தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, May 14, 2014

காக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன்

காக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன்

நான் கண்டதுண்டு

காக்கை, குருவி, கோழி, கருடன், பருந்து, புறா, வாத்து, மைனா,மயில், மரங்கொத்தி, அக்காக்குருவி, மீன் கொத்தி முதலிய பறவைகளை நான் கண்டதுண்டு.

எங்கு சென்றாலும் இந்தக் காக்கை உபத்திரவம் அல்ல. உற்சவப் பிரளயம், சனி பகவான் வாகனம், இதைப் பற்றி ஒரு கதை. பிராட்டியினுடைய ஸ்தனத்தைக் கொத்தியதாக அம்மா மிகப் பரிவுடன் சாப்பிடுவதற்கு முன் இதற்குப் பருப்பும் நெய்யுமாக ஒரு உருண்டைச் சோறு கொடுப்பாள். சிறு வயதில் பித்ருக்களைச் சாந்தி செய்யப் பெரியோர்கள் “காகாகாகாகா” என்று கத்துவதை நான் கேட்டதுண்டு, காகா கரைந்துண்ணும். காகம் கூடிவரும் ஒரு நபர் மறைந்தால் கூட கூச்சலிடும் காகம், என் மனவட்டத்தில் சுற்றித் திரியும் ஒரு கறுப்புப் புள்ளி - காகாகாகாகா.

குருவி. சின்னச் சின்னக்குருவி ‘விர்’ரென்று அதன் சின்னஞ்சிறகடித்து, தத்தித் திடீரென்று மேலே எம்பி குதிக்கும் ஒரு சிறு குருவி. ஒரு ஸில்க் கோதுமை நிறம். பாரதி இதையும் தன் ஜாதியென்று சொன்னதைத் தவிர வேறொன்றும் இதைப் பற்றி ஞாபகம் வரவில்லை.

என் மனதில்
விர் என்று
ஒரு உணர்வு
“பார் என்னை”

என என்னை
உணர்த்தி
போகப் போனேன்
நான்.


விழுப்பரம், திருச்சிராப்பள்ளி, நீல ஆகாயத்தின் வெகு உயரம், பெருமாள் கோயில் இவைதான்

பருந்து
என்று
பகர

கருடன்
என்று 
நகர

என் உள்ளத்தின்
உயரத்தில்
சுற்றிச் சுற்றிச்
சுழலும்


கோழி, சிவப்புக் கொண்டை வெள்ளைக் கோழி; “கொக்கரக்கோ” என்று கத்திக் கொண்டு போவது; அது  அடைகாத்துக் குஞ்சு பொரிப்பது (அப்படிச் சலனமற்றுத் தன்னுள் தானே கவிழ்ந்து உட்கார்வது எளிதில்லை) சருக்கங்கள் விழுந்த முன் கால், அதன் சதைத் தாடி

கோழித்தூவல் என்று ஒரு சொல்;
வாரணம் என்று ஒரு வார்த்தை

பார்த்தாயா, நீ, புறாவைப் பார்த்ததுண்டா?
வகை வகையாக
வெளுப்பாக
சாம்பலாக
விதவிதமாக
அழகான காகமாக
ஆரும் விரும்புவதான
புறாவே, நீ கண்டதுண்டோ
கண்ணம்மா?
ஆனாலும் என்ன?


புறாக்கூடு போன்ற சிற்றறைகளில் லோகாயுதம் என்ற பேரேட்டின் தாஸ்தாவேஜூகளைச் சிவப்பு நாடாவில் கட்டி வைத்து விசிறி சுழலும் ஒரு அறையில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கப் பிணம் போன்ற மனிதர்கள் வரிசை வரிசையாக நிற்கிறார்கள்.


ஆனால் மசூதியின் பெருவெளியில் இப்புறாக்கள், என் அருமை சுசீலாவைப் போல் என்னைப் பரவசமுறுத்துகின்றன.

