான எண்ணம் தான் அப்போது அவன் கொண்டது. சக்தியை - ஜனசக்தியை - முதலெனக் கொண்டு, ஆரம்பித்த இந்த உலக வியபகாரம் விளைவுகளில் மதிப்பைக் காணக்கூடாத திகைப்பில், நஷ்டத்தில், முதலையே வீண் விரயமாக்கிக் கொண்டு வருகிறது போலும்.

சீக்கிரம் செல்ல நினைத்த சேகரன், சிறிது நேரம் சென்றே கடற்கரையை அடைந்தான். அவர்கள் வழக்கம் போல், அந்த இடத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை, தூரத்திலிருந்தே கவனித்தான். அவன் அவர்களை அணுகியபோது ‘ என்ன சேகர், இன்று ரொம்ப லேட் .. ஊரிலிருந்து நேரே இங்குதானே வருவது ... என்று சிரித்துக் கொண்டே பானு சேகரை வரவேற்றாள். சுசீலா, நிதானத்துடன் ... ‘ இன்று ஊருக்குப் போகவில்லை!? ’ என்றாள். அது கேட்பவருக்குக் கேள்வியாகவும் அதைக்  கேட்பவருக்கு ஆச்சரிய விளியாகவும், தோன்றும்படி இருந்தது. ‘ வாவென்று அழைத்து லெட்டர் வந்தாலல்லது எப்படிப் போகிறது ... ’ என்றாள் பானு.

‘  நான் இங்கிருப்பது வீட்டிற்குத் தெரியாது ... ’ என்றான் சேகரன்.

‘ ஓகா, சேகர் கோபித்துக் கொண்டு சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்துவிட்டார் ’ என்று சொல்லி, பானு கொஞ்சம் உரக்கச் சிரித்தாள்.

‘ என்ன சுசீலா - பானு சொல்வது  பொய்தானே ’ என்று அரை கெஞ்சலுடன் சுசீலாவைப் பார்த்து சேகரன் கேட்டான்.

‘ எனக்கு எப்படித் தெரியும் சேகர் ... நீங்கள் பேசுவது சரியாக இல்லை. நீங்களும் ஏதோபோல் இருக்கிறீர்கள் ’ என்றாள் கொஞ்சம் வருத்ததுடன் சுசீலா.

‘ கொஞ்ச நாளாகவே சேகரன் பேசுவது சுசீலாவுக்கு ஏதோபோல் தோன்றியது. மற்றைய பெண்களுக்கு எப்படியோ, இவளுக்குத் தெரியாது. அவன் பேச்சுகள் சில சமயம் இவளுக்குப் பிடிக்காது. ஒரு அசட்டுத்தனமான ஜாக்கிரதையில், இவர்களுடன் பேசுவது இவளுக்கு அருவருப்பளித்தது. சிற்சில சமயம் அவன் பேச்சுகள், நிதானமாயும், ஆழ்ந்த கருத்துடன் வசீகரமாயும் இருக்கும். இரண்டொரு நாளாக சுசீலாவுடன் பேசும்போது ஒரு ஜாக்கிரதையும் ஒரு தடுமாற்றமும், சேகர் பேச்சில் தெரிந்தது. அது எதனால் என யோசிக்கும்போது, அவனை ஒருவித உணர்ச்சியில் கொள்ள முடியவில்லை. அருவருப்பபு, பயம், வெறுப்பு, பரிதாபம் முதலிய பலவிதமான உணர்ச்சிகளை, மாறி மாறி அவள் மனது கொண்டு யோசனைகளும் சலிக்க ஆரம்பித்தன. சிற்சில சமயம் அவள் மனது துக்கமும் அடையும்.


ஊரையும், மனைவி குழந்தையையும் விட்டு, இப்படி அவன் பட்டணத்தில் காலம் கழிப்பது இப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. தங்கள் தகப்பனார், தங்களுக்காக கணவன்மார்களைத் தேடிக் கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரியும். கல்யாணம் ஆகவேண்டிய பெண், தனக்குத் தெரியாத ஒருவனை எண்ணி, அவனுக்காகக்  காத்திருப்பது போன்றதா, ஒரு மனைவி தன் கணவன் வருகைக்கு ஏங்கி எதிர்பார்த்து இருப்பது ? கன்னியும் மனைவியுத் வேறெனப்படுவதில், அதுமாதிரி இல்லாவிட்டாலும், இருவரும் பெண் என்பதில், அது போலவும் தோன்றுகிறது. இவன் ஊர் போகாது இருப்பது, இவன் மனைவி இவனுக்காகக் காத்திருப்பது, இதெல்லாம் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு தவறான காரியத்தைதான், சேகரன் இங்கு இருப்பதில் செய்கிறான். அவனுடன் தாங்கள் பேசுவதும் தவறாகத்தான் தெரிகிறது.... ஒருக்கால் அவன் ஊர் போகாது இருப்பதற்கு தான்தான் காரணமா, என்று சில சமயம் சுசீலா எண்ணுவாள். தன்னெதிரிலும், தன்னுடன் பேசுவதிலும், அவன் ஒரு வகை இன்பம் கண்டு, அதனால்தான் ஊர் போகாது இருக்கிறான்போலும். சுசீலாவினால் தன் மனம் போகும் ரீதியைத் தடுக்கவோ, தன் மனதில் தோன்றி மறையும் எண்ணங்களை நன்கு புரிந்துகொள்ளவோ முடியவில்லை. தத்தி, தன்னைவிட்டுக் குதித்தோடிஉட்கார்ந்து கொள்ளுமிடத்தைத் தெரிந்து கொள்ளுமுன்பே மற்றொரு இடத்திற்குத் தாவிப் போவது போன்றுதான் அவள் மனமும் எண்ணமும் இருந்தன. சேகரன் ஊர் போகாதது, தன்னால், தன் தடுப்பால், என்று அவளால் நேர்முகமாக நினைக்க முடியவில்லை. தான், அவ்விதத்தில் குரூர சித்தம் படைத்தவளாகவோ, கேவல குணமுடையவளாகவோ, கருத முடியவில்லை. ஒரு கணவனை அவன் மனைவியிடமிருந்து பிரிப்பது ஒரு குரூர செய்கையல்லவா ? அதையும் ஒரு பெண் செய்வதென்றால் ? அப்படியாயின் தான் யார், எப்படி ? தான், தன் சுபாவம், குணம் என்பதெல்லாம் என்ன ? தான் அல்லாததென ஒன்று தோன்ற, அதை மறுத்து மாறுதலை கொள்வதில்தானோ இவைகள் ஆகும் ? மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும் ? அவ்வகையானால், இவைகளெல்லாம் ஸ்திரமெனக் கருத முடியுமா ? உண்மையில் இவைகளெல்லாம் என்ன ? சுசீலாவினால் ஒன்றையும் தெளிவுறக் கண்டு கொள்ள முடியவில்லை .. உருவற்று ... இடமற்று - தன் வழியே உலாவும் குணங்கள், நான், சுபாவம் எல்லாமே ஊடுருவத் துளைத்துச் செல்ல குறியென யதேச்சையிலே குறுக்கிடுகிறது பெயர், உருக்கொள்ள ? வெகு விநோதமான எண்ணங்களைக் கொண்டாள் சுசீலா. அவள் ஒரு விநோதப் பெண்தானே ! அவள் மனது வெகுவாக விரிவடைந்தது போலும் ! ...

அவனைவிட்டு, இவர்கள் பிரிந்து செல்லும்போது, பானுவைப் பார்த்து சுசீலா கேட்டாள் : ‘ பானு, அவன் இங்கிருப்பது சரியா, ஊருக்குப் போவது சரியா ? என்ன தோன்றுகிறது உனக்கு ... உனக்கு நன்றாக விளங்குவது போன்று, ஏதோ ஒன்றைச் சொல்லுவாய். வேறு வகையில் அவன் இருப்பது அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்கிறான் என்று சொல்லுவாய். அதிலிருந்தும் கிளைபாதைகளென ‘ தெரிவது, தெரியாதது, ’ நாம் நமக்குத் தெரிந்து தெரியாமல் பொறுப்படைவது .. ‘ பொறுப்பு ’ ... ‘ சரி ’, ‘ தவறு ’ எல்லா வார்த்தைகளுமே என்னவெல்லாமோ அர்த்தம் கொடுக்கும். பேசுவதும் புரிவதும் மறுதலையில் சலிக்க என்னால் பேசமுடியும். ஆனால் உணரும்போது ஜீவியத்தை, உலகப்போக்கை முரண்படும் உண்மைக் கூற்றெனக் கண்டு, அதைச் சொல்லும்போது, மாறுபட்ட அபத்தமாகத்தானே விளக்கமுடிகிறது ....’

சிறிது நிறுத்தி மேலும் பேசலானாள். ‘ சேகரனை நான் ஆணாக நினைத்துப் பழகவில்லை போலும் ... ஆண்கள் ... ஆண்மை என்பதெல்லாம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நழுவ,  புழக்கடை வழியைத் திறந்து வைத்துக்கொண்டு, வாயிலில் நின்று சிறகடித்துக் கொக்கரிக்கும் சேவல்கள் ஆண்கள். ஆண்மையோவெனில் இறகு உரித்த கோழிகள். சேகரனைப் பெண்ணென மதித்துதான் நான் பழகி பேசுகிறேன் போலும் ! ஒரு பெண் பெண்மையின் சக்தியையா ஒரு ஆணிடம் உணரமுடிகிறது ? அதனால்தான், நான் அவனிடம் கொள்ளும் விருப்பும் வெறுப்பும் ? .. அவனுக்கு என் பெயர் கொண்ட ஒரு மனைவி இருக்கிறாள். அவளையா, இவனிடம் நான் பார்ப்பது ? அவள் பெண்மையை, இவன் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டானா ? ... என் பிரியமான பானு, நீ என்னைக் கேவலமாகக் கருதமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். எதையாவது கட்டிக்கொண்டு அழவேண்டுமென மனம் தவிக்கிறது. இப்போது .. ’ என்று பானுவை இறுகத் தழுவிக்கொண்டாள் .. தெரியாதே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த சுமதி, பேசா மடந்தையென, ஏதோ யோசனையில் ஆழ்ந்தவள் போன்றிருந்தாள் 

