Showing posts with label மௌனி. Show all posts
Showing posts with label மௌனி. Show all posts

Wednesday, August 27, 2014

நினைவுச் சுவடு - மௌனி & 'Genderole'. Rukmini Bhaya Nair & ஊரல் - இந்துமதி சுகுமாரன் (நடை (1968 -1970)

We are all in the gutter, but some of us are looking at the stars.

 















'Genderole'. Rukmini Bhaya Nair

Considerthefemalebodyyourmost
Basictextanddontforgetitsslokas 
|

......

We have wrung poems from household tasks
Carrying water, child, sorrow, can you do so much?

My worst fear is Sankara had I indeed been you
I might not after all have conceived anything new.

('Genderole'. Rukmini Bhaya Nair)

Distinctly dilterent from the work of most of the other women poets
publishing in India is the poetry of New Delhi—based academician Rukrnini
bhaya Nair, whose poems reflect the influences of cognitive linguistics and
critical theory that are her areas of scholarly expertise. Nair’s poery is hod
hybridized and innovative in its use of words. Nair uses two—line stanzas to
great effect, as seen in “Renoir’s Umbrellas”: “Holds out her hands to you /
Through bars of rain” (Bloodaxe Book 252). In “Convent,” the speaker captures
a moment when young girls in a convent school arc giggling at prayer time:
“And she wonders about prayer I The pity of it, the point” (Bloodaxe Book
254). Innovative and provocative in language and theme, Nair’s poem “Gend
erole challenges the reader to decode the single lines, each of which has
words running together as a single word in an imitation of the lengthy word
combinations of classical Sanskrit. The poem “Genderole” offers a critique of
traditional Hindu treatises on the roles of women as good wives, concluding
with the ironic twist that ilwonicn had been men, their conrihutions would
not have been the same: “Myworstfearisankaratharhadl —, indeedhecnyo
ulmightnorafterallhaveconceivedanythingnewtl” The woman speaker in
Nair’s poem addresses the Hindu philosopher Sankaracharya as an authority
from whom traditional roles of Hindu Women have been derived. Nair even
uses the S.inskrit punctuation ofa straight-line 1” for a period in this cleverly
composed hybrid poem.



நினைவுச் சுவடு - மௌனி

அநேகமாக தினம் மாலையில் அரைமணி நேரமாவது கடற்கரையில் உலாவிக் கழிப்பது என் வழக்கம். நேற்று என்னுடைய ஆபிஸ் அலுவல்கள் ஜாஸ்தியாக இருந்ததன் நிமித்தம், சிறிது நேரம் சென்றே வீட்டை அடைந்தேன். நாழிகை ஆகி விட்டாலும் மனது கொஞ்சம் நிம்மதி பெறவேண்டுமென்று வழக்கம் போல் கடற்கரைக்குச் சென்றேன். கடற்கரையில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு கண்டு கொண்டிருந்தது. எட்டி மணலில் உட்கார்ந்து பொழுது போக்குபவர்களுடைய வெளிக் கோட்டுருவங்கள் அந்த வேளையில் வசீகரத்தோற்றமாய் எனக்குத் தெரிந்தது. தூரத்தில் பக்க வசத்தில் உட்கார்ந்து எதையோ நோக்குவது போன்று இருந்த ஒருவன் எனக்குத் தெரிந்தவன் எனத்தோன்ற அவனை நெருங்கினேன்.

தனியாக உட்கார்ந்து இருந்த அவன் தன் முழங்காலைக் கட்டிக்கொண்டிருந்தான். சுமார் இருபது வருஷங்களுக்குப்பின் திடீரென்று என்னுடைய கல்லூரி சிநேகிதன் சேகரை அப்போது அங்கே பார்த்தது ஒரு அதிர்ச்சியாய்த் தான் எனக்கு இருந்தது. அவனும் நானும் இருபது வருஷங்களுக்குமுன் பட்டணத்தில் கல்லூரியில் சேர்ந்து படித்தோம். அன்றைக்குப் பார்த்தபடியேதான் நேற்று நான் பார்த்தபோதும் தோன்றினான். அதே முகக்களை, அதே கம்பீரமான பார்வை.

கடல் ஒலித்துக்கொண்டிருந்தது, கட்டுமரங்கள்  எல்லாம் கரை அடைந்துவிட்டன. காலந் தவறி வந்ததென இரண்டொரு கட்டுமரங்கள் வேகமாகக் கரையை நெருங்கி வந்துகொண்டிருந்தன. பாய் விரித்ததொன்று வெகு தூரத்தில் கடல் பரப்பில் தெரிந்தது. அமைதியற்ற தன்மையில் , எட்டி நெளியும் சாந்தமான சிற்றலைகள் கரை கண்டதும் அலைமோத ஆராவாரித்துக்கொண்டிருந்தன. சமுத்திரக் கரையில்  கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டிருந்தது. அவனோடு உட்கார்ந்து நான் என்ன பேசினேன் என்பது கிடையாது.  எதெல்லாமோ சம்பந்தமற்றுத்தான் நான் பேசினேன்.

படிக்கும்போதே அவன் ஒருவிதமான பையன். எல்லா மாணவர்களுடைய நன்மதிப்பிற்கும் உரியவன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரன் என்பதும் உண்மை. எல்லாரிடமும் அவன் நெருங்கிப் பழகி கிடையாதென்றாலும், என்னப்பற்றிய வரையில் அவன் என்னுடைய அந்தரங்க நண்பன்.


“சேகர் எப்போது வந்தாய் - என்ன விசேஷம் - ஊரில் எல்லோரும் சௌக்கியமா - என்ன செய்கிறாய் ...” என்று என்னவெல்லாமோ கேட்டு, ஒரு பதிலில் அவனைப்பற்றிய இருபது வருஷ சமாசாரத்தையும் அறிய முயன்று கொண்டிருந்தேன்.

அவனும் எனக்கு ஏதோ பதிலளித்துக்கொண்டிருந்தான். அவன் பேசுவதற்கு நானும் இடம் கொடுக்கவில்லை. சிறிது சென்று பேச்சு நின்றவுடன் அவன் முகத்தைத்தான் நான் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் பேச்சில் தனி அடக்கம் தெரிந்தது. வேறு அவன் ஒருவிதத்திலும் கடந்த இருபது வருஷமாக மாறவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. அதே வளைந்த மூக்கு உயர்ந்த புருவம், மிருதுவான கன்னங்கள். அதே இருபது வயதுக் கல்லூரி மாணவன் சேகர்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான் அவன் பக்கம் திரும்பினேன் ! பத்துப் பதினைந்து கஜம் முன்னால் நாலைந்து பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவர்களுக்குச் சுமார் இருபது வயதிருக்கலாம். குதூகலமாகப் பேசி வார்த்தையாடிக்கொண்டிருந்த அவர்கள்  ஏதோ கல்லூரி மாணவிகள் போலும். நன்றாக இருட்டிவிட்டது. அனேகமாக எல்லோரும், போய்விட்டனர். ஏனையோரும் எழுந்து புறப்பட ஆயத்தமானர்கள். எங்கள் எதிரே உட்கார்ந்திருந்த அப்பெண்களும் எழுந்தனர். பிறகு நாங்கள் சிறிது நாழிகை பேசிக்கொண்டிருந்தோம். “சரி வா சுந்தரம், நாழிகையாகி விட்டது. கிளம்பலாம்” என்று சொல்லி என்னுடன் அவனும் புறப்பட்டுவிட்டான்.

வீதியில் அதிக கூட்டமில்லை. எங்களுக்கு முன்பு அந்தப் பெண்கள் போய்க் கொண்டிருந்தனர். அவர்களைத் தவிர பார்வையைக் கொள்ள வீதியில் ஒருவரும் இல்லை. ஒரு தெரு அவ்வீதியைக் குறுக்கிட்டது. ஒருத்தியைத் தவிர மற்றப் பெண்கள் அந்தத் தெருவில் திரும்பினர். தனிப்பட்ட அந்தப்பெண் மட்டும் முன் செல்ல நாங்கள் சிறிது பின்னால் சென்று கொண்டிருந்தோம். மற்றும் ஒரு தெருவில் அந்தப்பெண்ணும் திரும்பினாள். அவளோடு அந்தத் தெருவில் அவள் பின்னால் சேகர் திரும்பினான். அவளோடு அந்தத்தெருவில் அவள் பின்னால் சேகர் போனபோதுதான், அவன் அப்பெண்ணைப் பின் தொடர்கிறான் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. நாங்கள் பேசவில்லை. அவள் பின் மெல்லமாகச் சென்றோம்..... சிறிது சென்று அந்தத் தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டிற்குள் அப்பெண் மறைந்துவிட்டாள். அருகில் இருந்த ஒரு கடையில் சேகர் நின்றான். ஒருதரம் வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டான். தன் மனத்தை ஒரு விதத்தில் சமாதானம் செய்து கொள்ளவே அவன் அந்தக் கடை வாயிலில் நின்றான் போலிருந்தது. அவ்வீட்டை அவன் முன்னால் சென்று கடக்கும்போது, அந்த வெளிச்சத்தடியில் அவன் நடை அவன் மனம் போல் கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்ததாய் எனக்கு ஒரு தோற்றம். அந்த வீட்டை அனேகமாக நாங்கள் கடந்துவிட்டோம் .....

“சேகரா - வரக்கூடாதா...” என்று ஒருஅசரீரியான சப்தம் எங்கள் காதில் விழுந்தது. அந்த வீட்டு வாயிற்புறம் இருட்டாக இருந்தது... எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்! கனவில் நடப்பவனேபோன்று சேகரன் அவ்வீட்டினுள் நுழைந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பின்னால் நானும் உள்நுழைந்தேன். அந்தக் குரல் அவனுக்குத் தெரிந்தவர்களுடையதா என்றும் அவன் அறிந்தவனா என்பதிலும் சந்தேகம். ஆனால் அது சிறிது முன் உள் நுழைந்த அந்த பெண்ணுடைது அல்ல.  அவ்வளவு குழைந்து  அப்பெண் அவனைக் கூப்பிடுவாள் என்ற எண்ணத்தை என் மனது அப்போது ஏற்க மறுத்தது போலும். ஒருக்கால் அவனே பட்டணம் வந்ததும் அவ்விடத்தில் தங்கியிருந்தால்? அதுவும் இல்லை; உள் நுழைய அவனுக்கு ஏன் அவ்வளவு தயக்கம்? வாயிற்படியை மிதித்ததும் இருட்டிலிருந்த வந்தவள்...“உள்ளே வர என்ன இவ்வளவு தயக்கம்? வீட்டிற்கு வா... உன்னை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உன் விஷயத்தில் எதிர்பார்ப்பது ஒன்றும் நடக்காதுதான்” என்றாள். சேகரன் மெதுவாய்ச் சிரித்தான். அவள் பேசின குரல் ஒரு மாதிரியாகக் கம்மலாய் இருந்தது. அவள் என்னைக்கவனிக்காதது போலவே அவனை அணைத்துக்கொண்டு உள்ளே சென்றதும் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. உள்ளே நுழையும் முன்பே, எதிரே ஒரு விசாலமான கூடம் பிரகாசமாகத் தெரிந்தது. நடை மிகவும் இருட்டாக இருந்தது. நடையைக் கடந்து வரவேற்புக் கூடத்திற்குச் சென்றபோதுதான் அவளைக் கவனித்தேன். என்னை அப்போதுதான் கவனித்தவள் போன்று அவள் சேகரனைத் தன்  அணைப்பினின்றும் விடுவித்தாள். எதிரே இருந்த ஒரு சோபாவில் அவள் உட்கார்ந்தபோது அவன் பக்கத்திலேயே அவள் அமர்ந்தாள்.

அவள் அரை இருட்டில் சமுத்திரக்கரையில் கண்ட அந்தப் பெண்ணைப் போலவேதான் இருந்தாள். இருந்தாலும், அவள்தான் என்று நிச்சயிக்க முடியாத வகையில் கொஞ்சம் வயதில் பெரியவளாகத்தான் தோன்றினாள். முக்கியமாக அவள் அல்ல என்பதற்க்குக் காரணம் அந்தப் பெண் சேகரிடம் இப்படி நடந்து கொண்டிருக்க முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. எதிரே உட்கார்ந்திருந்த என்னை அவர்கள் கவனிக்கவில்லை.

“பிரியமான சேகரா, என்னை நீ மறந்தது சரி...நானும் உன்னை மறப்பது பிசகல்ல. ஆனால் முடியவில்லையே...”

என்னைப் போலத்தான் அவளும் அவனை வெகு நாட்கள் கழித்து அன்று சந்திக்கிறாள் போலும், அந்த எதிர்பாராத சந்திப்பின் அதிர்ச்சி அவளை வெகுவாக வசீகரப்படுத்தியது. கடற் கரையில் நாங்கள் பார்த்த பெண்ணைக் கூடத்தில் காணவில்லை; சேகரனோ ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளக் கிளர்ச்சி அவனை மௌனமாக்கியது போலும்.

ஆனால் அவன் முகம், ஆம், அவன் முகம் எவ்வளவு வசீகரம் கொண்டு விட்டது! இளமையின் தனி சோபை அதில் தெரிந்தது.

“சுசீலா-என் ஞாபகம் இன்னுமா உனக்கு இருக்கிறது? உன்னை மறுபடியும் பார்ப்பேன் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. இன்று கடற்கரையில்தான் ஏதோ ஒன்று என்னுள் புரண்டது. இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு நாள் ஆனபின் உன்னை இப்படிக் காண முடியுமென்று நினைக்கவில்லை...”

அவள் பெயர் சுசீலா. அவள் வெகு அழகாக இருந்தாள். ஒரு வசீகரமும், வயது நிர்ணயிக்கவேண்டுமென்ற எண்ணமே தோன்றாத ஒரு வற்றாக்களையும் அவள் முகத்தில் புகுந்திருந்தன. சேகரன் பழைய காலத்தில் இம்மாதிரியாகப் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறான் என்றாலும் இப்போது அவன் இந்த விஷயத்தில் எப்படி என்பது எனக்குத் தெரியாது. படித்து முடித்த பின்பு கல்யாணம் செய்து கொண்டு அவன் தன் ஊரில் இருக்கிறான் இருக்கிறான் என்பது மட்டுமே எனக்குத் தெரியும்.

இருவரும் பக்கதில் அமர்ந்து இருந்தனர். எட்டிய நாற்காலி ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன். சுசீலா ஒரு பையனைக் கூப்பிட்டாள்.“பையா - காந்தா எங்கே? மாடியிலா? நான் கூப்பிடுவதாகச் சொல்லு. நீ வாசலிருந்துகொண்டு, யாராவது வந்தால் இன்று என்னைப் பார்க்க முடியாது என்று சொல்லிவிடு” என்றாள்.

அந்தக் கூடம் அவசியமற்ற சாமான்களால் நிரப்பப்படவில்லை. இரண்டு மூன்ற் சோபாக்களும் இரண்டொரு நாற்காலிகளும், நடுவில் ஒரு சிறிய மேஜையும்தான், அவைகளும் கண்களை உறுத்துபவையாக இல்லை. சுவரில் நாலைந்து படங்கள்தான் மாட்டப்பட்டிருந்தன. எனக்கு எதிரே ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் இருந்தது. அப்போது மணி எட்டு ஆகிவிட்டது.

இரண்டொரு நிமிஷத்தில் காந்தா உள்ளே நுழைந்தாள். அவளைத்தான் நானும் சேகரும் கடற் கரையில் பார்த்தோம். வந்தவள் எங்களைக் கண்டதும் கொஞ்சம் தயங்கினாள். சிறிது நேரம் சுசீலா அவள் வந்ததைக் கவனிக்கவில்லை போலும். திரும்பி மாடிக்குப் போகிறவள் போன்று திரும்பிய அவளை “என்ன காந்தா, நீ வந்ததே தெரியவில்லை. கொஞ்சம் அப்படி உட்கார்ந்து கொள்” என்று சுசீலா தன் அருகிலிருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக்காட்ட, தயக்கத்துடன் என் எதிரில் அவள் உட்கார்ந்தாள்.

சுசீலாவும் சேகரும் நான் இருப்பதையே, அல்ல நாங்கள் இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். இதில் ஆத்திரம் கொள்வதற்கு ஒன்றுமில்லை. வெகு நாட்கள் சென்ற பின் இந்த எதிர் பாராத சந்திப்பு அவர்களுக்கு எவ்விதமாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் புலனாகாமல் அவர்கள் எதிரில் வீற்றிருப்பது எனக்குக் கொஞ்சம் மதிப்பற்றுத் தோன்றியது. காந்தா என் எதிரில் இருந்ததால் மனக்கசப்புடன் இருந்தாள் என்று தோன்றியது-எனக்கு. அவள் முகம் வசீகரம் காட்டியும், மனது மட்டும் ஏதோ வேதனைக்குள்ளாகியது போல் அவள் உதடுகள் உறுதியாய் இருந்தன. அடிக்கடி அவள் கவனிப்புக் கொள்ளாத பார்வையுடன் மிரண்டு விழித்துக் கொண்டிருந்தான்

எட்டிய வெளியில் இன்பம் காண்பதைப்போல் சுசீலா அடிக்கடி காந்தாவைப்
பார்க்கிறாள். அவளைப் பார்க்கும்போது அவள் முகம் கொஞ்சம் மாறுகிறது. கொஞ்சம் வயதான தோற்றம் கொடுக்கிறாள். ஆனால் அருகில் அமர்ந்திருக்கும் சேகரனைப் பார்க்கும்போது, என்ன உள்ளக்கிளர்ச்சியோ, அவள் வெகு பாலியமாகத் தென்படுகிறாள். அவனோடு பேசும்போதோவெனில் அவள் குரலில் ஒரு தனி உதறல் தொனிக்கிறது.

 “நீ என்னைப்பற்றி என்ன எண்ணுகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கும் உன்னைப் பற்றிய எண்ணம் தெளிவாக இல்லை... ஆனால், இப்போது உன்னைப் பற்றிய பழைய எண்ணங்கள்  இனிமையாய் என்னைத் துன்புறுத்துகின்றனவே. அநந்தத்திலும் அவியாது என்னுள் இருந்து உன்னைப் பார்த்ததும் உணர்வு கொள்ளுவது எது? .... சேகரா”

அவள் ஒரு விலைமாது. ஒரு காலத்தில் சேகருடன் உறவு கொண்டாடியவள். எத்தனையோ பேர்களின் அடிச்சுவட்டைத் தாங்கிய மணல்பரப்புத்தான் அவள் உள்ளம். முன் நடந்தவன் சுவட்டை அழித்து நடப்பவரும், நடக்கும் போதே சின்னத்தைக் களைந்து நடப்பவரும் உண்டு. யார் எப்படி நடந்தால் என்ன, மணல் பரப்பிற்கு நடப்பவர் யாரென்று உணர்வு உண்டா? மயங்கிய எண்ணங்களில் தான் இன்பக் கனவு காண்பது? ....

காந்தா ஒரு புதிராக விளங்கினாள். அவள் யாரென்று தெரியவில்லை. ஒருக்கால் - சுசீலாவின் சகோதரியா இவள்? என்ன செய்கிறாள்? படித்துக்கொண்டிருக்கலாம். எனக்குள் அவளைப்பற்றி ஏதோ எண்ணங்கள் தோன்றலாயின. நேரமோ நிற்பதில்லை. எனக்கோ நாழிகை ஆகிக்கொண்டிருக்கிறது. நான் வீட்டிற்குப் போகும் நேரம் ஆகிவிட்டது. எனக்காக என் மனைவி மக்கள் காத்திருப்பார்கள். அவர்களுக்கு நேரமானதன் காரணம் நான் என்ன சொல்லப் போகிறேன்?