நாரை

நாராய் நாராய் செங்கால் நாராய்.  பழைய பிசிராந்தையார் பாட்டு, அவர் ஊரிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம் ஒரு நரைத்த பறவை (பழம் பெருச்சாளி) காலரில்லாத சட்டை போட்டுக்கொண்டு ஆபிஸில் தவமிருக்கும்.

நாரை - நாரை

நாரை ஓடிச் செல்லும் நதியில் ஒரு மீன் பாய்ந்தால் துள்ளியெழும்.

விதவிதமாய்க்
காசாக தோட்டாகக்
கசந்த மனதுடன்
என் பிச்சை
மனதை
கொஞ்சம்
கொஞ்சமாகக்
கசக்கி கசக்கி

இந்த நாரையை நான் சாந்திப் படுத்தியிருக்கிறேன். என் நாமாவளியில் அவன் ஒரு நாமம். சம்ஹாரமூர்த்தி என்பதில்தான் சுசீலா எனக்கு எத்தகைய உவகை.

நாரை, ஒரு நாரை
ஒர் மீன் கொத்தி
மாமிசம் சாப்பிடும்
ஒரு நாரை

வாத்து, வாத்து, வாங்கலியோ வாத்து - கோழி முட்டை டபிள் ஸைஸ் வாத்து முட்டை - ஐயா முகத்தைக் கண்டால் உபத்திரவம் போலத் தோன்றுகிறது.

வாத்து முட்டையை 
வேக வைத்து
அதில் ஆத்திக் கீரையைக்
கலந்து கபளீகரம்
செய்தால்
ஐயா 
மூலவேதனை
ஐயோ, நான் போறேன்
என ஓடிப் போகும்

சிறு வயதில், சைதாப்பேட்டையில்தான் என நினைக்கிறேன். குட்டை குட்டையாக இந்த அவலக்ஷணமான வாத்துக் கூட்டம் சதக் சதக் கென்று சென்றதைப் பார்த்தபோது, சுசீலா, காமரூபினி, மனமோகினியே.

எனக்குத்தான்
எவ்வளவு மகிழ்ச்சி
அதைச் சொல்லதான்
படுமோ
அல்லது
சொல்லித்தான்
தீருமோ

ஏ, தேரை, இது ஏன்

மைனா
மைனா
வா வா என்றால்
மைனா
வருமா?

இரண்டு சிட்டுக் குருவியின் சைஸ் ஒரு அசல் மைனா; பழுப்பின் கருப்பு; கருப்பின் பழுப்பு அதன் மேனி; அதன் கண் சுற்றி மிளிரும் மஞ்சள் வரிகள், அது சிறகுயர்த்தினால் ஒரு வசீகர வெள்ளை.

அது
புல்வெளியில் 
தத்தித் திரிவது
கண்டால்
சூசிப் பெண்ணே
ரோசாப் பூவே
உன்னைப் போல்
அதுவும்தான்
ஒரு அழகின் வடிவம்
காண்.

மயில் மேனிக் நீலக் கறுப்பு; கறுப்புநீலம்ந அதன் கழுத்து பாம்பின் நீளம்; அதன் தோகை விரித்தால் அல்குல் போல் கண்கள் ஆயிரம், கார் காலத்தில் அது தோகை விரித்து ஆடுவது காண்பவர் கண்களுக்கு உற்சவம்; அது ஒரு உறுசவமூர்த்தி. மயில் ஆடக் குயில் பாட என்றொரு பாடல்

சுசீலா
அது ஒரு ஆள் உயரப் பறவை
அதைப் பார்க்கையில்
சுசீலா
நீ சென்று மறைவதைப்
போல்
ஒரு பிரமை.

அந்தப்  பழையப் பாடல் உனக்கு ஞாபகம் வருகிறதா?

ஆறுமுகம்
அவன்
என் அண்ணன்
சூரபதுமன்
வேறுபட
வதைத்த முகம்
ஏது முகம்?

என் அன்பே நீ வா. இந்த இருபதாம் நூற்றாண்டில் சந்தர்ப்பங்களில் நீயும் நானும் மயில் கறி சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.