சேகரன் பேச்சுக்கள் அன்று சரியாக இல்லை. சுசீலா வெகு நேர்த்தியாகவும், கல கலப்புடனும் அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் ஊருக்குப் போவதை, இவ்வகையில் பேச்சினால் தடுத்துக் கொண்டிருந்தாள் போலும். ஆணென ஒருவன், எதிரில் சேஷ்டைகளிலும், பேச்சுக்களிலும் எவ்வளவு வெறுப்பை அளிக்கிறான் என்பதை சுசீலா எண்ணிக்கொண்டாள் போலும். ஒரு ஆணுடன் ஒரு பெண், மனைவி என எப்படிக் காலம் தள்ள முடியும் ..... அதில் இன்பமோ ‘ காதல் ’ என்பதான ஒன்றையோ எப்படிக் காண முடியும் .... வெறுப்பை அளிப்பவருடன் கூடப் பழகுவது எவ்வளவு தர்மசங்கடம் ... விடாது தொடர்ந்து, நியாயமான முறையில் வாழ்க்கையை நடத்த, எத்தனை உபாயங்களை தர்மமென காண வேண்டியிருக்கிறது ! தன் எதிரில், காணாது தொலைந்தாலாவது கணவன் வருகைக்கு ஏங்கிக் காத்திருப்பதில் ஒருவகை இன்பம் காணமுடியும்போலும் பெண்களால் ! சேகரன் மனைவி சுசீலாவின் வாழ்க்கையின் ஆதாரமெனத்தான், தன்னை எண்ணிக்கொண்டாள். அவனை ஊரடையாது - தடுப்பதைத்தான், தான்  செய்கிறது - செய்வது என்று நினைத்தாள். அவ்வித எண்ணம் சூனிய வெளியில் நின்று கொண்டிருப்பது போன்று தோற்றம் கொண்ட தனக்கும் ஒரு இடமளிப்பதென உணர்ந்தாள். முன்பு தன் மனதிற்கு இசையாத குரூர குணமென்பதையும், தன் மனது ஒரு திருப்தியில் கண்டது, என்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

இருட்டு கண்டு விட்டது. உட்கார்ந்து இருந்த அநேகர் எழுந்து போய்விட்டனர். மற்றும் சிலர் எழுந்து போவதற்கும் ஆயத்தமானார்கள். இவர்களும் எழுந்து நடந்து வீதியை அடைந்தனர். அந்த முச்சந்திவீதியைக் கடந்து, எதிர் வீதியில் கொஞ்சம் நடந்த பிறகு, மற்றொரு சந்து குறுக்கிடும்போது, சேகரன் இவர்களை விட்டுப் பிரியவேண்டும். இவர்கள், வீதியைக் குறுக்காகக் கடக்கும்போது, இடது புறத்திலிருந்து ஒரு மோட்டார் சப்தம் கேட்டது. இவனை விட்டு, அவர்கள் பின் திரும்பி நடந்து, ஓரமாக நடை பாதையை அடைந்தனர். வீதி நடுவில் நின்ற சேகரன் முன்பின் போவது தெரியாது, ஒரு திகைப்பில் நடு வீதியில் நின்று விட்டான். வந்து கொண்டிருந்த மோட்டார் எவ்வித லாவகத் திருப்பலிலும், இவனைக் கடந்தபோது சிறிது இவனை உராந்து சென்றதுபோலும். ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே போன்று மோட்டாரும், நிற்காது சென்று விட்டது. சேகரன் சிறிது தடுமாறி, சமாளிக்க முடியாமல் கீழே சாய்ந்தான். தொடர்ந்து விழும் அவனை ‘ சாவு ’ யாவரையும் விட முன் சென்று பிடித்துக் கொண்டது .... சேகரன் கீழே சாய்ந்தான் ...

கண்ணெதிரில் கீழே விழும் சேகரனை, முன்னடைந்து குனிந்து தடவியபடியே பானு, ‘ ஐயோ நம் சேகர் ... பேச்சு மூச்சில்லையே ... ’ என்று கண்களில் நீர் ததும்பச் சொன்னாள். அருகில் வந்து நின்றிருந்த சுசீலா ‘ நம்ப சேகர் ! ’ என முணுமுணுத்தபடி, பானுவைத் தூக்கி நிறுத்தி ... ‘ வா பானு போகலாம் ... கூட்டம் கூடுமுன் .. ’ என்று சொல்லி நிதானமாக அவளை அழைத்துச் சென்றாள். அவன் இறந்து விட்டான் என்பது சுசீலா மனதிற்கு  நிச்சயமாகவே பட்டது. ‘ அநாதையாக நடுத் தெருவில் விட்டுச் செல்லுகிறோமே.. ’ என்ற பானுவின் குரல், வெளிவர முடியாது, தன் மார்பில் அவள் முகத்தைப் புதைத்துச்சென்ற சுசீலாவின் மனதிற்குள் கூச்சல் கொண்டு அமுங்கியது போலும் ! வெகு வருத்ததில், சுமதி, இவர்களைப் பின்தொடர்ந்து நடந்து போனாள்.

ஒரு கணத்தில், தான் நின்ற இடம் மறுபடியும் சூனியமானதென்ற ஒரு உணர்வுயடைந்தாள் சுசீலா. வெற்று வெளியில், உருவற்ற பெயரென சுசீலா நடந்து கொண்டிருந்தாள். கணவனுக்கும் மனைவிக்கும், குறுக்காகத் தடுத்து நின்றதென்பதில், இடம் கொண்டு நின்ற கன்னி சுசீலாவை ‘ மரணம் ’ எட்டித் தள்ளி விட்டது.

ஒரு மனைவிக்கு, சதா தன் கணவன் வருகைக்குக் காத்திருப்பதில் இன்பம் கொடுக்க, அவனைத் தடுத்து நின்றதில் இடம் கொண்ட சுசீலாவை எட்டித் தள்ளியே அந்த இடத்தை  ‘ மரணம் ’ பறித்துக்கொண்டு விட்டது. எவ்வளவு அநியாய நியாயமெனப் படுகிறது சேகரன் மரணம். இனி எவ்விடம் தன்னிடமாகக் காண்பது என்ற மனத் தடுமாட்டத்தில் சுசீலா நடந்து கொண்டு போனாள்.

                               *                                  *                                  *

சில நாட்களாக, இவர்கள் மாலையில் கடற்கரையில்  கூடுவது இல்லை. தன் மாடி அறை ஜன்னலடியில் மாலையில் நின்று கொண்டு எட்டிய வெளியை, சுசீலா பார்ப்பதுண்டு. தன்  சிந்தனைகளே, ஒரு பளுக் கொடுப்பதென நினைத்தவள் மனம், அப்போது துக்கத்தையும் கொள்ளாது சந்தோஷத்தையும் கொள்ளாது இருந்தது. பெயர் கொண்ட ஒன்று, தன் உருவை, சுமையெனக் களைந்து, பெயரெனத்தான் எட்டிய வெளியில் லேசாக மிதப்பதைப் பார்த்து நிற்பவள் போலும்.சுசீலா வென்ற பெயர், மறுபடி உருக்கொண்டால் யாராக முடியும் ? இருளில், உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக் கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்ளுகிறது ... ? சுசீலா, பெயரெனத் தன்னைக் களைந்து கண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள் ... ?

கிராமத்தில் காலை, மாலை வேலைகளை கவனிப்பின்றிக் கைவிட முடியாது. அதிகாலையில் இருட்டுடன் எழுந்து, வாயிற்புறம் சாணம் தெளித்து, பெருக்கி, கோலம் வரையவேண்டும். இரவின் இருளில் தூக்கம் காணாதினாலா, போடும் கோலம் தவறுகிறது.  ..... வெளிச்சம் காண இருக்கும் கிழக்கே, வெகு தூரத்தை உன்னிப்பாய்க் கவனிப்பதில், கண்டது ஒன்றுமில்லை. இரவில் பரவியதை, ஒன்று கூட்டிச் சேர்த்துக் கொளுத்த குவித்த இருட்டு, ஒளி கொள்ளுமுன்தான் எவ்வளவு இருட்டு ! கணவனைக் காணமுடியவில்லை. பகல் நீண்டும் இரவு வருகிறது. குழந்தை காலைச் சுற்றி வராது தொட்டிலில் தூங்கும்போதுதான், பகல் நீண்டும் இரவு வருகிறது. அதைத் தடுக்க இரவு குறுக்கிடுகிறது. மாலையில் சூரியன் மறைகிறான். இரவு வந்தவுடன்  விளக்கை ஏற்றி, வாயிற் புறையில் வைத்துவிட்டு திண்ணைத் தூண்டியில் நிழலென நிற்கிறாள். மேற்கே சூரியன் மறைந்த விடத்திற்கும் அப்பாலே, பார்க்கிறாள். கண்ணொளி கொண்டும், ஒன்றையும் பார்க்கமுடியவில்லை. கீழிறங்கி, எதிரே தெரியும் கோயில் சுவாமியைத் தரிசித்து விட்டு, விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளடைகிறாள் சுசீலா .... இரவும் குறுகாது நீண்டு வளருகிறது. அல்லலுறும் மனது தூக்கம் கொண்டாலாவது இன்பக் கனவையாது எதிர் பார்க்கலாம் ..... வேதனைகளின் இன்பம்தான் வாழ்க்கை போலும் !

தானாக வேண்டி, எதிலும் தன்னைக் காண தேடுவது போல கன்னி சுசீலா, மேற்கு பார்த்த தன் மாடி அறை ஜன்னலடியிலிருந்து  எட்டிய வெளியை வெறித்துப் பார்ப்பதுண்டு. சேகரன் மனைவி சுசீலாவை மனதில் கண்டதில், அவளாகத் தன்னையும் கண்டு கொண்டுவிட்டாள் போலும் !

தன் கணவன் வருகைக்காக எதிர்பார்த்து ‘ காதல் ’ காண மனைவியாக, கன்னிப் பெண் சுசீலா தன் மாடி ஜன்னலடியில் நின்றிருந்தாள்.

அப்படியாயின், ஒரு வகையில் ‘ காதல் ’ கண்ட பெண் கலியாணமாகாத கைம்பெண் என்ற அபத்தம்தானே  !

- சரஸ்வதி, 1960

தட்டச்சு : ரா ரா கு

Blog

கபாடபுரம் - புதுமைப்பித்தன்
Labels: கதைகள், புதுமைப்பித்தன்
978-81-8368-545-0_bபுதுமைப்பித்தன்

1. கடல் கொண்ட கோவில்

நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும்.

TE-Mystic-Outlook

நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக அவளுடன் தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பொச்சாப்பும் குரோதமும் புகையும் மனிதர் வாழ் சமாதிகளுக்குள் ஒன்றில், என்னை இவ்வாறு நிச்சிந்தையாக ஒரு கன்னியுடன் இராப் பொழுதைக் கழிக்க விட்டுவிடுவார்களா? கல்லில் உறையும் கன்னி எனில், திரிகால பூஜையும் ஆர்ப்பாட்டமும் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் கூட, சற்றும் சஞ்சலமற்று நடந்து விடுகிறார்கள். என்ன மனிதர்கள், என்ன பிழைப்பு!
நான் உள்ளுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். கல்லில் வடித்திருந்த உருவத்தில் மனசை லயிக்கவிட்ட எனக்கு, அந்தக் கோயிலில் அந்த அர்த்த ஜாமத்தில் இப்படி எண்ணமிட்டுப் பொழுதைக் கழிக்க நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்த ஒரு காரியமா அல்லது... அதற்கும் அப்பால், அதற்கும் அப்பால் என வெங்காயத்தோல் உரித்துகொண்டுபோவது போல் மனித அறிவு என்ற ஸ்பரிசம் படப்பட மற்றொரு திரையிட்டுவிட்டு, அதற்கும் அப்பால் அகன்று சென்றுகொண்டே இருக்கும் அந்த விவகாரத்தைச் சேர்ந்த ஒரு நிகழ்ச்சியா என என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.