வாயிற்புறத் தோட்டத்தில் மரங்களின் இலை அசைவுச் சப்தம், சிறு தூறல் சப்தமாகக் கேட்டது. “மழையா?” என்று காந்தாவைப் பார்த்துக் கேட்டேன். “இல்லை. காற்றுதான்” என்று சொன்னாள். அநாவசியமானவனென்ற தோற்றத்தின் போது, அர்த்தமற்ற கேள்விகள் கேட்பதால்தான் ஒருவன் இருப்பதை நிரூபித்துக்கொள்ள முடிகிறது? காந்தாவுக்கு அந்த இடத்தில் இருப்பே கொள்ளவில்லை. அங்கிருந்து எப்படிப் போவது என்றும் புரியாமல் உட்கார்ந்து இருந்தாள். என் எதிரில் இருந்த அவளையும் நான் அடிக்கடி பார்க்கமுடியவில்லை.

காந்தாவை அடிக்கடி பார்த்துக்கொண்டே சுசீலா சேகருடன் பேசினாள். சுசீலா சேகருடன் பேசினாள் : “நீங்கள் அன்றுமாதிரியே இன்றும் தோன்றுகிறீர்கள். அதே முகத்தைத்தான் நான் பார்க்கிறேன். உங்களை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை...? இதோ காந்தா இருக்கிறாள் ... நீங்கள் பார்க்கவில்லை ...? உங்களிடம் சொல்லவில்லை .. நீங்கள் போகும் போது எனக்கு ஒரு மாதம் - இரண்டு மாதமாக இருக்கலாம்.... இவளுக்கும் தெரியாது. இவளைப் பார்க்கும் போது உங்கள் நினைவு வருகிறது ...” சுசீலா நிறுத்தி நிறுத்திப் பேசின பேச்சை நிறுத்தினாள். இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்கள் சிறிது கலக்கம் கொண்டன. “...ஆம், உங்கள் எண்ணம் கொள்ள காந்தா இருக்கலாம் ... எண்ணந்தானா ... உங்கள் நினைவா தெரிகிறது? ... மறைந்த காரணத்தை நான் காரியத்தில் எப்போதும் பார்க்க முடியவில்லை. இரண்டும் ஒன்றாக என் கண்முன் தோன்றும் போதுதானா இந்த உள்ளக்கிளர்ச்சி?....”

அவள் கண்கள் கலங்கிவிட்டன. எழுந்து காந்தாவிடம் வந்தாள். தாயாரைக் கண்டதும் எழுந்த காந்தாவை அணைத்துக்கொண்டாள். அவள் நெஞ்சம் ஒருதரம் விசித்தது... “காந்தா உனக்குத் தெரியவேண்டாமா யார் உன் தகப்பனென்று? இதோ சேகர்... இவர்தான். அன்று போனவரை இன்றுதான் நான் பார்க்கிறேன். ஆனால் என்றாவது ஒரு நாள் பார்க்க முடியும் என்ற  நம்பிக்கை எனக்கிருந்தது...” அவள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்து காந்தாவின் உச்சந்தலையில் சொட்டியது .... “இப்போது என்னுடைய எண்ணங்கள் எவ்வளவு இனிமையாக மனத்தைத் துன்புறுத்துகின்றன? என் வாழ்க்கை இனிக் கரைந்தாலும் பாதகமில்லை...” எங்கேயோ ஒரு நாயின் குரைப்புக் கேட்டது. “ஏய் பையா, ஏண்டா நாய் குரைக்கிறது? மாடியிலிருந்து அதை அவிழ்த்துவிடு...இல்லை, அங்கேயே இரு; நான் அவிழ்த்து விடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவள் மாடிக்குச் சென்றுவிட்டாள்.

காந்தா யௌவனத்துடன் விளங்கினாள். அவளுக்கு இருபது வயதிருக்கும். அவளை அப்போது என்னால் மதிக்க முடியவில்லை. அவள் பெண் என்றாலும், என் சிநேகிதன்  சேகரின் பெண் என்றாலும், என்னால் மதிக்கமுடியவில்லை. அவள் தன் தகப்பனாரைப் பார்த்து விட்டாள். அவளுக்குத் தன் தாயாரைத்தான் நன்றாகத்தெரியுமே, ஆனால், அவனைத் தெரிந்து கொள்ள வேண்டியது, அவசியமா என்ற கேள்வியாகத்தான் சேகரனைப் பார்த்து நின்றாள். அவன் பேசவில்லை. காந்தாவைப் பார்த்தான். அவனை அறியாமலேயே அவன் கால்கள் அவனை அவளிடம் இழுத்துச் சென்றன. அவள் அருகில் வந்தான். அவளை அணைத்துக்கொண்டான். துவண்டு அவனுடைய அகன்ற மார்பில் தலையைப் புதைத்து நின்றாள் காந்தா. அவள் உச்சந்தலையில் ஒரு முத்தமிட்டான். அவனாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவன் முகத்திலும் ஒரு முதுமை கண்டது. “காந்தா-காந்தா” மேற்கொண்டு அவன் ஒன்றும் பேசவில்லை.

உள்ளே சுசீலா நுழைந்தாள். அவள் பின் ஒரு நாய் துள்ளி விளையாடிக்கொண்டு ஓடி வந்தது. காந்தாவைப் பார்த்தும் அவளிடம் வந்து நின்றது. நாயைக் காந்தா கவனிக்கவில்லை. இருவரையும் பார்த்தாள் சுசீலா. அவள் ஒரு தாயானாள். அவளுக்கு வயது நாற்பதுக்கு மேலே கூட இருக்கலாம். அவள் கன்னம் பூமியைத் தொடும் வண்ணம் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.

காந்தா சொன்னாள் - அப்போது சேகர் வாயிற்படிப்பக்கம் சென்று கொண்டிருந்தான் -“அப்பா!” அவள் வாயில் அந்த வாயில் அந்த வார்த்தையின் உச்சரிப்பு விசித்திரமாக இருந்தது...“அப்பா, எங்கே போகிறீர்கள்? இங்கே இருக்கமாட்டீர்களா?” அந்தப் பேச்சில் சோகம் அந்த வீட்டையே சூழ்ந்ததை என் மனது உணர்ந்தது.

ஒரு முறை சேகரன் திரும்பினான். அவன் முகம் மிக மாறுதல் அடைந்து இருந்தது. அதில் வெறுப்புக் கூடத் தெரிந்தது. தன்னைத் தானே வெறுத்துக் கொண்டவன் தான் தன்னுள் தெம்பு குறைந்ததாக உணர்கிறான் போலும். அவனுடைய யௌவனக் களை ஒரு விநாடியில் அழிந்தது. அவனுக்கும், வயது நாற்பதுக்கு மேல்தான் ஆகிறது.

அவர்களால் அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் அந்த வீட்டைவிட்டு வெளிக் கிளம்பிவிட்டான். தெருவில் வந்தவுடன் சேகர் தெருவழியே போய்க் கொண்டு இருந்தான். அவன் என்னைக் கவனிக்காதபோது நானும் கவனியாமலே என் வீட்டிற்குச் சென்றேன். நான் வீட்டை அடையும்போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது.


தட்டச்சு : ரா ரா கு


- தேனி 1948


ஊரல் - இந்துமதி சுகுமாரன் (நடை (1968 -1970))


அவள் அவனுக்கு எதிரேதான் நின்றிருந்தாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபதடி தூரம். நடுவே வீதி இருந்தது. வீட்டு வாயிலின் நிலைப்படிக் கட்டையில் சாய்ந்து கொண்டு, உதடு பற்களின் நெளிவாய் அழுந்திய படி, கண்கள் கனவுக்கோலம் கண்டு கொண்டு - அழகாயத்தானிருந்தாள் அந்தப் போஸில். வெறும் பனியனோடு, கைகள் நெஞ்சைக்கட்டி அந்த முண்டாபனியனின் தோள்பட்டை வார்களை இழுத்து விட்டுக்கொண்டு, கண்கள் விரித்து அவளைத் தின்று கொண்டிருந்தான், தூர அவன் வீட்டினுள்ளிருந்து.

இப்படி எவ்வளவு நேரம்தான் நிற்பது? உடலசைவில்லாமல், கால் ஆடாமல், கண் மாறாமல்-நித்ய தவமா?

இப்படித்தான் இந்த இருவரும் ஒரு ஆறுமாதமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆடாமல், அசையாமல் ஒரு முன்னேற்றமுமில்லாமல், கேட்டால் தெய்வீகக் காதலாம். அவன் சொல்கிறான். என்ன தெய்வீகக் காதலாம். அவன் சொல்கிறான். என்ன தெய்வமயமோ? பேசாமல், கல்லாய் நிற்பதில் தெய்வதமோ?

அவளை அருகில் மூன்றடி தூரத்துக்கிள் - இரண்டே தரம்தான் பார்த்திருக்கிறான். வீதியில், திருவிழாத்தேர் வரும்போது கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்த போது ஒரு முறை. பக்கத்தில் இருந்தும் பேசாமலே தங்கள் காதலின் இறைத்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இந்த ஆறுமாதமும் போய் இன்னொரு ஆறும் போய் ஒரு வருஷமாகியது. ஊரில் இன்னோருதரம் தேர் வந்தது. அப்போதும்கூட நெருக்கத்தில் அருகருகே பார்த்துக்கொண்டார்கள், பேசாமல்.

அவளுடைய பெயர் அவனுக்கு காதல் ஆரம்பித்து ஒண்ணரை வருஷம் கழித்துத்தான் தெரிந்தது.

அது கூட யாரோ உரக்க அவள் வீட்டில் கூப்பிட அவள் திரும்பியதில் கண்டு கொண்டான். பேர் அவனுக்கு இனித்தது சொல்லிச் சொல்லி பார்த்துக் கொண்டான். எழுதி எழுதி அழித்தான். காதலின் தெய்வீகத்தனம் போகாமல் என்னென்ன செய்யணுமோ அவ்வளவும் செய்தான்.

இப்படி இருவரும் நின்று தவம் கிடப்பதற்கு நேரம் கூடக் குறித்து வைத்திருந்தனர். சரியான பகல் கிளம்பியதும் உண்டு. பின் களைப்பாறும் சமயம். அந்தி கலையும்போதுதான் ஆட்டம் முடியும். முதலில் வந்ததும் அவள் சிரிப்பாள். அவள் தயங்கிப் பின்னால் வாயை நெளிப்பான். பற்கள் லேசாகத் தெரியும்.

இன்னொரு வருஷம் போனது. தேர்த்திருவிழா எப்போதும்போல் வந்துபோனது. இப்பொழுது கணக்குப்படி சாலு தடவ அவர்கள் பக்கத்தில் பார்த்துக்கொண்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து ஒரு நாள் அவள் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள். அவன் முகம் நெளிந்தது. கவலைகூடத் தெரிந்தது. கண்கள் ‘ஏன்’ என்று தன்னறியாது கேட்டன. அவள் கழுத்தைச் சுற்றிக் கயிறு முடிப்பது போல் காட்டி, வீட்டுக்குள் திருப்பிக் கை காட்டி விட்டு இவனை நோக்கினாள். இவன்...? பேசாமல் காதலைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். அவளுக்குக் கோபம் வந்தது. தோள் பட்டையில் முகத்தை வளைத்து இடித்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.

மூன்று மாதம் கழித்து வளுக்கு யாரோ ஒருவனுடன் கல்யாணம் நடந்தது. ஊர்வலத்துக்குக் காரில் ஏறும்போது அவனப் பார்த்தாள். அவன் வீட்டையும் சேர்த்து தெரு முழுக்கப் பந்தல் போட்டிருந்தார்கள். அவனும் அன்று பனியனுக்கு மேல் நல்ல சட்டை போட்டு ஜோராக இருந்தான். மாப்பிள்ளை மாதிரி. பந்தலுக்குள் நின்று கொண்டு அவள் போகும் காரை ஒட்டிச்சென்றபடி அவளைப் பார்த்தான். (ஐந்தாவது தடவை) அவள் அவனை அலட்சியமாகப் பார்த்து முடிந்ததும் அவன் தன் வீட்டுக்குள் போய்விட்டான். தாலி கட்டப்படும்போதுகூட அவன் பார்க்கப்போகவில்லை. அவள் அவனை மறந்துவிட்டாள், சந்தடியில்.

கல்யாணமாகி அவள் எங்கேயோ போய்விட்டாள். இப்போது மத்தியானமெல்லாம் பொழுது போவது மிகக் கடினமாக இருந்தது, அவனுக்கு, பனியனின் தோள்பட்டை ‘வாரை’ இழுத்து இழுத்து விட்டுக் கொண்டபடி சுகமாக நின்றுகொண்டு பார்த்த காலமெல்லாம் போச்சு, வருத்தமாக இருந்தது. முன்பைவிட இப்பொழுது அவள் பற்றி நிறையக் கனவு கண்டான். எப்பொழுதும் அவள் தனக்குள்ளேயே இருக்கிறார்போல் நினைவு.

எட்டு மாதம் கழித்து வயிறு தள்ளிக்கொண்டு அவள் வந்து சேர்ந்தாள். மாப்பிள்ளை தூரதேசமாகையால் இத்தனை நாள் அனுப்ப சௌகரியப்படவில்லை. அவன் ஆசையாய்ப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள், ஆச்சரியத்துடன். ‘இன்னுமா இவன் பனியன் வாரை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டு நிற்கிறான்?’ அப்புறம் அவளுக்கு அவனைப்பார்க்க சௌகரியப்படவில்லை. இவனுக்கு மத்தியான நேரங்களில் பொழுது போகவில்லை. அவள் அந்த வீட்டுக்குள் தான் இருக்கிறாள் என்ற நினைவே போதாதா, அவனுக்கு, நின்று தவம் கிடக்க!

மூன்று மாதம் கழித்து அவளுக்குக் குழந்தை பிறந்தது. அவள் வீட்டுக்குள் யார், யாரோ போனார்கள். வந்தார்கள். அவன் நிற்பதை விடவில்லை.

ஒரு மாதம் கழித்து அவள் முன்போல் நடமாட ஆரம்பித்தாள். தோளில் குழந்தை இருந்தது. ஒரு நாள் காலையில் அவள் வெளியே நிற்கும் போது இவன் வேகமாக வந்து நின்றான். அவன் வீட்டு நிலைப்படியில்.. அவளைப்பார்த்து சிரித்தான். அவள் கொஞ்சம் மலைத்தபடி சிரித்தாள். திடீரென்று அவள் என்ன நினைத்தாளோ, விடுவிடென தன் வீட்டைவிட்டுக் கீழே இறங்கி வீதியைக்கடந்து அவன் வீட்டுப்படி ஏறி உள்ளே வந்தாள். அவன் நடுங்கிப்போனான். வியர்வைக்குளம், முகம், நெஞ்செல்லாம். வாய் கோணியபடி கண்கள் ஸ்தம்பிப்பு.

அவள் அப்படிப் புயலாய் வந்ததும், தாங்காமல், வீட்டுக்குள்ளே போகப்போனான். அவள் ‘ஏய்’ என்று கத்தினாள். அவன் அசந்து போய்த் திரும்பி அவளைப்பார்த்தான். அவள் பார்வையின் கூர்மை தாங்காமல் குனிந்தான். கண்கள் தரையிலேயே பதிந்து கிடந்தன.

‘இங்கே பார்’ என்றாள்.

அவளைப் பார்த்தான். பார்க்க முடியவில்லை. பார்வையை பழையபடி கீழே போட்டான்.

‘ம், இங்கே பார்’ . குரலில் ஆக்ரோஷம்.

இப்போது வேறு வழியில்லை. அவளது ரவிக்கையின் மேற்புஉறம் கழுத்துக்கு கீழின் சதை வெண்மையைப் பார்த்தபடி நின்றான். தோளின் மேல் சாத்தியிருந்த குழந்தையின் பிஞ்சுக்கைகள் தெரிந்தன. குழந்தையின் மேல் துணி போட்டிருந்தது.

‘ம். நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லு. ஏன் என்னைப் பார்க்கிறே’

‘ம். ம்.’ அவன் சப்தம் உள்ளே போனது.

‘நீ அழகாயிருக்கே பார்க்க ஆசை....’

‘பின்னே ஏன் என்கிட்டே பேசப் பயப்படறே’

‘அம்மா திட்டுவா’

‘பார்க்க ஆசையாயிருக்கல்லே?’

‘ம்.’ கண்கள் விரிந்தன.

‘என்னைக் கல்யாணம் பண்ணியிருக்கலாமில்லையா!’

‘ம்’ கண்கள் சிரித்தன, தோளில் கிடந்த குழந்தையைப் பார்த்து.

‘பின்னே ஏன்...?’

‘அப்பா திட்டுவார்’

அவனை ஏற இறங்கப்பார்த்தாள். ஆற்றாமையுடன் அவள் கண்களில் தோன்றிய உணர்ச்சி வீறலில் அவன் புழுவாய் மாறினான். அவனைப் பார்ப்பதே எரிந்தது.

‘ஹூம்’என்று ஆங்காரப் பெருமூச்சு விட்டபடி கீழே இறங்கினாள். வீதியில் இறங்கியதும், அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தொண்டையை விகாரமாய்ச் செருமிக்கொண்டு ‘தூ’ வென்று காறித்துப்பினாள்.

நேர தன் வீட்டுக்குள் போய்விட்டாள்.

அவள் தன் வீட்டுக்குள் போய் மறைந்ததும், அவள் துப்பி விட்ட எச்சில் மடங்கி உருண்டு கட்டியாய் போனதைப் பார்த்தான்.

பனியனின் தோள் பட்டை ‘வாரி’லிருந்து கைகளை எடுத்தான்.

-நன்றி : நடை (1968 -1970)


இதழ்த் தொகுப்பு : சந்தியாப் பதிப்பகம்
 Rukmini Bhaya Nair
Genderole1
Considerthefemalebodyyourmost
Basictextanddontforgetitsslokas


Whatpalmleafmscandoforusitdoes
Therealgapsremainforwomentoclose
I


Spacesbetweenwordspreservesenses
lntactbutweneedtomeetineverysense 


Comingtogetherisnoverbalmatter
Howeveroursagespraisepativrata


Katavakantakasteput rasamsaroyam - 1
Ativavichitrawaswiittenformenbyaman 


Theworlddoesnotseemsostrangeseen
Throughgentleeyesnorwomensoalien 


Nalinidalagalajalam aticaralamladvat
JivanamaLshayachapalamchangcability 


IFJnthcnatureofthingsandcspccially                 - 2
Fcmalesbutsankarayouoldmisogynisttellmc 


Wbatssocontcmptibleaboutfleeting
Splcndor?andwhileyouarcaboutinhink 


Whatssocontemptibleaboutfleeting 
Splendour?andwhileyouareaboutitthink/

We have wrung poems from household tasks
Carrying water, child, sorrow, can you do so much?

Itmaybebeneathyoutopriseaparthisgimmick
Butrememberthethingwomanchangesbestishersex/

Opposingyouischildplaybecauseyoufail
Torealizethisandwecanbeatyouatyourowngame/

Muchhardertoconvertourselveshaving
Labouredlongatbeingmenpossessnothing

My worst fear is Sankara had I indeed been you
I might not after all have conceived anything new.