சுசீலா
இந்த டம்பப் பறவைதனை
ரம்பம் கொண்டு
டகர், டகர்
என ராவி எறிவது
ஒரு தனி இன்பம்

மயிலுக்குப் பின் ஒரு மரங்கொத்தி, அதன் ஒய்யாரக் கொண்டை ஒரு அரசன் கிரீடம், அட்டை மஞ்சள், அழகான கறுப்பு அதன் மேனி.

இந்த மரமேறும்
மரங்கொத்தி
என் மனவெளியில்
ஒய்யாரமாய்த் திரியும்
ஒரு அதிசயப் பறவை

வா, சுசீலா, வா, இன்னும் சில பறவைகளை உனக்குக் காண்பிக்கிறேன்.

நடுக்கட்டில்
ஒரு அதிரூப சந்தரி
தன் கூந்தல் விரித்து
அசோக மரத்தடி
சீதை போல
சோகமயமாய்ச் சாய்ந்திருந்த
போது

அந்தரத்தில் ஓரு அக்காப் பறவை ஐயோ என்று சிறகடித்து குரல் எடுத்துக் கூவிப் போயிற்று.

இது
ஏன்
என் அருமைப்
பெண்ணே
சுசீலா?
என்னைப்
போல்
அவளும்
காதல் சுரத்தில்
உடல் வெந்தாளா?
அல்லது
செத்துத்தான்
மண்ணோடு மண்
ஆனாளா?

ஓடிச் சென்றது ஒரு நதி, டபக் கென்று அதன் நடுவில் பாய்ந்தது ஒர் கருநீலப் பறவை. அதன் அலகில் ஈர மினுமினுப்புடன் அதிசயங் கக்கும் அசல் மீன்.

மரங்கொத்திப் பறவையுண்டென்றால் இவ்வுலகில் மீன் கொத்திப் பறவையுண்டு.

சுசீலா, நான்தான் என்ன என்ன அனுபவங்களைக் கண்டேன். கோவில் சென்று சனீச்வரனைச் சேவித்தேன். வந்து எனக்கு விட்டு விடுதலையாகப் பறக்கும் சிட்டுக் குருவியைக் காட்டினான். மசூதியில் புறாக்களைப் பார்த்தேன்.ஆற்றங்கரையில் ஒற்றைக்கால் தவம் செய்யும் நாரையைக் கண்டேன். ஒரு வாத்துக் கூட்டம் என்னைப் பார்த்துக் கண்ணடித்து நாங்களும் இருக்கிறோம் என்றது. மைனா என் மனவெளியில் தத்தித்தத்திச் சென்றது. மயில்  என்னைக் கண்டு நகைத்தது. மரங்கொத்தியும் மீன் கொத்தியும் உனக்கும் ஒரு கூரிய அலகு தேவை என்றன. பருந்து போல், கருடன் போல் ஆமைகளை முடங்கிக் காணும் நானும், பருந்து போல் கருடன் போல் உயரப் பறந்த தருணங்கள் உண்டு. அக்காக்குருவி போல் நானும் உட்கார்ந்து அழுத சமயங்களுண்டு..

ஆனால்
சுசீலா
இந்த உலகம்
என்ற பெருவெளியில்
நீ என்னைத் தனியாகத்
தவம் புரிய விட்டுச்
சென்று விட்டாய்.

பரவாயில்லை, சுசீலா, பரவாயில்லை. நீ சிருஷ்டித்த தனிமையில் நான்.

என் உள்ள வெளியில் பல மின்னல்கள்
வீசக் கண்டேன்
பரவசமடைந்தேன்.


(என் சகோதரி திரிசடைக்கு)

- விருட்சம், 1994


தட்டச்சு : ரா ரா கு


                                               




மூன்று நொடிக் கதைகளில் ஒன்று
 (https://groups.google.com/forum/#!topic/anbudan/gjaRAL19ufQ%5B1-25-false%5D)

ஆஸ்பத்திரி.

அறையில் அவன்.

ரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள்.