எனது இளமையில், எப்போதோ ஒரு முறை - கணக்குக் கூடத் தவறிப் போய் வெகுகாலமாகிவிட்டது - கன்னியின் கொலு விழாவிற்கு வந்தேன். மஞ்சணை மெழுகு வைத்து அர்ச்சகன் அந்தக் கருங்கல் வடிவத்தை பதினாறு வயது சிறுமியாக ஆக்கியிருந்தான். அந்த அர்ச்சகனுடைய கைத் திறமையை மறந்து அந்த அழகில் மனசை இழந்தேன். பிறகு உலகத்து ஊர்வசிகள் எல்லாம் பெண் பிறவிகளாகக் கூட எனக்குத் தென்படவில்லை. ஆனால் அதற்கு மறுநாள் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. மறுநாள்தான் அர்ச்சகனுடைய கைத்திறமையை உணர முடிந்தது. உதயகால பூஜையின்போது, தேய்ந்தும் மாய்ந்தும் போய்த் தென்பட்ட கருங்கல் விக்கிரகந்தானா முந்திய நாள் இரவில் கண்ட யுவதி! அன்று சிதறின ஆசை பிறகு மறுபடியும் மனசில் குவியவே இல்லை.

திட்டிவாசல் வழியாகக் கடற்காற்று பரம் பரம் என அடித்துக் கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. மூலக் கிரகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். இருட்டுடன் ஐக்கியமாகிக் கிடக்கும் சிலையில் வைர மூக்குத்தி மட்டும் சுடர்விட்டது. எழுந்து பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். தூக்கமோ அகன்று விட்டது. என்ன செய்யலாம்? பொழுது விடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும் என்று பார்க்கலாம் எனக் கிழக்குக் கோபுர வாசலின் திட்டிவாசல் வழியாக வெளியேறினேன். கடலலைகள் ஆக்ரோஷமாகக் குமுறி கிழக்கு வாசலிலிருந்து சமுத்திரத்துக்குள் இறங்கு படிக்கட்டுகளை மோதி நுரை கக்கின. அன்று நல்ல நிலாக் காலம் ஆகையால் கடற்பரப்பு நுரைக் கரையிட்ட வெள்ளிபோல் மின்னியது. பேரலைகளுக்கிடையில், கடல் மட்டத்துக்கு அடியில் உள்ள குன்றுகளின் முகடுகள் பெரிய சுறா மீன்களின் முதுகு போலத் தென்படும். அடுத்த கணம் பனைப் பிரமாண்டமாக படம் எடுக்கும் நாக சர்ப்பம் போன்ற பேரலை மடங்கி அடித்து அதை முழுக்கிவிடும். வானத்தை அண்ணாந்து பார்த்தேன். இன்னும் விடிவெள்ளி உதிக்கவில்லை. எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது. நின்று நின்று காலோய்ந்து மறுபடியும் கோவிலுக்குள் நுழைந்தேன். திண்ணையில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு அசந்துவிட்டேன். கடலின் ஓங்காரநாதம் தாலாட்டியது. நினைவு வழுவியது எப்பொழுது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எங்கோ வெகு தொலைவில் நினைவின் அடிவானத்தில் பேரிரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது...

என்ன அதிசயம். கடல் அலைச் சத்தம் கேட்கவில்லையே. கடல் ஓய்ந்துவிட்டதா அல்லது என் காதுகள்தான் ஓய்ந்து விட்டனவோ? முழுப் பிரக்ஞையும் வந்துவிட்டது. ஆனால் இமைகள் மட்டும் விழிக்க முடியவில்லை. இடைவெளிகளினூடே கோயிலின் திட்டிவாசல் தெரிந்தது. கண் இமைகளை யார் இப்படி அமுக்குகிறார்கள். மேல்விழுந்து அழுத்தும் பெரும்சுமையை உதறித் தள்ளுகிறவன் போல, கண் இமைகளை நிர்ப்பந்தப்படுத்தித் திறக்க முயன்றேன். முடியவில்லை. மூச்சுத் திணறியது. சற்று அயர்ந்தேன். மந்திர வலையிலிருந்து விடுபட்டவைகளைப் போல எனது கண்கள் திறந்தன. அப்பாடா என்ன சுகம்! எழுந்து உட்கார்ந்தேன். உறக்கச் சடைவு தீரவில்லை. என்ன அதிசயம்! அலைச் சத்தமே கேட்கவில்லையே! இதென்ன கூத்து? திட்டிவாசல் வழியாக நிலவொளிதான் தெரிந்தது. கர்ப்பக்கிரகத்தில் வைரத்தின் ஒளிச் சிமிட்டும் பழையபடிதான் இருந்தது. எழுந்து திட்டிக் கதவு வழியாக வெளியே வந்தேன். என்ன ஆச்சர்யம்! கண்ணுக்கெட்டிய வரை சமுத்திரத்தையே காணவில்லை. பால் போன்ற நிலவில் சமுத்திரப் படுகைதான் தெரிந்தது. கடல் வற்றுவதாவது! எதிரில் சற்று முன் குமுறிக் கொண்டு நின்ற பேரலைகள் எங்கு சென்று ஒளிந்தன? கடல் ஜலம் உள்வாங்கிவிட்டதா!

சமுத்திரப் படுகையிலே பெரும் பெரும் கற்குன்றுகள் சிதறிக் கிடந்தன. தூரத்தில் ஒரு குன்றின் பேரில் கோபுரமும் கோவிலும் தென்பட்டன. சமுத்திர மட்டத்துக்குக் கீழ் கோவிலும் கோபுரமுமா? பரளியாறும் பன்மலை யடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என எவனோ ஒருவன் ஏங்கியது நினைவுக்கு வந்தது. நான் கண்ட கோவில் அழிந்து போன, கடல் உண்டு பசியாறின சமுதாயத்தின் கோவிலோ? என்ன கோவிலாக இருக்கக் கூடும்? ஒருவேளை இந்தக் கன்னிக்கு அவர்கள் கட்டிய கோவிலோ? எண்ணமிட்டுக் கொண்டே கோபுர வாசலில் இருந்து கடலுக்குள் இறங்கும் படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். ஐந்நூறு படிகள்! கடல் படுகையில் நான் கால் வைத்து அண்ணாந்து பார்த்தேன். கன்னியின் கோவில் மலை முகட்டிலிருந்தது! கடல் திசையை நோக்கினேன். நிலவொளி அவ்வளவு தீட்சண்யமாக விழவில்லை. நாலா திசைகளிலும் சிதறிக் கிடக்கும் பாறைகளின் நிழல்கள் படுகையில் குடிகொண்டிருந்தன. படுகையில் கணுக்கால் அளவுதான் சகதி; பொருட்படுத்தாமல் நடந்து சென்றேன். ஆனைத் துதிக்கை போன்ற தன் எட்டுக் கைகளையும் ஒரு பாறையைப் பற்றிக்கொண்டு கவந்தன் மாதிரி வெறுந்தசைக் கோளமாகக் கண்சிமிட்டிக் கிடந்தது ஒரு ஜலராசி. அதன் வாழ்வு இன்னும் எவ்வளவு நேரமோ என்று எண்ணமிட்டுக் கொண்டு அதை கடந்தேன். தண்ணீர் வற்றிப் போனதால் மாண்டிருக்கும் என்று நினைத்தேன். அது ஜிவ்வென்று எழும்பி, தனது எட்டுத் துதிக்கைகளில் ஒன்றை என்மீது வீசியது. நல்ல காலம் நான் அதைக் கடந்துவிட்டேன். இல்லாவிட்டால் கழுத்தே முறிந்து போயிருக்கும். கடல் படுகையில் அழகான பவழக் கொடிகள், விசித்திர விசித்திரமான செடிகள் இருந்தன. இந்த இருட்டுப் பாதை வழியாகச் செல்லுதற்கே பயமாக இருந்தது.

பாறையின் பேரில் ஏறி நிலவு வெளிச்சத்துக்குப் போய்விட்டால் போதும் என்றாகிவிட்டது. பாறை வழுக்குமோ என்று நினைத்தேன். கரடுமுரடாக இருந்ததினால் பற்றி ஏறுவதற்குச் சுளுவாக இருந்தது. அதன் உச்சிக்கு வந்த பிறகு தான் வளைந்து வளைந்து நான் நடந்து வந்த தூரம் எவ்வளவு என்பது தெரிந்தது. கரையிலிருந்து பார்க்கும் போது தொலைவில் தெரிந்த கோவில் அடுத்த குன்றின் மேலிருந்தது. அது இதைவிட சற்றுத் தாழ்ந்தது. மறுபடியும் கீழே இறங்கிவிட்டால் அதில் ஏறுவது எப்படி என்று நான் தடுமாடிக்கொண்டு வரும்போது கிழக்குச் சரிவில் படிக்கட்டுகள் தென்பட்டன. எந்த யுகத்து மனிதர்கள் செதுக்கி வைத்ததோ! அதிசயப்பட்டுக் கொண்டு படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். கால்கள் சற்று வழுக்கத்தான் செய்தன. மனசில் உள்ள வேகந்தான் என்னை இழுத்துச் சென்றது. படிக்கட்டுகள் மறுசரிவில் உயர ஏற ஆரம்பித்தன. சுமார் ஐம்பது படிக்கட்டுகள் தானிருக்கும். கோயிலிருந்த குன்றின்மேல் கொண்டுவிட்டது. கரையைத் திரும்பிப் பார்த்தேன். எங்கோ எட்டாத் தொலைவில் ஒரு பெருங்குன்றின்மேல் சிகரமும் கிழக்கு வாசலும் தெரிந்தன.
நான் நின்றிருந்த குன்று வெறும் பாறை. யாரோ அதை வெட்டிச் செதுக்கி சமதளமாகத் திருத்தி இருக்கிறார்கள். கோவிலும் அந்தக் குன்றின் ஒரு பகுதி. குடைவரைக் கோவில் என்று சொல்லுகிறார்களே அந்த ரகம். ஆனால் அதன் அமைப்பு வேறு. குன்றின் உச்சியைக் கோவிலாகச் செதுக்கி அதனோடு ஒட்டி பிரகாரமாக தளத்தையும் செப்பனிட்டிருக்கிறார்கள். கோவில் எல்லாம் பிரமாதமான உயரமல்ல. சுமார் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரந்தானிருக்கும். அதற்குக் கோபுரம் ஏதும் கிடையாது. மலையாளத்துக் கோவில்கள் மாதிரித் தானிருந்தது. ஆனால் கருங்கல் வேலைப்பாடு. சுற்றி வந்தேன். கிழக்குப் பக்கத்தில் வாசலிருந்தது; ஆனால் கதவில்லை. கோவிலின் முற்றத்தில் கிழக்குப் பிரகாரம் மூன்று நான்கு அடி அகலத்துக்கு மேல் இல்லை. அந்த பிரமாண்டமான பாறை பிளவுபட்டு, வெறும் பாதாளமாக இருட்டுடன் ஐக்கியமாயிற்று. வெளிப்பக்கத்தில் நிற்க பயமாக இருந்தது. கோவில் வாசலில் கால் வைத்தேன். சற்று தயக்கத்துடனேயே உட்புகுந்தேன். இந்த ஒற்றை கல் கோவிலுக்குள்ளும் சிறு பிரகாரம். அதன் மையத்தில் தான் கர்ப்பக்கிரகம். பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். இருட்டில் எதுவும் தெரியவில்லை. காலில்கூடப் பாசியும் நுரையும் மிதிபட்டது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி ஒரு பிரதட்சணம் வந்துவிட்டு, அதன் வாசல் பக்கம் நின்றேன். வாசலில் இரண்டு பக்கத்திலும் இரு அபூர்வமான மிருகங்களை துவாரபாலகர்கள் போல் கல்லில் செதுக்கியிருப்பது சற்று மங்கலாகத் தெரிந்தது.