Copyright (c) 2003 ProQuest tilormation and Learning Compamy Copyright (c) URibersity of Chicago Press


1. Who is your wife? who are your
     children? this world is exceedingly
     strange.

2.like water poised delicately
on a lotus petal so astonishing
elusive is life.

Monday, July 14, 2014

குடை நிழல் - மௌனி, சித்தி - புதுமைப்பித்தன்

குடை நிழல் - மௌனி

இரண்டு நாட்களாகக் கோடை வெக்கை மிகக் கடுமையாக இருந்தது. கோடை மழை ஒன்று பெய்வதற்கும் நாளாகிவிட்டது. எனினும் அன்று மாலை அவ்வளவு சீக்கிரமாக மழை வருமென அவன் எதிர்பார்க்கவில்லை.

அன்று மாலையில் சுந்தரம் குடையுடன்தான் வெளியே கிளம்பினான். குருட்டு வெயில் அன்று கடுமையாக இருந்தது. டவுணில் தன் அலுவல்களை முடித்துக்கொண்டு நடையாகவே சென்டிரல் ஸ்டேஷனை அடைந்தான். அங்கே ரயிலில் அவன் தன் நண்பன் ஒருவனைச் சந்திக்க வேண்டி இருந்தது. அவனை  சுந்தரம் சந்திக்க முடியவில்லை. வீடு திரும்ப எதிரிலிலுள்ள ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்டை அவன் அடைந்தான். அங்கே அன்று அதிகக் கூட்டம் இல்லை. மழை திடீரென்று ஆரம்பித்தது. மழை ஆரம்பித்ததும் இருந்த சிலரும், அங்குமிங்குமாகச் சிதறிப் போய்விட்டார்கள். மாலை இருட்டு கண்டு கொண்டிருந்தது. வீதி விளக்குகளும் ஏற்றியாகிவிட்டன. அவ்விடத்தில்  தன்னைத்தவிர வேறு யாரும் இல்லையெனத் தெரிந்துகொண்ட போது, திடீரென ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் அங்கு வந்து சேர்ந்தாள். அவள் எவ்விடமிருந்து வந்தடைந்தாள் என்பதை இவன் கவனிக்கவில்லை. அவள் உடை மழையில் நன்றாக ஊறி நனந்து உடம்போடு உடம்பாக ஒட்டிக்கொண்டிருந்ததைச் சுந்தரம் கவனித்தான்.

காத்திருந்த இவர்களை நாலைந்து பஸ்ஸுகள், தங்காதே தாண்டிச் சென்றுவிட்டன. மற்றும் தங்கிப் போன பஸ்ஸுகளும் இவர்கள் போகவேண்டிய இடத்துப்பஸ்ஸுகள் அல்ல. இருட்டு நன்றாகக் கண்டுவிட்டது. இவர்கள் இருவரும்தான் அங்கு இருந்தவர்கள். வலுத்த மழையும் விடுவதாகத் தெரியவில்லை.

மோட்டார் வருகிறதா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்த இருவரும், முதலில் ஒருவரை ஒருவர் கவனிக்கவில்லை. பஸ் வரும் என்ற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கலானார்கள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.  வீதியிலும் ஜன நடமாட்டம் குறைந்துவிட்டது. மோட்டார்கள் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. தன் அருகாமையில் ஒன்றி நின்றிருந்த அப்பெண்ணைச் சுந்தரம் அப்போதுதான் நன்றாகக் கவனித்தான்.

சிறிய அழகான பெண் அவள், அவளுக்கு இருபது வயதுதான் இருக்கலாம். இவன் பார்த்ததைப் பார்த்த அவள் முகம் புன்சிரிப்புக் கொண்டது. அப்போது சுந்தரத்திற்கு என்னவோபோல் இருந்தது. அவனுக்கு மனது அமைதியை இழந்ததான ஒரு எண்ணம். மற்றும், ஒரு வசீகரப்பெண் பக்கத்தில் நின்றிருப்பதில் மனதில் ஒரு குதூகலமும் போலும்.

“ மழை விடாதுபோல் தோன்றுகிறது ” என்றாள் அவள்.

“ ஆமாம், பஸ்ஸும் வராதுபோல் தோன்றுகிறது ” என்றவன் அவளுடன் பேசியது போதாது போன்று “ ஆமாம் நீங்கள் எங்கு போகவேண்டும். ” எனச் சிறிது விட்டுத் தொடர்ந்து கேட்டான்.

“ இப்படி மழை வருமென்று தெரிந்திருந்தால் குடையாவது கொண்டு வந்திருக்கலாம் ” ...... என்றாள் அந்தப் பெண்.

“ தெரியாது தான், முற்கூட்டியே .... ஆமாம் தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது.... நான் இங்கு உனக்காகக் குடை வைத்துக் காத்திருப்பதும் தெரிந்தால், கொண்டா வரப்போகிறாய், நீ உன் குடையை? ” பேசினதற்குப் பின்தான்  சுந்தரத்திற்கே தான் ஏன் இப்படியாகப்பேசினோம் என்று ஆச்சரியம் கொடுப்பதாயிற்று. அவன் வேற்றுப்பெண்களுடன்  பேசியதே  கிடையாது. மேலும் அவன்  சங்கோஜ சுபாவமும் படைத்தவன். சாதாரணமாக, சுபாவம் சமய சந்தர்ப்ப விசேஷத்தினால் எவ்வெவ்வகையோ மாறுதல் கொள்ளுகிறது போலும். சுந்தரம் மறுபடியும்  சொன்னான். “ பஸ்ஸுக்காகக் காத்திருப்பதில் பிரயோஜனமில்லை .... நான் மவுண்ரோட் போனால், அங்கு ஒருக்கால் எனக்கு பஸ் அகப்படலாம் ... என்னுடைய குடையிருக்கிறது இருவரும் போகலாமே” சிரித்துக்கொண்டு அவள், அவன் பக்கத்தில் பிரித்த குடையின் கீழ் வந்தாள். ஒரு பெண், அதிலும் தனக்குத் தெரியாத ஒரு வசீகரமான ஒரு வாலிபப்பெண், அவளுடன் ஒரு குடையின் கீழாக இருட்டிலும், மழையிலும் செல்வது - ஆம், சுந்தரம் இது கனவில் நடப்பதாக நினைத்தான். ஒரு சமயம் அவன் மனது சொல்லிக்கொள்ளும் - இதில் என்ன தவறு இருக்கிறது? தெரிந்தவர்கள் யாராவது பார்த்தாலல்லவா ஏதாவது நினைக்க இடம் இருக்கும் ?

மின்னல் ஒளி பாயந்த கணத்தில் சுற்றுமுற்றும் கவனித்ததில் கண்ணுக்கெட்டிய வரையிலும், ஒருவரும் படவில்லை ... ஏதாவது நினைத்துக் கொள்ளலாம் ... அந்த நேரத்தில் யார் பார்த்து இவர்களைத் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் ...!  ஒரு குடையின் கீழ் இருவருமாகச் சேர்ந்து சென்றனர். இருட்டிலும், மழையிலும், முக்கால்வாசி தூரம் போகும் வரையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. சிற்சில சமயம் இருவரும் மோதிக்கொள்வார்கள். அப்போது சுந்தரம் தன் மனதிற்கு விரும்பிய அதிர்ச்சியைக் கொள்வான். அப் பெண்ணோவெனில் சற்று உரத்து இவனைப் பார்த்துச் சிரிப்பாள்  போன்று காதில் படும். வானம் முழுவதையும் மேகம் நன்றாக மூடிக்கொண்டிருந்தது. காற்றற்று செங்குத்தாகத் தடிமழை பொழிந்து கொண்டிருந்தது. குடையின்றியே இருவரும் நனைந்து கொண்டு போயிருக்கலாம். சாரலில் நனைந்து கொண்டு ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு போகத்தான் இந்தக் குடை உதவியது போலும். இடியும் மின்னலும் மிகக்கடுமையாக இருந்தன.

“ நீங்கள் மவுண்ட் ரோட்டில் எங்கே இருப்பது ?” என்று சுந்தரம் அவளைக் கேட்டான்.

“ ஏன், உங்களுக்குத் தெரியவேண்டியது அவசியமோ ” என்றாள் அவள். யதேச்சையாகப் பட்ட ஒரு பெண்ணுடன் எவ்வளவு தூரம் அவனால் போக முடியும். மவுண்ட்ரோடும் வந்துவிட்டது. வெகுதூரம் தான் போவதை அவன் விரும்பவில்லை போலும். யாராவது ஒரு கௌரவமான குடும்பப் பெண்ணாக இருக்கலாம் ...

“ இல்லை... நான் ” என்று இவன் தயங்கி ஆரம்பித்ததை அப்பெண் மறித்து .... “ நான் உங்களைக் கேட்டது அல்ல. என்னைத்தான், என் மனதைத்தான். நான் சிறிது உங்கள் காதுகேட்க உரத்துக் கேட்டுக்கொண்டேன் ... என்னை யாரென உங்களுக்குத் தெரியவேண்டாம். மவுண்ட்ரோட் வந்துவிட்டது. நான் இப்படியே இச்சந்து வழியாக என் வீட்டிற்குப் போகிறேன் ...” என்று சொல்லி அவனை விட்டு நகர்ந்தாள்.

அவளை வீட்டிற்கு கொண்டு விட்டுப் போவதாகச் சுந்தரம் சொன்னான். அவள் பதில் சொல்லவில்லை. அரவணைப்பிற்கு ஆசைகொண்ட அனாதைக் குழந்தையைப் போல அவள் அவனைப் பார்த்துச் சொன்னாள்.

ஆயினும் அவள் வார்த்தைகளில் பரிதாபம் தொனிக்கவில்லை. “ என் வீடு சமீபத்தில் தான் இருக்கிறது. நான் தனியாகப் போகிறேன். நீங்கள் வரவே வேண்டாம், உங்களை தடுப்பதிலும் நான் உங்கள் எண்ணத்தைத் தடுக்கச்செய்ய முயலவில்லை. ” சிறிது நகர்ந்தவள் தொடர்ந்து பிறகு “ உங்கள் இஷ்டம், வேண்டுமாயின் வந்துவிட்டுப் போங்கள் ... ” முடிக்கு முன்பே அவள் முகத்தில் கொஞ்சம் அலட்சியச் சிரிப்பும் தெரிந்தது.

இந்த ஹோட்டலில் காப்பியாவது சாப்பிடலாம் என்று நுழைந்த இருவரும் ஏதேதோ சாப்பிட்டுவிட்டுப் பசியைத்தணித்துக் கொண்டு சென்றனர். அவள் வீடும் வெகு சமீபத்தில் தான் இருந்தது. சுந்தரம், அவளை அவள் வீட்டில் தவிர வேறெங்கேயும் விடுவதான எண்ணத்தில் இல்லை. இருவர் உடைகளும் நன்றாக நனைந்திருந்தன. தூறல் நின்றுவிட்டது.

ஒரு பெரிய வீட்டின் வாயிற்புறம் வந்தவுடன் அப்பெண் நின்றாள். “ இதுதான் நான் இருக்குமிடம் ” என்றாள். அது வீடாகவே தோன்றவில்லை. தனித்தனி அறைகளில் அநேகர் வசிக்கத்தக்க ஒரு விடுதியாக  அது இருக்கலாம். ஆனால் அந்தப் பக்கத்தில் மாணவிகள் தங்க விடுதி இருப்பதாக, அவன் அறிந்த மட்டில் தெரியவில்லை. சுந்தரம்  அப்போது அவளைப் பார்த்து ...             “ அம்மா நீங்கள் யார் ... என்ன செய்கிறீர்கள் ... இங்கே ” என்று கேட்டான். வாயிற்புறத்து வெளிச்சம் அவன் முகத்தின்மீது விழுந்தது. அவள் முகம் நன்றாக அவனுக்குத் தெரிந்தது. அவள்முகம் குவிய அதில் வசீகரச் சிரிப்பு தென்பட்டது. ரோஜா மொக்குகள் போன்று அவள் உதடுகள் குவிந்து இருந்தன.

அநேக ஆயிரம் விளக்கொளியிலும் , ஆயிரம் விதமான கனவுகள் அவ்விடுதியில் ஒதுக்குப்புறமாக மறைந்து நின்று உட்புகும் அவர்களை விழுங்க இருந்தன போலும். அவனுடன் அவள் உள்ளே செல்ல சிறிது தயங்கினாள். அவள் பார்வையில் மாசு படர்ந்தது.  அங்கேயே, வாயிற்புறத்திலேயே தங்கி, அவனுடன் பேசிப்பேசி வாழ் நாட்களைக் கழிக்க எண்ணியவள் போன்று உட்புகத் தயங்கி நின்றிருந்தாள். ஊதலும் சாரலும் தெருவழியே ஓடிக்கொண்டிருந்தன. ஆயிரம் விநோத விரோத யோசனைகள் அவள்  மனதில் புதைந்து, மறைந்து மாறுபட்டும் அவளுக்கு வாழ்க்கையில் அலுப்புக் கொடுக்கத்தான் ஒன்றாகத் தோன்றின. ஆதரவை அவனிடம் நாடின பார்வை அவள் கண்களினின்றும் விடுபட்டுச் சலித்து எட்டிய வெளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எங்கேயோ பார்த்து நின்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இருபது வயதிற்குள்தான் இருக்கும். ஊறிய உடம்பில் ஒட்டிக்கொண்ட ஈரத்துணியில் அடியில் அவள் அங்கங்கள் ஒவ்வொன்றிலும்  கவர்ச்சி தெரிந்தது. அவளுள் பரிசுத்த ஆத்மாதான். அவள் கண்களில் இவ்வளவு தெளிந்த பார்வையை அப்போது கொடுத்தது போலும் ! அவன் எதிரில் அவள் வருத்தத்தில் அவள் நின்றிருந்தாள். வெளிக்காட்ட கூச்சம் கொண்டு அவள் கண்கள் பளிங்கு போன்று பிரகாசம் இழந்து தோன்றின. அவள் முகத்தோற்றமும் ஏதோ விதமாகத் தெரிந்தது.

 அவளைப் பார்க்கும் போதும், புருவஞ்சுழிக்கும் போதும், அவள் பேசாத வார்த்தைகள் அருத்தம் கொள்ள, புருவத்திடைப் புகுந்து கொண்டன போலும், அவ்வித விளங்காத வகைப் பார்வையில், சுந்தரம் தன் மனதிற்கிஷ்டமான எவ்வளவோ அருத்தம் கொண்டான். அவள் சொன்னாள் ... “என்னை இப்போது நீங்கள் வெறுக்கவில்லை ... பின்னாலும் உங்களால் முடியாது ... உங்களிடம் உள்ள என் எண்ணத்தைத் தானே நீங்கள் எப்போதும் என்னிடம் கொள்ள முடியும், பிரதிபலிக்க முடியும். நீங்கள் எனக்குச் செய்த இச்சிறு காரியத்தை ஏன் செய்தோமென மனக்கசப்பின்றி நினைக்க, நான் யார் என்று தெரிந்து கொண்டபின் உங்களால் முடியுமா என்பதை  நீங்கள் இப்போது சொல்ல முடியுமா என்பதை நீங்கள் இப்போது சொல்ல முடியுமா ? பின்னால் தெரிந்து கொள்ளப் போவதை முன் கூட்டி யோசித்து உங்களைப் பதிலளிக்க நான் கேட்கவில்லை. நான் இப்போது உங்களிடம் ஏன் இவ்விதம் பேசுகிறேன் என்பதும்  எனக்குத் தெரியவில்லை. யோசனைகள் யோசிக்கும் போது யோசிக்கப்படுவதென்பதாலேயே மாறுதல் அடைகின்றன. நான் பேசுவது என்னைப் போன்று இல்லை, மீறித்தான் இருக்கிறது .. நீங்கள் யார் என்பதற்கு, எவராக இருந்தால், யாராக இருந்தால் என்ன என்பதின்றி, யார் என்பதற்கு, ஆம் ஆயிரம் தடவை உன் பகற்கனவில் தோன்றிய நான் என்று பதில் கொள்ளும்போது ... என் பிரியமானவனே நீ போய்விடு ... ” அவள் கண்கள் போதைகொண்டு துள்ளி விளையாட வெளியே துள்ளி மறுபடியும் ஜலப்பரப்பின் கீழ் புதையும் வெள்ளி மீன்களாக உட்புதைந்தது அவள் பார்வை. அவள் கண்கள் பார்க்க முடியாத வகையில் ஒளிகொண்டு பிரகாசித்தன. அவள் யோசனைகளையே போன்று அவள் கண்கள் சலித்தன.

‘ எனக்குச் சொல்வதில் ஒன்றுமில்லை ...... உங்களுக்குத் தெரிந்தால் ஒன்றுமில்லையா .... ? உங்களை ஒரு கணத்தில் நான் தெரிந்து கொண்டுவிட்டேன். என்னை நான் என்று சொல்லாமலே அநேக ஆடவர்கள் என்னைத் தெரிந்து கொண்டு விடுகிறார்கள் ! ஆம், என்னை மட்டுமல்ல; எல்லாப் பெண்களையும் கூட ... அப்படித்தான் தெரிந்து கொள்கிறார்கள் போலும். ஆனால் அவர்கள் தெரிந்தவர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம்தான். உங்களுக்கோ வெனில் என்னைப் பார்த்தவுடன் அதுவும் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடியவில்லை. சொன்னாலும் நீங்கள் தெரிந்து அறிந்து கொள்ள முடியுமோ என்பதிலும் எனக்கு  சந்தேகம் தோன்றுகிறது. முடிந்தாலும், உங்களுக்குத் தெரிந்தது உங்களுக்கு நன்மையானதா என்பதில், என் மனது திரும்பித் திரும்பி சந்தேகம் கொள்ளுகிறதே, நான் சொல்லித்தான் ஆகவேண்டுமா ? ’

அவள் பேசியதும் பேசிய வகையும் சுந்தரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதாக இல்லை. அதிசயமாகவும்  அவள் படவில்லை. மனதிலிருந்து ஒன்று விடுபட்டுப் போனதினால்தான் அவன் அவளை வெறுமனே வெறித்துப் பார்த்து நின்றான் போலும். நேருக்கு நேராக ஒருவருக்கும் சொந்தமற்று,  யாருக்கும் சொந்தமாகும் ஒருத்தியுடன் பேசுவதில் ஆனந்தம் ஒன்றும் இல்லை; அதிர்ச்சியும் இல்லை. தன் இருதயத்திற்கு நேரான குறுக்குப் பாதையில் சென்றடைந்து விட்ட ஏதோ ஒன்று, ஆராய்வதற்கு அவகாசம், அவன் அறிவிற்குக் கொடுக்கவில்லை. பின்னால் ஆயிரம் யோசனைகளுக்கு அடிப்படையாக அவள் எண்ணம் அவன் மனதில் தோன்றலாம். அப்போதோவெனில் எதிரில் நிற்பதைக்கூட அவன் அறிந்தவன்போன்று நின்று இருக்கவில்லை.