நான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதும் தட்டிவிழித்துப் பார்த்தான்.

யாரும் இல்லை. மறுபடியும் தூங்கிவிட்டான்.

அவ்விருவரும் வெளியில் வந்தனர்.

முதல்வன் : ஏன்?

மற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை.

- நகுலன் (ஞானரதம், அக்., 1972)

வட்டம் 1

    வாழ மனமில்லை
    சாக இடமில்லை

    வானில் மேகமில்லை
    ஆனால்
    வெயிலும் மடிக்கவில்லை

    கந்தைக் குடைத்துணி
    யெனக்
    கிடக்கும்
    தன்னினமொன்றைச்
    சுற்றிச்சுற்றி வருமிக்
    கறுப்பின்ஓலம்போல்

    செத்துக் கிடக்கும்
    சுசீலாவை
    வட்டமிட்டு
    வட்டமிட்டு
    வட்டமிட்டு.......



                     
1.
அவர்கள் சென்றபின்
இவர்கள் இடம் பெயராது
இருந்தனர்

2.
நாய் கொடுத்த
காசு குரைக்கும்;
பட்ட மரத்திலுண்டு
பல கெட்ட நாய்கள்;
நடுப்பகல்
இருட்டாகும்

3.
பிறந்த சூட்டில்
இரத்தச் சிவப்பில்
எலிக்குஞ்சு  போல்
கிடக்கும்;
புழுப்போல் நெளியும்


(நன்றி  நவீன விருட்சம் blog)

றியாஸ் குரானா


அற்புதமான இரண்டு தருணங்களுக்கிடையில் மழை நின்றது
பகலுக்கும் இரவுக்குமான இடையில்
கடைசித் துளி விழுந்தது
தாள்களிலிருந்து
அவளின் உடல் நறுமணம் மறைந்தது
நினைவை எடுத்துப் பார்த்தேன்
மழை இன்னும் கொஞ்சம் தூறியிருந்தால்
அங்கே நாங்கள் சந்தித்திருப்போம்.
அப்படியான அறிகுறிதான் தென்பட்டது.



https://www.facebook.com/pages/Riyas-Qurana-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/182863578533870?hc_location=timeline


அவனுடைய கதைக்குள் மழை துாறக்கண்டபோது‎Saturday, ‎November ‎21, ‎2015


Riyas Qurana - றியாஸ் குரானா
2 hrs ·


அவனுடைய கதைக்குள் மழை துாறக்கண்டபோது

மலையைத்தாண்டி புல்வெளியில் நடக்கும்போது அவனுடைய கதைக்குள் நின்ற மரத்தில் மட்டும் மழை தூறத்தொடங்கியது.அருகே செல்வதற்குள் கண்முன்னே இலைகளிலிருந்து கரையத்தொடங்கி மரம் நின்ற இடத்தில் புல்லும் முளைத்துவிட்டன. கதைப்படி, மரத்தில் அமர்ந்து பாடவென மேகங்களுக்குள் புதைந்து கிடந்த பறவைகள் பறந்து வருகின்றன.பறவைகளின் பாடல் ஒலி மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.இன்னு சில நிமிடங்களுக்குள் அவை வந்துவிடும்.அதற்கிடையில், ஒரு விதைபோட்டு மரமாக்கமுடியாது.கைகளைக் கிளைவிரித்து,கால் விரல்களை வேரிறக்கி அசைந்து காற்றில் தாவுகிறேன்.பறவைகள் வந்து அமர்கின்றன.சொண்டுரசி, சிறகுலர்த்தி பாடுகின்றன நடந்த எதையும் அறியாத பறவைகள்.பறவைகளோடு வந்த அவள் மிதந்து நீந்தியபடி தேடுகிறாள்.என்னைக் காணாத அவளின் பாடல் ஒவ்வொரு சொல்லிலும் துடித்துக் கதறுகிறது.அவனுடைய புத்தகத்தை புரட்டினால் என்னுடைய காதலி கதையெங்கும் அலைந்து திரிவதை நீங்கள் காணலாம்.