கர்ப்பக்கிரகத்தில் என்ன இவ்வளவு இருட்டு என்று எண்ணமிட்டுக்கொண்டே கைகளை முன்னோக்கி நீட்டிக்கொண்டு கருங்கல் நிலையில் கால் வைத்தேன். நிலைப்படியில் தாமரைப்பூ செதுக்கியிருப்பது காலுக்குத் தட்டுப்பட்டது. முன் நீட்டிய கைகளை வழவழப்பான இருள் வழிமறித்தது. வழி கிடையாதா அல்லது கல்லால் செதுக்கிய கதவா என்று எண்ணமிட்டுக்கொண்டு தடவிப் பார்த்தேன். கரும் பளிங்குபோல வழவழப்பாக இருந்தது. கால் பாதத்தில் தட்டுப்படும் தாமரை உறுத்தியதினால் சற்று பாதத்தை உயர்த்திவிட்டு மறுபடியும் காலைக் கீழே வைத்தேன். குமிழ் போல ஏதோ தட்டுப்பட்டது. தாமரையின் மையம் என்று நினைத்தேன். அதே சமயத்தில் கருப்புப் பளிங்குக் கதவு உட்பக்கமாகத் திறந்தது. நான் கதவின் மீது கைகளை ஊன்றிக் கொண்டு நின்றதினால் தடமாடிக்கொண்டு உள்ளே சாய்ந்தேன். அங்கும் இருட்டு. அதே சமயம் வெளிவாசல் பக்கம் பேரிரைச்சல் கேட்டது. கடல் ஜலம் பிரளயம் போல நுங்கும் நுரையுமாக கோவிலுக்குள் பிரவேசித்தது. கர்ப்பக்கிரகத்தின் கதவு தானாகவே சாத்திக்கொண்டது.

இனிமேல் நமக்கு ஜலத்தில் சமாதி கட்டின மாதிரிதான் என்று பீதியடைந்து பதறினேன். ஆனால் பயம் மறுகணம் அகன்றது. கதவு பொருந்தியடைத்துக்கொண்டதும் கர்ப்பக்கிரகத்துக்குள் பிரமாதமான பிரகாசம். கண்ணையே குருடாக்கிவிடுமோ என்று பயந்தேன். இத்தனை நேரம் இருட்டில் கிடந்து தடமாடியதினால் இந்தத் தொந்தரவு போலும். ஒளியின் தன்மை கண்களுக்குப் பழக்கமாக ஆக உறுத்துவது போய் பன்னீர் விட்ட மாதிரி குளுமையாக இருந்தது. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன். மேல் சுவரில் உள்ள ஒரு மாடத்தில் குத்துவிளக்குப் போல் ஒன்றிருந்தது. அதன் உச்சியிலிருந்து வந்தது இந்தப் பிரகாசம். சற்று நெருங்கிச் சென்று கவனித்தேன். குத்துவிளக்கு தங்கம் போலப் பிரகாசித்தது. அதன் உச்சியில் வைரம் ஒன்று பதித்திருந்தது. அதிலிருந்து எழுந்தது இந்தப் பிரகாசம். தூண்டாமணி விளக்கு என்று சொல்லுகிறார்களே அதுதானோ என்று அதை எடுத்துப் பார்க்க முயன்றேன்.

"அடே, அதைத் தொடாதே" என்று அதட்டியது ஒரு குரல்.
நான் திடுக்கிட்டுத் திரும்பினேன். ஆணோ பெண்ணோ எனச் சந்தேகப்படும்படியாக இருந்தது. வாக்கு தமிழ்தான் என்றாலும் தொனிப்பு யாழ்ப்பாணத்துக்காரர் ரீதியில் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தென்படவில்லை.

"நான் இங்கேதான் இருக்கிறேன். இதோ என்னைப் பார்" என்றது அந்தக் குரல்.

நிருதியின் திசையிலிருந்து பலிபீடத்தின்மீது ஒரு தலை அமர்ந்திருந்தது. பெண்ணின் தலை. அதன் அளகபாரம் பலிபீடத்தில் மயில் தோகை மாதிரி விரிந்து கிடந்தது. முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. வருஷாவருஷம் வாழையடி வாழையாக அர்ச்சக பரம்பரை மஞ்சணை மெழுகு வைத்து அலங்காரம் செய்யும் முகத்தின் சாயலுக்கும் இதற்கும் சற்றும் வித்தியாசமில்லை. எத்தனை எத்தனை காலம் இந்த முகத்தின் சாயல் அர்ச்சக பரம்பரையின் நினைவில் படிந்து மனித வம்சத்தின் ஞாபகச் சரடாக இருந்து வந்திருக்கிறது! எனக்கு பலிபீடத்தில் அமர்ந்திருந்த தலை பேசியதில் அதிசயம் தோன்றாதது எனக்கே வியப்பாக இருந்தது. அசாதாரணமான நிலையில் அகப்பட்டுக் கொண்டால் எல்லாம் இயல்பாகத் தோன்றும் போலும். இப்படியாக நான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சண்பகப் பூவின் வாசம் கலந்த மெல்லிய காற்று கர்ப்பக் கிருகத்தில் ஊசலாடியது. காற்று எங்கிருந்து வருகிறது எனச் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தக் காற்று அந்தக் கற்குகைக் குள்ளாகவே தோன்றி அதனுள்ளேயே மடிகிறது போலும்.
"இம்மாதிரிக் காற்று அடித்தால் சூர்யோதயமாகிவிட்டது என்று அர்த்தம். அஸ்தமனமாகும்போது மல்லிகையின் வாசம் வீசும்" என்றது அந்தத் தலை.

இது என்னடா புதுவிதமான கடிகாரமாகத் தோன்றுகிறதே என்று எண்ணமிட்டுக்கொண்டு "நீ யார்? எப்படி சிரசை மட்டும் காப்பாற்றி உயிருடன் இருந்து வருகிறாய்?" எனக் கேட்கலாமா என்று வாயெடுத்தேன்.

அந்த சிரசு கண்களை மூடியபடியே நான் சொல்ல வந்ததை எதிர்பார்த்தது போல, வாயைத் திறவாமலேயே பேசியது.
"நானும் ஒரு காலத்தில் உன்னைப் போல உடம்புடன் தானிருந்தேன். உலக பந்தங்களுக்கு உடன்பட்டு பிறப்புச் சங்கிலிக்குள் தன்னையும் உட்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்குத்தான் உடம்பு அவசியம். காலத்தை எதிர்த்து நிற்க விரும்புகிறவர்களுக்கு உடம்பு அனாவசியம். மேலும் பால பேதத்தினால் உடலில் தோன்றும் இச்சா பந்தங்களையும் போக்கிக் கொள்ளலாம் அல்லவா? என்னுடைய வயசு என்னவென்று நினைக்கிறாய்? மூன்று கர்ப்ப காலம் கடந்துவிட்டது; நான் எத்தனை காலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழ முடியும். என்னுடைய இச்சை என்று அவிந்ததோ அன்று நான் காற்றுடன் காற்றாகக் கரைந்துவிடுவேன்..."

அந்த சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.
"உடல் இழந்த வாழ்வு எனக்கு எப்படி ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதே. அந்த ரகசியம் உனக்குக் கிடைக்காது. அது குமரிமலையுடனும் பரளியாற்றுடனும் பரம ரகசியமாக ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. கேவலம் நீ ஒரு மனிதன். மிஞ்சிப்போனால் இன்னும் இருபது வருஷங்கள் உயிரோடு இருப்பாய். அதாவது இந்த உடம்போடு உறவு வைத்திருப்பாய். உனக்கு எதற்கு இந்த ரகசியங்கள்?" என்று கேட்டது.
"அழியும் உடம்பு என்பதை உன்னுடைய முன்னோர்களும் அறிந்துதானிருந்தார்கள். இருந்தாலும் கர்ப்ப கோடி காலம் பிரக்ஞை மாறாமல் வாழ்வதற்கு ஒரு வழி உண்டு என்பதைக் கண்டுபிடிக்காமல் ரொம்ப நாட்களைக் கழித்தார்களா? அப்படி அவர்கள் கழித்திருந்தால் இப்போது என்னுடன் பேச உனக்கு முடியுமா?" என்று கேட்டேன்.

தலை கடகடவென்று சிரித்தது. "உனக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளப் போதுமான தைரியம் உண்டா? நான் யார் என்பதைத் தானே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறாய். கர்ப்ப கோடி காலத்துக்கு முன் நான் எப்படி இருந்தேன். நான் வாழ்ந்த உலகம் எப்படி இருந்தது. என்பதை நான் உனக்கு காட்டுகிறேன். மணிவிளக்கு நிற்கிறதே, அந்த மாடத்தின் அருகில் யாளியின் தலை ஒன்று செதுக்கியிருக்கிறது. தெரிகிறதா? அந்தத் தலையை வலப்புறமாகத் திருப்பு."
நான் அது சொல்லியபடி செய்தேன். தளத்தின் ஒரு பகுதி விலகியது. படிக்கட்டுகள் தென்பட்டன.

"தைரியமாக உள்ளே போ; உனக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது" என்றது அந்தத் தலை.

"நீ இருக்கும்போது எனக்கு என்ன பயம்? மேலும் ஆபத்துக்குப் பயப்படுகிறவனாக இருந்தால் சமுத்திரத்துக்கு அடியில் வலிய வந்து மாட்டிக்கொள்ள வேண்டாமே! நீ சொல்லக்கூடாத பரம ரகசியம் அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டேன்.

"என்னிடம் காதல் பேசினது போதும். என் வயசு மூன்று கர்ப்ப காலங்கள். நான் உன் பாட்டிகளுக்கு பாட்டி என்பதை மறந்து பேசாதே. இஷ்டமிருந்தால் போய்ப் பார்" என்று சற்று கடுகடுப்பாகப் பேசியது அந்த சிரம்.