“ ஏன் நிற்கிறீர்கள் - வாருங்கள் என் அறைக்குப் போகலாம் .. உங்களைக் கண்டது முதல் என் மனது என்னை வெறுக்க வேதனைக் கொடுக்கிறது. அதில் உள்ள இன்பம் உங்களுக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை. தன்னை வெறுக்க எண்ணம் கொடுப்பவர்களை வெறுப்பது என்பது, வேறொன்று. உங்களை நான் விரும்புகின்றேன். மனதிற்கு அடியிலிருந்து ஏதோ ஒன்று இப்போது வாழ்க்கையில் இனிமை கொள்ளத் தூண்டுகிறது. உங்களால் உணருகிறேன் என்பதிலா நான் உங்களை வெறுக்காது விரும்புகிறேன் ... ? என்னுடைய காரியங்களிலே நான் சிந்தனைகளைக் கொடுத்தது கிடையாது. யோசித்தால், யோசனைகளின் அடியே ஒரு அதிசயப் பயம் கொண்டிருக்கிறது. அடிப்படையான பயங்கரம் இருக்கிறது போலும். எவற்றையும் யதேச்சையில் கவனிப்பின்றிதான் நான் செய்கிறேன். சரி,  நாம் உள்ளே போவோம். எங்கேயோ என்னைத் தனியாக பேச்சில் தனியாக செல்லவிட்டு விட்டீர்கள். ”

 அவளைப் பின் தொடர்ந்து மாடியில் ஒரு அறைக்குச் சென்றான். அவள் அறையை அடைந்ததும் அவன் மனது கொஞ்சம் நிதானம் அடைந்தது. தனியறையில், தனியாக தான் யார் முன்னிலையில் நிற்கிறோம் என்பது அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. இந்த அனுபவம் அவனுக்குப் புதிது. அவளிடம் அவனுக்கு யாது காரணம் பற்றியோ ஒரு அநுதாபம் தோன்ற ஆரம்பித்தது. அவள் பேச்சும், பேசும் வகையும் அத்தகைய ஒருத்தியினது போன்றுஇல்லை. ஒருக்கால் இவன் இளமையும் புதுமையும், அப்படி நினைக்க ஏதுவாயிற்றோ என்னவோ. அவள் தன் ஈர ஆடைகளைக் களைந்து வேறு உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு வந்தாள்.

“ நீங்கள் ஈரத்தில் நிற்கிறீர்களே, ஆடை நான் கொடுக்கிறேன். உங்களுக்குச் சரியாகக்கூட இருக்கும். அணிந்து கொள்ளுகிறீர்களா ? ” அவள் சிரித்துக்கொண்டே கூறினாள். “ ஆமாம், உங்களைப் பெண்ணுடையில் பெண்ணாக்கி என் சிநேகிதியாக என் பக்கத்திலேயே, ஏன் - என் உள்ளேயே வைத்துக்கொள்ள ஆசையாக இருக்கிறது. எவ்வளவு அசட்டுத்தனமாக நான் உங்களை மௌனமாக்கிப் பேசிக்கொண்டே இருப்பேன் தெரியுமா ? பசியே எனக்குத் தெரியாது. வாழ்க்கையும் வெகு சீக்கிரத்தில் இனிமையாக முடிந்ததென என் மனம் நினைக்க உங்களிடம் பேசும் நேரம் நீண்டு கொண்டே போகும் - '

“ வேண்டாம் - பாதகமில்லை எனக்கு -” என்று சொல்ல வாயெடுத்தான் சுந்தரம். அவள் மேலும் கவனியாது பேசிக்கொண்டே போனாள். “ ஆமாம், உங்களை இதற்கு முன்னாலேயே பார்த்து இருக்கிறேன். அநேக நாள் பகற் கனவில் உங்களை எதிர்பார்த்திருக்கிறேன். நீங்கள் வரவில்லை, இப்போது நீங்கள் வேண்டா விருந்தினன் போல வந்திருக்கிறீர்கள். பிடிக்காததை சீக்கிரம் புறக்கணித்துத் தள்ள உபசாரத்தில் தான் முடியும் போலும். ஆமாம் என் பிரியம் உங்களிடம். பிரிவு உபசாரம்தான் உங்களுக்கு நான் செய்கிறேன்... உங்களைப் பிடிக்காது வெளியனுப்பத்தான் என் மனம் உங்களிடம் இவ்வளவு ஆசை கொள்கிறது. ”

“ சரி ஜோன்ஸ் .. மழை விட்டுவிட்டது, நான் போய்வருகிறேன் ... போகட்டுமா...” என்று சொல்லி, ‘சரி நாளை வருகிறேன் ” என்று ஐந்து ரூபாய்களை அவள் மேஜையின் மீது வைத்துவிட்டு வெளியே போய்விட்டான். அவன்  போன பின்பு ஜோன்ஸ்க்கு சிரிப்புத் தாங்கவில்லை. ரூபாய்களை எடுத்துக் கையில் கலகலவென்று குலுக்கிச்  சிரித்துக்கொண்டாள். அது அழுகை சிரிப்பாகத்தான் அந்த ரூபாய்களைப் பார்த்துச் சிரித்தாக இருந்தது.

மறுநாள் இருட்டிக்கொண்டிருக்கும் போது சுந்தரம் ஜோன்ஸ் அறையை அடைந்தான். வாயிற்புறத்தில் உட்புகச் சிறிது தயங்கி நின்று கொண்டிருந்தான். உள்ளேயும் வெளியிலும் பெண்கள் குதூகலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். ரிக்ஷ்க்காளில் சிலர் ஆடவருடன் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தனர். திருநாள் கடைகளை ஆச்சரியத்துடன், அர்த்த மற்று கவனித்து நிற்கும் சிறுபிள்ளையைப் போன்று சிறிது நேரம் சுந்தரம் இவைகளைக் கவனித்து நின்றிருந்தான்.

“ ஏதோ வெளியில் இரைச்சல் கேட்கிறதே ” என்றான் சுந்தரம்.

“ ஆமாம் வெளியுலகு மடியுமட்டும் உள்ளே கேட்கும் கோர சப்தங்கள் அவை. நம்முடைய அணைப்பில் மரணாவஸ்தை கொள்ளும் சப்தங்கள். பாழ்பட்ட வசீகரம் வெளியே உலாவ அவர்களைப் பார்க்கும் போது .. ” அவளால் பேச முடியவில்லை. அவள் கண்களினின்று வழிந்த கண்ணீர் அவன் மார்பை ஈரமாக்கியது. முன்பு அவளுடன் மழையில் நனைந்ததுகூட அவனுக்குத் தோன்றவில்லை. அவள் கண்ணீரால் ஈரம்பட்டதும் அவனை நடுக்கியது. அவள் முகத்தை நிமிர்த்துப் பார்த்தான் . கண்ணீரிலும் அவள் உதடுகள் ரோஜா மொக்காகக் குவிந்து இருந்தன. முகத்திலும் புன்சிரிப்புத் தெரிந்தது.

“ ஏன் அழுகிறாய் ... நான் வருத்தம்தானா உனக்குக் கொடுக்கிறேன் ... என்னால்  உனக்குச் செய்ய முடிவது ஒன்றுமில்லையா ? ”

“ உங்களால் செய்ய முடிந்தது, அதோ அந்த மேஜையின் மீது இருக்கிறது பாருங்கள் .. ஆம், அதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்க முடியும். எப்போதும் நிலைத்து நிற்க, என்னிடம் இல்லாததையா உங்களிடம் நான் எதிர்பார்க்க முடியும் ? என்னுள், என் இனிமை, தனிமையில் துன்புறுத்தாது நிற்கும் நாளைத்தான் நான் நாடுகிறேன். உங்களைப் பெற்று உங்களால் அடையும் ஆனந்தம் நீடிக்கும் போதல்லவா நீங்கள் கொடுத்தது என்று ஆகும்.

“ என்னுள் ஏதோ ஒன்று தூங்கினதைத்தான் தட்டி எழுப்பினீர்கள். நீங்கள் உங்களால் ஒன்று செய்ய முடியாததினால்தான் உங்களிடம் இப்போது நான் பிரியம் கொண்டிருக்கிறேன். எங்கள் பிரியம் காசுக்கு அகப்படும் போது, பிறகு தூக்கி எறியப்படும் சாம்பலாகத்தானே இருக்க முடியும். காசுக்கு அகப்படும் பிரியம் எவ்வளவு மலிவாக இருக்கிறது ! உங்களுடைய அநுதாபம் அடையும் பாக்கியம் பெற்றும் ஏற்கும் வகை தான் நான் புரிந்துகொள்ளவில்லை.” அவள் தன்னை அறிந்து கொள்ளத்தான் இவ்வகையாக அவள் பேச்சில் தடுமாறிக்கொண்டிருந்தாள். சுந்தரமும், தன்னுள் தலைவிரித்தாடும் ஒன்றை சமனம் செய்யப் பாடுபட்டுக் கொண்டு இருந்தான்.

“ ஜோன்ஸ், வெளியே போய் சிறிது உலாவியாவது வரலாம் ... ஏன், எப்படி, இத்தொழிலைக் கொண்டாய் .... ? ” ஏதோ சம்பந்தமற்று அருத்தமற்றுத் தானும் பேசவேண்டும்மென்பதற்காகச் சொன்னது போன்றுதான் இருந்தது, சுந்தரம் கேட்டது.

ஜோன்ஸ் அவனைப் பார்த்தாள். அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையில் கோபம் இல்லை, வருத்தம் இல்லை, ஒருவகை அலட்சியம் தெரிந்தது. அவள் அவனைப் பார்த்த பார்வையில் அவன் கேட்டதில் கேவலமான எண்ணமும் இருந்ததாகத் தெரியவில்லை.

“ ஆமாம், மூன்று சிறிய சகோதரிகளும் வேலையற்ற வயதான தாயார் தகப்பனாரும் முன்னும் பின்னுமாக எப்போதும் ஏழ்மையில் என்னை வெறிக்கும் போதும், வெட்கத்திற்கு மேலே போய், மீறிப் பிச்சையெடுக்கும் வகையில் பசி தெரியாமல் இருந்தாலும் அப்போதுதான் தாங்கள் என் பக்கத்தில் நின்று, நீ ஏன் இப்படியானாய் என்று கேட்க வேண்டும். உங்கள் கேள்வியைத்தான், உங்களைத்தான் நான் பக்கபலமாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. யார் யாரோ என்னவெல்லமோ, கேட்டும், செய்தும் போய்விட்டார்கள், மறைந்து விட்டார்கள். ஆனால் முன்னும் பின்னும் தெரிவதுதான் என் மனதில் மறையவில்லை. நான் மட்டும் சாசுவத்தில் நிற்கப் போகிறேனா ? நான் நிற்குமிடமும் சூனியமாகிறது. நான் இருப்பது, அதுவும் ஒரு பெரிய பொய்தானே. நிற்கும் பொய்யைத் தானே நிஜமெனக் காணப் பக்கத்தில் வருகிறார்கள் - பொய்யை நம்பும் நீயும் இறக்கப் போகிறாய், இறப்பைத் தவிர உலகில் நடக்கிறது எது நிஜம் ? இறப்பில்தான் மனித வாழ்க்கை பூர்த்தியாகிறது. ”

“ அதோ அங்கே பார் பூமியின் கீழ், ஐந்தடிக்குக் கீழ் சிறுபுல் என்மேல் படர்ந்தால், இனிமையான பக்ஷிகள் என்மேல் பாடினால், வெளியுலகம் அப்போது பாழடைந்து மடியும். இரவின் வானக்கூரையில் அநேக நக்ஷத்திரங்கள் தெரியும். என்மேல் மெல்லிய காற்றுத் தடவிச் செல்லும் ... என் இன்பக் கனவுகளைத் தவிர ஒன்றும் என்னைத் தொடர்ந்திடமுடியாது. அப்போது விழிப்பின்றி சதா இன்பக் கனவின் வாழ்க்கைக்கொள்ளும். நான் - எனக்கு எது மெய்யானால் என்ன ? பொய்யானால் என்ன ?

“ நான் எங்கெல்லாமோ சென்று கொண்டிருக்கிறேன். சரி வாருங்கள், வெளியே உலாவி வரலாம் .. இருங்கள், இதோ வருகிறேன் ... ” என்று ஒரு சிறு தலை ஆட்டலுடன் வெளியே சென்றாள். எவ்வளவு அனுபவம் அச் சிறு தலையாட்டுதலில் தெரிகிறது. அவளைப்பற்றி அதிகநேரம், அவன் சிந்தித்து நிற்க இடமில்லாமல் சீக்கிரமே ஜோன்ஸ் திரும்பி வந்துவிட்டாள். இருவருக்கும் உள்ள பிடிப்பு என்ன வென்பது தெரியவில்லை. அவள் நினைவை சுந்தரத்திற்குத் தன் மனதிலிருந்து களைந்து எறிய முடியவில்லை. அவள் நினைவுமட்டும் அவனுக்கு போதவில்லை போலும். அவளைப் பார்க்க அவளிடம் அடிக்கடி வரவேண்டியிருக்கிறது. வெளியே சென்று உலாவித் திரும்ப இரவு வெகு நேரமாகி விட்டது.

மாலை வரையிலும் சுந்தரத்திற்கு அன்று காத்திருக்க முடியவில்லை. மத்தியானமே ஜோன்ஸைக் காண அவள் அறைக்கு அவன் சென்றான். அவளும் அன்று அங்கிருத்தாள். சுந்தரத்தை அவள் அந்த வேளையில் கண்டதில், ஆச்சரியமடைந்தவள் போன்று, ‘ என்ன, நீங்களா இப்போது வருகிறது .. ’ சுந்தரத்தைப் பற்றியும், அவன் குடும்பத்தைப்பற்றியும், கொஞ்சநாள் பழக்கமாயினும் அவள் அறிந்து கொண்டிருந்தாள். கேட்கவேண்டியது என்பது அவசியமே இல்லாமல் நடுநடுவே சுந்தரம் சொல்வதிலிருந்தும் அவளுக்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரிந்து இருந்தது.

“ ஆமாம் ஜோன்ஸ், நீ இன்னும் இறக்கவில்லையே, இருக்கிறாயா என்று பார்க்கத்தான் வந்தேன் ... ! ” என்று அவன் சிரித்துக்கொண்டே கூறினான். அவனுடைய சிரிப்பு இவளுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய வேடிக்கைப் பேச்சுகளும் அவளுக்கு ஆத்திரத்தைத்தான் கொடுத்தன. அவனைப் பார்த்து அவள் மிகுந்த துக்கத்தில் சொன்னாள் : “ என் பிரியமானவனே, நான் சொன்னால் நீ சாதாரணமான வகையில் எடுத்துக்கொள்ளலாம் .. என்னை உன்னைப் பற்றிய வரையில் என்னை, நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. உன்னையும் நான் சரியாகத் தெரிந்து நடந்து கொள்ளவில்லை என்றும் நினைக்கிறேன். இல்லாவிட்டால் நீ இப்படி எனக்கு வருத்தம் கொடுக்க நடந்து கொள்ளமாட்டாய். தவறியே உன்னைத் தெரிந்து கொண்டுவிட்டேன் போலும். உனக்காகத்தான் நான் காத்திருந்தேன். ஆனால் இப்போது உனக்காக நான் காத்திருக்கவில்லை ... உன் நன்மைக்கு என்பதில் ... என் பிரியமானவனே, நீ கேட்டது சரி, நான் இறக்காதிருப்பது சரியில்லைதான். ஆனால் நான் விரும்பும் வகை என் இறப்பு இருக்க முடியும் என்பதில் இப்போது உன்னைக் கண்டவுடன் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. மறுதளிக்காதே. இனி இங்கு வராதே. என்னைப் பார்த்துவிட்டு விடு. முதலில் உனக்குச் சிரமமாக இருந்தாலும் எல்லாம் காலத்திலும், பழக்கத்திலும் சரியாகிவிடும் ... ”

அவள் உடைகளில் பூக்களும் கொடிகளும் தெரிந்தன. அநேக வண்டுகளும் வண்ணாத்திப் பூச்சிகளும் மொய்த்துக்கொண்டிருந்தன. அவள் அன்று வெகு வசீகரமாக  சுந்தரத்திற்குத் தோன்றினாள். அவள் மனதும் மிகுந்த சமாதானம் அடைந்து இருந்தது போல் தெரிந்தது. அன்று அவள் சிரித்துக்கொண்டும், வெகு உல்லாசமாகவும் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்

“ நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன், வெகு விநோதமான இன்பக் கனவு கண்டேன். இப்போது உங்களிடம் சொல்வதற்கான அளவு அது ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் வார்த்தையில் அடைபடாத் போலும், மறந்து மறைந்து விடவும் இல்லை. உங்களை நான் இப்போது பார்ப்பதும் நேற்றைய என் கனவுதான் போலும். ”  அவனை அவன் அனைத்துப் பேசியதெல்லாம் ஞாபகத்தில் நிற்காது மறக்காது விநோதக் கனவாகத்தான் சுந்தரத்திற்கு இன்பம் கொடுத்தது. அவள் தன்னிடம் ‘ காதல் ’ கொண்டவள் என்று சிறிது நினைத்தான். தெரியாததற்கும் அறிய முடியாததற்கும் பெயர் கொடுப்பதினால்  தெரிந்ததெனக் கொள்ளும் மனிதர்கள், பேச்சற்ற பிராணிகளை விடப் பேச்சினால் எவ்வகையில் மேம்பட்டவர்கள் ?

மறுநாள் மாலை சுந்தரம் போனபோது ஜோன்ஸ் அறையில் அவள் இல்லை. மற்றோரு யுவதியை அங்கு சுந்தரம் பார்த்தான். அவளும் பாலியத்தில் வெகு அழகாகத் தோன்றினாள். இவனைக் கண்டு சிரித்துக்கொண்டே “ வாருங்கள், உங்களைத் தான் குறிப்பிட்டாள் என நினைக்கிறேன், ஜோன்ஸ். அவள் அவசர ஜோலியாக வெளியூருக்குப் போக நேர்ந்துவிட்டது. வருவதற்கு இரண்டொரு மாதகாலம் ஆகலாம் என்று உங்களிடம் சொல்லச் சொன்னாள். ஒருக்கால் இவ்வூருக்கு வராமல் இருந்தாலும் இருக்கலாமாம். மற்றும் உங்களிடம் கொடுக்கச் சொன்னாள் ” என்று அவனிடம் ஐந்து ரூபாய்களைக் கொடுத்தாள்.    ‘ நீயே வைத்துக்கொள் ’ என்று வாங்கியவன் அவள் கையிலே கொடுத்தான். அவ்விடத்தை விட்டு அவன் அகலும்போது, இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும். வாசலில் தூறிக் கொண்டிருந்தது. இன்றைக்கு அவன் குடையைக் கொண்டு வரவில்லை.

- சிவாஜி மலர் 1959
தட்டச்சு - ரா ரா கு.

தட்டச்சு முடிவு : 07-07-2014

http://maravantu.blogspot.in/2005/09/1.html

மெளனியும் மண்ணாங்கட்டியும் - பாகம்(1)



வாழ்க்கைக் குறிப்பு

மெளனியின் இயற்பெயர் மணி, தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள செம்மங்குடி என்ற கிராமத்தில் 27/07/1907 அன்று பிறந்தார் . கும்பகோணத்திலும் திருச்சியிலும் படித்தார் . இசையிலும் தத்துவத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார் . இளங்கணிதம் படித்திருந்த மெளனி வேலைக்கு எங்கும் செல்லவில்லை. சில காலம் கழித்து சிதம்பரத்திற்குக் குடிபெயர்ந்தார் ,
மெளனி , 06/06/1985 அன்று சிதம்பரத்தில் காலமானார்.