"நானும் உன்னைப் போல உடம்பை இழந்துவிட்டு, எத்தனை கர்ப்ப கோடி காலமானாலும் உன் எதிரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கத்தான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே படிக்கட்டுகளின் வழியாகக் கீழே இறங்கிச் சென்றேன். படிகள் எங்கு கொண்டு என்னை விடும் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. கீழே என்ன இருக்கிறது; உலகத்தாருக்குத் தெரியக் கூடாது என காலம் என்ற திரையிட்டு, இயற்கை மறைத்து வைத்துள்ள ரகசியங்களில் எது என் வசம் சிக்கப் போகிறது என்று எண்ணமிட்டுக்கொண்டே நடந்தேன். கடல் கன்னிக் கோவிலில் இருந்த தூண்டாமணி விளக்கின் ஒளி, சிறிது தூரந்தான் படிக்கட்டுகளில் வீசியது. அதன் பிறகு, வழி நெடுக, நிலவொளி போல, வெள்ளியை உருக்கி வெளிச்சம் செய்தது போல ஒரு ஒளி எனக்கு வழிகாட்டியது. நிலவு எனவோ அல்லது நட்சத்திர ஒளியெனவோ அதை வருணிப்பது பொருந்தாது. தற்கால நியான் விளக்குகள் போல ஒரு வெளிச்சம். ஆனால் நியான் ஒளியைப் போல கண்ணையோ உடம்பையோ உறுத்தவில்லை.

குளுகுளுவென்று ரம்யமாக இருந்தது. வெளிச்சம் எந்தத் திசையிலிருந்துதான் வருகிறது என்பதை நிர்ணயிக்க முடியாதபடி ஒளிப்பிரவாகத்தின் காந்தி எல்லாவிடங்களிலும் ஒரே மாதிரி இருந்தது. பத்துத் திசையிலும் சிக்கென்று மூடிய பிலமாக இருந்தும், சுகந்தமான காற்று ஒன்று சற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. பிலத்தில் நான் இறங்கிச் செல்லச் செல்ல, பேரலைகளின் குமுறல் போன்ற ஒரு பேரிரைச்சல் என் செவியை உடைக்க ஆரம்பித்தது. சப்தம் வந்த திசையை நான் நெருங்க ஆரம்பித்தேன்.
படிக்கட்டுகள் கடைசியாக ஒரு நிலவறையில் சென்று முடிவடைந்தன. நிலவறை அறுகோண யந்திரம் போல அமைக்கப்பட்டிருந்தது. படிக்கட்டுகளுக்கு எதிர் பாரிசத்தில் உள்ள சுவரில் உள்ள பிறையில் தலையற்ற முண்டம் ஒன்று வளர்த்தியிருந்தது; பச்சைக் கல்லைக் குடைந்து செய்த ஒரு பாத்திரம், அதன் தலை இருக்க வேண்டிய இடத்தில் ஒரு யந்திர சக்கரத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. உடலத்தின் மீது ஒரு பிரம்பு கிடந்தது. நிலவறையின் இரு பாரிசத்திலும் இரண்டு வழிகள் தென்பட்டன. நான் பிலத்தின் மையத்தில் வந்து நின்று எந்தத் திசை நோக்கிச் செல்லலாம் என்று எண்ணமிட்டேன்.

எந்தத் திசையில் சென்றால் என்ன? எல்லாம் பார்க்க வேண்டிய இடந்தானே என்று நினைத்துக் கொண்டு இடது பக்கமிருந்த பாதை வழியாகச் செல்லுவதற்குத் திரும்பினேன்.

"இது திசைகள் அற்றுப்போன இடம்; எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதானே" என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒருவரையும் காணவில்லை. என் காதில் விழுந்தது நிச்சயமாக ஆண் குரல்.

குரலுக்குப் பதில் கொடாமல், நான் முதலில் நிச்சயம் பண்ணின பாதை வழியாகச் சென்றேன்.
யாரோ கடகடவென்று கர்ண கடூரமான குரலில் சிரிப்பது போலக் கேட்டது. திரும்பிப் பார்த்தாலும் ஆள் எங்கே தென்படப் போகிறது; பேசுகிறவன் என்றால் எதிரில் வந்து பேசட்டுமே என்று முனகிக் கொண்டே நடந்தேன். இந்தப் பாதையிலும் நன்றாக வெளிச்சமாகத் தானிருந்தது. ஆனால் நான் முன்பு கேட்ட பேரலைச் சத்தம் இன்னும் ஆக்ரோஷமாகக் கேட்டது. கடல் தளத்தருகில் நெருங்குகிறோமா, கடல் பிரவாகம் செல்லும் பிலத்துவாரம் எதுவும் இருக்கும் போலும் என்று நினைத்தேன். அடுத்த நிமிஷம் அது என்ன அசட்டுத்தனமான நினைப்பு. கடல் தண்ணீர் உள்ளே வர வழியிருந்தால் இந்தப் பிலம் முழுவதும் அல்லவா நிரம்பியிருக்க வேண்டும்? இரைச்சலுக்குக் காரணம் வேறு ஏதாவதாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆச்சு இன்னும் எவ்வளவு தூரமிருக்கப் போகிறது? போயே பார்த்து விடுகிறது. சப்தத்தைத் தாங்குவதற்குச் செவித் தொளைகளுக்குப் போதுமான சக்தியில்லை. மேல்துண்டை எடுத்துக் காதோடு காதாக வரிந்து கட்டிக் கொண்டு மேல் நடக்கலானேன். சிறிது தூரம் சென்றதும் வெக்கை அடிக்க ஆரம்பித்தது. வரவர வெக்கை அதிகமாயிற்று. அக்னிச் சுவாலைக்குள் நடப்பது போலத் திணறினேன்.

ஆனால் அடியெடுத்து வைக்கும்போது தரை சுடவில்லை. இதற்கு மேல் சுமார் பத்து கெஜ தூரந்தான் என்னால் போக முடிந்தது. மேல் நடப்பது சாத்தியமில்லை என்று திரும்பினேன்.

"வடக்குச் சுவரில் உள்ள மாடத்தில் ரசக் குழம்பு இருக்கிறது. அதை உடம்பில் தடவிக் கொண்டால் மேலே போக முடியும்" என்று ஒரு குரல் கேட்டது. பழைய குரல்; அதே குரல்.

மாடத்திலிருந்த பாத்திரத்தை எடுத்தேன். உருக்கிய வெள்ளி போல, சந்தனக் குழம்பின் மென்மையுடன் கைக்கு இதமாக இருந்தது. அள்ளி எடுத்து உடம்பு முழுவதும் பூசிக்கொண்டேன். வெக்கை குடியோடிப் போயிற்று. ஆனால் உடம்பு வெள்ளி வார்னிஷ் கொடுத்த மாதிரி ஒரேயடியாக மின்னியது. இந்த நவராத்திரி வேஷத்துடன் மேலும் நடந்து சென்றேன். தூரத்தில் புகையும் அக்னிச் சுவாலையும் ஒரு பிலத்திலிருந்து எழுவதும், மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கடியில் இருக்கும் எரிமலையோ எனச் சந்தேகித்தேன். நான் நினைத்தது சரிதான். எரிமலைதான். இந்த அக்னி கக்கும் மலையினருகில் எப்படிப் படிக்கட்டும் மண்டபமும் கோவிலும் வந்து கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்? எந்த மனித வம்சம் இதைக் கட்டியிருக்கக் கூடும் என எண்ணமிட்டுக் கொண்டு நின்றேன். பொங்கிக் கொப்புளிக்கும் அக்னிச் சுவாலை ஒடுங்கியது. பூமியினடியில் மட்டும் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் சற்று தைரியமாக எரிமலையின் விளிம்பு அருகே சென்றேன்.

ஆழத்தில் வெகு தூரத்தில் பாறையும் மண்ணும் உலோகங்களும் பாகாக உருகிக் கொந்தளித்துச் சுவாலை விடுவது தெரிந்தது. விளிம்பருகிலும் படிக்கட்டுகள். ஆனால் மிகவும் ஒடுங்கியவை. பாறையைக் கொத்திச் செதுக்கியது போலத் தென்பட்டது. இந்தப் படிக்கட்டுகள் எரிமலையின் உட்புறச் சுவரில் தென்பட்ட பிலத்துக்குள் சென்றது. அங்கே ஒரே இருட்டு. திரும்பி விடலாமா என யோசித்தேன். திரும்பவும் படிக்கட்டுகள் வழியாக மேலேறி வருவதற்குப் பயமாக இருந்தது. வந்தது வருகிறது என இருட்டில் நடந்து சென்றேன். சிறிது தூரம் செல்லுவதற்குள் எரிமலையின் பேரிரைச்சல் கேட்கவே இல்லை. அதற்கு வெகு தொலைவில் வந்துவிட்டது போல அவ்வளவு நிசப்தமாக இருந்தது. சுமார் அரை மணிப் பொழுது நடந்து சென்றிருப்பேன். இந்தப் பாதை என்னை ஒரு மண்டபத்தில் கொண்டு சேர்த்தது. கால் கடுக்க ஆரம்பித்தது. தரையில் உட்கார்ந்துகொண்டேன். சுற்றுமுற்றும் இருட்டில் எதுவும் தெரியவில்லை. அக்னி வெக்கைக்குத் தப்புவதற்காக நான் உடம்பில் பூசிக் கொண்ட திராவகந்தான் மின்னியது.

"இன்னும் எத்தனை நேரந்தான் உட்கார்ந்திருக்கப் போகிறாய். கால் வலி தீரவில்லையா? ஆனாலும் நீ தைரியசாலிதான்" என்றது ஒரு குரல். அதே குரல்; பழைய குரல்.
"நீ யார், எங்கு பார்த்தாலும் என்னைத் தொடர்ந்து வருகிறாயே? நீ எங்கே நிற்கிறாய்? எனக்குத் தென்படவில்லையே?" என்று கேட்டேன்.
அந்தக் குரல் சிரித்தது.

"நான் உன் பக்கத்தில் தான் இருக்கிறேன். எனக்கு உடம்பு கிடையாது. அதனால் நான் எங்கும் இருக்க முடியும். நான் எங்கு இருந்தாலும் உன் பக்கத்தில் இருக்க முடியும். அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ எங்களுடைய அதிதி. உன்னை உபசரிப்பது எங்கள் கடமை."

2. ஸித்தலோகம்

"அசிரீரியாருக்கு ஆசாரமாகப் பேசத் தெரியும் போலிருக்கு; வந்தவனை வாவென்று கேட்பாரில்லை; இருட்டில் திண்டாட விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது இந்த இடத்துச் சம்பிரதாயம் போலும்" என்று நான் முழங்காலைத் தடவிக் கொண்டே கேட்டேன்.

"எங்களுக்குத் தெரியாததைப் பற்றி நீ பேசிக்கொண்டிருந்தது போதும்; உடனே, எதிரே தெரிகிறதே வாசல், அதன் வழியாகப் போனால் பாதாள கங்கை ஓடுகிறது. அதில் போய்க் குளி. இல்லாவிட்டால் உடம்பு வெந்து போகும். நீ உடம்பில் பூசிக்கொண்டிருக்கிறது கார்கோடக பாஷாணம் சேர்ந்த ரசக்குழம்பு. வெளி வெக்கை இருந்தால்தான் உடம்பைப் பாதுகாக்கும். இல்லாவிட்டால் உடம்பையே தின்றுவிடும். எலும்புக்கூடுகூட மிஞ்சாது" என்றது அசரீரிக் குரல்.
எனக்குப் பகீர் என்றது. விழுந்தடித்துக்கொண்டு எழுந்தேன். "நீரும் என் கூட வாருமே; பேச்சுத் துணையாக இருக்கும்" என்று சொல்லிக் கொண்டு பிலத்தின் வழியாக பாதாள கங்கைக்குச் சென்றேன். பிரமாண்டமான பாம்புப் பொந்து போல பூமியைக் குடைந்துகொண்டு நதி வேகமாக ஓடியது. இருட்டுக்கும் ஜலத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஜலத்தில் கால் வைத்தேன். ரொம்ப ஜில்லென்றிருந்தது. ஒரு முறை சென்றிருக்கிறேன் மானஸரோவரத்துக்கு; அந்தத் தண்ணீர் அவ்வளவு ஜில்லென்றிருந்தது. வெகு நேரம் தண்ணீரில் துளைந்தால் முடக்குவாதம் வந்துவிடக்கூடாது என்று இரண்டு மூன்று முக்குப் போட்டுவிட்டுக் கரையேறினேன். ஆற்றில் இறங்கியதுதான் தாமசம், உடம்பில் பூசியிருந்த வர்ணச்சாயம் அப்படியே கரைந்து போய்விட்டது. கரையேறி உடம்பைத் துடைத்துக் கொண்டு நிற்கும்போது, தண்ணீரில் மின்னல் கொடிகள் போல அப்பொழுதைக்கப்பொழுது தெரிந்து மறைந்தது. சூரிய வெளிச்சமே படாத இந்த பிலத்தில் கூட ஜல ராசிகள் எப்படித் தோன்ற முடியும் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே நின்றேன்.
"வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்காதே. உன்னை ஸித்தலோகத்துக்கு அழைத்துச் செல்ல உத்தேசித்திருக்கிறேன். உனக்கு அங்கே சென்றால்தான் உணவு" என்றது அந்த உடம்பற்ற குரல்.
"ஸித்தலோகமா? அங்கே செல்வதற்கு இந்தப் பிலத்தினுள் வழி ஏது?" என்று கேட்டேன்.

"இதோ இந்த பாதாள கங்கை இருக்கிறதே இதன் வழியாக" என்றது குரல்.

"நீந்தியா?" என்று கேட்டேன்.

"குளிரும் என்று பயப்படாதே. உன்னை ஏற்றிச் செல்ல புணை வரும்" எனச் சிரித்தது அந்தக் குரல்.

"இந்த நதி எங்கிருந்து வருகிறது என்றா எண்ணுகிறாய்? இதுதான் பூலோகத்திலேயே பிரமாண்டமான நதி. இங்கிருந்து பத்து யோஜனை தூரத்திலுள்ள கன்னிச் சுனையிலிருந்து உற்பத்தியாகி கார்கோடகத் தீவுவரை கிழக்கு நோக்கிச் சென்று பிறகு அங்கிருந்து வடதிசை திரும்பி அங்கு காட்டினடியில் ஓடி, அங்கேயே மடிகிறது. பூமிக்கு அடியில் இதே மாதிரி இன்னும் எத்தனையோ நதிகள் உண்டு. அதோ வருகிறது பார் ஒரு புணை. நீ அதில் ஏறிக்கொண்டால் ஸித்தலோகத்துக்குப் போய்ச் சேரலாம்" என்றது அந்தக் குரல்.

அது பேசி முடிப்பதற்கு முன் அந்தப் புணை நான் நின்ற படிக்கட்டுகள் அருகில் வந்து தேங்கியது. என்ன கோரம். மூன்று நான்கு பிணங்களை, இல்லை முண்டங்களைச் சேர்த்துக் கட்டிய மிதப்பு. முண்டங்கள் தங்கம் போலத் தகதகவென மின்னின. இதில் ஏறிக் கொள்வதா?
"தயங்காதே; நெருப்பு என்றால் வாய் சுட்டுவிடுமா? அல்லது பிணம் என்றால் நீயும் பிணமாகிவிடப் போகிறாயா? தயங்காதே; ஏறி உட்கார்ந்துகொள்" என்று அதட்டியது அந்தக் குரல்.

நானும் சுவாதீனம் இழந்தவனைப் போல அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். மிதப்பு நகர ஆரம்பித்தது.
"நீயும் என்னுடன் வரவில்லையா" என்று கேட்டேன்.

"இதுதான் என் எல்லை" என்றது அசரீரி.

"பிறகு எப்பொழுது சந்திப்பது?" என்றேன்.

"ஸித்தலோகத்தில்" என்றது அசரீரி.

"எல்லையும் எல்லையற்ற தன்மையுமா?" என எனக்குள்ளாகவே எண்ணமிட்டேன். பிரேதப் புணை வெகு விரைவாகச் செல்ல ஆரம்பித்தது. நதியின் வேகத்தைவிடப் பன்மடங்கு வேகமாகத் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு சென்றது.

நான் பிணத்தின் மீது உட்கார்ந்தபடி ஜலத்தைப் பார்ப்பதும் இருட்டைப் பார்ப்பதுமாக இருந்தேன். திடீரென்று உஸ் என்ற இரைச்சல் கேட்டது. புணைக்குக் குறுக்காகக் கருநாகம் ஒன்று படமெடுத்துக் கொண்டு சீறிக் கொண்டு நீந்திச் சென்றது. பயம் பன்மடங்கு அதிகமாக இருந்தது. தலை கிறங்கும்படியாகப் புணையின் வேகமும் அதிகமாக இருந்தது. எத்தனை நேரம் கழிந்ததோ?

புணை வேகம் குறைய ஆரம்பித்தது. பிறகு மெதுவாக வலது கரையில் சென்று ஒதுங்கியது. நான் பதனமாகக் கரையில் கால் வைத்தேன். இங்கே முன் போல பாதையில்லை. மணற்பாங்காக இருந்தது.

என்ன அதிசயம்! நான் திரும்பிப் பார்க்குமுன் புணையாக வந்த கவந்தங்கள் எழுந்து கரையேற ஆரம்பித்தன. அவை கரைக்கு வந்து நின்றதுதான் தாமசம். அவை தலை பெற்றன. மனிதத் தலைகளா! அல்ல. மாட்டுத் தலைகள். அவற்றின் நெற்றியில் பிரகாசமான கண் போன்ற துவாரம் தெரிந்தது.
"வாருங்கள் போகலாம்" என்றன அந்த நான்கு அதிசயத் தோற்றங்களும்.

நான் தயங்கினேன்.

"இதுதான் ஸித்தலோகம். மாடர்கள் அல்லது நந்திக் கணங்கள் என எங்களைச் சொல்லுவார்கள். பயப்படாமல் வாரும்" என்று சொல்லிக் கொண்டு எனது வருகையை எதிர்பார்க்காமலேயே நடக்க ஆரம்பித்தன. நானும் தொடர்ந்து நடந்தேன்.

விசித்திர விசித்திரமான தாவர வர்க்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. பூமியின் சிசுப் பருவத்திலே தோன்றிய தாவர வர்க்கங்கள் என்று சொல்லுவார்களே சயன்ஸ்காரர்கள் அவை போன்றவை. பிரமாண்டமான நாய்க்குடைகள், தாழைகள், கொடிகள் விசித்திர விசித்திரமாக முளைத்திருந்தன. ஆனால் அவை யாவும் பொன் போலும் வெள்ளி போலும் மின்னின. இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஏழு வர்ணங்களிலும் தண்டு முதல் இலை வர பளபளவென சாயம் பூசி வைத்த மாதிரி நிற்கும் விருக்ஷங்களைக் கண்டேன். அதிலே நீல நிறமான கருநாகங்கள் சோம்பிச் சுற்றிக் கிடந்தன. வழியிலே தங்கத் தகடு போல மின்னிய தவளை கத்திச் சென்றது.
மரச்செறிவுகளுக்கிடையே நந்திக் கணங்கள் மறைந்து விட்டனர். அவர்கள் எந்த வழியில் சென்றார்கள் என்பதைக் கவனிக்கவில்லை. கால்கொண்டு போன வழியே நடந்தேன். மரங்களுக்கிடையே திறந்த வெளி வந்தது.
அங்கே சமாதி நிலையில் பதினெட்டுப் பேர் அந்தரத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கடியிலும் வெள்ளி போன்ற ஒரு உருண்டை இடையறாது சுழன்றுகொண்டிருந்தது.

"வா அப்பா, வந்து உட்காரு" என்றார் தலைவராக அமர்ந்திருந்த ஸித்த புருஷர்.

அத்தனை பேருக்கும் உருவபேதம் கற்பிக்க முடியாதவாறு ஒரே அச்சில் வார்த்த சிலைகள் போன்றிருப்பதைக் கண்டு அதிசயப் பட்டேன்.

"உடம்பை இஷ்டப்படி கற்பித்துக்கொள்ள முடியாதா? இருந்து பார் எப்படி என்பது தெரியும்" என்றார் அவர்.
நான் அவரது காலடியில் அமர்ந்தேன்.

"உனக்குப் பசிக்குமே" என்று சொன்னார்.

நந்திக் கணத்தில் ஒருவன் தோன்றினான். முகத்தைக் கழற்றி வைத்தான். அப்பொழுதுதான் மாட்டின் தலையை அப்படியே வெட்டி எடுத்துப் பதனிட்டுச் செய்த முகமூடி என்பதைக் கண்டேன்.

"இது பூர்வீக காலத்துத் தலைக் கவசம், இரும்பு தோன்றுவதற்கு முன்" என்றார் ஸித்த புருஷர்.
நந்தி நேராக எதிரே இருந்த ஒரு விசித்திரமான மரத்தினடியில் சென்றான். இலைகள் அவனைத் தழுவிக் கொண்டன. மரத்தின் பாம்புக் கைகள் அவனைச் சுற்றிச் சுற்றிப் பின்னின.

சற்று நேரங்கழித்து இலைகள் தானாக விலகின. அதனடியிலிருந்து விழுந்தது ஒரு எலும்புக் கூடு.
ஸித்த புருஷர் ஏதோ துரட்டி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அதை மரத்தினடியிலிருந்து இழுத்துப் போட்டார். எலும்புகள் பற்று விடாமல் பூட்டோ டு அப்படியே வந்தன. வேறு இரண்டு நந்திகள் வந்து எலும்புக் கூட்டைத் தூக்கிச் சென்றார்கள்.

"இங்கே பிரபஞ்ச நியதிப்படி பிரஜோற்பத்தி கிடையாது. அதனால் ஒவ்வொரு எலும்புக் கூடும் அத்யாவசியம்" என்றார் ஸித்த புருஷர்.