0

மெளனி இலக்கியத் துறைக்கு வந்தது அவரே எதிர்பாராத ஒரு விபத்து . கும்பகோணத்தில் , 1933 ஆம் ஆண்டு ஒரு சென்னை நண்பர் மூலமாக பி.எஸ்.ராமையாவை சந்திக்கும் வாய்ப்பு மெளனிக்கு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு ஸ்நேகிதம் வளர்த்துக் கொண்டார்கள் . பி.எஸ்.ராமையா மெளனியை மணிக்கொடி இதழுக்காக சிறுகதைகள் எழுதச் சொல்லி ஊக்குவித்தார் . மெளனி என்ற புனைபெயரைச்
சூட்டியவரும் பி.எஸ்.ராமையா தான். மெளனியின் முதல் கதையான
" ஏன் ? " என்ற கதை மணிக்கொடி இதழில்( பிப்ரவரி - 1936) பிரசுரமானது.

0

மெளனியின் கதைகளை ஒற்றைப் பரிமாணத்துடன் அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும் . அவருடைய கதைகள் யாவும் உளவியல், தத்துவம் போன்ற பல்வேறான சாரங்களை உள்ளடக்கியது . மெளனி மொத்தம் இரண்டு டஜன் கதைகள் ( 24 கதைகள் ) மட்டுமே எழுதியிருக்கிறார் . தமிழ் வாக்கிய அமைப்புகள் மெளனிக்கு எளிதாக வசப்படவில்லை . தமிழ்மொழி தன்
சிந்தனைக்குப்போதுமானதாக இல்லை என்று கூறியிருக்கும் மெளனி,
என்னால் தமிழில் தோன்றுவதை எல்லாம் சொல்லமுடியவில்லை, சமஸ்கிருதத்தினால் கொஞ்ச நாள் தள்ளியது , இப்பொழுது ஆங்கிலத்தைக் கொண்டு ஓடுகிறது " என்று குறிப்பிட்டிருக்கிறார் . மெளனியின் எழுத்துக்கள் " அவலட்சணம், கட்டுக்கடங்காதது, ஓட்டமின்மை திருத்தமில்லாதது " என்று பலவாறான விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தாலும் அவருடைய எழுத்துக்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து ஒரு புதிய மொழியை சிருஷ்டித்திருக்கிறது என்றே கூறலாம் .

0

மெளனியின் பெரும்பாலான கதைகள் புறவயமான உலகத்தைப் புறக்கணித்து விடுகின்றன . ஆழ்மனத்திலிருந்து வரும் சிந்தனைகளே கதையை ஒரு தொடர்வாக நகர்த்தி (Stream of Consiousness) முன்னெடுத்துச் செல்கின்றன . இவருடைய கதை மாந்தர்கள் வெளியே சிக்கொள்வதை விட மனதுக்குள் தான் அதிகம் குசுகுசுத்துக் கொள்வார்கள், உள்ளுக்குள்ளே காதலைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் , திடீரென காதல் தோன்றி திடீரென அல்பாய்ஸில் போய்ச் சேர்ந்துவிடுகிறது . ஆனால் அதற்கான முறையான காரணம் எதுவும் கற்பிக்கப்படவில்லை.

0

மெளனி கவியாகப் பிறந்திருக்க வேண்டியவர் , தப்பித்தவறி வசன உலகிற்கு வந்துவிட்டார். மெளனி கதைமாந்தர்களை மாஸோக்கிஸ்டுக்களாக விளக்குகிறார் ,இவ்வகை உணர்வுக்கு வாசிப்பாளனும் கூட ஆட்படுகிறான் , அதனால் தான் மெளனி மொழிக்குத் தரும் பரிணாமத்தை கதைகளுக்குத் தருவதில்லை " என்று கூறிய சி.சு செல்லப்பா , எழுத்து சிற்றிதழில் " மெளனியின் மனக்கோலம்" என்ற தொடர்கட்டுரை (5 பாகங்கள்)எழுதியிருக்கிறார் . மேலை நாட்டுப் படைப்புகளின் தாக்கம்,தன்படைப்புகளின் மீது ஒருபோதும் படியாதவாறு தான் பார்த்துக் கொண்டதாக மெளனி கூறிக்கொண்டாலும் பின்னாட்களில்,
கா·ப்கா இலக்கிய ரீதியாக தன்னைப் பாதித்திருப்பதாக மெளனியே தெரிவித்திருக்கிறார்.

0

மெளனி தன் கதைகளில் "போலும்" என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பது கண்கூடு . மெளனியின் கதைகள் சிலவற்றை பி.எஸ் . ராமையா மற்றும் எம்.வி வெங்கட்ராம் ஆகியோர் திருத்தியமைத்திருக்கிறார்கள் . திருந்தாத படிவம் , நிறைய இலக்கணப்பிழைகளோடும் நிறுத்தற்குறிகளே இல்லாமலும் காணப்பட்டிருக்கின்றன .

0
http://maravantu.blogspot.in/2005/09/2.html

மெளனியும் மண்ணாங்கட்டியும்-பாகம்(2)

கி.அ. சச்சிதானந்தம் அவர்கள் தொகுத்து பீகாக் பதிப்பகம் வெளியிட்ட " மெளனியின் கதைகள் "என்ற புத்தகம் என்னிடம் இருக்கிறது . இதில் 24 கதைகளும் பின்னிணைப்புகளாகமெளனியின் பேட்டி , மெளனியின் வாழ்க்கைக் குறிப்புகள் , க.நா.சு விமர்சனக்கட்டுரைமற்றும் மெளனியின் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.இந்தப் புத்தகத்தில்,கதைகள் அனைத்தும் காலவரிசையில் இடம்பெறாமல் தரவரிசையில் இடம்பெற்றிருக்கிறது என நினைக்கிறேன் . மெளனி முதலில் எழுதிய "ஏன்" என்ற கதை (பிப்ரவரி - மணிக்கொடி -1936 ), ஏனோ இந்தப் புத்தகத்தில் கடைசியாக இடம்பெற்றிருக்கிறது.


மெளனி எழுதிய 24 கதைகள் - வெளியான இதழ் மற்றும் காலம்

1) மனக்கோட்டை - எழுத்து,1963
2) மாறாட்டம் - மணிக்கொடி,1938
3) அழியாச்சுடர் -மணிக்கொடி,1937
4) சாவில் பிறந்த சிருஷ்டி -சிவாஜி,1954
5) பிரக்ஞை வெளியில் - சரஸ்வதி,1960
6) மனக்கோலம் -தேனி,1948
7) மாறுதல் - மணிக்கொடி,1937
8) பிரபஞ்சகானம் - மணிக்கொடி,1936
9) நினைவுச்சுழல் - மணிக்கொடி,1937
10) சிகிச்சை - ஹனுமான் மலர்,1937
11) உறவு, பந்தம் , பாசம் - குருஷேத்திரம் ,1968
12) எங்கிருந்தோ வந்தான்-தினமணி வருஷமலர் 1937
13) குடை நிழல் - சிவாஜிமலர் 1959
14) இந்நேரம் , இந்நேரம் - மணிக்கொடி - 1937
15) அத்துவான வெளி - குருஷேத்திரம் - 1968
16) குடும்பத்தேர் - மணிக்கொடி - 1936
17) கொஞ்ச தூரம் - மணிக்கொடி - 1937
18) தவறு - கசடதபற 1971
19) காதல் சாலை - மணிக்கொடி - 1936
20) சுந்தரி - மணிக்கொடி - 1936
21) நினைவுச்சுவடு - தேனி -1948
22) மாபெருங்காப்பியம் - தினமணி மலர் 1937
23) மிஸ்டேக் - மணிக்கொடி - 1937
24) ஏன்? - மணிக்கொடி - 1936

0

மெளனி சிறுகதையின் திருமூலரா ?

மெளனி அரிதாகவும் , உயர்வாகவும் எழுதிவந்தமைக்காக , புதுமைப்பித்தன் " மெளனி - சிறுகதையின்திருமூலர்" என்று கூறினார் . இந்த ஒற்றை வாக்கியம் இலக்கியவாதிகளிடையே சலசலப்புகளைஉருவாக்கியது . புதுமைப்பித்தனின் வாசகர்கள் சிலர் , மெளனி அரிதாக எழுதியதற்காக**மட்டுமே** புதுமைப்பித்தன் அவ்வாறு கூறினார் மற்றபடி கதைகளின் தரத்துக்காக அல்ல என்று கூறிவந்தார்கள்.

0
என் இலக்கிய நண்பர்கள் (தி.ஜானகிராமன் , க.நா.சு , மெளனி) என்ற புத்தகத்தில் ," மெளனியை சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில் குறிப்பிட்டுவிட்டார்என்றே எனக்குத் தோன்றுகிறது , பிழையின்றித் தமிழ் எழுத முடியாத ஒருவரைத் திருமூலரோடு புதுமைப்பித்தன் ஒப்பிட்டிருப்பது பொருத்தமற்றது " என்று எம்.வி வெங்கட் ராம் குறிப்பிட்டிருக்கிறார். தேனி சிற்றிதழ் நடத்தி வந்த எம்.வி.வெங்கட்ராம் , காதுகள் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடாமிவிருது பெற்றிருக்கிறார்.

0

புதுமைப்பித்தன் தெளிவான காரணத்துடனேயே மெளனியைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்றுசொல்லியுள்ளார் . அதாவது கதைகளின் எண்ணிக்கையை வைத்து , என் கதைகளும் நானும் கட்டுரையில் வாரத்துக்கு ஐந்து ஆறு கதைகலிருந்து வருஷத்துக்கு ஒன்று என்ற திருமூலர் அந்தஸ்தை எட்டியிருக்கிறேன் என்று புதுமைப்பித்தன் கூறுவதிலிருந்தே இதைத் தெளிவாக அறிய முடியும். - ( ராஜமார்த்தாண்டன் , புதியநம்பிக்கை சிற்றிதழ் , ஜூலை ,93 )

0
ஆனால் இதைப் பற்றி க.நா.சு இவ்வாறாக எழுதியிருக்கிறார்....

புதுமைப்பித்தன் எழுதியுள்ள இலக்கிய விமர்சனக்குறிப்புகளில் ஒரு இடத்தில் மெளனியைத் திருமூலர்என்று குறிப்பிடுகிறார். அது அவர் அதிகம் எழுதாமையும் அடிக்கடி எழுதாமையும் பற்றித்தான்.தரத்தைப் பற்றியல்ல என்று விவாதிக்கிற "முற்போக்குக்" கும்பல் (புதுமைப்பித்தன் என்று "முற்போக்கு"வாதியானாரோ- அது கடவுளுக்குத் தான் வெளிச்சம்) ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள்.மெளனியின்முதல் பத்துப் பன்னிரென்து கதைகள் புதுமைப்பித்தனையும் விட அதித துரித கதியில் எழுதப்பட்டவை.அது விஷயம் புதுமைப்பித்தனுக்கும் தெரியும்.ஆகவே திருமூலர் என்று அவர் கூறியது தரத்தைப் பற்றியும்,உருவத்தைப் பற்றியும், பிற சித்தரிப்புகள் பற்றியும் தான் என்று நான் சொல்லுகிறேன். அதைப்பற்றிநான் புதுமைப்பித்தனுடன் பேசியதுண்டு - க.நா.சு

0

பிரமிள் , ஆரம்பகாலத்தில் மெளனியின் படைப்புகள் மீது நல்ல அபிப்ராயமே கொண்டிருந்தார்.ஆனால் , க.நா.சு போன்றவர்கள் மெளனியின் வருகைக்குப்பின்னால் , புதுமைப்பித்தனைக் குறைத்தும்,மெளனியைத் தூக்கி வைத்தும் எழுதத் தொடங்கினார்கள் . இதை க.நா.சு பல விமர்சனக்கட்டுரைகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்திருக்கிறார். புதுமைப்பித்தனின் தீவிர ரசிகரான பிரமிளுக்கு இந்தப் போக்கு பிடிக்கவில்லை , அதைத் தொடர்ந்து மெளனியின் படைப்புகள் தரம் தாழ்ந்தவை என்றும் புதுமைப்பித்தனே சிறந்த படைப்பாளி என்றும் ஸ்தாபிக்க முற்பட்டார்.

0

மீறல் சிற்றிதழில் , மெளனியைப் பற்றி பிரமிள் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள்...

மெளனியின் இலக்கிய பார்வை என்ன ? அவருடன் நேரில் சந்தித்துப் பேசினால் பிரபஞ்சம் தலைகீழாகத் தெரியும் என்கிறார்களே உண்மையா ? அந்தப் பேச்சுக்களைப் பதிவு செய்திருக்கலாமே ? என்ற கேள்விகள் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படுவதுண்டு. மெளனியின் படைப்புகள் நம்மிடம் உள்ளன. இவற்றில் உள்ள மெளனி செம்மையான வகையில் நிற்கிற ஒரு சிருஷ்டிகரமாகும்.அவரது பேச்சுக்களிலோ இந்தச் செம்மை இராது . ஒரு மகத்தான சிற்பத்தின் சிதறுண்ட பகுதிகள் போலத்தான் அவை தோன்றும். சிற்பக் கலை நுட்பத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த சிதறல்களில் உள்ள சிறுபகுதிகள் ஒரு வியப்புணர்வை தரும். பெரும்பாலோனோர்
சிற்பத்தின் படைப்புப்பகுதியை விட்டு சிதறல் பகுதியைப் பார்த்து இதிலென்ன கிடக்கிறது என்பதுண்டு. தமது நேர்ப் பேச்சுகளில் இப்படிப் பிரச்சினை இருப்பதை மெளனி உணர்ந்திருந்த ஒருவராவார். எனவே தான் அவர் பேட்டி தருவதிலோ தமது நேர்ப்பேச்சுக் கள் பதிவு பெறுவதிலோ ஆர்வம் காட்டவில்லை. பதிவு செய்வதற்கு நான் முயன்றிருக்கிறேன் . விளைவு ஏமாற்றத்தைத் தந்தமையால் அதை விட்டுவிட்டேன் . பாதிக்குப் பாதி ஒரு சிறப்பான பார்வையுடன் ஆதாரமற்ற துவேஷமும் அவரிடமிருந்து வெளிப்படுவதுண்டு.பார்க்கப்போனால் 'தத்துவம்' என்றதுமே நாம் அதனுடன் கைகோர்த்தபடி பிரசன்னம் தருகிற கருணையை மெளனியிடம் எதிர்பார்க்க
முடியாது. மெளனியின் சிருஷ்டியில் கூட கருணையின் மூச்சு இயங்குவதில்லை . தமது சிறப்பு, தமது இழப்பு,இதன் விளைவான ஒரு
ஆழ்ந்த தாபம் , இந்தத் தாபத்தின் தத்துவார்த்தச் சலனம் இவைதான் மெளனியின் சிருஷ்டிகரமாக மலர்ந்து கொண்டிருக்கின்றன.
தமது சிறப்பை ஓரிரு கதைகளில் சுயரூப வர்ணனையாக அசிங்கப்படுத்தியிருந்தாலும் , இதனையே சங்கீதபாவமாக வேறு கதைகளில் உந்தப்படுத்தியிருக்கிறார் . மற்றபடி தான் என்பதே தாபமாகி இருக்கிறது . பெர்ஸனலாகப் பார்த்தால் சிறுவயதிலேயே தாயை இழந்து
மாற்றாந்தாயினால் வளர்க்கப்பட்டதின் அந்தரங்கம், அவரது தாபத்திற்கு வித்தாகி இருக்கிறது . கருணை காட்டப்படாமையினால் அதை வெளிப்படுத்தவும் முடியாத ஒரு தத்துவார்த்தம் அவரது படைப்பில் ஊடாடுவதையும் இது நிர்ணயித்திருக்கலாம் . இது பற்றி அபிப்ராய பேதத்திற்கு இடமுண்டு

0

ஒரு குணரூப வடிவில் அமைந்த (Abstract) படைப்புகளைத் தந்த அவரால்(மெளனி) புதுக்கவிதையின் இதே அம்சங்களையோ நவீன ஓவியங்களையோ உணர முடிந்ததில்லை. பார்க்கப் போனால் குணரூபத்தின்அம்சங்களையே முழுவதும் சார்ந்து எழுதாமல் 'கதை' என்ற காமிரா, மைக்சிஸ்டம் சார்ந்த வடிவில்எழுத முற்பட்டமையால் குணரூபமேயான அவரது சிருஷ்டிகரம் பரிபூரணம் பெறாமலே போய்விட்டதுஎன வேண்டும். சாவில் பிறந்த சிருஷ்டியை இவ்விஷயத்தில் தனிமைப்படுத்தி ஒரு பூரணமான உரைநடைப் படைப்பாகக்காட்டலாம் என்றாலும், கெளரி மீது சுப்பய்யர் எரிச்சல் கொண்டு , அவளது பிறந்தகத்திலிருந்துஉடனே ஊருக்குக் கிளம்பவைக்க அவளை "தனியே கூப்பிட்டு ஏதோஅவள் மனது நோகியதாப் பேசி"தாகஎழுதுகிறார் மெளனி. காமிரா , மைக்சிஸ்டம் இந்த "ஏதோ"வுக்கு ஏன் ? எதுவாக இருந்தாலும்அதைப்பதிவு செய்வது அல்லவா இந்த சிஸ்டம் ? இத்தகைய 'ஏதோ' எதையும் புதுமைப்பித்தனிடம்காணமுடியாது" - பிரமிள் , மீறல் சிற்றிதழ்

0


இதே போல நினைவுச் சுவடு கதையில் ஏதோ என்று வரும்படியாக மெளனி எழுதியிருக்கிறார்.

சேகர் எப்போது வந்தாய் - என்ன விசேஷம் - ஊரில எல்லோரும் செளக்கியமா - என்ன செய்கிறாய் .."என்று என்னவெல்லாமோ கேட்டு ஒரு பதிலில் அவனைப் பற்றிய இருபது வருஷ சமாசாரத்தையும் அறிய முயன்றுகொண்டு இருந்தேன். அவனும் எனக்கு ஏதோ பதிலளித்துக் கொண்டிருந்தான். - நினைவுச்சுவடு

0

ஏன் ? - கதைச் சுருக்கம்

" ஏன் ? " என்ற கதையின் சாரத்தை தந்தி பாஷையில் சொன்னால் " திடீர்க் காதல் , காணாமல் போய்த் திரும்பவந்த பின் சாதல்"

சுசிலா , இவள் நான் கதாநாயகி , எதிர்த்தவீட்டில் கதாநாயகன் மாதவன் குடியிருக்கிறார்.சுசிலா எட்டாவது வகுப்பு படிக்கும் அதே பள்ளியில் மாதவன் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.இருவரும் ஒருவரை அறிந்திருந்தாலும் இதற்கு முன்னால் ஒரு வார்த்தை கூட பேசிக்கொண்டது கிடையாது.ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து சுசிலா வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறாள்.அவள் பின்னாலே சற்றுத் தள்ளி மாதவன் நடந்து வருகிறான். " சுசீலா ,நானும் வீட்டிற்குத்தானே போகிறேன்சேர்ந்து போகலாமே ? " என்று திடீரென கேட்டான் மாதவன். சுசிலா திடுக்கிட்டுப் பின்புறம் திரும்பிப் பார்த்தாள்.அவள் புருவங்கள் சற்று உயர்ந்து , கண்களும் சற்றுப் பெரிதாகி , " ஏன் எதற்கு ? " என்று வியப்போடு கேட்டதுபோல தோன்றின . மாதவன் தன் மனக்கட்டுப்பாட்டை இழந்தவன் போன்று " சுசீ நான் உன்னை மறக்க மாட்டேன்,நீயும் என்னை மறக்காமல் இருக்கிறாயா ? " என்று பொருத்தமில்லாமல் கேட்டான். (இது தான் திடீர்காதல் , அதாவது லா.ச.ராவின் "த்வனி" ல சொன்னால் " உன்னை நான் அறியுமுன்னர் என் உள்பிரக்ஞையிடம் நீ பீடம் கொண்டுவிட்டாய்" என்று மாதவன் சுசிலாவிடம் சொல்லாமல் சொல்கிறான்.) இருவரும் அடுத்துப் பேசிக்கொள்ளாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள் . புருவங்களை உயர்த்தி , கண்களைச்சிறிது பெரிதாக்கி "ஏன்?" என்று சுசிலா கேட்டது மட்டும் மாதவன் மனதிற்குள் அழுத்தமாய் பதிந்துவிட்டது .சில நாட்களில் சுசிலாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிடுகிறது . மேற்படிப்புக்காக மாதவன்அசலூருக்குச் சென்று விட்டான் ,இரண்டு வருடம் கழித்து விடுமுறையில் ஊருக்கு வருகிறான்.ஒரு நாள் மதியம் மாதவன் தன் வீட்டின் மாடியிலிருந்து எதிர்த்தவீட்டுத் திண்ணையைப் பார்த்தான்சுசிலா தன் அழும் குழந்தைக்கு தெருவில் போகும் வண்டியை விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன். அழுத்தமாய் மூளையில் பதிந்திருந்த "ஏன்?" என்ற கேள்விமேலே கிளர்ந்தெழுந்து மூளையை இழந்தவன் போலாகி நாளடைவில் பித்துப்பிடித்து செத்துப் போகிறான் மாதவன்.