இவர் என்ன, நம்மைப் பசிக்கிறதா என்று கேட்டுவிட்டு வீண்கதை பேசுகிறார் என்று நினைத்தேன். எதிரிலிருந்த மரம் எருமை முக்காரம் போடுவதுபோலக் கனைத்தது! சில மரங்களில் அதன் பால் நாளங்கள் வழியாக வேகமாக ஓடும் போது கனைக்கும் சப்தம் கேட்கும் எனப் படித்திருக்கிறேன். நரமாம்ச பட்சணியான இந்த மரமும் அப்படித்தான் போலும்.
ஸித்த புருஷர் அருகில் இருந்த அம்பு ஒன்றை எடுத்து வீசினார். வெறும் சதைப்பற்றில் பாய்வது போல புகுந்தது.
அம்புடன் தொடுக்கப்பட்டிருந்த கயிற்றின் வழியாக அதன் பால் வழிந்து ஓடிவந்து ஒரு பாத்திரத்தை நிறைத்தது. பாத்திரம் நிறைந்ததும் மரத்திலிருந்து அம்பை உருவினார். கொப்புளித்து வந்த பால் சற்று நேரத்தில் காய்ந்து மரத்தோடு மரமாகிவிட்டது.

பாலை எடுத்து என்னிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மனிதனைத் தின்ன மரத்தின் பாலையா சாப்பிடுவது!
நான் விழித்தேன்.

சுடுகாட்டு மாமரத்துப் பழம் தின்பது என்றால் விரசமாகத் தெரியவில்லையே? சாப்பிட்டுத்தான் பாரேன் எப்படி இருக்கிறது என்று" என ஸித்த புருஷர் சிரித்தார்.
நானும் எடுத்துப் பருகினேன். பசி களைப்பு எல்லாம் பஞ்சாய்ப் பறந்து உடம்பிலே புதிய சக்தியும் தெம்பும் உண்டாயின. "இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சாக்காடு இல்லை" என்றார்.

"கடல் கொண்ட கோவிலில் உள்ள கன்னி யார்?" என்றேன்.
"அவளா! அந்தக் காலத்தில் உனக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள். பூசாரி சடையன் மகள். இன்று காவல் தெய்வம்" என்றார் ஸித்த புருஷர்.

"ஞாலத்தில் யாத்திரை செய்வது போல காலத்திலும் யாத்திரை செய்து பார்க்கப் பிரியமா?" என்று கேட்டார்.
"அது எப்படி முடியும்?" என்று கேட்டேன்.

"இதோ சுழன்று கொண்டே இருக்கிறதே அந்த ரஸக் குளிகையைப் பார்த்துக் கொண்டு" என்றார்.

3. குமரிக்கோடு

"ரஸக் குளிகையைப் பார்ப்பது இருக்கட்டும்; நான் எங்கே இருக்கிறேன்?" என்றேன்.

"ஈரேழு பதினான்கு லோகங்களில் இது ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?" என்றார் ஸித்த புருஷர்.
"நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை. சிந்திப்பதற்கு லாயக்கில்லாதபடி புத்தி குழம்பிக் கிடக்கிறது" என்றேன் நான்.

"புத்தி குழம்புவதற்கு இங்கே உனக்கு ஊமத்தைச் சாறு பிழிந்து யாரும் கொடுக்கவில்லையே?"

"இயல்பு என நான் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக இங்கே காரியங்கள் நடந்துகொண்டிருக்கும்போது ஊமத்தைச் சாறு வேறு அவசியமா?" என்றேன்.

"இயல்பு என்று நீ நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக எதுவும் நிகழந்தால் அதை இயல்புக்கு மாறானது என்று நிச்சயப்படுத்தி விடலாமா?" என்றார் ஸித்த புருஷர்.
"உடலற்ற தலை பேசுவதும், உடம்பற்ற குரல் துணை வருவதும், தலையற்ற முண்டம் புணையாகவும் பிறகு வழிகாட்டியாகவும் உயிர் பெறுவது என்றால் அது எனக்குக் கொஞ்சம் அதிசயமாகத்தான் இருக்கிறது. நான் பிறந்து நாளது வரையில் நடமாடிய உலகத்தில் அந்த மாதிரி நடந்தது கிடையாது. அங்கே செத்தவர்கள் செத்தவர்கள்தான்" என்றேன்.

"சாவு என்பது என்ன?" என்றார் ஸித்த புருஷர்.
"'உறங்குவது போலும் சாக்காடு - உறங்கி விழிப்பது போலும் உயிர்ப்பு' என்று சொன்னால் உங்களுக்குத் திருப்திதானே?" என்றேன்.

"நீ திருக்குறள் படித்திருக்கிறாய் என்பதை எனக்குச் சொல்லிக் காண்பித்தது போதும். சாக்காடு என்றால் என்ன?" என்றார் ஸித்த புருஷர் மறுபடியும்.

"அது என்னதென்று சொல்லத் தெரியாமல்தான் எங்களுடைய சமய சாஸ்திரங்கள் தவிக்கின்றன" என்றேன்.

"எங்கள் உங்கள் என்று பேதம் பேசினது போதும்; நானும் உங்களவன் தான். உனக்குத் தெரியாமல் போனால் இல்லை என்று சாதித்துவிடுவாய் போலிருக்கிறதே."

"நிச்சயமாக ஏகோபித்த அபிப்பிராயம் இல்லாதவரை..."
"சமய சாஸ்திரத்தின் நிச்சயத்தன்மை பற்றி பிறகு பேசிக் கொள்வோம். சாவு என்றால் என்ன என்பது நிச்சயமாக உனக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொள்."

"நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு மேலே சொல்லுங்கள்."

"செத்த பிறகு என்ன நடக்கிறது? மூச்சு நின்று விடுகிறது. ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. ஸ்மரணை கழன்றுவிடுகிறது. நீ உடம்பு என்று சொல்லுகிறாயே அது பல அணுக்களின் சேர்க்கையிலே, அவை சேர்ந்து உழைப்பதிலே உயிர்த் தன்மை பெற்றிருக்கிறது. அது அகன்றவுடன் அணுக்கள் தம் செயலை இழந்துவிடுவதாகப் பொருள் அல்ல; அவை சேர்ந்து உழைக்கும் சக்தியை இழந்துவிடுகின்றன; அவ்வளவுதான். அவற்றைத் தனித்து எடுத்து அவற்றிற்கு வேண்டிய ஆகாராதிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தால் அவை வளரும்..."

"ஆமாம்; அது சாத்தியந்தான்; எங்கள் லோகத்திலும் ஒரு வெள்ளைக்காரர் இதைச் செய்து காட்டியிருக்கிறார்" என்றேன்.

"இதை நீங்கள் வேறு செய்து பார்த்து திருப்தியடைந்திருக்கிறீர்களா? இதுதான் முதல் படி. இதற்கப்புறந்தான் விவகாரமே ஆரம்பிக்கிறது. மரணத்தில் எத்தனை வகையுண்டு என்பது தெரியுமா? கிழடு தட்டிச் சாவது ஒன்று; பிஞ்சிலே மடிவது ஒன்று; நோய் விழுந்து மடிவது ஒன்று; பிறகு திடகாத்திர தேகத்துடன் இருந்து வருகையில் அணுக்களின் சேர்க்கையைத் துண்டிப்பதால் ஏற்படுவது ஒன்று; இந்த மாதிரி மரணத்தில் எத்தனையோ வகை. ஆதி காலத்தில் நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்களே அதனால் எவ்வளவு உபயோகம் இருந்தது தெரியுமா? எமனை எட்டி நிற்கும்படிச் சொல்வதற்கு எங்களுக்கு சக்தி கிடைத்ததெல்லாம் இதனால்தான்..."

"நாம் அநாகரீகமானது எனக் கண்டித்துக் கொண்டிருந்த ஒரு காரியம் ஆதிகாலத்தில் சாஸ்திர வளர்ச்சிக்கு எவ்வளவு துணை செய்திருக்கிறது" என நான் எண்ணமிடலானேன்.
"கழுத்துடன் அரிந்து உயிரைப் போக்கிவிட்ட பிற்பாடு அணுக்களின் நசிவு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியுமானால், அதாவது அதில் உள்ள உயிர்ப்பை மட்டும் அவிந்து போகாமல் காப்பாற்றிக் கொண்டால், அந்த உடம்பை நம் இஷ்டப்படி இயக்கலாம் அல்லவா?"

"உதாரணமாக?"

"வெறும் மூளை இருக்கிறதே; அதுதான் மனம் புத்தி சித்தம் என்பனவற்றிற்கெல்லாம் ஆதார கோளம் என்பது உனக்குத் தெரியுமா? பழகிக் கொண்டால் பக்கத்தில் உள்ளவரை நம் இஷ்டப்படி ஆட்டி வைக்க முடியும் என்பது தெரியுமல்லவா?"

"ஆமாம். அது சாத்தியந்தான். நான் கூட நேரில் பார்த்திருக்கிறேன்."

"அதே மாதிரி ஜீவனை அகற்றிய தலையைத் தூர வைத்துவிட்டு, அதன்மூலம் அங்கு நடப்பதை அறியலாம். அங்கு நாம் விரும்புவதை நடத்தலாம். அதே மாதிரி தலைகள் மூலம் உடற்கூறுகளை நம் இஷ்டப்படி இயக்கலாம். இதெல்லாம் வெறும் பொம்மலாட்டம். பிரபஞ்ச தாதுக்களின் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு உயிர்ப்பை மட்டும் உடம்பில் காப்பாற்றி வைப்பதற்கு முடியும்..."
"அப்படியானால் நான் முதலில் கோவிலுக்குள் நுழைந்த போது அந்தக் கன்னியின் சிரசின் மூலம் தாங்கள்தான் பேசினீர்களோ" என்று கேட்டேன்.

ஸித்த புருஷர் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தச் சிரிப்பிலே நாக சர்ப்பத்தின் சீறலும் தொனித்தது. எனக்கு வெகு பயமாக இருந்தது.

என் மனசில் ஓடிய எண்ணங்கள் எல்லாம் அவருக்கு வெட்ட வெளிச்சம் என்பதை உணர்ந்துகொண்ட எனக்கு இன்னும் பீதி அதிகமாயிற்று.

நான் பயத்தைக் காட்டிக்கொள்ளவில்லை. "தூரத்தில் பேசுவதற்கும் பொருள்களை இயக்குவதற்கும் நாங்கள் எங்கள் லோகத்தில் வெறும் ஜடப் பொருள்களையே உபயோகிக்கிறோமே. அந்தக் காரியத்தை நடத்துவதற்காக உயிர்க் கொலை செய்வது அநாவசியம்தானே?" என்றேன் நான்.