0
மாதவனின் பிரேதத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் , திண்ணையிலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தசுசிலாவின் கண்களிலிருந்து விழுந்த இரண்டு சொட்டுக் கண்ணீர் "ஏன்" என்ற கேள்விக்கு அகப்படாமலேதான் கீழே சொட்டின.

இந்தக் கதையின் மூலம் " எல்லாம் விதிப்படி தான் நடக்கும் ? "ஏன்" னு காரணம்லாம் சொல்லமுடியாது " என்று மெளனி சொல்ல வருகிறார் என்று மாதிரி எனக்குத் தோன்றுகிறது

0

சாவில் பிறந்த சிருஷ்டி - கதைச்சுருக்கம்

இந்தக் கதையின் நாயகன் சுப்பய்யர் , ஐம்பது வயது மதிக்கத்தக்கவர், 10 வருடத்திற்கு முன்னால்மனைவியை இழந்த விதவன் , குழந்தை ஏதும் இல்லாத அநாதை . இரண்டாந்தாரமாக கெளரி என்ற19 வயது பெண்ணை மணந்து கொள்கிறார்.முப்பது வருட வயது இடைவெளி அவர்களுக்கிடையே ஒருசுவரை எழும்பியிருக்கிறது.


0

கெளரி தன் தங்கையின் திருமணம் முடிந்த மறுநாளில் திண்ணையில் அமர்ந்த படி தன்உறவுக்காரர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாள் . அதைக் காணும் சுப்பய்யர் ," நம்மிடம்மட்டும் ஏன் இவள் இவ்வளவு கலகலப்பாக இல்லை ? " என்று மனதுக்குள் புழுங்குகிறார்,தனியேகூப்பிட்டு ஏதோ அவள் மனது நோகப் பேசி, உடனே வீட்டிற்குக் கிளம்புமாறு அவசரப்படுத்துகிறார் .

0

சுப்பய்யரும் , கெளரியும் இரயில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் , "தான் இழுத்தஇழுப்புக்கெல்லாம் கெளரியும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ ? " என்ற குற்றஉணர்வு சுப்பய்யருக்கு , இரயில் ஒரு சந்திப்பில் நிற்கிறது , ஓர் இளைஞர் அவர்களுக்கு எதிர்இருக்கையில் வந்தமர்கிறான் , அந்த இளைஞனிடம் , சுப்பய்யர் விவஸ்தையில்லாமல் ஏதேதோபேசிக்கொண்டே வருகிறார் . ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் கெளரியை ," சுப்பய்யரின் மகள்"என்று தவறாகப் புரிந்து கொள்கிறார். அதற்கு சுப்பய்யர் கோபப்படாமல் " பெண்ணில்லை ஸார்..பெண்ணில்லை.. அவள் நம்ப ஸம்சாரம்" என்கிறார்.

0

ஏதேதோ உளறிக்கொண்டிருந்த சுப்பய்யர் , அந்த இளைஞனிடம் படைத்தல் , காத்தல் ,அழித்தல் வேலைகளைச் செய்யும் திருமூர்த்திகளான சிவன்,பிரம்மன் ,விஷ்ணு ஆகியோருடைய புராணத்தைஎ டுத்து விடுகிறார் ( இந்தப் புராணக்கதை தான் கதையின் மையப்புள்ளி )

சுப்பய்யர் , இளைஞனிடம் சொல்லும் கதை ...............

இந்த திருமூர்த்திகள் கிளம்பி ஊருக்கு வந்து ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொண்டு வேலைக்கு ஆரம்பித்தார்கள்.ரொம்ப நாள் செய்தார்கள் ஒற்றுமையாக .. கிரேதாயுகம் ... திரேதாயுகம்...துவாபரயுகம்..முழுசா மூன்று யுகங்கள் ஐயா.. ஒரு யுகம் பாக்கி, இந்த கலியுகம் தன்.வேலை கலைந்து சாப்பிடத் தூங்க.கலி பிறந்ததே பாருங்க சார்,நம்மைப் பிடித்து ஆட்டுகிற கலி, அதைத் தான் சொல்லுகிறேன்.அது தான்பாக்கி.அப்போது பிரும்மாவிற்கு கொஞ்சம் தூக்கம் கண்ணை அமட்டியது. காப்பி கீப்பி , பொடி கிடிஎன்று என்னவெல்லாமோ போட்டுப்பார்த்தான் போலிருக்கிறது ... ஆமாம் பிரும்மாவிற்கு தூக்கம்வந்துவிட்டது.விஷ்ணுவைக் கேட்டான். "கொஞ்சம் வேலையை நிப்பாட்டு . ஒரு சின்ன தூக்கம்போட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறேன் " என்றான். சரிதான் நடுவிலும் கொஞ்சம் சாப்பிடலாம் என்றுஅந்தச் சாப்பாட்டுராமன் சரி என்றான்... சிவனைப் போய் கேட்டாலோ, அது ஒரு பைத்தியம்.'முடியவே முடியாது . நீ கேட்கிறதினாலே நிச்சயமாக முடியாது.இப்போது தான் எனக்குக் குஷிகண்டிருக்கிறது' என்று சொல்லிவிட்டான்.என்ன கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடம் பலிக்கவில்லை.கோபம்வருகிறது ஆனால் யார் யாரை என்ன செய்யமுடியும்.ஸார் .. இந்தக் காலத்திலே எல்லோரும்ஈசுவரர்கள் இல்லையா ? எப்படியாவது துலைந்து போகிறது. அவா அவா தலைஎழுத்துப்படி நடக்கும்.நடக்கப்போவது தான் நடந்தது, ஆகப் போகிறது தலை எழுத்தாக , எனநினைத்துக் கொண்டு பிரும்மா கண் அசந்து தூங்கி விட்டான் ...சிவன் அழித்துக் கொண்டே விடாது வேலையை செய்துகொண்டிருந்தான். பிரும்மா படைத்ததை எல்லாம்குஷியில் ஒரே நொடியில் அழித்து முடித்துவிட்டான்.பிரும்மா தூங்கிக் கொண்டு இருந்தான்.படைத்ததுஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து அழித்துக்கொண்டிருந்தான் இவன்.சாமிகளோன்னோ..எல்லாம் செய்யமுடியும் அவர்களால்.தூங்கிவிட்டு பிரம்மா தன் வேலைக்கு ஆரம்பித்தார்.அது தான்உன்னை, என்னை , இந்தப் பொம்பிள்ளை, நாய்,நரி ... எல்லாவற்றையும் படைக்கிற பிரும்மாசிருஷ்டி கொள்வதற்கு முன்னால் தான் அவைகள் சிவனால் அழிக்கப் பட்டுவிட்டாச்சே.இப்படிப் படக்கிறதிலேஏதாவது பலன் உண்டா ஸார் சொல்லுங்கோ .. என்ன பிறவிகள் நாம் எல்லாம் இந்தக் கலியில் துளுக்கிறதரிதலைகள் தான். அந்தத் திருமூர்த்திகளின் போட்டி நம்மை எல்லாம் உயிர் இல்லாமல் தவிக்கவிட்டுக் கொண்டிருக்கு. எல்லாம் தரிதலையாட்டம் தான் ஸார் இந்தக் காலத்திலே.... வேறு என்னசொல்ல இருக்கிறது ஸார். "

0

சுப்பய்யர் இறங்கவேண்டிய இடம்வந்துவிட்டது . அந்த இளைஞனின் பெயரைக் கேட்கிறார். அவன் சுப்புஎன்கிறார் அடடே என் பெயரும் அது தான் சின்ன வயதில் நானும் உங்களைப் போலத்தான் இருந்திருப்பேன்போல.. எதற்கும் ஊருக்குப் போனது ஒரு போட்டோ எடுத்து வைச்சுக்கோங்க ..' என்றுசொல்லிக்கொண்டே வண்டி நிற்குமுன் எழுந்தவர் கொஞ்சம் தள்ளாடிச் சாய்கிறார்.பக்கத்தில் இருந்த கெளரியின் அணைப்பில் அகப்பட்டு கீழே விழாது தப்புகிறார்.

0

இந்தக் கதையில் சுப்பய்யர் தன்னை நடமாடும் பிணமாகவே கருதுகிறார்.


0

நாவலாசிரியர் ·பிரான்ஸ் காப்வைப் பற்றிச் சிலவரிகள் ...

பிரான்ஸ் காப்கா திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் ," இலக்கியமில்லாத மற்ற அனைத்தையும் எனக்குப் பிடிக்கவில்லை , குடும்ப வாழ்வுக்கான எந்தத்தகுதியும் எனக்கில்லை , தனியாக இருந்தால் எப்போதாவது நான் என் உத்தியோகத்தைத் தூக்கிஎறியமுடியும் ,ஆனால் திருமணமான பின்பு அது எப்போதும் முடியாது , என் வாழ்வின் படுகொலையை நானே தாங்கிக் கொள்கிறேன் , மாலை நேரத்தின் விசித்திர கணங்களில் நான் என்னையேபிளந்து பார்க்கமுடிகிறது.என்னுள் இருப்பதை ஒரு பெரிய அலறலுடன் கொண்டு வரும் முனைப்பில் எனக்குவேறு வேலையே இருப்பதில்லை. ஆனாலும் கடைசியில் எங்கோ ஒரு இசைவு ஏற்பட்டு அந்தஅலறல் ஒடுக்கப்பட்டுவிடுகிறது . அதை அப்படியே வெளிவர விட்டிருப்பேனாயின் அது மேலும் என்னைவிரிவுபடுத்தி நிறைத்திருக்கக்கூடும் எதுவும் இனி என்னைக் காப்பாற்றப் போவதில்லை ,அலைகளால் இழுத்துவரப் பட்ட சடலத்தின் நிலை என்னுடையது , நீந்துகிற ஒருவன் மீது இது மோதினாலும் அவனால் அதை கடலை விட்டு வெளியே இழுக்கமுடியவில்லை.மாறாக அது அவனை இழுத்துச்சென்றுவிடுகிறது" - இவ்வாறாக கா·ப்கா தான் உயிருடன் இருந்த பொழுதே தன்னை ஒரு பிணமாகக் கருதினார். - ( நன்றி : செந்தூரம் ஜெகதீஷ்)

திண்ணைக் கட்டுரைகள்


மௌனியின் சிறுகதைகள் - மரணமும் மகத்துவமும் - பாவண்ணன்
http://www.thinnai.com/arts/ar1202011.html

சாவில் பிறந்த சிருஷ்டி கதையைப் பற்றி - பாவண்ணன்
http://www.thinnai.com/arts/ar0310024.html

மௌனியின் படைப்புகளில் இலக்கிய இடம் - ஜெயமோகன்
http://www.thinnai.com/arts/ar0710036.html

மௌனியின் படைப்புலகம் - ஒரு கலந்துரையாடல் - அரவிந்தன்
http://www.thinnai.com/arts/ar0910012.html

செம்மங்குடி - மௌனி
http://www.thinnai.com/st121702.html

சுந்தரி - மௌனி
http://www.thinnai.com/st111901.html

உறவு, பந்தம், பாசம் - மௌனி
http://www.thinnai.com/st0122012.html

சித்தி - புதுமைப்பித்தன்
வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN | நேரம்: 7:11 AM | வகை: கதைகள், புதுமைப்பித்தன்  http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_02.html




செண்பகராமன் பிள்ளைக்கு வைராக்கியம் திடீரென்று ஏற்பட்டது. உலக வியவகாரங்களில் நொடித்துப் போய், மனசு கைத்து அவர் காஷாயத்தை மேற்கொள்ளவில்லை. pudu5தொட்டதெல்லாம் பொன்னான கைதான் அது. ஊரிலே செல்வாக்கு, உள்ளத்திலே நிறைவு ஏற்பட வேண்டியதற்குப் போதுமான சௌகரியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது. அவர் சிரித்துக்கொண்டேதான் காவி அணிந்து, கால் விட்ட திசையில் நடந்தார். துணை காரணமாகத் துன்பமோ, தீட்சையோ அவரை உந்தித் தள்ளவில்லை. பிள்ளையவர்கள் புறப்பட்ட தினம் வெள்ளிக்கிழமை. மூன்று நாட்கள் வீட்டில் யாரும் அவர் வரவில்லையே என்று கவலைப்படவில்லை. காரணம் அடிக்கடி அவர் அவ்வாறு 'சோலியாக' அசலூருக்குப் புறப்பட்டுவிடுவது வீடறிந்த பழக்கம். மூன்றாம் நாள் வந்த கார்டுதான் 'அவர் இப்பொழுது செண்பகராமன் பிள்ளை அல்ல; முப்பது கோட்டை விதைப்பாடும், மூன்று லக்ஷம் பாங்கி டிபாசிட்டும் உள்ள பண்ணையார் அல்ல; மண்டபத்துக்கு மண்டபம் கொடுங்கை வைத்துப் படுத்துத் தூங்கிக் கால்கொண்ட திசையில் செல்லும் ஆண்டி' என்பதை அறிவித்தது.

பிள்ளையவர்கள் செயல்கேட்டு ஊரே கலகலத்து விட்டது. திடீரென்று வைராக்கியம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது தெரியாத பலருக்கு, மனங்கண்டது எல்லாம் காரணமாகத் தெரிந்தது. யார் யாரெல்லாமோ என்ன என்ன எல்லாமோ சொன்னார்கள். அவ்வளவு காரணமும் தப்பு என்பது தெரிந்த ஒருவர் உண்டு. அவரே மீனாட்சியம்மாள் என்ற ஸ்ரீமதி செண்பகராமன் பிள்ளை. சம்சார பந்தத்தில் மனிதன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பூர்ணமாகத் தெரிந்துகொள்வதற்கு ஒருவருக்குத்தான் முடியும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஊரறிய ஒரே தலையணையில் தலை சாய்க்கச் சம்மதித்துக் கொண்ட ஜீவனுக்குத் தான், அன்று தொடங்கிய ஒழுங்கு எந்தக் கதியில், எந்த நியதியில் செல்லுகிறது என்பதைப் பூரணமாகத் தெரிந்துகொள்ளச் சௌகரியம் உண்டு. விவேகிகள் தெரிந்து கொள்ளுவார்கள்; அந்த வசதி பெறாதவர்கள் தலையைத் தாங்கிய தலையணையைப் போல பாரத்தைத் தாங்கியதால் விழுந்த குழியைத்தான் மன உலகில் பெற்றிருக்க முடியும். மீனாட்சியம்மைக்கு, தன் கணவர், தன்னுடன் அந்த இளமையிலே, நிதானம் இழந்த தெப்பம் போல உணர்ச்சிச் சுழிப்பில் மிதந்த காலத்திலும், பிறகு குடும்பம், குடித்தனம் என்ற வேட்கையில் வேரூன்ற நினைத்து ஆவேசத்துடன் சம்பாத்தியத்தில் தம்மை மறந்து இறங்கிய காலத்திலும், ஊரின் நன்மை தின்மைகளிலும் வல்லடி வழக்குகளிலும் தர்மாவேசம் உந்தத் தம்மை மறந்து வேலைசெய்த காலத்திலும், தாமரையிலையில் உருண்டு உருண்டு விளையாடும் தண்ணீர் போல இருந்து வருகிறார் என்பதைப் பூரணமாக அறிந்திருந்தாள். அவரது செயல் அவளுக்கு அதிசயமாகத் தெரியவில்லை.

செண்பகராமன் பிள்ளையின் தங்கை சித்திரை அம்மாள் அண்ணனுக்கு யாரோ 'செய்வினை' செய்துவிட்டார்கள் என்று தான் எண்ணினாள். கண் கண்ட ராசாவாக ஊரை ஆண்ட அண்ணன், ஒரே நாளில் ஆண்டியாகி ஓடுவதற்கு வேறு காரணம் இருக்க முடியாதென்று தீர்மானமாக நம்பினாள்; அவளுடைய புருஷரோ சற்றுச் சந்தேகச் சுபாவி. "அத்தானுக்குப் பித்தந்தான்" என்று தீர்மானித்து விட்டார். தலைக்குனிவாக இருந்தது. பிள்ளையவர்களை மீண்டும் கைப்பிடியாகப் பிடித்துவந்து வைத்தியம் செய்து குணப்படுத்திக் குடும்பத்தில் மறுபடியும் கட்டிப்போட வேண்டும் என்று ஆசைப்பட்டார். சேதி கேட்டு வந்த இவ்விருவருக்கும், "அவுக திரும்ப மாட்டாக; நீங்க போனா அலச்சல்தான் மிச்சம்; நல்ல வளியிலே நாம போய் நல்ல பாம்பெ போடலாமா?" என்று நிதானம் குறையாமல் பேசிய மீனாட்சியம்மையின் வார்த்தைகள் தாம் புரியவில்லை. ஒருவேளை... ஒருவேளை, அவரை விரட்டிவிட்டுச் சொத்தையும் பொருளையும் தாய் வீட்டுக்குச் சுருட்டிக்கொண்டு போக மீனாட்சியம்மை வெட்டிய குழியோ என்று சந்தேகித்தார்கள்.

பிள்ளைகளுக்குத் தாமே மைனர் கார்டியன் என்றும், செண்பகராமன் பிள்ளையவர்களின் குடும்ப நிர்வாகம் முழுவதும் தம் அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முதல் காரியமாகக் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தார். மீனாட்சியம்மையின் பந்துக்கள் இதைப் பார்த்துக்கொண்டிருப்பார்களா? அவளுக்கு ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் உண்டு. அவர்தாம் கிராமத்தில் இருந்துகொண்டு செண்பகராமன் பிள்ளையின் நிலபுலன் வரவுசெலவுக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். நிர்வாகம் தம்வசமேதான் கொடுக்கப்படுவது நியாயம் என்பதற்கு அனுசரணையாக, செண்பகராமன் பிள்ளையின் ஒரு மகன் சார்பாக ஸிவில் வழக்குப் புலியான ஒரு வக்கீலுடன் சேர்ந்து எதிர் வழக்குத் தாக்கல் செய்தார். மஞ்சட் கயிறு அகலாது போனாலும் மீனாட்சியம்மையின் கதி வெள்ளைப் புடைவை வியவகாரமாயிற்று.

தங்கையம்மாள், ஊர் ஊராக ஆள்விட்டுத் தேட ஏற்பாடு செய்தாள். ஸிவில் வழக்கு ஆவேசத்திலிருந்த அவளுடைய கணவருக்கு அது பிடிக்கவில்லை. வீணாகக் காலத்தைப் போக்கி, சொத்துச் சீரழிந்த பிறகு அத்தான் வந்தென்ன, அப்படியே ஆண்டியாகப் போயென்ன என்று நினைத்தார். ஆள்விட்டுத் தேடுவதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்பது அவரது கட்சி. ஊரிலே அவருக்குச் செல்வாக்கு உண்டு; செயலுண்டு. செண்பகராமன் பிள்ளையுடைய வாண்டுப் பயலுக்கு முறைப்பெண் என்ற பாத்தியதைக்கு வாண்டுப் பெண் ஒருத்தி அவருக்கு உண்டு. அவ்விருவருக்கும் செல்லக் கல்யாணம் செய்துவைத்துச் செண்பகராமன் பிள்ளை விளையாடியதனால் பிடி பலமாகத்தான் இருந்தது. அது இன்னும் கொஞ்சம் பலமாகுமென்ற நைப்பாசையும் உண்டு. அவருக்குப் பிடி மட்டும் பலம். உரிமையோ பாத்தியதையோ இல்லை. எதிர்பாத்தியதைக்காரனுக்கு ஒரு வகையில் உரிமை இருந்தாலும் ஊர் தன் பக்கந்தான் சேரும் என்ற பலத்த நம்பிக்கை அவருக்கு உண்டு.

2

செண்பகராமன் பிள்ளை காவிபோட்டுக்கொண்டு பக்கத்துச் சத்திரம் வரையில் நடந்தார். அங்கே சாப்பிடவில்லை. உடம்பிலே ஒரு தெம்பு, மனசிலே ஒரு கலகலப்பு. காரணம் அற்ற சந்தோஷம் என்று தான் சொல்ல வேண்டும்; சிட்டுக்குருவி மாதிரி, அவருக்கு இந்தத் தீர்க்கமான காரியம் இவ்வளவு சுளுவில் கைகூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதே இல்லை. கண்ணீரும் அழுகையும் வழிமறிக்கக் கூடும். ஊரார் வந்து நின்று எழுப்பும் கௌரவம் என்ற மதில்களைத் தாண்ட முடியாது போய்விடக் கூடும் என்ற அச்சம் அவருக்கு இருந்து வந்ததுண்டு. ஆனால் ஒன்று: யாரோ ஒருவர் கணீர் என்ற குரலில் "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிடுவது போன்ற தோற்றம் அவரைப் பலமுறை ஏமாற்றியதுண்டு. சில சமயம் காலமாகிவிட்ட அவருடைய தகப்பனாரின் குரல் போலக் கேட்கும்.

முன்பு எப்பொழுதோ ஒரு முறை, நடுநிசிப் போது, வாலிபம் குன்றாத காலம், மனைவியுடன் சல்லாபமாகப் பேசிக் கட்டித் தழுவும் சமயத்தில், யாரோ ஜன்னலுக்கு வெளியே வந்து நின்று, "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிட்டது போலக் கேட்டது. "அப்பாவா? இதோ வருகிறேன்" என்று தழுவிய கையை வழுவவிட்டு, எழுந்து வெளியே கதவைத் திறந்து கொண்டு வந்தார். வந்து, வெளியே வெறிச்சோடிக் கிடந்த பட்டகசாலையில் நின்றபொழுதுதான் 'இதென்ன முட்டாள்தனம்!' என்ற பிரக்ஞை எழுந்தது. குரலும் தகப்பனாருடையது போல இருந்தது என்ற புத்தித் தெளிவு போன்ற ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. இவர் குரல் கொடுத்துக் கொண்டு எழுந்து சென்ற நிலையில் உடலும் மனமும் கூம்பிப் போன மீனாட்சியம்மாள், "அப்பா செத்து அஞ்சு வருஷமாச்சே. இதென்ன தெய்வக் குத்தமோ, சோதனையோ" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். அவளைத் தேற்ற, வேறு எங்கோ கேட்ட சத்தம் என்று சொல்லி சமாளித்துக் கொள்வதற்குள் அவர் பாடு பெரும்பாடாகிவிட்டது.

இதே மாதிரிதான் நடுப்பகல்: கடையில் உட்கார்ந்து பெரிய கணக்கப்பிள்ளை எடுத்துக்கொடுத்த பேரேடுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதே மாதிரி யாரோ கூப்பிட்டார்கள்; பதில் குரல் கொடுக்க வாயெடுத்தவர் மின்னலதிர்ச்சியுடன் எதிர்மோதி வந்த சூழ்நிலை உணர்ச்சி வேதனை கொடுத்தபடி வாயடைத்தது. கடையிலே உட்கார்ந்திருந்தபடி சமாளிப்பதற்கு மிகவும் சங்கடப்பட்டார்.

சாலையிலே, சுருக்கிருட்டிலே முன் என்ன இருக்கிறது என்ற கவலை சற்றும் இல்லாமல், முதுகில் போட்ட சரடு புரண்டு விழாமல், 'கினிங் கினிங்' என்ற மணிச் சத்தத்துடன் நடந்துபோகும் காளைகளைப் போல மனசை அசை போடவிட்டு நடந்தார். சமயா சமயங்களில் ஊரில் எப்படி இந்தக் காரியம் கழித்துக் கொண்டு எதிர் ஒலிக்கும் என்பதை அவர் மனசு கற்பனை செய்ய முயலும். அவ்வளவையும் தப்பித்து வந்துவிட்டதில் ஓர் எக்களிப்பு; அதாவது, தாய் கிணற்றடியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மெதுவாக அடுக்குச் சட்டியைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி நின்று, உறியில் உள்ள நெய்விளங்காயைத் திருடித் தின்றுவிட்டு, உதட்டோ ரத்தில் ஒரு பொடி இல்லாமல் துடைத்துக் கொண்டதாக மனப்பால் குடித்துக்கொண்டு, "ஏளா, எனக்குப் பண்டமில்லையா?" என்று பாசாங்கு செய்யும் தன்னுடைய சுப்பையாவின் காரியம் போல, பிறர் கண்களில் படாதபடி வியவகாரத்தை நடத்திக் கொண்டதில் ஓர் எக்களிப்பு.

"என்னலே திருட்டு மூதி! உன் ஒதட்டிலேதான், உறிப்பானேலெ இருந்த நெய்விளங்காய் உக்காந்திருக்கே" என்று அவனுடைய தாய் அவன் குண்டுணித்தனத்தைச் செல்லமாக வெளிப்படுத்துவது போல், காலம் என்ற அன்னையும் தம்முடைய திருட்டுத்தனத்தை வெளிப்படுத்திவிடும் என்பதை அவர் புரிந்து கொள்ளாமலில்லை. அப்போது நாம் இங்கு இருக்கமாட்டோ ம் என்பதில்தான் அவருக்கு ஏகமேனியாக எக்களிப்புத் தலைசுற்றி ஆடியது.

ஆனால் ஒரு காரியம். "நாம் ஏன் இந்தக் காவியைப் போட்டுக் கொள்ள வேண்டும்?" என்ற கேள்வி மட்டும், செய்கிற காரியத்தை எதிர்த்துக் கேள்வி போட்டு மடக்கிக் கொண்டே இருந்தது.

மாடு இழுக்க வண்டி உருண்டது. மனசு இழுக்க அவரும் நடந்தார், நடந்தார், நடந்தார்... நடந்துகொண்டே இருந்தார். கறுப்பாகச் செறிந்து கிடந்த மரங்கள், கரும்பச்சை கண்டு, கடும்பச்சையாகிப் பளபளவென்று மின்னின. நக்ஷத்திரங்கள் எப்பொழுது மறைந்தன என்ற விவரம் அவருக்குத் தெரியாது. ஊருக்கு வெகு தொலைவில், இரட்டை மாட்டு வண்டிக்குப் பின்னால் எங்கோ நடந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது.

தூங்கிக்கொண்டிருந்த வண்டிக்காரன் எழுந்து, அவிழ்ந்து கிடந்த முண்டாசை எடுத்துக் கட்டிக்கொண்டு, "தை, தை" என்று காளைகளை நிமிண்டினான். சக்கரங்கள் சடபடவென்று உருண்டன.

வண்டியும் தூசிப்படலத்தை எழுப்பிக்கொண்டு அந்தத் திரை மறைவில் ஓடி மறைந்தது.

எதிரியை மடக்குவதற்குத்தான் சரக்கூடம் போடுவார்கள்; பிரம்மா ஸ்திரத்தைப் பிரயோகித்தால் தான் புகைப்படலத்தின் மறைவில் வருகை தெரியாமல் வந்து எதிரியின் வல்லுயிரை வாங்கும். ஓடுகிற மாட்டுவண்டிக்கு இந்த ராசாங்கமெல்லாம் என்னத்திற்கு? இப்படியாக நினைத்துக்கொண்டு சிரித்தார் பிள்ளை. படித்த படிப்பு எல்லாம் மனசில் திசைமாறித் தாவி, தம்முடைய பயனற்ற தன்மையைக் காட்டிக் கொள்வதாக நினைத்தார். இனிமேல் படித்துப் பாழாய்ப் போன கதையை எல்லாம் தலையில் விஷம் ஏறுவதுபோல் ஏறித் தம்மைக் கிறங்க வைப்பதற்குச் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தார். படித்த படிப்பென்ன! அறிந்த ஞானம் என்ன! எல்லாம் எதற்கு? யார் கூப்பிடுகிறார்கள் என்ற விடுகதையை விடுவிக்க வகையில்லாமல் திண்டாடுகிறதே!

சாலை இருந்த இடத்தில் திடுதிப்பென்று வளைந்து திரும்புகிறது. பிள்ளையவர்களும் திரும்பினார். திருப்பத்துக்கு அப்பால் ஆலமரமும் ஒரு சின்ன மண்டபமும் கிணறும் இருந்தன. வண்டிக்காரன் காளைகளை நுகத்தடியில் கட்டிவிட்டு, அடுப்பு மூட்டி, ஆலம் விழுது கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தான். மண்டபத்து முகப்புத் தூணில் முதுகைச் சாய்த்து, அருகே ஆண்டிப் பொட்டணம் துணை இருக்க, கிழட்டுச் சாமி ஒன்று மனசைச் சோம்பலிலே மிதக்கவிட்டு நிர்விசாரமாக உட்கார்ந்துகொண்டிருந்தது. வண்டிக்காரனிடம் பட்டையை வாங்கி, பல் துலக்கி, ஸ்நானம் செய்து இரண்டு மிடறு தண்ணீர் பருகிவிட்டு மண்டபத்தில் கால் உளைச்சலைப் போக்கிக் கொண்டு நிதானமாக நடந்தால் என்ன என்று செண்பகராமன் பிள்ளை கருதினார்.

வழக்கம் போல, "ஏலே, அந்தப் பட்டையை இப்படிப் போடு" என்று அதிகாரம் செய்யத்தான் அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆண்டியாகிப் பன்னிரண்டு மணிநேரம் கடந்தும் அதிகார வாசனை போகவில்லை.

"என்ன சாமி, ஏலே, ஓலே இங்கிய? ஓலே பட்டெல இருக்கும்" என்று எடுப்பாகப் பதில் சொன்னான் வண்டிக்காரன்.

குத்துக்கல்லில் சாய்ந்திருந்த கிழட்டுச் சாமி சிரித்தது. முத்து முத்தான பல்லும், தாடியும் பார்ப்பதற்கு மோகனமாகத்தான் இருந்தன. பிள்ளையவர்களுக்கு வேட்டியின் காவிக்கு அடுத்த சொல் அதுவல்ல என மௌனத்தைக் கடைப்பிடித்து நிழலில் உட்கார்ந்தார்.

குதிரைச் சதையை வருடிக்கொண்டார். தடவிக் கொடுத்துக் கொள்வது சுகமாக இருந்தது.

அவருக்குச் சற்றுத் தூரத்தில் மாடுகள் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. கறுத்த காளை போன ஜன்மத்தில் வழிமறிச்சான் உத்தியோகம் போலும்! ரஸ்தாவில் பாதி தனக்கென்று படுத்துக் கொண்டிருந்தது.

இவர்கள் நடந்துவந்த திசையிலே, திருப்பத்துக்கு அப்பால், பூம்பூம் என்ற ஹார்ன் சப்தத்துடன் ஒரு வாடகை மோட்டார், கொள்ளுமட்டும் ஜனங்களை ஏற்றிக்கொண்டு பேரிரைச்சலுடன் ஐக்கிய ஜனநாயக நாடுகளின் 'ஏகோபித்த' அணி வகுப்பினர்களைக் கூட்டிக்கொண்டு திரும்பியது. வழிமறிச்சான் காளை உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தது. பஸ் டிரைவர் 'ஸ்டியரிங்' சக்கரத்தை ஒடித்துத் திருப்பினான். பஸ் எதிரிலிருந்த புளியமரத்தில் ஏற முயன்றது; கவிழ்ந்தது. உள்ளே குமைந்த ஜனக் குமைச்சல் பிரலாபிக்கும் ரத்தக் களரியாயிற்று. அதிலிருந்து ஜனங்களும் மூட்டை முடிச்சுகளும் வெளியே பிய்த்து எறியப்பட்டன. உள்ளே பலர் அகப்பட்டு நசுங்கினர். ஸ்டியரிங் சக்கரத்தின் மீது டிரைவரின் பிரேதம் கவிழ்ந்து படுத்திருந்தது. ஒடிந்த கண்ணாடித் துண்டு அவன் மூக்கைச் செதுக்கி எங்கோ எறிந்துவிட்டது.

பதறி அடித்துக்கொண்டு எழுந்திருந்தார் பிள்ளை. மோட்டாரின் அடியில் சிக்கிக் கிடப்பவர்களை விடுவிப்பது எப்படி என்று தெரியாமல், அர்த்தமற்ற கூப்பாடு போட்டுக்கொண்டு வண்டியைச் சுற்றி சுற்றி ஓடிவந்தார். விபத்து பலமாகிவிட்டதனால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று உலைப் பானையைச் சற்றும் கவனிக்காமல், கட்டை வண்டிக்காரன் வண்டியைப் பூட்டிக்கொண்டு குறுக்குப் பாதையாக ஓடி ஆட்களை அழைத்துவருவதாகச் சொல்லிச் சிட்டாகப் பறந்துவிட்டான். விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார். அவருக்கு எப்படி உதவிசெய்வது என்று புரியவில்லை. இதற்குள் மோட்டார் வண்டியில் பின்னே இருந்தவர்கள் அதிர்ச்சியின் வேகம் அடங்கியதும் இறங்கினார்கள். செண்பகராமன் பிள்ளைக்கு மூட்டைகளை எடுத்து வரிசையாக அடுக்கத்தான் முடிந்தது. எதிரே கண்ட ஆபத்து அவரைக் கதிகலங்க வைத்துவிட்டது.

எதிரே வந்து போக்கு வண்டிகள் இரண்டொன்று நின்றன. அடிபட்டவர்களை அடுத்த ஊர்வரையில் ஏற்றிச் செல்லச் சம்மதித்தனர்.

கோடை இடி மாதிரி நிகழ்ந்த இந்த ரௌத்திர சம்பவத்தின் ஆரவாரம் ஒடுங்கி அந்த இடம் மறுபடியும் நிம்மதியாக இரண்டு மணி சாவகாசம் பிடித்தது.

தம்மை அழைக்கும் குரலின் மாயக்கூத்துப் போலத் தென்பட்டது பிள்ளைக்கு. ஆனால் ஒடிந்து வளைந்த இரும்பாக நின்ற வாடகை மோட்டார்தான் அச்சம்பவத்தை நினைப்பூட்டும் தழும்பாக, கண்களை உறுத்தியது.

செயல் ஒடுங்கி நின்ற பிள்ளை, நிதானம் பெற்றுக் கட்டை வண்டிக்காரன் போட்டுவிட்டு ஓடின பட்டையை எடுத்துக்கொண்டு கிணற்றருகில் சென்றார்; பல் துலக்கினார்; குளித்தார்; ஈரவேட்டியை ஆலம் விழுதுகளில் தொங்கவிட்டார்; மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.

அடுப்பு, புகைந்து கொண்டிருந்தது. அதையே கவனித்துக் கொண்டிருந்தார்.

"இன்னும் நெருப்பு அணையவில்லை" என்றது கிழட்டுச்சாமி.

இத்தனை கோரத்தையும் கல்லுப் பிள்ளையார் மாதிரி இருந்த இடத்தைவிட்டு அசையாமல் கிழட்டுச்சாமி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது என்ற உணர்ச்சி செண்பகராமன் பிள்ளையின் மனசில் ஈட்டி கொண்டு செருகியது. துறவித் தன்மையை வெறுத்தார். மறுகணம் 'அவ்வளவு கல்நெஞ்சோ!' என்று பதைத்தார். அதே மண்டபத்தில் உட்காரக் கூடப் பயந்தவர் மாதிரி சற்று நகர்ந்து தள்ளி உட்கார்ந்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.

"மோட்டார் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்ததனால் யாருக்கு என்ன லாபம்?" என்று கேட்டது கிழட்டுச்சாமி.

சும்மா இருந்தது போதாதென்று தம்மையும் வேறு கேலி செய்கிறான் இந்தக் கிழட்டு ஆண்டி என்று கோபப்பட்டார் செண்பகராமன் பிள்ளை. எழுந்தார். பதில் பேசவில்லை.

"அடுப்பு இன்னும் புகைகிறது; அணையவில்லை" என்று சிரித்தது கிழட்டுச்சாமி.

"அதை அணைத்துவிடட்டுமா?" என்றார் பிள்ளை. அவருக்குப் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருக்க விருப்பம் இல்லை. ஒரு பட்டை தண்ணீர் மொண்டு, அடுப்பில் ஊற்றி அணைத்துவிட்டு, வேட்டி உலர்ந்துவிட்டதா என்று வேட்டியைத் தொட்டுப் பார்த்தார்.

"கிழட்டுப் பட்டையானாலும் ஒரு பட்டை தண்ணீருக்கு எவ்வளவு சக்தி இருக்கு பாத்தியா?" என்றது கிழட்டுச்சாமி.

உலர்ந்த வேட்டியைக் கொசுவி, உதறிக் கட்டிக்கொண்டார் பிள்ளை.

மறுபடியும் மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.

"சாமி எங்கே போறதோ" என்று கேட்டார்.

"எல்லாரும் போற எடத்துக்குத்தான்? வேற எங்கே போக்கடி; இந்தா இந்த அவலைத் தின்னுகிறாயா?" என்று மூட்டையை அவிழ்த்துக் கையில் ஒரு குத்து அவலைக் கொடுத்தது கிழட்டுச்சாமி.

பிள்ளை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக்கொண்டார். வாயில் கொஞ்சம் இட்டுக் குதப்பிக்கொண்டே, "அது என்ன புஸ்தகம்?" என்று புருவத்தை நிமிர்த்திச் சுட்டிக் காட்டினார். கிழட்டுச்சாமி அதை எடுத்துக் கையில் கொடுத்தது. பிழைகள் மலிந்த திருவாசகப் பதிப்பு அது அநாதியான சிவபிரான் மாதிரி முன்னும் பின்னும் அற்றிருந்தது.