"நீங்கள் ஜடப் பொருள்களை இயக்கி காரிய சாதனை செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஜடப் பொருள்களை இயக்குவது என்றால் ஜடத்துக்குள் வசப்பட்டு அதன் நியதிகளுக்கு இணங்கி, தானே காரியம் நடக்கிறது. உங்களுடைய காரியங்களைப் புயல்கூடத் தடுத்துவிடுமே; எங்களுக்கு அப்படியா? எரிமலையைத் தாண்டிக்கொண்டு எங்கள் எண்ணங்கள் செல்லுகின்றனவே; உங்களுக்கு அப்படியா? நீங்கள் பேசினால் அங்கே குரல் கேட்கும்; அதாவது உங்கள் குரல் கேட்கும்; இங்கு அப்படியா? நீங்கள் ஜடப் பிராணனை உபயோகிக்கிறீர்கள். நாங்கள் அதற்கும் நுண்தன்மை வாய்ந்த சூட்சுமப் பிராணனை உபயோகிக்கிறோம். அது கிடக்கட்டும். நான் கேட்பதற்குப் பதில் சொல்லு; நீ காலத்தில் யாத்திரை செய்ய விரும்புகிறாயா? சொல்லு."

"நான் எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன். முதலில் நீங்கள் ஏன் இங்கு வரவேண்டும். ஏன் பூலோகத்துக்கு வரக்கூடாது? நீங்கள் பேசுவதற்கு உபயோகமாகும் சிரமுடைய கன்னி யார்? இதெல்லாம் தெரியச் சொல்ல மாட்டீர்களா?" என்று கேட்டேன்.

ஸித்த புருஷன் சிரித்துக்கொண்டு "பூலோகத்தில் எங்களுக்குக் கிடைக்காத சௌகரியங்கள் எல்லாம் இங்கு கிடைக்கும்போது நாங்கள் ஏன் அங்கு வர வேண்டும்? மேலும் எங்கிருந்தால் என்ன? நாங்கள் இப்போது பூலோகத்தில் இல்லை என்பதை நீ எப்படிக் கண்டாய்?" என்று கேட்டார்.

நான் அவரது வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவர் மேலும் பேசலானார்.

"இப்பொழுது நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடம் ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலே பெரியதொரு மலைத் தொடராக இருந்தது. இந்த எரிமலை இருக்கிறதே, அது அந்தக் காலத்தில் கிடையாது. பனிக்கட்டிகள் மூடிய பெரும் மலைகள் இந்த இடமெல்லாம். இதற்குத் தெற்கே அகண்டமான பெரியதொரு நிலப்பரப்பு இருந்தது. அதில்தான் உன்னுடைய மூதாதைகளும் என்னுடைய மூதாதைகளும் வாழ்ந்து வந்தார்கள். இந்த மலையிலிருந்து புறப்பட்டு இரண்டு நதிகள் ஓடின. ஒன்று குமரியாறு. அது கிழக்கே கடலில் சங்கமமாயிற்று. மற்றது பல்துளியாறு என்பது. அது இங்கிருந்து புறப்பட்டு ஏழு பாலைவனங்களைக் கடந்து ஏழ்பனை நாட்டின் வழியாக ஈசனை வலம் வந்து மறுபடியும் தென் திசை நோக்கியோடி, பனிக்கடலுள் மறைந்தது. பனி வரையில் பிறந்து பனிக்கடலில் புகுந்தது பல்துளியாறு. குமரி நதி கீழ்த்திசைக் கடலில் சங்கமாகுமிடத்தில்தான் தென்மதுரை இருந்தது. அதில்தான் பாண்டியர்கள் மீன் கொடியேற்றி மீனவனை வழிபட்டார்கள். அவர்கள் குலதெய்வம் மீன்கண்ணி.

படைப்புக் காலந்தொட்டே வழிபட்டுவரும் சிலை அது. அதற்குப் பூசனை நடத்தி வந்தவள் கன்னி. படைப்புக் காலந்தொட்டு ஜீவித்து வருகிறாள் அவள். உன்னைப் போல உன் வயசிலிருக்கும் போதும் அவளைக் கண்டேன். எனக்கு முந்தியோரும் அவளை அப்படியே கண்டு வந்திருக்கிறார்களாம். மீன்கண்ணியின் ஆலயம் ஆதியில் தென்மதுரையில் இருந்தது. நீரிலே நெருப்புத் தோன்ற தென்மதுரை அழிந்தது. நிலப்பரப்பு குன்றியது. பிறகு மீன்கண்ணியின் சிலை, அதே சிலை கபாடபுரத்தில் ஈசனார் திருவடி நிழலிலே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கபாடபுரத்தை நிரூபித்ததும் அங்கு குடியேறியதும் வேலெறிந்த பாண்டியன் காலத்திலாகும்... கபாடபுரம் நிலப்பரப்பின் மையத்திலிருந்தது. மீண்டும் கடற்கோள். கடல் மீண்டும் நகரின் ஒரு பாரிசத்தைத் தொட்டது. அந்த நிலையில்தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சிம்மாசனமேறினான். அதன் பிறகு... மறுபடியும் மறுபடியும் சமுத்திர ராஜன் சீற்றங்கொண்டான்... கபாடபுரம் தென்மதுரை போல மூழ்கி மறைந்தது..."

ஸித்த புருஷர் பேசி நிறுத்தினார். நாங்கள் இருவரும் மவுனமாக இருந்தோம்.

எனது பார்வை இடையறாது சுழன்றுவரும் ரசக்கோளத்தின் மீது கவிந்தது. அதன் சுழற்சி நிதானமாக ஒரே வேகத்தில் வெளிச்சத்தைப் பிரதிபலித்தது...

4. கபாடபுரத்தின் அழிவு

நான் உற்றுக் கவனித்துக்கொண்டே இருந்தேன். சற்று சித்தம் கிறங்கியது. உடம்பிலிருந்து சுழன்ற புத்தி மட்டும் எங்கோ விரைந்து சென்றது. வேகத்தில் செல்லும் திசை தெரியவில்லை. நேரம் தெரியவில்லை. எதிரே பெரும் பாலைவனம் தெரிந்தது. என்ன சூடு என நினைப்பதற்குள் அவற்றை விட்டு அகன்று விட்டேன்.

மாலை நேரம். பிரமாண்டமான செம்புக் கதவின் முன் பக்கம் நின்றுகொண்டிருந்தேன். அது மேற்கே பார்த்திருந்தது. என்ன அற்புதமான வேலைப்பாடு! கதவைத் தள்ளித் திறப்பது என் போன்ற மனிதனால் இயலாத காரியம். உயரம் நூறடிக்கு மேலிருக்கும்; அகலம் இருபத்தைந்து அல்லது முப்பது அடிக்குள்ளாக இருக்காது. கதவின் இரு பக்கங்களிலும் நிமிர்ந்து நின்ற மதில் கற்களைச் செம்பை உருக்கி வார்த்துக் கரைகட்டியிருந்தார்கள். இந்தக் கதவு பிரமாண்டமானதொரு கற்பாறையின் உச்சியிலிருந்தது. வடபுரத்தில் ஆழமான சமுத்திரம். அலைகள் அதனடியில் வந்து மோதி நுரை கக்கின.

தென்புறத்தில் காடு. மரம் செறிந்த காடு குன்றினடியில் தென்பட்டது. உயர்ந்த விருக்ஷங்களுக்கு மேல் தனது கொக்குத் தலையைத் தூக்கி நின்று கொண்டிருந்த கர்ப்பேந்திரம் ஒன்று ஒரு யானையைத் தனது கைகளில் பற்றிக் கிழித்துத் தின்று கொண்டிருந்தது.
மேற்கே பெரிய மலை ஒன்று கனிந்து புகைந்து கொண்டு இருந்தது. அஸ்தமன செவ்வானத்தில் தென்பட்ட பிறைச் சந்திரன் எனக்கு இழை நெற்றிக்கண் நிமலனை நினைப்பூட்டியது. திரித்திரியாகத் திரிந்து படரும் புகை சடையையும், கனிந்த உச்சி நெற்றிக் கண்ணையும் நினைப்பூட்டியது.

அதிசயப்பட்டுக்கொண்டே நின்றேன். பிரமாதமான பேரியும் வாங்காவும் மணிச்சத்தமும் கேட்க ஆரம்பித்தது. கதவு மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது.

ஊர்வலத்தின் முன்னால் பூசாரி சடையன் பவித்திரமாக நீறு அணிந்து இடையில் வைரவாள் சொருகி நடந்தான். அவனுக்குப் பின் அவள் வந்தாள். என்ன அழகு! அவளைப் பலியிடப் போகிறார்கள். அவளுக்குப் பின் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வந்தான். அவனுக்குப் பின் நான் வந்தேன். அதாவது என்னைப் போன்ற ஒருவன் வந்தான். கையிலே வேல்.

அவன் கர்ப்பேந்திரத்தைக் கண்டான். அதன்மேல் வீசினான். வேல் குறி தவறி அதன் ஒற்றைக் கண்ணைக் குருடாக்கியது. ஐந்நூறு அடி உயரமுள்ள மிருகத்திற்கு இந்த குன்று எம்மாத்திரம்! அதன் கோரக் கைகள் பூசாரி சடையனைப் பற்றின. சடையன் தனக்கு மரணம் நிச்சயம் என்று தெரிந்துகொண்டாலும், வைரக் கத்தியைக் கொண்டு அதன் குரவளையில் குத்தினான். சடையன் தலை அந்த மிருகத்தின் கோர விரல்களில் சிக்கி அறுபட்டது.
ஊர்வலத்தில் ஒரே களேபரம். தெறி கெட்ட மிருகம் எங்கே பாயுமோ என நாலா திசையிலும் சிதறி ஓடினர். கர்ப்பேந்திரமோ வலி பொறுக்கமாட்டாமல் மலையுச்சியை நோக்கி ஓடியது.

இந்தக் களேபரத்தில் என் சாயலில் இருந்த அவன் கன்னியை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடினான். அரசன் வாளுக்கும் கோபத்துக்கும் தப்பிவிடலாம் என்று. நேரே ஓடிய கர்ப்பேந்திரம் எரிமலையின் உச்சியில் சென்று பாதாளத்தில் விழுந்து மறைந்தது.

கடற்கரை நோக்கி ஓடியவர்கள், நீரிலே நெருப்புத் தோன்றிவரக் கண்டார்கள். அதே சமயத்தில் மண் மாரி போல சாம்பல் விழுந்தது. எரிமலை கர்ஜிக்கத் தொடங்கியது. அக்னிக் குழம்புகள் பாகாக உருகி ஓடிக் கடலில் கலந்து அதையும் பொங்க வைத்தது. கடலின் அலைகளோ ஊழியின் இறுதிப் பிரளயம் போலத் தலை தூக்கியடித்தன. நிமலன் நெற்றிக் கண்ணைத் திறந்தான். கபாடபுரத்தின் செப்புக் கதவுகள் பாகாக உருகியோடுவதைக் கண்டேன்.
பிறகு அலைச் சப்தம், பேரலைச் சபதம், ஒரே அலைச் சப்தம்.

******

நன்றி: சந்திரோதயம், 30-06-1945, 10-07-1945, 20-07-1945