பிள்ளையவர்களுக்கு மனப்பாடமான கிரந்தம்; ருசியோடு படித்த புஸ்தகம்.

"அதை வாசியும்" என்றது கிழட்டுச்சாமி.

பிள்ளையவர்கள் அவலை மடியில் கட்டி வைத்துவிட்டு ராகத்துடன் வாசிக்க ஆரம்பித்தார். சாமி கேட்டுக்கொண்டே இருந்தது.

"வெளியிலே குப்பையிலே கிடந்தது; ஆருக்காவது உதவுமே என்று எடுத்து வந்தேன்; எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது" என்றது கிழட்டுச்சாமி.

படிக்காதவன் தூக்கின சுமையா என்று அதிசயப்பட்டார் பிள்ளை. எழுத்தறிவற்ற மூடமோ, வயிற்றுப் பிழைப்புக்குக் காவியோ என்று சந்தேகித்தார் பிள்ளை.

கிழடு சிரித்துக்கொண்டிருந்தது.

"நான் கைலாசத்துக்குப் போகிறேன்" என்றது கிழட்டுச்சாமி.

'கிண்டல் ரொம்பப் பலமாக இருக்கிறதே' என்று நினைத்தார் பிள்ளை. உதறியடித்துக்கொண்டு சாடிப் பேச அவருக்குத் தைரியம் இல்லை.

"கூண்டோட கைலாசம் இல்லை; கைலாச பர்வதத்துக்குத்தான் போகிறேன்; நீரும் வருகிறீரா?" என்று அவரைப் பார்த்துச் சிரித்தது அந்தக் கிழட்டுச்சாமி.

"எங்கே போனால் என்ன? வருகிறேன்" என்று எழுந்தார் பிள்ளை.

"சரி, இருக்கட்டும். உம்ம பேரு என்ன?" என்றது கிழட்டுச்சாமி.

"சாந்தலிங்கம் என்று சொல்லணும்" என்றார் பிள்ளை.

"இதுவரை சொல்லிக்கொண்டு வந்தது?" என்றது கிழட்டுச்சாமி.

"செண்பகராமன் பிள்ளை என்று சொல்லுவார்கள்" என்றார்.

செண்பகராமன் பிள்ளையின் வாண்டுப்பயல் வடிவேலுவுக்கு மாமனாரான ஆனையப்ப பிள்ளைக்கு எதிராக வழக்குத் தொடுத்த மனைவிவழி மைத்துனர் நல்லசிவம் பிள்ளை, அவருடைய இரண்டாவது மகன் முத்துசாமியின் சார்பாகச் சொத்தைத் தம் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும் அல்லது கோர்ட்டார் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டும் என்று கட்சி ஆடினார். அவருடைய வக்கீல் கெட்டிக்கார வக்கீல். ஆனையப்பப் பிள்ளைக்கு ஊரில் செல்வாக்கு உண்டு. நல்லசிவம் பிள்ளையின் வக்கீல், வருகிற அறுவடைவரை வழக்கை ஒத்திவைத்து, பூநெல்லை அகற்றிக் கிஸ்திப் பணத்தையும் மீனாட்சியம்மை சார்பாகத் தாமே கட்டிவிட்டால், குடுமி தம் கைக்குள் சிக்கிவிடும் என்று திட்டம் போட்டார்.

வடிவேலுவின் நலத்தை முன்னிட்டு வழக்காடப் புகுந்த ஆனையப்ப பிள்ளையின் யோசனை வேறு. அறுவடையின் போது களத்து நெல்லை மடக்கிவிட வேண்டும், அப்பொழுது நல்லசிவம் பிள்ளையின் கொட்டம் அடங்கும் என்று மனப்பால் குடித்தார் ஆனையப்ப பிள்ளை. கோர்ட்டில் இன்ஜங்ஷன் வாங்கி அப்படியே நெல்லை மடக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர் யோசனை பண்ணியிருப்பது வாண்டு வடிவேலு மூலம் மீனாட்சியம்மையின் காதுக்கு எட்ட, நல்லசிவம் பிள்ளை உஷாரானதில் அதிசயம் இல்லை. ஆனையப்ப பிள்ளை மருமகனைத் தன் வீட்டோ டு கூட்டிப் போய் வைத்துக் கொண்டு அவன் படிப்பை மேற்பார்வை செய்யாவிட்டால் அவன் கெட்டுக் குட்டிச்சுவராகப் போவான் என்பதைத் தன் மனைவி மூலம் மீனாட்சியம்மைக்குச் சொல்லிவிட்டார். பையன் மீது உள்ள பாசத்தினால் அது சரியெனவே அவளுக்குப் பட்டது. "ஒங்க வீட்டு மருமகன் தானே? அவனை ஒப்படியாகப் பண்ணுவது இனி உங்க பொறுப்புத்தானே?" என்று பதில் சொல்லித் திருப்தி அடைந்தாள்.

கிராமத்திலிருந்து வந்த நல்லசிவம் பிள்ளை அக்கா என்று உறவு கொண்டாடிக்கொண்டு வந்து, "பிள்ளையை வேறு வீட்டில் விட்டு வைப்பது நமக்குக் குறைச்சல்; மேலும் ஆனையப்ப பிள்ளைக்கு இப்பொழுது கடன் தொல்லை அதிகம்; சிறுசை வைத்துக் கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான்" என்று ஓதினார்.

"செண்பகராமன் பிள்ளையின் சம்பாத்தியம் மண்ணாங்கட்டியாகப் போகும்; முதலில் வடிவேலை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா" என்று யோசனை சொன்னார்.

மீனாட்சி அம்மாளுக்கு அவர் சொல்லுவதும் சரியாகத்தான் பட்டது. அவனுடைய நன்மையை எண்ணி முத்துசாமியை உருப்படாமல் ஓட்டாண்டி ஆக்கிவிடுவதா என்று மனசு பொங்கியது. பகல் மூன்று மணிக்குத் தன்னுடைய நாத்தனார் வீட்டுக்குப் போனாள். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலே கொட்டமடித்துக்கொண்டிருந்த வடிவேலைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தாள். "நான் மாமா வீட்டில்தான் இருப்பேன்" என்று வடிவேலு கத்தினான். அவளுடைய கைகளைப் பிறாண்டினான். ஆனால் அவளுக்கு பின்னால், 'ஓ ராமா' என்று படைப்பயம் போட்டுக்கொண்டுதான் தெரு வழியாக இழுபடவேண்டி இருந்தது.

நயினார்குளத்தங் கரையில் மாலை மயங்கும் சமயத்தில் ஆனையப்ப பிள்ளையும், நல்லசிவம் பிள்ளையும் சந்தித்துக் கொண்டார்கள். வார்த்தை தடித்தது; நல்ல காலம், உடல் தடிக்கவில்லை.

"உன் கொட்டத்தை அடக்குகிறேன்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

"செண்பகராமன் பிள்ளை ஊரிலே கண்ட மழுமாறிகளுக்குச் சொத்துச் சம்பாதித்து வைத்துவிட்டுப் போகவில்லை" என்று உறுமினார் நல்லசிவம் பிள்ளை.

"யாரடா மழுமாறி? செண்பகராமன் பிள்ளை சொத்து என்ன கொள்ளியற்றுப் போச்சு என்று நினைத்துக்கொண்டாயா?" என்று பதிலுக்கு உறுமினார் ஆனையப்ப பிள்ளை.

கிராமத்தில் பயிர் அரிவாளை எதிர்பார்த்துத் தலைசாய்த்து நின்றது.

"அண்ணாச்சி, நாளைக்கு நாம் நினைக்கிற காரியம் கைகூடத் திருச்செந்தூருக்குப் போய் ஓர் அர்ச்சனை நடத்திவிட்டு வருவோம்" என்று சொல்லிக்கொண்டே ஆனையப்ப பிள்ளையின் வீட்டுக்குள் ஒரு புல்லுருவி நுழைந்தது. பரமசிவம் பிள்ளை நல்லசிவம் பிள்ளை சார்பில் கிருஷ்ண பரமாத்மாவாக எதிர்கோட்டைக்குள்ளே சென்று விளையாடினார். முருகனுக்கு வெள்ளியன்று அர்ச்சனை நடத்தி, பிறகு கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் அர்ச்சனை நடத்தினால் காரியம் நிச்சயமாக ஜயம் என்று இரவோடு இரவாகத் திருச்செந்தூருக்குப் பிரயாணமானார்கள். ஆனையப்ப பிள்ளையும் புல்லுருவி பரமசிவமும், பணத்தைப் பணம் என்று பாராமல் நல்லசிவம் பிள்ளை அறுவடையை அசுர கதியில் நடத்த ஆரம்பித்தார்.

வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் நெல்லை எத்தனை கோட்டையானாலும் ஒதுக்க முடியாதவன் ஒரு வேளாளனா என்பது நல்லசிவம் பிள்ளையின் கட்சி.

அர்ச்சனை பாலபிஷேகம் செய்துவிட்டு, நெஞ்சில் சந்தோஷத்தோடு கோவில் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து, மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய மறவன் ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து காரியம் மிஞ்சிப் போனதாகச் சொன்னான். பக்கத்தில் பரமசிவம் பிள்ளை இல்லை. அவர் கோவிலிலிருந்தே நழுவி விட்டார். "அண்ணாச்சி இங்கே ஒரு எடத்துக்குப் போயிட்டு வருகிறேன்" என்று அவர் சொல்லும்போது அவர் வார்த்தையைக் கபட நாடகம் என்று ஆனையப்ப பிள்ளை நினைக்கவில்லை. இன்ஜங்ஷன் யோசனையைக் கைவிடவேண்டியதாயிற்று.

இப்படியாக, செண்பகராமன் பிள்ளையின் குடும்ப நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்காக, இரண்டு நபர்கள் அவருடைய சொத்தை வாரி இறைத்துக் கொண்டு கோர்ட்டு வாசலில் காத்துக் கிடந்தார்கள்.

4

சாந்தலிங்கச்சாமி மறுபடியும் தென் திசை நாடும்பொழுது வருஷம் பத்து ஓடிவிட்டன. எங்கெங்கோ கிழட்டுச்சாமியுடன் சுற்றினார். கைலாச பர்வதத்தில் கிழட்டுச்சாமி ஒடுக்கமானபோது அருகில் இருந்தவர் சாந்தலிங்கச்சாமிதான்.

அவர் கொடுத்த திருவாசகப் புஸ்தகம், அவர் வைத்துவிட்டுப் போன மூட்டை இரண்டோ டும், நிம்மதி இன்மை என்ற நிஜச் சொத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தார். கடைசியாக, திருச்செந்தூருக்கு வந்து உட்கார்ந்தார். மனசு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. யாரோ தம்மைத் தேடி அழைப்பது போன்ற ஒரு மனநிலை; வாசியை வசப்படுத்தும் பழக்கம் பெற்றும் அடங்கவில்லை. கூப்பிட்டவர் யார்? ஏன் கூப்பிட வேண்டும்? பத்து வருஷங்களாக வாட்டும் கேள்வி.

கடைசியில் ஆனையப்ப பிள்ளையின் பாலபிஷேகத்துக்கு ஏமாறாத முருகன் காலடியில்தான் அவர் வந்து விழுந்தார். ஓயாத கடலும் ஓயாத மனசும் அவரை அலட்டின. காவித் துணியை அணிந்துகொண்டபோது இருந்த மன உல்லாசம் எங்கோ ஓடி மறைந்துவிட்டது. புறப்பட்ட இடத்தையே அலகை போல, தாம் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டார். தமக்குச் சாந்தலிங்கம் என்று பெயர் இட்டுக் கொண்டதைக் கண்டு கிழட்டுச் சாமி சிரித்ததில் அர்த்தபுஷ்டி இருந்ததாகவே இப்பொழுது அவருக்குப் பட்டது.

நல்ல வெள்ளிக்கிழமையும் நாளுமாக வௌவால் மாதிரி இருட்டில் அல்லாடக் கூடாது என்று நினைத்துக் கோவிலுக்குச் சென்றார்.

சந்நிதியில் தம்மை மறந்த நிஷ்டை சற்றுக் கைகூடியது. லயத்தில் இருப்பவரை "அத்தான்" என்று யாரோ ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்.

ஆனையப்ப பிள்ளைதான். வழக்கம்போல வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்காகத் திருச்செந்தூருக்கு வந்திருந்தார்.

மங்கிய விளக்கொளியும் பத்து வருஷங்களும் போட்ட திரை அவருடைய பார்வையை மழுங்க வைக்கவில்லை. முருகனிடம் மாறாத நம்பிக்கை வைத்ததன் பலன் என்று அவர் கருதினார்.

சாந்தலிங்கச்சாமி அதிர்ச்சியிலிருந்து தெளிந்து நிதானப்பட்ட பிறகு தம்முடைய சகோதரி புருஷன் என்பதை உணர்ந்தார். செண்பக ராமன் பிள்ளையாக நடந்துகொள்ள மனம் ஒப்பவில்லை.

ஆனையப்ப பிள்ளைக்கு எப்படித் தம் காரியத்தைச் செண்பகராமன் பிள்ளையிடம் சாதித்துக்கொள்வது என்ற யோசனை. எதிர்க்கக் கூடாது; போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும்; அவ்வளவுதான்.

இரவு இரண்டு மணிவரையில் இரண்டு பேரும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து பேசினார்கள்.

"நீங்கள் நல்ல வழியில் இருப்பதை நான் கெடுக்க விரும்பவில்லை; சிறு பையன்கள் என்ன பாவம் பண்ணினார்கள்? சொத்தை ஊர்க்காரன் தின்னாமல் ஒரு ஒழுங்குபடுத்திவிட்டு மறுபடியும் காஷாயம் போட்டுக்கொள்ளுங்கள்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

மறுபடியும் வெள்ளை உடுத்துக் கோர்ட்டு ஏறிக் குடும்பத்தைச் சீர்தூக்கி வைக்க வேண்டும். ஆமாம். வடிவேலுவும், முத்துசாமியும் என்ன பாவம் பண்ணினார்கள்? அவர்களுக்காக இந்தக் கட்டை உழைப்பதில் குற்றம் இல்லை என்றது சாந்தலிங்கச்சாமியின் மனசு. 'ஊர்ப் பயல்கள் கொட்டத்தை அடக்காமல் ஓடியா போவது?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.

"சரி, வருகிறேன். எழுந்திருங்கள். மீனாட்சி எப்படி இருக்கா?" என்றார் செண்பகராமன் பிள்ளை.

"அவளை உங்களுக்குத் தெரியாதா? கேப்பார் பேச்சைக் கேட்டுக் கேட்டுத்தான் குடும்பம் குட்டிச்சுவராய்ப் போச்சு. காலையில் நான் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். மாலையில் அவன் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். கடைசியில் வீண் சிரமமும் பணவிரயமுந்தான் மிச்சம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

இரண்டு பேரும் மூன்று மணி சுமாருக்குத் திருநெல்வேலிக்குப் போகும் பஸ்ஸில் ஏறினார்கள். சாந்தலிங்கசாமியின் மனசு என்னவோ செய்யத் தகாத காரியத்தில் ஈடுபடுவதாகவே அல்லாடியது.

'நான் இந்த வேஷத்தில் வீட்டு நடைப்படியை மிதிக்கலாமா?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.

பலபலவென்று விடியும்போது பஸ் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு மணிநேரம் கழித்தால் சாந்தலிங்கச் சாமிக்கு ஒடுக்கம்; அதாவது அப்புறம் செண்பகராமன் பிள்ளைதான்.

"ஆனையப்ப பிள்ளையவாள், நீங்க சொல்லுவது ரொம்பச் சரியாத்தான் படுகிறது; எனக்குக் குடும்பம் ஏது, குட்டி ஏது? நான் ஆண்டி" என்றார் சாந்தலிங்கச்சாமி.

"அத்தான், வண்டியைவிட்டு இறங்குங்க, நாம் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசிக்கொள்வோம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

இருவரும் இறங்கி எதிரில் இருந்த ஹோட்டலுக்குள் போனார்கள். அங்கே இரைச்சல் காதை அடைத்தது. இருவரும் குழாயடியில் முகத்தைத் தேய்த்துக் கழுவிப் பல் துலக்கினார்கள்.

குனிந்து வாயை உரசிக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் சாந்தலிங்கச்சாமிக்கு, "அப்பா செண்பகராமா!" என்று யாரோ உரத்த குரலில் கூப்பிட்டது கேட்டது.

"அத்தான், அதாரது என்னை அடையாளம் கண்டு கூப்பிட்டார்கள்?" என்று தலையை நிமிர்ந்து கேட்டார் செண்பகராமன் பிள்ளை.

பக்கத்தில் இருந்த சிறுவன், "சாமி, ஒங்களை யாரும் கூப்பிடலியே? நான் தானே பக்கத்தில் நிக்கேன்?" என்றான்.

'இந்தச் சென்மத்திலே நான் சாந்தலிங்கமாக மாட்டேன் போலும்!' என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டது ஜீவாத்மா.

காவி தரித்த செண்பகராமன் பிள்ளைதான் அங்கு நின்றார். சாந்தலிங்கம் மனசுக்குள்ளாகவே ஆழ்ந்து முழுகிவிட்டது. மனசு ஆழம் காணாத கிணறு அல்லவா?

"அத்தான், நேரத்தைக் களிக்காதிய" என்று ஆனையப்ப பிள்ளை குரல் கொடுத்தார்.

செண்பகராமன் பிள்ளைக்குப் பத்து வருஷங்களுக்குப் பிறகு காப்பி உடலிலே வேறு ஒரு விதமாகப் புழுக்கத்தையும் புளகாங்கிதத்தையும் கிளப்பியது.

இருவரும் மீண்டும் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் புறப்பட்டது.

எப்போதோ ஒரு காலத்தில் கிழட்டுச் சாமி, கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்ததும், இப்போது தம்முடைய சதை ஆடுவதும் பக்கத்தில் பக்கத்தில் நினைவுக்கு வந்தன. கைலயங்கிரியில் ஒடுக்கமான கிழட்டுச்சாமி எதிரே உட்கார்ந்துகொண்டு கேலி செய்வது மாதிரி இருந்தது.

"சாமி, ஒங்களெ செலம்பரத்திலே பாத்த மாதிரி தோணுதே" என்றான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவன்.

"நீ யாரைச் சொல்லுகிறாய்?" என்று கேட்டார் செண்பகராமன் பிள்ளை.

"ஒங்களை எனக்குத் தெரியாதா? நீங்க சாந்தலிங்கச்சாமி இல்லே? பொத்தாமரை பக்கத்திலியே உக்காந்திருப்பியளே?" என்றான் அந்தக் கிழவன்.

"சாந்தலிங்கச்சாமி ஒடுக்கமாயிட்டுது. எனக்கும் அவரைத் தெரியும்" என்றார் செண்பகராமன் பிள்ளை.

"எப்பம்?" என்றான் கிழவன்.

"அவங்க ஒடுக்கத்தில் ஆகி சுமார் நாலு மணி நேரமாச்சு" என்றார் செண்பகராமன் பிள்ளை, நிதானமாக.




கலைமகள், ஜனவரி 1944

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும் rrn.rrk.rrn@gmail.com இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து translate.google.com, docs.google.com, msword translateஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்